நிதிநிலை அறிக்கை 2019

0
  • இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி உறுப்புகள் மீது, இறக்குமதி வரி கூடுகிறது.
  • மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
  • இறக்குமதி செய்யப்படும் அச்சடிப்புக்கான செய்தித்தாள், புத்தகங்கள் மீது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
  • ஒரு ஆண்டுக்கான விற்பனைத் தொகை ரூ.400 கோடிக்குள் இருக்கும் இந்திய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வருமானவரி விகிதம் 30% – லிருந்து 25% ஆகக் குறைகிறது
  • ஆண்டு வருமானம் 2 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்குக் கூடுதல் வரி 15% -இலிருந்து 20% ஆகிறது.
  • ஆண்டு வருமானம் 7 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்குக் கூடுதல் வரி 15% -இலிருந்து 25% ஆகிறது.
  • கணக்கு ஆண்டு 2019 – 20க்கு (01.04.2019 முதல் 31.03.2020 முடிய உள்ள ஒரு ஆண்டு) ரூ.5,00,000-க்குக் கீழ் வருமானம் உள்ள தனிப்பட்ட நபர்கள், கூட்டுக் குடும்பங்களுக்கு வருமானவரி இல்லை.
  • ரூ.45,00,000 மதிப்புக்குக் கீழ் உள்ள வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்பு, முதன் முறையாக வாங்குவோர், கடன் வாங்கி வீடு வாங்கி இருந்தால், வீட்டுக்கடன் வட்டிக்குப் புதிய வருமான வரிச் சலுகைகள் உண்டு. (ஏற்கனவே வீடு வைத்திருந்து, 2-ஆம் தடவை வீடு வாங்குவோருக்கு இச்சலுகை கிடையாது)
  • அடுக்கு மாடிகள் கட்டித் தரும், கட்டுமான நிறுவனங்களுக்கு சலுகைகள்.
  • மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களைக் கடன் வாங்கி, வாங்குவோர்களுக்கான வட்டியில், ரூ.1,50,000 – வரை வருமானத்தில் கழித்துக் கொள்ள அனுமதி.
  • கீழ்கக்கண்ட நபர்கள் ஒரு ஆண்டில் ரூ. 1 கோடிக்கு மேல் வங்கியில் பணம் போடுவோர், .வெளிநாட்டுப் பயணத்துக்காக ரூ.2,50,000 – க்கு மேல் செலவழித்தவர்கள், .ஒரு ஆண்டில் மின்சாரக் கட்டணமாக ரூ.1,00,000-க்கு மேல் பணம் செலுத்துபவர்கள் வருமான வரிக்குக் கட்டாயம் கணக்கு தர வேண்டும்.
  • ஒரு ஆண்டில் ரூபாய் 1 கோடிக்கு மேல் ஒரு வங்கியில் ரொக்கமாகப் பணம் எடுத்தால், வங்கிகள் 2% வருமான வரி பிடிக்க வேண்டும்.
  • வரிக்குட்படும் நிகர வருமானம் ரூ.5,00,000 – க்குக் கீழே இருந்தால் வருமானவரி செலுத்த வேண்டியது இல்லை.

Also read: ஜிஎஸ்டி – சஹாஜ், சுகம் படிவம்களை யார் பயன்படுத்தலாம்?

-ஆடிட்டர் சொ. பாசுகரன், சென்னை – 21.
9840316020

பீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை

0

அண்மையில் தனது வாழ்விணையருடன் சென்னைக்கு வந்திருந்தார், இலங்கை, வனியாவில் அம்பாள் கஃபே என்ற பெயரில் சைவ உணவகம் நடத்தி வரும் திரு. சிதம்பரநாதன் விமலன். புத்தகங்கள், இதழ்களை படிப்பதில் ஆர்வம் உள்ள அவர் வளர்தொழில் அலுவலகம் வந்திருந்தார். அவரிடம், வவுனியாவில் செயல்படும் அவரது உணவகம் பற்றி கேட்டபோது,

“வவுனியாவின் முக்கிய பகுதியில் செயல்படும் எங்கள் அம்பாள் கஃபே உணவகத்தை 1960களில் எனது பெரியப்பா திரு. சின்னையா சிவபாலன் மற்றும் எனது அப்பா திரு. சின்னையா சிதம்பரநாதன் ஆகியோர் தொடங்கினர்.

அப்போது மிகச்சிறு உணவகமாகத்தான் தொடங்கப்பட்டது. சிற்றுண்டிகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. அடுத்த தலைமுறையில் நானும் என் பெரியப்பா மகன் திரு. சிவபாதம் ஜெயராமன் அவர்களும் இணைந்து பொறுப்பேற்று நடத்தி வருகிறோம்.
தற்போது பத்து மேசைகள். நாற்பது பேர் அமரும்படியாக பெரிதாக்கி இருக்கிறோம். எங்களிடம் 15 பேர் பணியாற்றி வருகிறார்கள்.


காலையில் இட்லி, இடியாப்பம், கிச்சடி, புரோட்டா.. மதியம் சாப்பாடு, இரவு இட்லி, தோசை, மசாலா தோசை, இடியாப்பம், புட்டு, கொத்து புரோட்டா, கொத்து இடியாப்பம் ஆகியவை எங்களது சிறப்பு உணவு வகைகளாகும்.


எங்களது அப்பா, பெரியப்பா தொடங்கிய உணவகம் என்பதால் உணவகம் தொடர்பான பணிகள் எங்களுக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். என் அப்பாவும் பெரியப்பாவும் தரத்துக்கு முக்கியத்துவம் தருவார்கள். நாங்களும் அதையே பின்பற்றுகிறோம்.
வவுனியா மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்துதான் பெரும்பாலான காய்கறிகள் வாங்குகிறோம். சில காய்கறிகளை தம்புள பகுதியில் வாங்குகிறோம். அவற்றின் தரத்தில் சமரசம் செய்வதே இல்லை. அதே போல பருப்பு, புளி போன்ற மளிகைப் பொருட்களையும் தரமாகத் தேடி வாங்குகிறோம்.

Also read: பல தொழில்களை வளர்க்கும் ஓட்டல் தொழில்


இத்தனை தரம் பார்த்து பொருட்களை கொண் டுவந்தாலும் உணவின் சுவைக்கு சமையற்காரர்களே முதன்மையான காரணம். அதாவது உணவை செய்யும் முறை மிக முக்கியமானது. ஆகவே சிறப்பாக சமையல் செய்யும் சமையல் கலைஞர்களைத் தேடிப் பிடித்து நியமித்து உள்ளோம். எல்லோருமே நல்ல அனுபவசாலிகள்.
அதே நேரம் இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக கேட்டரிங் படிப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் கேட்டரிங் படித்தவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.


வவுனியாவைப் பொறுத்தவரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவ்வளவாக வருவார்கள் என்று சொல்வதற்கில்லை. இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து பயணிகள் வருவது உண்டு. அவ்வளவுதான்.


மற்றபடி உள்ளூர்வாசிகளே எங்களது நுகர்வோர்கள். அண்மைக் காலமாக பெண்களும் வேலைக்குச் செல்வதால், காலை மற்றும் மதிய உணவுக்கு உணவகங்களை நாடும் வழக்கம் இங்கே ஏற்பட்டிருக்கிறது. உணவகங்களின் வருமானம் அதிகரிக்க இது ஒரு காரணமாக இருக்கிறது.


அதே போல இரவு நேரங்களில் குடும்பத்துடன் உணவகம் வரும் பழக்கமும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவும் இங்கு உள்ள உணவகங்களுக்கு சாதகமான போக்குதான்.


ஆனால் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் குடும்பத்தினருடன் உணவகம் வந்து செல்லும் அளவுக்கு இங்கு நிலைமை மாறவில்லை. மேலும் ஸ்விக்கி, சோமோட்டோ, ஊபர் ஈட் போன்ற உணவுகளை உணவகங்களில் பெற்ற வீடுகளுக்கு டெலிவரி கொடுக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் இன்னும் இங்கே தொடங்கப்படவில்லை.

Also read: அசைவ உணவகத்தை சிறப்பாக நடத்துவது எப்படி?

அவை இங்கு காலூன்ற இன்னும் கூடுதல் காலம் பிடிக்கும் என்று கருதுகிறேன்
வவுனியாவில் எங்களைப் போலவே எட்டு அல்லது ஒன்பது உணவகங்கள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் இட்லி, இடியாப்பம் போன்ற உணவு வகைகளே முதன்மையாக இருக்கின்றன. அசைவ ஓட்டல்களிலும் புரோட்டா, பிரியாணி, மீன், கறி வகைகள் என பாரம்பரியமான உணவு வகைகளே இருக்கும். மற்றபடி பீட்சா, பர்கர் போன்றவை பெருமளவில் இங்கே மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.” என்றார், திரு. சிதம்பரநாதன் விமலன்.

  • தமிழ் இனியா

 

பணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்

0

ஒரு கார்ப்பரேட் நிறுமத்தின் ஊழியர்கள், இயக்குநர்களின் சேவைகளுக்கு வெகுமதியாக சாதாரண பங்குகளை தள்ளுபடி விலையில் வழங்குவதையே பணிபுரிவோருக்கான பங்குகள் (Sweat equity shares) என அழைக்கப் பெறுகிறது. அதாவது அவர்கள் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில் சலுகை விலையில் அந்நிறுமத்தின் பங்குகள் வழங்கப்படுகின்றன.


இவ்வாறான பங்குகளை வழங்குவதற்கு முதலில் அந்நிறுமத்தின் இயக்குநர் கூட்டத்தில் இதற்கான சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்படுகிறது. அடுத்து பங்கு பரிமாற்ற ஆணையத்தின் (SEBI) வழிகாட்டுதல்களின் படி இருக்க வேண்டும். இந்த பங்குகளின் மதிப்பு மேலாண்மை அலுவலர்களுக்கு வழங்கப் பெறும் ஊதிய உச்ச வரம்பிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


இவ்வாறான சலுகை விலையில் வழங்கப் பெறும் பங்குகளின் மொத்த மதிப்பு ஒவ்வொருமுறையும் 15 சதவிகித பங்குத் தொகைக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆயினும் ஒட்டு மொத்தமாக சாதாரண பங்குகளின் 25 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


இந்த பங்கு வெளியீட்டில் பங்குகளின் விலை, பதிவு பெற்ற மதிப்பீட்டார் பரிந்துரைக்கும் தள்ளுபடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்வாறு வழங்கப் பெறும் பங்குகளை இவர்கள் மூன்று ஆண்டு காலத்திற்கு பங்குச் சந்தையில் விற்பனை செய்ய இயலாது.


இவ்வாறு பங்குகளை அளிப்பதற்கான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு ஆண்டுக்குள் இந்த பங்குகள் வழங்கப்பட்டு விட வேண்டும். புதியதாக தொடங்கப்படும் நிறுவனங்கள் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இவ்வாறான பங்குகளை வெளியிடக் கூடாது. இந்த வகையான பங்குகளை வெளியிடும் நிறுவனமானது இந்த வகையானபங்கு வெளியீட்டினை படிவம் எண் SH.3 இல் பதிவு செய்து ஆவணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இதற்கான விதிமுறைகள் கம்பெனிகளின் சட்டம் 2013 பிரிவு 54 விளக்குகிறது.

-ச. குப்பன்

எம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்

0

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் எம்எஸ்எம்இ என சுருக்கமாக குறிப்பிடப்படும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரிசெலுத்துவது, அதற்கான அறிக்கைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்குவது, பொருட்களை அனுப்பும்போது, அதனோடு கூடவே பில் உருவாக்கி அனுப்புவது என அலைக்கழிக்கப்பட்டு தங்கள் வழக்கமான பணிகளுடன் இந்த கூடுதல் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டி இருப்பதால் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.


இவர்களின் இவ்வாறான கூடுதல் பணிகளை எளிதாக்க ஜிஎஸ்டி கவுன்சில் கட்டணமில்லாத அக்கவுன்டிங் அண்ட் பில்லிங் மென்பொருளை (Free Accounting & Billing Software) வெளியிட்டு உள்ளது. இதனைக் கொண்டு ஒரு நிதியாண்டின் விறபனை வருமானம் 1.5 கோடிக்கு மிகாத எம்எஸ்எம்இ நிறுவனங்கள், தங்களின் அன்றாட வணிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியான கணக்கு பதிவேடுகளை ஜிஎஸ்டி-க்கு ஏற்றவாறு பராமரித்தல், பொருட்களுக்கான விலைழீயீபட்டியல் தயார் செய்தல், ஜிஎஸ்டியை சரியாக கணக்கிடச் செய்து தேவையான படிவங்களை குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் வழங்க உதவுகின்றது.


இதனை பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் ஜிஎஸ்டி இணையத்திக்கு சென்று Downloads > Accounting and Billing Software என்றவாறு கொடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

tutorial.gst.gov.in/userguide/taxpayersdashboard/index.htm#t=manual_accountingsoftware.htm என்ற இணைய தளத்துக்கு சென்று மேலும் அதனை பயன்படுத்துவது தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

tutorial.gst.gov.in/userguide/taxpayersdashboard/ index.htm#t=FAQs_Accountingsoft ware.htm எனும் இணைய முகவரிக்கு சென்றால் அதற்கான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.

-ச. குப்பன்

காப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்

0

நம்முடைய புத்தாக்கங்களையும், புதிய கண்டு பிடிப்புகளையும் இந்திய காப்புரிமைச் சட்டம் 1970 இன் கீழ் இந்திய காப்புரிமைச் சட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டால், அவற்றை நம் அனுமதி இன்றி பிறரால் பயன்படுத்த முடியாது. காப்புரிமை எனப்படும் காப்பிரைட் பதிவு செய்வதற்காக படிமுறைகள் –


முதலில் இவ்வாறான புதிய கண்டுபிடிப்புகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளதா என தேடுதல் பணியை செயற்படுத்த வேண்டும். இதற்காக தனியாக தொழில்முறை வல்லுநர்களிடம் தேடுவதற்கான கட்டணத்தினை வழங்கினால், அவர்களே தேடிப்பார்த்து காப்புரிமை பதிவு செய்யப்படவில்லை எனும் சான்று வழங்குவார்கள்
அடுத்து நம் புதிய கண்டுபிடிப்புக்கு ஆன காப்புரிமை பதிவு செய்வதற்காக தனியான விண்ணப் பபடிவத்தினை நிரப்பி இந்திய அறிவுசார் சொத்துரிமைச் சட்ட அலுவலகத்தில் வழங்க வேண்டும்.


அடுத்து புதிய கண்டுபிடிப்பின் காப்புரிமைக்கான அறிக்கை (patentability report), காப்புரிமை பதிவு எதுவும் செய்யப்படவில்லை எனும் அறிக்கை, தேவையான இணைப்பு ஆவணங்கள் ஆகியவற்றை தனியாக தொழில்முறை வல்லுநர்கள், தக்க கட்டணத்தைப் பெற்று தயார் செய்து தருவார்கள். இவவற்றையும் காப்புரிமை கோரும் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.


மேலே கூறியவாறு புதிய கண்டுபிடிப்பின் காப்புரிமை பதிவு செய்ய விரும்பி வழங்கிய விண்ணப்பம் காப்புரிமைச்சட்ட அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும். காப்புரிமை பதிவு செய்வதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளதாவெனவும் சரிபார்த்து இறுதியாக அனைத்தும் சரியாக இருந்தால் நம் புத்தாக்கத்தின் அல்லது புதிய கண்டுபிடிப்புக்கான காப்புரிமை சான்றிதழை வழங்குவார்கள்.
இந்த காப்புரிமை குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

-ச. குப்பன்

புதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா?

0

புதிதாக கடை தொடங்கும் இளைஞர்கள் வளர்ச்சிக்கான சில செய்திகளை மனதில் வைத்து இயங்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மிகவும் விவரமானவர்கள் என்று எண்ண வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் பற்றித் தெளிவாக இருந்தாலும், சில சின்னச் சின்ன உத்திகளை வகுத்து அவர்களை கவர்ந்து விடலாம்.


விலை என்பது வாடிக்கையாளர்களை இழுக்க உதவும் ஒரு காரணி. தரத்தை முதன்மையாக கொண்டு வாங்கும் வாடிக்கையாளர்களும் விலை என்ற விஷயத்தில் அடிபட்டுப் போவார்கள். எனவே விலையில் தள்ளுபடி, சலுகைகள் என்று அறிவிக்கும் போது வாடிக்கையாளர்களை அதிகமாக வாங்க வைக்க முடியும்.


வாடிக்கையாளர்கள் மீது மிகவும் அக்கறை காட்ட வேண்டும். வாடிக்கையாளர்கள் பொருட்கள் அல்லது சேவையை வாங்க வரும்போது, இதனால் உங்களுக்கு அந்ததந்த பயன் இருக்கும் என்பது போன்றவற்றை விளக்கிச் சொல்ல நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.


பல பிராண்டுகள், பல மாடல்கள், பல பொருட்கள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அவர்களின் தேவைகளுக்கு தகுந்தாற்போல் சரியான பொருட்களை தேர்ந்தெடுக்க உதவ வேண்டும். விலை உள்ள பொருட்களை எப்படியாவது அவர்கள் தலையில் கட்டிவிட வேண்டும் என்று நினைத்து விற்பனை செய்ய கூடாது.


விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறார்கள் என்று தெரிந்தால் அவர்களே எதை வாங்கலாம் என்ற யோசனையை விற்பவர்களிடம் கேட்பார்கள்.
விற்பனையைத் தாண்டி வேறு செய்தகளையும் பேசலாம். அந்த செய்திகள் அவர்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும். கிராமங்களில் மளிகைக் கடைக்காரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் குடும்பம், கிராமம், அரசியல் போன்ற பல உரையாடல்கள் நடைபெறுவதை பார்க்கலாம்.


வாடிக்கையாளர்களிடம் பொருட்களை வாங்குபவர் என்ற ஒரு பிணைப்பை தாண்டி நட்பு உறவைப் பேணுங்கள்.


நம்மில் பல பேருக்கு அந்த கடைக்காரர் எனக்கு நன்றாக தெரியும்; அந்த கடையில் நான் சொன்னால் சற்று குறைத்து கொடுப்பார்கள்; அந்த கடைக்காரருக்கு என் பெயர் சொன்னால் நன்றாக தெரியும் என்று மற்றவர்களிடம் சொல்வது வழக்கம். இது போன்றவகளை அடையாளம் கண்டு உறவை பேண வேண்டும். அவர்கள் மற்ற வாடிக்கையாளர்களை கடைக்கு அழைத்து வரும் பொழுது அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பேசவேண்டும். இது பல வாடிக்கையாளர்களிடம் உங்கள் கடையை பரிந்துரைக்க அவர்களை தூண்டும்.


வாடிக்கையாளர்களின் சந்திப்புகளில் முடிந்த வரை அவர்களின் பெயரை தெரிந்து கொள்ளுங்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களை அறியாமலேயே ஓர் ஈர்ப்பு மற்றும் தொடர்பு ஏற்படுகிறது. அதே போன்று உரையாடலின் தொடக்கத்திலேயே உங்கள் பெயரையும் தெரியப்படுத்துவது நல்லது.


மேலும் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்களின் பெயர்களை மட்டுமில்லாமல் அவர்களின் அடுத்தடுத்த சந்திப்பின் போது மற்ற அவசியமான, தேவையான விபரங்களை அறிந்து அதற்கேற்றவாறு அவர்களுக்கு மனநிறைவு ஏற்படுமாறு செய்யலாம்.


வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வெகுமதி திட்டங்கள், அதாவது குறிப்பிட்ட அளவுக்கு வாங்கினால் இலவச பொருட்கள், கூப்பன்கள், சலுகைகள் தருவதும் விற்பனையைக் கூட்டும். இலவசமாக வீடுகளுக்கு பொருட்களைக் கொண்டு போய்க் கொடுத்தல் போன்றவற்றுக்கும் பயன் கிடைக்கும்.

-சந்தோஷ்

அண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை!

0

நிகழ்ச்சி மேலாண்மைத் துறை (Event Management) இன்று பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள், வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விழாக்களுக்கான ஏற்பாடுகளை இத்தகைய நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்களிடன் ஒப்படைத்து விடுகிறார்கள். நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் விழாக்களுக்கான அத்தனை ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். தங்களிடம் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து கொடுக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.


சென்னையில் செயலபட்டு வரும் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான செவன் ஐ (Seven I) நிறுவனர் திரு. ராஜ் கணேஷ், தங்கள் நிறுவனம் செய்து தரும் பணிகள் குறித்தும், இந்த தொழிலுக்கு அவர் எப்படி வந்தார் என்பது குறித்தும் நமக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,


”கட்டுமான பொறியியலில் டிப்ளமோ முடித்து விட்டு இராணுவத்தில் சேருவதற்கான முயற்சியில் இருந்தேன். அப்போது எனது அண்ணன் என்னை இ2இ ஈவென்ட்ஸ் (E2E Events) என்ற நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் வேலைக்காக சேர்த்து விட்டார்.


முதலில் ப்ரமோட்டராக ஒரு நாளைக்கு 250 ரூபாய் என்ற சம்பளத்தில் தொடங்கியது. பிறகு ஆப்பரேஷனல் பிரிவு, டீம் லீடர், ஆப்பரேஷனல் குழுத் தலைவர் போன்ற பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தேன். அங்கே பத்து ஆண்டுகள் பணிபுரிந்து செழுமையான அனுபவத்தைப் பெற்றேன். அதன் பின்னரே சொந்தமாக ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தைத் தொடங்கும் துணிச்சல் வந்தது. பத்து ஆண்டுகள் பணிபுரிந்து பெற்ற அனுபவம், நான் சொந்தமாக தொடங்கியதும் பெரும் அளவுக்கு உதவியாக இருந்தது.


இந்த நிறுவனத்தை தொடங்கியதற்கான முதல் காரணம், பணம் ஈட்ட வேண்டும் என்பது. இரண்டாவது காரணம், சுதந்திரம். நாம் சிந்தித்து நாம் எடுக்கும் முடிவுகளை தடை இல்லாமல் செயல்படுத்தலாம். எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் அவர்கள் கூறுவதைக் கேட்டுதான் செயல்பட வேண்டும். அது இயற்கையும் கூட. என் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் நான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்றுதான் விரும்புவேன். புதிதாக முயற்சிக்க வேண்டும்; நம் விருப்பப்படி செயலாற்ற வேண்டும் என்றால் சொந்தமாக தொழில் தொடங்குவதுதான் ஏற்றது. இது அனைவருக்கும் பொதுவானது.


நிகழ்ச்சி மேலாண்மையில் எடுத்த உடனேயே ஒரு வாடிக்கையாளரிடம், அவருக்கு செய்து தர வேண்டிய நிகழ்ச்சி பற்றிப் பேசத் தொடங்க மாட்டோம். அவருடனான சந்திப்பின் போது, முதலில் அவருடைய வேலை அல்லது தொழில் பற்றிக் கேட்டுதான் பேச்சைத் தொடங்குவோம்.


அவருடைய தொழில் வளர்ச்சிக்கு பயன்படும் சில செய்திகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். முதலில் ஒரு வாடிக்கையாளரை சந்திக்கும் போது, அவர்களுடைய தொழில் மேம்பாடு பற்றித்தான் பேசுவோம். அவருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நுட்பங்கள் தெரியவில்லை என்றால் அது பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவோம். இப்படி செயல்படுவதால், அவர்கள் நம்மிடம் தயக்கம் இல்லாமல் இயல்பாக பேசத் தொடங்குவார்கள்.


எடுத்த உடனேயே நிகழ்ச்சி பற்றி மட்டும் பேசினால் நம்மிடம் ஒரு நெருக்கம் உருவாகாது. பிறகு படிப்படியாக அவரின் தேவை என்ன என்பதையும், பட்ஜெட் பற்றியும் புரிந்து கொண்டு அதற்கேற்ப ஆலோசனைகளை வழங்குவோம். அவர்களுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வேறு என்னென்ன செய்து தர முடியும் என்பதையும் எடுத்து உரைப்போம்.


எங்களுடைய முதன்மையான பணிகள் பிறந்தநாள் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், ஆண்டு விழாக்கள் நடத்துவதுதான். ஆனாலும் அவர்களிடம் இது பற்றிப் பேசாமல் அவர்கள் தொழில் வளர்ச்சி பற்றி பேசத் தொடங்கும் போது அவர்கள் ஆர்வமாக நாங்கள் சொல்வதைக் கேட்கத் தொடங்குகிறார்கள். சந்தைப்படுத்தலில் இது ஒரு உத்தி.


கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் எனில் அவர்கள் நிகழ்ச்சிக்கான தொகையை முறையாக குறிப்பிட்ட நாட்களில் செலுத்துபவர்களா என்பதை கருத்தில் கொள்வோம். பொதுவாக கார்ப்பரேட் வாடிக்கையாளர்களோ அல்லது பிற வாடிக்கையாளர்களோ அவர்களிடம் நாங்கள் ஏற்கெனவே நிகழ்ச்சி மேலாண்மை செய்த பெரிய நிறுவனங்கள் பற்றிக் கூறுவோம். அவர்களிடம் அவர்களுக்கு என்னென்ன பணிகளை சிறப்பாக செய்து கொடுத்தோம் என்று விளக்கிக் கூறுவதோடு, அப்போது எடுக்கப்பட்ட படங்களையும், வீடியோக்களையும் காட்டுவோம்.


வாடிக்கையாளர்கள் நாம் ஏற்கெனவே செய்து கொடுத்த நிகழ்ச்சிகளை நன்றாக செய்து கொடுத்து இருக்கிறோமா என்பதை கூர்ந்து கவனிப்பார்கள். நான் என்னிடம் 40 ஆல்பம் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்கள் கேட்கும் போது அவர்களுடைய துறை சார்ந்த ஃபோட்டோ ஆல்பத்தை பிடிஎஃப் பைலாக அனுப்பி விடுவேன். அதைப் பார்த்து விட்டு வாடிக்கையாளர்கள் முடிவு எடுப்பார்கள். இந்த சான்றுகள்தான் இந்த தொழிலில் இருப்பவர்களுக்கான பலம்.


பெரிய பொருட்காட்சியாக இருந்தால் முன்று முதல் நான்கு மாதங்கள் வரை எடுத்துக் கொள்வோம். நிறுவனங்கள் இந்த பொருட்காட்சிகளை பொழுது போக்காகவும், அதே நேரத்தில் தொழிலாகவும் செய்ய வேண்டும் என்பார்கள். அதற்காக என்ன வெல்லாம் செய்ய வேண்டி இருக்கும் என்பதை முதலிலேயே திட்டமிடுவோம். தொடக்கத்தில் இருந்து நிகழ்ச்சி முடியும் வரை தேவைப்படும் அத்தனை செயல்பாடுகள் குறித்தும் இந்த திட்டமிடலில் இருக்கும். சான்றாக அழைப்பிதழ்கள் அனுப்புதல், பேனர் தயாரித்தல், எந்த மாதிரியான வாடிக்கையாளர்களை வரவழைக்க வேண்டும், இந்த நிகழ்ச்சிக்கு என்ன பெயர் வைப்பது என்பது வரைஅனைத்து வேலைகளையும் செய்வோம்.


பொருட்காட்சிக்கு பார்வையாளர்கள் என்ன சொன்னால் வருவார்கள் என்பதை யெல்லாம் சிந்தித்து செயல்படுவோம். அதற்காக டெலிகாலிங் வாயிலான மார்க்கெட்டிங், நேரடியான சந்திப்புகள், மின்னஞ்சல்களில் அழைப்பிதழ்கள் அனுப்புதல், அச்சிட்ட அழைப்பிதழ்களை அஞ்சல் வாயிலாகவும் அனுப்புதல், தேவைப்பட்டால் தொலைக்காட்சிகள், இதழ்கள் வாயிலான விளம்பரங்களையும் வெளியிடுவோம். ஃபேஸ்புக், யூடியூப் வாயிலான டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிலும் ஈடுபடுவோம்.


மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக பரத நாட்டிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறோம். அங்கே கிடைத்த அனுபவம் மூலமாக இப்போது வேறு எந்த நாட்டிலும் நிகழ்ச்சிகளை செய்து தர தயாராக உள்ளோம்.


இந்த துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.
நூறுகோடி வருவாய் பார்க்கும் நிறுவனமாக இருந்தாலும், நமது போட்டியாளர்களுக்கு இடையில்தான் ஓட வேண்டி இருக்கிறது. இதனால் நமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கும் தொடர் முயற்சி மிகத்தேவை.


இன்றைக்கு சந்தைப் படுத்துவதற்கு, நிகழ்ச்சிகள், விழாக்கள், பொருட் காட்சிகளை நடத்துவது அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம், அவர்கள் நிறுவனத்தில் மார்கெட்டிங் டீமை போட்டு அவர்களுக்கான வாடிக்கையாளர்களை தேடுவதற்கு பதிலாக, ஒரு நிகழ்ச்சியை நடத்தி உடனடியாக வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்று கருதுகிறார்கள். நிறுவனங்களின் பின்பலமாக ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் இருக்க வேண்டும் என்னும் காலக்கட்டம் வந்து விட்டது. நிகழ்ச்சிகளை நடத்தித் தருவதில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.


நான் ஒரு நிகழ்ச்சியை எப்படி முடித்துக் கொடுத்து இருக்கிறேன் என்பதைப் பொறுத்துதான். அந்த வாடிக்கையாளர் திரும்பவும் எங்கள் நிறுவனத்தைத் தேடி வருவார். இவர்களிடம் வேலை கொடுத்தால் சிறப்பாக நடக்கும்; நியாயமான கட்டணம் பெறுவார்கள் என ஒரு நிறுவனம் புரிந்து கொண்டால், அவர்கள் எப்போதும் நம்மைத் தேடி வருவார்கள்.


ரீட்டெய்ல், வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள், நகைகள் போன்ற துறைகளுக்குத் தான் அதிக சந்தைப்படுத்தல் தேவை இருக்கிறது. இதைப் போன்ற நிறுவனங்களுக்குத் தேவையான அனைவருக்கும் மார்க்கெட் ரிசர்ச் செய்வோம்.


பத்து ஆண்டுகளாக ஒரு கடை ஒரு இடத்தில் இருக்கிறது. அதை எப்படி அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருப்பார்கள். ஆனால் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். அப்போது நாங்கள் அவர்களுக்காக மார்க்கெட் ரிசர்ச் செய்வோம்.


அண்மையில் ஒரு பெரிய வணிக வளாகத்துக்கான சந்தை ஆய்வு செய்தோம். அவர்கள் அடுத்த ஒரு ஆண்டுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எந்தெந்த செலவுகளை செய்ய வேண்டாம் என்பது குறித்து ஆய்வு அறிக்கை அளித்தோம்.
அதே போல் குறிப்பிட்ட ஒரு பகுதியில் புதிதாக ஒரு பள்ளியை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதைப் பற்றியும் ஆய்வு செய்து கொடுத்தோம்.


வாடிக்கையாளர்கள் செலவிட தீர்மானித்து இருக்கும் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு செய்து கொடுப்போம். பதினைந்தாயிரம் ரூபாயில் இருந்து எங்களின் பணிகளுக்கான கட்டணம் தொடங்குகிறது. முதலில் சின்ன செலவில் செய்தவர்கள் பின்னர் அவர்களுக்கான பெரிய நிகழ்ச்சிகளுக்கும் எங்களைத் தேடி வருவார்கள். இதை விடக் குறைவான செலவில் செய்ய விரும்புகிறவர்களுக்கு, அத்தகைய நிகழ்ச்சிகளை செய்து கொடுக்கும் வேறு நண்பர்களை அறிமுகப்படுத்தி வைப்போம். எங்களைத் தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய சேவை கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.


வட இந்தியாவில் ணிணிவிகி என்ற ஒரு அமைப்பு நிகழ்ச்சி மேலாண்மைத் தொழில் முனைவோருக்காக செயல்படுகிறது. தென் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் எந்த ஒரு அமைப்பும் இந்த துறைக்காக இல்லை.


என்னுடைய நிறுவனத்தில் பத்து பேர்கள் வேலை பார்க்கிறார்கள். மார்க்கெட்டிங், செயல்படுத்துதல், நிர்வாகம், தகவல் மேலாண்மை என நான்கு பிரிவுகள் எங்களிடம் உள்ளன.


ஒரு நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்தையும் அவுட்சோர்சிங் மூலமா கத்தான் பெறுகிறோம், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை சிறப்பாக் குவதுதான் எங்களுடைய வேலை. வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்குத் தேவையானவற்றை ஆலோசித்து, பட்டியல் கொடுத்து விடுவோம். அவர்களுக்கு தேவையானதை அவர்களே தேர்வு செய்வார்கள்.


பெரும்பாலும் அவர்கள் எங்களையே முடிவெடுக்க சொல்லி விடுவார்கள். எங்கள் நிறுவனத்தைப் பொறுத்த வரை மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் செயல்படுவோம். இதைத்தான் செய்ய வேண்டும், இதைச் செய்யக் கூடாது என வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்த மாட்டோம்.


நான் வெற்றி அடைய வேண்டும் என்றால் என் நெட்வொர்க்கை, அதாவது வாடிக்கையாளர் மற்றும் தொழில் தொடர்பான உறவுகளை நான்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். இரவு பகல் பாராமல் பணி புரிய வேண்டும்.


புதிதாக படித்து விட்டு வருபவர்களுக்கும் இந்த துறை ஏற்றதுதான். ஆனால் இதில் ஆர்வம் இருக்க வேண்டும். இதில் மென்டல் பிரஷர், பிசிக்கல் பிரஷர், பைனான்சியல் பிரஷர் போன்றவை ஒரே நேரத்தில் வரும். இதைத் தாங்கிக் கொண்டுதான் வெற்றி அடைய முடியும். இதற்குத் தயாராக இருப்பவர்களே இந்த தொழிலில் நிலைத்து இருக்க முடியும்.


இவற்றைத் தாங்க முடியாத நிறைய பேர் பாதியில் நிறுவனத்தை மூடி விட்டு சென்று உள்ளனர். காலை 10 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு வந்து விட வேண்டும் என்பவர்களுக்கு இந்த துறை சரிப்பட்டு வராது. சவாலான பணிகளை ஏற்றுச் செயல்படும் இயல்பு கொண்டவர்களால் மட்டுமே இந்த துறையில் தாக்கு பிடிக்க முடியும்.


அனுபவம் இல்லாமல் நேரடியாக இந்த துறைக்கு வருவதும் கடினம். வாடிக்கையாளர்கள் எப்படி ஏமாற்றுவார்கள் என்றே உங்களுக்கு தெரியாது. பர்ச்சேஸ் ஆர்டர் எல்லாம் கொடுத்து விடுவார்கள். நமது கையில் இருந்து 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்து விடுவோம். அவர்கள் இரண்டரை லட்சம் மட்டும் கொடுத்து விட்டு, ஏதாவது குறைகளைச் சொல்லி, இதனால்தான் உங்களுக்கு பணம் தரவில்லை என தந்திரமாக சொல்லி விடுவார்கள். நம்மால் எதுவும் செய்ய முடியாது.


எனவே அனுபவம் இல்லாமல் இந்த தொழிலை செய்ய முடியாது. அனுபவம் உள்ள நானே இப்படி பல முறை பதில்களைப் பெற்று இருக்கிறேன். நேரடியாக வந்து இந்த தொழிலை செய்ய முடியாது. ஒரு பிசினஸ் டெவலப்மென்ட் நிகழ்ச்சி, திருமணம் போன்ற ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைச் செய்து பார்த்து அனுபவத்தைப் பெற வேண்டும். ஒன்றில் கற்றுக் கொண்டாலே மற்றவைகளை கற்றுக் கொள்ள முடியும்.


பொருட்காட்சிகள், பிராண்டிங் மற்றும் வர்த்தக செயல்பாடுகள், திருமண விழாக்கள், கிராமிய மார்க்கெட்டிங் செயல்பாடுகள், பயிற்சிகள் மார்க்கெட்டிங் ஆராய்ச்சி மற்றும் ஆடிட்டிங், விளையாட்டு நிகழ்ச்சிகள், வணிக மேம்பாட்டு நிகழ்வுகள், பன்னாட்டு கலாச்சார விழாக்கள், பன்னாட்டு கல்வி சுற்றுலாப் பயணங்கள் போன்றவற்றை எங்கள் நிறுவனம் செய்து தருகிறது” திரு. ராஜ் கணேஷ். (99622 53522)

-தினேஷ்குமார்

வாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு

0

வாழை மேம்பாட்டிற்காக 1993-ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (National Research Centre for Banana) திருச்சியில் நிறுவப்பட்டது.


இங்கு வாழை வகைகள் மேம்பாடு, வாழை உற்பத்தியை அதிகரித்தல், அறுவடைக்குப் பிந்தைய வாழை நிர்வாகம், வாழை பாதுகாப்பு என்பவை போன்ற அடிப்படையில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.


ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மைப் பணிகள்:
வாழை உற்பத்தி மற்றும் பயன்பாட்டினை அதிகரிக்கத் தக்க தொழில்நுட்பங்களை மேம்படுத்த அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.


வாழை பற்றிய அனைத்துத் தகவல்களுக்கும் களஞ்சியமாகவும், உற்பத்தித்திறன் மற்றும் மகசூல் அளவை அதிகரிக்கும் தகவல்களைப் பரப்பவும் செயல்படுகிறது.


பழங்கால மற்றும் உயிரி தொழில் நுட்ப முறைகளில் இருந்து மேம்படுத்தப்பட்ட வகைகளை உருவாக்குதல்.


இடம் சார்ந்த வகைகள் மற்றும் அவற்றில் ஏற்படும் சிக்கலைகளைக் களையவும் ஆன ஆராய்ச்சிகளையும் செய்கிறது.


வாழையை பயிரிடுவதற்கு ஏற்ப நிலத்தை தயார் செய்தல்,, வாழை பயிரிடும் முறை குறித்த செய்தகளைத் தருதல், அதிக லாபம் தரும் வாழை வகைகளை தேர்தெடுக்கும் வழிமுறைகள், தரமான வாழைக் கன்றுகளை தேர்ந்தெடுதல், வாழையை நோய்களிடம் இருந்து பாதுகாத்தலி, தரமான வாழைப் பழங்களை உற்பத்தி செய்வதற்கான நுட்பங்கள் தருதில், புயல் போன்ற இயற்கை சீற்றகளில் இருந்து வாழையைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைக் கற்பித்தல், நீர்ப் பாசன முறைகளைக் கற்பித்தல், ஒவ்வொரு மாதமும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக் கூறுதல், உரமிடுதல், உயர் தொழில்நுட்பத்தின் மூலம் கூடுதல் உற்பத்தி, இலாபம் ஈட்டும் சந்தை வாய்ப்புகள், அறுவடைக்குக் பிந்தைய வாழை நிர்வாகம், அறுவடைக்கு பின்னர் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கும் முறைகள், மேம்பட்ட சேமிப்பு வசதிகள், போன்ற வாழை தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது.


வாழை தொடர்பான பல பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. வாழையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்தல், அறுவடைக்குப் பின்னர் பின்பற்ற வேண்டிய தொழில் நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட வாழை உற்பத்தி , தரமான வாழைப் பழங்களை ஏற்றுமதி செய்யும் முறைகள் போன்றவற்றின் அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.


மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் சார்ந்த பயிற்சிகள் –

  • வாழைப்பழ சாற்றை தெளிவுபடுத்துதல்
  • தண்டில் இருந்து சாறு
  • வாழை மாவு தயாரித்தல்
  • வாழைக்காய் சிப்ஸ்
  • வாழைப்பழ சிப்ஸ்
  • வாழைப்பழ கூழ்
  • வாழைப்பழ சாறு
  • வாழைப்பழ பார்
  • வாழைப்பழ பிஸ்கட்
  • வாழை ஜெல்லி
  • வாழைப்பழ ஜாம், ஊறுகாய்
  • வாழை நார் கழிவில் இருந்து மண்புழு உரம்
  • வாழைபட்டையில் இருந்து வாழைநார் பிரித்தெடுத்தல் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரித்தல்.


ஏற்றுமதிக்கான பழங்களைக் கையாளுதல், சேமித்துவைத்தல், பழுக்க வைத்தல், பேக்கேஜிங் செய்தல்.


இந்த மையம் திருச்சிக்கு அருகே சோமரசம்பட்டி – தோகைமலை சாலையில் உள்ள தாயனூரில் உள்ளது. இணைய முகவரி – ஸீக்ஷீநீதீ.க்ஷீமீs.வீஸீ

-சந்தோஷ்

சந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்!

0

பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்கும் முன் ஒரு விரிவான வணிக திட்டத்தை தீட்டும். அந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு தேவை, அதை எப்படி பயன்படுத்துவது, அலுவலகம், உற்பத்தி, தொழிலின் நோக்கம், பொருட்களின் தேவை, சந்தை வாய்ப்பு, நிதி போன்ற பல செய்திகள் அதில் இடம் பெற்று இருக்கும். இந்த உத்திகள் சிறிய நிறுவனங்களாக இருந்தாலும் தேவைதான்.


அந்த தொழில் திட்டத்துடன் எப்படி அவர்களின் தயாரிப்புகள்/சேவைகள் வாடிக்கையாளர்களிடம் அடையும், எப்படி சந்தையில் நிலை நிறுத்துவார்கள் என்ற சந்தைக்கு கொண்டு செல்லுதல் (Go-To-Market Strategy – GTM strategy) என்ற உத்தியையும் தீட்டுவார்கள். இந்த உத்தி செயல்படுத்தப்படவில்லை என்றால் பொருட்கள் இறுதி வாடிக்கையாளர் வரை சென்று அடைவதில் சிக்கல் ஏற்படும். இது எப்படி ஒரு நிறுவனம் தயாரிப்பு அல்லது சேவையை சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை திட்டமிடும் விரிவான மார்க்கெட்டிங் செயல் திட்டம் ஆகும்.


ஒரு பொருள்/சேவை சந்தையில் நிலைத்து நிற்க, வாடிக்கையாளர் பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைக்கும் போது பொருட்கள் அவர்களின் முன் முதலில் நிற்க கோ டு மார்க்கெட் என்னும் வழிமுறையைப் பயன்படுத்தியே ஆக வேண்டும். பெரிய நிறுவனமானாலும் சரி, சிறிய தொழிலாக இருந்தாலும் சரி அனைத்து தொழில்களுக்கும் இந்த சந்தைப்படுத்தல் நுட்பம் பயன்படும்.


ஒவ்வொரு தொழில்களுக்கும் ஏற்ப இந்த உத்தி மாறுபடும் என்றாலும், பொதுவான உத்திகளை நாம் தெரிந்து வைத்திருப்பது நமது பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்த உதவும்.


மொத்த சந்தையின் அளவு


உங்கள் தயாரிப்பு/ சேவைகளுக்கு இருக்கும் சந்தையின் அளவை மதிப்பிட வேண்டும். இதை தயாரிப்பதற்கான மொத்த முதலீட்டையும் மதிப்பிட வேண்டும் அதில் இருந்து இலக்கு வைக்கக்கூடிய சந்தையை மதிப்பிட சந்தையில் எவ்வளவு விற்பனை ஆகும்; எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்பதையும் ஓரளவுக்கு மதிப்பிட வேண்டும். சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களை எப்படி குறிப்பிட்ட பொருளுக்கான வாடிக்கையாளர்களாக மாற்ற முடியும் என்பதையும் மதிபிட வேண்டும்.


பொருளின் மதிப்பு


ஒரு பொருளின் மதிப்புதான் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும். வாடிக்கையாளர்களிடம் அந்த பொருளின் அல்லது சேவையின் மதிப்பைக் கொண்டு செல்ல வேண்டும். வாடிக்கையாளர்கள் ஏன் இந்த தயாரிப்பை வாங்க வேண்டும்? இந்த பொருட்களை/சேவைகளை வாங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு எந்த வகையில் நன்மை, எந்த வகையில் அது விலைக்க ஏற்ற மதிப்புடையது மற்றும் தரமுடையது, சந்தையில் உள்ள மற்ற தயாரிப்புகளை விட இந்த தயாரிப்பு எந்த வகையில் மேம்பட்டது, எந்த வகையில் தனித்தன்மை வாய்ந்தது என்பதை வாடிக்கையாளர்களிடம் விளக்க வேண்டும்.


வாடிக்கையாளர் கொடுக்கும் விலையில், எந்த அளவு பொருளின் மதிப்பை, நன்மையை அவர் பெறுகிறார் என்பதைப் பொறுத்துதான், அந்த பொருளை அவர் மீண்டும் வாங்குவாரா அல்லது மற்றவர்களிடம் நல்ல விதமாக சொல்வாரா என்பதைத் தீர்மானிக்கும்.


வாடிக்கையாளர்களை கையகப்படுத்தல்


எது நமது பொருட்களுக்கான சந்தை, யார் நமது வாடிக்கையாளர்கள் என்பதை மதிப்பிட்ட பின்பு, அந்த வாடிக்கையாளர்களை எப்படி நமது வாடிக்கையாளர்களாக மாற்றுவது, அவர்களை எப்படி நமது பொருட்களை வாங்க வைப்பது என்பதை திட்டமிட வேண்டும். வாடிக்கையாளர்களை கைப்பற்ற எந்த வகையான மார்க்கெட்டிங் உத்திகள், விளம்பரங்கள், வாடிக்கையாளர் உறவு மேலாண்மை, பொது தொடர்புகள் தேவை என்பதை திட்டமிட வேண்டும்.


விற்பனை மற்றும் விநியோகம்


உங்கள் தயாரிப்பின் விற்பனையை தொடங்கும் முன் எப்படி விற்பனை செய்ய போகிறீர்கள், எந்த மாதிரியான விநியோக மேலாண்மையை பின்பற்றப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.


நேரடியாக நாமே விற்பனை செய்யப் போகிறோமா அல்லது மொத்த விற்பனையாளர்/ விநியோகிப்பாளர் (Wholesaler/Distributor), மூலமாகவா, ஆன்லைன் வழியாகவா போன்றவற்றையும் தீர்மானித்து அவற்றை எப்படி செயல்படுத்துவது என்பதை திட்டமிட வேண்டும்.


கண்காணிப்பு மற்றும் அளவிடுதல்


பொருட்களின் விற்பனை தொடங்கியவுடன், அதை நுணுக்கமாக கண்காணிக்க வேண்டும். விற்பனையின் முன்னேற்றத்தை அளவிட வேண்டும். பொருட்களின் விற்பனையை அளவிடவில்லை என்றால், சந்தையில் விற்பனை அதிகரித்து வருகிறதா, குறைகிறதா என்பதை அளவீடுகள் மற்றும் கண்காணிப்புகள் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும்.


நாம் செய்யும் தொழில் சிறியதோ, பெரியதோ நமது சந்தைப்படுத்தலை தெளிவாக திட்டமிட்டு செயல்பட வேண்டியது மிகவும் தேவை.

-சந்தோஷ்

குறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்

0

பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை குறைந்த செலவில் வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகளை மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்க்கலாம்.


வெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச் செடிகளில் மேயும். அசாதாரமாண தட்ப வெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி கிடைக்கும் புல் பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக் கூடியது. உலகில் மாட்டுப் பாலை விட சில இடங்களில் ஆட்டுப் பாலையே விரும்பி அருந்துகின்றனர். அது போல் ஆட்டு இறைச்சியும் ஒரு முக்கிய உணவாகும். வரலாற்றுக் கூற்றுப்படி ஆடுகளே முதன் முதலில் வளர்க்கப்பட்ட விலங்கு ஆகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் ஆட்டின் பால், இறைச்சி, முடி, தோல் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்து உள்ளனர்.


இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு.
ஆடுகள் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும். பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும்.


ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், பூடுகள், வேளாண் பயிர்க் கழிவுகள் மேலும் வேளாண் துணை விளை பொருட்கள் போன்ற அனைத்தையும் உண்பதால் தீவனப் பராமரிப்புக் குறைவு.


வெள்ளாட்டை செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும் போது வெள்ளாடுகள் மிதவெப்பப் பகுதிகளுக்கு ஏற்றவை.


கிராமங்களைச் சுற்றி உள்ள பகுதிகளில் பால் பொருட்கள் தொடர்பான குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு ஆடு வளர்ப்பு பெரும் உதவி புரிகின்றது.


வெள்ளாட்டு இனங்களைப் பொறுத்த வரை மலபாரி (டெல்லிச்சேரி) அட்டபாடி, சேனன் மலபாரி கலப்பு இனங்கள் அதிகம் காணப்படுகின்றன.


வயது முதிர்ந்த ஆடுகளை வாங்கும் போது அதன் பால் உற்பத்தித் திறனை அறிந்த பின் வாங்குதல் நலம். ஒரு நாளின் உற்பத்தி அளவு என்பது அடுத்தடுத்த இரண்டு கறத்தலில் பாலின் அளவு 0.5 கிகி அதிகமாக இருப்பதாகும்.


இளம் ஆடுகளை வாங்கும் போது அதன் குட்டி ஈனும் அளவைப் பார்த்து வாங்க வேண்டும். அதோடு ஆடு எந்த ஒரு உடல் குறைபாடும் இன்றி இருக்க வேண்டும்.
ஆடுகளின் 120 நாள் பால் உற்பத்தி அளவை வைத்தும், 2 வயதில் அது ஈன்ற குட்டிகள் எண்ணிக்கையை வைத்தும் ஆட்டின் செயல்திறனைக் கணிக்கலாம்.


தமிழ்நாட்டில் மூன்று வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. அவை, கன்னி ஆடுகள், கொடி ஆடுகள், சேலம் கருப்பு கன்னி ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும்.

உயரமான ஆடுகள், கருமை நிறம் கொண்டவை.. முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் இருக்கும். அடி வயிற்றுப் பகுதி மற்றும் கால்களின் உட்புறத்தில் வெள்ளை நிறம் காணப்படும். இத்தகைய நிறம் அமையப் பெற்ற ஆடுகளை ‘பால்கன்னி’ என்றும், வெண்மை நிறத்திற்குப் பதிலாக செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செங்கன்னி’ என்றும் அழைக்கப்படுகிறது.


கொடி ஆடுகளும் தூத்துக்குடி, எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் வட்டங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. மிக உயரமான இவ்வகை ஆடுகள் நீண்ட கழுத்தும், உடலும் கொண்டவை. வெள்ளையில் கருமை நிறம் சிதறியது போன்ற நிறம் கொண்ட ஆடுகளை ‘கரும்போரை’ என்றும், வெள்ளையில் செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செம்போரை’ என்றும் அழைக்கிறார்கள்.


சேலம் கருப்பு வகைய ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை.. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.


இம்மூன்று இனங்களும் இறைச்சி மற்றும் தோலுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன.


இந்தியாவில் மட்டும் 19 அறியப்பட்ட இனங்கள் நாடு முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. இவை காணப்படும் இடங்களைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.


இமாலயன் இனங்கள் (மலைப்பிரதேசங்களில காணப்படுபவை) ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசத்தின் சில இடங்களில் காணப்படுகின்றன. இவ்வின ஆடுகள் வெள்ளை நிற முடியுடன் மிக வலிமையானவை. இவை காடி, ஜம்பா, காஷ்மீரி என்று வளரும் இடங்களைப் பொறுத்து பல பெயர்களில் வழங்கப்படுகின்றன.


பாஸ்மினா, சிறிய சுறுசுறுப்பான ஆடுகள். இமாலய மலை உயரங்களில் லட்சத் தீவுகள் மற்றும் ஸ்பிட்டி பள்ளதாக்குகளில் பரவி உள்ளன. செகு இன ஆடுகள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, காஷ்மீர் யாக்சர் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இது நல்ல இறைச்சியையும் சிறிதளவு பாலும் கொடுக்கக்கூடியது.


ஜமுனா பூரி, உத்திரப்பிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த இவ்வினம் மிகப் பெரிய தொங்கும் காதுகளையும், நல்ல உயரமும் உடையவை.


பீட்டல், பஞ்சாபில் காணப்படுகிறது. ஜமுனாபுரியிலிருந்தே இவ்வினம் உருவாக்கப்படுகிறது. சிவப்பு நிறத்தில் வெள்ளை பொட்டுக்களுடன் கூடியது.


பார்பரி, உத்திரப் பிரதேசத்தின் எட்டாவா, எட்டா, ஆக்ரா, மதுரா மாவட்டங்களிலும் கமல், பானிபட், சோடக் பகுதிகளிலும் (ஹரியானா) காணப்படுகின்றன.


பெராரி, நாக்பூர், மகாராஷ்டிராவின் வார்டா மாவட்டம், மத்தியப் பிரதேசத்தின் நினார் மாவட்டங்களில் பரவியுள்ளன.


கத்தை வாரி, இது கட்ச், வடக்கு குஜராத்,, ராஜஸ்தான் பகுதிகளை தாயகமாகக் கொண்டது. இவ்வகை ஆடுகள் கறுப்பு நிறத்தில் கழுத்தில் சிவப்பு நிறமுடன் காணப்படுகினறன.


சுர்தி இன ஆடுகள் பெராரி போன்று குட்டையான கால்களையும் வெள்ளை நிறத்தையும் உடையவை.


மலபார் (அ) தலச்சேரி இன ஆடுகள் வெள்ளை மற்றும் பழுப்பு, கறுப்பு நிறங்களில் காணப்படும்.. 2-3 குட்டிகள் போட வல்லவை.


டெக்கானியா இன ஆடுகளை ஒஸ்மனாபாத் என்றும் அழைப்பர். சமவெளிகளில் காணப்படும் ஆடுகளின் கலவை இது. இவை கருப்பு, கருப்பு வெள்ளை கலந்தோ, சிவப்பு நிறத்திலோ காணப்படும்.


ஜிபிஆர்ஐ இனம் இரு இனங்களின் கலவை ஆகும். இதன் நிறம் கருப்பில் இருந்து வெள்ளை நிறம் வரை வேறுபடும்.


பெங்கால் இனம் கருப்பு, பழுப்பு (அ) வெள்ளை என மூன்று நிறங்களில் காணப்படுகின்றன. இவை சிறிய குட்டையான இனங்கள். இதன் இறைச்சி உயர்தரமானது. இது ஆண்டுக்கு இருமுறை தலா இரு குட்டிகள் ஈனும்.


அஸ்சாம் இன ஆடுகள் குட்டையான உருவம் கொண்டவை. இவ்வாடுகள் அஸ்சாம் மலைப் பகுதிகளிலும், கிழக்கு மாநிலங்களிலும் காணப்படுகின்றன.


டோகன் ஸ்பெர்க், வடக்கு ஸ்விட்சர்லாந்தின் டோகன்ஸ்பெர்க்கை தாயகமாகக் கொண்ட இவ்வினம் மென்மையான நன்கு வளையும் தன்மையுடைய தோலை உடையது. பொதுவாக கொம்புகள் காணப்படுவதில்லை.


சேனன், சுவிட்சர்லாந்தின் சேனன் பள்ளத்தாக்கில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் அதிக உற்பத்திக்கும், மிருதுவான ரோமத்திற்கும் புகழ் பெற்றது.


ஆல்பைன், ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் தோன்றிய இனம்.. இவ்வினம் பிரெஞ்ச், சுவிஸ், ராக் அல்பைன் போன்ற இனங்களிலில் இருந்து கலப்பினச் சேர்க்கையில உருவாக்கப்பட்டது. பல நிறங்களில் காணப்படும் .


நுபியன், வடகிழக்கு ஆப்பிரிக்காவின் நுபியன் பகுதியில் இவ்வினம் அதிகமாகக் காணப்படுகிறது. இது நீண்ட கால்களை உடைய ஆடு. இந்த நுபியன் இனத்தை இந்தியாவின் ஜமுனாபுரியுடன் கலப்பு செய்து ஆங்கிலோ நுபியன் என்ற இனம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.


ஆங்கிலோ நுபியன், இது வளைந்து தொங்கும் காதுகளுடன் ரோமன் மூக்குடன் கூடிய மிருதுவான தோல் கொண்ட இனம். ஆடுகளின் ஜெர்ஸி என்று அழைக்கப்படுகிறது. மடி மிகப் பெரியதாக காம்புகள் பெரியதாக தொங்கிக் கொண்டு இருக்கும். அங்கோரா
பொதுவாக உலகின் எல்லா இடங்களிலும் வெள்ளாடுகள் பால், இறைச்சி தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன.

-டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை