கிரிப்டோ கரன்சி நம்பிக்கைக்கு உரியதா?

0

அமெரிக்காவிலிருந்து மெய்நிகர் நாணயங்கள் (கிரிப்டோ கரன்சி) பெயரில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்து இலட்சங்களில் வருமானம் ஈட்டும் சகோதரர் திரு. முகுந்தன் வேலுப் பிள்ளை ( ஓசூர்) நேற்று என்னிடம் பேசினார்.

நம்பிக்கையான நிறுவனம். 140 நாடுகளில் டிரேடிங்க் செய்து கோடிகளில் இலாபத்தைப் பிரித்துத் தருகிறார்கள். ஆனால் எப்படி இவ்வளவு இலாபம் கொடுக்க முடிகிறது? நெகடிவ் ஆக எதுவும் கூறாமல் விளக்கம் கூறுங்கள் என்று கேட்டார்.

“முதலில், நீங்கள் சொல்லும் நிறுவனத்தின் முகவரியாக வலை தளங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள அப்படியொரு நிறுவனமே டெக்சாஸ், அமெரிக்காவில் இல்லை. போலியான முகவரியைக் கொண்டு இயங்கும் நிறுவனத்திற்கு என்ன கருத்து கூறுவது?”

Also read: அமெரிக்காவில் சைனா செய்யும் முதலீடுகள்

முதலீடு செய்து குயிக் மணி (Quick Money) சம்பாதிக்க முடிவு செய்து விட்டால், நீங்கள் மட்டும் அந்த இடரை (Risk Venture) எடுத்துக் கொள்ளுங்கள். கடை திறந்திருக்கும் வரை உங்கள் நல்வாய்ப்பைப் பொறுத்து இலாபம்.

அடுத்தவரை இணைத்து இலாபம் பார்க்கும் வலையில் விழாதீர்கள். இது போன்ற நிறுவனங்களின் தந்திரமே, நமது முதலீட்டு மோகத்தை அதிகரித்து, நமது மூளையை வேலை செய்ய விடாமல் அவர்களின் பண சுழற்ச்சியை வளர்த்துக் கொண்டு பின்பு எதாவது சட்ட சிக்கல்கள், அரசுகளின் கிரிப்டோ கரன்சி தடைகள், சர்வர் ஹேக்கிங் என்று சொல்லி ஓடி விடுவதே!

2017-2018 வரை ஒரு ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் கிரிப்டோ கரன்சி உருவாக்கக் குழுவில் ஆலோசகராக இருந்த காரணத்தால் சொல்கிறேன், வந்த வரை இலாபம் என்று முடிவு செய்து விட்டால் மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். முட்டாள் தனத்திலும் அது புத்திசாலித்தனம்.

– எம்எம். பிரபு

எந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன?

0

நிலம் தொடர்பான சிக்கல்கள் வரும்போது நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் எந்தெந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறியாத ஒன்றே. வழக்கறிஞர்கள் சிட்டி சிவில் கோர்ட், சப் கோர்ட், முன்சிப் கோர்ட், மேஜிஸ்ட்ரேட் கோர்ட், ஹை கோர்ட் என்று கூறும்போது சாதாரண மக்களுக்கு எந்த கோர்ட் எதற்கு என்று தெரியாது. அதை பற்றி அறிந்துக் கொள்வதற்காக வழக்கறிஞர் திரு. அன்பழகன் அவர்களை சந்தித்தேன். அவர் கூறியதாவது, ” நீதிமன்றங்களை, மேல்நிலை நீதிமன்றங்கள் கீழ்நிலை நீதிமன்றங்கள் என்று இரண்டாக பிரிக்கலாம். இது ஆங்கிலோ இந்திய படிநிலை முறை என்று சொல்வார்கள்.

கீழ்நிலை நீதிமன்றங்கள் முதல்நிலை நீதிமன்றங்கள், இரண்டாம் நிலை நீதிமன்றங்கள், மூன்றாம் நிலை நீதிமன்றங்கள் என்று மூன்று நிலைகளாக பிரிக்கப்படுகின்றன.

முதல் நிலை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மேஜிஸ்ட்ரேட் கோரட்(Magistrate Court) என்றும் சிவில் வழக்குகளை விசாரிக்க முன்சீப் கோர்ட் (Munsif Court) என்றும் சொல்லுவார்கள்.

Also read: ஏல சொத்துகளில் உள்ள, வெளியே தெரியாத செய்திகள்

இரண்டாவது நிலையில் சிவில் வழக்குகள் எல்லாவற்றையும் சார்பு நிலை நீதிமன்றம்(sub court) விசாரணை செய்யும். கொலை அல்லாத குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கும்.

மூன்றாம் நிலை நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் (District Court) ஆகும். இவை கடுமையான குற்றவியல் வழக்குகளை(Sessions court) விசாரிக்கும். இரண்டாம்நிலை நீதிமன்றங்களின் மேல்முறையீடுகளை விசாரிக்கும் நீதிமன்றங்களாக இருக்கிறது. முதன்மையாக, சிவில் வழக்குகளையும் மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கின்றது. இந்த மூன்று படிநிலைகளுக்கு மேலே உயர்நீதிமன்றமும் அதற்கு மேலே உச்சநீதிமன்றமும் இருக்கிறது.

மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் இரண்டாம் நிலை நீதிமன்றங்களின் ஒரு சில தீர்ப்புகளையும் மேல்முறையீடுகளாக உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம். சிவில் வழக்குகளுக்கு தனி தனியாக நிறைய தீர்ப்பாயங்களும் கிரிமினல் வழக்குகளுக்கு மிக குறைவான தீர்ப்பாயங்களும் இருக்கின்றன.

இராணுவ தீர்ப்பாயம், அரசு ஊழியர்களின் ஊழல் குற்றசாட்டுகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் கிரிமினல் குற்றங்களுக்கான தீர்ப்பாயங்காளாக சொல்லலாம். அதிகமாக சிவில் வழக்குகள் இருப்பதால் அதற்கு துறை வாரியாக தீர்ப்பாயம் பிரித்து கொடுத்து விசாரிக்க வைத்து விட்டனர்.

தொழிலாளர் சிக்கல்களை பொறுத்தவரை தொழிலாளர் விபத்துக்கு, தொழிலாளர் ஊதியத்திற்கு, தொழிலாளர் நலத்திற்கு, தொழிலாளர் தகறாறுகளுக்கு என தனி தனி தீர்ப்பாயம் இருக்கிறது. கூட்டுறவு துறைக்கு தனி தீர்ப்பாயமும் நில அளவை துறைக்கு தனி தீர்ப்பாயமும் நில சீர்திருத்தத்திற்கு தனி தீர்ப்பாயமும், சுரங்கம் சிக்கல்களுக்கு தனி தீர்ப்பாயமும் நீர்பாசனத்திற்கு தனி தீர்ப்பாயமும் அகதிகளுக்கு தனியாகவும் செய்திதாளுக்கு, தேர்தல் முறைகேடுகளுக்கு தனி தீர்ப்பாயங்களும் இருக்கின்றன.

Also read: சொத்து மதிப்பீடு, ஒரு கருத்துதான்!

தீர்ப்பாயங்களிலே நில அளவை தீர்ப்பாயம், வீட்டு வாடகை தீரப்பாயம், குடும்ப கோர்ட் தீர்ப்பாயம் ஆகியவற்றில் தான் அதிக வழக்குகள் இருக்கின்றன.

இது இல்லாமல் நுகர்வோர் கோர்ட் ஒன்று இருக்கிறது அவை மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் என்று இருக்கின்றன.

மாவட்ட சமரச மையம், ஒவ்வொரு மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயும் இருக்கின்றது. வாதி, பிரதிவாதி ஆகிய இரு தரப்பினரும் வழக்கை காலம் கடந்தாமல் பேசி தீர்ப்பதற்கு இந்த மையங்கள் பயன்படுகின்றன” என்றார்.

– சா. மு. பரஞ்சோதி பாண்டியன்

தொழில் ஆலோசனை: சத்து மிக்க, தீங்கு அற்ற இடை உணவுகளுக்கு வாய்ப்பு

0

ஸ்னாக்ஸ் என்று குறிப்படப்படும் இடை உணவுகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த இடை உணவுகள் எல்லா கடைகளிலும் சிப்ஸ்களாக, வறுத்த பாசிப் பருப்புகளாக, வேர்க்கடலை பாக்கெட்டுகளாக சரம் சரமாகத் தொங்குகின்றன. இப்போது மிக்சர், சீடை, முறுக்கு, வறுத்த கடலைப் பருப்பு போன்றவையும் சரங்களாகி விட்டன.

தேநீர்க் கடைகளில் பட்டர் பிஸ்கட்கள் பாட்டில் பாட்டில்களாக அடுக்கி வைக்கப் பட்டு இருக்கின்றன. இவை இடை உணவுகளாக வாங்கி உண்ணப்படுகின்றன. உணவியல் வல்லுநர்கள் இடைஇடையே உடல் நலனுக்கு உகந்த இடை உணவுகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள். சிப்ஸ் போன்றவை உடல் நலனுக்கு உகந்தவை இல்லை என்ற எண்ணம் பரவி வருவதால், இடை உணவுகளாக கொட்டைகள், பருப்புகள் கலந்து செய்யப்படும் சாக்லேட்கள் போன்றவற்றை வாங்கி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

Also read: வீட்டுச் சாக்லேட்களுக்கும் இருக்கிறது, விற்பனை வாய்ப்பு!

மைதா மாவுக்கு எதிரான பரப்புரையால் நிறைய பேர்கள் மைதாவால் செய்யப்பட்ட பிஸ்கட்களை விரும்பி வாங்குவது இல்லை. இதனால் மைதா சேர்க்காத இடை உணவுகளின் சந்தை விரிவடைந்து வருகிறது. பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் பழங்களை மூலப் பொருட்களாக வைத்து செய்யப்படும் சாக்லேட் வடிவிலான இடை உணவுகளைத் தயாரித்து பல நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. ஆனால் இவற்றின் விலை பெரும்பாலும் நூறு ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. நடுத்தர மக்கள் இவற்றை எப்போதாவது ஒரு முறை வாங்குகிறார்கள், அவ்வளவுதான். இவையும் பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கின்றன.

நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் இப்படிப்பட்ட சத்துள்ள சாக்லேட் பார்களை தயாரித்து சந்தைப் படுத்தலாம். என்னென்ன பருப்புகள், உலர் பழங்களைச் சேர்த்தால் எதிர்பார்க்கும் புரதம் உள்ளிட்ட சத்துகள் கிடைக்கும் என்பதை உணவியல் வல்லுநர்கள் துணையுடன் கணக்கிட்டு தயாரித்து சந்தைப்படுத்தலாம். வெள்ளைச் சர்க்கரை யையும் உடல் நலனுக்கு எதிரானது என்று கூறப்பட்டு வரும் நிலையில் இனிப்புச் சுவை குறைவாக இருக்குமாறு தயாரிக்க வேண்டியது மிகத்தேவை. இருபத்தைந்து ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை விலை வைத்து சந்தைப்படுத்தினால் நிறைய பேர்கள் வாங்கி உண்ண வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் அமைந்தால் விற்பனை இன்னும் அதிகரிக்கும்.

சந்தையில் கிடைக்கும் இத்தகைய உணவுப் பொருட்களை ஆராய்ச்சி செய்தால், நிறைய செய்திகளை தெரிந்து கொண்டு செயல்படலாம்.

– நேர்மன்

ஆன்லைன் விற்பனை – சிந்தனைக்கு சில செய்திகள்

0

வேதி உரங்கள், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்கள், பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய என்று இணைய தளங்களைத் தொடங்கிய பலர் அவற்றை தொடர்ந்து இயக்க முடியவில்லை. அத்தகைய இணைய தளங்கள் பலவற்றைத் திறந்து பார்த்தால் அவை இயக்கம் இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதைப் போல மளிகைச் சாமான்களை ஆன்லைனில் விற்கிறோம் என்று தொடங்கப்பட்ட இணைய தளங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

கணினி உதிரி உறுப்புகள், மொபைல்கள், பிற எலெக்ட்ரானிக் பொருட்களை இணையம் வாயிலாக வாங்குவதில் ஆர்வம் காட்டு க்ஷ்பவர்கள் ஏன் மளிகைச் சாமான்களை, தானியங்களை இணையத்தில் வாங்குவது இல்லை?

மற்ற எலெக்ட்ரானிக் சாதனங்களின் விலைகளை ஒப்பிட்டு, எங்கே விலை குறைவாக இருக்கிறது என்று பார்த்துதான் நுகர்வோர் வாங்குகிறார்கள். அதைப் போலவே அருகில் கிடைக்காத பொருட்களையும் விலைகளை ஒப்பிட்டு வாங்கும் வாய்ப்பு நுகர்வோருக்கு இருக்கிறது.

Also read: இணையதளம் வாயிலாக, வளர்ச்சிக்கான பாடங்கள்

ஆனால், மளிகைச் சாமான்கள் அனைத்தும் பெரும்பாலும் அருகிலேயே கிடைக்கின்றன. விலையும் ஆன்லைனில் குறைவாக இல்லை. ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்க வேண்டியும் இருக்கிறது. தெருவில் உள்ள கடைகளில் கிடைக்கும் கடலை மிட்டாயை எதற்கு ஆன்லைனில் வாங்க வேண்டும் என்றுதான் வாடிக்கையாளர்கள் நினைப்பார்கள். அதுவும் அத்தகைய பொருட்களின் விலை ஆன்லைனில் அதிகமாகவும் இருக்கின்றன.

தொலைபேசியில் சொன்னாலே வீட்டுக்கு வந்து கொடுத்து விட்டு பணத்தை வாங்கிச் செல்லும் முறை பெரும்பாலும் எல்லா பலசரக்குக் கடைகளிலும் இருக்கின்றன. பிக் பசார், நீல்கிரீஸ் போன்ற பெரிய கடைகள் கூட தொலைபேசி ஆர்டர்களை ஏற்று வீட்டில் கொண்டு பொருட்களைத் தருகிறார்கள். இவர்கள் தொலைபேசி போல ஆர்டர் பெற இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள், அவ்வளவுதான். இப்படி கடை வைத்து இருப்பவர்கள் ஆர்டர் பெற இணையத்தைப் பயன்படுத்துவது வெற்றி பெற்று வருகிறது. வெறும் ஆன்லைன் வழியாக மட்டுமே விற்பனை என்பது அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

சோப்புகள், ஷாம்புகள், தூய்மைப் படுத்தும் பொருட்களைக் கூட அருகில் உள்ள கடைகளிலேயே வாங்கவே விரும்புகிறார்கள். சென்னை போன்ற நகரங்களில் கொஞ்சம் பெரிய அளவில் மொத்தமாக வாங்க நினைப்பவர்கள் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், பிக் பசார் கடைகளுக்கு சென்று விடுகிறார்கள். இங்கு அவ்வப்போது சில சலுகைகளையும் அறிவிக்கிறார்கள் என்பதோடு, விலைகளிலும் சிறிய அளவுக்கு பயன் பெறுகிறார்கள்.

இயற்கை விளை பொருட்களை ஆன்லைனில் விற்கிறேன் என்று முயன்றவர்களாலும் வெற்றி பெற முடியவில்லை. இதற்கும் விலைதான் முதன்மையான காரணமாக இருக்கிறது. அனைத்தும் கூடுதல் விலையுடன் இருப்பதால் இந்த பொருட்கள் நடுத்தர மக்களைக் கவரவில்லை. இத்தகைய இயற்கை விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் கடைகளும் இப்போது எல்லா பகுதிகளிலும் இருக்கின்றன. இருந்தாலும் அங்கும் பெரிய அளவில் வணிகம் நடப்பதாகச் சொல்ல முடியவில்லை.
குறிப்பாக செக்கு எண்ணெயை வாங்க வேண்டுமானால், நேரடியாக ஆட்டித் தரும், தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளுக்கே சென்று வாங்கிக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு செக்கு எண்ணெய்க் கடைகள் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்து வருகின்றன.

தங்கள் பகுதியில் கிடைக்காத பொருட்களையும், ஓப்பீட்டளவில் விலை மலிவாக இருக்கும் பொருட்களையும் வாங்கவே பெரும்பாலும் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதனால்தான் எந்த மளிகைக் கடையின் வணிகமும் அதிக அளவில் பாதிக்கப் படவில்லை.

Also read: வணிக உறவு வலைப்பின்னல் வணிகத்தை அதிகரிக்கும்

எனவே, புதிதாக இணையம் வாயிலான விற்பனை என்று தொடங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டியது மிகத்தேவை. ஏற்கெனவே நேரடியான கடைகள் மூலம் பலசரக்கு விற்பனை செய்யும் கடைகளை வைத்து இருப்பவர்கள், தங்களின் கூடுதல் விற்பனைக்கு இணையத்தைப் பயன்படுத்தலாம். அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனை நடுவர்கள் பெரிய அளவில் இயங்குகிறார்கள். அவர்கள் எதையும் வாங்கி விற்பது இல்லை. வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் இடைய புரோக்கராக செயல்படுகிறார்கள். அதற்கு இணைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். அந்த நிறுவனத்தை நம்முடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. தேவையானால் அந்த இணைய தளத்தை நாமும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.

இப்போது எல்லா நிலைகளிலும் இணைய தொழில் நுட்பம் ஆட்சி செய்கிறது. இணையம் சார்ந்த விற்பனை பற்றிச் சிந்திக்கும் போது, எந்த பொருட்களை இணையம் மூலம் விற்பனை செய்ய முடியும் என்பதில் ஒரு தெளிவுடன் ஈடுபட வேண்டும். மேலும் டெலிவரி செய்வதற்கான கூரியர் கட்டணங்கள், வாகனக் கட்டணங்கள் போன்றவை பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.

– நேர்மன்

கட்டிடங்கள் சீரமைப்பு – ஒரு புதிய தொழில் வாய்ப்பு உருவாகிறது

0

சென்னையில் உள்ள ஐஐடி, ‘இண்டியன் காங்கிரீட் இன்ஸ்டிட்யூட் (ICI)’ அண்மையில் நடத்திய ஒரு நாள் கருத்தரங்குக்கு சென்றிருந்தேன். Structural Design of Building Systems என்ற தலைப்பில் இது நடைபெற்று இருந்தாலும்., இந்த கட்டுரை கட்டுமானம், கட்டிட வடிவமைப்பு போன்ற துறை சார்ந்த செய்திகள் குறித்தல்ல.

இந்த நிகழ்ச்சியில் ஐஐடியின் சிவில் எஞ்சினியரிங் துறை பேராசிரியர்கள் இருவர் பேசினர். இதில் இறுதியாக இடம் பெற்ற பேரா. சி. வி. ஆர். மூர்த்தி பேச்சு அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அவருக்கு தரப்பட்ட தலைப்பு என்னவோ ‘Challenges in Structural Design’ என்பதுதான். ஆனால், அவரது பேச்சின் பொருள் புரிந்தவர்கள் அதை Challenges before India என்றோ…. Challenges to our future generations என்றோ குறிப்பிட்டால் தவறு இல்லை. நான் அப்படித்தான் புரிந்து கொண்டேன்.

அவரது பேச்சின் மொத்த உள்ளடக்கத்தை தொடக்கத்திலேயே மூன்று வெவ்வேறு தலைப்புகளில் பகுத்து இருப்பாக சொன்னார்.

  • கல்வி (Education),
  • செயல்முறை பயிற்சி (Practice),
  • வழிகாட்டும் கட்டமைப்பு (Regulatory Frame work).
    -இவைதான் அவரது பட்டியல்.

கல்வி என்ற தலைப்பில் பேசிய போது அவரது கருத்துகள் பலவும் தற்போதைய பொறியியல் கல்வி நிறுவனங்களை மனதில் வைத்து சொல்லப்பட்டதாக இருக்கும் என நாம் நினைத்துக் கொண்டாலும், அது இன்று உள்ள நிலையில் பொதுவாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் – ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துக்கும் பொருந்தும்.

Also read: மணல், செங்கல், சிமென்ட், கம்பி – இவற்றை பயன்படுத்தாமல், சுற்றுச் சூழலுக்கு உகந்த வீடுகளைக் கட்டித் தருகிறோம்!

“இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களை ஈர்ப்பவர்களாக இல்லை என்பது முதல் கருத்து. அவர்களது செயலால்… உரையால்…. நடைமுறையால்… மாணவர்களை ஈர்க்க வேண்டும். சோதனைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்க இதுவும் ஒரு வேலை என்ற நோக்கில் இருப்பவர்களால், மாணவர்களை ஈர்க்க முடியவில்லை” என்றார்.

“கல்லூரி ஆசிரியர்கள் இன்னும் பழைய புத்தகங்களையே படிக்கக் கூடாது. அந்நாளைய நடைமுறைகளுக்கு உருவான புத்தகங்கள் இன்றைய தேவைகளுக்கு ஈடு கொடுப்பது இல்லை” என்று சொன்ன அவர், “அதனால், நான் அடிப்படைகள் மாறி விட்டன என்று சொல்லவில்லை. நியூட்டனின் விதிகள் மாறி விட்டதா என்று கேட்கக் கூடாது. அது மாறவில்லை. அதில் மாற்றம் இல்லை. ஆனால், அதை அவர் படித்த காலத்தில் எப்படி சொல்லிக் கொடுக்கப்பட்டதோ, அதே போல சொல்லிக் கொடுக்க முயற்சிக்க கூடாது என்று சொல்கிறேன்” என்று விளக்கமும் சொன்னார்.

இன்று இணையம் உள்ளிட்ட இன்னும் எத்தனையோ தகவல் தொடர்பு சாதனங்கள், வழிமுறைகள் மல்ட்டி மீடியா வசதிகள் வந்து விட்டன. அவற்றை எல்லாம் பயன்படுத்திப் பாடம் நடத்த… மாணவர்களை எளிதாக தொட்டு விட வாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றன. எனவே, அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு.

அதோடு, பள்ளிகள் தொடங்கி, கல்லூரிகள் வரை பல இடங்களில் இன்னும் வலுவான ஆய்வுக் கூடங்கள் இல்லை. அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்றார். மத்திய அரசின் CSIR -ன் கீழ் வரும் சென்னையில் உள்ள SERC அதாவது, Structural Engineering Research Centre-யிலேயே மிகப் பெரிய ஆய்வுகளை மேற்கொள்ளும் வசதிகள் இல்லையே என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். புதிய பாடத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து கற்க வசதிகளைச் செய்து தர வேண்டும். அதற்கு வழிகாட்ட ஆசிரியர்களும் தங்களைத் தயார் செய்து கொண்டு முன்வர வேண்டும். மொத்தத்தில் ஆசிரியர்களின் Attitude… Skill… Knowledge உள்ளிட்ட மூன்றிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.

பொறியியல் பாடமோ, மற்ற தொழில் கல்வியோ எதுவானாலும், அதை அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு பயன்படுத்தும் நடைமுறை…, அல்லது செயல்முறை பயிற்சியிலும் (Practice) நாம், அதாவது இந்தியா பின் தங்கியே இருப்பதாகக் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்து எழுபத்து ஐந்து ஆண்டுகளில் பல துறைகளிலும் ஏற்பட்டு இருக்க வேண்டிய மாற்றம் ஏற்படாமலேயே இருக்கிறது. அதுவே தொழில்நுட்பக் கல்வி மற்றும் நடைமுறையிலும் தொடர்கிறது. சான்றாக, கட்டுமானப் பணிகளில் கடைப்பிடிக்க வேண்டிய செயல்முறைகள் குறித்த வழிகாட்டு ஆவணம் (Standard codes of Practice) பல ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இன்றி இன்னும் பழைய கதையையே பேசிக் கொண்டிருக்கிறது. சில துறைகளில் அத்தகைய வழிகாட்டு ஆவணமே உருவாக்கப்படவில்லை. அவை ஏன் குறித்த கால இடைவெளிகளில்ல் மேம்படுத்தப்படவில்லை என்றோ…., இதுவரை இல்லாத பிரிவுகளில் அவை ஏன் இன்னும் உருவாக்கப்படவில்லை என்றோ யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக, கட்டுமான நிறுவனங்களோ…., பிற நிறுவனங்களோ. எப்படி இத்தனை நாளும் காலத்தை ஒட்டுகிறார்கள். எதைக் கடைப்பிடிக்கிறார்கள் என்றால்….. மிக எளிதான பதில் “அமெரிக்க….. ஐரோப்பிய….. ஜப்பானிய… வழிகாட்டு ஆவணம் என்கிறார்கள்.

Also read: மாற்று மணல் உறுதியான கட்டுமானத்துக்கு ஏற்றதா?

மொத்தத்தில் இந்தியாவில் நம் நாட்டுக்கான வழிமுறையை இன்னும் உருவாக்காத இடங்களில் தற்காலிகமாக மற்ற நாடுகளின் ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டது சாதகமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. அதனால், நமது நாட்டுக்கான… நமது சூழலை அடிப்படையாகக் கொண்ட வழிகாட்டு ஆவணத்தை உருவாக்க…. ஏற்கனவே உள்ளதை கால நேர சூழல் மாற்றத்துக்கு ஏற்ப மேம்படுத்த தொடர்ந்து தவறிக் கொண்டு இருக்கிறோம்.

சாதாரன காங்கிரீட் தள வீடுகளில் இருந்த நமது வாழ்க்கை மெல்ல அடுக்கு மாடி வீடுகளுக்கு மாறி…., அவை இப்போது எந்த திசையில் திரும்பினாலும் உயர் கோபுர பல டுக்கு மாடி வீடுகளாக மாறிவிட்டன. இந்த நிலையில் நில நடுக்க பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவுகள் என்ன…? எவ்வளவு பாதிப்பு….? எவ்வளவு இழப்பு….?
ஒருமுறை புஜ் நில நடுக்க பாதிப்பு தந்த பாடம் போதுமானதாக இல்லையா….? ஆனால், அதைப் பற்றி எல்லாம் தீவிரமாக சிந்திக்கவோ…, மாற்றங்களைக் கொண்டு வரவோ. முயற்சி நடக்கவில்லை. அப்படி மாற்றங்கள் கொண்டு வர வேண்டியவர்கள் அதை ஏன் செய்ய வில்லை….? எப்போது செய்யப் போகிறீர்கள் என்று கேட்க ஆளில்லை.

பல பொறியியல் துறை தொடர்பான செயல்முறை வழிகாட்டு ஆவணங்கள் உருவாக்கப்படாமலும், மேம்படுத்தப் படாமலும் பல ஆண்டுகளாக தொடர்கின்றன. வெளிநாட்டு ஆவணங்களைப் பயன்படுத்துவது தற்காலிகத் தீர்வாக இருக்கலாம். அது நிரந்தமானதாக இருக்க முடியாது; கூடாது.

காரணம் – அந்த ஆவணங்களை உருவாக்க அவர்கள் கையாண்ட அணுகுமுறைகளுக்கும், இந்தியாவில் நாம் கையாளும் அணுகுமுறைகளுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. எனவே, அதில் இருந்து கொஞ்சம்…., மீதி நமது ஆவணங்கள் என்றோ….., இதன் தலைகீழ் நடைமுறையோ…., எதுவானாலும் சிக்கல்தான்.

மறுபுறம், இந்தியாவில் உள்ள கட்டிடங்களின் நிலையும் மெல்ல மெல்ல பாழாகிக் கொண்டு உள்ளன. கடந்த காலங்களில் கட்டிய ஏராளமான கட்டுமானங்களுக்கு இன்று சீரமைப்பு தேவைப்படுகிறது. Retrofitting எனப்படும் வலு ஊட்டும் நடவடிக்கைகள் பல கட்டிடங்களுக்கு தேவைப்படுகின்றன.

இதுவே வரும் நாட்களில் மிகப் பெரிய வேலையாக… வேலை வாய்ப்பாக உருவெடுக்கும் அளவு சூழல் உள்ளது. எனவே, அவற்றுக்கு எல்லாம் சேர்த்து வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

– ஆர். சந்திரன்

விளம்பரத்துக்கு பயன்படுத்தப்படும் 3டி ஹோலோகிராம் ஃபேன்

0

இது, அனிமேஷன் தொடர்பான மாறுபட்டத் தொழில். அதாவது இந்த 3D Hologram Fan-னை வைத்து செய்யக் கூடியத் தொழில் ஆகும். இந்த 3D Hologram Fan இயக்குவதற்கு பயிற்சிகளை கற்று கொண்டாலே போதும், அனைவருமே இந்த தொழிலை செய்யலாம்.

3D Hologram Fan மூலம் விளம்பரங்கள் செய்து, தினமும் அதிக இலாபம் பெற முடியும். அதாவது திருமணம் வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து போன்ற இல்ல விழாக்களுக்கு இந்த 3D Hologram Fan மூலம் விளம்பரம் செய்து நல்ல வருமானம் பார்க்கலாம்.

இதுமட்டும் இல்லாமல், உங்கள் ஊரில் உள்ள பிரபலமான நிறுவனங்கள், துணி கடைகள், மால், நகை கடைகள் போன்ற நிறுவனங்களிடம் விளம்பரங்களை வாங்கி, இந்த 3D Hologram Fan-னில் விளம்பரம் செய்து கொடுக்கலாம்.

Also read: கைவினைப் பொருட்கள் செய்முறையைக் கற்றுக் கொடுக்க, “செய்து பாருங்கள்”

இந்த ஃபேன் மூலம் புதுவிதமாக அனிமேஷனில் விளம்பரம் செய்து கொடுக்கலாம். மேலும் இப்போது மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. இந்த 3D Hologram Fan–னை 5 வாங்கி கொள்ளுங்கள், ஒரு பேனின் விலை குறைந்த பட்சம் 10,000/- ரூபாய் என்று வைத்து கொள்வோம், இந்த ஃபேனின் விலை 50,000/- தேவைப்படும். இந்த 3D Hologram Fan வைத்து ஐந்து இடங்களில் விளம்பரம் செய்தால். ஒரு Fan–க்கு ஒருநாள் வாடகை ரூபாய் 1000/- வைத்து கொண்டால், மாதம் 1,00,000/- மேல் வருமானம் பார்க்கலாம். amazon.in, amazon.com, indiamart.com, alibaba.com போன்ற வெப்சைட்டில் மிக குறைந்த விலையில் இருந்தே கிடைக்கின்றது.

இயற்கை சோப்பு தயாரித்தல்:

வீட்டில் இருந்தே ஒய்வு நேரங்களில் செய்ய கூடிய ஒரு சிறந்த தொழில் தான் குளியல் சோப்பு தயாரிப்பு. இந்த தொழில் தொடங்குவதற்கு இட வசதியோ, அதிக முதலீடோ மற்றும் வேலை ஆட்களோ தேவையில்லை. ஒரு நபர் இருந்தாலே போதும் இந்த தொழிலை தொடங்கலாம். தற்போது, இந்த தொழிலுக்கு அதிக சந்தை வாய்ப்பு இருப்பதால், அதிக இலாபமும் பெற இயலும். குறிப்பாக, வேலைக்கு செல்லும் பெண்கள் கூட இந்த தொழிலை பகுதி வேலையாக செய்து வருமானம் பெற இயலும்.

கற்றாழை ஜெல் ஒரு கப், காஸ்ட்டிங் சோடா ஒரு கப், காய்ந்த ரோஜா ஒரு கப், தேங்காய் எண்ணெய் 200 மில்லி, வாசனை திரவியம் விருப்பத்திற்கு ஏற்றது, பிளண்டர், முல்தானிமட்டி இரண்டு ஸ்பூன், விட்டமின் E மாத்திரை 2 ஆகியவை தேவையானப் பொருட்கள் ஆகும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக சூடுபடுத்தவும். அவற்றில், காய்ந்த ரோஜா பூவை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்பு, இறக்கி கொதிக்க வைத்த, ரோஜா பூவை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி ஆறவைக்கவும். கொதிக்க வைத்த நீர் ஆறியதும் அவற்றில் காஸ்டிக் சோடாவை சேர்க்க வேண்டும். காஸ்ட்டிக் சோடா ஒரு காரத்தன்மை உடையது. நெடி ஏறும் எனவே அவற்றை சேர்க்கும் பொது முகத்தில் துணி கட்டிக்கொள்வது மிகவும் நல்லது. காஸ்ட்டிக் சோடா சேர்க்கும் போது மிகவும் வெப்பத்தன்மையாக இருக்கும். எனவே, கவனமாக அவற்றை ஒரு கரண்டியால் கலந்து விட வேண்டும்.

பின்பு, காஸ்ட்டிக் சோடாவின் வெப்பத் தன்மை ஆறியதும் அவற்றில் கற்றாழை ஜெல்லை சேர்க்கவேண்டும். (கற்றாழையில் இருக்கும் தோல் பகுதிகளை நீக்கிவிட்டு அவற்றை மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்). பின்பு, முல்தானி மெட்டியை கலவையில் சேர்த்து கலந்து விட வேண்டும். அதன் பிறகு 200 மில்லி தேங்காய் எண்ணெயை சேர்த்து ஒரு பிளண்டரை பயன்படுத்தி நன்றாக கலந்து விட வேண்டும். பின்பு, அவற்றில் பிடித்த ஏதேனும் ஒரு வாசனை திரவியத்தை கலந்து விட வேண்டும். இறுதியாக விட்டமின் E மாத்திரையை கலவையில் கலந்து திரும்பவும் பிளண்டரால் கலந்து விட்டால் கலவை தயாராகிவிடும்.

Also read: பேக்கரி தொழில் நுட்ப பயிற்சி, மற்றும் கன்சல்டன்சி வழங்குகிறார், ‘செஃப்’ நரசிம்மன்

இப்போது டி கப்பில் இந்த கலவையை ஊற்றி, கலவை நன்றாக இறுகும் வரை காத்திருக்க வேண்டும். பின்பு, கலவை நன்றாக இறுகியதும் டி கப்பில் இருந்து சோப்பை தனியாக எடுத்தால் குளியல் சோப் தயார்.

சந்தையில் விற்கப்படும் குளியல் சோப்புகள் அனைத்திலும் அதிகளவு கெமிக்கல் இருப்பதினால், தோல் சிக்கல்கள் அதிகமாக ஏற்படுகிறது. எனவே அதிகளவு கெமிக்கல் கலக்காத குளியல் சோப்பை நம் வீட்டில் இருந்தபடியே தயாரித்து தரமானதாக சந்தையில் விற்பனை செய்தால், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும். அதுமட்டும் இல்லாமல் வீட்டு பகுதியில் சிறிய பெட்டி கடைகளில் மற்றும் சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்து இலாபம் பெற இயலும்.

சோப் தயாரித்த உடனே பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. 20 நாட்களுக்கு பிறகு தான் பயன்படுத்த வேண்டும். ஏன் என்றால் இந்த குளியல் சோப் தயாரிக்க பயன்படுத்தியுள்ள காஸ்ட்டிக் சோடாவில் இருக்கும் கெமிக்கல் தன்மை முழுவதும் வெளியேறுவதற்காக 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். கலவைகளை கைகளில் கலந்து விட கூடாது, கண்டிப்பாக கரண்டியாலோ அல்லது பிளண்டராலோ மட்டுமே கலக்க வேண்டும்.

பேப்பர் பென்சில் தயாரித்தல்:

குப்பையில் சேரும் காகிதத்தை கொண்டு பேப்பர் பென்சில் செய்து அதையும் ஒரு சிறந்த சிறுதொழிலாக மாற்றலாம். காகிதத்தைக் கொண்டு பேப்பர் பென்சில் செய்வது என்பது ஒரு மறுசுழற்சிப் பயன்பாடுதான். இந்த தொழில் தொடங்குவதற்கு 10-க்கு 10-க்கு அடி கொண்ட ஒரு அறை இருந்தாலே போதும். மேலும், அதிக முதலீடு தேவையில்லை. குறைந்த முதலீடு இருந்தாலே போதும். பென்சில் செய்து விற்பனை செய்யலாம். இதற்கு எந்த ஒரு முதலீடும் வேண்டாம், இயந்திரங்களும் வேண்டாம். பேப்பர் பென்சில் செய்வதற்கு இன்றைக்கு மெஷின்கள் கூட வந்துவிட்டன. ஆனால், கைகளாலும் பேப்பர் பென்சிலை உருவாக்க முடியும்.

Also read: ஒட்டுப்பசைகள், பிரஷ்கள் தயாரிக்கிறோம்!

பென்சிலின் நடுப்பகுதியில் உள்ள எழுதுபொருளான கிராபைட் குச்சிகள் மீது பழைய காகிதத்தைக் கெட்டியாகச் சுருட்ட வேண்டும். (இந்த கிராபைட் (கார்பன்) எளிதில் உடையும் தன்மை கொண்டதால் கவனமாகக் கையாள வேண்டும்) நான்கைந்து சுற்றுகள் சுற்ற வேண்டும். அதன்பின்னர் சுருட்டப்படும் பேப்பரில் பசையை ஒட்டி பென்சிலைத் தயாரித்து விடலாம். இதனை சீவியும் பயன்படுத்தலாம்.

‘‘இந்த பேப்பர் பென்சில் ஒன்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு சுமார் 2 ரூபாய் 75 பைசா. பிராண்டட் பென்சில்கள் விலை 5 ரூபாய். தரத்தைப் பொறுத்தளவில், இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இவ்வாறு தயார் செய்த பேப்பர் பென்சில்களை முதலில் ஒரு சில பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று நேரடியாக விற்பனை செய்யலாம். அதேபோல் உங்கள் ஊரில் உள்ள பெட்டிக்கடை, மளிகைக் கடை, பேன்சி ஸ்டோரில் இவற்றை விற்பனை செய்யலாம் நல்ல இலாபம் கிடைக்கும். இந்த சுயதொழிலை பெரிய அளவில் செய்ய விரும்புபவர்கள், பேப்பர் பென்சில் இயந்திரத்தை வாங்கியும் மிக பெரிய அளவில் தொடங்கலாம்.

டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-களில் பணம் எடுக்க ஐமொபைல் ஆப்

0

ஏடிஎம்களில் இருந்து டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம் களிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் வங்கியின் கிளைகளுக்குச் செல்லாமல் தேவைப்பட்ட நேரத்தில் பணம் எடுக்க முடிகிறது. இதனால் வங்கிகளுக்கும் பணியாளர்கள் குறைகின்றனர். வங்கிக் கிளைகளிலும் கூட்டம் குறைகிறது.

Also read: ஆன்லைன் வணிகத்தில் பாதுகாப்பானது டெபிட் கார்டா? கிரெடிட் கார்டா?

இதில் வசதிகள் இருந்தாலும் மோசடிகளும் நடக்கின்றன. வங்கி ஏடிஎம் கார்டு தகவல்களைத் திருடி போலியான பிளாஸ்டிக் கார்டுகள் உருவாக்கப்பட்டு பணம் திருட்டும் நடக்கின்றன. இதுமட்டும் இன்றி வாடிக்கையாளர்கள் எங்கு சென்றாலும் ஏடிஎம் கார்டுகளை எடுத்துச்செல்ல வேண்டிய தேவையும் இருந்து வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்கள், ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் நடைமுறையை பல்வேறு வங்கிகளும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஐசிஐசிஐ வங்கியும் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் ஐமொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப் வழியாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஏடிஎமில் இருந்து பணம் எடுக்க முடியும்.

Also read: அடல் பென்ஷன் திட்டம்

தினந்தோறும் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை இந்த வசதியை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். இதற்கு டெபிட் கார்டு தேவையில்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் மட்டுமே இந்த முறையில் பணம் எடுக்க முடியும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

சீனி

மின் வணிகத்திற்கு போட்டியாக பிஜிட்டல்

0

ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் பிஜிட்டல் (phygital) என்ற வணிக மாதிரியை (Business Model) இந்தியாவில் செயல்படுத்த திட்டம் தீட்டி வருகிறது. இதனால் முன்னணி மின் வணிக நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. பிஜிட்டல் (Phygital) என்பது பிசிக்கல் (Physical) மற்றும் டிஜிட்டல் (Digital) ஆகிய இரு சொற்களின் கலவையாகும். மின் வணிகத்தில் வணிக நடவடிக்கையானது 100 விழுக்காடு கணினி அல்லது அலைபேசி சார்ந்ததாக இருக்கும். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக மாதிரியில் 50 விழுக்காடு பலசரக்கு கடைகள் சார்ந்ததாகவும் மீதி 50 விழுக்காடு ஜியோ அலைபேசி (Jio Cell Phone) சார்ந்ததாக இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ அலைபேசிக்கு ஏற்கனவே 360 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இவர்களுடன், இவர்களுக்கு அருகில் இருக்கும் 30 மில்லியன் உணவு மற்றும் பலசரக்கு கடைகளுடன் 4நி நெட்வொர்க் (4GNetwork) மூலம் இணைக்கப்படும் வாடிக்கையாளர்கள் ஜியோ அலைபேசியில் ஆர்டர் கொடுத்தால் அந்த ஆர்டர், வாடிக்கையாளருக்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடைக்கு கொடுக்கப்படும். அந்த கடை உரிமையாளர் வாடிக்கையாளர் வீட்டிற்கு சென்று பொருளை டெலிவரி செய்வார். இதனால் போக்குவரத்து செலவும் குறையும்.

Also read: வாடகைக்கு கிடைக்கும் ‘யூலு’ மின் சைக்கிள்கள்

வாடிக்கையாளருக்கும் மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும். இந்த வணிக மாதிரியானது ஏறத்தாழ ஓலா (Ola) உபர் (Uber) போன்றதாகும். ஜியோ நெட்வொர்க்குடன் இணைய விரும்பும் உணவு மற்றும் பலசரக்கு கடைகள் தங்களின் சரக்கிருப்பு (Inventory) தகவல்களை ஒளிவு மறைவில்லாமல் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் பொருட்டே அந்த கடைகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ஆர்டர்களை கொடுக்கும். இந்த வணிக மாதிரியை இப்போது சில குறிப்பிட்ட பகுதிகளில் செயல்படுத்தி சோதனை செய்து வருகிறது.

– ஜே. தினேஷ்

செயற்கை நுண்ணறிவு மூலம் விசால் சிக்கா செய்த மாற்றங்கள்

0

ஒரு நிறுவனத்தை AI -க்கு மாற்றுவது வணிகங்களை மேம்படுத்துவதற்கும், அவற்றின் மனித நேயத்தை பெருக்குவதற்கு மான ஆற்றல் ஆகும் என்கிறார் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய விஷால் சிக்கா. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் புதிய முயற்சியை கடந்த 2019 செப்டம்பர் மாதம் தொடங்கினார்.

இவர் கூறியதாவது, ஆகஸ்ட் 2019, இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளிவரும்போது, எனக்கு வயது ஐம்பதை கடந்து விட்டது. அடுத்து வரும், இருபத்தைந்து வருடங்களை யும், கடந்த இருபத்தைந்து வருடங்களையும் நினைத்து பார்ப்பேன். அப்போது கூகுள், முகநூல், ஊபர், டெஸ்லா மற்றும் ஏர்பின் இவை எதுவும் பயன்பாட்டில் இல்லை. ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாபும் இல்லை. அமேசான் நிறுவனமும் தொடக்கநிலையில் இருந்தன. அடுத்துவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு இந்த புதிய மாற்றங்களே சான்றாகும்.

Also read: ராபர்ட் கியோசாகி சொல்லும் பதினைந்து வழிகள்

என்னுடைய நோக்கம் எல்லாம் தொழில்நுட்பமானது எப்போதும் மனிதநேயம் உடையதாக இருக்க வேண்டும் என்பதே அவற்றில் சில நம்மை மேம்படுத்தும், உருவாக்கும், பலவற்றை பார்க்க வைக்கும், செயல் புரிய வைக்கும். அதே நேரத்தில் தொழில்நுட்பத்தால் வரும் எதிர்மறை விளைவுகளைப் பார்க்கும்போது எதிர்மறையாக தான் சிந்திக்கத் தோன்றுகின்றது.

தற்போது, சில செய்திகளை அடையாளப் படுத்தி நன்கொடைகள் பெற்று வினை என்ற புதிய வலிமையான தொழில் நுட்பத்தை உருவாக்கினேன். பாலியில் பிறந்த முதல் குழந்தை வியன் என்ற பெயரை கொண்டவன். வியன் என்னும் பெயர் விவியன் என்பதில் இருந்து திரிந்து வந்தது. அதன் பொருள் வாழ்க்கையில் முழுமை மற்றும் பேரறிவு என்பதாகும். வியன் என்னும் பெயர் இரண்டு வாழ்வியலை தாங்கி நிற்கிறது.

2019 -ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வினை நிறுவப்பட்டது. அதிகாரப் பூர்வமாக செப்டம்பர் 12 -ம் தேதி நிறுவப்பட்டது. இதில், தொழிலாளர்கள், வணிகர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஆலோசகர்கள் என்று 30 நபர்களைக் கொண்ட மேன்மைப் பொருந்திய குழு உள்ளது. இதை பொருளாதார அளவில் முன்னேற்ற வேண்டும். நான் எப்போதும் செயல்களின் நன்மையை கருதியே செயல்படுவதால், இந்த துறையில் அதையே கொண்டுவர விரும்புகிறேன். செய்யும் வேலையின் மூலமாக ஏற்படும் தாக்கத்தை அளவிட்டு உறுதி செய்யவேண்டும். தொடக்க சிக்கல்களில் பணியாற்றினால், பாதிப்பு களைக் குறைக்கலாம் என்பதே இதன் இலக்கு ஆகும். இந்தத் துறையில் சில தவறுகள் இருப்பினும் அதை நல்ல வழியில் மட்டுமே விரிவுபடுத்துவோம்.

Also read: என்ன செய்தால், எப்படி செயல்பட்டால் நாம் வளரலாம்?

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு பெரிய ஆற்றலை தரும். இது மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாக தான் நான் பார்க்கின்றேன். தொழில் நிறுவனங்களுக்கு ஒரு சந்தைத் தேவை அந்த வாய்ப்பை இது வழங்குகின்றது. பொறியியல் மற்றும் தொழில் நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் முடிவு வடிவமைப்பு, வளர்ச்சி, தீர்வு வழங்குதல் ஆகியவற்றிற்கு இந்த இடங்களில் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இந்த முயற்சியால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளேன் என்று கூறினார்.

– சிவ. தினகரன்

நிறுவனத்தை வலுப்படுத்த ஊபர் ஈட்சை இணைக்கும் சோமாட்டோ

0

உணவு வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டு வந்த ஊபர் ஈட்ஸ், அதன் இந்திய வணிகத்தை சோமாட்டோ நிறுவனத்திடம் விற்க ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஊபர் நிறுவனம், இந்தியாவில் டாக்சி சேவையை முதன்மை வணிகமாக மேற்கொண்டு வருகிறது. 2017 -ம் ஆண்டில் ஊபர் ஈட்ஸ் என்ற பெயரில் இந்தியாவில் உணவு வழங்கும் வணிகத்தையும் தொடங்கியது.

Also read: பீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை

ஆனால், இந்திய நிறுவனங்களான சோமாட்டோ, ஸ்விகி ஆகியவை ஊபர் ஈட்சுக்கு கடும் போட்டியாக இருந்தன. இந்தச் சூழலை எதிர்கொள்ள முடியாத நிலையில், அதன் இந்திய வணிகத்தை தற்போது சோமாட்டோ நிறுவனத்திடம் விற்க ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. 350 மில்லியன் டாலர் (ரூ. 2480 கோடி) மதிப்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஊபர் ஈட்சின் நேரடி உணவகங்கள், வாடிக்கையாளர்கள் என அந்த நிறுவனம் தொடர்புடைய அமைப்புகள் சோமாட்டோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. ஒப்பந்தத்தின் பகுதியாக, ஊபர் நிறுவனம் சோமாட்டோ நிறுவனத்தில் 9.99 சதவீதப் பங்குகளை கொண்டு இருக்கும். இந்த நிலையில், ஊபர் நிறுவனம் அதன் டாக்சி சேவையில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக அதன் சிஇஓ தாரா கோஸ்ரோஷாஹி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, சோமாட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபந்திர் கோயல் கூறியபோது, இந்தியாவில் 500 நகரங்களில் எங்கள் சேவைகளை வழங்கி வருகிறோம். இந்த நிலையில், ஊபர் ஈட்சை வாங்கி இருப்பது, எங்களது இடத்தை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

Also read: நான் வைக்கும் சாம்பார் சுவையாக இருக்க என்ன காரணம்?

தொடக்கத்தில் ஸ்விகி நிறுவனத்துடன்தான் இணைவதாக ஊபர் ஈட்ஸ் கூறியது. உடன்பாடு ஏற்படாத நிலையில் சோமாட்டோ நிறுவனத்துடன் இந்தப் புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு உள்ளது.

– சீனி