போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி?

0

அனைத்து துறைகளிலும் போட்டி யாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். போட்டியாளர்கள் இருப்பதனால்தான் சந்தையில் சிறந்த தரமான பொருள்கள் கிடைக்கின்றன. உற்பத்தியாளர்களும், வணிகர்களும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.


சந்தையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்க தினம் தினம் புதிய விலை மலிவான, தரமான பொருள்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. எனவே போட்டி என்பது தேவையான ஒன்று தான். ஆனாலும் மற்றவர் களின் போட்டியையும் சமாளித்துஆக வேண்டுமே?


போட்டியை சமாளிக்க பின்வருவனவற்றை முயற்சி செய்து பாருங்கள் :


போட்டியை சமாளிக்க முதலில் உங்களின் பலம் (strength) மற்றும் பலவீனங்களை (weakness) ஆராய வேண்டும். அடுத்து உங்கள் போட்டி யாளரின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய வேண்டும்.


உங்கள் பொருளின் தரம் சிறந்ததாக இருக்க வேண்டும்.


புதிய தொழில்நுட்பங்களால் உங்கள் பொருட்களை மெருகேற்ற வேண்டும். அந்த புதிய தொழில் நுட்பங்களை உங்கள் வாடிக்கையாளர்களும் அறிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.


உங்கள் வாடிக்கையாளர் சேவை (customer service) ஒரு எடுத்துக்காட்டாக அனைவருக்கும் விளங்க வேண்டும்.
வாடிக்கையாளரிடம் இருந்து வரும் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்.


போட்டியாளர்கள் நம் பொருட்களை போல் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் போது அவர்களை விட சிறந்த பொருளை, குறைவான விலைக்கு விற்க வேண்டும். தொடர்ந்து நமது பொருட்களின் தரம் மற்றும் சேவையை மேம்படுத்திய வண்ணம் இருக்க வேண்டும்.


நம் பொருட்களைப் போன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களை கண்காணித்த வண்ணம் இருக்க வேண்டும். அவர்களின் புதிய விற்பனை உத்திகளை கண்டறிந்து அவற்றுக்கு ஏற்ற மாற்று உத்திகளை நீங்களும் சிந்தித்து அறிமுகப்படுத்த வேண்டும்.


எப்போதும் உங்கள் போட்டியாளர்களை விட முன்னே இருக்க வேண்டும். உங்கள் பொருளை வாடிக்கையாளர் வாங்க காரணங்கள் என்ன? அதே போல் உங்கள் போட்டியாளர் பொருளை ஏன் வாங்குகிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


உங்கள் பொருட்கள் பற்றி வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்கள்? உங்கள் போட்டியாளர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்?


நீங்கள் போட்டிபோடும் சந்தையில் வருங்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு உங்கள் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யும் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

-சந்தோஷ்

சட்டப் பெயர், வணிகப் பெயர் – என்ன வேறுபாடு?

0

வணிகப் பெயர் (Trade Name) என்பது ஒரு நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள் அல்லது அந்த நிறுவனம் வழங்கும் சேவை பற்றி பொதுமக்கள் அறிந்து கொண்டிருக்கின்ற பிரபலமான பெயராகும். அதாவது நிறுவனம் உற்பத்தி செய்கின்ற அல்லது அளிக்கின்ற சேவையை பற்றி பொதுமக்கள் இடையே கிடைக்கும் புகழ் பெற்ற அல்லது நம்பிக்கை பெற்ற பெயரே வணிகப் பெயர் ஆகும்.


சட்டப்படியான (Legal Name) பெயர் என்பது அவ்வணிக நிறுவனத்தின் நடவடிக்கைகளை அரசுத் துறைகளாலும் நீதிமன்றங்களாலும் அறியப்படுகின்ற பெயராகும். அதாவது ஒரு அரசின் ஆவணங்களில் பதிவு செய்யப்படுகின்ற, பிற்காலத்தில் எந்தவொரு சிக்கல்களையும் தீர்வு செய்வதற்கு ஆதாரமாக இருக்கின்ற பெயரே சட்டப்படியான பெயராகும்


சான்றாக இண்டிகோ என்பது விமான சேவை செய்கின்ற நிறுவனத்தின் பெயர் என அனைவரும் அறிந்து வைத்து இருக்கின்றனர் இந்த பெயரே வணிகப் பெயர் ஆகும். அதற்கு பதிலாக நிறுவனங்களின் விவாகாரத் துறை பதிவேட்டில் இந்த இண்டிகோ எனும் விமான சேவை செய்கின்ற நிறுவனத்தின் பெயராக Interglobe Aviation Ltd என பதிவு செய்யப்பட்டு செயல்படுகின்ற பெயரே சட்டப்படியான பெயராகும்.


அவ்வாறே தமிழ்நாடு முழுவதும் தலப்பாகட்டு என்ற உடனே அனைவருக்கும் பிரியாணி என்ற உணவு நினைவில் தோன்றிடும். இந்த பெயர் வணிகப் பெயர் ஆகும். ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள பல நகரங்களில் அந்த பிரியானி செய்கின்ற நிறுவனத்தின் பெயர் வெவ்வேறாக இருக்கக் கூடும்.


இந்த சட்டப்படியான பெயரைப் பற்றி பொதுமக்களுக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் ஆவணங்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயராக இதனை அறிந்து கொள்ள முடியும்.

-ச. குப்பன்

ஜிஎஸ்டி – சஹாஜ், சுகம் படிவம்களை யார் பயன்படுத்தலாம்?

0

ஆண்டு ஒன்றிற்கு ரூ5 கோடிக்கு மிகாமல் விற்பனை வருமானம் உடையவர்களின் வசதிக்காக 27 ஆம் ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் ஜிஎஸ்டி அறிக்கை வழங்குவதை எளிமைப்படுத்தி சஹாஜ் (SAHAJ), சுகம் (SUGAM) ஆகிய இரு வடிவங்களில் அறிக்கைகளை வழங்கினால் போதும் எனும் எளிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.


சஹாஜ் எனும் அறிக்கையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு அறிக்கையாக வழங்கினால் போதும். ஆயினும் தாம் வழங்கும் பொருள் அல்லது சேவையானது B2C எனும் வகையில் அதாவது வணிகரிடம் இருந்து நேரடியாக நுகர்வோருக்கு என்ற வகையில் இருக்க வேண்டும்.


உள்ளீட்டு வரிக்கழிவு அனுமதிக்கப் படாது. இணையம் வாயிலான விற்பனையை நிகழ்த்துபவர்கள் இந்த வகை அறிக்கை வழங்க அனுமதிக்கப்பட மாட்டா£ர்கள்.


இவ்வாறான விதிமுறைகளுக்கு உடபட்ட வர்கள் இந்த சஹாஜ் அறிக்கையை வழங்க விரும்பினால் ஜிஎஸ்டி இணைய தளத்தில் SAHAJ எனும் வகையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மேலும் நாம் வழங்க விரும்புவது காலாண்டு அறிக்கையா, அல்லது மாதாந்திர அறிக்கையா எனவும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.


இந்த வகையில் காலாண்டு அல்லது மாதாமாதம் என்ற இரண்டிற்கும் இடையே மாறிக் கொள்ளும் வாய்ப்பு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படும். ஆயினும் சஹாஜில் இருந்து சுகம் அறிக்கைக்கு மாறும்போது, ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே என்ற வரையரை எதுவும் இல்லை.


சுகம் எனும் அறிக்கை வழங்கவும் விற்பனை வருமானம் ரூ5 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். B2B அல்லது B2B ஆகிய அதாவது வணிகரிடம் இருந்து வணிகருக்கு; வணிகரிடம் இருந்து நுகர்வோருக்கு ஆகிய இரு வழிகளில் செயல்படுபவர்கள் இந்த வகையில் ஜிஎஸ்டி அறிக்கையை வழங்கக அனுமதிக்கப்படுகின்றது.


இதிலும் உள்ளீட்டு வரிக்கழிவு அனுமதிக்கப்படுவது இல்லை. இணையம் வாயிலான வணிகத்துக்கு இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளமுடியாது. மூன்று மாதத்திற்கு ஒருமுறையான காலாண்டு அறிக்கையாக அல்லது மாதாந்திர அறிக்கையாகவும் வழங்கலாம்.


மூன்றாவதாக RET-1 எனும் படிவம். இந்த படிவத்தை வழங்க விரும்புவோர், தாம் வழங்கும் பொருள் அல்லது சேவை B2B ஆக அதாவது வணிகரிடம் இருந்து வணிகருக்கு செல்லும் வகையில் இருக்க வேண்டும். இதில் உள்ளீட்டு வரிக் கழிவு அனுமதிக்கப்படும். இணையம் வாயிலான விற்பனையாளர்களும் இதில் அனுமதிக்கப்படுவார்கள்.

பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இயக்குநர் கூட்டங்களை எப்போது எல்லாம் கூட்ட வேண்டும்?

0

நமக்கு தேவையான இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தை வாங்கி விட்டால் மட்டும் போதுமா? தொடர்ந்து அதனை பதிவு செய்ய வேண்டும்; காப்பீடு செய்ய வேண்டும்; அவ்வப்போது பணிமனையில் விட்டு பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். மேலும் அது இயங்குவதற்கு தேவையான எரிபொருளை அவ்வப்போது நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இது போன்ற பணிகளையும் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருந்தால்தான் உரிய பயன் கிடைக்கும்.


அதேபோன்று பிரைவேட் லிமிடெட் என அறியப்படும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை பதிவு செய்து விட்டால் மட்டும் போதாது. அவ்வாறு பதிவு செய்து புதிய நிறுமத்தை தொடங்கிய பின், பின்வரும் செயல்களை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.


நிறுவனத்தை பதிவு செய்த முப்பது நாட்களுக்குள் முதன்முதலான இயக்குநர் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.
பதிவு செய்த முப்பது நாட்களுக்குள் இயக்குநர் குழுவின் தீர்மானத்தின் மூலம் நிறுவனத்திற்கான தணிக்கையாளரை (ஆடிட்டரை) நியமனம் செய்திட வேண்டும்.


இயக்குநர் குழுவில் உள்ள ஒவ்வொரு இயக்குநரின் தகுதி, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் அவர்களின் ஈடுபாடு போன்ற விவரங்களை முதல் இயக்குநர்களின் கூட்டத்தில அறிவிப்பு செய்து அதனை MBP-1, DIR-8 ஆகிய படிவங்களின் வாயிலாக நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்தில் வழங்க வேண்டும்.


பதிவு செய்த முப்பது நாட்களுக்குள் அந்நிறுவனத்தின் பெயரில் ஏதேனும் ஒரு வங்கியில் நடப்புக் கணக்கு (கரன்ட் அக்கவுன்ட்) ஒன்று தொடங்க வேண்டும்.


அவ்வாறான நிறுவனத்தின் பெயரில் தொட ங்கப்பட்ட நடப்பு கணக்கில் அந்நிறுவனத்தில் பங்குநர்களாக இருக்க ஒப்புக் கொண்டு பதிவு செய்து கொண்ட முதலீட்டாளர்கள் அனைவரும் தாம் ஒப்புக் கொண்ட முதலீட்டு தொகை யை அறுபது நாட் களுக்குள் செலுத்த வேண்டும்.


அவ்வாறு முதலீட்டாளர்கள் செலுத்தும் பங்குத் தொகைக்கான பங்கு சான்றிதழை பங்குநர்கள் ஒவ்வொரு வருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டும்.


அவ்வாறு பங்குச் சான்றிதழ் வழங்கும்போது அதற்கான முத்திரைக் கட்டணத்தை அரசிற்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.


தொடர்ந்து படிவம் Inc 20A வாயிலாக நிறுவனத்தை பதிவு செய்த 180 நாட்களுக்குள் அந்நிறுவனம் தம் வணிக நடவடிக்கைகளை தொடங்கி விட்ட தற்கான அறிவிப்பு செய்ய வேண்டும்.


அந்நிறுமத்தின் முதல் பொதுப்பேரவை கூட்டத்தை (ஏஜிஎம்) அந்நிறுமம் தொடங்கிய முதலாம் ஆண்டு முடிந்த ஒன்பது மாதத்திற்குள் கூட்ட வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டிலும் பொதுப் பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும்.
நிறுமத்தின் அளவிற்கு ஏற்ப ஒவ்வொரு காலண்டர் ஆண்டிலும் குறைந்தது நான்கு இயக்குநர் கூட்டம், ஒரு பொதுப் பேரவை கூட்டம் கண்டிப்பாக கூட்டுவதை கடைப்பிடிக்க வேண்டும்.


பொதுப் பேரவை கூட்டம் முடிந்த முப்பது நாட்களுக்குள் AOC-4 எனும் படிவத்தையும், நிதிநிலை அறிக்கையையும் அறுபது நாட்களுக்குள் MGT-7 எனும் படிவத்தையும் நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்தில் வழங்க வேண்டும்.


மேலும் கம்பெனிகளின் சட்டம் 2013 இல் குறிப்பிட்டவாறான சட்டப்படியான பதிவேடுகளையும் ஆவணங்களையும் கண்டி ப்பாக பராமரிக்க வேண்டும்.


நிறுவனத்திற்கென தனியான ரப்பர் ஸ்டாம்ப், காமன் சீல் ஆகியவற்றை செய்து வைத்து இருக்க வேண்டும். சில ஆவணங்களை உருவாக்க இவை பயன் படும்.


அவ்வாறே நிறுமத்திற்கென தனியான பதிவு அலுவலகத்தை பராமரிக்க வேண்டும். மேலும் அப்பதிவு அலுவலகத்தில் அந்நிறுமத்தின் பெயரிலான லெட்டர் ஹெட், மெமொரண்டம் & ஆர்ட்டிக்கிள்ஸ் ஆஃப் அசோசியேஷன் ஆஃப் கம்பெனி ஆகியவற்றை அச்சிட்டு வைத்து இருக்க வேண்டும்.

மல்டி மோடல் டிரான்ஸ்போர்ட் இயக்குபவரின் பணி என்ன?

0

தற்போது தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல பல்வேறு பொருள் போக்குவரத்து நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


சாலைவழி போக்குவரத்து, தொடர் வண்டி போக்குவரத்து, விமான வழி போக்குவரத்து, கப்பல் வழி போக்குவரத்து என ஒன்றிற்கு மேற்பட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி பொருட்களை உரிய இடங்களுக்குக் கொண்டு சேர்க்கும் நிறுவனத்தை பல்லடுக்கு போக்குவரத்து நிறுவனம் (Multi modal transport operator) என அழைக்கப்படுகிறது.


இவ்வாறான ஒன்றிற்கு மேற்பட்ட வழிமுறைகளில் பொருட்களை கொண்டு செல்லும் பல்லடுக்கு போக்குவரத்து இயக்குபவர்கள் அனைவரும் Multimodal Transportation of Goods Act, 1993 எனும் சட்டத்தின் கீழ் கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.


இந்த சட்டத்தின் படி பதிவு செய்து கொள்ள ஒரு கம்பெனியாக அல்லது கூட்டாண்மை(பார்ட்னர்ஷிப்) நிறுவனமாக அல்லது தனி உரிமையாளர் நிறுவனமாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50 இலட்சத்திற்கு மேல் அல்லது பங்கு முதலீட்டுத் தொகை ரூ.50 இலட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும்.


இரு வெவ்வேறு முகவர்கள் வெவ்வேறு இடங்களில் அல்லது வெவ்வேறு நாடுகளில் இந்த பல்லடுக்கு பொருள் போக்குவரத்து கையாளும் பணிக்காக ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்க வேண்டும்.


இவ்வாறு பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களாக கடந்த மூன்றாண்டுகளில் ஈட்டப்பட்ட வருமான சான்றிதழும், பங்கு முதலீட்டின் சான்றிதழும் பட்டயக் கணக்கரின் கையொப்பத்துடன் இருக்க வேண்டும்.
மேலும் கடந்த மூன்றாண்டுகளில் வருமான வரித்துறைக்கு வழங்கிய வருமான வரிப் படிவங்களின் முதல் பக்கங்களின் நகல்களை வழங்க வேண்டும்.


கடந்த மூன்றாண்டுகளின் தணிக்கை சான்றிதழ்கள், பல்லடுக்கு பொருள் போக்குவரத்து கையாளும் பணிக்கான ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்த நகல்கள், கம்பெனியாக அல்லது கூட்டாண்மை நிறுவனமாக பதிவு செய்து கொண்ட பதிவுச் சான்றிதழ், பதிவு செய்யப்பட்ட கம்பெனியாக இருந்தால் இயக்குநர்களின் முகவரிகளுடனான விவரங்கள், பல்லடுக்கு பொருள் போக்குவரத்து கையாளும் பணிக்கான அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களின் பெயர்ப்பட்டியல், இந்த MTD பணியை செயல்படுத்துவதற்கான பொறுப்பேற்பு கடிதம் நிறுவனத்தின் முத்திரைத்தாளில் பொறுப்பு அலுவலரின் கையொப்பம் ஆகிய ஆவணங்கள் தேவையாகும்.


மேலே கூறிய விதிமுறைகளுக்கு ஏற்றபடி ஆவணங்கள் தயாராக digishipping.gov.in எனும் இணைய தள பக்கத்திற்கு சென்று அங்கு E-Governance எனும் திரைக்கு செல்ல வேண்டும். அதன் இடது புறத்தில் MTO Registration (New License) என்பதை தெரிவு செய்து, தொடர்ந்து MTO Registration Form எனும் படிவத்திற்கான பொத்தான் மீது சொடுக்க வேண்டும். இதில் ஏழு டேப் – பொத்தான்கள் உள்ளன. அவற்றை ஒவ்வான்றாக சொடுக்கிய உடன் விரியும் திரையில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.


அனைத்து விவரங்களும் உள்ளீடு செய்து முடித்தவுடன் Registration Fees எனும் பொத்தானை சொடுக்கி தேவையான கட்டணத்தை இணைய வங்கிக் கணக்கின் வாயிலாக செலுத்த வேண்டும். அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் Generate Application Number எனும் பொத்தானை சொடுக்கிய உடன் நமக்கான விண்ணப்ப எண் ஒன்று திரையில் தோன்றும்.


அதனைத் தொடர்ந்து மேலே கூறிய அனைத்து ஆவணங்களையும் ஒவ்வொ ன்றாக பதிவேற்றம் செய்த பின்னர், தொடர்புடைய அலுவலகத்தில் இவற்றை சரிபார்த்து MTO பதிவுச் சான்றிதழை மூன்றாண்டுகளுக்கு வழங்குவார்கள். இவ்வாறு MTO ஆக பதிவுச் சான்றிதழ் கிடைக்கப்பெற்ற முப்பது நாட்களுக்குள் இதனை ஏற்றுக் கொண்டதற்கான சான்றிதழ், காப்பீட்டு சான்றிதழ், நிறுவனத்தின் பதிவு எண், பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்கள் அடங்கிய மாதிரி படிவத்தை வழங்க வேண்டும்.

-முனைவர் ச. குப்பன்

ஷாகு மகாராஜா தொடங்கி வைத்த இட உரிமை

0

எல்லோரும் சமம் என்கின்ற போது, சிலருக்கு மட்டும் இட ஒதுக்கீடு தவறுதானே? -இப்படி சிலர் கேட்கிறார்கள்.
கண்டிப்பாக இட ஒதுக்கீடு என்பது தவறுதான். இட உரிமை என்பதே சரியான பொருள் தரும்.


பிராமணர் அல்லாதோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட உரிமையை, 1902 இல், கோல்காபூர் சமஸ்தானத்தின் மகாராஜா, திரு. ஷாகு, கிடைக்கப் பெறச் செய்கிறார். அனைவ ருக்கும் இலவசக் கல்வி, தங்கும் விடுதி போன்றவைகளுடன் ஐம்பது சதவிதம் இட உரிமையை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கினார்.


1909 இல் இயற்றப்பட்ட இந்தியா சட்டத்தில், ஆங்கிலே யர்களும் இட உரிமை ஷரத்துகளை இணைக்கிறார்கள்.
1932 இல், அன்றைய பிரிட்டன் பிரதமர் திரு. ராம்சே மெக்டோனல்ட், வட்ட மேசை மாநாட்டில் வகுப்பு ரீதியாக பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த முன்மொழிகிறார்.


அந்த முன்மொழிவு சர்ச்சைக்கு உள்ளாகிறது. திரு. காந்தி அதனை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறார். டாக்டர். அம்பேத்கர் ஆதரித்தார். பிறகு, இருவரும் சேர்ந்து சிறு மாற்றங்களுடன், தலித்துகள் இந்துக்கள் தொகுதியில் உள் ஓதுக்கீடு பெற்று போட்டி இடுவார்கள், ஏனையோர், இஸ்லாமியர், சீக்கியர், தனியாக தமக்கு ஒதுக்கிய தொகுதிகளில் போட்டி இடுவார்கள் என்ற ஓப்பந்தத்திற்கு வருகிறார்கள். பூனே பேக்ட் என்று இந்த ஒப்பந்தம் அழைக்கப்படுகிறது.


சுதந்திர இந்தியாவில், அனைத்து மக்களும் சமம் என்பதை உறுதிப்படுத்திட, தீண்டத் தகாதவர்களுக்கும் உரிமைகளை பெற்றுத் தர இட உரிமையை நம் தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.


மேலே, குறிப்பிட்ட வரலாறு ஓட்டுக்காக, இட உரிமை கொண்டு வரப்பட்டது என்ற போலி வாதத்தை உடைக்க.
மகாராஜாவுக்கும், ஒட்டு அரசியலில் ஈடுபடாத திரு. காந்திக்கும் எதற்கு ஓட்டு?


இட உரிமை என்பது தானம் இல்லை. ஒருவரிடம் இருந்து எடுத்து இன்னொருவருக்கு தருவது இல்லை.
இட உரிமை என்பது அவரவர்களுக்கு மக்கள் தொகை, சமூக, பொருளாதார நிலையை அளந்து, உரிய இடத்தை உறுதி செய்வதே ஆகும்.


2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் கிட்டத்தட்ட 46 இலட்சம் ஜாதி மற்றும் உள்பிரிவை மக்கள் பதிவு செய்து உள்ளனர், சில தவறுகள் உள்பட. இவர்களிடம் ஏராளமான சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்பதைச் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.


பெரும்பான்மையோருக்கு தங்களுடைய உரிமை என்ன என்பது கூட தெரியாது. இப்படிப் பட்டவர்களுக்கு சம வாய்ப்பு சுதந்திர இந்தியாவில் இருக்க வேண்டும் என்று எண்ணிய தலைவர்கள் இட உரிமையை உறுதி செய்து, ஒவ்வொரு பிரிவில் இருந்தும், மக்கள் தொகையின் அடிப்படையில், கீழே குறிப்பிட்டு உள்ளபடி பிரதிநிதித்துவம் வருமாறு சட்டம் இயற்றி உள்ளனர்.


எஸ்டி – 1%
எஸ்சி – 18%
பிசி – 20%
எம்பிசி – 30%
மேலே கூறிய பங்கீடு தமிழகத்தில் உள்ளது. கூட்டினால் 69%.


பிராமண தலைவர்கள் இதை மேலோட்டமாக தங்கள் ஜாதியினரிடம் கொண்டு சென்று பிராமணர்களுக்கும், மற்றவர்களுக்கும் வலிந்து பகைமையை உண்டு பண்ணுகிறார்கள்.


உண்மையில், மேலே குறிப்பிடாத வகுப்பினருக்கும் உரிய இட உரிமை, தமிழகத்தில் தரப்பட்டு உள்ளது.
அதாவது, இரண்டு மெரிட் லிஸ்ட் (தகுதிப் பட்டியல்) தயாரிக்கப்படும். நூறு இடம் என்றால், முதல் 50 பட்டியல், முதல் 69 பட்டியல் என்று இரண்டு பட்டியல்கள் தயாரிக்கப்படும்.


பின்பு, 69 பட்டியலில் இடம் பெற்றவர்கள், 50 பட்டியலில் இடம் பெறாமல், மற்றும் மேலே குறிப்பிட்ட வகுப்பை சாராதவர்கள் என்றால் அவர்களுக்கு இடம் அளிக்கப்படும். எடுத்துக் காட்டாக, 19 பிராமணர்கள், 69 பட்டியலில் இடம் பெற்று, 50 பட்டியலில் இல்லை என்றால், 19 பேருக்கு இடம் தரப்படும். மொத்த இடம் நூறில் இருந்து 119 ஆக கணக்கிடப்படும். இதனை சிறப்பு இடங்கள் என்று அழைப்பர்.


ஆக, மேலே குறிப்பிட்ட எடுத்துக் காட்டின் வழியில் 16% முன்னேறிய வகுப்பினருக்கு உறுதியாக தரப்படுகிறது.
பிராமண தலைவர்களின் ”35 வாங்கியவருக்கு இடம், 199 வாங்கிய எங்களுக்கு இடம் இல்லை” என்ற வாதத்தின்படி (இது அப்பட்டமான பொய் என்பது வேறு விஷயம்), முன்னேறியவர்களுக்கு கிட்டத்தட்ட 42% இடம் (19+31/119) உறுதி செய்யப்படுகிறது.


நடைமுறையில், முன்னேறிய சாதியினருக்கும், பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையே மதிப்பெண்கள் தொடர்பான இடைவெளி குறைந்த அளவுதான் இருக்கிறது. 35 மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கு இடம் தரப்படுகிறது என்பது ஒரு வடிகட்டிய பொய் ஆகும். அந்த வகையில், முன்னேறிய சாதியினருக்கு குறைந்தது 16% உறுதி செய்யப்படுகிறது. அவர்கள் மக்கள் தொகை 13% மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இனிமேலும் எஸ்சியால் எங்கள் இடம் போய்விட்டது என்று விவரம் இல்லாமல் கூறாதீர்கள்.


இந்தியா அரசமைப்பு சட்டத்தில் இட உரிமையை, மக்களை சமமாக நடத்துவதற்கு உரிய தெளிவான வழிமுறையாக கூறி இருக்கும் போது, அதை எதிர்த்து பரப்புரை செய்வதும், மதிக்காமல் செயல்படுவதும் சற்றும் நியாயம் அற்றது. இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

-பா. ச. பாலசிங்

திருப்பூர் பின்னலாடைத் துறையின் இலக்கு

0

பின்னலாடைத் துறையில் பெரிய அளவில் இயங்கி வரும் திருப்பூர், ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கு என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறது. திருப்பூருக்குப் பின்னலாடைத் தொழிலகங்களே, உயிர் மூச்சு. 2012ல் ரூ.10 ஆயிரத்து 500 கோடியாக இருந்த ஏற்றுமதி வர்த்தகம், 2017க்குள் ரூ.26 ஆயிரம் கோடியை எட்டிப் பிடித்தது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்றுமதி வர்த்தகம் ஒரே சீரான நிலையில் இருந்தது. உள்நாட்டு பின்னலாடை வர்த்தகமும், ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளின் அளவை நெருங்கக் கூடியதாக இருக்கிறது. ‘ஒரு லட்சம் கோடி பின்னலாடை வர்த்தகத்தை, 2022க்குள் ஈட்ட முடியும்’ என்ற இலக்குடன், திருப்பூர் தொழில்துறை களமிறங்கி இருக்கிறது. இந்த லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது, மத்திய, மாநில அரசுகளின் கடமையாக உள்ளது.


‘மேட் இன் திருப்பூர்’ என்பதை, உலக அளவில் பிரபலமாக்கிய பெருமை, திருப்பூர் தொழில் துறையினருக்கு உண்டு. இங்கு சிறு, குறு, நடுத்தரத் தொழிலகங்களே அதிகம். இங்கு உள்ள ஆடைத் தொழிலகங்கள் வேலை வாய்ப்பை அதிகரித்து வருகின்றன.


வங்கிகளில் கடன் பெறுவது தற்போது எளிதாகி இருக்கிறது. குறிப்பாக, திருப்பூர் தொழில்துறையினர் பலர், கடன் பெற்று, தொழிலை நவீனப்படுத்தி இருக்கின்றனர்.


இது பற்றி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கப் பொதுச் செயலாளர் திரு. டி. ஆர். விஜயகுமார், ”தகுந்த தொழில் நிறுவனங்களுக்கு, 59 நிமிட கடன் அனுமதித் திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது. தொழில் அனுபவம், நிறுவனத்தின் முறையான திட்டம் போன்றவற்றை வைத்து, இது வழங்கப்படுகிறது. உரிய கால அளவுகளில் கடன் தொகைய திரும்பச் செலுத்தும் சிறந்த தொழில்முனைவோராக விளங்கினால், கடன் தொகையை உயர்த்தி தருவதும், அதன் மூலம் தொழிலை மேம்படுத்துவதும் இயலக் கூடியதாக இருக்கிறது.


பன்னாட்டு ஆடை வணிகத்தில், செயற்கை இழை ஆடைகளுக்கான பங்களிப்பு, 75 சதவீதம். ஆனால், திருப்பூரின் ஏற்றுமதியில், செயற்கை இழை ஆடைகள், 10 முதல் 15 சதவீதம் வரை இடம் பெற்று உள்ளன. கட்டுப்படியாகும் விலையில், செயற்கை இழை ஆடைகளைத் தயாரிப்பது சாத்தியமானால், திருப்பூர், உலகச் சந்தையில் மேலும் சாதிக்க முடியும் .’நிஃப்ட்’ உடன் இணைந்து புதிய ஆடை வடிவமைப்புகள், தயாரிப்புகள் குறித்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஆடைத் தொழில் துறையில் ஆராய்ச்சிகளைப் வலுப்படுத்தும் போது, தீர்வுகளும் கிடைக்கின்றன.” என்கிறார்..

-ஏ. எம். ஜஹாங்கீர், திருப்பூர்

கூகுள் மை பிசினசில் பதிவு செய்யுங்கள் | டிஜிட்டல் மார்க்கெட்டிங் -4

0

கூகுள் வழங்கும் கூகுள் மை பிசினஸ் (Google My Business) என்பது ஒரு இலவச சேவையாகும். இணையத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் நம் தொழில் விவரங்களை பதிவு செய்து விட வேண்டும். நம் வலைத்தளம் என்று மட்டும் இல்லாமல் இணையத்தில் பரவலாக நம் தொழில் தொடர்பான விவரங்கள் பரவி இருந்தால் வாடிக்கையாளர்கள் தேடும்பொழுது நம் தொழில் பற்றிய செய்திகள் அவர்களுக்கு தெரிய வரும். அப்படி நம் தொழில் பற்றிய விவரங்கள், பொருட்கள் பற்றி பதிவு செய்யும் ஒரு இடம்தான் கூகுள் மை பிசினஸ் ஆகும்.


சொந்தமாக வலைத்தளம் இல்லாதவர்களும் கூகுள் மை பிசினசில் பதிவு செய்து பொருட்களை விற்பனை செய்யலாம். ஒருவர் வலைத்தளத்தில் பொருட்களை அல்லது நிறுவனத்தை தேடும் பொழுது அந்த நிறுவனம் கூகுள் மை பிசினசில் பதிவு செய்து இருந்தால் கூகுள் மேப், உடனே அந்த பொருட்களை, நிறுவனத்தைப் பற்றிய விவரங்களை கூகுள் வழங்கும். சான்றாக ValarThozhil என்று கூகுளில் தேடிப் பார்த்தால், வலது பக்கம் வ்ளர்தொழில் இதழ் தொடர்பான விவரங்கள், வலைத்தள முகவரி, அலுவலகம் அமைந்து உள்ள இடத்தின் கூகுள் மேப், தொடர்பு எண், அலுவலக வேலைநேரம் என்று பல தகவல்கள் இருப்பதை பார்க்க முடியும்.


யாரெல்லாம் இதில் பதிவு செய்யலாம்? வலைத்தளம் வைத்திருப்பவர்களும், வலைத்தளம் இல்லாதவர்களும் தங்கள் நிறுவனம் பற்றி, பொருட்கள் பற்றி பதிவு செய்து காட்சிப்படுத்தலாம்.


google.com/business என்ற வலைத்தள முகவரிக்கு சென்று உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கைக் கொண்டு பதிவு செய்யுங்கள். (கூகுளின் ஒரு கணக்கை அனைத்து கூகுள் சேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.)


முதலில் உங்கள் தொழில் பெயர் கொடுத்து அடுத்த பக்கத்திற்கு சென்றால் அங்கு, வாடிக்கையாளர் உங்களைத் தேடி வர வேண்டிய தொழில் என்றால் ஆம் என்று தேர்ந்து எடுத்து அடுத்த பக்கத்திற்கு சென்று முழு முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

மேலும் படிக்க: பணி வாய்ப்பு தரும் இணைய தளங்கள்


இவை முடிந்த பிறகு, அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள் அங்கு உங்கள் தொழில் எந்த வகை (Category) என்று தேர்ந்து எடுக்க வேண்டும். சான்றாக மொபைல் ஃபோன் விற்பனை செய்கிறீர்கள் என்றால், எலக்ட்ரானிக் வகை என்பதை தேர்ந்து எடுக்க வேண்டும். இந்த பக்கத்தில் மற்ற விவரங்கள் கொடுத்து முடித்த பிறகு அடுத்த பக்கத்திற்கு செல்ல வேண்டும்.


இந்தப் பக்கத்தில் உங்கள் தொடர்பு எண் கொடுக்க வேண்டும் மற்றும் உங்களுக்கு வலைத்தளம் இருந்தால் அதன் முகவரி கொடுங்கள். முகவரி கொடுத்த பிறகு அதன் கீழ் கூகுள் கூட உங்களுக்கு இலவசமாக வலைத்தளம் வழங்கும். தேவை என்றால் அதனை தேர்ந்து எடுங்கள், வேண்டாம் என்றால் அதனை தவிர்த்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.


இந்தப் பக்கத்தில் எந்த தகவல்களும் தர வேண்டாம். Finish என்பதை தேர்ந்து எடுங்கள். இப்பொழுது நீங்கள் கொடுத்து உள்ள முகவரிக்கு அந்த முகவரி சரியானதா என்பதை உறுதி படுத்திக் கொள்ள கூகுள் ஒரு மின்னஞ்சல் அனுப்பும்.


முழுவதும் சரியான தகவல்களைக் கொடுக்க வேண்டும். இலவச சேவை என்பதற்காக தவறான தகவல்களைக் கொடுக்கக் கூடாது.

தகவல்: தமிழ் தொழில்நுட்ப செய்திகளை படிக்க, தமிழ் கம்ப்யூட்டர்.

அனைத்தும் முடிந்து கூகுள் மை பிசினஸ் உள்ளே சென்று information என்பதை தேர்ந்து எடுத்து உங்கள் அலுவலகம் திறந்து இருக்கும் நேரம் போன்றவற்றை தந்து விடுங்கள். அங்கு கேட்கப்படும் தகவல்கள் அனைத்தையும் முடிந்த வரை தந்து விட்டால் வாடிக்கையாளர்கள் நம் தொழில் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

create post என்பதை தெரிவு செய்து உங்கள் பொருட்கள் பற்றி படங்கள், விவரங்கள், விலை போன்ற தகவல்கள் கொடுத்து சேமித்து விட்டால் அவை வாடிக்கையாளர் பார்வைக்கு தெரிய வரும். யாருக்கு தேவையோ அவர்கள் கூகுள் மை பிசினஸ் மூலம் வாங்க முடியும். நம் தொழில் அடுத்த நிலைக்கு செல்ல கூகுள் மை பிசினஸ் ஒரு அருமையான தேர்வு ஆகும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய நினைப்பவர்கள் அனைவரும் கூகுள் மை பிசினசில் பதிவு செய்தால் பயன் கிடைக்கும்.

ஒரு நாள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியில் பங்கு பெறுங்கள்.

-செழியன். ஜா

சிறு தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கும் பல்வேறு மானியங்கள்

0

உலக அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடக்க நிலையில் சிறிய அளவில் தொடங்கப்பட்டு பின்னர் பெரிய அளவில் வளர்ந்து உள்ளன.


இந்திய பொருளாதாரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆற்றல் வாய்ந்த தொழில் நிறுவனங்களாக மாறி உள்ளன. மேலும் இவை குறைந்த முதலீட்டில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி ஊரக மற்றும் நகர்ப் புற பகுதிகளில் அதிக அளவில் வேலை வாய்ப்பினை உருவாக்கி உள்ளன. வட்டார அளவில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை குறைத்து பொருளாதாரம் சம அளவில் இருக்க உதவுகின்றன. இத்தகைய நிறுவனங்கள் பெரும்பாலும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சார்பு நிறுவனங்களாக உள்ளன.


தமிழ் நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஏறத்தாழ அனைத்து பிரிவுகளிலும் பல்வேறு விதமான பொருட்களை தயாரிக்கின்றன. இவற்றில் முன் நிற்பவை ஜவுளி, மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள், தானியங்கி துணைப் பொருட்கள், தோல் பொருட்கள், இரசாயனம், பிளாஸ்டிக் உறுப்புகள், ஆயத்த ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் முதலானவை


தமிழ்நாட்டில் msmeonline.tn.gov.in எனும் இணைய தளம் வாயிலாக தொழில் முனைவோர் ஒப்புதல் பதிவறிக்கை பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரையறை:
நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி இந்நிறுவனங்களை எந்திரம் மற்றும் தளவாடங்களின் (நிலம் மற்றும் கட்டடங்கள் தவிர) முதலீட்டின்படி வரையறுக்கப்பட்டு உள்ளது.

  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை:
  • இத்துறையில் நிர்வாக கட்டுப்பாட்டில் கீழ்கண்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
  • District Industries Center (தொழில் வணிக ஆணையரகம்) (IC & DIC)
  • Tamilnadu Small Industries Development Corporation Limited – தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO)
  • Tamilnadu Small Industries Corporation – தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம் (TANSI)
  • Entrepreneurship Development Institute – தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDI)
  • தொழில் வணிக ஆணையரகம் தொழில்களின் மேம்பாட்டிற்கு பொறுப்பாக விளங்குகிறது. இந்த பொறுப்பை செயல்படுத்த இந்த ஆணையரகத்தின் கீழ் 32 மாவட்டங்களிலும் மாவட்டத் தொழில் மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. தொழில் துவங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு அரசுத் துறைகளி டமிருந்து சட்ட பூர்வ அனுமதிகளை பெறுதல், தகுதியான மானியங்களை பெற்றுத் தருதல் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை பெற்றுத் தருதல் உள்ளிட்டப் பணிகளைச் செய்து வருகின்றன.

சிறு தொழில் முனைவோர் பதிவறிக்கை பதிவு செய்தல்:

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுச் சட்டம் 2006ன்படி தொழில் முனைவோர் பதிவறிக்கை (தொ.ப.) அறிமுகப்ப டுத்தப்பட்டு உள்ளது. குறு மற்றும் சிறு உற்பத்தி/ சேவை தொழில்கள் விருப்பத்தின் அடிப்படையில் இது பதிவு செய்யப்படுகிறது. ஆயினும், நடுத்தரத் தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு இப்பதிவு கட்டாயமானது. எந்த ஒரு தொழில் முனைவோரும் msmeonline. tn.gov.inஇணையதள வழியாக தொழில் முனைவோர் பதிவறிக்கை ஒப்புகையினை மாவட்ட தொழில் மையத்திற்கு செல்லாமலே பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டம் தொழில் முனைவோரி டையே வரவேற்பினை பெற்று உள்ளது.

மானியத் திட்டங்கள்:

மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைத் திட்டங்கள் கீழ்வருமாறு:


முதலீட்டு மானியம்:தகுதியான எந்திரத் தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு முதலீட்டு மானியம் அதிக அளவாக ரூ.30 இலட்சம் வரை.
மகளிர், பட்டியலிடப்பட்ட இனம்/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகிய தொழில் முனைவோருக்கு தகுதியான எந்திர தளவாடங்களின் மீதான முதலீட்டின் மதிப்பில் 5 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.2 இலட்சம், கூடுதல் முதலீட்டு மானியமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தகுதியான எந்திரத் தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு முதலீட்டு மானியம் அதிக அளவாக ரூ.30 இலட்சம் வரை.
மகளிர், பட்டியலிடப்பட்ட இனம்/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகிய தொழில் முனைவோருக்கு தகுதியான எந்திர தளவாடங்களின் மீதான முதலீட்டின் மதிப்பில் 5 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.2 இலட்சம், கூடுதல் முதலீட்டு மானியமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


மாசற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு இயைந்த தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தும் நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியச் சான்றின் பேரில் அந்நிறுவ னங்களுக்கு தகுதியான எந்திர தளவாடங்கள் மீதான முதலீட்டின் மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சம் ரூ.3 இலட்சம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.


உற்பத்தி தொடங்கிய நாளில் இருந்து முதல் 5 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்குள், குறைந்த பட்சம் 25 வேலையாட்களைப் பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்களுக்கு அவற்றின் தகுதியான எந்திர தளவாடங்களின் மீதான முதலீட்டின் மதிப்பில் 5 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.5 இலட்சம் வேலைவாய்ப்பு பெருக்க மானியம் அறிவிக்கப்பட்டு உள்ளது.


அடிப்படைத் தகுதி:
மாநிலத்தில் எப்பகுதியிலும் நிறுவப்படும், அனைத்து புதிய குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள்.
தமிழ்நாட்டில் எப்பகுதியிலும் நிறுவ ப்படும் கீழ்க்கண்ட 13 சிறப்பு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் (கூடுதல் முதலீட்டு மானியம் மற்றும் வேலைவாய்ப்பு பெருக்க மானியம் நீங்கலாக)

  • மின் மற்றும் மின்னணு பொருள்கள்
  • தோல் மற்றும் தோல் பொருள்கள்
  • வாகன உதிரி பாகங்கள்
  • மருந்து மற்றும் மருத்துவ பொருள்கள்
  • சூரிய சக்தி பயன்பாட்டு உபகரணங்கள்
  • ஏற்றுமதிக்கான தங்கம் மற்றும் வைர நகைகள்
  • மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்கள்
  • விளையாட்டுப் பொருள்கள் மற்றும் உதிரிபாகங்கள்
  • சிக்கன கட்டுமானப் பொருள்கள்
  • ஆயத்த ஆடைகள்
  • உணவு பதப்படுத்துதல்
  • பிளாஸ்டிக் பொருட்கள்
  • ரப்பர் பொருட்கள்
  • தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 251 வட்டாரங்களில் அமைக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்.


மாநிலத்தின் 385 வட்டாரங்களில் அமைக்கப்படும் வேளாண் சார் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
மேற்கண்ட வகையை சார்ந்த தற்போது இயங்கி வரும் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில்கள் துவங்கும் பொழுது.


குறைந்தழுத்த மின் மானியம்:

20 விழுக்காடு குறைந்த அழுத்த மின் மானியம், வணிக ரீதியாக உற்பத்தி தொடங்கிய நாள் அல்லது மின்இணைப்பு பெற்ற நாள் இவற்றில் எது பிந்தியதோ அந்நாளிலிருந்து 36 மாதங்களுக்கு வழங்கப்படும்.


மதிப்பு கூட்டு வரிக்கு ஈடான மானியம்:

குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு, அவற்றின் எந்திர தளவாடங்களின் மதிப்புக்கு ஈடான தொகை, அவை உற்பத்தி தொடங்கிய முதல் 6 ஆண்டுகளில் செலுத்தப்படும் மதிப்பு கூட்டு வரிக்கு ஈடாக அவர்களுக்கு 100 சதவிகிதம் திருப்பி வழங்கப்படும்.


மின்னாக்கி மானியம்:

இம்மானியத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் எப்பகுதியிலும் அமைந்து உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் வாங்கி உள்ள மின்னாக்கியின் மதிப்பில் 25 விழுக்காடு (320 ரிக்ஷிகி வரை) அதிக அளவாக ரூ. 5 இலட்சம் வரை மின்னாக்கி மானியம்


பின்முனை வட்டி மானியம்:
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனப் படுத்துதல், கடன் உத்தரவாத நிதி ஆதாரத் திட்டம் ஆகியவற்றிற்காக வாங்கும் ரூ.1 கோடி வரையிலான கடன்களின் மீது 5 ஆண்டுகளுக்கு அதிக அளவாக ரூ. 10 இலட்சத்திற்கு கடனுக்கான வட்டியில் 3 விழுக்காடு என்ற அளவில் பின்முனை வட்டி மானியமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Also Read: புதிய கள ஆய்வினால் பயிற்சித் தொழிலை புத்தாக்கம் செய்தோம்!


குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீன படுத்துதல், தேசிய பங்கு நிதி திட்டம், பன்னாட்டு தரநிலைப்படுத்தல் நிறுவனத்தின் தரச்சான்று பெறுதல், காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் கடன் உத்தரவாத நிதி ஆதாரத் திட்டம் போன்ற அனைத்து திட்டங்களுக்கான காலக் கடன்களுக்கும், 3 விழுக்காடு பின்முனை வட்டி மானியம் அறிவிக்கப்பட்டு உள்ளது.


தொழில் நுட்ப மேம்பாட்டுக்கான திட்டங்கள்:
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட் டிற்காக கீழ்கண்ட திட்டங்கள் உள்ளன:-
உரிமைக்காப்பு (கண்டறிதல் உரிமை) பதிவு விண்ணப்பத்திற்கான தொகையில் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 50 விழுக்காடு, அதிக பட்சமாக ரூ.2 இலட்சம் மானியம்.


வர்த்தக குறியீடு (டிரேட் மார்க்) பதிவு தொகையில் 50 விழுக்காடு அல்லது ரூ.25,000/- இதில் எது குறைவானதோ அது வழங்கப்படும்.


அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் மூலம் தொழில் குழுமங்கள் மற்றும் சிறு கருவி மையங்கள் அமைப்பதற்கு, அவற்றின் திட்டமதிப் பீட்டில் 25 விழுக்காடு, அதிக பட்சமாக ரூ.1 கோடி வரை மானிய உதவி.


தூய்மையான, மின் திறனுள்ள தகவல் தொழில் நுட்பம் சார்புடைய தொழில் நுட்பங்களை உருவாக்குவதற்கு தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி ஏற்படுத்துதல், நேர்த்திமிகு மையங்கள் மற்றும் தொழில் நுட்ப வணிக சேவை வளர்ப்பகங்களை உருவாக்கி அதன் மூலம் நவீன உற்பத்தி உத்திகள் மற்றும் வடிவமைப்பு மேம்பாடு மேற்கொள்ள ஒவ்வொரு தொழில்நுட்ப வணிக சேவை வளர்ப்பகம் / நேர்த்திமிகு மையத்திற்கும் ரூ.50 இலட்சம் வரை மானிய உதவி.


சந்தை வாய்ப்பு உதவி:
அரசு, குறு மற்றும் சிறுதொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கீழ்க்கண்ட சந்தை வாய்ப்பு உதவிகளை வழங்குகிறது –
ஒப்பந்தப் புள்ளிகளில் கலந்து கொள்வதற்கு முன்வைப்புத் தொகை செலுத்துவதிஸீயீ sருந்து விலக்கு.


இம்மாநிலத்திலும் மற்றும் மற்ற மாநிலங் களிலும் நடைபெறும் பொருட்காட்சிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் சார்புடைய சங்கங்கள் கலந்து கொள்ளும் நேர்வுகளில் அரங்க வாடகையில் 50 விழுக்காடு மானியம் பொதுவான பெயர் அல்லது பொது வணிக சின்னத்தில் விற்பனை செய்ய ஆதரவு அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துப் படுகின்றன. இவற்றை தொழில் முனைவோர் முயன்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

-விகாஸ்

பனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா?

0

பனை மரம் பல பயன்களைக் கொடுக்கும் இயற்கை வளம். இந்தியா, மற்றும் இலங்கையில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும், ஆப்பிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைக்கிறார்கள்.

உலக அளவில் சுமாராக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டு உள்ளது.
இந்தியா: 60 மில்லியன்
மேற்கு ஆபிரிக்கா – 50 மில்லியன்
இலங்கை – 11.1 மில்லியன்
இந்தோனெசியா – 10 மில்லியன்
மடகஸ்கார் – 10 மில்லியன்
மியன்மார் – 2.3 மில்லியன்
கம்பூச்சியா – 2 மில்லியன்
தாய்லாந்து – 2 மில்லியன்


பனையின் பயன்கள்

பனை ஓலை
குருத்து ஓலையில் இருந்தே அதிகமான பயன் தரும் பொருட்கள் செய்யப் படுகின்றன. கைவினைப் பொருட்களான செயற்கைப் பூக்கள், பூச்சாடிகள், பெட்டி, சுளகு, பாய், இடியாப்ப தட்டு என பல பொருட்கள் செய்ய உதவுகிறது.

நார்
பனம் ஓலை மட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நார். பிரஷ்கள், துடைப்பங்கள் செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மரம்
கட்டுமான பணிகளுக்கு, குறிப்பாக வீட்டு கூரைகளுக்கு பயன்படுத்தப் படுகிறது.

பதநீர்
அருந்தவும், கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு செய்ய பயன்படுத்தப் படுகிறது. பொதுவாக பதநீர் இறக்கும் குடுவைகளின் உள்ளே அளவோடு தடவப்படும் சுண்ணாம்பு, பதநீரை நொதிக்க விடாமல் செய்கிறது. சுண்ணாம்பு தடவாவிட்டால் கள் ஆக மாறி விடுகிறது.
பதநீரில் வெல்லம் 12-13% ம், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, தாது உப்புக்கள் உள்ளன.

நுங்கு
முற்றாத பனங்காயில் உள்ள விதைகளையே நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான உண் பொருள். இரண்டு மில்லி யன் பனைமரங்களே இருக் கும் தாய்லாந்தில் இருந்து நுங்கு டின்களில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதி ஆகிறது.

பனம் பழம்
பனம் பழத்தில் இருந்து பெறப்படும் பழக் கூழ் (Fruit pulp, பழப்பாகு (ஜாம்) தயாரிக்க பயன்படுத்தப் படுகிறது. பனங்காய் பணியாரம் ஈழத்தில் புகழ் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள சில இடங்களில் மட்டும் பனம் பழத்தை சுட்டு அல்லது செங்காயாக இருந்தால் சீவிப் போட்டு அவித்து உண்கிறார்கள். சில ஊர்களில் இது தெரு ஓரக் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

பனங் கிழங்கு
பனங்கிழங்கை அவிக்காது ஒடித்து உலர வைத்து மாவு தயாரித்து, அந்த மாவில் இருந்து புட்டு, கூழ் சமைக்கப்படுகிறது. பனங்கிழங்கை அவித்து ஒடித்து உலர வைத்து தயாரிக்கப்படும் மாவை அப்படியே சிற்றுண்டியாக உண்கிறார்கள்.
ஆனாலும் இப்படி மாவு தயாரித்து பயன்படுத்தும் பழக்கம் தமிழ்நாட்டில் குறைவாகவே இருக்கிறது. காரணம் பனங்கிழங்காகவே பெரும்பாலும் உண்ணப்பட்டு விடுகிறது. வேக வைத்து விற்கப்படும் பனங்கிழங்கு உடனுக்குடன் விற்றுத் தீர்ந்து விடுகிறது.

இதையும் படிங்க: கூகுள் அனாலிடிக்சை பயன்படுத்துவது எப்படி? டிஜிட்டல் மார்க்கெட்டிங் – 3

பனை சார்ந்த பொருட்களைப் பொறுத்தவரை கருப்பட்டி, பனங்கற்கண்டு இரண்டும் அதிக அளவில் விற்பனை ஆகிறது. பனஞ் சீனியும் விற்பனை ஆகிறது.

பனம் பொருட்கள் தொடர்பான தொடர்பான ஆராய்ச்சிகள் மிக குறைவா கவே நடைபெறுகின்றன. தமிழ்நாடு அரசு சார்பில் பனை மற்றும் பனைப் பொருட்கள் வளர்ச்சி வாரியம் என்று ஒன்று செயல்பட்டு வந்தாலும் அதன் பணிகளால் விளைந்த பயன்கள் குறித்த செய்திகள் எதுவும் பெரிய அளவில் வெளி வரவில்லை.

பனை மரத்தில் ஏறுவதை எளிதாக்கும் கருவிகள் குறித்து அவ்வப்போது செய்திகள் படத்துடன் வெளிவந்தாலும், அந்த கருவியின் பயன்பாடு அதிகரிக்கவில்லை. பெரும்பாலும் எந்த ஊரிலும் அத்தகைய கருவிகளைப் பயன்படுத்தி மரம் ஏறுவதைப் பார்க்க முடியவில்லை.

ஒரு காலத்தில் விரும்பி வாங்கப்பட்ட பனைநார்க் கட்டில்கள் ஏறத்தாழ வழக் கொழியும் நிலையில் உள்ளன. அவற்றைப் பின்னுபவர்களும் ஏங்கோ ஒன்றிரண்டு பேர்கள்தான் இருக்கிறார்கள். யாராவது அந்த கட்டில்களை வாங்க விரும்பினாலும் கிடைப்பது இல்லை.

பெரும்பாலான ஆய்வுகள் அதிகம் பயன்படுத்தப்படாத பனம் பழக்கூழ் பற்றியே நடைபெற்று உள்ளன.
பனம் பழக் கூழ், கரோட்டினாயிட் (Carotenoids) எனும் மஞ்சள் நிறப் பொருளைக் கொண்டு இருக்கிறது. நூறு கிராம் பனம் பழத்தில் 2-253 மில்லிகிராம் கரோட்டினாயிட் இருப்பதாக அறியப் பட்டு உள்ளது. இது விட்டமின் ஏ – வுக்கான ஒரு மூலப் பொருள் ஆகும்

பனம் பழக் கூழில் உள்ள பெக்ரின், உணவு பொருள்களை உறுதியாக்க/கூழ் நிலையில் பேண உதவும் ஒரு பொருளாக இருக்கிறது.

ஃப்ளாபெல்லிஃபெரின் (Flabelliferin), பனம் பழத்தில் காணப்படும் சிறு கசப்பு, காறல் சுவைக்கு காரணமாக உள்ள பொருள் ஆகும். இதனை பழக் கூழில் இருந்து பிரித்து எடுத்து விட்டால் பழக் கூழை வேறு உணவு பொருட்களில், ஜாம் போன்றவற்றில் நிரப்பியாக பயன் படுத்த முடியும். இதற்கு நுண்ணுயிரிகளை அழிக்கும் இயல்பும் உள்ளது.

எலிகளில் செய்த ஆராய்ச்சியில், ஃப்ளா பெல்லிஃபெரின் இரத்த சர்க்கரை அளவை குறைப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மனிதர்களுக்கும் இரத்த சர்க்கரை அளவை பனம் பழத்தில் உள்ள இந்த பொருள் குறைக்குமா என்ற சோதனைகள் வேறு சில நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் இத்தகைய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

TAMILNADU PALM PRODUCTS DEVELOPMENT BOARD