பேக்கரி தொழில் நுட்ப பயிற்சி, மற்றும் கன்சல்டன்சி வழங்குகிறார், ‘செஃப்’ நரசிம்மன்

0

பேக்கரி உணவு பொருள்கள் தொடர்பான பயிற்சியாளராக வளர்ந்து வருகிறார், செஃப் திரு. நரசிம்மன். எண்ணற்ற பயிற்சிகளை நாடு முழுவதும் சென்று வழங்கி வருவதோடு, ப்யூரட்டோஸ் (Puratos) என்ற பேக்கரி மூலப் பொருள்கள் விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனத்தில் தெற்கு மண்டலத்துக்கான ஆலோசகராகவும் (டெக்னிக்கல் அட்வைசர்) இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணல்மேல்குடி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவரின் இன்றைய வளர்ச்சிக்குப் பின் உள்ள செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது.

”எனது தந்தை ஒரு விவசாயி. மிகவும் எளிய குடும்பம். எனக்கு ஒரு அண்ணன். ஒரு தங்கை. அப்பா,அம்மா எங்களை மிகவும் சிரமப்பட்டுதான் படிக்க வைத்தார்கள். அண்ணன் மருத்துவம் படித்தார். நான் டிப்ளமோ இன் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்தேன். எனக்கு சமையல் கலை மிகவும் பிடிக்கும். நான் அந்த துறையில் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து, என் உறவினர்களும், நண்பர்களும் என்னை சமையல்கலை வல்லுநர் என்று அழைத்துப் பெருமைப்படுத்துவார்கள்.

படிப்பை முடித்த உடன் பெரிய ஓட்டல்கள், ஏர்லைன் கேட்டரிங், சுற்றுலா கப்பல் போன்றவற்றில் பணி புரிந்ததில் நல்ல அனுபவம் கிடைத்தது. அடிப்படையில் நான் ஒரு செஃப்(Chef). பணி புரிந்து கொண்டே தொலைநிலைக் கல்வியில் பி. எஸ்சி., டூரிசம் அண்ட் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட், எம்பிஏ (ஹோட்டல் மேனேஜ்மென்ட்) படித்தேன். அடுத்து ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷன் படித்தேன். இப்படி இந்த துறை சார்ந்த செய்திகளை படிப்பு வாயிலாகவும், அனுபவம் வாயிலாகவும் கற்றுக் கொண்டே இருந்தேன்.

அண்ணனும் நானும் வேலைக்கு செல்ல தொடங்கிய காலகட்டத்தில் அப்பா தவறி விட்டார். எங்களின் தாய் மாமா எப்பொழுதும் எங்களுக்கு உறுதுணையாக நின்றார். தேவைப்பட்ட நேரங்களில் எல்லாம் உதவினார்; வழிநடத்தினார்.

அபுதாபி, சவூதி மற்றும் இத்தாலியில் உள்ள நிறுவனங்களில் பேஸ்ட்ரி செஃப் (Pastry Chef) ஆக வேலை செய்தேன். அங்கு வேலை செய்த போது எனக்கு நல்ல சம்பளம் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் எனக்கு கீழ் நிறைய பேர்கள் வேலை செய்தார்கள். அவர்களுக்கு நான்தான் தலைவர். .நான் 2012 -ல் விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தேன். மீண்டும் இத்தாலி செல்வதற்கான பயணச்சீட்டு மற்றும் விசா கிடைத்தும் அம்மாவின் உடல்நலக் குறைவு காரணமாக நான் இத்தாலி செல்லவில்லை. அப்பா இல்லாத நிலையில் அம்மாவின் பாசத்தையும் அன்பையும் மீறி என்னால் வெளிநாடு செல்ல இயலவில்லை. அப்பொழுது பணம் எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.

எனவே இந்தியாவிலேயே வேலை செய்ய முடிவு செய்தேன். மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு உணவுத் தொழில் தொடர்பான பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி வழங்குநர் ஆக பணி புரிந்தேன், அங்கு உணவு பதப்படுத்துதல் பொறியியல் மாணவர்கள், சுய உதவிக் குழுக்கள், வேளாண்மைத் துறை மாணவர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளித்தேன். அங்கு என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதுவரை சுமார் பன்னிரெண்டாயிரம் பேர்கள் அளவுக்கு பயிற்சி அளித்து இருக்கிறேன்.

மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் அங்கு பணியாற்றினேன். அதன் பிறகு பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா(PMKVY), நேஷனல் ஸ்கில் டெவலப்மென்ட் திட்டம்(NSDC), ஃபுட் இண்டஸ்ட்ரி கெப்பாசிட்டி அண்ட் ஸ்கில் இனிஷியேட்டிவ் (FICSI) போன்றவற்றில் பேக்கரி தொழில் நுட்ப வகுப்புகளுக்கு பயிற்றுநராக சென்றேன். அதைத் தொடர்ந்து பிஎம்கேவிஒய் பயிற்சிகளான க்ராஃப்ட் பேக்கர், மிக்சிங் டெக்னீஷியன், ஊறுகாய் தொழில் நுட்பம் ஆகிய மூன்று பயிற்சிகளுக்கு க்கும் 450 கேள்விகள் உள்ளங்கிய வினா வங்கி தயார் செய்தேன். அதில் க்ராஃப்ட் பேக்கர் (Craft Baker course) பயிற்சிக்கு நான் தயாரித்த கேள்விகளை தேர்வு செய்திருந்தார்கள். இந்தியா முழுக்க நடைபெற்ற அந்த தேர்வில் நான் தயாரித்த கேள்விகள் இடம் பெற்று இருந்தன.அந்த தேர்விற்கு நானும் ஒரு தேர்வு மேற்பார்வையாளர் ஆக சென்று இருந்தேன்.

செஃப் திருமதி. கீதா கிருஷ்ணன், திரு. ப்ரிஜேஷ் எட்வர்ட் ஆகிய இருவரும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஐதராபாத்தில் பேக்கர்ஸ் டெக்னாலஜி பொருட்காட்சி நடைபெற்றது. .இந்த பொருட்காட்சி இந்தியாவில் ஆண்டுக்கு இரு முறை, இரு நகரங்களில் நடைபெறும். ஒன்று கோயம்புத்தூர். மற்றொன்று ஐதராபாத். ஒரு முறை ஐதராபாத்தில் நடைபெற்ற பொருட்காட்சிக்கு என்னை பங்கு கொள்ளுமாறு திருமதி. கீதா கிருஷணன், திரு. ப்ரிஜேஷ் எட்வர்ட் இருவரும் அழைத்து இருந்தார்கள். அந்த பொருட் காட்சியில் நானும் எனது நண்பர்கள் இருவரும் பங்கு பெற்று இருபத்தைந்து வகையான ஐசிங் (Icing& Frosting) தயாரிப்புகளை செய்து காட்டி பயிற்சி அளித்தோம். 2018-ல் ஒரு முறை பார்வையாளர்கள் நடுவே நூறு வகையான சிறுதானியம் மற்றும் பருப்பு வகைகளை வைத்து உடல் நலனை மேம்படுத்தும் அடுமனைப் பொருட்களை செய்து காட்டி அவர்களின் பாராட்டுகளைப் பெற்றேன்.

தற்போது நான் தொழில் நுட்ப ஆலோசகராக இருக்கும் ப்யூரட்டோஸ் நிறுவனம் பெல்ஜியம் நாட்டை தலைமை இடமாகக் கொண்டது. 1919 ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் நூறு ஆண்டுகளைத் தொட்டு விட்டது. உலகளவில் பத்தாயிரம் பேர்களுக்கும் மேல் இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். இந்தியாவில் இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. ப்யூரட்டோஸ் சார்ந்த பணிகளுக்காக சென்னை தவிர பெங்களூரு, கேரளா, ஐதராபாத்துக்கும் செல்ல வேண்டி இருக்கும்.

ஒருமுறை இராமநாதபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சிறு தானியங்களில் கேக் மற்றும் குக்கீஸ் தயாரிக்க பயிற்சி கொடுத்தேன். அதில் நூற்று இருபது சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டார்கள்.

மைதா மாவு அறவே இல்லாமல் எப்படி குக்கீஸ்களையும், கேக்குகளையும் தயாரிப்பது என பயிற்சி கொடுத்தேன். மைதா இல்லாமல் இத்தகைய பொருட்களை உருவாக்க முடியும் என்பதை அறிந்த அவர்கள் வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தார்கள். நான் வழங்கிய பயிற்சி அடிப்படையில் அவர்களை குக்கீஸ்களையம், கேக்குகளையும் சிறப்பாக தயாரித்தார்கள்.

Also read:பீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை

நான் படித்த கல்லூரியின் கேட்டரிங் மாணவர்களுக்கு இது போன்ற பயிற்சி அளிக்க அக்கல்லூரி முதல்வர் அரிமா திரு. சயத் என்னை அழைத்திருந்தார். இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது
மனிதர்களின் வாழ்க்கையில் உணவு, உடை, வீடு ஆகியவை இன்றயமையாதவை. அப்படி இருக்கையில் உணவுத் துறையை தேர்ந்து எடுப்பவர்களுக்கு எப்பொழுதும் வேலை இருந்து கொண்டேதான் இருக்கும். சொந்தமாக உணவுத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு கள் ஒளி மிகுந்ததாகவே இருக்கும்.

உணவுத் தொழில் முயற்சிகள் ஈடுபடுபவர்களுக்கு நான் சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன். மக்களிடையே உணவுகள் தொடர்பான விழிப்புணர்ச்சி அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட உணவு உடல்நலனுக்கு உகந்ததா, புதிதாக உள்ளதா, தரமாக உள்ளதா என்று கவனத்துதான் வாங்குகிறார்கள்.

ஒரு உணவகம் நடத்தினாலும், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மனநிறைவு கொள்ளும்படி உணவுப் பொருட்களை சமைத்து, தூய்மையான சூழலில், தூய்மையான முறையில் வழங்க வேண்டும். உணவகத்தில் பணிபுரிபவர்களில் சமையல் வல்லுநர்கள் மீது செலுத்தப்படும் கவனம் போலவே பாத்திரம் கழுவுகிறவர்கள் வரை செலுத்த வேண்டும். நீங்கள் என்னதான் சுவையாக, தரமாக தயாரித்து பரிமாறினாலும், பரிமாறப்படும் தட்டு சரியாகக் கழுவப்படாமல் இருந்தால் அத்தனையும் வீணாகி விடும். வாடிக்கையாளர்களின் முகச் சுழிப்பே பரிசாகக் கிடைக்கும்.

புதிய உணவுகளை அறிமுகப்படுத்த விரும்பினால், அவற்றை தயாரித்து நாம் சாப்பிட்டுப் பார்த்து நமக்கு சுவையாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர் களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். உணவு சார்ந்த தொழில்களை பெரிய அளவில்தான் தொடங்கி நடத்த வேண்டும் என்பது இல்லை. முயற்சியும், உழைப்பும் இருந்தால் சிறிய அளவில் தொடங்கியும் வளர முடியும்.

நான் தமிழ் வழியில் படித்தவன் என்பதை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பின்னர் தேவைக்கேற்ப சில மொழிகளைக் கற்றுக் கொண்டேன். இன்று நான் சரளமாக ஆங்கிலம் பேசுவேன். மேலும் இந்தி, மலையாளம், அரபிக் மற்றும் ஸ்பேனிஷ் போன்ற மொழிகளில் நன்றாக பேசுவேன். எந்த ஒரு மொழியும் பேசப் பேசத்தான் வரும்.

சென்னையில் லீட் அகாடமி பயிற்சி நிறுவனமும், நானும் இணைந்து பேக்கரி தொழில் தொடர்பான பயிற்சிகளை வழங்க இருக்கிறோம். வரும் செப்டம்பர், 29 ஞாயிறு அன்று இத்தகைய ஒரு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், பேக்கரி தொடங்க, பேக்கரி பொருள்கள் தயாரித்து கடைகளுக்கு வழங்கும் நிறுவனங்கள் தொடங்க, காஃபி ஷாப் தொடங்க, ஒட்டல்கள் தொடங்க, பார் உடன் இணைந்த ஓட்டல்கள் தொடங்க என்று அவற்றுக்குத் தேவையான ஆலோச னைகளையும், ஆலோசனைக் கட்டணம் பெற்று வழங்கிக் கொண்டிருக்கிறேன்.
ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுத் தருகிறேன்.

உணவுத் தொழில் சார்ந்த விரிவான நூல் ஒன்றை எழுதும் ஆசையும் இருக்கிறது. ஓட்டல் மேனேஜ்மென்ட் – கேட்டரிங் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்த துறை சார்ந்த தொழில் முனைவோருக்கும் பயன்படும் வகையில் எழுத வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறேன்.” என்றார், திரு. நரசிம்மன். (9626585358)

– இளங்கதிர் யோகி

உயிரி தொழில் நுட்பம் பற்றிய சில கேள்விகளும், பதில்களும்!

0

வேளாண் உயிரித்தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) என்றால் என்ன?
வேளாண்மை உயிரித்தொழில்நுட்பம் என்பது ஒருவகையான கருவி போன்று மரபுவழிப் பயிர் பெருக்கத்தின் முறைகளில், உயிருள்ள காரணிகளை மாற்றவும் (அ) அதன் பகுதிகளை உருவாக்கவும், மாற்றி அமைப்பதும் ஆகும். தாவரம் மற்றும் விலங்குகள் (அ) நுண்ணுயிரிகளை குறிப்பிட்ட வேளாண்மைக்கு உதவிட இவ்வாறு செய்யப்படுகிறது. நவீன உயிரித் தொழில்நுட்பத்தின் கருவி என்பது மரபுப் பொறியியல் ஆகும்.

சில உயிரித் தொழில்நுட்பப் பயிர்கள் குறிப்பிட்ட களைக் கொல்லிகளுக்கு தாங்கும் திறன் கொண்டு நன்கு வளர்கின்றன.
உயிரித் தொழில் நுட்பத்தை விவசாயத் தில் ஈடுபடுத்தும் போது விவசாயிகள், உற்பத்தியாளர்கள், நுகர்வோர் அனைவரும் பயனுறுகிறார்கள். உயிரித் தொழில்நுட்பம் எளிய முறையில் பாதுகாப்பாக பயிர்களை நோய் மற்றும் பூச்சித் தாக்குதலில் இருந்து காக்கிறது. சான்றாக மரபுப் பொறியியல் நோய் தாங்கும் திறன் கொண்ட பருத்திக்கு குறைந்தளவே அனங்கக பூச்சிக் கொல்லி பயன்படுத்தப்படுவதால் நிலத்தடி நீர் மாசு அடையாமல் இருக்கின்றது. தரம் மற்றும் மகசூல் அதிகரிக்கின்றது.

பி.டி.என்றால் என்ன?
‘பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ்’ என்பதன் சுருக்கமே பி.டி ஆகும். இது மண்ணில் வாழும் ஒரு வகை பாக்டீரியா. பி. டி. என்பது பூச்சிக் கொல்லியாக இந்தப் பாக்டீரியா மூலம் உருவாக்கப்படுகிறது.

பி.டி.பொதுவாக எங்கும் காணப்படும். மேலும் மண் மற்றும் தாவர இலை, தழைள் சேமித்து வைக்கப்பட்ட தானியங்களிலும் காணப்படும்.

பி.டி.யில் உள்ள நச்சுப் புரதமான இன்சக்டிடால் கிரிஸ்டல் (அ) டெல்டா எண்டோ டாக்சி என்பவை பூச்சிகளைக் கொல்கின்றன. இவ்வகை நச்சுப் புரதமானது மனிதர்களுக்கும் மற்ற பூச்சியற்ற இனத் திற்கும் தீங்கற்றவை. ‘டெல்டா எண்டோ டாக்சின்கள்’ வயிற்று நஞ்சு ஆகும். இதை பூச்சிகள் உண்டவுடன் அமிலத்தன்மை கொண்டதாக செயல்பட்டு பூச்சிகளைக் கொன்று விடுகிறது.

பி.டி.பூச்சிக் கொல்லிகளான ‘டார்மண்ட் பி.டி. மற்றும் டெல்டா எண்டோ டாக்சின்’ 30 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தப் பட்டு உள்ளது.

பி.டி.சோளம் என்றால் என்ன?
‘டெல்டா எண்டோ டாக்சின்’ ஒற்றை செல்லின் மூலம் பாக்டீரியாவால் கட்டுப்படுத்தி, பின் மாறுபாடு செய்து சோளப்பயிரில் அமைப்பது ஆகும். சோளப் பயிரில் உள்ள இம் மரபணு ‘டெல்டா எண்டோ டாக்சின்’ உற்பத்தி செய்து அது பூச்சிகளுக்கு நஞ்சாகி விடுகிறது. பயிரின் திசுக்களில் ‘டெல்டா எண்டோ டாக்சின்கள்’, தாங்கு திறனுக்காக பி.டி.மரபணு சோளத்தில் உட் செலுத்தப்படுகிறது.

பல்வேறு விதை உற்பத்தி நிறுவனங்கள், பல்வேறு விதமான ‘நிகழ்வு’ மற்றும் வளர்ச்சியை பயன்படுத்துவதால் பல்வேறு விதமான ‘டெல்டா எண்டோ டாக்சினை’ தருகின்றன. பல்வேறு விதமான வளர்ச்சிக் காரணிகள் ‘டெல்டா என்டோ டாக்சின்’ சோளப்பயிரிலும், வீரிய ஒட்டு உருவாக்குதலில் பயன்படுத்தப்படுகின்றன.
பி.டி.சோளத்தில் பல்வேறு விதமான வீரிய
ஒட்டு இரகங்கள் உள்ளன.

பி.டி.சோளம் மற்ற பிற பூச்சிகளை பாதிக்கிறதா?
பல்வேறு இனங்களில் புழுக்கள் சோள வயலில் உள்ளன. அவ்வாறு வளரும் காலங்களில் பி.டி.சோளத்தால் அவை பாதிப்பு அடைகின்றன. ஒரு ஐரோப்பியர் செய்த ஆய்வில் ‘பச்சை இறகு புழு’ (ஐரோப்பிய காய்ப் புழுக்களை அழித்தும், மாறுபட்டும் இருந்தது. இவை பி.டி. அற்ற சோளத்தில் சற்று குறைவானதாக இருந்தன.
பி.டி.சோளத்தின் வேர்கள் ‘டெல்டா எண்டோ டாக்சின்களை மண்ணில் வெளியேற்றுகின்றன. இவ்வாறு வெளியேற்றுவதைப் பல்வேறு ஆய்வகங்களில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் மண்ணில் புலப்படாத பல்வேறு நுண்ணுயிரிகளும் காணப்படுகின்றன.

குறைந்த அளவு ஆய்வுகளே பி.டி. சோளம் இலக்கற்ற பூச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. முதல் நிலை முடிவுகளில் அவற்றின் பாதிப்புகள் சற்று குறைவாகவே இருந்தன.

பி.டி.சோளமானது உடல் நலத்திற்குத் தீங்கானது, இது உடலில் சிலருக்கு ‘ஒவ்வாமை’ ஏற்படுத்தும். இது சரியா?
ஆய்வானது, அமிலச் சூழலில் ‘ஒவ்வாமை’ தோற்றுவிக்கும் காரணிகள் எவ்வளவு நேரம் உள்ளன என்பதும், அதிக அளவு நேரம் இரத்த மண்டலத்திலும், ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையும் ஆய்வு செய்தல் வேண்டும். தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ‘டெல்டா எண்டோ டாகசின்கள்’ அதி விரைவில் வயிற்றுப் பகுதியில் சிதைந்து விடுகின்றன. அவை உடலுக்கு ஒவ்வாமையைத் தோற்றுவிப்பதில்லை என்று கண்டறியப்பட்டு உள்ளது.

உயிரித் தொழில்நுட்பம், மரபியல் முறைப் பயிர்ப்பெருக்கத்தில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
உயிரித் தொழில் நுட்பம் என்பது, நவீனமான தொழில்நுட்பமான மரபுப் பொறியியல் மூலம் தாவரத்தினை மாற்ற (அ) மேம்படுத்தவும், விலங்குகளில், பிற நுண்ணுயிரிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்தைப் பொறுத்தவரை இது புதியது அல்ல. நூறாண்டுகளுக்கு முன்பே விவசா யிகள், இனக்கலப்பு செய்து புதிய பயிர் களை கண்டறிந்தனர்.

விவசாயத்தைப் பொருத்தவரை உயிரித் தொழில் நுட்பப் பொருட்கள் மூலம் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவது குறைக்கப் படும். பி.டி.பருத்தி, பருத்தியைத் தாக்கும் பல பூச்சிகளை அழித்தது.

அமெரிக்காதான் மரபுப் பொறியியல் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்ததா?
அமெரிக்கா மட்டும் மரபுப் பொறியியல் விவசாய பொருட்களை உற்பத்தி செய்ய வில்லை. பல்வேறு ஐரோப்பிய நாடுகள், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, கனடா, சீனா, அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் முதலியனவும் இத்துறையில் ஈடுபட்டு உள்ளன. பல்வேறு உயிரி தொழில்நுட்ப இரகங்கள் சோளம், சோயா மொச்சை பிற பயிர்களில் உருவாக்கப் பட்டன.

மேலும் பல ஐரோப்பிய கம்பெனிகள் அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரகங்களை மேம்படுத்தவும் வணிக ரீதியாக உற்பத்தியை பெருக்கவும் செய்கின்றன. ‘அகா ஈவோ’ என்னும் ஜெர்மன் கம்பெனி, நோவர்டிஸ் எனும் ஸ்விட்சர்லாந்து கம்பெனி இரண்டும் இணைந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் மற்றும் சோயா மொச்சையினை அமெரிக்க விவசாயிகளுக்கு அளிக்கிறார்கள்.

உயிரித் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் பயிர்கள், மரபு வழியில் பயிரிடும் பயிர்களைப் போன்று சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதா?
உயிரித் தொழில் நுட்பத்தால், சுற்றுச் சூழல் பாதிப்படைகிறது என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை. உயிரித் தொழில் நுட்பம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி, மரபு வழியில் பயிரிடுவதைக் காட்டிலும் அதிகமாக இலாபத்தைக் கொடுக்கிறது.
உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ‘ஒவ்வாமை’ ஆய்வு மேற்கொண்ட பின்னரே புதிய ரகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. சோயா மொச்சை, பால், முட்டை, மீன் மற்றும் கோதுமை இவற்றில் வேளாண்மை உயிரித் தொழில்நுட்ப கம்பெனிகள் ‘ஒவ்வாமை’ பொருட்கள் மரபணுவில் இல்லாதவாறு பொருட்களை உற்பத்தி செய்வதாகவே கூறுகிறார்கள்.

பி.டி. சோளம், உருளைக் கிழங்கு மற்றும் பருத்தியில் குறிப்பிட்ட மரபணு மூலம் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணியான ‘பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்’ மூலம் ஐரோப்பிய சோளப்புழு, கொலராடோ உருளை வண்டு மற்றும் இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது.

உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய பயிர் இரகங்களை விவசாயிகள் பயன்படுத்துகிறார்களா?
உலக அளவில் மில்லியன் கணக்கான ஏக்கர்களில் உயிரித் தொழில்நுட்பப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

பூச்சித் தாக்குதலில் இருந்து தாங்கும் தன்மை கொண்ட ‘ஆப்பிரிக்கா சர்க்கரை வள்ளிக் கிழங்கு’ புதிய இரகமானது ‘வைரஸ்’ நோய்களில் இருந்தும் விடுபடுகிறது. இதன் மகசூல் அதிகரிக்கிறது. மேலும் வைரஸ் தாக்குதலின்றி புதிய பூசணிக் குடும்பத் தாவரங்கள் தென்கிழக்கு ஆசியா எங்கும் புதிய இரகங்கள் உருவாக்கப்படுகிறது.

‘டெர்மினேட்டர்’ தொழில்நுட்பம் என்றால் என்ன?
‘டெர்மினேட்டர்’ தொழில் நுட்பம் என்பது விதை, செடிகளை ஆய்வு செய்து ‘கிருமி’ இல்லாத விதைகளை உற்பத்தி செய்வதாகும். இப்போது வரை, விதை மேம்பாட்டு நிறுவனம் மூலம் மட்டுமே இத் தொழில் நுட்பம் பின்பற்றப்படுகிறது. எந்தத் தனியார் நிறுவனமும் இதில்
ஈடுபடவில்லை.

மீன் வளர்ப்பியலில் உயிரித் தொழில்நுட்பமானது உதவுமா?
ஆமாம். உயிரித் தொழில்நுட்பம் பயன் படுத்தி மீன் தட்டுப்பாட்டினைப் போக்க முடியும். அக்வா அட்வான்டேஜ் என்ற சாலமன் என்னும் மீன் விதையானது, அக்வா ஃபவுண்டரி பண்ணை மூலம் 12-18 மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்டது. இதையே மரபு வழியில் செய்ய 2-3 ஆண்டுகள் ஆகும்.

‘தங்க அரிசி’ என்றால் என்ன?
‘அரிசியை’ முதன்மை உணவாக உட்கொள்ளும் மக்களில் 200 மில்லியன் பேர்கள் ‘வைட்டமின் ஏ’ குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய அரசியை ‘தங்க அரிசி’ என்கிறார்கள். இதில் உள்ள ‘பீட்டா கரோட்டின்’ ‘வைட்டமின் ஏ’வை உருவாக்குகிறது.

எம்மாதிரியான பயன்பாடுகளுக்கு மரபுப் பொறியியல், வேளாண் பயிர்களில் பயன் படுத்தப்படுகிறது?
பெரும்பாலும் அமெரிக்காவில் உருவாக்கப்படும் ‘மரபுப் பொறியியல் பயிர்கள்’ பூச்சித் தாக்குதல் (அ) பூச்சிக் கொல்லி தாங்கும் தன்மைக்காகவே உருவாக்கப்படுகிறது. அமெரிக்கர் தினமும் உட்கொள்ளும் உணவு வகைகள் பெரும்பாலும் மரபணுப் பொறியியல் உணவுகளே, ஆனால் நமது நாட்டில் மரபணு மாற்றப்பட்ட உணவுகள் குறைந்த அளவே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

உலகின் மக்கள் தொகை அதிகரிப்பைப் பார்க்கும் போது உலகின் அனைத்து இடங்களிலும் உணவு உற்பத்தியின் தேவை அதிகரிக்கும். பயிர்கள் அவைகளாகவே தங்களை பூச்சி, நோய்த் தாக்கதலில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். சுவை, நிறம், வடிவம் மற்றும் அதிக தாங்கும் தன்மை முதலியன உயிரித் தொழில்நுட்பம் மூலம் செய்யப்படுகின்றன. விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு குறைகிறது.

ஏன் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மாறுபாடு உடையதாக இருக்கின்றன?
எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் முடிவுறாத் தன்மையுடன் இருக்கும் போது மாறுபாடுடன்தான் காணப்படும். அதற்கு மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் விதி விலக்கல்ல. புதிய மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வெளியிடும் முன், அவற்றை மரபு முறையில் பயிரிடுவதற்கு சோதனை செய்தலை விட அதிகம் சோதனை செய்ய வேண்டும். ஆனால் இப்போதுதான் அத்தகைய சோதனை முறைகள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் வளர்ந்து வருகின்றன.

தாவரத் திசு வளர்ப்பு என்றால் என்ன?
தாவரத் திசு குறிப்பிட்ட வழி முறைக ளைக் கடைபிடித்து அதன் பகுதிகள் (தண்டு, வேர், உட்கரு) கிருமி இல்லாத நிலையில் வளர்ப்பதாகும். தாவரத் திசு வளர்ப்பு அதிகமாக ஆய்வுக் கூடத்தில் விதையில்லாப் பெருக்கமான ‘நுண் பெருக்கம்’ மூலம் செய்யப்படுகிறது.

.நுண் பெருக்க முறையில் விரைவாக
ஆயிரக்கணக்கான தாவரங்களை உற்பத்தி செய்ய முடி யும். குறைந்த இடத் தில் அதிக அளவு பல்வேறு இனங்களை வைக்கலாம்.
திசு வளர்ப்பு ஊட்டச்சத்து ஊட கத்தில் நீர், அங்கக உப்புகள், தாவர வளர்ச்சி ஊக்கிகள், வைட்டமின்கள், அமினோ அமிலம், கரிம மூலப்பொருட்கள் மற்றும் திடப் பொருள் ஊடகம் ஆகியவை உள்ளன.

இரண்டு தாவர வளர்ச்சி ஊக்கிகள், தாவரத்தில் மாறுபாட்டைத் தோற்றுவிக் கின்றன. ஆக்ஸின்கள், வேர் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன. சைட்டோன்கைனின்கள், தண்டு தோன்றுவதை ஊக்குவிக்கிறது. பொதுவாக இவற்றின் அளவை மாற்றி அமைப்பதன் மூலமே தாவரத்தின் உருவத் தோற்றத்தில் மாறுபாட்டை ஏற்படுத்த முடியும்.
நுண் பெருக்க நிலைகள் –

நிலை 0 : தேர்ந்தெடுத்தல் மற்றும் தாய் தாவரத்தைத் தயார் செய்தல் – கிருமி நீக்கம் செய்தல் – தாவரத் திசுப் பகுதிகளைச் சேகரித்தல். நிலை 1: தொடக்கநிலை – வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை தகுந்த ஊடகத்தில் வைக்க வேண்டும். நிலை 2: பெருக்கநிலை – வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை தண்டு ஊடகத்திற்கு மாற்ற வேண்டும். அவற்றைப் பிரித்து பின் நடவேண்டும். நிலை 3 : வேர் விடும் நிலை- வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை வேர் ஊடகத்திற்கு மாற்ற வேண்டும். நிலை 4 : மண்ணிற்கு மாற்றுதல் – வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை மண்ணிற்கு மாற்ற வேண்டும்.

ஆதாரம்: btmicropropagation.nic.in (தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணைய தளத்தில் இருந்து)

-மலர்

அதிர்ச்சி கொடுத்த ஜிடிபி

0

அண்மையில்தான் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பைப் பற்றி அறிவித்தார். ஆனால் அதைத் தொடர்ந்து வந்து உள்ள இந்தியப் பொருளாதாரம் குறித்த ஜிடிபி (Gross Domestic Product) தரவுகள் அதிர்ச்சி கொடுப்பதாக இருக்கின்றன. 2019 – 20 நிதி ஆண்டுக்கான, 2019 ஏப்ரல் – 2019 ஜூன் காலாண்டு காலத்துக்கான, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் ஜிடிபி வெறும் 5 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டு அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்து இருக்கிறது.

கடந்த 2018 – 19 நிதி ஆண்டின் மார்ச் 2019 காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் ஜிடிபி 5.8 சதவிகிதமாக இருந்தது. மக்களிடையே நுகர்வில் ஏற்பட்டிருக்கும் சரிவுதான் இந்த 0.8 சதவிகித ஜிடிபி சரிவுக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டு காலங்களில், இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையான காலத்தில்தான் மிகக் குறைந்த வளர்ச்சி கண்டு இருக்கிறது.

போதுமான முதலீடுகள் வராதது, தேவைகள் குறைந்தது போன்றவைகள்தான் இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு காரணம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

ஜிடிபி வளர்ச்சி குறித்து, பொருளாதார ஆலோசகர் திரு. கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், 2019 – 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கலாம் எனச் சொல்லி இருந்தார்.

ஆர்பிஐ தன்னுடைய ஆகஸ்ட் மாத நிதிக் கொள்கைக் கூட்டத்தில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2019 – 20 நிதி ஆண்டில் 6.9 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்து இருந்தது. அதே நேரத்தில் 2019 – 20 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான முதல் அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவிகிதமாகவும், அடுத்த அக்டோபர் 2019 – மார்ச் 2020 வரையான அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவிகிதமாகவும் இருக்கும் எனக் கணித்து இருந்தது.

உலகின் முக்கிய அனலிஸ்ட் நிறுவனங்களில் ஒன்றான க்ரிசில், இந்தியாவின் 2019 – 22 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியை 6.9 சதவிகிதமாக நிர்ணயித்து இருக்கிறது. இதற்கு காரணமாக மோசமான வானிலை, உலக பொருளாதார மந்த நிலைகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்திய பொருளாதாரம் முதல் அரையாண்டில் மந்த நிலையில் இருந்தாலும், அடுத்தடுத்த வட்டி விகித குறைப்பு, நுகர்வு போன்ற காரணங்களால் அடுத்த அரையாண்டில் நிலை கொள்ளும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

– அரசி

நான் வைக்கும் சாம்பார் சுவையாக இருக்க என்ன காரணம்?

0

– 86 வயது சமையல் கலைஞர் நாராயணன் விளக்குகிறார்!

தொழில் முனைவோர் எந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்; அவர்களுக்கு யாராலும் பணி ஓய்வு கொடுக்க முடியாது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறார் எண்பத்து ஆறு வயதிலும் தனது சிறிய அளவிலான உணவகத்தை தனது மகளுடன் சேரந்து நிர்வகித்து வரும் திரு. நாராயணன். இவர் சென்னை, குன்றத்தூரில் ­உள்ள சம்பந்தம் நகரில், ஓட்டல் தென்றல் என்ற சைவ உணவகத்தை நடத்தி வருகிறார். சமையல் துறைக்கு அவர் வந்தது குறித்தும், அவர் தொழில் வாழ்க்கை குறித்தும் வளர்தொழிலுக்க அவர் அளித்த பேட்டியின் போது,

”நான் கேரளாவைச் சேர்ந்தவன். எனக்கு அப்போதி பதினொரு வயது இருக்கும். என் குடும்ப சூழ்நிலை காரணமாக ஏதாவது வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். தெரிந்தவர் ஒருவர் என்னை ஒரு ஓட்டலில் பணிக்கு சேர்த்து விட்டார். அங்கு என்னுடைய வேலை, சமையலுக்குத் தேவையான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வருவது, சமையலுக்கு உதவியாக இருப்பது ஆகியவைதான். அதற்கு மாத ஊதியமாக ஒன்றரை ரூபாய் தந்தார்கள்.

அந்த உணவகத்தில் சில மாதங்கள்தான் வேலை பார்த்தேன். என்னுடைய அண்ணன் அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தார். அப்போதுதான் சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாசாலையில் கீதா கஃபே திறப்பதற்கான பணிகள் நடந்து கொண்டு இருந்தன. அங்கே வேலைக்கு சேர்ந்தேன். அப்போது அது பெரிய உணவகமாக அமைந்து இருந்தது. சென்னையின் பல பகுதிகளில் இருந்து அங்கே உண்ண வருவார்கள். உணவுகள் தரமாகவும், சுவையாகவும் இருக்கும். பரிமாறுகிறவர்களும் நல்ல சீருடையுடன், நட்புடன் பரிமாறுவார்கள். அந்த காலக் கட்டத்தில் கீதா கஃபேயின் காப்பிக்கு அடிமையானவர்கள் நிறைய பேர்கள் இருந்தார்கள்.

அங்கு சில மாதங்கள் வேலை பார்த்த பிறகு, வேறு ஓட்டலுக்கு சென்று விட்டேன். எனக்கு கொஞ்சம் கோபம் அதிகமாக வரும். இதனால் ஏதாவது காரணங்களால், அவ்வப்போது கோபப்பட்டு ஓட்டல் ஓட்டலாக மாறிக் கொண்டிருந்தேன். எனது இந்த கோபத்தை கட்டுப்படுத்தி பணி புரிந்து இருந்தால் என் வளர்ச்சி இன்னும் பெரிதாக இருந்து இருக்கும். தொழில் முனைவோராக இருந்தாலும், பணி புரிவோராக இருந்தாலும் தேவையற்ற கோபங்களில் இருந்த தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். கோபம் என்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டு எடுக்கும் முடிவுகள் பல நேரங்களில் தப்பாக போய் விடுவதை என் அனுபத்தில் கண்டு உணர்ந்து இருக்கிறேன்.

பல ஓட்டல்களில் பணி புரிந்ததால், ஓட்டல் தொழில் தொடர்பான பல செய்திகளை விரைவிலேயே கற்றுக் கொண்டேன். இருபத்தைந்து வயதிலேயே மாஸ்டர் ஆகி விட்டேன். நான் பணி புரிந்த அனைத்து உணவகங்களிலுமே, அந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு அன்பானவனாகவே இருந்தேன்.

கோவையில் ஒரு ஓட்டலில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தேன். அந்த ஓட்டலில் ஒவ்வொரு மாத சம்பளத்தில் இருந்தும் ஐந்து ரூபாய் பிடித்து வைத்திருந்து, அவசரத்தேவை என்றால் அந்த தொகையை நம்மிடம் கொடுப்பார்கள். ஒருமுறை என் தேவைக்காக அந்த தொகையைக் கேட்ட போது கொடுக்க மறுத்ததோடு என்னை அடித்தும் விட்டார்கள்.

அங்கிருந்து வெளியேறி சொந்தமாக தேநீர் கடை தொடங்கினேன். சரியாக வரவில்லை.

கேரளாவில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் தேநீர்க் கடை, சிறிய ஓட்டல்கள் தொழிலில் ஈடுபடுவதாக பலரும் எண்ணுகிறார்கள். கேரளாவில் இருந்து மட்டும் அல்ல; வெளியூர்களுக்கு வேலைக்கு வருபவர்கள் அனைவருமே இந்த வேலைகளில், தொழில்களில்தான் ஈடுபடுவார்கள். ஏனென்றால், தேநீர்க் கடைகளிலும்,

ஓட்டல்களிலும் தான் உடனடியாக வேலை கிடைக்கும். அதே போல், சொந்தமாக கடை வைப்பவர்களும் முதலில் தேநீர்க் கடையைத் தான் தேர்ந்து எடுப்பார்கள். ஏனென்றால் அதற்கு குறைந்த அளவு முதலீடு போதும். உரிமையாளரே டீ மாஸ்டராகவும் இருந்தால் லாபமும் கூடுதலாக இருக்கும். தேநீர் அனைவரும் அருந்தக் கூடிய ஒன்றாகவும் உள்ளது. எனவே பொதுவாக அதில் நட்டம் ஏற்படாது.

பிறகு சிறிய உணவகம், இனிப்பகம், தேங்காய்க் கடை, எண்ணெய்க் கடை, காப்பித் தூள் கடை என பல கடைகள் வைத்தேன். எதையும் தொடர்ந்து நடத்த முடியவில்லை. இப்போது சிந்தித்துப் பார்த்தால் என்னுடைய பொறுமை இன்மையும், சிந்திக்காமல் எடுத்த அவசர முடிவுகளே இதற்குக் காரணமாக இருக்குமோ என்று எண்ணுகிறேன்.

ஓட்டல் தென்றல் என்னுடைய இருபத்தெட்டாவது கடை. இங்கு வியாபாரம் நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது. என் மகள் லட்சுமி வயிற்று பேத்தியின் பெயர் தென்றல். அவள் பெயரில்தான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன். லட்சுமிதான் எனக்கு உதவி யாக இருக்கிறார். சாப்பிட வருபவர் களுக்கு பரிமாறுவது, பார்சல் கட்டுவது போன்ற வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார். சமையல் வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.

ஒரு முறை எங்கள் உணவகத்துக்கு வந்து சாப்பிட்டவர்கள், தொடர்ந்து வருகிறார்கள். காலையில் இட்லி, பூரி-கிழங்கு, பொங்கல், வடை ஆகியவற்றை தயாரிப்பேன். பொங்கல் அதிகமாக விற்பனை ஆகும். இதற்குக் காரணம் பொங்கலுடன் நான் வழங்கும் சுவையான சாம்பார்தான். என் சமையலின் சுவைக்கு காரணம் நான் சேர்க்கும் பொருள்கள்தான்.

பொங்கலுக்கு, ஒரு கிலோ பச்சரிசி என்றால், ஒரு கிலோ பாசிப்பருப்பு சேர்ப்பேன், பெரிய ஓட்டல்களில் கூட கிலோ அரிசி என்றால் நூற்று ஐம்பது அல்லது இருநூறு கிராம் பருப்பு மட்டுமே சேர்ப்பார்கள். இரண்டாவது, ஒரு கிலோ பொங்கலுக்கு முக்கால் கிலோ எண்ணெய் சேர்த்தால் கரண்டியில் ஒட்டாது, மென்மையாகவும் இருக்கும். அடுத்து, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை நெய்யில் தாளிக்க வேண்டும். பானையில் வைத்து தம் கொடுக்க வேண்டும். அதாவது பதினைந்து நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைத்து விட வேண்டும். இதைத்தான் தம் கொடுப்பது என்கிறேன். இதைப் போன்ற பல நுட்பங்கள் உணவகச் சமையலில் இருக்கின்றன. இவற்றை ஓட்டல்கள் நடத்தும் தொழில் முனைவோர் கற்றுக் கொள்ள வேண்டும்..

அடுத்து சாம்பார். பருப்பு வேக வைக்கும் போதே தேவையான அளவு காய்கறிகள், மற்றும் மசாலாக்களை (மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள்) சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனோடு தாளிப்பையும் சேர்த்து கொதிக்க வைக்கும் போது மணமாகவும், சுவையாகவும் இருக்கும். தாளிப்பின் போது கட்டிப் பெருங்காயம் சேர்க்க வேண்டும். உடன், கொத்து மல்லி, கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைக்கம்போது மேலும் மணமாக இருக்கும். இந்த சாம்பாரை விரும்பி வரும் வாடிக்கையளர்கள் அதிகம். இந்த சாம்பாரை வாங்கிக் குடிப்பவர்களும் இருக்கிறார்கள்.

சில பெரிய ஓட்டல்களில் சாம்பார் செய்முறை முற்றிலும் மாறுதலாக இருக்கும். பருப்பை வேக வைத்து, புளித் தண்ணீரில் தேவையான காய்கறிகளையும், மசாலா வையும் சேர்த்து தனியே வேக வைத்து சாம்பாரைத் தாளித்து, மேற்கண்ட கலவையை சேர்த்து கொதிக்க வைப்பர். இறுதில் கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து இறக்குவார்கள். இந்த முறையில் சுவையும், மணமும் குறைவாகவே இருக்கும்.

நான் ஓட்டல்களில் வேலை செய்துக் கொண்டு இருக்கும் போதே, சுவைக்காகவும், மணத்திற்காகவும் சற்று மாறுதலாக சமைத்துப் பார்ப்பேன். வாடிக்கையாளர் களை கவர்வதற்கு இத்தொழிலில் சுவையும், மணமுமே முக்கிய காரணம் ஆகும்.

தொடக்கத்தில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் தொடங்கிய இந்த வேலைதான் இன்றைக்கு என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. இடையில் எனக்கு நடிகராக வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. அதன் விளைவாக என்னுடைய 22-ஆவது வயதில் ஒரு நாடகத்தில் நடித்தேன். அதில், என்னுடன் நடிகர் சிவகுமாரும் இணைந்து நடித்தார். மேலும், எனக்கு பாடல்கள் எழுதுவதிலும், பாடுவதிலும் ஆர்வம் உண்டு. என் மனைவி திருமதி. தங்கமணியை நினைத்து நிறைய கவிதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். எனக்கு மொத்தம் ஏழு குழந்தைகள். அவர்களில் இருவர் இறந்து விட்டனர். ஒரு மகள் என்னுடன் இருக்கிறார். மகன்கள் வேறவேறு தொழில்களில் இருக்கிறார்கள். அவ்வப்போது அன்புடன் என்னைப் பார்த்துச் செல்வார்கள்.” என்றார் திரு. நாராயணன்.

– சா. கு. கனிமொழி

அரசுடமையில் ஐம்பது ஆண்டுகள்

0

கடந்த ஜுலை 19, 2019 உடன் 14 தனியார் வங்கிகள் அரசுடமையாகி அரை நூற்றாண்டாகி விட்டது. அதற்குப் பின்னர், 1980ல் மேலும் சில தனியார் வங்கிகளை பிரதமர் தேசிய மயமாக்கினார்.

இன்று அந்த வங்கிகளின் நிலைமை என்ன? பொது மக்களுக்குச் சாதகமா… பாதகமா? அவற்றின் சேவையும், தரமும் மேம்பட மைய அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?

சாதனை: பாசிட்டிவான அம்சங்களை முதலில் கவனிக்கலாம். விரல் விட்டு எண்ணினாற் போன்ற ஒரு சில பெரும் செல்வர்களுக்கு மட்டுமே 1969 வரைஅவை கடன் அளித்து வந்தன. நடை பாதையில் கடை வைத்திருப்பவர்கள், சிறிய ஊரில் தொழில் நடத்திப் பிழைப்பவர்கள், விவசாயிகள் போன்ற பலரும் வங்கியை அணுகி, கடன் பெற்று, முன்னேறலாம் என்ற நிலைக்கு வந்தது 1969க்கு பின்தான். இதை யாரும் மறுக்க இயலாது.

2010 க்குப் பிறகு, கணினியின் செயல்பாடு மெருகேறி, ‘ஆதார வங்கித் தன்மை’ (கோர் பாங்கிங் சிஸ்டம்) நுழைந்தவுடன், வங்கிகளின் சேவை மிகவும் மாறி விட்டது.

குறைந்த செலவில், உடனே தொகை அனுப்பும் வசதி, இல்லத்தில் அமர்ந்து கொண்டே கைபேசி மூலம் இருப்பைத் தெரிந்து கொள்ளவும், பணப் பரிமாற்றம் செய்யவும் இருக்கிற வாய்ப்பு, விடுமுறையானால் கூட, அண்மையில் இருக்கும் ஏடிஎம்மில் பணம் எடுக்கிற பயன்பாடு… என்று பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. (இதனாலேயே தொடர் விடுமுறை, வேலை நிறுத்தம் போன்றவற்றால் வாடிக்கையாளர்கள் பெருமளவு பாதிக்கப்படுவது கிடையாது.)

சோதனை: முதலில் குறிப்பிட வேண்டியது ஆட்குறைப்பும், வல்லுநர்கள் பற்றாக்குறையும். சுமார் 50 லட்சம் கடன் தொகைக்கு விண்ணப்பித்து வரும் வாடிக்கையாளருக்கு கூட சரியான, தெளிவான பதில் சொல்ல அதிகாரிகள் இல்லை. “… இல்லை, விடுப்பு” “உங்கள் கிரெடிட் ஸ்கோர் பார்க்கணும்” “சிஸ்டம் சரியாக வேலை செய்யவில்லை” “மேலதிகாரி மாற்றலாகி விட்டார்” போன்ற சாக்கு போக்குகள் சொல்லி, வாடிக்கையாளரை இழுத்தடிக்கிறார்கள்.

இதனாலேயே வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்ற பிரிவுகளுக்கான கடன்களை வங்கிகள் உடனே வழங்குகின்றன போலத் தோன்றுகிறது.

அடுத்ததாக வாராக் கடன். இதனால் அனைத்து வங்கிகளுமே விழிபிதுங்கி நிற்கின்றன. நானறிந்த வரையில், ஒரு கோடிக்கு மேல் (இன்று 25 கோடியாக இருக்கலாம்) கடன் வழங்கும் போது இரண்டு அல்லது மூன்று வங்கிகள் சேர்ந்துதான் வழங்குவார்கள். மத்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரியும் இதில் இடம் பெறுவார். இப்படியிருக்கும்போது, ஏக் தம் நூறு கோடி கடன் பெற்று, ஓடி விடுகிறார்கள். இது எப்படி நடைபெறுகிறது? நிச்சயமாக அரசியல் தலையீடு இருப்பதால்தான்.

மூன்றாவது பணியாளர்களிடம்… கடை நிலை ஊழியரில் இருந்து பொது மேலாளர் வரை… தென்படும் ஒழுக்கக் கேடு, விரைவில் பணம் குவிக்கலாம் என்கிற மனநிலை எல்லாரிடையேயும் பரவி உள்ளது. கேஒய்சி போல கேஒய்எஸ் (Know Your Staff -உங்கள் ஊழியரை தெரிந்து கொள்ளுங்கள்) என்ற தன்மை கொணர வேண்டும் என்று ஓய்வு பெற்ற மூத்த மேலதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

மைய அரசு வங்கிகளின் நிலைமையை முற்றும் உணர்ந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

வேதனை: என்னதான் சேவையில் முன்னேற்றம் இருந்தால்கூட, பல “பற்றுகள்” இருப்பில் திடீரென வந்து விடுகின்றன. மேலும், எஸ்எம்எஸ் எனும் குறுஞ்செய்தி அனுப்ப என்று மாதம்தோறும் குறிப்பிட்ட கட்டணம் வசூல் பண்ணினாலும், முக்கியமான அம்சங்களில் குறுஞ்செய்தி வருவதில்லை.

என் நண்பரின் மகனுக்கு வீட்டுக் கடனில், வீடு காப்பீடு செய்யும் போது ஒரேயடியாக 5 ஆண்டுகளுக்கு சேர்ந்து மொத்தமாக பற்று வைத்து விட்டார்கள். அதே போல், பாதுகாப்புக் கட்டணத்துக்காக, இருப்பில் உள்ள ஆயிரம் ரூபாயை எடுக்க முடியாமல் ‘நிறுத்தி’ விட்டார்கள். வங்கியின் கோணத்தில் இது சரியாக இருக்கலாம். ஆனால் முன்னறிவிப்பு தராமல் செய்யலாமா?

எல்லா வங்கிகளுமே இது போன்ற சிக்கல்களுக்குத் தரும் ஒரே பதில்: “நாங்கள் பண்ணவில்லை சார்,. சிஸ்டம் செய்து விடுகிறது.” சிஸ்டம், பேக்கேஜ், ரன் போன்ற சொற்களை படித்தவர்களாலேயே புரிந்து கொள்ள முடிவதில்லை. சாதாரண வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்வார்களா?

முன்பு பாரத ஸ்டேட் வங்கி செய்து வந்த பல வேலைகளை… வருமான வரி, ஓய்வூதியம் – அரசு வங்கிகளின் மீது சுமத்தி விடுவதால், ஒரு சாதாரண வாடிக்கையாளர் கேட்கிற சந்தேகங்களுக்குப் பதிலளிக்க நேரம் இருப்பதில்லை.

ஆனாலும், ஒரு சிலர்,, இன்னும் சில ஆண்டுகளில், வங்கிக்குள் நுழைந்து கேள்வி கேட்டாலே ‘சார்ஜ்’ பண்ணி விடுவார்கள். நாம் சேமிக்கும் தொகைக்கும் கட்டணம் போடுவார்கள் போல இருக்கிறது என்று அஞ்சுகிறார்கள். வருங்காலத்துக்காக சேமிக்கும் பழக்கம் அதிகம் உள்ள இந்தியாவில், அந்த நிலைமை வருவதற்கான வாய்ப்பு அரிது.

ஆனாலும், தொழில் துறை மேலும் வளர்ச்சி பெற, விரைவில் விண்ணப்பங்களை ஆராய்ந்து கடன் வழங்கும் திறமை உள்ள இளைஞர்களை நியமித்து பயிற்சி அளிப்பதும் மைய அரசின் பொறுப்பாகும். வாடிக்கையாளர் சேவையை இன்னும் மேம்படுத்த வேண்டியதும் மிகத்தேவை.

– வாதூலன்

இங்கேயே தயாரிக்க முயற்சி

0

டிரான்ஸ்ஏஷியா பயோ-மெடிக்கல்ஸ் – ன் செயல் இயக்குநர், மாலா வசிராணி, ஊடகர்களுடன் பேசுகையில், ”எமது குருதி இயல் தொடர்பான கருவிகளை அண்மையில் அறிமுகம் செய்து உள்ளோம். சென்னை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மருத்துவ கல்வி நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டு வருவதன் காரணமாக, இந்திய சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இடத்தில் இருந்து வருகிறது.

அரசு மற்றும் தனியார் கூட்டிணைவுகள் மற்றும் தேசிய சுகாதார திட்டம் போன்ற திட்டங்களின் கீழ், அரசின் சுகாதார திட்டங்களை தமிழ்நாடு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றது. 2018 தொழில் துறை அறிக்கைகளின்படி இந்தியாவில் மருத்துவ சாதனங்கள் தொழில்துறையானது, 5.2 பில்லியன் யுஎஸ் டாலர் (35,097.40 கோடி ரூபாய்) என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவைகளுள் பெரும்பாலானவை, இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையை மாற்றுகின்ற செயல்பாட்டின் முன்னணியில் டிரான்ஸ்ஏஷியா போன்ற நிறுவனங்கள் இருந்து வருகின்றன மற்றும் இந்தியாவில் இச்சாதனங்களை தயாரிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.

கிராமப்புற பகுதிகளில் இரத்தவியல் மற்றும் உயிரி வேதியியல் பரிசோதனை திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு மருத்துவ சேவை கார்ப்பரேட் உடன் டிரான்ஸ்ஏஷியா நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறது. .

Also read:வேகமெடுக்கும் தமிழ்நாட்டு குளிர்பான நிறுவனம்

சுகாதார சேவைகளின் தரம் மற்றும் அவைகளை அணுகிப் பெறுவதற்கான அளவுகோலில் 176 நாடுகள் மத்தியில் இந்தியா 145-வது இடத்தில் இருக்கிறது. திறன்வாய்ந்த பணியாளர;கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உட்பட, தரமான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிக்கு குறைவான அணுகுவசதி இருப்பது, சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கின்ற 70 சதவிகிதத்திற்கும் அதிகமான இந்தியர;களுக்கு வலியும், ஏமாற்றமும் அளிக்கின்ற சிக்கல்களாக இருந்து வருகின்றன. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் எளிய விலையில் நோயறிதல் ஆய்வுகளை ஏதுவாக்குவதற்கு உள்நாட்டிலேயே மருத்துவ சாதனங்களை தயாரிப்பது மற்றும் தொழில்நுட்பத்தை செயல்படுத்த டிரான்ஸ்ஏஷியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

1979 – ல் நிறுவப்பட்ட டிரான்ஸ்ஏஷியா பயோ-மெடிக்கல்ஸ் இன்-விட்ரோ டயக்னாஸ்டிக் நிறுவனம். இந்தியாவெங்கும் 65,000-க்கும் அதிகமான சாதனங்களை நிறுவி இருக்கிறோம். உயிரி வேதியியல், இரத்தவியல், இரத்தம் உறைதல், இஎஸ்ஆர், நோய்எதிர்ப்பியல், சிறுநீர் பகுப்பாய்வு, தீவிர சிகிச்சைக்கான கருவிகள், நீரிழிவு மேலாண்மை, நுண்ணுயிரியியல் மற்றும் மாலிகுலர் மூலக்கூற்று டயக்னாஸ்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் கருவிகளை வழங்கி வருகிறோம். 23 மண்டல அலுவலகங்கள் மற்றும் 350+ வினியோகஸ்தர்கள் என்ற வலையமைப்பை கொண்டிருக்கிறோம்.

1990-களில் காலக்கட்டத்தில் இரத்த பகுப்பாய்வு சாதனங்கள் மற்றும் ரீ-ஏஜென்ட்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்த முதல் இந்திய நிறுவனம் நாங்கள். பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியதன் வழியாக, யுஎஸ்ஏ, யுகே, ஜெர்மனி, செக் குடியரசு, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் எங்கள் செயல்பாடுகளை பரவலாக்கி இருக்கிறோம்.” என்றார்.

– சீனி

வேகமெடுக்கும் தமிழ்நாட்டு குளிர்பான நிறுவனம்

0

   தமிழகத்தின் பிரபல குளிர்பான நிறுவனமான காளிமார்க், இந்த ஆண்டு கோடையை ஒட்டி, மென்பானங்கள், பழரசங்கள், இளநீர், மினரல் வாட்டர், சோள ரவை, சோள மாவு உள்ளிட்ட 30 வகையான புதிய பொருட்களை அண்மையில் அறிமுகம் செய்து உள்ளது. இது பற்றி காளிமார்க் குழுமத்தின் தலைவர் திரு. கே.பி.ஆர். தனுஷ்கோடி கூறும்போது,

   ” நூற்று மூன்று ஆண்டுகள் கால பாரம்பரியம் கொண்ட காளிமார்க் குழும நிறுவனங்கள், ஏற்கனவே ‘பொவன்டோ மற்றும் விப்ரோ(Vibro)ஆகிய பிராண்ட் பெயர்களில் முன்னணி மென்பானங்களை விற்பனை செய்து வருகின்றன. தற்போது புதிய பிராண்டாக ‘ஜிப்சி’ (Zypsy) என்ற பெயரில் சில உணவுப் பொருட்கள் மற்றும் பழச் சாறுகள், ‘இளநி’ (Ilani) என்ற பெயரில் சில இயற்கை பானங்கள் போன்றவற்றோடு, ‘பொவன்டோ’ என்ற பிராண்ட் பெயரிலேயே மேலும் சில புதிய சுவை மென்பானங்கள் என மொத்தமாக முப்பது வகையான பொருட்களை சந்தைக்கு அறிமுகம் செய்து உள்ளோம்.

    இளநி பிராண்ட் பெயரில் பைனாப்பிள், மா, லிச்சி ஆகிய பழச் சாறுகளை அறிமுகம் செய்து உள்ளோம். சாக்லெட் மற்றும் வெனிலா சுவை சேர்க்கப்பட்ட தேங்காய்ப் பால் டெட்ரா பேக்குகளையும் அறிமுகம் செய்துள்ளோம். இவை அனைத்தும் 180 மில்லி அளவுகளில் கிடைக்கும். இளநி பிராண்ட்டில் கிடைக்கும் எல்லா பொருட்களும் முற்றிலும் தூய்மையான இயற்கையான இளநீரைக் கொண்டவை. இரசாயனப் பொருட்களோ, பானத்தின் நிறத்தை மாற்றிட உதவும் நிறமிகளோ இன்றி, இவை பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

 தென்னை அடிப்படையிலான எங்களது பானங்கள் 100 சதம் இளநீரைக் கொண்டவை. அவற்றில் சர்க்கரை சேர்க்கப்படுவதில்லை. மணம், சுவை, நிறம் என எதற்காகவும் செயற்கை இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை. வெனிலா சுவை பானங்களிலும் கூட, தாவர வெனிலா சாறே சேர்க்கப்படுகிறது.
ஜிப்சி என்ற பிராண்ட் பெயரில் ஏழு வெவ்வேறு விதமான சுவை மற்றும் அளவுகளில் பழச் சாறு பானங்களை வெளியிட்டு இருக்கிறோம். மா, கொய்யா, புளிச் சுவைகளில் வரும் இவை, 180 மில்லி டெட்ரா பேக்குகள் மட்டுமின்றி, 200 மில்லி, 500 மில்லி பெட் பாட்டில்களிலும் கிடைக்கின்றன.

   சோள ரவை மற்றும் சோள மாவு வகைகளையும் அறிமுகம் செய்து உள்ளோம். இவை இருமுறை வறுக்கப்பட்டவை மற்றும் நீண்டநாள் பாதுகாக்க சேர்க்கப்படும் செயற்கை இரசாயனங்கள் கலக்கப்படாதவை. வீட்டுத் தேவைக்காக அரை கிலோ பாக்கெட்களாகவும், உணவகங்களின் தேவைக்காக 25 கிலோ மூட்டைகளாகவும் இந்த ரவை மற்றும் மாவு கிடைக்கும்.

   புதுச் சுவையுடன் கூடிய பொவன்டோவை 200 மில்லி பெட் பாட்டில்களில் அறிமுகம் செய்து உள்ளோம்.இவை மட்டுமின்றி விப்ரோ, சிம்சோ, ஜிஞ்சி, மற்றும் டிகோ போன்ற பிராண்ட்களில், பல வகை மென்பானங்களை 200 மில்லி பெட் பாட்டில்களில் வெளியிட்டு உள்ளோம். இவற்றில் டிகோ என்பது ஆரஞ்சு சுவையுடனும், ஜிஞ்சி என்பது இஞ்சு சார்ந்ததாகவும், சிம்சோ என்பது எலுமிச்சை சுவையுடனும், விப்ரோ பன்னீர் சோடாவாகவும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

Also read:ஐம்பதாயிரம் ரூபாயில் ஒரு வணிக வாய்ப்பு, காமதேனு மசாலா தருகிறது!

   இது தவிர பொவன்டோ, விப்ரோ, ஜிஞ்சி, கிளப் சோடா போன்றவற்றில் கரும்புச் சாறின் சுவை, மணம் சேர்க்கப்பட்ட பானங்களை 250 மில்லி அளவுகளில் அறிமுகம் செய்து உள்ளோம். பிரிஸ்டிலி என்ற பெயரில் 300 மில்லி, 500 மில்லி, 1 லிட்டர் அளவுகளில் மினரல் வாட்டர் மற்றும் கரும்புச் சாறு சுவையுடான கிளப் சோடா போன்றவற்றையும் வழங்குகிறோம்.

   எங்களது நீண்ட வணிகப் பயணத்தில், அடுத்தகட்ட விரிவாக்கத்தில் நாங்கள் இறங்கியுள்ளது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்து உள்ளது. விலை, சுவை, மணம் போன்ற அம்சங்களில் பல்வேறு வகை ஆய்வுகளுக்குப் பின், இந்த பொருள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்த கோடைக் காலத்திலேயே நமது மென்பான சந்தையில் கணிசமான அளவை எங்களால் பிடித்து விட முடியும் என நம்புகிறோம்” என்றார்.

– ராகு

சொத்து மதிப்பீடு, ஒரு கருத்துதான்!

0

சொத்துக்களை வாங்குவதற்கும், விற்பதற்கும், அடமான கடன் வாங்குவதற்கும், பாகப் பிரிவினை செய்யும் போதும், சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் கோர்ட் ஸ்டாம்ப் வாங்குவதற்கும் சொத்துகளை ஏலம் விடும் போதும் சொத்துகளுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் போதும், சொத்துகளை காப்பீடு செய்யும் போதும், அரசு நில எடுப்பு இழப்பீடு கொடுக்கும் போதும், வருமான வரி, சொத்து வரி, கேப்பிட்டல் கெயின் வரி போன்ற வரிகளுக்காக சொத்து மதிப்பீடு மிக மிக தேவையாய் இருக்கிறது.
அரசின் வழிகாட்டி மதிப்பும், சந்தை மதிப்பும் காலி நில சொத்தை வாங்கும் போதும், விற்கும் போதும் காலி நிலத்தின் விலையை பெருமளவில் தீர்மானிக்கிறது.

அதே போல் காலி நிலத்தை அரசு கையகப்படுத்தும் போது இழப்பீடு கொடுப்பதற்கு நிர்ணயிக்கும் மதிப்பு பெரும்பாலும் வழிகாட்டி மதிப்பு & சந்தை மதிப்பை சார்ந்தே இருக்கிறது. ஆனால் அதில் கட்டிடமோ, தோட்டமோ, தோப்போ இருக்கும் போது அவை என்ன வருமானம் சம்பாதித்துக் கொடுக்கிறது என்ற பொருள் ஈட்டும் மதிப்பும் (Economy Value) பார்க்கப்படுகிறது.

ஒரு நிலத்தை அரசு எடுக்க போகிறது, வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், போன்ற இயற்கை பேரிடர் நேரங்களில், நிலத்தை சுற்றி இருக்கும் மோசமான சூழ்நிலை, விற்பவரின் தனிப்பட்ட பொருளாதார சிக்கல்கள், கலவரம், போர் போன்ற சூழ்நிலைகளில் சொத்துகளின் மதிப்பு வாங்கிய விலையை விட குறைவாக விலைக்குக் கூட விற்பதற்கு தயாராக இருப்பார்கள்.

சந்தை மதிப்பை விட அதிக பணம் கொடுத்து சொத்தை வாங்க தனிப்பட்ட ஒருவர் விரும்பினால் அதனை ஃபேன்சி மதிப்பு (Fancy Value) எனப்படுகிறது. குறிப்பிட்ட சொத்து மீது உணர்ச்சி சார்ந்து விருப்பம் வைத்து வாங்குவது சென்டி மென்ட் மதிப்பு (Sentiment Value) என்கிறோம்.

சொத்துகளில் உள்ள கட்டுமானங்களுக்கு வயதாகிக் கொண்டே போனாலும், பராமரிப்பு இல்லாமல் போனாலும் அதற்கு தேய்மான மதிப்பு கணக்கிடுவார்கள்.

சொத்தின் மதிப்பை பாதிக்கும் காரணிகளாக வாடகை ஒப்பந்த சட்டம், நகர நில உச்சவரம்பு சட்டம், நகர ஊரமைப்பு சட்டம், பதட்டமான சூழ்நிலைகள் (வெள்ளம் , புயல், நிலநடுக்கம்,) ஆகியவை இருக்கின்றன.

நிலம் & சட்டம், விளை நிலங்கள், காப்பி, ரப்பர், தேயிலை, ஏலக்காய், தோட்டங்கள் கட்டிடம், தொழிற்சாலைகள் & அதன் எந்திரங்கள் – கருவிகள், தோட்டங்கள், தோப்புகள், காலி நிலங்கள், வீட்டு மனைகள் & வீடுகள், என்று பலவகையான சொத்துகளுக்கு பலவகையான மதிப்பீடுகள் உள்ளன.

சொத்து மதிப்பீடு என்பது கருத்துதானே (Value Is Only Opinion) தவிர 100% உண்மை அல்ல.

– சா. மு. பரஞ்சோதிபாண்டியன்

கற்பனைக்கும், உண்மைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டுமா?

0

மத நம்பிக்கை உள்ள பெற்றோராக இருப்பதுதான் குழந்தை வளர்ப்புக்கு நல்லது என்று நம்பிய காலம் போய் விட்டது என்பதை அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வுகள் காட்டுகின்றன. இது பற்றி, “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சில்” ஒரு கட்டுரை வந்திருந்தது. How Secular Family Values Stack up என்ற தலைப்பில், ஃபில் ஜுக்கர்மேன் (Phil Zuckerman) என்பவர் அந்தக் கட்டுரையை எழுதி இருந்தார். இவர் சமூக இயல் துறையில் பேராசிரியராக அமெரிக்காவின் பிட்சர் (Pitzer) கல்லூரியில் பணியாற்றுகிறார். பல நூல்களையும் எழுதி உள்ளார்.
டியூக் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில், மத நம்பிக்கை இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் இனவெறிக்கு ஆளாவது இல்லை; சக மாணவர்களின் தீய பழக்கங்களால் கெட்டுப் போவது இல்லை; மனதில் வஞ்சம் வைப்பது இல்லை; தேசிய வெறிக்கு ஆட்படுவது இல்லை; போரை விரும்புவது இல்லை; அதிகாரப் போக்கு அவர்களிடம் வருவது இல்லை; சகிப்புத் தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது கண்டு அறியப்பட்டது.

மத நம்பிக்கையோடு வளர்க்கப்படும் குழந்தைகளைக் காட்டிலும், மத நம்பிக்கை இல்லாதவர்களாக வளர்க்கப்படும் குழந்தைகள் பல அம்சங்களிலும் சிறந்தவர் களாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

தற்போது அமெரிக்காவில் மதம் அற்றவர்களின் எண்ணிக்கை 23 விழுக்காடாக உயர்ந்து இருக்கிறது. 1950 களில் அமெரிக்காவில் மதம் அற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 4 விழுக்காடு மட்டுமே. அறிவியல் சிந்தனைகள் வளர்ந்து வருவதால் கடவுள் நம்பிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. மதம் சாராத வகையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்ற கோணத்தில் ஆய்வு செய்யும் உளவியல் அறிஞர் திரு. ஜுகர்மேன் இப்படிச் சொல்கிறார் –

”மதம் அளிக்கின்ற பாதுகாப்பும், அறச் சிந்தனையும் இல்லை என்றால் மனிதர்கள் செயல் அற்றவர்களாக, நம்பிக்கை இழந்தவர்களாக, நோக்கமற்றுத் திரிபவர்களாக, குற்றங்கள் செய்வதற்கு அஞ்சாதவர்களாக ஆகிப் போவார்கள் என்று மத நம்பிக்கைகளை ஆதரிப்பவர் களால் கருதப்படுகிறது.

ஆனால் அது அப்படி இல்லை; மதங்களை நம்புகிறவர்களில் நிறையப் பேர்கள் செயல் அற்றவர்களாகவும், நம்பிக்கை இழந்தவர்களாகவும், நோக்க மற்றுத் திரிபவர்களாகவும், குற்றங்கள் செய்வதற்கு அஞ்சாதவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் இருப்பதை பொதுவாகவே நம்மால் அனைத்து இடங்களிலும் பார்க்க முடிகிறது. இதை ஆய்வுகளும் அப்படியே உறுதிப்படுத் துகின்றன.”

மதமற்ற குடும்பங்கள் குழந்தைகளுக்கு சிறந்த அடித்தளத்தை உருவாக்கித் தருகின்றன என்கிறார், பேராசிரியர் திரு. வெம் பெங்ஸ்டன் (Vem Bengston). பல தலைமுறைகளின் மாற்றம் பற்றிய நீண்டகால ஆய்வினை மேற்கொண்டவர். மத நம்பிக்கையற்ற குடும்பங்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்து வருவதைக் கண்ட பெங்ஸ்டன், தலைமுறைகளின் மாற்றம் பற்றிய தன் ஆய்வில் மதச்சார்பற்ற குடும்பங்கள் என்ற தலைப்பையும் இணைத்துக் கொண்டார்.

“மத நம்பிக்கை உள்ள பெற்றோரைக் காட்டிலும், மத நம்பிக்கை இல்லாத பெற்றோர் பெரும்பாலும் தங்களின் அறம் சார்ந்த கொள்கைகளில் இருந்து மாறாதவர்களாக இருக்கிறார்கள். நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்; மனித நேயத்துடன் திகழ வேண்டும் என்பதை தங்கள் குழந்தைகளுக்கு, தாங்களே ஒரு முன்மாதிரியாக இருந்து கற்றுக் கொடுக்கிறார்கள்.” என்கிறார், பென்ஸ்டன். மத நம்பிக்கை அற்றவர்களுக்கு நன்னெறி என்பது அடிப்படையான கோட்பாடு. மற்றவர்களைப் புரிந்து கொண்டு அதற்கு இணங்க செயல்படு என்பதுதான் அந்தக் கோட்பாடு. மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதனையே நீ அவர்களுக்குச் செய் என்பது எல்லாக் காலத்துக்குமான கோட்பாடாகும். அதற்கு அதீத சக்தி ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை தேவையானதாக இல்லை.

அவர் ஆய்வில், அமெரிக்கச் சிறைகளில் உள்ளவர்களில் நாத்திகர்கள் அநேகமாக இல்லை என்றே அமெரிக்க மத்திய அரசின் சிறைத்துறை தெரிவித்த செய்தி இடம் பெற்று உள்ளது. மத நம்பிக்கையற்ற குழந்தைகள், மத நம்பிக்கை உள்ள குழந்தைகளைக் காட்டிலும் கற்பனைக் கதைகளையும், உண்மைகளையும் இயல்பாகவே வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் என்று, பி.பி.சி. வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கு ஆதாரமாக bu.edu/…/2…/05/corriveau-chen-harris-in-press.pdf என்ற ஆய்வின் இணைய இணைப்பையும் அளித்து உள்ளது..

ஆய்வின் போது கற்பனைக் கதைகளை அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தனர். பின்னர், விசாரித்தபோது மத நம்பிக்கை மத நம்பிக்கையுடன் வளர்க்கப் பட்ட குழந்தைகள், அந்தக் கற்பனைகளை உண்மை என்று நம்பினர். ஆனால், மதம் சாராமல் சொந்த சிந்தனையுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் இவை எல்லாம் கற்பனை என்று தெளிவாகச் சொன்னார்கள்.

மதச்சார்பு உள்ளவர்களின் குழந்தைகள் கற்பனைக் கதைகளை, உண்மைகளுடன் சேர்த்து குழப்பிக் கொள்கிறார்கள். ஏனென்றால், குழந்தைகளின் ஆய்வு உணர்வை உண்மையாக நடந்தது என்று கற்பிக்கப்படும் பழைய மதம் சார்ந்த கதைகள் குழப்பி விடுவதால் அவர்களால் கற்பனையையும், உண்மையையும் பிரித்து அறிய முடியவில்லை.

– இசைஇன்பன்

ப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி?

1

நம் தொழிலுக்கு உதவி புரிபவற்றுள் ஒன்றான ப்ளாகர் (Blogger), கூகுள் வழங்கும் இன்னொரு இலவச சேவையாகும். இது ஒரு வலைத்தளம் போல் இயங்கக் கூடியது.. தொழில் தவிர்த்து உங்கள் படைப்புகளை வெளியிடக் கூட ப்ளாக் உருவாக்கலாம்.

தொழில் வலைத் தளத்தில் பொருட்கள், படங்கள், விலைப்பட்டியல், தள்ளுபடிகள், தொடர்பு முகவரி போன்றவை இருக்கும். பொருட்கள் தொடர்பான பெரிய கட்டுரைகளை வலைத் தளத்தில் வெளியிடுவதை விட ப்ளாக்-ல் வெளியிடலாம் மற்றும் தொழில் தொடர்பான கூடுதல் செய்திகளை வெளியிட ப்ளாகர் சிறந்த இடம் ஆகும்.

வலைத்தளம் உருவாக்க டெவலப்பர் உதவி தேவைப்படும். ஆனால் ப்ளாக்-ஐ நாமே உருவாக்கி விடலாம். இதற்கு வலைத் தள மொழி தேவை இல்லை. உங்கள் ஜிமெயில் முகவரி கொண்டு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

blogger.com என்ற வலைத் தளத்திற்கு சென்று உங்கள் ஜிமெயில் முகவரி கொடுத்து லாகின் செய்யுங்கள் Blogger profile என்ற காலம் தோன்றும் இங்கு நீங்கள் கொடுக்கும் பெயர் அனைத்து கட்டுரைகளின் அடிப் பகுதியில் தோன்றும். அதனால் எதற்காக ப்ளாக் உருவாக்குகிறீர்களோ அதற்கு ஏற்ற பெயர் அல்லது உங்களுக்கு ஏற்ற பெயர் கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.

ப்ளாக் எந்த வித கோடிங்(Coding) இல்லாமல் உருவாக்கலாம் என்பதால். அங்கு தயாராக மாதிரி டெம்ப்ளேட்கள்(Template) இருக்கும். அவற்றில் இருந்து உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். தேவைப்படும் பொழுது மாற்றியும் கொள்ளலாம்.

டெம்ப்ளேட் தேர்ந்து எடுத்த பிறகு உங்களுக்கான பிளாக் தயாராகி விடும். இடது பக்கத்தில் நிறைய டேப்-கள் (tabs) இருக்கும் அதில் செட்டிங் பகுதிக்கு சென்று ப்ளாக் தலைப்பு மற்றும் ப்ளாக் பற்றி சிறு அறிமுகம் கொடுங்கள். ஜிமெயில் முகவரி கொண்டு உள்ளே வரும் பொழுதும் ப்ளாக் தலைப்பு கொடுக்க முடியும். பிறகு அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் செட்டிங் (Setting) பகுதியில் மாற்றிக் கொள்ள முடியும்.

HTTP / HTTPS :
செட்டிங் பகுதியில் http / https என்ற இடத்தில் https என்பதற்கு சரி (yes) கொடுங்கள். அதாவது https என்பதில் கடைசி எழுத்தான “S” பாதுகாப்பை (Security) குறிக்கிறது. https என்பது உங்கள் வலைத் தளம் அல்லது ப்ளாக் போன்றவற்றில் இருந்தால் அந்த வலைத் தளம் அல்லது ப்ளாக் பாதுகாப்பானது என்று பொருள். படிப்பவர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். அதனால் இங்கு https என்பதை தேர்வு செய்யுங்கள்.

வலைத்தளத்திற்கு https வேண்டும் என்றால் அதற்கு ஆண்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் அளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இவற்றை SSL certificate என்று அழைப்பார்கள்.

முக்கியமான சில வலைத்தளங்களைப் அவை  பெற்று இருப்பதைப் பார்க்க முடியும்.https என்பதற்கு முன் சிறு பூட்டு படம் இருக்கும். உதாரணமாக தமிழ் கம்ப்யூட்டர் என்ற வலைத்தளத்தில் பாருங்கள் சிறு பூட்டு (lock)  அடுத்து https என்பது இருப்பதை பார்க்கலாம்.

https என்பது முக்கியமானது என்றாலும் சாதாரணமான static வலைத்தளத்திற்கு தேவையில்லை.ecommerce போன்ற dynamic வலைத்தளத்திற்குத்தான் தேவை. இவற்றை வலைத்தளத்தை உருவாக்கும் பொழுது வாங்க வேண்டும் என்று இல்லாமல் எப்பொழுது வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம்.

Also read:ஆன்லைனில் ட்ரேட்மார்க் பதிவு செய்வது எப்படி?

ப்ளாகில் கட்டுரை அதற்கு ஏற்ற படங்கள், வீடியோ போன்றவை பதிவேற்ற முடியும். மிக முக்கியமாக படங்கள் மற்றும் வீடியோக்கள் நகல் எடுக்கப்படாமல் நமது சொந்த படங்களாகவோ, வீடியோக்களாகவோ இருந்தால் சிறந்தது ஆகும். மற்றவர்கள் பதிவு இட்டு இருக்கும் படங்களையோ, வீடியோக்களையோ பயன்படுத்துவதாக இருந்தால் அவரிடம் ஒப்புதல் வாங்கி பயன்படுத்தலாம்.

இணையத்தில் ஏராளமாக படங்கள் உள்ளட. அவற்றில் பதிப்பு உரிமை இல்லாதவற்றை நாம் பயன்படுத்த தடை இல்லை. பதிப்பு உரிமை உள்ளவற்றைப் பயன்படுத்த, அவர்களிடம் அனுமதி வாங்கியே பயன்படுத்த வேண்டும். சில நிறுவனங்கள் படங்கள், வீடியோக்களை விலைக்கு விற்பனை செய்கின்றன. அவர்களிடன் உரிய கட்டணம் செலுத்தினால் அந்த படங்களையோ, விடியோக்களையோ நம்மை பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பார்கள்.

இவ்வாறே அரிய செய்திகளையும், கட்டுரைகளையும் விற்பனை செய்பவர்களும் இருக்கிறார்கள். அதனால் படங்கள் பயன்படுத்தும் பொழுது சரிபார்த்து பயன்படுத்த வேண்டும். ஆனால், காப்பிரைட் இல்லாதவையும் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன.

ஒரு ஜிமெயில் முகவரிக்கு ஒரு பிளாக் மட்டுமே உருவாக்க முடியும். புதிய ப்ளாக் உருவாக்க அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட ப்ளாக் வேண்டும் என்றால் புதிய ஜிமெயில் முகவரி கொடுத்து உருவாக்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு ப்ளாக் முக்கியமானதாகும். வாரம் ஒரு கட்டுரையாவது இதில் பதிவு செய்தால் தொடர்ந்து படிப்பார்கள். பல மாதங்களுக்கு ஒரு கட்டுரை என்று எழுதினால் ப்ளாக்குக்கு வரும் பார்வையாளர்கள் குறைந்து விடுவார்கள். தொடர்ந்து கட்டுரைகள், படங்களை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும்.

உங்கள் ப்ளாக்கில் எவ்வளவு பார்வையாளர்கள் வருகிறார்கள், எந்த கட்டுரையை படிக்கிறார்கள், எந்த நாட்டில், மாநிலத்தில், ஊரில் இருந்து படிக்கிறார்கள், ஆண்-பெண் எத்தனை பேர் ப்ளாக்கிற்கு வருகை தருகிறார்கள் என்பதை அறிய கூகுள் அனலிடிக்ஸ் பயன்படுத்தலாம். தொடரின் மூன்றாவது கட்டுரை (https://valar.in/4609/how-to-you-google-analytics) கூகுள் அனாலிடிக்ஸ் எப்படி பயன்படுத்துவது என்பதை விரிவாக பார்த்தோம். அதே போல் உங்கள் ப்ளாக்கிற்கு கூகுள் அனலிடிக்ஸ்tracking id பயன்படுத்தி பார்வையாளர்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளுங்கள்.

ப்ளாக்கரில் கூட பார்வையார்களின் எண்ணிக்கையை பார்க்க முடியும். ஆனால் அதிகப்படியான தகவல் அனாலிடிக்ஸ் வழங்குவதால், அனாலிட்டிக்சை பயன் படுத்திக் கொள்ளலாம்.

Also read: கூகுள் மை பிசினசில் பதிவு செய்யுங்கள் | டிஜிட்டல் மார்க்கெட்டிங் -4

ப்ளாக்கர் கூகுள் நிறுவனத்தின் இலவச சேவை என்பதால் அனைவரும் இதில் இணைந்து கொள்ள முடியும் . தொழில் செய்யும் அனைவரும் தங்கள் தொழில் தொடர்பான செய்திகளை இதில் வெளியிட்டு வந்தால் வாடிக்கையா ளர்களாலும், உங்கள் நிறுவனம் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் புதியவர்களாலும் உங்கள் நிறுவனத்தின் செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.

– செழியன். ஜா