அது என்ன, ஜஸ்ட் இன் டைம்?

0

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல வகைப் பொருட்களை, பல வகையான தொழில் நிறுவனங்கள் நாளும் தயாரித்து வருகின்றன.


ஒரு பொருளை தயாரிப்பதில் இருந்து அதனை கடைக் கோடி வாடிக்கையாளர் கைகளுக்கு கொண்டு சேர்ப்பது வரைக்கும் உள்ள தொடர்ச்சியான நிகழ்வில் பல மேலாண்மை நடவடிக்கைகள் உள்ளன.


அதில் முதல் நடவடிக்கை என்பது மூலப் பொருட்களை தயார் நிலையில் வைத்திருப்பது. மூலப் பொருள் தயார் நிலையில் உள்ள போதுதான் உற்பத்தி தடை இல்லாமல் நடைபெறும். அதே வேளையில், அளவுக்கு அதிகமான மூலப் பொருட்களை வாங்கி குவித்து வைத்து விட்டாலும் முதலீடு அதில் முடங்கி விடும்.


உற்பத்தி செய்த பொருட்களை மிகச் சரியாக பேக்கிங் செய்து அதனை மொத்த விற்பனையாளர்களின் கைகளுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கான போக்குவரத்து செலவுகளை ஏற்க வேண்டும். அந்த பொருள் பற்றிய அறிமுகத்தை வெளிச் சந்தையிலும் , மக்கள் மத்தியிலும் பிரபலப்படுத்த வேண்டும். அதற்கான விளம்பரச் செலவுகள் உள்ளன.


இந்த நிலையில் முதல் நிலையான மூலப்பொருட்கள் சேகரிப்பிலேயே நாம் நின்று விட முடியாது.


இந்த இடத்தில் தான் இந்த JIT என்ற தியரி வேலை செய்கிறது. இந்த தியரியின் படி, ஒரு பொருளின் உற்பத்தி, அதன் சந்தையின் தேவை, விற்பனை வேகம், அதன் மறு தேவைகள், இதற்கு எல்லாம் மேலாக, மூலப் பொருளின் கையிருப்பு – என இந்த அம்சங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு, அதனையொட்டி மூலப் பொருட்களின் கொள்முதலை கூட்டவோ , குறைக்கவோ செய்ய வேண்டும்.

இதனை முறையாக கையாளும் முறைக்குப் பெயர் தான் தேவைக்கு ஏற்ற கொள்முதல் அதாவது JIT என மேலாண்மை தியரியில் அழைக்கபடுகிறது.

-பள்ளபட்டி அஸ்கர் அலி

போயிங் பெயரைக் கெடுத்த எம்சிஏஎஸ் (MCAS)

0

விமானங்கள் தயாரிக்கும் இரண்டு பெரிய நிறுவனங்கள் என்றால் அவை ஐரோப்பிய நாட்டைச் சார்ந்த ஏர்பஸ் (Airbus) நிறுவனமும், அமெரிக்க நாட்டை சார்ந்த போயிங் (Boeing) நிறுவனமும்தான். இவற்றில் முதலில் தொடங்கிய நிறுவனம், போயிங் நிறுவனம். 1916களில் இருந்து இந்நிறுவனம் இயங்கி வருகின்றது, ஏர்பஸ் நிறுவனம் 1970களில் இருந்தே விமானங்களை உருவாக்கி வருகிறது.


கடந்த 2018 அக்டோபர் மாதம் 29 – ம் தேதி லயன் ஏர் எனும் விமான நிறுவனத்தால் இயக்கப்பட்ட போயிங் 737 Max 8 ரக பயணிகள் விமானம், ஜகார்த்தா மாநிலத்தில் புறப்பட்டு (Take off) பன்னிரண்டு வினாடிகளில் விபத்துக்கு உள்ளாகி ஜாவா கடல் பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் சுமார் 189 பயணிகள் உயிரிழந்தனர்.


தற்போது உலகத்தில் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் 25,000 க்கும் மேல் இயங்கி வருகின்றன அவை அனைத்தும் இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டும் தயாரித்தவைதான்.


போயிங், ஏர்பஸ் இரண்டு நிறுவனங்களிலும் பெரிய அளவில் வெற்றி பெற்ற விமானங்கள் என்று பார்த்தால் அவை போயிங் 737 வகையும், ஏர்பஸ்சில் A320 வகை விமானமும்தான். 737 வகை விமானம் சுமார் 10,000க்கும் மேலும் A320 வகை விமானம் 9,000க்கும் மேலும் உலகம் முழுவதும் இயங்கி வருகின்றன.


செப்டம்பர், 2014 -ல் ஏர்பஸ், A320 Neo என்ற புது வகை விமானத்தை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தது. வெளியிட்ட சில மாதங்களிலேயே A320 Neo வகை விமானம் விமான போக்குவரத்து நிறுவனங்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வகை விமானத்தால் 15% அளவுக்கு ஏரிபொருளை சேமிக்க முடிந்தது. அப்போது முதல் இரு நிறுவனங்களுக்கும் இடையே தொழில் போட்டி இன்னும் வேகம் எடுத்தது.


போயிங் நிறுவனமும் A320 Neo விமானத்திற்கு போட்டியாய் 737MAX- 8 எனும் விமானத்தை அறிமுகம் செய்தது. இந்த இரண்டு நிறுவனங்களும், தங்களது இந்த இரண்டு வகை விமானங்களை மேம்படுத்துதலின் போது விமானத்தின் எஞ்சின் அளவை பெரியதாக்கின.


பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களிள் எஞ்சினை இறக்கையில்தான் பொருத்தி இருப்பார்கள். 737MAX- 8 க்கும் A320 Neo க்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்பது A320 Neo விமானத்தில் எஞ்சினுக்கும், தரைக்கும் உள்ள உயரம். 737MAX- 8 யை ஒப்பிடும் போது நியோவில் உயரம்அதிகமாக இருந்தது. அதாவது 737MAX- 8- ல் கிரவுண்டு கிளியரன்ஸ் (Ground Clearance) குறைவாக இருந்தது.


இப்படி கிரவுண்டு கிளியரன்ஸ் குறைவாக இருப்பதால் 737MAX- 8 – ல் எஞ்சினின் வடிவமைப்பை சற்றும் மாற்றாமல் அப்படியே இறக்கையை மேலே உயர்த்தினர். இப்படி எஞ்சினை உயர்த்தியதால் விமானத்தின் சென்டர் ஆப் கிராவிட்டியும் (COG) மேலே சென்றது.


இப்போது, Angle of Attatck (AOA) என்றால் என்ன என்பதை அறிவோம். பொதுவாக விமானத்தின் இறக்கைகளை ஏர்ஃபாயில் (Airfoil) எனப்படும் வகையிலேயே வடிவமைப்பார்கள். அப்படி வடிவமைத்தால் மட்டுமே விமானம் மேல் நோக்கி எழும்ப இறக்கை உந்துதலாக இருக்கும். இறக்கையின் பின் விளிம்பில் (Trailing Edge) இருந்து முன் விளிம்பு (Leading Edge) வரை ஒரு லைனை வரைந்தால் அதுகார்ட் லைன் (Chord Line) என அழைக்கப்படும். அப்படி அந்த கார்ட் லைனையும் கிடைமட்ட லைனையும் (Horizontal Line) இதற்கு இடைப்பட்ட கோணத்தையும் (Angle) அளத்தால் நமக்கு விமானத்தின் ஆங்கில் ஆப் அட்டாக், விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது எவ்வளவு என்பது தெரிய வரும்.


பறந்து கொண்டு இருக்கும் விமானத்தின் ஸ்டால் ஆங்கிளை (Stall Angle) பைலட்டுகள் நெருங்க விட மாட்டார்கள். அப்படி விமானம் ஸ்டால் ஆங்கிளை நெருங்கினால் அது விபத்துக்கு உள்ளாகும். பொதுவாக எல்லா விமானத்திலும் ஸ்டால் ஆங்கிள் 12 முதல் 20 டிகிரி வரை இருக்கும்.


737 மேக்சில் இப்போது அதன் சென்டர் ஆர் கிராவிட்டி உயர்ந்ததால் விமானம் மேல் நோக்கி எழும்ப டேக் ஆஃப் செய்ய அதிக ஆங்கிள் ஆப் அட்டாக் தேவைப்படுகின்றது. அப்படி அதிக கோணத்தை நெருங்கி ஸ்டால் ஆங்கி¬ளை நேருங்காமல் இருக்க போயிங் நிறுவனம் புதிதாக ஒரு மென்பொருளை 737MAX- 8 – ல் அறிமுகபடுத்தியது.


இப்போது 737MAX- 8 -ல் என்ன கோளாறு எற்பட்டது என்றால், விமானம் பறக்கும் போது அதிக ஆங்கிள் ஆஃப் அட்டாக் ஏற்பட்டால் அதனை ஸ்டால் ஆங்கிளை நெருங்க விடாமல் குறைப்பதற்கு போயிங் நிறுவனம், MCAS (Maneuvering Characteristics Augmentation System) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை (artificial intelligence software) உருவாக்கி, அதனை 737MAX- 8 – ல் பொறுத்தி விட்டது.

இப்போது இந்த மென்பொருளின் செயல்பாடு என்னவென்றால் விமானம் வானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது அதில் AOA அதிகம் ஆனால் அதனை விமானத்தின் முன்பக்கத்தில் AOA பொறுத்தப்பட்டு இருக்கும், இரண்டு AOA­ சென்சார்களில், ஒன்றில் (ஒரு ஏஒஏ சென்சார்) மட்டும் இருந்து தகவலை தொடர்ந்து எடுத்து பிராசஸ் செய்து அதற்கு ஏற்றாற் போல் விமானம் அதுவாகவே விமானத்தின் வால் பகுதியில் இருக்கும் எலிவேட்டரை (Elevator) பயன்படுத்தி விமானத்தின் ஆங்கிள் ஆஃப் அட்டாக் கோணத்தை குறைக்கும்.


இதனால் விமானம் ஸ்டால் ஆங்கிளை நெருங்காது. விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது, அதன் எலிவேட்டரே விமானத்தை மேல் உயர்த்த வேண்டுமா அல்லது தாழ்த்த வேண்டுமா என்பதை முடிவு செய்யும்.


இப்படி ஒரு மென்பொருள் விமானத்தில் பொருத்தப்பட்டு உள்ளது என்பதைக் குறித்து போயிங் நிறுவனம் விமானிகளுக்கு தெரிவிக்கவைல்லை. முதல் விபத்து எற்பட்ட பின்னரே போயிங் நிறுவனம் அதனை கையேடு புத்தகத்தில் விமானிகளுக்காக அப்டேட் செய்தது.


முதல் விபத்து ஏற்பட்டு ஐந்து மாதங்களுக்குள், கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி எத்தியோப்பியாவில் இருந்து புறப்பட்டு (டேக் ஆஃப் செய்து) ஆறு வினாடிகளில் விமானம் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 157 பயணிகள் உயிரிழந்தனர். பொதுவாக விமானம் டேக் ஆஃப் செய்யும் போது அதிக ஆங்கிள் ஆஃப் அட்டாக் இருக்கும் அதனால் விமானத்துக்கு லிஃப்ட் அதிகமாக தேவைப்படும். அதன் கோணம் கிட்டத்தட்ட ஸ்டால் ஆங்கிளை நெருங்கி இருக்கும்.


737MAX- 8 – ல் எஞ்சின் பொருத்தப் பட்டு இருக்கும் இடத்தைப் பொறுத்து மற்ற விமானங்களைக் காட்டிலும் இதில் லிஃப்ட் சற்று அதிகமாக இருக்கும். இப்படிபட்ட அதிக கோணத்தை குறைக்கவே இந்த பயணிகள் விமானத்தில் போயிங் நிறுவனம் இப்படி ஒரு புதுவகை மென்பொருளை உருவாக்கி அதனை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது.


மார்ச் மாதம் நடந்த விபத்தால் இந்தியா உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் 737MAX- 8 வகை பயணிகள் விமானத்தை தங்கள் நாடுகளில் பறப்பதற்கு தடை விதித்தன. ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA(Federal Aviation Administration) என்பது அமெரிக்க அரசாங்க அமைப்பாகும். அந்த நாட்டில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பு இது. இப்படிப்பட்ட உறுதித்தன்மை இல்லாத MCAS மென்பொருளை FAA பயணிகள் விமானத்தில் பொருத்த அனுமதி அளித்திருக்கக் கூடாது என்பது பல விமான நிறுவனங்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.


முதல் விபத்து நடைபெற்ற பின்னர்தான் போயிங் நிறுவனம், இப்படி ஒரு மென்பொருள் விமானத்தில் இருப்பதை விமானிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு வெளிப்படுத்தியது. அதன் பின்னர் சில விமான போக்குவரத்து நிறுவனங் களைச் சார்ந்த விமானிகளுக்கு மட்டும் MCAS பற்றி PPT முலம் போயிங் நிறுவனம் பயிற்சி அளித்தது. அப்போதும் சிமுலேட்டர் (simulator) பயன்படுத்தி பயிற்சி வழங்கவில்லை என்பதும் பலரின் குற்றசாட்டு.


இரண்டாவது விபத்து நடப்பதற்கு முன்னர், அந்த விமானத்தை இயக்கி வந்த விமானி MCAS சிஸ்டத்தை பற்றி முன்னரே அறிந்து இருந்ததால், விபத்தைத் தவிர்க்க அவர் கடுமையாக முயன்ற போதும் அந்த மென் பொருள், விமானியின் செயல்களை புறக்கணித்து விட்டது. இப்படிபட்ட MCAS சிஸ்டத்தை விமானியால் செயல் இழக்கவும் செய்ய முடியவில்லை. இதன் விளைவாகவே இரண்டாம் விபத்து நடைபெற்றது.


கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 737 மேக்ஸ் 8 வகை பயணிகள் விமானம் ஒன்று கூட விற்பனையாகவில்லை. தற்போது போயிங் நிறுவனம் அப்டேட்டட் MCAS வெர்சன் என்று அறிமுகபடுத்தி உள்ளது. முன்பு ஒரு AOA சென்சாரில் இருந்து மட்டும் தகவலைப் பெற்று பிராசஸ் செய்த எம்சிஏஎஸ், தற்போது இரண்டு சென்சார்கள் வாயிலாகவும் தகவலை பெற்று இயங்கும்.


குறிப்பாக இந்த இரண்டாம் பதிப்பு பொருத்தபட்டு இருக்கும் AOA சென்சா ருக்கும் ஒன்றுக்கும் மற்ற ஒன்றுக்கும் வேறுபாட்டின் அளவு 5.5 டிகிரிக்கு மேல் இருந்தால் தானாகவே எம்சிஏஎஸ் மென்பொருள் செயல் இழந்துவிடும். அது மட்டும் இன்றி தற்போது புதிய மென் பொருளிள் ஒரு விமானியால் எந்ந நேரமும் எம்சிஏஎஸ் சிஸ்டத்தை புறக்கணிக்க (Override) முடியும்.


தற்போது போயிங் நிறுவனம் தனது இரண்டு விபத்திலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டைக் கொடுத்து வருகின்றது. இருப்பினும் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்?


பந்தயத்தில் ஒடிக் கொண்டே இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழலில் நிறுவனங்கள் இருந்தாலும், அந்த நிறுவனங் களின் தயாரிப்புகள் எந்த காரணத் தாலும் இயற்கைக்கும், மற்ற மனித உயிர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.


மேற்கண்ட இரண்டு விபத்துகளுக்கும் அடிப்படையான காரணம் என்ன என்று கூர்ந்து பார்த்தால் அவற்றுக்கு இடையே நடந்து வரும் தொழில் போட்டிதான் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.


கடந்த காலங்களில் போயிங் நிறுவனம் அறிமுகம் செய்த விமானங்களால், விமான போக்குவரத்துத் தொழிலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்பதும் உண்மை. தற்போதும் தனது லாபத்தில் பெரும் பகுதியை தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிக ளுக்கு செலவழித்து வருகிறது. இருப்பினும் இந்த இரண்டு விபத்துகளும் போயிங் விமானங்கள் குறித்த நம்பகத் தன்மையில் ஒரு ஓட்டையைப் போட்டு விட்டன.

-செ. தினேஷ்பாண்டியன்,பி. டெக்., (ஏரோநாட்டிகல்)

உங்களுக்கு உதவும் குறிப்புகள்

0
  • மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
  • உடல் நலத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
  • உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
  • வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
  • முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங் கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
  • ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
  • எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
  • நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசு கையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
  • புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
  • வாரம் மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
  • சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
  • உங்கள் கூட்டத்தில் ஒருவர் இல்லாத போது, அவரைப் பற்றி பேச நேர்ந்தால் அவருடைய சிறப்புகளை மட்டுமே பேசுங்கள்.
  • அரட்டைப் பேச்சுகளையும், தேவை யில்லாமல் மற்றவர்களைப் பற்றி குறை கூறிப் பேசுவதையும் ஊக்குவிக்காதீர்கள்.
  • மற்றவர்களின் தவறுகளை மன்னியுங் கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
  • உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
  • குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
  • மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
  • மற்றவர்களைப் பேச விடுங்கள்.
  • மற்றவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

-விஸ்வ பாரதி

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்

0

அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் 1986ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை ஆசிரியராக பணியாற்றினேன். நான் பணியில் சேரும் போது என் வயது 22. இன்றைய இணைய தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலம். நூலகத்தில் உள்ள பேராசிரியர்களின் புத்தகங்கள் மட்டுமே துணை. ஆனால் அவற்றை வைத்து நான் தெளிவு பெறலாமே தவிர கிராமங்களில் இருந்து எளிய பின்னணியில் தமிழ் வழியில் கற்ற மாணவர்களுக்கு பாடங்களை புரிய வைக்க முடியாது. அதனை சாதிக்க, அவர்களின் நிலையில் நின்று பார்த்து நாம் கீழிறங்கி வர வேண்டும்.


பொதுவாக வகுப்பில் 6 அல்லது ஏழு பெண்கள் உள்ளிட்ட 60 மாணவர்கள் இருப்பார்கள். அவர்களில் கற்றல் திறன் அதிகம் உள்ளவர்கள் 10 பேர் இருக்கலாம் (பெரும்பாலும் முன் பெஞ்ச் மாணவர்கள்). எது சொன்னாலும் புரிந்து கொள்ள இயலாத கற்றல் திறன் குறைந்த மாணவர்கள் 6 அல்லது 7 பேர் அதிக அளவாக 10 பேர் இருப்பார்கள் (கடைசி பெஞ்ச்). மற்றவர்கள் நடுத்தரமானவர்கள்.


நான் பாடம் நடத்தும் போது முன் பெஞ்ச் மாணவர்களின் முகக் குறிப்பை கவனித்து அதற்கேற்றாற் போல வேகத்தை கூட்டுவதோ, குறைப்பதோ இருக்கும். நடுத்தரத்தில் உள்ளவர்களில் சிலர் கூர்ந்து கவனிப்பார்கள்; சிலர் சற்று விட்டேத்தியாக இருப்பார்கள். அவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக சில நகைச்சுவை துணுக்குகள், எளிய எடுத்துக் காட்டுகள், நடைமுறை தகவல்கள் என சில வித்தைகளை செய்வேன். கடைசி வரிசை மாணவர்களை தூங்க விடாமல், அவர்களை கவனிக்க வைக்க அவர்களின் பெயர் சொல்லி அழைத்து, எளிதில் பதில் சொல்லத் தக்க சில சிறு கேள்விகளைக் கேட்பேன்.


சில நேரம் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால், அவர்கள் வகுப்பையும் சேர்த்து எடுக்க வேண்டி இருக்கும். அந்த மாதிரி நேரங்களில், தொடர்ந்து மூன்று மணி நேரம் வகுப்பில் நிற்க வேண்டி இருக்கும். அப்போது பெரும்பாலும் ஒரு மணி நேர இடைவெளியில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் மாணவர்களை பாடச் சொல்வது, மிமிக்ரி செய்யச் சொல்வது போன்றவற்றால் கொஞ்சம் மடை மாற்றுவேன்.


ஆனால் ஆறு ஆண்டுகளில் கடைசி இரண்டு ஆண்டுகள் சங்க நடவடிக்கைகளுக்காக அலைந்து திரிந்த போதும், சிறப்பு வகுப்புகள் வைத்தாவது நடத்த வேண்டிய பாடங்களை நடத்தி முடித்து விடுவேன். நான் நடத்தும் பாடங்களில் ஓரிரு முறைகளை தவிர 100% தேர்ச்சி இருக்கும். அதே போல் செய்முறைத் தேர்வுகளில் பழி வாங்குகிறேன் என்ற போர்வையில் யாரையும் ஃபெயிலாக்கியல்லை.


வகுப்பறையில் சந்தேகம் கேட்பவர்களை எரிச்சலோடு அணுக மாட்டேன். முடிந்தவரை ஐயங்களை தீர்க்க முயல்வேன். எனக்குத் தெரிந்ததை விட அதிகம் தெரிந்து வைத்திருந்து, அதை அவர்கள் கூறினால் அவர்களை மனம் திறந்து பாராட்டுவேன்.


பதின்பருவத்தின் இறுதியில் நிற்கும் மாணவர்களுக்கே உரித்தான சில சில்மிசங்களை சிலர் செய்வார்கள். அப்படி வகுப்பில் சேட்டை செய்பவர்களை வகுப்பறையை விட்டு வெளியே நிற்க செய்யும் கொடுமையை ஒரு நாளும் செய்தது இல்லை. தூங்குகிற மாணவன் மீது சாக்பீசை எறிந்தது இல்லை. “தம்பி, ஊர் வந்துருச்சின்னு சொல்லி அவன எழுப்பி விடு”என பக்கத்தில் உள்ள மாணவனிடம் சொல்லி அவன் எழுப்பி விடும் போது தூங்கி எழுந்தவனின் பதட்டம் வகுப்பறையில் சிரிப்பை வரவழைக்கும். அது தூக்கக் கலக்கத்தில் இருக்கும் மற்றவர்களையும் சுறுசுறுப்பாக்கி விடும்.


தூக்கம் சொக்குகின்ற மதிய நேர வகுப்புகளை கையாள்வது கடினமான வேலை. அதுவும் கலைப் பாடங்கள் போன்ற தொழிற் பாடங்களை நடத்துவது மிகவும் சிரமம். வாரத்தில் ஒரு வகுப்பு வேளை அப்படி அமைந்து விடும். அதற்கென்று அவர்கள் ஈடுபாட்டோடு கலந்து கொள்ளும் வகையில் சுவையான சில விளையாட்டுகளை அறிமுகப் படுத்துவேன். அத்துடன் பாடப்பகுதி களையும் சுவையாக நடத்தி விடுவேன்.
மாணவர்களை பேப்பர் பிரசன்டேஷன் செய்வதற்கும், செமினார் எடுப்பதற்கும் பழக்குவேன். அவர்களை செமினால் வகுப்புகள் எடுக்கச் சொல்லி நான் மாணவர்களிடையே அமர்ந்து கவனிப்பேன்.


இன்று நினைத்துப் பார்க்கும் போது பி.எட்., படிப்பு போன்ற கல்வி சார்ந்த எந்த படிப்பும் படிக்காமல், என்னுடைய மாணவர்களை மகிழ்ச்சியுடன் படிக்க வைத்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது இன்றும் என்னால் மகிழ்ச்சி அடைய முடிகிறது.


இப்போது கல்விப் பணியில் இருந்து வேறு தொழிலுக்கு மாறி விட்டாலும், கல்விமுறை பற்றிய நூல்களை இப்போது படிக்கும் போது, மாணவர்களிடையே நான் சிறப்பாகவே இயங்கி இருப்பதை உணர்கிறேன்.


அதேபோல முன் முடிவுகளோடு மாணவர்களிடம் வேறுபாடு காட்டும் பழக்கம் இயல்பிலேயே என்னிடம் இருந்தது இல்லை என்பதையும் உணர்கிறேன். இந்த என் அனுபவங்கள் இன்றைய இளம் ஆசிரியர்களுக்குப் பயன் படும் என்ற நோக்கத்திலேயே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

-வீரஜோதிமணி அங்கிடுசாமி

கார்ப்பரேட் மேலாளர்களுக்குத் தேவையான அடிப்படைப் புரிதல்கள்

0

பயன் கிடைக்கக் கூடிய வகையில் பணியாற்ற ஒரு மேலாளர் கவனிக்க வேண்டியவை:


குறுகிய கால, நீண்டகாலக் குறிக்கோள்கள் குறித்து மிகவும் தெளிவு.


குறிக்கோள்களை அடைய வளமைக் கூறுகளைப் பயன்படுத்துவதற்கான திட்ட மும், வரவு-செலவு அளவீடும்.


இத்தகைய திட்டங்களைச் செயற் படுத்துவதற்கும் தேவையான பொறுப்பும், அதிகாரமும்.


பணிநிகழ்வு குறித்துத் தகவலளிக்கப் போதுமான கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கல். இதனால் சரியான நேரத்தில் உரிய திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏது வாயிருக்கும்.


இத்தகைய அளவீடுகள் குறித்து ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் உண்டு. இவை அனைத்துமே விளக்கப்பட்ட குறிக் கோள்களை அடைவது குறித்தும், விளைவுகளைக் சாதிப்பது குறித்தும் தொடர்புடையவையாகும். தேவையானது சாதனையே தவிர நடவடிக்கையல்ல.


நிருவாகத் திறமையினை உள்ளீட்டுக் காரணிகளைக் கொண்டோ பணியமைப்பின் பல்வேறு பகுதிகளின் திறமையைக் கொண்டோ அளவிடுவதில்லை. மனித வளமையின் பங்கீடு, பொருள் வளப் பயன்பாடு, பணியாளர் நிருவாகம், நிதி நிருவாகம் ஆகியவற்றின் தந்திர நிலை எல்லாமே சிறப்பான பங்கு வகிக்கின்றன என்றாலும், நிறுவனம் எந்தக் காரணத்திற்காக இயங்குகிறதோ அந்தக் காரணத்தை முன்னிட்டு அவை இயக்குவிக்கப்பட்டால்தான் திறமையான நிருவாகமாகக் கருதப்படும்.


நீண்ட காலமாகப் பலர் இத்தகைய உள்ளீடுகளை அவை தத்தமக்குள் முடிவுற்றுவிடக் கூடியவை என்று கருதியே அவற்றின் நடவடிக்கைகளை நெறிப்படுத்தி வந்தார்கள்.


குறிக்கோள்கள் தேவைப்பட்ட விளை வுகளை அடையாளப் படுத்துவனாகும். இவற்றை அடைவதற்கான உள்ளீடுகளே வளமைக் கூறுகளாகும்.


அதே சமயத்தில், நிறுவனமானது குறிக்கோள்கள் மாறக் கூடியவை, மாறுபவை என்பதைப் புரிந்துகொண்டு, கால நீட்டிப் பின்றி, அதற்கேற்றவாறு மாறுதல்களை எதிர்கொள்ளக் கூடியதாக, வளைந்து கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.


உற்பத்தி என்பது விளக்கப்பட வேண்டும். முடியுமானால் அளவீடு உடையதாக ஆக்கப்படவேண்டும். புள்ளி விவரம் எப்போதுமே பொருத்தமுடையதாக அமையாவிட்டாலும் அளவீடுகள் இன்றி யமையாதவை. உற்பத்தி நடவடிக்கைகள் அளவிடப்படக் கூடியனவாகவும், உற்பத்தி என்பது அளவிடப்பட இயலாத்தாகவும் சில சமயம் அமையலாம். இது பின்னும் குறிக்கோள்களை அமைப்பதைப் பொறுத்ததாகும். ஒரு குறிக்கோளைத் தெளிவாகவும், சுருக்கமாகவும் விளக் காவிட்டால் உற்பத்தி என்பதும் இத்தகைய தெளிவற்ற நிலையில்தான் கணக்கிடப்படும்.


தனியார் துறை பொருளாதாரத்தில் ஒருவர் பிழைத்திருக்க வேண்டுமென்றால் இலாபம் அதிகம் ஈட்டுவதை நிலையாக எதிர்பார்த்து அவர் செயல்பட வேண்டும் அல்லது அதே அளவு இலாபத்தையாவது தொடர்ந்து பெற முயலவேண்டும். இதற்குக் கீழ்க்கண்ட நான்கு வழிகளில் ஒன்றை அவர் பின் பற்றியாக வேண்டும்:


உற்பத்திச் செலவைக் குறைத்தல், தரத்தையோ விலையையோ பாதிக் கக்கூடாது.
விலைகளை உயர்த்துதல், விற்பனை அளவைக் குறைக்காத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டும்.


பொருள் கலவைத் தரத்தை உயர்த்துதல், அதே அடிப்படை வளங்களைப் பயன் படுத்தி அதிகமாகச் சாதித்தல்.


விற்பனை அளவை உயர்த்துதல், நிலையானச் செலவினங்களை உயர்த் தக்கூடாது.


இவை போன்றே பொதுத் துறையில் நீடுத்திருக்கவும் ஒருவர் அதிகத் திறமையான விளைவுகளைச் சாதிக்க வேண்டும். குறிப்பிட்ட குறிக்கோள்களை நோக்கி முன்னேற வேண்டும். கிடைத்துள்ள வளங்களை உச்ச அளவில் பயன்படுத்த வேண்டும். ஆனால், அதே சமயம் உற்பத்திச் செலவை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விளைவுகளுக்குப் பொறுப் பேற்றல் என்பதும் இங்கு இணையாகப் பொருத்தமுடையமாகும். இரு துறைகளிலுமே வெற்றிக்கு முதல் தேவை, தகுதி வாய்ந்த நிருவாகமாகும்.


ஒரு மேலாளர் தம் பதவிக்கு உரிய உற்பத்தித் தேவைகளை, அதாவது உற்பத்தித் திறனை எந்த அளவுக்கு நிறைவு செய்கிறார் என்பனைக் கடுமையாகச் சீர் தூக்க வேண்டும். ஓரு நிறுவனமானது ஏராளமான வளமையினை அவருக்காகவும் அவருடைய தொழிற்பகுதி அல்லது பகுதிகளுக்காகவும் முதலீடு செய்துள்ளது. ஆகவே, இந்ந முதலீட்டுக் உரிய வருவாய் நிலையானது என்று உறுதிப்படுத்தினால் தான் அவற்றின் நீட்டிப்பு குறித்து நியாயப்படுத்த முடியும்.


அவ்வாறே மேலாளர், பணியர்த்தப் பட்டுள்ள ஒவ்வொரு பணியாளரும் முதலீட்க்கு உரிய வருவாயை அளிக்கிளார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.


குறிகோள்களை அடைவதற்கு ஒவ்வொரு பதவியும் எந்த விதத்தில் உண்மையிலேலே உதவியாய் இருக்கிறது?
ஒரு பதவியை உருவாக் கவில்லையென்றால் அல்லது நீக்கி விட்டால் நிறுவன விளைவாக்கத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
ஒருவரை அதிக விளைவுக்குரியவராக மாற்ற என்ன தேவைப்படும்?
இது நிகழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
எப்படி? எப்போது?


ஒரு நிறுவனத்தின் தொடர்ச்சியான பொருளாதாரச் செயற்பாடு தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒரு மேலாளர் அடுத்தடுத்து நிகழக்கூடய நிகழ்ச்சி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தம்முடைய திறமையால் அவற்றை எல்லாம் அல்லது அவற்றுள் ஒன்றைச் சமாளிக்கக் கூடும் என்பதை உணர்ந்திருக்கவேண்டும்.


இந்த இடத்தில் தனித்தன்மை வாய்ந்த பொருள்களைக் கொண்ட நான்கு சொற்களை விளக்குவது அவசியமாகிறது.


பொறுப்புகள்:
நீங்கள் செய்து முடிக்கவேண்டய பணிகளும், நீங்கள் கணக்குக் கொடுக்க வேண்டியவைகளும்.


அதிகாரம்:
உங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் திறன்.


உங்களுடைய பணி ஆலோசனை வழங்குவதாகவோ பரிந்துரை செய்யக் கூடயதாகவோ இருந்தால் தவிர, உங்கள் பொருப்புகளும் அதிகாரங்களும் எப்போதும் சமன்பாட்டுடன் இருக்கவேண்டும். இல்லை யெனில், மற்றது இல்லாமல் இரண்டுமே விளைவு பயக்கக் கூடியனவாக அமையாது.


கணக்குக் கொடுத்தல் என்பதற்கும் தனி அளவீடு உண்டு. அதன் பொருளாவது மொத்தச் சாதனைக்கும் பொறுப்பு வகிப்பதாகும். ஓரு மேலாளர் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கணக்குக் கொடுக்க வேண்டியவராகிறார்
அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர் அறியும் போது தேவைப்பட்ட தரம்.


அவருடைய விளைவுகள் எவை என்பனவற்றை அவர் அறியும் போது அவை எப்படி அளவிடப்படுகின்று அல்லது சீர் தூக்கப்படுகின்று என்பது.


அவருடைய விளைவுகளைப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அதிகாரமும், வளங்களும் அவரிடம் உள்ள போது நடவடிக்கை எடுக்க வசதிகள். இவற்றுள் ஏதாவது விட்டுப்போயிருந்தால் கணக்குக் கொடுப்பதற்கு அவரைப் பொறுப்பாளியாக்க முடியாது.


மேற்பார்வையாளர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கும் மேலாளர் பொறு ப்பையும் அதிகாரத்தையும், கணக்குக் கொடுக்கும் கடமையையும் வழங்கி அதிகாரப்படுத்தும்போது இதே அளவுகோலைத்தான் பயன்படுத்த வேண்டும்.


உற்பத்தித் திறன் என்பதை உற்பத்தியுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. உற்பத்தித்திறன் என்பது எல்லா வளமைக் கூறுகளின் உள்ளீட்டுக்கும், சாதிக்கப்படும் உற்பத்திக்கும் இடையே உள்ள வீத அளவைக் காட்டுவதாகும். கையிலுள்ள வளமைக் கூறுகளைக் கொண்டு அதிக உற்பத்தியைக் கூட்டுவதோ குறைந்த அளவு வளமைக் கூறுகளைக் கொண்டு அதே அளவு உற்பத்தியைச் சாதிப்பதோ அளவீடாக அமையலாம். இத்தகைய வளமைக் கூறுகள் மனிதச் சக்தி, பணம், பொருள்கள், மற்றப் பலப்பொருள் வசதிகளை உள்ளடக்கியதாகும்.


“உங்களுடைய பணி என்ன என்பதைத் தெளிவாக நீங்கள் அறியாத போது விளைவுகளுக்கு நீங்கள் கணக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோரப்படலாமா?” என்ற கேள்விக்கு இது வழிவகுக்கிறது. இதிலிருந்து ஒவ்வொரு நபருக்கும் ஒரு பணி விளக்கம் இருக்க வேண்டும் என்று வாதிட இடமாகிறது. ஒரு பதிவிக்கான பணி விளக்கம் அதனுடைய குறிக்கோள்களைக் கோடிட்டுக் காட்டி அவற்றை நிறைவேற் றுவதில் ஏற்படும் முன்னேற்றத்தைச் சீர் தூக்கத்தக்கதாய் இருக்க வேண்டும்.


கடமைகளைப் பட்டியலிட்டுவிட்டு, அதனைப் பணி விளக்கம் என்று பெயரிட்டால் அது போதுமானதாகாது. ஏனென்றால் இப்பட்டியல் நடவடி க்கைகளைக் காட்டுவதாக இருக்குமேயன்றி, உற்பத்தியையோ இலக்குகளையோ காட்டு வதாக இருக்காது.


பணியில் ஈடுபட்டவர்கள் இரண்டு வினாக்களுக்கான தகவல்களையும், உறுதிப் பாட்டையும் நாடுகின்றனர்:
“என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கூறுங்கள்”.
“நான் எப்படிச் செயலாற்றுகிறேன் என்பதைக் கூறுங்கள்”.


ஒரு பணி விளக்கம் பணி செய்பவரிடம் கலந்தாலோ சிக்கப்பட்டு முறையாக உருவாக்கப்பட்டால் இந்தத் தேவைகளை நிறைவு செய்ய முடியும். அதிலிருந்து குறிப்பிட்ட பயிற்சிக்கான தேவைகளையும் இனங்காண இயலும்.


நிறுவனத்தின் ஒவ்வொரு பணிக்கும் சாதனையை அளவிடக் கூடிய வகையில் தரத்தேவைகள் உள்ளன. இவற்றை இனங்காண்பது தொடக்கத்தில் கடினமாக இருக்கலாம். சிலர் “நான் செய்யும் பணிகளுக்கு அளவீடு செய்ய இயலாது” என்று கூறலாம். அப்படி இல்லை. இந்த பணியை வேறு எப்படித்தான் நிறை வேற்ற இயலும் அல்லது அப்பணி முடிப்பை எப்படித் தான் சீர் தூக்க இயலும்? சாதனைத் தர நிருணயம் என்பது குறிக்கோள் நிறுவுதலுக்கு அடிப்படைக் கூறாகும். மேலாளருக்குத் தேவையான கட்டுப்பாட்டு முனைகளை அது அளிக்கிறது. பணியாளருடைய முனைப்புக்குத் தேவையானவற்றுக்கும் தொடர்ச்சியாக அவருடைய பணியள வீட்டுக்கும் அது வழி வகுக்கிறது.


பணி விளக்கங்கள் முறையாக மறுபரிசீலனை செய்யப்பட்டுத் தேவைப் பட்டால் நடப்புத் தேதிக்கு ஈடு செய்யப்பட வேண்டும். அவை மதி நுட்பத்துடன் பயன்படுத்தப்பட்டால் உரியவர்களுக்கு இன்றியமையாத மதிப்புடையதாக மட்டும் அல்லாமல் பணியாளர் நிருவாகத்தின் பல்வேறு இனங்களில் மைய அங்கம் வகிப்பதாகவும் அமையும்.


ஒரு முதன்மையான குறிப்பு என்னவென்றால் ஒவ்வொரு தொழிலா ளிக்கும் தெளிவாக விளக்கப்பட்ட பணி அல்லது பணிகள் இருக்கவேண்டும். இது அவருக்கே வழங்கப்பட்டதாகவும், இந்தப் பணித் தொகுப்புக்கு அவரே பொறுப்பாக்கப்படுவார் என்று அவர் உணருமாறும் அமைய வேண்டும்.


இதன் பொருளாவது, இலக்குகள் தெரியக் கூடினவாயும் அடையக் கூடியனவாயும் இருக்கவேண்டும் என்பதாகும் அடைய முடியாத இலக்கை ஒருவர் நிருணயித்தால் நம்பிக்கை இழ்த்தலையும், குழப்பத்தையும் அதற்கு விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும். இயல்பான நோக்கம் இல்லையெனில் ஊக்கம் என்பது தவிர்க்க முடியாதபடி குன்றிவிடும்.


நிருவாகம் என்பது நீங்கள் மாந்தருடன் செய்யும் பணி; அவர்களுக்குச் செய்யும் பணியன்று.


-கார்டன் பி. ராபி. தமிழில் :பி. சுப்பராயலு

மணல், செங்கல், சிமென்ட், கம்பி – இவற்றை பயன்படுத்தாமல், சுற்றுச் சூழலுக்கு உகந்த வீடுகளைக் கட்டித் தருகிறோம்!

0

-ஆர்க்கிடெக்ட் செல்வி. கிருத்திகா

சென்னையில் உள்ள முகமது சதக் கல்லூரியில், பி. ஆர்க்., முடித்த பின் நண்பர் திரு. மணிகுமாருடன் இணைந்து டிடீடி ஸ்டுடியோ (D. T. D. Studio) என்கிற பெயரில் கட்டடங்களுக்கான வரை படங்களை உருவாக்கித் தருவதோடு, கட்டுமான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார், செல்வி வெ. கிருத்திகா.


சிமென்ட், சுட்ட செங்கல், ஜல்லி, இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தாமல் வீடு கட்டும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார், செல்வி. கிருத்திகா.


”சிமென்டை பயன்படுத்தி மேற் கொள்ளப்படும் கட்டுமானத்தை விட இது உறுதியானதாகவும், இரண்டு மடங்கு ஆயுட்காலம் கொண்டதாகவும் இருக்கும்.” என்கிறார், கிருத்திகா. இந்த கட்டுமான முறை பற்றி அவர் மேலும் கூறும்போது,


இத்தகைய வீடுகளில் வெளியில் உள்ள வெப்பத்தைவிட 3 முதல் 4 டிகிரி குறைவாக இருக்கும். இதே போல குளிரையும் குறைத்துக் கொடுக்கும்.


எங்களைப் பொறுத்தவரை இது போன்ற கட்டுமானங்கள் ஒரு புதுமை அல்ல. காலத்திற்கு தேவையானவை. செங்கல், சிமெண்ட், இரும்பு, மற்றும் ஆற்றுமணல், சேர்க்காமல் புதுச்சேரி ஆரோவில்லில் 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் இத்தகைய கட்டுமானத்துக்கு ஒரு முன் மாதிரியாக உள்ளது.


கருத்தரங்குகள், ஆய்வுக் களங்கள், பயிற்சி வகுப்புகளுக்கு தன்னார்வலர்களாக நாங்கள் பயணித்த போது ஆர்கிடெக்ட் திரு. சுதீர் எங்களுக்கு அறிமுகமானார். அவர் சுற்றுச் சூழல் ஆர்வலர். பகுதி நேர பேராசிரியராக (விசிட்டிங் ஃபேக்கல்டி) யாக பல்வேறு ஆர்க்கிடெக்சர் கல்லூரிகளுக்குச் சென்று வருபவர். பியூசிஎல் அமைப்பில் உள்ள அவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வீடுகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரிடமிருந்து நிறைய தகவல்களை தெரிந்து கொண்டோம்.


எங்களுக்கு இப்படிப்பட்ட வீட்டைக் கட்டும் முதல் வாய்ப்பை சென்னை, கூடுவாஞ்சேரியில் உள்ள திரு. ராஜ்குமார் கொடுத்தார். தரைத் தளம் மற்றும் முதல் மாடியுடன் 3500 சதுர அடியில் அவருடைய வீட்டை கட்டி வருகிறோம். வீட்டுப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.


நான்கு படுக்கை அறைகள், இரண்டு சமையல் அறைகள், இரண்டு பொது அறைகள் மற்றும் இரண்டு வரவேற்பு அறைகளை உள்ளடக்கியது, இந்த வீடு. கட்டுமானத்திற்குத் தேவையான மணலை பெரும் பாலும் அந்த கட்டுமானம் நடைபெறும் பகுதியில் இருந்தே எடுத்துக் கொண்டோம். அடித்தளத்துக்கு கருங்கற்களையும், அதோடு சுண்ணாம்பு, மற்றும் களி மண் சாந்தை பயன்படுத்தினோம். சுவருக்கு கம்ப்ரஸ் செய்யப்பட்ட மணல் கற்களைப் (Compressed Blocks) பயன்படுத்தினோம்.


கம்ப்ரஸ் கற்கள் செய்ய திரு. ராஜ்குமார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 8% சிமென்ட கலந்தோம்


இந்த வீட்டைப் பார்த்து விட்டு அதே பகுதியைச் சேர்ந்த திரு. காசிராமன் என்பவரும் இதே மாதிரி வீட்டைக் கட்டித் தரும்படி எங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார், அந்தப் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவர் அறவே சிமென்ட கலக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார். 1700 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் இந்த வீட்டின் பணியும் விரைவில் நிறைவு பெற உள்ளது.


திராய் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு உள்ளூரிலேயே வளரும் மரவகைகளை பயன்படுத்துவது சிறப்பு. நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆயுட்காலம் கொண்ட மரங்களை பயன்படுத்தும்போது கட்டடங்கள் உறுதியாக இருக்கும் பூச்சி தொல்லை வராது.


நாங்கள் மேற்கொள்ளும் சுற்றுச் சூழலுக்கு உகந்த கட்டுமானங்களுக்கு (Eco Friendly Constructions) தேவையான மண், மற்றும் மரப் பொருட்களை முடிந்த வரை அதே பகுதியில் இருந்தே பெற்றுக் கொள்கிறோம்


நாங்கள் ஆய்வுக்காக திருத்தணி அருகில் உள்ள அத்திமாஞ்சேரிக்கு சென்றிருந்தோம். அங்குள்ள மலையடிவாரத்தில் மலைவாழ் பழங்குடி மக்களான இருளர்களின் 35 குடும்பங்கள் உள்ளன. 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழையின் போது நான் அங்குதான் இருந்தேன். வெள்ளத்தில் அவர்களின் வீடுகள் அடியோடு பாதிக்கப்பட்டன. மழை முடிந்ததும் அங்குள்ள மண்ணையும், தாவரங்களையும் பயன்படுத்தி மிக உறுதியான வீடுகளை ஒரு சில நாட்களில் கட்டிக் கொண்டார்கள். அவர்கள் வீடு கட்டும் முறையை வியப்புடன் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு தேர்ந்த பொறியியல் திறமை அவர்கள் வீடு கட்டும் முறையில் இருந்தது.


நாங்கள் சிமென்ட், சுட்ட செங்கல்கள், ஜல்லி பயன்படுத்தாமல் கட்டும் வீடுகள் பற்றி அறிந்த ஆர்கிடெக்ட் நண்பர்கள் பலர் வந்து கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழகத்துக்கு வந்த கட்டுமான துறையில் ஆர்வம் உள்ள வெளிநாட்டு நண்பர்களும் வந்து பார்த்து பாராட்டிச் சென்றனர்.


இது போன்ற இயற்கை நட்பு வீடுகள் தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும் என்பதற்காக பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறோம். திண்டிவனத்தில் நாங்கள் நடத்திய பயிற்சி வகுப்பில் 102 பேர் கலந்து கொண்டு, பயிற்சி பெற்றனர்.” என்றார் செல்வி. வெ கிருத்திகா. (7904010879)

-ம. வி. ராஜதுரை

ஐம்பதாயிரம் ரூபாயில் ஒரு வணிக வாய்ப்பு, காமதேனு மசாலா தருகிறது!

0

இன்றைக்கு பொதுவாக வீடுகளில் கணவர், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இருவரும் வேலைக்குச் சென்றாலும் வீட்டு நிர்வாகம் மற்றும் சமையல் பணிகளை மனைவியே செயல்படுத்த வேண்டி இருக்கிறது. கணவர் தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து கொடுத்து ஒத்துழைப்பாக செயல் பட்டாலும், முந்தைய காலம் போல வீட்டிலேயே மசாலா சாமான்களை அரைத்து பயன்படுத்த நேரம் இருப்பது இல்லை. இதனால் தங்களுக்குத் தேவையான மசாலா பொடிகள் ரேடிமேட் ஆக கிடைப்பதால் அனைத்தையும் கடைகளிலே வாங்கி சமையல் பணிகளை எளிதாக்கிக் கொள்கிறார்கள். இப்போது பணிக்குப் போகும் மகளிர் மட்டும் என்றில்லாமல் அனைத்து பெண்களுமே சமையலுக்குத் தேவையான மசாலா பொடிகளை கடைகளிலே வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு வளர்ந்து விட்டது.


இதனால் மசாலா பொடிகளின் சந்தையும் வேகமாக வளர்ந்து வருகிறது. பல நிறுவனங்களில் மசாலா பொடிகள் கடைகளில் விற்பனை செய்யப்படு கின்றன. காமதேனு மசாலா என்ற பெயரில் தனது மசாலா பொடிகளை சந்தைப் படுத்தி வருகிறார், காமதேனு மசாலா நிர்வாக இயக்குநர், திரு. காலுராம். தனது உற்பத்திப் பொருட்கள் பற்றி அவர் வளர்தொழில் இதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,


”என்னுடைய தனிப்பட்ட அனுபவமே இந்த தொழிலுக்கான விதை போட்டது. கடைகளில் பொதுவாக கிடைக்கும் மசாலா பொடிகளை வாங்கி வீட்டில் சமைத்த உணவுகள் எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. செரிமானக் கோளாறு கள் ஏற்பட்டன. இதற்கான காரணம் பற்றி சிந்தித்த போதுதான், அவற்றில் வேதிப் பொருட்கள் சேர்மானங்களாக சேர்க்கப்பட்டு இருப்பதை உணர்ந்தேன். அவைதான் வயிற்றுக் கோளாறுகளுக் கான காரணம் என்பதையும் உணர்ந் தேன். நாம் ஏன் ரசாயன சேர்மானங்கள் சேர்க்காத தூய்மையான மசாலா பொடிகளை தயாரித்து சந்தைப்படுத்தக் கூடாது என்று தோன்றியது. இதன் விளைவாக 2016 -ல் காமதேனு மசாலா நிறுவனம் தோன்றியது.


உயர் தர விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பெற்று அவற்றை சுகாதாரமான முறை யில் அரைத்து விற்பனை செய்கிறோம்.


எங்கள் நிறுவனம் தொடங்கிய காலத்தில் புகழ் பெற்ற பெரிய மசாலா நிறுவனங்களும் சில சிறிய நிறு வனங்களும் சந்தையில் இருந்தன. தரமற்ற பொருட்களை கொடுத்த நிறு வனங்கள் காலப்போக்கில் காணாமல் போயின.


பெரும் நிறுவனங்கள் லட்சக் கணக்கில் விளம்பரங்களில் செல வழித்து அதன் மூலம் வாடிக் கையாளர்களை இழுத்தன. இச்சூழ்நிலையில் கடைக் காரர்களிடம் விடாமுயற்சி யுடன் தொடர்ந்து சென்று எங்கள் பொருட்களை கொண்டு சேர்த்தோம்.


முதலில் சிறுசிறு சரங்களாக பொருட்களை வாங்கினார்கள், நுகர்வோரிடம் இருந்து ஆதரவான பதிலும், பொருட்களுக்கான தேவையும் பெருகியதால் விற்பனை அதிகரித்தது. நாங்கள் எங்களுடைய பொருட்களை திணிக்கவில்லை. காமதேனு மசாலா பொருட்கள் மீது வாடிக்கையாளர் களுக்கும் கடைக்காரர்களுக்கும் படிப் படியாக நம்பிக்கை வளர்ந்ததே எங்கள் வளர்ச்சிக்குக் காரணம். முதலில் ஒரு மாதத்திற்கு ரூபாய் 50,000 ஆக இருந்த தமிழக விற்பனை தற்போது ரூபாய் 50 லட்சமாக உயர்ந்து இருக்கிறது.


அடுத்தபடியாக தென் மாநிலங்களுக் கும் எங்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறோம். ஆந்திரா போன்ற மாநிலங்களில் காரத் தன்மையை அதிகம் விரும்புவதால் அதற்கேற்ப மசாலா கூட்டுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறோம். மாநிலங்களுக்கு ஏற்ற சுவையில் ரசாயன கலப்பு இல்லாத பொருட் களை தயாரித்து வழங்கும் நடவடிக்கையில் இருக்கிறோம்.


இந்தியா முழுவதும் காமதேனு மசாலா பொருட்களை விற்பனை செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் திட்டம் இருக்கிறது. இது எங்களின் நீண்ட கால திட்டமாகும்.


அரசாங்கத்திடம் இருந்து எந்த ஒரு உதவியையும் எதிர்பார்க் காமல், எங்களு டைய சொந்த நிதியைக் கொண்டே நிறுவனத்தை இயக்கிக் கொண்டு இருக்கி றோம். எங்களுடைய தொழிலுக்கு என்று உள்ள அசோசியேசனில் சேர்வதற்கான முயற்சியிலும் உள்ளோம்.


தமிழ்நாட்டில் இருபது மாவட்டங் களில் பரவலாக வளர்ந்திருக்கிறோம் இவ்வாண்டு இறுதிக்குள் மற்ற மாவட் டங்களிலும் முழுவதுமாக வேரூன்றுவ தற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


காமதேனு மசாலாவில் மூன்று பிரிவுகள் உள்ளன.
மசாலா பொருட்கள் பிரிவு; கடுகு, மிளகு, சீரகம் போன்ற பொருட்களின் பிரிவு; மாவுப் பொருட்கள் பிரிவு என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் டீலர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது, போதிய ஆட்கள், சந்தையில் மற்ற பொருட் களை ஜிஎஸ்டி மூலம் விற்பனை செய்து கொண்டிருக்கும் அனுபவம் மற்றும் வாகன வசதி உள்ளவர்களுக்கு மூன்று பிரிவு பொருட்களையும் விற்பனை செய்யும் வாய்ப்பை வழங்குகிறோம்.


மசாலா போன்ற பொருட்களுக்கு இருசக்கர வாகனமே போதுமானது சந்தையில் ஓரிரு ஆண்டுகள் அனுபவம் தேவை. ஜிஎஸ்டிக்கு விண்ணப்பித்து உள்ளவர்களும், ஜிஎஸ்டி தேவைப் படாத பொருட்களை விற்பனை செய்யும் முகவர்களும் எங்களிடம் பொருட்களை பெற்று முகவர்களாகி ஜிஎஸ்டி பெற்று விற்பனை செய்யலாம்.


காமதேனு மசாலா நிறுவனத்தில் சுமார் 80 வகையான பொருட்களை விற்பனை செய்கிறோம் எனவே குறைந்த பட்சம் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு தேவை.


குறைந்த முதலீட்டில் செய்வதற்கேற்ற வணிக வாய்ப்புகளைத் தேடிக் கொண்டு இருக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொடர்ந்து முன்னேறலாம். நாங்கள் பேருந்து விளம்பரங்கள், எஸ்எம்எஸ் விளம்பரம் மற்றும் பத்திரிக்கை விளம்பரங்கள் மூலம் காமதேனுவின் தரமான பொருட்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கிறோம்.


தொடக்கத்தில் மூன்று பேர்கள் பணிபுரிந்த எங்கள் நிறுவனத்தில் இப்போது 40க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தரமான பொருட்களை விடாமுயற்சி யுடன் விற்பனை செய்து வெற்றிகரமாக வளர்ந்து வருகிறோம்.” என்றார். (9962974440, 9962974449)

-கா. முரளி

என்ன செய்தால், எப்படி செயல்பட்டால் நாம் வளரலாம்?

0

-உலகின் மிகப் பெரிய வெற்றியாளர்கள் தரும் குறிப்புகள்

பொதுவாக உலகின் தொழில்துறையாக இருந்தாலும் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் பரந்த மனம் கொண்டவர் களாகவே இருக்கிறார்கள். தாங்கள் வளரும்போதே மற்றவர்களும் வளர் வேண்டும் என்ற எண்ணம் கொண்டே செயல்படுகிறார்கள். தங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொண்டவற்றை அவர்கள் கமுக்கமாக வைப்பது இல்லை. அவற்றை அனைவருக்கும் தெரிவிக்கவே விரும்புகி றார்கள். அப்படி சில பெரிய தொழில் அதிபர்கள் தெரிவித்த பயன்படக் கூடிய கருத்துகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.


ஜாக் மா (Jack Ma)


இவர் சீனாவின் மிகப் பெரிய தொழில் அதிபர். அலிபாபா இணையம் வாயிலான விற்பனைப் பேரங்காடியை நிறுவியவர் மற்றும் அதன் தலைவர். சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும், புறக்கணிப்புகளையும் சந்தித்தவர். அவற்றை எல்லாம் தன் திறமையாலும், தன்னம்பிக்கையாலும், செயல்பாடுகளாலும் வெற்றி கண்டவர். அவர் கூறும் ஆலோசனைகள்: >மற்றவர்களின் புறக்கணிப்பை ஆக்க பூர்வமாக பயன்படுத்துங்கள்.

> உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள் (Keep Your Dream Alive).

> ஒவ்வொன்றைப் பற்றியும் குறை கூறிக் கொண்டு இருக்காதீர்கள். அவற்றில் உள்ள வாய்ப்புகளை பாருங்கள்.

> தொலைநோக்குடன் சிந்திக்கப்பட்ட உங்களின் முயற்சி வெற்றி அடையாது, என்று யார் கூறினாலும் ஏற்றுக் கொள்ளா தீர்கள்.

> உங்களை வளர்த்துக் கொள்ள கற்றுக் கொண்டே இருங்கள்.

> செயல்பாடுகளில் ஒரு முனைப் படுத்துல் இருக்கட்டும். கவனத்தை ஒரு முகமாக குவித்து ஆர்வமாக செயல்படுவதே சிறந்த வெற்றிக்கு வழி வகுக்கும். அலைபாய்ந்து கொண்டே இருப்பது வெற்றிக்கு வழி வகுக்காது.

> உங்கள் தொழில் வளர்ச்சிக் கனவின் மீது தீராத பற்று கொண்டிருங்கள்.

> முதலில் வாடிக்கையாளர்கள்; இரண் டாவது ஊழியர்கள்; மூன்றாவதுதான் முதலீட்டாளர்கள் என்று வரிசைப்படுத்தி செயல்படுங்கள்.

> நிறுவனத்தின் மதிப்பை உருவாக்குதல், புதுமைமை புகுத்துதல் போன்றவற்றில் தொடர்ந்து ஆர்வம் செலுத்துங்கள். > உங்கள் நிறுவனத்துக்கான தனிப் பண்பாட்டை உருவாக்குவதிலும் உங்கள் முயற்சி இருக்கட்டும்.

> உங்கள் நிறுவனத்திற்கான பெயரை தேர்ந்து எடுப்பதில் கவனமாக இருங்கள். அது ஒரு அழகான, எவரும் நினைவில் வைத்திருக்கும் வகையிலான நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.


லாரி பேஜ் (Larry Page)


கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர். அதன் தொடக்க நிறுவனமான ஆல்ஃபாபெட் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர். அவர் வெற்றிக்கான வழிகளாக எவற்றைக் கூறுகிறார் என்று பார்க்கலாம்.

> தோல்விகளுக்கு பயப்படாதீர்கள்.

> நீங்கள் செயல்படுத்தும் திட்டங்களை ஒழுங்கு படுத்தி அமையுங்கள். உங்கள் நிறுவனத்தில் எண்ணற்ற திட்டங்கள் இருக்கலாம் அவை எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி கட்டமையுங்கள்.

> உங்கள் கனவு இலக்குகளை பின்பற் றுங்கள் (Follow Your Dreams).

> சிறந்த ஐடியாக்களை வைத்திருங்கள். பணம் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உங்களுக்கு போதுமான தெளிவு இல்லாத துறையில் தொழிலை தொடங்காதீர்கள்.

> உங்கள் திட்டத்தை தொலை நோக் குடன் நீண்ட காலத்திற்காக தீட்டுங்கள்.

> சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

> ஒரே நிலையில் தங்கி விடாதீர்கள். ”சரியான ஆட்களை” தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தி பொறுப்புகளைக் கொடுத்து நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள்.

> தொழில் துறையில் ஏற்படும் மாற்றங் களை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

> பெரிய சிக்கல்களைத் தீர்க்க உணர்ச்சி வசப்படாமல் தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஒருவருக்கு ஏற்படும் சிக்கலுக்கான தீர்வுகள்தான் புதிய தொழில்களுக்கு வழி வகுக்கின்றன. தகவல்கள் கிடைப்பதில் நமக்கு ஏற்பட்ட சிக்கலின் தீர்வுதான் கூகுள்.


முகேஷ் அம்பானி (தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்)

> உங்கள் பார்வையை விரிவாக்குங்கள்.

> எதற்கெடுத்தாலும் அஞ்சிக்கொண்டே இருக்காதீர்கள். உங்களை வலுவானவராக நினைத்து செயல்படுங்கள். இடையில் வரும் சிக்கல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்ளுங்கள்.

> இலக்குகள் குறித்து சிந்தியுங்கள். இவை தொடர்பானவற்றைத்தான் ‘கனவு காணுங்கள்’ என்று கூறுகிறார்கள்.

> மன உறுதியுடைய குழுக்களை, வணிக வலைப்பின்னல்களை உருவாக்குங்கள்.

> புதிய முயற்சிகள் என்றில் நிச்சயம் ஒருபுறம் இடர் இருக்கவே செய்யும். இடர்களைத் தாண்டி சிந்தித்து இத்தகைய ரிஸ்க் எடுப்பதில் இருந்து மிகச் சிறந்த பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.

> வெற்றியின் மீது எப்போதும் விருப்பம் கொண்டிருங்கள்.

> உறுதியான உங்கள் உள்ளுணர்வுகளை நம்புங்கள்.

> நீங்கள் செய்த செயல்கள்தான் உங்க ளைப் பற்றி பேசும்.

> எல்லோரையும் நம்புங்கள், ஆனால் யாரையும் சார்ந்து இருக்காதீர்கள்.


ஜெஃப் பெசாஸ் (Jeff Bezos) அமேசான்.காம் நிறுவனர்

> நீங்கள் எடுத்த முடிவுகள் ஒரு வேளை தோல்வியைத் தந்தாலும் அதற்காக வருத்தப் படாதீர்கள். அடுத்த என்ன செய்வது என்பது குறித்து சிந்தியுங்கள்.

> நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செய்யுங்கள் (Take a Risk).

> உங்களுக்கு பேரார்வம் (Passion) இருக் கும் துறைகளிலேயே செயல்படுங்கள்.

> வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்துங்கள்.

> நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்:து எடுங்கள்.

> வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுப வத்தை உருவாக்குங்குகள். அவர்களுக்கு அதிக மதிப்பு கொடுங்கள்.

> மார்க்கெட்டிங்குக்கு செலவிடுவதைப் போலவே, வாடிக்கையாளர்களின் சேவை களுக்கும் அதிகம் செலவிடுங்கள்.

> உங்கள் நிறுவனத்துக்கென்று தனி பண் பாட்டை உருவாக்குங்கள்.

> சில நேரங்களில் மதிப்பு மிக்க பொருட்களை குறைவான விலையில் விற்பனை செய்யுங்கள். அது அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை பயன்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தும்.

> உங்கள் அறிவையும், உள்ளுணர்வையும் சரியான விகிதத்தில் பயன்படுத்துங்கள்.


ராபர்ட் கியோசாகி Robert Kiyosaki


இவர் அமெரிக்க தொழிலதிபர். பங்கு முதலீட்டாளர். வாழ்வியல் எழுத்தாளர். கல்வியாளர். தன்னம்பிக்கை பயிற்சியாளர்.

> உங்களைச் சுற்றி உங்களைப் போன்ற போல் எண்ணம் (Like minded) கொண்ட ஆதரவான மனநிலை கொண்ட மனிதர் களை வைத்திருங்கள்.

> கடினமான தருணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை (Opportunities) உருவாக்கும்.

> நீங்கள் சேமிப்பதை விட கூடுதலாக முதலீடு செய்யுங்கள். சேமிப்பில் இருந்து வரும் வட்டி போன்ற லாபத்தை விட முதலீடே அதிக லாபத்தை அடைய வழி வகுக்கும்.

> எப்போதும் ஒரு பொருளை வாங்கும் முன், இந்த பொருள் இப்போது தேவைதானா? என்று கேளுங்கள். அந்த கேள்விக்கான பதில், கண்டிப்பாக தேவைதான் என்று இருந்தால் மட்டும் வாங்குங்கள்.

> உங்கள் வாழ்க்கையை மிக எளிமையாக்குங்கள்.


எலன் மஸ்க் Elon Musk


இவர் டெஸ்லா மோட்டார்சின் இணை நிறுவனர். ஸபேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி. சோலார் சிட்டியின் இணைநிறுவனர் மற்றும் தலைவர். ஓப்பன் ஏஐ-யின் துணைத் தலைவர். பே பால் ஆஃப் கான்ஃபினிட்டி உடன் இணைக்கப்பட்ட எக்ஸ் டாட் காம் நிறுவனர்.

> நிறுவனத்திற்கு சிறந்த, திறமையான மனிதர்களை தேர்ந்தெடுங்கள்.

நீங்கள் செய்வதை விரும்பிச் செய்யுங்கள்.

>தோல்வியைக் கூட உங்களுக்கு விருப்பமானதாக நினைக்கத் தொடங்குங்கள். தோல்வி அடைவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் புதுமையாக எதையும் செய்ய இயலாது.

>நீங்கள் இளைஞராக இருக்கும் காலத்திலேயே துணிச்சலுடன் செயல்படும் மனப்பக்குவத்தைப் பெறுங்கள்.

நீங்கள் செய்வதை, ஏதேனும் சிக்கல் வரும்போது இடையில் விட்டு விடாதீர்கள். தொடர்ந்து வெற்றி பெற உழையுங்கள்.

>வளர்ந்துவரும் துறையில் வாய்ப்புகளை தேடுங்கள்.

>நீங்கள்தான் செய்தாக வேண்டும் என்ற உங்கள் முதன்மையான பணிகள் மீது கவனம் செலுத்துங்கள்.

>உங்களுக்கு அப்பால் உள்ள சிக்கல்களையும் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

>விழித்திருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் நீங்கள் பணி புரிவதற்கான நேரம்தான் என்பதை எப்போதும் மறக்காதீர்கள்.


ஆலன் சுகர் Alan Sugar


மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவன தலைவர். தொழில் மற்றும் அரசியல் ஆலோசகர்.

>பின்னடைவுகளுக்கும் தயாராக இருங்கள். உங்கள் திட்டத்தில் நம்பிக்கை, நோக்கத்தில் உறுதி, பேரார்வம் கொண்டு இயங்குங்கள்.

>உங்களுக்கு அனுபவம் இருக்கும் தொழிலைத் தொடங்குங்கள். இந்த அனுபவம் ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்ததின் மூலம் பெற்றதாக இருக்கலாம் அல்லது உங்களது பொழுது போக்கின் மூலம் கிடைத்த அனுபவமாக இருக்கலாம். சிலர் தெரியாத தொழிலையும் தொடங்கி வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பதையும் மறக்க வேண்டாம். இவர்கள் அந்த தொழிலைத் தொடங்கிய பின் தங்கள் செலவில் அனுபவம் பெற்றவர் களாக இருப்பார்கள்.

>உங்கள் தொழில் சார்ந்த வல்லுநர் களிடம் ஆலோசனை கேளுங்கள். நண்பர்கள் என்பதற்காகவோ, உறவினர்கள் என்பதற்காகவோ அவர்களுக்கு சற்றும் தொடர்பு இல்லாத தொழில் சார்ந்தவை குறித்து ஆலோசனை கேட்காதீர்கள். நண்பர்களும், உறவினர்களும் உங்களுக்கு என்ன சொன்னால் பிடிக்குமோ அதை மட்டுமே சொல்வார்கள். உண்மையான கருத்துகளை சொல்லத் தயங்குவார்கள்.

>ஒவ்வொரு அடியாக எடுத்து வையுங்கள். நீங்கள் நடக்கப் பழகும் முன் ஓட முயற்சிக்க வேண்டாம். முதலில் சிறியதாக தொடங்குகள். ஒன்றில் வெற்றி பெற்ற பின் அடுத்த முயற்சியைத் தொடங்குங்கள்.

>உங்கள் தொழிலுக்கான சந்தையை முழுவதும் ஆராய்ந்து பாருங்கள். சந்தையில் உங்கள் தொழிலை ஒத்த நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் என்றால், வாடிக்கையாளர்கள் உங்களிடம் ஏன் வாங்க வேண்டும்? அவர்களை எப்படி வரவழைக்க வேண்டும் என்று ஆராயுங்கள்.

>முறையான தொழில் திட்டத்தை உருவாக்குங்கள். இந்த தொழில் திட்டம் நீங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை காட்டும் மற்றும் சந்தையை புரிந்து கொள்வதற்கு உதவும். மற்றவர்கள் செய்ய வேண்டிய செயல்களை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்து நிர்வகிக்க இந்த திட்டமிடல் உதவும்.

>உங்களுக்கென்று தனித்துவமான செயல்முறையைக் கண்டு பிடியுங்கள். அது புதியதாக இருக்க வேண்டும் என்பது இல்லை. பல செயல்முறைகள் முன்பே செய்தவைதான் என்றாலும் செய்யும் விதத்தை சிறந்ததாக மாற்றுங்கள்.

>வங்கிகள் உங்களுக்கு பணம் கொடுப் பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். தொழிலில் முதலில் உங்களிடம் இருக்கும் பணத்தை போடுங்கள், அது கொஞ்சமாக இருந்தாலும் பரவாக இல்லை. எந்த தொழிலையும் குறைந்த முதலீட்டிலும் தொடங்கி பின்னர் பெரிதாக வளர முடியும். தொழிலில் நம்பகத் தன்மையுடன் இருப்பதை வங்கிகளுக்கு உணர்த்தினால் அவர்கள் தயக்கம் நீங்கி கடன் கொடுக்க முன்வருவார்கள்.

>இயல்பாக இருங்கள். உங்களுக்கு தோன்றிய ஐடியா சிறந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த ஐடியா யாருக்காவது தேவைப்படுமா, செலவு குறைந்ததா, நடைமுறையில் செயல்படுத்த முடியுமா? என்பதை விருப்பு – வெறுப்பு இல்லாமல் சிந்தியுங்கள்.


மார்க் கியூபன்
Mark Cuban


அமெரிக்கத் தொழலதிபர், பங்கு முதலீட்டாளர். எச்டி டிவி கேபிள் நெட்ஒர்க் சேர்மன். டல்லாஸ் மாவெரிக்ஸ், லேண்ட்மார்க் தியேட்டர்கள், மேக்னோலியா பிக்சர்ஸ் உரிமையாளர்.

> உங்கள் திறமைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த திறமைகளை இன்னும் உயர்த்திக் கொள்வதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

> நீங்கள் தொடங்க இருக்கும் தொழில் மீது உங்களுக்கு பேரார்வம் இல்லை என்றாலும் இல்லையென்றாலும், அது உங்கள் மனதை ஆட்டிப்படைக்கவில்லை என்றாலும் அந்த தொழிலை தொடங்காதீர்கள். நாம் செய்ய இருக்கும் ஒன்றின் மீது பேரார்வம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

> உங்கள் தொழில் எதிர்மறையாக செல்லும்போது, அதில் இருந்து மீட்டு எடுக்க இந்த பேரார்வம் மட்டுமே கை கொடுக்கும்.

> உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புபவர்களையே வேலைக்கு தேர்ந்து எடுங்கள். ஆட்களைத் தேர்ந்து எடுக்கும்போது இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக முதன்மையான பணிகளில் ஆர்வம் இல்லாதவர்களைப் போட்டால் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்கள் செயல்பாடுகள் அமையாது.

> உங்கள் நிறுவனம் எப்படி வருமானம் ஈட்டப் போகிறது, எப்படி விற்பனை செய்யப் போகிறீர்கள் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். இது தொடர்பாக உங்களுக்கு வழி காட்ட ஆடிட்டர்கள் உதவக் கூடும்.

> நிறுவனத்தில் வேலை பார்ப்பது பணியாளர்களுக்கு பிடிக்குமானால், நேரத்தை எப்படி பயன் உள்ளதாய் செலவழிப்பது என்பதை அவர்களே கண்டு பிடித்து விடுவார்கள். விருப்பம் இல்லாத ஊழியர்கள் அலுவலக நேரத்தை வீணாக்கி விடுவார்கள்.

> அலுவலகத்தை தடுப்புகள் இல்லாமல் திறந்த அலுவலகமாக அமையுங்கள். எங்கிருந்து பார்த்தாலும் முழு அலுவல கமும், பணி புரிவோரும் அனைவரின் கண்களிலும் படுமாறு இருக்கட்டும். அப்போதுதான் ஒவ்வொரு ஊழியர்க ளுக்கும் என்ன நடக்கிறது என்பது தெரிய வரும். இது அவர்களின் ஆற்றலை அதிகரிக்கும்.

> உங்களுக்குத் தெரிந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துங்கள். அதைப் போலவே உங்கள் ஊழியர்களுக்கு தெரிந்த தொழில்நுட்பங்கள் உங்கள் நிறுவனத்துக்கு பயன்படுமாறு அமையும் என்றால் அவற்றையும் பயன்படுத்த அனுமதியுங்கள்.

> நிறுவன கட்டமைப்புகளை உருவாக் குங்கள். யார், யாரிடம் தங்கள் பணிகள் தொடர்பான அறிக்கைகளை வழங்க வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்து அறிவியுங்கள்.

> தேவை அற்ற ஆடம்பரமான பொருட் களை வாங்காதீர்கள்.

> உங்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதற்கு பொது தொடர்பு நிறுவனத்தை (பிபீஓ) பயன்படுத்தாதீர்கள். உங்கள் நிறுவனத்தின் மூலம் நீங்களே அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். அது அவர்களுடனான நெருக்கத்தை அதிக ரிக்கும் என்பதோடு உடனுக்குடன் அவர்க ளுக்கான சேவைகளை செய்து கொடுக்கவும் உதவும்.


கெம்மன்ஸ் வில்சன்
Kemmons Wilson


இவர் ஹாலிடே இன் ஓட்டல்களின் நிறுவனர்.

>தினமும் அரை நாள் கடுமையாக உழையுங்கள். ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணி நேரம் இருக்கிறது. இதில் பன்னிரண்டு மணி நேரம் .. அதாவது அரை நாள், நாம் முன்னேறுவதற்காக முழு மூச்சுடன் பயன்படுத்தினால் வெற்றி வசப்படும்.

>உழைப்புதான் எல்லா வாய்ப்புகளை யும் திறக்கும் சாவி.

> உங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பது மகிழ்ச்சியை உருவாக்காது. உங்களிடம் இருப்பதை எப்படி பயன் படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

>ஒரு மனிதனின் வெற்றி அல்லது தோல்விக்கு அவரின் அறிவுத் திறனை விட மனப்பாங்கே (ஆட்டிட்யூட்) முதன்மையான பங்காற்றுகிறது.

> வெற்றியடைய துணிச்சலாய் செயல் களைச் செய்ய வேண்டும்.

> அதிகமாக உழைத்தால் அதிக பயன் அடையலாம். உழைக்கும் அளவை விட அதிகமாக பொருளீட்ட இயலாது.

> எதையும் நாளை என்று தள்ளிப் போடக்கூடாது.

> கவலைப்படாதீர்கள். கடந்த காலத்தை உங்களால் மாற்ற முடியாது. எதிர்காலத்தை பற்றி கவலைப்பட்டால் அது உங்கள் நிகழ்கால வளர்ச்சிக்கு எதிராக அமைந்து விடும். கவலையால் எந்த நன்மையையும் விளையாது.

> வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத் தான் ஏற வேண்டும்.

>வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ள பயப் படாதீர்கள்.


ஆர். ஜி. சந்திரமோகன்


இவர் இந்தியாவின் மிகப் பெரிய பால் பொருட்கள் நிறுவனமான ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர். அருண் ஐஸ் கிரீம், ஐபாகோ ஐஸ் கிரீம், ஆரோக்யா பால், கோமாதா பால் ஆகியவை இவர்களின் முதன்மையான தயாரிப்புகள்.

> பிசினசில் இருப்பவர்கள் எடுத்த எடுப்பிலேயே பாதுகாப்பு என்ற பெயரில் வீடு, மனை என்று பணத்தை முடக்கக் கூடாது. அந்த பணத்தை வைத்து தொழில் செய்தால் நாலு பேருக்கு வேலையும் கொடுக்கலாம் நாமும் முன்னேறலாம்.

>நல்ல தொழில் ஆலோசகர்களை நம் முடைய வட்டத்தில் வைத்திருக்க வேண்டும்.

>குறிப்பிட்ட தொழில் தொடர்பான புதிய செய்திகளை, தொழில் நுட்பங்களை அறிந்து வைத்து இருக்க வேண்டும்.

> ஒரு தொழிலிலும் ஒரு புதிய நுட்பத்தைப் பயன்படுத்துவது, தரத்தை உயர்த்தும் என்றால் அதனை பயன்படுத்த தயங்கக் கூடாது. அதற்கேற்ற புதிய எந்திரங்களை வாங்கி நிறுவி விட வேண்டும்.

>காலத்திற்கேற்ற உத்திகளை வடிவ மைத்து பயன்படுத்த வேண்டும்.


சாம் வால்டன்
Sam Walton


அமெரிக்க தொழிலதிபர். வால்மார்ட் நிறுவனர்.

> தீர்க்க முடியாத சிக்கல் என்று எதையும் நினைக்க வேண்டியது இல்லை. மேல்பார்வைக்குத் தீவிரமாகத் தோன்றுகிற சாவால்களைக் கூட துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். வென்றால் மகிழ்ச்சி; தோல்வி அடைந்தால் அனுபவம். இரண்டுமே விலை மதிக்க முடியாத சொத்துக்கள்!

> வெற்றி என்பது எல்லோருக்கும் சொந்தமானது. சரியான வாய்ப்பும், ஊக்கமும் தரப்பட்டால், சாதாரண மனிதர்களால் கூட, பெரிய வெற்றிகளை பெறமுடியும்.

> ஒரு நல்ல சிந்தனையை மீண்டும் மீண்டும் உரசிப் பார்த்து, அது சரியாக வரும் என்ற முடிவுக்கு வந்து விட்டால் உடனே செயல்படுத்துங்கள்.

> நாம் நம்முடைய பழைய வெற்றிகளில் மனநிறைவு அடைந்து விட்டால் நாம் அங்கேயே தேங்கி நின்று விடுவோம். அதை மறந்து விட்டு, அடுத்து என்ன என்கிற ஆர்வத்துடன் வாழ்க்கையை அணுகுவதே நம்மை மேலும் உற்சாகம் உள்ளவர் களாகவும், புதிய வெற்றிகளை அடைபவர் களாகவும் செய்யும்.

> தனிப்பட்ட முறையிலும், தொழிலிலும் சிக்கனம் என்பது முதன்மையானது. நாம் சேமிக்கிற ஒவ்வொரு துளியும், தவிர்க்கிற ஒவ்வொரு தேவையற்ற செலவும் நமது லாபத்தை அதிகரிக்கும்.

> பணமும், வெற்றியும் நமக்கு கிடைக் கும் போது, அதோடு சேர்ந்து வருவது மற்ற சிலரின் பொறாமை. நம்மைப்போல் வெற்றியடைய முடியாதவர்கள், அந்த இயலாமையில் நம்மைப் பற்றி பல விதமாக பேசுவார்கள். நமது முன்னேற்றத்திற்கு தடைபோட முயல்வார்கள். அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், நமது வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும்.

> வணிகத் துறையில் பெரியதாக வெற்றி பெற வேண்டுமென்றால், நாம் நம்முடைய லாபத்துக்காக மட்டும் உழைக்கக் கூடாது. நமது வாடிக்கையாளர்களுடைய லாபத்துக் காகவும் உழைக்க வேண்டும்.


டோனால்ட் டிரம்ப்
(Donald Trump)


அமெரிக்க தொழிலதிபர். எழுத்தாளர். தலைவர், டிரம்ப் ஆர்கனைசேஜன். அமெரிக்க குடியரசுத் தலைவர்.

>நீங்கள் பணத்திற்காக மட்டும் என்று உங்கள் வேலையை செய்ய வேண்டாம்.

>தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். ஒரு போதும் உங்கள் தவறுகள் உங்களை கீழே செல்ல விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

> குறிக்கோளை உயர்வாக வையுங்கள்.

>ஒரு போதும் நீங்கள் செய்யும் செயலில் இருந்து பின்வாங்காதீர்கள்.

> உங்கள் துறை சார்ந்த கூடுதலான செய்திகளை அறிந்து வைத்து இருங்கள்.

> உங்களுக்கு விருப்பமான செயலில் சிக்கல்கள் இருந்தாலும் அதிலேயே கவனத்தை செலுத்துங்கள்.

> திறமையான ஊழியர்கள், குழுக்களை கொண்டிருங்கள்.


தொகுப்பு: சந்தோஷ்

கிரய பத்திரம் எழுதி வாங்கும் போது கவனம் தேவை

0

கிரைய பத்திரம் எழுதும் போது வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம், தனித் தனியாக எழுத வேண்டும். இரண்டும் ஒரே மாவட்ட பெயராக இருந்தாலும் , வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம், தனித் தனியாக எழுத வேண்டும்.


கிராம எண்ணும் இருக்கும், சர்வே எண்ணும் இருக்கும், இரண்டைப் பற்றிய தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.


பட்டா எண், பட்டா படி உட்பிரிவு ஆகி இருந்தால் புதிய சர்வே எண் குறிப்பிடப்பட வேண்டும்.


சொத்து கூட்டுப் பட்டாவில் இருந்தால், சர்வே எண்ணின் ஒட்டு மொத்த பரப்பளவை குறிப்பிட்டு அதில், வடக்கு ஓரம் இருந்து தொடங்கினால், வட பாகம் என்றும், தெற்கு, கிழக்கு, மேற்கில் இருந்து தொடங்கினால் தென்பாகம், கீழ்ப்பாகம், மேல்பாகம், என்று குறிப்பிட வேண்டும்.


அப்படி வடபாகம், தென்பாகம், கீழ்ப்பாகம், மேல்பாகம் என்று பிரித்தும் அதில் உள்ளே இடம் வாங்க போகிறீர்கள் என்றால் (எ.கா) வடபாகத்தில் கீழ மேலாக , தென்வடலாக, இத்தனை அடிநீளம், அகலம் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.


பெரும்பாலும் கூட்டு பட்டாவில் இருந்தால் கட்டாயம் சொத்தின் நீள அளவுகளை அடியாலும், மீட்டரிலும், தெளிவாக குறிப்பிடுவது நல்லது. பழைய பத்திரங்களில் நீள அகலம் குறிப்பிட்டு இருந்தால் ஜதியடி ,முழம், கெஜம் என்று சொல்லி இருப்பார்கள். அதனை தற்போதைய நீள அகலத்திற்கு அடி கணக்கிட்டு சரியாக மாற்ற வேண்டும். அதே போல் பரப்பளவும் குழி, மா, டிசிமல், வேலியில் குறிப்பிட்டு இருந்தால் தற்போதைய சதுரஅடி, சதுர மீட்டருக்கு மாற்ற வேண்டும்.


நான்கு எல்லைகள் விவரம் குறிப்பிடும் போது முன் பத்திரத்தில் முனுசாமி மனைக்கு தெற்கில் என்று இருக்கும். அப்படி என்றால் முனுசாமி மனையில் இருந்து நின்று பார்த்தால் நாம் வாங்க போகும் மனை தெற்கில் இருக்கிறது என்று பொருள்., இதே போல் வடக்கில், மேற்கில், கிழக்கில் என்று குறிப்பிட்டு இருப்பார்கள்.


இதனையே தற்கால வழக்கில் எளிமையாக புரியும்படி மாற்ற, கிரயம் வாங்கும் மனைக்கு வடக்கில் முனுசாமி மனை என்று குறிப்பிட வேண்டும். முறையே தெற்கில் , கிழக்கில், மேற்கில் என்று குறிப்பிட வேண்டும். இதில் நிறைய பேர் கவன குறைவாக எழுதி விடுவார்கள். இதனால் சிக்கல்கள் வருகின்றன. பிழைதிருத்தல் பத்திரம் போட வேண்டியதாகி விடுகிறது.


கட்டிடம் இருந்தால், கட்டிடம் காட்ட வேண்டும். கிணறு இருந்தால், பொது வழி இருந்தால், பொதுச் சுவர் இருந்தால், பொது தண்ணீர் உரிமை எல்லாம் தெளிவாக குறிப்பிட வேண்டும். மின் இணைப்பை EB சர்வீஸ் என குறிப்பிட வேண்டும். இவற்றை எல்லாம் கூர்மையாக கவனிக்காது பிழையாக பத்திரம் எழுதியவர்கள் அடிக்கடி பிழை திருத்தல் பத்திரம் போட்டு சார்பதிவகத்திற்கு அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

-சா. மு. பரஞ்சோதிபாண்டியன்

ஏல சொத்துகளில் உள்ள, வெளியே தெரியாத செய்திகள்

0

பொதுஏல அறிவிப்பு என்று நாள்தோறும் செய்தித் தாள்களில் விளம்பரங்கள் வருவதை பார்த்து இருப்பீர்கள். பெரும்பாலும் வங்கிக் கடன் வாங்கி வீடுகள் வாங்கி விட்டு பிறகு வங்கிக் கடனை கட்ட முடியாதவர்களின் வீடுகள் இப்படி ஏலத்திற்கு வரும்.


இப்படி ஏலத்திற்கு வரும் சொத்துகளை வாங்குவதற்கு என்றே சில வாடிக்கை யாளர்கள் இருக்கிறார்கள்.


பெரும்பாலும் வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் முதலீட் டாளர்கள் மேற்படி ஏல சொத்தை வாங்குவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.


அவர்களின் நம்பிக்கை என்னவென்றால், சந்தை மதிப்பை கணக்கிட்டு ஏலத் தொகையை நிர்ணயிக்கிறார்கள். வங்கிகளும் நல்ல சொத்து மதிப்பீட்டாளர்களை வைத்து ஏல சொத்துக்களை மதிப்பிடு வதால் நம்பிக்கைக்கு உரியதாக, வில்லங்கம் இல்லாமல் இருக்கும் என்று கருதுகிறார்கள்.


ஆனால் உண்மையில் களத்தில் சந்தை மதிப்பு உயர்வு என்பது வளர்ச்சியாலும் இருக்கிறது. வீக்கதாலும் இருக்கிறது. வளர்ச்சி இருக்கின்ற பகுதிகளில் உள்ள சொத்துக்களை ஏலம் எடுத்தால் நல்லது. ஆனால் வீக்கத்தால் விலை அதிகமாக காணப்படும் சொத்துக்களை ஏலம் எடுத்தால் அது பாதிப்பையே கொண்டு வரும்.


ரியல் எஸ்டேட்டில் போலி விலை உயர்வு நீர்க் குமிழிகள் போலத்தான். கொஞ்ச நாளில் விலை மதிப்பு குறைந்து விடும்.
இவ்வாறு நீர்குமிழிகள் போன்ற விலை உயர்வு அதிக அளவு ஆனதற்கு வங்கிகளும் ஒரு காரணம். அவர்களின் வீட்டுக் கடன் திட்டங்களை லாபகரமாக சந்தைப் படுத்துவதற்காக பதிவுத் துறையின் அரசு வழிகாட்டி மதிப்பை விட அதி கமாக வழிகாட்டி மதிப்பினை கூட்டி கிரைய பத்திரம் போட செய்ததால் அதனை பார்த்து அரசும் அந்த பகுதிகளில் வழிகாட்டி மதிப்புகளை மீண்டும் உயர்த்தி விடுகின்றனர்.


இப்படியே விலை செயற்கையாக உயர்த்தப்பட்டது. இதனைத்தான் வீக்கம் என்கிறோம். அதிக விலை நிர்ணயித்து விட்டு தள்ளுபடி அறிவிப்பது போலத்தான் ஏலத்தில் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.


அடுத்து, கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு செய்தி இருக்கிறது. வங்கிக் கடனில் இருக்கின்ற சொத்துக்கள் எல்லாம் 100% சரியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வங்கி அலுவலர்களும் மனிதர்கள்தான். இவர்களுக்கு உதவியாக செயல்படும் சட்ட வல்லுநர்களும் மனிதர்கள்தான். அவர்களும் அவசர கதியில் வேலை செய்வார்கள்; தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.


பெரும்பாலும் வங்கிகளில் கிரைய ஆவணங்கள், தாய்ப் பத்திரங்கள் எல்லாம் ஆய்வு செய்து சட்டத் தடைகள், சட்ட குழப்பங்கள் இருந்தால் கண்டு பிடித்து விடுவார்கள். வருவாய்த்துறை சிக்கல்கள், சர்வே சிக்கல்களில் வங்கி அலுவலர்கள் சற்று தடுமாறுவார்கள்.


ஒரே நபர் இரண்டு சொத்துகளை அடமானமாக வைத்து வங்கியில் கடன் வாங்கினார் என்றால், அதில் ஒரு ஒரு சொத்து கொஞ்சம் சொத்தையாகக் கூட இருக்கும். நிலம் தொடர்பான ஆவணங்களை அலுவலகத்தில் உட்கார்ந்து மட்டும் படித்து முடிவு எடுத்தால் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சொத்துகளை நேரில் சென்று பார்வையிட்டு முடிவு எடுக்க வேண்டும்.


டிடீசிபீ (DTCP) அங்கீகாரம் பெற்ற மனைப் பிரிவில் உயர் மின் அழுத்த லைன் போகும் மனைகளை வாங்கிவிடுவார். உயர் மின் அழுத்த லைன் செல்லும் டவர் இருப்பதால் குறைந்த விலைக்கு அடித்து பேசி வாங்கி பத்திரம் போடும் போது அதிக வழிகாட்டி மதிப்புக்கு கிரயம் போட்டு அந்த பத்திரத்தை வேறு ஒரு சொத்துடன் சேர்த்து அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்கி விடுவார்கள். சில நேரங்களில் ஆவணங்கள் மிகச் சரியாக இருக்கும். ஆனால் நிலத்தை அவர்கள் கையகப்படுத்தி (Possession) இருக்க மாட்டார்கள். அவர்களும் அடமான கடன் போட்டு விடுவார்கள்


சட்ட சிக்கல்கள் குத்தகை சிக்கல்கள் என்று நீதிமன்றத்தில் இருக்கும் சொத்துகளைக் கூட ஆவணங்களில் கொஞ்சம் களவாணித்தனம் செய்து அடமானம் போட்டு விடுவார்கள். பின் கடன்களை கட்டாமல் விட்டு விடுவார்கள். அந்த சொத்துகளும் ஏலத்திற்கு வரும்.


பொதுவாக வாங்கிய கடனைக் கட்ட முடியாததால்தான் சொத்துகள் கடனில் மூழ்குகின்றன என்று நினைக்க வேண்டாம். பலர் திட்டமிட்டே கடனைக் கட்டாமல், வெளியேறுகிறார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். ஏல சொத்தை வாங்கவே கூடாது என்று சொல்ல வரவில்லை; கவனித்து வாங்க வேண்டும் என்பதற்காகவே மேற்கண்ட செய்திகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

-சா. மு. பரஞ்சோதிபாண்டியன்