இருப்புத் தொகைகளை ஒப்பிட்டு சரிபார்க்க, எக்செல்லின் கன்சாலிடேட் வசதி

0

நிதி ஆண்டு இறுதியில் நிறுவனங்கள் கணக்குகளை முடித்து இலாப நட்ட கணக்கு, இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றை தயார் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து அந்த ஆண்டு இறுதி இருப்பை அடுத்த நிதியாண்டிற்கான தொடக்க இருப்பாக கொண்டு செல்வார்கள்.


அவ்வாறு கொண்டு செல்லும் போது அதிக எண்ணிக்கையிலான கணக் கிருப்புகளைக் கொண்டு செல்லும் போது அந்த தொகைகள் அனைத்தும் சரியான தொகைகள்தானா என ஒப்பிட்டு சரிபார்க்க எக்செல்லின் Consolidate எனும் வசதியை பயன்படுத்தலாம்.


ஒரு நிறுவனத்தின் ஆண்டு இறுதி இருப்புத் தொகையின் பட்டியல் எக்செல் தாள்1 இல் A2 முதல் B10 வரையிலும்,
எக்செல் தாள்2 இல்A2 முதல் B10 வரையிலும் இருப் பதாகக் கொள்ளுங் கள். ஒப்பீடு செய்து சரி பார்க்க அதே எக்கசெல் கோப்பின் புதிய எக்செல்தாள் 3 இல் A2 வில் கர்சரை வைத்து திரையின் மேலே Data எனும் திரையை தோன்றச் செய்யுங்கள். பின்னர் அதில் உள்ள Data Tools எனும் குழுவில் உள்ள Consolidate எனும் வாய்ப்பின் மீது சொடுக்குங்கள்.


உடன் விரியும் Consolidate எனும் டயலாக் பாக்சில் function என்பதன் கீழுள்ள கீழிறங்கும் பட்டியில் இருந்து Sum எனும் வாய்ப்பினை தேர்ந்தெடுத்துக் கொள் ளுங்கள். தொடர்ந்து Reference எனும் பெட்டியில் ஆண்டு இறுதி இருப்புத் தொகை பட்டியில் உள்ள எக்செல் தாள்1இல் A2 முதல் B10 வரையிலும் தேர்வு செய்து, அருகில் உள்ள Add எனும் பொத்தானை சொடுக்குங்கள்.


பின்னர் மீண்டும் அதே Reference எனும் பெட்டியில் நடப்பு ஆண்டின் தொடக்க இருப்புத் தொகை பட்டியில் உள்ள எக்செல்தாள் 2இல் A2 முதல் B10வரையிலும் தேர்வு செய்து, அருகில் உள்ள Add மீது சொடுக்குங்கள்.


அதன் பின்னர் இதே டயலாக் பாக்சின் கீழ்ப்பகுதியில் வலது புறம் உள்ள use labels in என்பதன் கீழுள்ள Top row , Left column, Create links to source data ஆகிய தேர்வுசெய் பெட்டியின் வாய்ப்புகளை தேர்வு செய்து ஓகே கொடு ங்கள். உடன் நாம் தேர்வு செய்த எக் செல்லின் மூன்றாம் தாளில் முதல் இரண்டு தாள்களிலும் உள்ள இரண்டு பட்டிய ல்களும் ஒன்றாக சேர் ந்து, ஒரே பட்டியலாக வந்து சேரும். தொடர்ந்து difference எனும் மூன்றாம் நெடுவரிசைக்கு பெயரிட்டு இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை கண்டு பிடிக்கலாம்.


எக்செல்லின் இந்த Consolidate எனும் வசதியைக் கொண்டு மற்ற நிறுவனங்களுக்கு நம் நிறுவனம் கொடுக்க வேண்டிய அல்லது மற்ற நிறுவனங்களில் இருந்து நாம் பெற வேண்டிய தொகையை ஒப்பிட்டு சரி பார்ப்பதற்கு, வங்கி இருப்பை நம் புத்தக இருப்புடன் ஒப்பிட்டு சரி பார்ப்பதற்கு பேருதவியாய் விளங்குகின்றது.

-முனைவர் ச. குப்பன்

தனித்தனி பார்வையாளர்களை குறி வைத்து வென்ற நெட்ஃபிளிக்ஸ்!

0

பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நெட்ஃபிளிக்ஸ் சுமார் ஏழு மில்லியன் அமெரிக்க சந்தாதாரர்களுக்கு இணையம் மூலம் வீடியோ சேவை செய்வதுடன் தொடங்கியது. ஓரிரண்டு ஆண்டுகளிலேயே அது உலகம் முழுவதும் 93 மில்லியன் சந்தாதாரர்களை சென்றடைந்தது.


1990 களில் நெட்ஃபிளிக்ஸ் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது, அது மின்னஞ்சல் மூலம் வீடியோக்களை முக்கியமாக திரைப்படங்களை வழங்கியது. இது அந்தக் கால வீடியோ கேசட் வாடகை நிறுவனங்களை நினைவு படுத்துவதாக அமைந்து உள்ளது.


2000 ஆண்டுகளில் கம்ப்பிரஷன் தொழில் நுட்பம் அறிமுகமாகி, இன்னும் பல இல்லங்களுக்கு அதிக விரைவு இணைய சேவை கிடைக்கத் தொடங்கியது. இதனால் மிகப் பெரிய வீடியோ ஃபைல்களை எந்த தடையும் இல்லாமல் இணையம் மூலம் அனுப்பி வைக்க முடிந்தது.


இந்த இணைய முன்னேற்றம், நெட்ஃபிளிக்சின் தொழில் நுட்பப் பார்வையை மாற்ற வைத்தது. மெயில் மூலம் வீடியோ அனுப்பும் சேவை, பின்பு வீடியோ ஸ்டிரீமிங் சேவையாக மலர்ந்தது. இந்த வீடியோ ஸ்டிரீம் சேவை 2007 இல் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவிலேயே இத்தகைய ஸ்டிரீமிங் வர்த்தக உலகின் முக்கிய பகுதியாக மாறிப் போனது.
வெவ்வேறு மாதிரிகள், வெவ்வேறு உத்திகள்


ஆண்டுகள் கடந்தன. தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு அலைகள் (பிராட்காஸ்ட் வேவ்) மூலம் வழங்கப்பட்டன. இது புரட்சிகரமான தொழில் நுட்பம். இதனால் நாடு முழுவதும் வயர்லஸ் சிக்னலை தடையில்லாமல் அனுப்பி வைக்க முடிந்தது. ஆனால் ஒளிபரப்புத் தொழில் நுட்பத்தில் ஒரே ஒரு நிகழ்ச்சியையே ஒரு நேரத்தில் அனுப்பி வைக்க முடிந்தது என்பது குறிப்பிடத் தக்கது.


நெட்ஃபிளிக்ஸ் போன்ற வீடியோ ஸ்டிரீமிங் சேவையானது, இணையம் வழியாக ‘ஆன் டிமாண்ட்’ ப்ரோகிராம்களை வழங்கத் தொடங்கியது. இதனால் பார்வையாளர்கள் தாங்கள் விரும்பும் ப்ரோகிராமை எங்கு பார்க்க வேண்டும், எப்போது பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். ஆனால் தொலைக்காட்சி ஒளிபரப்பில் அவர்கள் ஒளிபரப்பு செய்யும் நேரத்தில் மட்டுமே நிகழ்ச்சிகளைப் பார்வையிட முடியும் என்பது கவனிக்கத் தக்கது.


எனவே வழக்கமாக ஒளிபரப்பு செய்யும் சேனல்கள் தங்கள் அட்டவணையை வேறு விதமாக மேம்படுத்த வேண்டி இருந்தது. இப்போது பல நேரடி ஒளிபரப்பு சேனல்கள், ஒரே நிகழ்ச்சியையே, வெவ்வேறு நேரங்களில் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.


ஒளிபரப்பு சேவைகளும், கேபிள் சேனல்களும் பார்வையாளர்களை, விளம்பர தாரர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் பணம் ஈட்டி வருகின்றன. ஆனால், நெட்ஃபிளிக்ஸ் போன்றவை, இப்போது ஆன்லைனில் கிடைக்கும் மின்னணு நூலகம் போல செயல்பட்டு வருகின்றன. நெட்ஃ பிளிக்ஸ், அமேசான் வீடியோ மற்றும் சீசோ (seeso) போன்றவை சந்தாதாரர்களின் தொகையால் வருமானம் ஈட்டி வருகின்றன. பார்வையாளர்கள் இவர்களின் மின்னணு நூலகத்தைப் பயன்படுத்த மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டும்.


இவர்களின் நுட்பத்தை இப்போது எச்பிஓ (HBO) கூட பயன்படுத்தி வருகிறது. ஏற்கெனவே அந்தக் காலத்தில் இவர்கள் கேபிளில் ஒளிபரப்பிய எச்பிஓ ப்ரோ கிராம்கள், இப்போது வீடியோ ஆன் டிமாண்ட் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்து வருகின்றன.


வாடிக்கையாளர்களின் சந்தாத் தொகை யில் நடத்தப்படும் சேவைகள் இவ்வளவு வெற்றிபெறக் காரணம், தங்களது மாதத் தொகைக்குத் தகுதியான சேவையை வாடிக் கையாளர்களே தேர்ந்தெடுத்துக் கொள் ளலாம் என்பதே.


இதனால் ஒவ்வொரு ஷோவுக்கும் மாஸ் ஆடியன்சையும், அவர்களை வைத்து விளம்பரம் பெற, விளம்பரதாரர்களையும் தேடிப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களுக்குக் கிடைத்த சந்தாதாரர்கள் மூலம், தகுந்த வருமானம் ஈட்டி விடுகின்றன.


இப்போது ஏராளமான போர்ட்டல்கள் மிகக் குறிப்பிட்ட வகை, அரிதான மதிப் பான நிகழ்ச்சிகளை சந்தா அடிப்படையில் கொடுக்கின்றன. குறிப்பாக WWW நெட்ஒர்க், விளையாட்டுப் போட்டிகள், முக்கியமா னவர்களின் நிகழ்ச்சிகள், அறிவியல் வெற்றியாளர்களின் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரம் இல்லாத நிகழ்ச்சிகளைக் கொடுத்து வருகின்றன. மேலும் இளம் குழந்தைகளுக்கு விளம்பரம் இல்லாத நிகழ்ச்சிகளை நோகின் (Noggin) சேனல் கொடுத்து வருகிறது.


இன்றும் கூட நெட்ஃபிளிக்சின் கொள்கை முழக்கம் ஒன்றுதான் “நமக்கு மொத்தமாக வெகு திரளான பார்வை யாளர்கள் தேவையில்லை. தனித் தனியான ஒவ்வொரு பார்வையாளரும் நமக்கு முக்கியம்”


பொதுப் பார்வையாளர்களை விட, தனி நபர்களின் விருப்பு வெறுப்பு மாறுபடுகிறது என்ற உளவியலை நெட்ஃபிளிக்ஸ் நன்கு அறிந்து வைத்து உள்ளதால், இன்று 93 மில்லியன் பார்வையாளர்களுடன் இன்று வெற்றிநடை போடுகிறது.

-ஹெலன் ஜெஸ்டின்

இணையம் வழியாக ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி

0

ஏற்றுமதி-இறக்குமதி தொழிலை முழுமையாக தெரிந்து கொண்டு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் இணையதளம் வழியாக இலவசமாக ஏற்றுமதி – இறக்குமதி தொழில் பற்றிய அடிப்படை முறையை கற்கலாம்.
தனியார் அமைப்புகள் நடத்தும் ஏற்றுமதி தொடர்பான பயிற்சி வகுப்புகள் பெரும்பாலும் ஒரு கருத்தரங்கம் போலவே நடைபெறுகிறது. இதில் பங்கு பெறுவோர் ஒரே நாளில் முழுமையான தகவல்களைழீயீ பெற இயலாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம் ஏற்றுமதி-இறக்குமதி பற்றிய அடிப்படை கல்வியை இலவசமாக இணைய தளம் வழியாக கற்பிக்கிறது.


எளிய ஆங்கிலத்தில், பல்வேறு பாடப் பிரிவுகள் இதில் அடங்கி உள்ளவீ. வீடியீ காட்சி வசதிகளும் கூட உள்ளன. ஆங்கிலத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இதில் சேர்ந்து பயன் பெறலாம். வயது, கல்வித் தகுதி இதற்கு எந்த ஒரு தடையும் இல்லை.


முழுமையான விவரங்கள் niryatbandhu.iift.ac.in/exim வலை தளத்தில் உள்ளன. அனைத்துப் பாடங்களையும் படித்த பின்பு, விருப்பம் இருந்தால், ஆன்லைன் தேர்வு எழுதி, ருபாய் இரண்டாயிரம் செலுத்தி, நடுவண் அரசின் சான்றிதழையும் பெறலாம்.

-எஸ். எஸ். ஜெயமோகன்

எம்எஸ்எம்இ பதிவு எண் பெறுவது எப்படி?

0

குறு, சிறு, நடுத்தர தொழிலகங்களை (Micro, Small, Medium Enterprises) சுருக்கமாக எம்எஸ்எம்இ (MSME) என அழைக்கிறார்கள். பொதுவாக தொழிலகங்களை, அவை எந்திரங்களுக்கும், கருவிகளுக்கும் முதலீடு செய்யும் தொகை அடிப்படையில் இவை வரையறுக்கப்படுகின்றன.


குறுந் தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 25 இலட்சம் வரையிலும், கருவிகளுக்கு ரூ. 10 இலட்சம் வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்கவேண்டும்.


சிறு தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 25 இலட்சம் முதல் 5 கோடி வரையிலும், கருவிகளுக்கு ரூ. 10 இலட்சம் முதல் 2 கோடி வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்க வேண்டும்.


நடுத்தர தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 5 கோடி முதல் 10 கோடி வரையிலும், கருவிகளுக்கு ரூ. 2 கோடி முதல் 5 கோடி வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்க வேண்டும்.


உற்பத்தி அல்லது சேவை நிறுவனமாக தொழில் தொடங்கும் எந்தவொரு நிறுவனத்தின் முதலீட்டு தொகையும் மேற்கண்ட வரையறைக்குள் உள்ளவாறு பதிவு செய்து கொண்டால் பின்வரும் பல்வேறு பயன்கள் அந்நிறுவனத்திற்கு கிடைக்கின்றன.


எம்எஸ்எம்இ ஆக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் தமக்கு தேவையான கடன்தொகையை வணிக வங்கிகளில் கோரும்போது அதற்காகவென தனியாக வங்கிஉத்திரவாதம் எதுவும் வழங்கத் தேவையில்லை எம்எஸ்எம்இ பதிவுஎண் மட்டுமே போதுமானதாகும் என்ற விதி உள்ளது.


எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு குறிப்பிட்ட அளவு வரை மின்கட்டணம் இல்லை. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்


எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் தங்களுக்கான பேட்டன்ட், டிரேட் மார்க் ஆகியவற்றைப் பதிவு செய்யும் போது அதற்கான பதிவு கட்டணத்தில் 50 % மட்டும் செலுத்தினால் போதும்.


எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் தங்களுடைய தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் மானியங்கள் (subsidy) வழங்கப்படுகின்றன.


எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் தொடங்கி குறிப்பிட்ட காலம் வரை சில வரிகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகின்றது.


எம்எஸ்எம்இ ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்களின் புத்தாக்கங்ளுக்கும், புதுவடிவமைப்புகளுக்கும் 75% முதல் 80% வரை அரசின் கடனுதவி வழங்கப்படுகின்றது ,


எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.


முதலில் இதற்காக legaldocs.co.in/msme-registration எனும் இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். உடன் திரையில் விரியும் படிவத்தில் பதிவு செய்ய விரும்புவோரின் பெயர், ஆதார் எண், தொழிலகத்தின் பெயர், முகவரி, வருமான வரி பதிவு எண், செல்பேசிஎண், வங்கி கணக்கு எண் என்பன போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.


இவற்றை இணைய இணைப்பு இல்லாமலும் நிரப்பி மேலேற்றம் செய்திடலாம்.


மேலும் சொந்த கட்டிடம் எனில் வீட்டு வரி செலுத்திய ஆவணம், வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த நகலுடன், அங்கு தொழிலகத்தை துவங்குவதற்கு அந்த கட்டிட உரிமையாளரின் மறுப்பின்மை கடிதம், கூட்டாண்மை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதெனில் அதற்கான சான்றாவணம், ,கம்பெனியாக பதிவு செய்யப்பட்டதெனில் அதற்கான ஆவணம், இயக்குநர் குழுக் கூட்டத் தீர்மானம் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் இதனுடன் இணைக்க வேண்டும். இவற்றை எல்லாம் முன்னரே தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.


இவை அனைத்தையும் பதிவேற்றம் செய்த உடன் அனைத்தும் சரியாக இருந்தால் அன்றே நமக்கென தனியாக எம்எஸ்எம்இ பதிவுஎண் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும். எம்எஸ்எம்இ பதிவு செய்வதற்கு பதிவு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

-முனைவர் ச. குப்பன்

பயிர் விளைச்சல் பெருந் தகவல்

0

விதைகள் மற்றும் உரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தங்களுக்கான விவரங்களை பல்லாயிரம் உழவர்களிடம் இருந்து சேகரித்து, திரும்ப அதே உழவர்களிடமே விற்பனை செய்கின்றன.


ஆறு தலைமுறைகளாக, பென் ரெயின்ஸ்கி-யின் குடும்பம், மேற்கு லோவாவில் உள்ள விண்ட்ஸ்வெப்ட் சமவெளியில் மக்காச் சோளமும் சோயாபீன்சும் பயிரிட்டு வருகிறது. ஆனால் இன்று அவர், தனது 12 ஆயிரம் ஏக்கரில் தனது புதிய பயிர்களுடன் மதிப்புள்ள தகவல்களையும் அறுவடை செய்து வருகிறார். ரெயின்ஸ்கி என்ன சொல்கிறார்?


“எதிர்காலம் எளிய தகவல் பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்படும்” என்கிறார். அவர் தனது தாத்தாவின் கையெழுத்தில் எழுதப்பட்ட நோட்டுப் புத்தகத்தைப் பாதுகாத்து வருகிறார். அதில், ஒரு மரக்கால் மக்காச் சோளம் எத்தனை கோழி முட்டைகளை உருவாக்கும் என்ற குறிப்பை எழுதி வைத்திருக்கிறார்.


கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் கிளைமேட் கார்ப் என்ற நிறுமத்தில் தகவல் பகுப்பாய்வு சேவையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ரெயின்ஸ்கி சொல்கிறார், “தனது சிறந்த பயிர்களை விதைக்கும் போது, ஆறு விழுக்காடு விதைகளைக் குறைக்கிறார். அதுபோல 11 விழுக்காடு உரங்களைக் குறைக்கிறார். ஆனால் எப்போதுமே அவரது பயிர்களே சிறந்த பயிர்களாக வளர்ந்து நிற்கின்றன. இதில் எந்த ரகசியமும் கிடையாது. இவை எல்லாம் பயிரிடும் நிலத்தின் தன்மையைக் கண்டறிந்து, அவ்வப்போது குறிப்பெடுத்து வைத்தவைதான் என்கிறார். இப்போது இவை எல்லாமே டிஜிட்டல் மென்கருவிகளாகக் கிடைக்கின்றன.


உழவர்களின் தொழிலறிவு, மகசூல்கள், எரு (உர) வகைகளின் பயன்பாடு, பயிர்கள் வளர்ச்சிக் காலம், மழையின் அளவு மற்றும் இத்தகைய பல்வேறு விவரங்களைத் தொகுத்து, பேயர், சின்கென்டா, டவ்டூபான்ட் மற்றும் பேஸ்ப் முதலிய உலகளாவிய வேளாண்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன.


இந்த நிறுவனங்கள், இத்தகைய விவரங்களை ஒரு மென்பொருளில் கொடுத்து, அந்த மென்பொருள், விதைகளின் சேர்க்கை, எருக்கள் மற்றும் அதிகபட்ச மகசூலுக்கு விதைத் தெளிப்பு முறை – போன்றவற்றை உழவர்களுக்கு முன்னறிவித்துக் காட்டுகின்றன. இதனால் இத்தகைய மென்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த மென்பொருட்களுக்கு ஏராளமான உழவர்கள் சந்தாதாரர்கள் ஆகியுள்ளனர். கிளைமேட் கார்ப் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான மைக் ஸ்டெர்ன் என்பவர், “உழவர்களின் வரலாற்று அனுபவங்களைப் பயன்படுத்தி, மென்பொருளை உருவாக்கி, டிஜிட்டல் மயமாக்கி, மீண்டும் உழவர்களிடமே விற்பனை செய்கிறோம்” என்கிறார். டேட்டாவே புதிய கரன்சி, அதாவது, “தகவலே புதிய பணத் தாள்” என்கிறார்.


வேளாண்மையை டிஜிட்டல் மயமாக்கியது புதிதாக ஏற்பட்டது அல்ல, 1980 வாக்கில், மண் வகைகளைப் பற்றிய தகவல்கள், ஆறு அங்குலம் உள்ள ஃபிளாப்பி தட்டுகளில் பதிவு செய்யப்பட்டு, உரத்தின் தேவைகளைப் பற்றி கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் இவற்றை மேம்படுத்தி, இணைய நிறுவனங்கள் மாபெரும் தகவல் வங்கியை உருவாக்கின.
இந்த நுட்பம், இன்று உழவர்களின் கைக்கணினியில், ஒவ்வொரு சதுர அடியிலும், விதைத் தெளிப்பு முறையில், எவ்வளவு விதைகளைப் போட்டால், அதிகபட்சமாக எவ்வளவு மகசூலைப் பெற முடியும் என்கிற விவரம் வரை விரிவாக கணக்கீடு செய்து அறிவிக்கிறது.


இந்த மென்பொருளில், மேலும் மேலும் உழவர்களின் தொழிலறிவும் பகிர்வு செய்யப்பட்டு, இந்த தகவல் வங்கி, இன்னும் இன்னும் விரிவாகிக் கொண்டே செல்கிறது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்டு, சிறந்த ஆலோசனைகளை உழவர்களுக்கு வழங்குகிறது. இது ஆக்கப்பூர்வமான சுழற்சி. மேலும் மேலும் அதிக தகவல்கள், இணையும் போது, அல்காரிதம்கள் அதிகரிப்பதால், துல்லியத்தன்மை கூடுகிறது.


“உழவர்களுக்கு முன்னறிவிப்பு செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக, அவர்களிடமிருந்து மேலும் மேலும் தொழிலறிவு பெறப்பட்டு, தகவல் வங்கி இன்னும் பெரிதாகிறது” என்கிறார் பகுப்பாய்வாளர் சான்ஃபோர்டு சி பெர்ன்ஸ்டெயின். 20 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில், டிஜிட்டல் வேளாண் சந்தை ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர் அதாவது சுமார் 7000 கோடி ரூபாய் என்ற அளவிலேயே எதிர்பார்ப்பு இருந்தது.


ஆனால் இன்று பெரு நிறுவனங்கள் தங்களது வேளாண் தகவல் வங்கியை இணைத்து, ஒரு ஏக்கருக்கு ஒரு டாலர் என்ற அளவில் சந்தா வசூலிக்கப்பட்டு, இத்தகைய மென்பொருட்களை புதிதாக வடிவமைக்கவும், பழையதை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. “வர்த்தக அளவில் வெற்றிகரமான இத்தகைய பெருந்தகவல் வங்கி, வருங்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது” என்கிறார் பேஸ்ப் நிறுவனத்தின் முதன்மை நிதி அலுவலர் ஹான்ஸ் யுள்ரிச் எங்கெல்.


இந்த ஓட்டம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல்லாயிரம் உழவர்களின் வியப்பூட்டும் அனுபவ அறிவுகளை ஒருங்கிணைத்து வைத்துள்ளது. பேயர் நிறுவனம் 160 மில்லியன் ஏக்கர் நிலங்களின் தகவல் அறிவுகளை ஒருங்கிணைத்து வைத்துள்ளது.


பேஸ்ப், சின்கென்டா மற்றும் டவ்டூபான்ட் ஆகிய நிறுவனங்கள் இரண்டாவது இடங்களில் உள்ளன. “யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதைச் சொல்வது கடினம். மிகக் கூடுதல் தகவல், மிகச் சிறந்த தகவல் வங்கியை கட்டமைக்கிறது” என்கிறார் டான் பர்டெட். இவர் சின்கென்டா நிறுவனத்தின் முதல் நிலைத் தலைவராக உள்ளார்.


மேலும் இத்தகைய நிறுவனங்கள் தகவல் சேகரிக்கும் எந்திரனை (ரோபோ) உருவாக்கும் பணித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த எந்திரன்கள் சமமற்ற, சகதி நிறைந்த, எத்தகைய நிலமாக இருந்தாலும், அந்த நிலத்தை ஆராய்ந்து, அதன் குறைபாடுகளையும், அவற்றை ஈடுசெய்யும் வழிமுறைகளையும் எச்சரிக்கைகளையும் கொடுக்கும் என்பதாகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


“ஒரு பயிர் நோயில் அல்லது சிக்கலில் இருந்தால், அதன் மேற்புற இலையை சூரிய வெளிச்சத்தை நோக்கித் திருப்பும் வகையில், இந்த எந்திரன் அதன் முயற்சியைச் செய்யும்” என்கிறார், கேடபிள்விஎஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டுத் துறை வல்லுநர் லாரெலி டேவிஸ். எத்தகைய செயற்கைக் கோள் அல்லது தொழில்நுட்பம் இருந்தாலும், தனிப்பட்ட பயிரின் அல்லது செடியின் நோயை, துயரத்தை, அதன் இலையை வைத்துக் கண்டறிவது கடினம். ஆனால், இந்த எந்திரன்கள் இத்தகைய குறைபாடுகளைக் களையும் என்கிறார்.


ரெயின்ஸ்கி, தனது வேளாண் நிலத்தில் குழந்தைகளுடன் ஈடுபடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளார். தகவல் புரட்சி வேளாண் வர்த்தகத்தை மாற்றியமைத்து வருவதாக சொல்கிறார். வாடிக்கையாளர்களின் உணவுத் தேவைகள் வெளிப்படையானவை. எப்படி விதைப்பது, பயிரிடுவது, வளர்ப்பது, மகசூல் ஈட்டுவது என்பவை மதிப்பு மிக்க தகவல்.


தானியம் அல்லது மது தயாரிக்க மக்காச் சோளம் அல்லது பார்லி தேவைப்படுகிறது. இவை அதிகபட்ச ஸ்டார்ச் கொண்டவை. இவற்றை எந்த உழவரின் நிலத்தில், நம் தேவைக்கேற்ற தானியம் கிடைக்கும் என்பதை கணினித் திரையில் பார்த்தே எளிதாக ஆர்டர் செய்து விடலாம். நம் பயிர்களின் வளர்ச்சி நிலைகளும் அவர்களின் கணினித் திரையில் காட்டப்படும்.


ரெயின்ஸ்கி மேலும், “இந்த சரியான தொழில்நுட்பத்தால், என் பயிர்களுக்கான வாங்குபவர்கள் (வாடிக்கையாளர்கள்) எனக்குக் கிடைக்கிறார்கள்” என்கிறார்.

-ஆலன் பாரி

இப்போது வருமான வரிப் படிவத்தில் ஜிஎஸ்டி விவரங்களையும் சேர்க்க வேண்டும்

0

பொதுவாக 2016-17 ஆம் நிதியாண்டு வரையில் நிறுவனங்கள், தங்களுடைய வருமானவரிப் படிவங்களை (IncomeTax Return (ITR)) சமர்ப்பிக்கும் போது எக்சைஸ் டூட்டி, வாட் என்பன போன்ற மறைமுகவரி விவரங்களுடன் சேர்த்து அளிக்க வேண்டி இருக்கவில்லை.

தற்போது ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய வருமானவரிப் படிவத்தில் ஜிஎஸ்டி விவரங்களையும் சேர்த்து அளிக்க வேண்டும் எனும் நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அதாவது ஜிஎஸ்டி-யில் பதிவு செய்த வியாபார வருமானமும், தொழில்முறை (Professional) வருமானமும் பெறுபவர்கள் தங்கள் வருமானவரி அறிக்கையில் ஜிஎஸ்டி விவரங்களையும் சேர்த்து அளிக்க வேண்டும்.

சம்பளம் அல்லது பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் பெறுபவர்களான மிஜிஸி 1 . ITR 2 ஆகிய வருமானவரி படிவங்களை வழங்குவோர் தங்கள் மிஜிஸி களுடன் எந்த ஜிஎஸ்டி விவரங்களையும் வழங்க வேண்டியது இல்லை.

ஆனால் ITR 3 முதல் ITR 6 வரையிலான வருமானவரிப் படிவங்களை அளிப்போர் தங்கள் வருமானவரி அறிக்கையில் ஜிஎஸ்டி விவரங்களையும் சேர்த்து அளிக்க வேண்டும்.

வருமானவரிப் படிவம் ITR 3 அளிப்போர், தங்கள் வருமானவரிப் படிவத்துடன் ஜிஎஸ்டி நடைமுறைப் படுத்தப்பட்ட பின்னர் 9 மாத விற்பனையில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விவரங்களான CGST, SGCT, IGST, UTGST ஆகியவற்றுடன் சேர்த்து அளிக்க வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் இந்நிறுவனங்கள் ஜிஎஸ்டி இணையதளத்தில் (GST potral) ஏற்கனவே அளித்த இது தொடர்பான தங்களுடைய மின்னணு பொறுப்பு பதிவேட்டின் (Electronic Liability Register) விவரங்களுடன் சரியாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து தாம் கொள்முதல் செய்த பொருட்களுடன் சேர்ந்த CGST, SGST, IGST, UTGST ஆகிய ஜிஎஸ்டி வரியை தாங்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரியில் கழித்து நிகரமாக செலுத்தி இருப்பார்கள். இந்த ஜிஎஸ்டி வரவு தொகை, இதே ஜிஎஸ்டி தளத்தில் ( GST potral ) ஏற்கனவே அளித்து உள்ள இது தொடர்பான இவர்களின் மின்னணு வரவு பதிவேட்டின் (electronic credit ledger) விவரங்களுடன் சரியாக இருக்கவேண்டும்

அதனோடு வரி செலுத்துவோர் நிகரமாக தாம் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரி விவரங்களை தங்கள் வருமானவரி விவரங்களில் தெரிவிக்க வேண்டும். இந்த நிகர ஜிஎஸ்டி வரியானது இவர்களுடைய ஜிஎஸ்டி போர்ட்டலில் ஏற்கனவே அளித்து உள்ள இது தொடர்பான நிகர தொகையாக உள்ள மின்னணு ரொக்க பேரேட்டுடன் (electronic cash ledger) சரியாக இருக்க வேண்டும்.

மேலும் வரி செலுத்துவோர் 31.03.2018 அன்று தாம் நிகரமாக செலுத்த வேண்டிய CGST, SGST, IGST, UTGST ஆகிய ஜிஎஸ்டி வரியை தம் வருமானவரி விவர அறிக்கையில் (ITR) குறிப்பிட வேண்டும்.

வரி செலுத்துவோர், தாம் அதிகமாக செலுத்திய CGST, SGST, IGST, UTGST ஆகிய ஜிஎஸ்டி வரியில் அரசிடம் இருந்து மிகுதி வரவேண்டிய, ஆனால் இலாப நட்ட கணக்கில் வருமானமாக காட்டப் படாதவை ஏதேனும் இருந்தால் அவ்விவரங்களை தனியாக தங்களுடைய வருமானவரி விவர அறிக்கையில் காண்பிக்க வேண்டும்.

வருமானவரிபடிவம் ITR 4 அளிப்போர், தங்கள் வருமானவரி படிவத்துடன் ஜிஎஸ்டி நடைமுறைப் படுத்தப்பட்ட 9 மாத விற்பனையின் மொத்த விற்பனை வருமான விவரங்களை அளிக்க வேண்டும். இந்த தொகையும் இவர்கள் ஏற்கனவே அளித்த ஜிஎஸ்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ள தொகையும் சரியாக இருக்க வேண்டும். மேலும் இவர்களின் ஜிஎஸ்டி பதிவு எண்ணை தங்கள் வருமானவரி படிவத்தில் குறிப்பிடவேண்டும்.

இது ஜிஎஸ்டி நடைமுறைப் படுத்தப்படும் முதல் ஆண்டாகும். அதனால் ஜிஎஸ்டி செலுத்துவோர், சரியாக புரிந்து கொள்ள இயலாமல் இந்த ஆண்டு சில தவறுகளை செய்து இருக்கலாம். மேலும் வரி செலுத்துவோருக்கு, தங்களுடைய ஜிஎஸ்டி கணக்கில் பதிவு செய்து உள்ள கணக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது கடினமான பணியாகக்கூட இருக்கலாம். இருப்பினும் வரி செலுத்துவோர், வருமான வரிப் படிவத்தை (ITR) அளிப்பதற்கு முன் ஜிஎஸ்டி ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஜிஎஸ்டி ஆலோசகர்கள், ஆடிட்டர்களின் துணையையும் நாடலாம்.

ஜிஎஸ்டி வந்த பிறகு வணிகர்களின் சிரமங்கள், செலவுகள் கூடித்தான் இருக்கின்றன. ஜிஎஸ்டி நடைமுறைகளை இன்னும் எளிமைப்படுத்தினால்தான் வணிகர்களின் சிரமமும், செலவுகளும் குறையும்.

– முனைவர் ச. குப்பன்

எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம், பதிவு பெறுவது எப்படி?

0

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் துறைகளிலும் நடைமுறையில் இருந்து வந்த உணவு தொடர்பான சிக்கல்களைக் கையாளும் பல்வேறு சட்டங்களையும் ஆணைகளை யும் ஒருங்கிணைத்து புதிய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 (Food Safety and Standards Act, 2006) என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தை கண்காணித்து செயல்படுத்துவதற்காக இதன் கீழ் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (The Food Safety and Standards Authority of India (FSSAI)) என்பது உற்பத்தி, சேமித்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், இறக்குமதி செய்தல் ஆகிய உணவு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்காகவும், உணவிற்கான அறிவியல் அடிப்படை யிலான தரநிலைகளை பராமரிப்பதற் காகவும், உருவாக்கப்பட்டு உள்ளது. இது மனித நுகர்விற்கான பாதுகாப் பானதும் ஆரோக்கியமானது-மான உணவு கிடைக்கும் தன்மையை உறுதிப் படுத்துகிறது.

உணவு மாசுறுதல் தடுப்பு சட்டம் 1954 (Prevention of Food Adulteration Act, 1954), பழங்களின் உற்பத்திகள் ஆணை,1955 (Fruit Products Order, 1955), இறைச்சி உணவுகளின் உற்பத்திகள் ஆணை, 1973 (Meat Food Products Order, 1973), தாவர எண்ணெய் உற்பத்திகள் (கட்டுப்பாட்டு) ஆணை, 1947 (Vegetable Oil Products (Control) Order, 1947), சமையல் எண்ணெய் பேக்கேஜிங் (ஒழுங்குமுறை) ஆணை 1988 (Edible Oils Packaging (Regulation)Order, 1988), எண்ணெய், சமையல் உணவு மற்றும் சமையல் மாவு (கட்டுப்பாட்டு) ஆணை, 1967 (Solvent Extracted Oil, De- Oiled Meal and Edible Flour (Control) Order, 1967), பால் மற்றும் பால் பொருட்கள்ஆணை,1992 (Milk and Milk Products Order, 1992) என்பன போன்ற பல்வேறு சட்டங்கள், ஆணைகள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் நாள் முதல் நீக்கம் செய்யப்பட்டு அவைகளுக்கு பதிலாக இந்த புதிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் சட்டம், 2006 நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது .

உணவு பாதுகாப்பு, தர நிலைகள் தொடர்பான அனைத்து பணிகளையும் செய்து முடிப்பதற்கு எந்த ஒருவரும் பல்வேறு நிலைகளுக் கும், பல்வேறு துறை களுக்கும் செல்வதற்கு பதிலாக ஒற்றைச் சாளர முறையில் தீர்வு காண்பதற்கு, இந்திய உணவு பாது காப்பு மற்றும் தர நிலைகள் ஆணையம் வழிவகை செய்கின் றது.

இதன் தலைமை அலுவலகம் புதுடெல்லியில் உள்ளது.. இந்தியாவில் எந்தவொரு உணவு தொடர்பான வணிகத்தையும் தொடங்குவதற்கு முன் இந்த FSSAI உரிமம் பெறுதல் அல்லது எஃப்எஸ்எஸ்ஏஐ-இல் பதிவு செய்தல் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

அதாவது உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், உணவகங்கள், சிறிய உணவகங்கள், மளிகைக் கடைகள், ஏற்று மதியாளர்கள், இறக்குமதியாளர்கள், வீடுகள் சார்ந்த உணவு தொழில்களை செய்பவர்கள், பால்பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள், உணவு உற்பத்தி செய்பவர் கள், சில்லறை விற்பனையாளர்கள், இணையம் வழியிலான விற்பனை யாளர்கள் போன்ற உணவு வியாபா ரத்தில் ஈடுபட்டு உள்ள பல்வேறு உணவு தொடர்பான வணிகங்கள் அனைத்தும் இந்த எஃப்எஸ்எஸ்ஏஐ – இல் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு ஒதுக்கப்படும் 14 இலக்க பதிவு எண், அல்லது உணவுப் பொதிகளில் அச்சிடப்பட வேண்டிய உணவு உரிமஎண் பெறப்பட வேண்டும்.

எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பெற வேண்டியவர்கள்

இணையத்தின் வாயிலாக அல்லது நேரடியாக உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள்; உற்பத்தி செய்தல், கட்டுதல், விற்பனை செய்தல், ஏற்றுமதி செய்தல், இறக்குமதி செய்தல், சேமித்து வைத்தல் ஆகிய உணவு உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து நுகர்வோர்களிடம் சென்றடையும் வரையிலான அனைத்து பணிகளையும் கையாளுபவர்கள்; பிஸ்கட் போன்ற தயார்நிலை உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள்; பால், பால்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள்; உணவுப்பொருட்கள் எடுத்துச் செல்லும் போக்குவரத்த் நிறுவனங்கள்; ஊறுகாய், உலர் பழங்கள் தயாரிப்பவர்கள்; .பொருட்களை சேமித்து வைக்கும் களஞ்சியங்கள் மற்றும் கிழங்குகள்; .உணவகங்கள் ஆகியன.

எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமங்களின் / பதிவுகளின் பல்வேறு வகைகள்

எஃப்எஸ்எஸ்ஏஐ – இன் நடுவணரசு உரிமம்

ஒரு நிறுவனத்தின் உணவு வணிக ஆண்டு வருமானம் ரூ. 20 கோடிக்கு மேல் இருந்தால் எஃப்எஸ்எஸ்ஏஐ நடுவணரசு உரிமம் (Central License) பெற வேண்டும். இந்த உரிமம் நடுவண் அரசால் வழங்கப்படுகிறது. மேலும், உணவுப் பொருள் தொடர்பான தொழில் செய்யும் FBO (Food Business Operator) கள் தங்கள் தலைமை அலுவலகத்திற்கு இந்த சென்ட்ரல் லைசன்சை பெற வேண்டும்.

அதிலும் ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் உணவு வணிகம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாலும் நாடு முழுவதும் பல்வேறு அலுவலகங்களை கொண்ட உணவு வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாலும், எஃப்எஸ்எஸ்ஏஐ – இன் சென்ட்ரல் உரிம அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பொதுவாக ஒவ்வொரு கடையின் விற்பனை வருமானத்தின் அடிப்படையில் மாநில அல்லது சென்ட்ரல் உரிமத்தை பெற வேண்டும். இந்த உரிமத்தின் காலம் ஒராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும்.

எஃப்எஸ்எஸ்ஏஐ – இன் மாநில உரிமம்

உணவு தொடர்பான வணிகத்தைச் செய்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கும் மேல் ரூ. 20 கோடிக்குள் இருப்பவர்கள் எஃப்எஸ்எஸ்ஏஐ – இன் மாநில உரிமத்தைப் பெற வேண்டும்.

மேலும் நாள் ஒன்றுக்கு இரண்டு டன்களுக்கு மேல் உணவு உற்பத்தித் திறன் கொண்ட உற்பத்தியாளர்கள், நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் லிட் டருக்கு மேல் கையாளும் பால் பொருட்கள் உற்பத் தியாளர்கள், மூன்று நட்சத்திர மற்றும் அதற்கு மேல் நட்சத்திர தகுதி உள்ள தங்கும் விடுதிகள், உணவுப் பொருட்களை ரீபேக் செய்பவர்கள், மறுபெயர் அச் சிட்டு ஒட்டுபவர் கள், பொழுது போக்கு மன்றங்கள், உணவகங்கள், ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் கேட்டரிங் வர்த்தகம் செய்யும் அனைத்து நிறுவனங் களும் எஃப்எஸ்எஸ்ஏஐ மாநில உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தின் காலமும் ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும்.

எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு

சிறிய அளவிலான உணவு உற்பத்தியாளர்கள், சேமிப்பு அலகுகள், உணவுப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் வாகன நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகிப்பாளர் கள் போன்ற உணவு தொடர்பான நிறுவனங்களின் ஆண்டு வணிக வருமானம் ரூ.12 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் அனைவரும் எஃப்எஸ் எஸ்ஏஐ – இல் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஆண்டு வணிக வருவாய்ரூ.12 லட்சத்துக்கு மேல் உயரும் போது இந்த எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவினை மாநில உரிமமாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்

எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு செய்வதற்கான ஆவணங்கள்

மத்திய மற்றும் மாநில எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமத்திற்கு, உரிமையாளரின்/இயக்குநர்களின்/நிறுவனத்தின் வருமானவரி பதிவுஎண் (PAN); .உரிமையாளரின்/இயக்குநர்களின் ஆதார், கடவுச்சீட்டு, வாக்காளர் அட்டை, போன்றவை; .உரிமையாளரின் / இயக்குநர்களின் மார்பளவு உருவப்படம்; வாடகை ஒப்பந்தம், சொந்த இடம் எனில் அதற்கான சான்று; நிறுவனம் உருவாக்கியதற்கான சான்று / கூட்டாண்மை ஒப்பந்தம்/MOA & AOA சான்றிதழ் போன்றவை; தயாரிக்கும் அல் லது பதப்படுத்தும் அல்லது சேமிக்கும் உணவுப் பொருட்களின் பட்டியல்; .உணவு பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திட்டம் ஏதேனும் இருந்தால் தயாராக இருக்கும் வர்த்தக உரிமம்; .நிறுவனம் உற்பத்தி செய்யும் அல்லது கையாளும் உணவு வகைகளின் பட்டியல்; நிறுவனத்தில் கையாளப்படும் எந்திரங்கள், கருவிகளின் பட்டியல்

எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு செய்வதற்கான ஆவணங்கள்

உரிமையாளரின்/இயக்குநர்களின்/நிறுவனத்தின் வருமானவரி பதிவுஎண் (PAN); .உரிமையாளரின்/இயக்குநர்களின் ஆதார், கடவுச்சீட்டு, வாக்காளர் அட்டை, போன்றவை; .உரிமையாளரின் / இயக்குநர்களின் மார்பளவு உருவப்படம்; வாடகை ஒப்பந்தம், சொந்த இடம் எனில் அதற்கான சான்று; நிறுவனம் உருவாக்கியதற்கான சான்று / கூட்டாண்மை ஒப்பந்தம்/விளிகி & கிளிகி சான்றிதழ்

எஃப்எஸ்எஸ்ஏஐ இணையத்தின் வாயிலாக பதிவு செய்வதற்கான வழிமுறை பின்வருமாறு –

எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு செய்வதற்கு தேவையான அனைத்து தகுதிகளும், தேவையான ஆவணங்களும் இருக்கின் றதாவென முதலில் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நாம் பெற வேண்டியது, உரிமமா (லைசன்ஸ்) அல்லது பதிவா (ரெஜிஸ்ட்ரேஷன்) என்பதை முடிவு செய்ய வேண்டும்.

எஃப்எஸ்எஸ்ஏஐ இணைய பக்கத்திற்கு சென்று பயனாளர் பெயர், கடவுச் சொற்களுடன் இந்த உணவு உரிமம் மற்றும் பதிவு முறை இணைய தளத்திற் குள் உள்நுழைவு செய்ய வேண்டும்.

அதன்பின்னர் வலைத்தளத்தில் உரிமம் / பதிவு படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்து நிரப்ப வேண்டும்.

பின்னர்அவ்விவரங்களுக்கான சான்று ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிறகு பதிவு செய்வதற்கான கட்டணத்தை (மத்திய உரிமம், மாநில உரிமம் அல்லது/பதிவு ஆகியவற்றின்) இணையத்தின் வாயிலாக அல்லது சலான் வழியாக செலுத்த வேண்டும்.

தொடர்ந்து இதே இணையதள பக்கத்தில் உருவாகும் படிவம் ஙி ஐ அச்சிட்டு அதில் பதிவு செய்பவர் தம்முடைய கையெழுத்தினை இட்டு அந்த படிவத்தை ஸ்கேன் செய்து அதைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். உடன் இந்த விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒப்புதல் கடிதம் கிடைக்கப் பெறும்.

இணையம் வாயிலாக நிரப்பிய பின், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்த பின்னர் விண்ணப்பத்தில் திருத்தம் ஏதேனும் செய்ய வேண்டி இருந்தால், அரசானது இந்த படிவத்தை நமக்கு திரும்ப அனுப்பி வைக்கும். படிவம் நமக்குக் கிடைத்த நாளில் இருந்து பதினைந்து நாட்களுக்குள் நாம் அதனை சரிசெய்து அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அதில் கேட்கப்பட்ட விவரங்களை சரி செய்து பதில் அளிக்கா விட்டால், நம் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

பொதுவாக இவ்வாறு நாம் விண்ணப்பிக்கும் நம் விண்ணப்பத்தின் அடிப்படையில் மாநில அல்லது மத்திய எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம் எனில் 30 முதல் 50 வேலை நாட்களுக்குள் அரசானது அதற்கான ஒப்புதலை வழங்கும். அடிப்படை பதிவிற்கு மட்டும் எனில் 3 முதல் 7 வேலை நாட்களுக்குள் அரசு அதற்கான ஒப்புதலை வழங்கும் (ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப இந்த காலஅளவு மாறுபடும்).

– முனைவர் ச. குப்பன்

நிலங்களுக்கு L கட்டுமானம், ஃபென்சிங் ஏன் தேவை?

0

வீட்டு மனைகளை முதலீட்டுக் காகவோ, அல்லது எதிர்கால வீட்டு மனை தேவைக்காகவோ வாங்குகிறீர்கள் என்றால் மனை/நிலங்களுக்கு “L” out கட்டுமானம் & ஃபென்சிங் ஏன் அவசியம்?

வீட்டு மனைகளை முதலீட்டுக்காகவோ, அல்லது எதிர்கால வீட்டு மனை தேவைக்காகவோ வாங்குகிறீர்கள் என்றால் எல்லைகளில் “L” கட்டுமானம் கட்டாயம் கட்ட வேண்டும்.

சுற்றிலும் சுவர் கட்டி ஆர்ச், கேட், மர காப்புகள் (Tree Guard) எல்லாம் கட்டி சில பெரிய மனை விற்பனை நிறுவனங்கள் மனைப் பிரிவுகளை அமைத்து இருக்கும். அது போன்ற இடத்திற்கு இந்த கட்டுமானம் தேவைப்படாது.

நடுத்தர மக்களுக்கா என்று உருவாக்கப்படும் மனைப்பிரிவுகள் பெரும்பாலும் 2 அடி உயர கருங்கற்களை வைத்து மனைகளை அத்து கட்டி பிரித்து தனித் தனி மனைகளாக உருவாக்கி இருப்பார்கள்.

இத்தகைய மனைபிரிவுகளை விற்று முடித்தவுடன் ப்ரோமோட்டர்களின் பராமரிப்பு குறைந்து விடும். அப்பொழுது அங்கு இருக்கும் ஆத்துக் கற்கள் மாடு முட்டி விழுந்து விடும். அல்லது கற்கள் காணாமல் போய்விடும். திருடப்பட்டு விடும்.

சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்து வந்து உங்கள் மனைகளை பார்க்கும் போது அந்த இடத்தில் மனை பிரிவுகள் இருந்த இடமே இருக்காது. மனையை கண்டு பிடிக்கவே சிரமமாகிவிடும்.

இன்னும் சில ஆண்டுகள் கழித்து சென்றால் மனையை கண்டு பிடிக்க சர்வேயரை கொண்டு போய் புதியதாக அளந்து எடுக்க வேண்டிய நிலைமை ஆகி விடும். அதிலும் சர்வே தவறுகள் & குழப்பங்கள் வந்து விட வாய்ப்பு இருக்கிறது.

செல்போன் வாங்கினால் எப்படி ஒரு ஸ்க்ராட்ச் ப்ருஃப் வாங்கி ஒட்டிக் கொள்வோ மோ அது போல் மனைகள் வாங்கிய பிறகு அதன் எல்லை கள் அழியாமல் இருக்க “லி” சிut கட்டுமானம் அவசியம்.

மனை பிரிவுகளில், நம் மனைகளை ஒட்டி வீடுகள் வரும் என்று நீங்கள் உணரும் போது, அல்லது மனை பிரிவில் வீடுகள் கட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்று உணரும் போது மேற்படி இடத்தில் கட்டாயம் கம்பி வேலி ஃபென்சிங் போட வேண்டும்.

அப்படி போடாமல் இருந்தால் உங்கள் இடத்தில் அரை அடி முதல் 1 அடி வரை நீள வாக்கில் உங்கள் எல்லைகள் ஆக்கிரமிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

பக்கத்து மனையில் வீடு கட்டுபவர்கள், உங்கள் மனையில் செங்கற்கள், ஜல்லி, மணல் கொட்டி வைப்பார்கள். ஆடு மாடு கட்டுவார்கள். வேலி போட்டு வைப்பதால் இது போன்ற தேவையற்ற, பின்னர் சிக்கல்களை எற்படுத்தும் உள்நுழைவு தடுக்கப்படும்.

எனவே மனைகளை வாங்கும் போது “L” out கட்டுமானமும், ஃபென்சிங்குக்கும் போட முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

– சா. மு. பரஞ்சோதிபாண்டியன் (8110872672)

அமெரிக்காவுக்கு விளையாட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்

0

அமெரிக்கக் குழந்தைகள் என்றால் எல்லோரும், ‘கம்ப்யூட்டரில்தான் விளையாடுவார்கள், கைபேசிகளில்தான் காலம் தள்ளுவார்கள்’ என பலரும் தவறாய் எண்ணிக் கொள்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. குழந்தைகள் என்றால் எல்லா நாட்டிலும் ஒன்றுதான்.


பல சந்தைகளிலும், திருவிழாக்களிலும் குழந்தைகள் அதிகம் வாங்குவது பலூன்கள்தான். சிலருக்கு இது வியப்பாய் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. நம் ஊரில் விற்பனை ஆகும் அதே மாதிரி வண்ணவண்ண பலூன்கள் அமெரிக்காவிலும் பல வடிவங்களில் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. புத்தாண்டுக் கொண்டாட்டங்களிலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலும் இவை கடைகளையும், வீடுகளையும் அலங்கரிக்கின்றன.


நீண்ட நாட்கள் கடுங்குளிர் வாட்டுவதாலும், ஏழு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை பெரியவர்கள் துணை இல்லாமல் விளையாட விடக் கூடாது எனும் சட்டம் இருப்பதாலும் தெருக்களில் குழந்தைகளை சாதார ணமாகப் பார்க்க முடியாது. இதனை சில எழுத்தாளர்கள் தவறாகக் கணித்து விடுகின்றனர்.


குளிர் காலங்களில் குழந்தைகள் வீட்டுக்கு உள்ளேயேதான் விளையாடிக் கொள்ள வேண்டும். அதற்காகத் தயாரிக்கப்பட்டவையே வீடியோ கேம் எனும் காட்சி விளையாட்டுகள். இவற்றை நம் ஊர் குழந்தைகளுக்கு தேவை இல்லாமலேயே வாங்கிக் கொடுக்கிறோம். இந்த காட்சி விளையாட்டுகளாக நம் ஊர் கபடி, கிட்டிப்புள், பல்லாங்குழி போன்ற எண்ணற்ற விளையாட்டுகளை தயாரித்துக் கொடுத்தால் அவற்றுக்கும் அமெரிக்காவில் நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கக் கூடும். மாற்றத்தை விரும்புவது மனித இயல்பு. குழந்தைகள் என்றால் கேட்கவா, வேண்டும்.


அமெரிக்காவுக்கு குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. அவர்கள் தயாரிப்புகள் அனைத்தும் பிளாஸ்டிக் கால் இருக்கின்றன. நாம் நடைவண்டி களை மரத்தில் தயாரித்து அனுப்பினால் வரவேற்பு கிடைக்கக் கூடும். தரம் மிகவும் முக்கியம். குழந்தைகளின் பாதுகாப்பும் முக்கியம். குழந்தைகளுக்கு சிறு கீறல்களை ஏற்படுத்தி விடும் அளவில் மழமழப் பாக்காத பொருள்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை அல்ல. குழந்தை களுக்கு ஒவ்வாமையே ஏற்படுத்தி விடும் வண்ணப்பூச்சுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


ஏனெனில் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்களை நிறைவேற்று வதில் அமெரிக்க அரசினர் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப் பற்ற, தவறான பொருட்களை விற்றால் சிறை தண்டனை கிடைக்கும். இறக்குமதி தடைபடும். வண்ணங்கள் தரமற்றவை என்றாலும் நடவடிக்கை பாயும். இழப்பு ஏற்படும்.


விளையாட்டுப் பொருட்கள், அதற்கான தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் ஆலோசனையோடுதான் தயாரிக்கப்பட்டன என்பதற்கான சான்று லேபிள்கள் ஒவ்வொரு பொருளிலும் ஒட்டப்பட வேண்டும்.


குழந்தைகளுக்கான தொட்டில்களுக்கு அதிக தேவை இருக்கிறது. ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படும் தொட்டில்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அலைந்து திரிந்துதான் வாங்க வேண்டியது இருக்கிறது. என் பேத்திக்கு தொட்டில் வாங்க படாதபாடுபட்டோம். எனினும் சரியாக அமையவில்லை.


அங்கே வீடுகளின் சுவர்களும், கூரைகளும் மரத்தால் செய்யப்படுகின்றன. எனவே மேற்கூரையில் வளையம் அடிக்க முடியாது. சுவர்கள் பொதுவாக பிளைஉட் கொண்டு அமைக்கப்படுபவை. எனவே இரண்டு சுவர்களில் ஆணி அடித்து தொட்டில் கட்ட முடியாது. தூக்கி நிறுத்தக்கூடிய தூண் போன்றவை வளையங்களுடன் கூடிய அமைப்பு பரவலாகக் கிடைக்கின்றது. தொட்டிலை இயல்பாக ஆட்டி விட்டால் தூணில் இடிக்கும். நாம் அருகேயே நிற்க வேண்டும். இதுவும் சீனத் தயாரிப்புதான். இதற்கு மாற்றாக, இதில் உள்ள குறைகள் இல்லாமல் யாராவது தொட்டிலை வடிவமைத்து தயாரித்து அனுப்பினால் வரவேற்பு கிடைக்கும்.


படிப்புடன் கூடிய விளையாட்டுப் பொருட்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. கூட்டல், கழித்தலை கற்றுத் தரும் பொம்மைகள், எழுத்துகளைப் புரிய வைக்கும் பொம்மைகள் அல்லது விளையாட்டுப் பொருட்களுக்கும் வாய்ப்புகள் உண்டு. தொடக்கப் பள்ளிக்கான பாடநூல்கள் அரசு தயாரிப்பது இல்லை; பாடத் திட்டங்களை கொடுப்பதும் இல்லை. ஆனால் பள்ளிக் கூடங்களை அரசுதான் நடத்துகிறது. அறிவுத் திறனை வளர்க்கும் எதனையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.


முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிங்கப்பூரில் தயாரிக்கப் பட்ட புத்தகங்களைக் கூட பயன்படுத்து கிறார்கள். நாமும் இத்தகைய புத்தகங் களை தயாரிப்பது குறித்து சிந்திக்கலாம்.


அமெரிக்காவில் வாழும் சுமார் முப்பது லட்சம் இந்தியர்களும் அரிசிச் சோறு உண்ண விரும்புகிறார்கள். வட இந்தியர்கள் பொதுவாக பாசுமதி அரிசி வாங்க விரும்புகிறார்கள். தென் இந்தியர்கள் பொன்னி அரிசியும், இட்லி அரிசியும் அதிகம் வாங்குகிறார்கள். நல்ல பொன்னி அரிசி, இட்லி அரிசியை அனுப்புகிறவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது.


எந்த பொருளை அனுப்பினாலும் தரமாக அனுப்புங்கள். தரமற்ற உணவுப் பொருள்கள் என்று நுகர்வோர் புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். சில நேரங்களில் கடையையே மூடி விடுவார்கள். இறக்குமதியாளரைத் தேடிப்பிடித்து தண்டம் விதிப்பார்கள்.


அவர்கள் தண்டம் விதிப்பார்கள் என்பதற்காக அல்ல; வணிகத்தில் உறுதியாக வளர்வதற்குத் தேவையான பண்பு நம்பகத் தன்மையுடன் செயல்படுதல் மற்றும் தரமான பொருட்களைக் கொடுத்தல் என்பது உலகம் அறிந்த ஒன்றுதானே!

– நாஞ்சில் நடராசன்

பொருட்கள் ஏற்படுத்தும் மாசுக்கு உற்பத்தியாளரே கடைசி வரை பொறுப்பு ஏற்க முடியுமா?

0

உற்பத்தியாளரின் நீட்டித்த பொறுப்பு (Extended Producer Responsibility – EPR) என்ற சொற்கள், தற்போது இதழ்களிலும், நடுவண் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களால் அதிகம் உச்சரிக்கக் கூடிய சொற்களாக உள்ளன. இந்த சொற்கள் முதன் முதலில் இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு, நடுவணரசு வெளியிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை மற்றும் நிர்வகித்தல் விதிகளில் (Plastic Waste Management – PWM) சொல்லப்பட்டது. இதில் சொல்லப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான விதிகள் எதையும் இன்று வரை எந்த ஒரு மாநில அரசாங்கமும் நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காத சூழ்நிலையில் அந்த விதிகளில் ஒரு பிரிவான நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? 2011 – க்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு நடுவண் அரசின் பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளிலும் இபிஆர் பற்றிக் கூறப்பட்டு இருந்தது. அப்போதும் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. தற்போது பல மாநிலங்களில் பிளாஸ்டிக்கிற்கு தடை ஏற்பட்ட பிறகு, இப்போது நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளரின் பொறுப்பு என்ன ஆயிற்று என்று அனைவரும் பேசத் தொடங்கி உள்ளார்கள்.

மேற்படி நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளரின் பொறுப்பு என்கின்ற கருத்தாக்கம் கூட, எப்போதும் போல மேலை நாட்டைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்ட கருத்துதான். ஸ்வீடன் நாட்டில் தாமஸ் லிண்ட்லிஸ்ட் என்பவரால் 1990 – ல் உருவாக்கப்பட்டு ஸ்வீடன் அமைச்சரவையின் சுற்றுச் சூழல் துறையில் இபிஆர் விவரங்கள் அளிக்கப்பட்டன. நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு என்பதை எளிமையாக புரியும்படி சொல்வது என்றால், ‘ஒரு பொருளை உற்பத்தி செய்பவர், அந்த பொருளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை தடுக்கும் வகையில், அந்த பொருளின் முழு சுழற்சி வரை சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் காப்பாற்றுவது அவரின் பொறுப்பு ஆகும்.

இது பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமான கருத்தாக்கம் இல்லை. உலகில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களுக்குமான கருத்தாக்கம்தான் இந்த நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளரின் பொறுப்பு என்ற கருத்ததாக்கம் ஆகும்.

Extended Producer Responsibility

இந்தியாவின் ஒரு சில மாநிலங்களின் மக்கள்தொகை, ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளின் மக்கள் தொகையைக் கூட்டினால் கூட, ஒரு மாநி லத்தின் மக்கள்தொகைக்கு ஈடாகாது. மேலும், ஐரோப்பாவில் சிறு, குறு உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அங்கு உள்ள தொழிற்சாலைகள் எல்லாம் நடுத்தர அல்லது பெரிய தொழிற்சாலைகள்தான்.

ஒரு பொருளைத் தயாரிப்பவர் மட்டும், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு பொறுப்பு என்பதைப் போல இதை ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்க முடியாது. ஏன் என்றால் ஒரு பொருளை உற்பத்தி செய்பவர் மட்டும் அந்த பொருளை விற்பனை செய்வதால் பயன் அடைவது இல்லை. சான்றாக பிளாஸ்டிக் தொழிலை எடுத்துக் கொண்டால், பிளாஸ்டிக் மூலப் பொருள் உற்பத்தியாளர்கள், அவரிடம் மூலப் பொருட்களை வாங்கி பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்கி சில்லரையில் விற்பனை செய்யும் மொத்த வணிகர்கள், மொத்த வணிகர்களிடம் வாங்கி சில்லரையில் விற்பனை செய்பவர்கள், பொருள்களை வாங்கி பயன்படுத்தும் நுகர்வோர், பொருளின் பயன்பாடு முடிந்த உடன் அவற்றை கழிவுகளாக சேகரிக்கும் மறுசுழற்சி கடை நடத்துபவர்கள், அந்த கழிவுப் பொருட்களை வாங்கி மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் மூலப்பொருட்களை தயாரிப்பவர்கள், அனைத்து மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை சேகரித்து மேலாண்¬ம் செய்ய வேண்டிய அரசுகள் – இவ்வாறு பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில் இருந்து, அவை கழிவுகளாக மாறும் வரை பல நிலைகளைக் கடக்கிறது.

தற்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் சில பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட உடன், அதை நீக்கச்சொல்லி பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளர்கள் அந்தந்த மாநில அரசுகளை அணுகும்போது, அந்த மாநில அரசுகள், ‘உங்கள் தொழிலில் ஏற்படும் பிளாஸ்டிக் கழிவுகள்தான் சிக்கலாக இருக்கிறது. இந்த சிக்கல் இல்லை என்றால் தடை செய்ய வேண்டிய தேவை இருக்காது’ என்கின்றன. உடனே அங்கே சென்ற பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி யாளர்கள், ‘நாங்கள் தயாரிக்கும் பொருகள்கள் கழிவுகள் ஆன உடன் அவற்றை நாங்களே மீண்டும் வாங்கி மறுசுழற்சி செய்து குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்கிறோம்’ என்று உரையாடல் நிகழ்த்துகிறார்கள்.

இவர்கள் இப்படிக் கூறுவது, தீவிர பரிசீலனைக்கு உரிய ஒன்று. பிளாஸ்டிக்கில் சில பொருட்கள் கழிவுகள் ஆன உடன் உற்பத்தியாளரே வாங்கிக் கொள்ள முடியும். சான்றாக பெட் பாட்டில்களை வாங்க முடியும். எப்படி என்றால் பெட் பாட்டில்களை பயன்படுத்தும் பெப்சி, கோக் போன்ற நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள். மேலும் குளிர்பானங்களைத் தவிர்த்து பெட் பாட்டில்கள் குடிநீர் அடைப்பதற்குத்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

குளிர்பானத்தையோ, குடிநீரையோ குடித்த உடன் அந்த பெட் பாட்டில்கள் கழிவு ஆகி விடுகின்றன. அது மட்டுமல்லாமல், பெட் பாட்டில் கழிவுகளை கையாளுவது எளிது. அவற்றை சில்லரையாக வாங்கி, நசுக்கி, மொத்தமாக பேல்களாகப் போட்டு, பெரிய அளவில் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். பெப்சி, கோக் போன்ற நிறுவனங்களால் அவர்கள் பயன்படுத்தும் பெட் பாட்டில்களை சேகரிக்க, அவர்கள் முகவர்கள் வாயிலாக இந்தியா முழுவதும் வலைப் பின்னலை ஏற்படுத்த முடியும்.

ஆனால், பேக்கிங் பொருட்களை, குறிப்பாக ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசி எறியப்படும் பொருட்களைத் தயாரிக்கும் உற்பத்தியாளர்களில் 95% பேர்கள் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் ஆவார்கள். இவர்கள் தயாரிக்கும் கேரி பைகளை எடுத்துக் கொண்டால், அவற்றின் முதல் பயன்பாடு முடிந்த உடனேயே கழிவு ஆகி விடுவது இல்லை. கேரி பைகள் மீண்டும் மீண்டும் பலமுறை பயன்படுத்தப்பட்ட பின்னர், கடைசியாக அந்த பையில் வீட்டில் சேரும் அனைத்து குப்பைகளையும் போட்டு, முடிச்சு போட்டு குப்பைத் தொட்டிகளில் அல்லது தெருக்களில் வீசி எறிந்து விடுகிறார்கள். முதலில் பேக்கிங் பொருளாக இருக்கும் கேரி பைகள் முடிவில் குப்பைகளை சேகரிக்கும் பைகளாக (கார்பேஜ் பேக்ஸ்) உருமாறுகிறது.

இதை மனதில் வைத்துக் கொண்டு பாருங்கள், கேரி பைகளை தடை செய்த பின்னர், சிறிது நாட்களில் நகரின் குப்பைப் பிரச்சினை, இப்போது உள்ளதை விட மிகப் பெரிய அளவில் வெடிக்கும். இப்போது இதை நாம் கூறினால் யாரும் ஒப்புக் கொள்வார்களா என்று தெரியவில்லை.

கேரி பைகளில் உலர்ந்த, ஈரமான அனைத்து குப்பைகளையும் போட்டு வீசி எறியப்படும்போது, கேரி பைகளை மட்டும் பிரித்து எடுத்து மறுசுழற்சி செய்ய அனுப்புவது என்பது இமாலய பணியாகும். இதை அரசுகளாலேயே செய்ய முடியவில்லை. அரசுகளாயே செய்ய முடியாத இந்த வேலையை தனிப்பட்ட சிறிய சங்கங்களால் எப்படி செய்ய முடியும்?

கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் உருவாக்கப் பட்டன. அதன் அடிப் படையே வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து கையாள வேண்டும் என்பது ஆகும். 2016 -ல் மற்றொரு மேம்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகள் அறிமுகப்படுத்தப் பட்டன. ஆனாலும் இப்போதும் நம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், பெரு நகரங்கள் உட்பட வீடுகளில் இருந்து குப்பைகளை அப்படியே வாரி எடுத்துச் சென்று குப்பை மேடுகளில் கொட்டுவதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் மேலை நாடுகளைக் காப்பி அடித்து செயல்பட முயற்சிப்பது எல்லாம், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் மாறும். குப்பைகள் சேரும் இடத்தில் அவற்றைத் தரம் பிரித்து சேகரிக்க வழி செய்யாமல் ‘நீட்டித்த உற்பத்தியாளர் பொறுப்பு’ என்னும் கருத்தாக்கத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று சொல்வதாலோ, முயற்சிப்பதாலோ எந்த பயனும் விளையப் போவது இல்லை. அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் சற்று பொறுமையாக, நம்முடைய நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்திக்க வேண்டும். மற்ற நாடுகளின் கருத்தாக்கத்தை கண்களை மூடிக்கொண்டு நடைமுறைப் படுத்த முயற்சித்த பல நடைமுறைகள் ஏற்கெனவே பல சிக்கல்களைத் தந்த அனுபவம் ஏற்கெனவே நமக்கு இருக்கிறது.

– ஜி. சங்கரன், தலைவர், தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கம், பு. எண்.26, சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை – 600112. (90030 23815)