Latest Posts

பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் காயர் பித், வேளாண்மையிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது!

- Advertisement -
தமிழ்நாட்டில், கரிசல் மண், செம்மண், வண்டல் மண், களிமண், சரளை மண், தேரிக்காடுகள் எனப் பலவகையான மண் வளம் உள்ளது.
ஆனால், கொங்கு மண்டல மண், சற்றே வெளிரி இருக்கின்றது. இது மதிர் மண். ஓடை மண் என்றும் சொல்வார்கள். சுண்ணாம்புச் சத்து மிகுந்து இருப்பதால், வெள்ளை நிறமாக இருக்கின்றது. உறுதியான பாறைகள் கிடையாது. சரளை போல உதிரக்கூடியது.
என்னுடைய நிலத்தில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை உரம்தான் பயன்படுத்துகின்றேன். இதுவரை ஒரு மூடை யூரியா கூடக் கலந்தது இல்லை.
விளைச்சல் குறைவாக கிடைத்தாலும், யூரியா போட்டு விளைவித்த மஞ்சள், குவின்டாலுக்கு 6500 ரூபாய் எனைறால் எங்களுக்கு, குவின்டாலுக்கு ரூ 13000 தருகின்றார்கள்.
இப்போது நாங்கள் தென்னை நார் ஏற்றுமதியும் செய்கிறோம். தேங்காய் மட்டையை உரிக்கும்போது, அதிலிருந்து தூளாக விழுகின்ற ஒரு துணைப்பொருள், காயர் பித் (Coir Pith).
2000 ஆம் ஆண்டின் தொடக்கம் வரையிலும், இந்த காயர் பித் என்கின்ற, தென்னை நார்க்கழிவின் பயன்பாடு யாருக்குமே தெரியாது. எனவே, மொத்தமாகத் திரட்டி வைத்து, சாலையின் ஒரு ஓரமாகப் போட்டு எரித்து விடுவதுதான் வழக்கமாக இருந்தது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம், இந்தத் தென்னை நார்த் துகள்களை எடுத்துச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டது. இந்தக் துகள்களை, மண்ணுக்குப் பதிலாகப் பயன்படுத்தி, பயிர்களை விளைய வைக்கலாம்; அதுவும் குறைந்த அளவு தண்ணீரில் பன்மடங்கு விளைச்சல் பெறலாம் என்பதைக் கண்டு அறிந்தார்கள்.
இந்தக் துகள்களில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்றவற்றுடன் நீர் கலந்து,
அவற்றின் வீரியத்தைக் குறைத்து, கட்டி கட்டியாக வார்ப்பித்து, அவற்றின் மீது பயிர்களை விளைய வைக்கின்றார்கள்.
இந்தக் கழிவுகளை, சாலை ஓரங்களில் போட்டு எரிப்பது, சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு என்பதால், அந்தத் துறையினர் வந்து பிடித்துக் கொள்வார்கள். கடுமையான தண்டத் தொகை விதித்துப் பணம் பறித்து விடுவார்கள்.
அந்தக் காலகட்டத்தில், நான் இந்தத் தொழிலுக்கு வந்தேன்.
இந்த கழிவுத் துகள்களை என்ன செய்வது? எங்கே கொண்டு போய்க் கொட்டுவது? என்று திகைத்துக் கொண்டு இருந்த விவசாயிகளிடம், ‘அவற்றை என் நிலத்தில் கொண்டு வந்து கொட்டுங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன்.
அப்படியே அவர்களும் கொண்டு வந்து கொட்டினார்கள். அப்படிக் கொட்டுவதற்கு, ஒரு டிராக்டருக்கு 200 ரூபாய் கட்டணமாகவும் கொடுத்து விட்டுப் போனார்கள்.
ஆனால், இருபது ஆண்டுகளுக்கு உள்ளாக, நிலைமை தலைகீழாகி விட்டது.
இப்போது, நார் பிரித்து எடுக்கின்ற ஒரு சிறு தொழிற்கூடத்தில் இருந்து,
நான் அந்தக் கழிவுகளைப் பெறுவதற்கு, அவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முன்பணம் கொடுக்க வேண்டும்; ஒரு டிராக்டர் கழிவுதுகள்களுக்கு 12000 ரூபாய் கட்டணம் நான் கொடுக்க வேண்டும்;
அவர்கள் சொல்லுகின்ற நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்கு உள்ளாக அங்கே சென்று, நான் அள்ளிக்கொண்டு வர வேண்டும். தவறினால், வேறு போட்டியாளர் உள்ளே புகுந்து விடுவார். அந்த அளவிற்கு, அது விலை மதிப்பு உள்ள பொருள் ஆகி விட்டது.
இன்னும் ஐந்து பத்து ஆண்டுகள் கழித்து, பூச்சி மருந்து தெளிக்காமல் பயிர் விளைவிக்க வேண்டும் என்று சொன்னால், காயர் பித்தில் மட்டும்தான் நடக்கும்.
இன்று, இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சில தெற்கு ஆசிய நாடுகளைத் தவிர, சீனா உட்பட அனைத்து நாடுகளிலும், இந்த முறையிலும் விவசாயம் பெருமளவில் நடைபெறுகின்றது.
ஐரோப்பா மற்றும் ஜப்பானில் விளைநிலங்களின் மீது பசுமைக் குடில்கள் அமைத்து, வெப்பத்தைக் குறைத்து, அதன் மூலமாக இரண்டு மடங்கு வேளாண்மையைப் பெருக்குகின்றார்கள். ஒரு விதையை ஊன்றி, அது முளைப்பதற்குத் தேவையான பருவநிலையை ஏற்படுத்துவதுதான் அந்த முறை.
எந்த விதையாக இருந்தாலும், அதை முளைக்க வைத்து விடுவார்கள்.
அப்படி முளைக்க வைப்பதற்குப் பயன்படுத்துகின்ற மண்தான் இந்தத் தென்னை நார்த் துகள்கள்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்,
இப்போது பெரும்பாலும், காயர் பித் விவசாயம்தான் நடைபெறுகின்றது.
அன்றாடத் தேவையான காய்கறிகள் முழுமையும் மண்ணில் விளைவிப்பது இல்லை;
காயர் பித்தில்தான் விளைய வைக்கின்றார்கள்.
ஒரு கிலோ காயர் பித், 15 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி உள்வாங்கி வைத்துக் கொள்ளும். அந்தத் தண்ணீரை, அதில் இருந்து நீங்கள் பிரித்து எடுக்கவே முடியாது.
எனவே, அதில் செடிகள் விளைவதற்கு, நீங்கள் கூடுதலாகத் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய தேவை மிகமிகக் குறைவு. தென்னை நார்க்கழிவில் இருந்து சுமார் 150 பொருள்களை ஆக்க முடியும்.
சான்றாக, சாதாரண விளைநிலத்தில், பத்து ஆயிரம் சதுர அடியில், பத்து ஆயிரம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி, 100 கிலோ தக்காளியை விளைய வைக்கின்றீர்கள் என்றால், அதுவே, இந்தக் காயர் பித்தைப் பயன்படுத்தி, 1000 சதுர அடியில், 100 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 1000 கிலோ தக்காளி விளைய வைக்கலாம்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய இந்த நான்கு மாநிலங்களில்தான் தென்னை மரங்கள் அதிகம்.
ஒரு இஞ்ச் கூட விடாமல் தேங்காய் மட்டைத் துகள்களை ஏற்றுமதி செய்கின்றார்கள்.
இன்னும் சொல்லப்போனால், தலைநகர் சென்னையில் மட்டும், காயர் பித் ஏற்றுமதி செய்கின்ற 120 நிறுவனங்கள் இயங்குகின்றன. எனவே, தமிழ்நாட்டில் மட்டும் அல்ல;
தென்னிந்தியா முழுமையுமே இந்தத் தொழில் வேகமாகப் பரவி விட்டது.
கடந்த ஆண்டில் மட்டும், காயர் பித் ஏற்றுமதி மூலம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பணம் 1200 கோடி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த வகையில் ஒரு ரூபாய் கூடக் கிடைத்தது இல்லை என்பதை ஒப்பிடுகையில், இது எவ்வளவோ முன்னேற்றம்.
இந்த ஆண்டு, அதை விட உயரும்.
காயர் பித் உலகின் பெரும்பாலான நாடுகளுக்குச் செல்கின்றது. நான் மட்டுமே, 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றேன். இப்போது இந்தத் தொழிலுக்கு,
அரசு 75 விழுக்காடு மானியம் தருகிறது. இந்தத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து இருக்கின்றோம். அதற்கு நான்தான் பொருளாளர்.
கயிறு மற்றும் தென்னை நார் கழிவு ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற பத்து அல்லது பதினைந்து பேர்கள் சேர்ந்து ஒரு குழுமத்தை, உருவாக்கினால், நடுவண் அரசின் கயிறு வாரியம் காயர் போர்டு, 75 விழுக்காடு மானியமாகத் தருகின்றார்கள்.
தற்போது, காங்கேயம், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் மூன்று குழுமங்கள் தொடங்கி, தொழில் நடக்கின்றது. எங்களுடைய திருப்பூர் மாவட்ட தென்னை நார்க்கழிவுத் தொழில் முனைவோர் சேர்ந்து,
ஒரு குழுமத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.
இந்த காயர் பித் விவசாயம் குறித்து நமது மக்களிடம் விழிப்பு உணர்வு இல்லை.
இதுவும் விவசாயத்தைக் கெடுக்கின்றது என்று சில போட்டியாளர்கள் பொய்ப் பரப்புரை செய்து, இந்தத் தொழிலையும் தடை செய்ய முயற்சிக்கின்றார்கள்.
இப்போது காயர் பித்தைப் பயன்படுத்தி பல வகையான பயிர்களை விளைவிக்கத் தொடங்கி விட்டார்கள். வியப்பான செய்தி என்ன என்றால், இத்தாலியில் ஒரு இடத்தில் காயர் பித்தைப் பயன்படுத்தி மஞ்சள் விளைவிப்பதைப் பார்த்தேன்.
மஞ்சள் விளைவதற்கு ஏற்ற பருவநிலை அந்த நாட்டில் இல்லாவிட்டாலும் பசுமைக் குடில்கள் அமைத்து, தேவையான அளவில் ஏற்பாடு செய்து கொள்கின்றார்கள்.
எனவே, இனி எந்தப் பயிரையும், எந்த நாட்டிலும் விளைய வைக்க முடியும் என்கிற அளவிற்கு வேளாண்மையில் ஒரு பெரும் புரட்சி ஏற்பட்டு இருக்கின்றது.
நான் துபாயில் இருந்து அபுதாபி செல்கின்ற வழியில், எமிரேட்ஸ் ஆர்கானிக் புராடக்ட்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சென்றேன். அந்த ஒரு நிறுவனத்தில் மட்டும், காயர் பித் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு, 1200 கிலோ தக்காளி விளைவித்து, அமீரகக் கூட்டு அமைப்பில் உள்ள ஆறு நாடுகளுக்கும் அனுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
அந்த நிறுவனத்தைச் சுற்றிலும் வெறும் வெண்மணல் பரப்புதான். பாலை நிலம்தான்.
நாம் எப்படி இரும்புத்தொழிற்சாலை அமைத்து இருக்கின்றோமோ, அதுபோல அவர்கள் விவசாயத் தொழிற்சாலை அமைத்து இருக்கின்றார்கள்.
காயர் பித் மட்டும் அல்ல, ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில், தரையில் அல்லாமல், தண்ணீரில் மிதக்கின்ற செடிகளில் முட்டைக்கோஸ் விளைகின்றது. அதற்குப் பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்துகின்றார்கள்.
என்னிடம் பொருள்கள் வாங்குகின்ற ஒரு அமெரிக்க நிறுவனம்,
பாக்கு மட்டைத் தட்டு கேட்டார்கள். நான் சோதனை முறையில் 25000 ரூபாய் மதிப்புள்ள தட்டுகளை அனுப்பினேன். எனக்கு முன்பாகவே நமது ஆட்கள் எத்தனையோ பேர், நமது பாக்கு மட்டைத் தட்டுகளை அமெரிக்காவில் கொண்டு போய் விற்கின்றார்கள்.
ஆனால், அவர்கள் palm leaf plates என பில் எழுதுவது இல்லை. palm tree plates என்றுதான் எழுதுகின்றார்கள். வேறுபாடு என்ன என்றால், அமெரிக்கச் சட்டப்படி, இலைத்தட்டு என்றால், அந்த இலையில் அமிலங்கள் இல்லை என அதற்கு ஒரு சான்று பெற வேண்டும். எனவே, பாக்கு மரத் தட்டு என எழுதி தப்பித்துக் கொள்கின்றார்கள்.
எனக்கு இதைப் பற்றித் தெரியாது. palm leaf plates என்று எழுதி அனுப்பி விட்டேன். இறக்குமதி அதிகாரிகள் அதைப் பிடித்து வைத்துக் கொண்டார்கள்.
இனி அதை அவர்களிடம் இருந்து விடுவிக்க முடியாது; அதில் அல்கலின்;! இல்லை என்பதற்கு நீங்கள் சான்று தர வேண்டும்; அல்லது எரிக்கத்தான் வேண்டும்; அல்லது நீங்கள் இந்தியாவுக்குத் திரும்ப எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்று சொன்னார்கள்.
சரி; எப்படியும் இனி நாம் இதை கூடுதலாக அனுப்பத்தான் போகின்றோம்.
எனவே, அதில் அல்கலின்ஸ் இல்லை என்பதற்கான சான்று பெற்று விடுவோம் என முடிவு செய்து, தமிழ்நாட்டில் அதற்கான சான்று தருகின்ற வேளாண் ஆய்வுக்கூடங்களை அணுகினேன். அந்தச் சோதனையைப் பல இடங்களில் செய்கின்றார்கள்.
ஆனால், ஒரு சோதனைக்கு ஒன்றரை இலட்சம் முதல் இரண்டு இலட்சம் ரூபாய் கட்டணம் கேட்கின்றார்கள். எங்கே குறைவான கட்டணத்தில் செய்ய முடியும் என்பதை ஆராய்ந்து பார்த்ததில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் செய்யலாம் என்று சொன்னார்கள். அங்கே சென்றேன்.
அங்கே நிறைய புதிய கருவிகள் இருக்கின்றன. அதைப்பற்றி, அங்கே உள்ள பேராசிரியர்கள் பாடம் நடத்துகின்றார்கள். ஆனால், யாருக்குமே அதை எப்படிச் செய்வது என்ற பயிற்சி இல்லை.
அவரைப் பாருங்கள், இவரைப் பாருங்கள் என்று சொன்னார்கள். அலைய வைத்தார்கள். கடைசியாக ஒருவரைப் பிடித்தோம்.
ஒரு பொருளை, 100 டிகிரி வெப்பத்தில், அரை மணி நேரம் வைத்து இருந்தால்தான், அதில் உள்ள அமிலப் பொருள்கள் தனியாகப் பிரிந்து வருகின்றது. இந்த சோதனைகளுக்குப் பிறது சான்று தந்தார்கள். அதை வைத்துக்கொண்டு, நான் இதுவரை 150 கன்டெய்னர்களுக்கும் மேல் ஏற்றுமதி செய்து விட்டேன்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தருகின்ற சான்றிதழை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்.
வேளாண்மைக் கருவிகளை ஆக்குவதில் முதல் இடத்தில்  ஜெர்மனிதான் இருக்கிறது..
ஜப்பானியர்களுக்கு விளை நிலம் இல்லை. எனவே, கடலில் கப்பல்களை நிறுத்தி, அதில் கூட விவசாயம் செய்கின்றார்கள். பன்மடங்கு விளைய வைக்கின்றார்கள்.
நாம்தான் விவசாயம் என்கின்றோம். ஆனால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், தக்காளி தொழிற்கூடம் (Tomato Factory), புளுபெர்ரி தொழிற்கூடம், ஸ்ட்ரா பெர்ரி தொழிற்கூடம் என்றுதான் பேசுகின்றார்கள்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒரு லில்லிபுட் தொழிற்கூடத்திற்கு நான் சென்று பார்த்தேன். அவர், 1000 ஓக்ஸ் (Thousand Oaks) என்ற இடத்தில் ஒரு வேளாண் தொழிற்கூடம் வைத்து இருக்கின்றார். அது, 2,50,000 சதுர அடிப் பரப்பில் பரந்து விரிந்து இருக்கின்றது. 11 இலட்சம் பூங்கொத்துகளுக்குத் தேவையான பூக்களை ஒரு நாளில் விளைவிக்கின்றேன் என்றார்.
ஒரு பூங்கொத்து என்ன விலை? என்று கேட்டேன். ஒரு டாலர் என்றார். அப்படியானால், அவருடைய ஒருநாள் வரவு செலவு 11 இலட்சம் டாலர். இந்திய ரூபாயில் 8.8 கோடி ரூபாய்.
– ஈரோடு ஏற்றுமதியாளர் திரு. பூங்கொடி செந்தில் அவர்களின் பேட்டியில் இருந்து..
                                                                                                              – அருணகிரி
- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news