Latest Posts

குறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்

- Advertisement -

பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை குறைந்த செலவில் வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகளை மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்க்கலாம்.


வெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச் செடிகளில் மேயும். அசாதாரமாண தட்ப வெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி கிடைக்கும் புல் பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக் கூடியது. உலகில் மாட்டுப் பாலை விட சில இடங்களில் ஆட்டுப் பாலையே விரும்பி அருந்துகின்றனர். அது போல் ஆட்டு இறைச்சியும் ஒரு முக்கிய உணவாகும். வரலாற்றுக் கூற்றுப்படி ஆடுகளே முதன் முதலில் வளர்க்கப்பட்ட விலங்கு ஆகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் ஆட்டின் பால், இறைச்சி, முடி, தோல் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்து உள்ளனர்.


இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு.
ஆடுகள் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும். பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும்.


ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், பூடுகள், வேளாண் பயிர்க் கழிவுகள் மேலும் வேளாண் துணை விளை பொருட்கள் போன்ற அனைத்தையும் உண்பதால் தீவனப் பராமரிப்புக் குறைவு.


வெள்ளாட்டை செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும் போது வெள்ளாடுகள் மிதவெப்பப் பகுதிகளுக்கு ஏற்றவை.


கிராமங்களைச் சுற்றி உள்ள பகுதிகளில் பால் பொருட்கள் தொடர்பான குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு ஆடு வளர்ப்பு பெரும் உதவி புரிகின்றது.


வெள்ளாட்டு இனங்களைப் பொறுத்த வரை மலபாரி (டெல்லிச்சேரி) அட்டபாடி, சேனன் மலபாரி கலப்பு இனங்கள் அதிகம் காணப்படுகின்றன.


வயது முதிர்ந்த ஆடுகளை வாங்கும் போது அதன் பால் உற்பத்தித் திறனை அறிந்த பின் வாங்குதல் நலம். ஒரு நாளின் உற்பத்தி அளவு என்பது அடுத்தடுத்த இரண்டு கறத்தலில் பாலின் அளவு 0.5 கிகி அதிகமாக இருப்பதாகும்.


இளம் ஆடுகளை வாங்கும் போது அதன் குட்டி ஈனும் அளவைப் பார்த்து வாங்க வேண்டும். அதோடு ஆடு எந்த ஒரு உடல் குறைபாடும் இன்றி இருக்க வேண்டும்.
ஆடுகளின் 120 நாள் பால் உற்பத்தி அளவை வைத்தும், 2 வயதில் அது ஈன்ற குட்டிகள் எண்ணிக்கையை வைத்தும் ஆட்டின் செயல்திறனைக் கணிக்கலாம்.


தமிழ்நாட்டில் மூன்று வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. அவை, கன்னி ஆடுகள், கொடி ஆடுகள், சேலம் கருப்பு கன்னி ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும்.

உயரமான ஆடுகள், கருமை நிறம் கொண்டவை.. முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் இருக்கும். அடி வயிற்றுப் பகுதி மற்றும் கால்களின் உட்புறத்தில் வெள்ளை நிறம் காணப்படும். இத்தகைய நிறம் அமையப் பெற்ற ஆடுகளை ‘பால்கன்னி’ என்றும், வெண்மை நிறத்திற்குப் பதிலாக செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செங்கன்னி’ என்றும் அழைக்கப்படுகிறது.


கொடி ஆடுகளும் தூத்துக்குடி, எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் வட்டங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. மிக உயரமான இவ்வகை ஆடுகள் நீண்ட கழுத்தும், உடலும் கொண்டவை. வெள்ளையில் கருமை நிறம் சிதறியது போன்ற நிறம் கொண்ட ஆடுகளை ‘கரும்போரை’ என்றும், வெள்ளையில் செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செம்போரை’ என்றும் அழைக்கிறார்கள்.


சேலம் கருப்பு வகைய ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை.. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.


இம்மூன்று இனங்களும் இறைச்சி மற்றும் தோலுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன.


இந்தியாவில் மட்டும் 19 அறியப்பட்ட இனங்கள் நாடு முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. இவை காணப்படும் இடங்களைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.


இமாலயன் இனங்கள் (மலைப்பிரதேசங்களில காணப்படுபவை) ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசத்தின் சில இடங்களில் காணப்படுகின்றன. இவ்வின ஆடுகள் வெள்ளை நிற முடியுடன் மிக வலிமையானவை. இவை காடி, ஜம்பா, காஷ்மீரி என்று வளரும் இடங்களைப் பொறுத்து பல பெயர்களில் வழங்கப்படுகின்றன.


பாஸ்மினா, சிறிய சுறுசுறுப்பான ஆடுகள். இமாலய மலை உயரங்களில் லட்சத் தீவுகள் மற்றும் ஸ்பிட்டி பள்ளதாக்குகளில் பரவி உள்ளன. செகு இன ஆடுகள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, காஷ்மீர் யாக்சர் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இது நல்ல இறைச்சியையும் சிறிதளவு பாலும் கொடுக்கக்கூடியது.


ஜமுனா பூரி, உத்திரப்பிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த இவ்வினம் மிகப் பெரிய தொங்கும் காதுகளையும், நல்ல உயரமும் உடையவை.


பீட்டல், பஞ்சாபில் காணப்படுகிறது. ஜமுனாபுரியிலிருந்தே இவ்வினம் உருவாக்கப்படுகிறது. சிவப்பு நிறத்தில் வெள்ளை பொட்டுக்களுடன் கூடியது.


பார்பரி, உத்திரப் பிரதேசத்தின் எட்டாவா, எட்டா, ஆக்ரா, மதுரா மாவட்டங்களிலும் கமல், பானிபட், சோடக் பகுதிகளிலும் (ஹரியானா) காணப்படுகின்றன.


பெராரி, நாக்பூர், மகாராஷ்டிராவின் வார்டா மாவட்டம், மத்தியப் பிரதேசத்தின் நினார் மாவட்டங்களில் பரவியுள்ளன.


கத்தை வாரி, இது கட்ச், வடக்கு குஜராத்,, ராஜஸ்தான் பகுதிகளை தாயகமாகக் கொண்டது. இவ்வகை ஆடுகள் கறுப்பு நிறத்தில் கழுத்தில் சிவப்பு நிறமுடன் காணப்படுகினறன.


சுர்தி இன ஆடுகள் பெராரி போன்று குட்டையான கால்களையும் வெள்ளை நிறத்தையும் உடையவை.


மலபார் (அ) தலச்சேரி இன ஆடுகள் வெள்ளை மற்றும் பழுப்பு, கறுப்பு நிறங்களில் காணப்படும்.. 2-3 குட்டிகள் போட வல்லவை.


டெக்கானியா இன ஆடுகளை ஒஸ்மனாபாத் என்றும் அழைப்பர். சமவெளிகளில் காணப்படும் ஆடுகளின் கலவை இது. இவை கருப்பு, கருப்பு வெள்ளை கலந்தோ, சிவப்பு நிறத்திலோ காணப்படும்.


ஜிபிஆர்ஐ இனம் இரு இனங்களின் கலவை ஆகும். இதன் நிறம் கருப்பில் இருந்து வெள்ளை நிறம் வரை வேறுபடும்.


பெங்கால் இனம் கருப்பு, பழுப்பு (அ) வெள்ளை என மூன்று நிறங்களில் காணப்படுகின்றன. இவை சிறிய குட்டையான இனங்கள். இதன் இறைச்சி உயர்தரமானது. இது ஆண்டுக்கு இருமுறை தலா இரு குட்டிகள் ஈனும்.


அஸ்சாம் இன ஆடுகள் குட்டையான உருவம் கொண்டவை. இவ்வாடுகள் அஸ்சாம் மலைப் பகுதிகளிலும், கிழக்கு மாநிலங்களிலும் காணப்படுகின்றன.


டோகன் ஸ்பெர்க், வடக்கு ஸ்விட்சர்லாந்தின் டோகன்ஸ்பெர்க்கை தாயகமாகக் கொண்ட இவ்வினம் மென்மையான நன்கு வளையும் தன்மையுடைய தோலை உடையது. பொதுவாக கொம்புகள் காணப்படுவதில்லை.


சேனன், சுவிட்சர்லாந்தின் சேனன் பள்ளத்தாக்கில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் அதிக உற்பத்திக்கும், மிருதுவான ரோமத்திற்கும் புகழ் பெற்றது.


ஆல்பைன், ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் தோன்றிய இனம்.. இவ்வினம் பிரெஞ்ச், சுவிஸ், ராக் அல்பைன் போன்ற இனங்களிலில் இருந்து கலப்பினச் சேர்க்கையில உருவாக்கப்பட்டது. பல நிறங்களில் காணப்படும் .


நுபியன், வடகிழக்கு ஆப்பிரிக்காவின் நுபியன் பகுதியில் இவ்வினம் அதிகமாகக் காணப்படுகிறது. இது நீண்ட கால்களை உடைய ஆடு. இந்த நுபியன் இனத்தை இந்தியாவின் ஜமுனாபுரியுடன் கலப்பு செய்து ஆங்கிலோ நுபியன் என்ற இனம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.


ஆங்கிலோ நுபியன், இது வளைந்து தொங்கும் காதுகளுடன் ரோமன் மூக்குடன் கூடிய மிருதுவான தோல் கொண்ட இனம். ஆடுகளின் ஜெர்ஸி என்று அழைக்கப்படுகிறது. மடி மிகப் பெரியதாக காம்புகள் பெரியதாக தொங்கிக் கொண்டு இருக்கும். அங்கோரா
பொதுவாக உலகின் எல்லா இடங்களிலும் வெள்ளாடுகள் பால், இறைச்சி தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன.

-டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news