மலேசிய மணல்: அரசு முதலில் தடுத்தது; இப்போது அதிக விலைக்கு விற்க முயற்சிக்கிறது!

0

நம் நாட்டில் வேளாண்மைக்கு அடுத்து அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவது கட்டடத் தொழில். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக நலிவடைந்து கொண்டிருக்கும் தொழிலும் அதுதான். அதற்கு காரணங்கள் பல உண்டு என்ற போதும் மணல் தட்டுப்பாடு ஒரு முதன்மையான காரணி. அதற்கும் மேலாக மணல் மீதான அரசின் கொள்கைகள் கட்டடத் தொழிலை பெரிய அளவில் சரியச் செய்து விட்டது.

ஆற்று மணலை அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்ட 2003 தொடங்கி இன்று வரை தமிழக அரசின் செயல்பாடுகளை ஆராய்ந்த வகையில் சில செய்திகளை நினைவூட்டுகிறேன்.

*2003ல் உருவவாக்கப்பட்ட மணல் அள்ளும் ஒப்பந்தம் (Lifting & loading Contract) அடிப்படையில் தமிழக ஆறுகளில் இருந்து மணல் அள்ளும் உரியை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது. இதனால் பொதுப்பணித் துறை (PWD), பெயரளவில்ருக்கு ஒரு கட்டுப்படுத்தும் துறையாக, அதாவது பல் இல்லாத சிங்கமாக மாறியது.

*இயற்கை வளங்களைப் பற்றிய எவ்வித அடிப்படை புரிதலும் இன்றி கட்டுப்பாடு இன்றி மணலை அள்ள அனுமதித்து வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் விற்பனை செய்தது.
இனி கடந்த இரண்டாண்டு குழப்பத்தைப் பற்றி..

*முதல்வர் எடப்பாடி திரு. பழனிச்சாமி, ஒரு விழாவில் மதுரை வைகை ஆற்றில் மேடை போட்டு பேசுய போது இன்னும் மூன்று ஆண்டுகளில் மணல் அள்ளுவது முற்றிலும் தடை செய்யப்படும்;அதற்கு பதிலாக மாற்று மணல் பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என்றார். ஆனால் இன்று வரை அரசு தரப்பில் அதற்கான உருப்படியான எந்த செயல்பாடுகளும் நடக்கவில்லை.

*மணல் குவாரிகளுக்கு அரசு அனுமதி அளிப்பதும், நீதிமன்றங்கள் தடை செய்வதுமான கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டு உள்ளது.

*தமிழக ஆறுகள் மணல் இன்றி மட்டையான பின்பும் சவுடுமண் என்ற பெயரில் கரை ஓரங்களில் உள்ள மணலையும் சூறையாடும் செயல்களும் அரசின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
இதற்கிடையில் வெளிநாட்டில் இருந்து தனியார் நிறுவனம் இறக்குமதி செய்த மணல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

உரிய வரிகளை செலுத்திய பின்பும் அந்த மணலை விற்பனை செய்ய தமிழக அரசு தடை போட்டது. இதனை எதிர்த்து நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது.
அதனை எதிர்த்து வழக்காடிய அரசு வெளிநாட்டு மணலில் 85% சிலிக்கான் இருப்பதால் கட்டுமானத்திற்கு உகந்தது அல்ல என அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பிறகும் பலவித தடைகளை ஏற்படுத்தி அந்த மணலை விற்க விடாமல் தடுப்பதில் முனைப்புக் காட்டியது.

தற்போது நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பின் காரணமாக தமிழக அரசு (தரமற்றதென அரசே கூறிய) சென்னை துறைமுகத்தில் இறக்கப் பட்ட வெளிநாட்டு மணலை ஆன்லைன் மூலம் விற்க ஆணை இட்டு உள்ளது.

ஒரு யூனிட்(100 கனஅடி) மணல் 9990 ரூபாய் என விலை நிர்ணயித்து உள்ளது.மேலும் லாரி வாடகை, ஏற்று-இறக்குக் கூலி உட்பட 13000 ரூபாய் ஆகிறது. ஆனால் “கடை விரித்தேன் கொள்வார் இல்லை”என்ற நிலையில் வாங்க ஆளில்லாமல் மீண்டும் ஒரு சிக்கலான சூழல் ஏற்பட்டு உள்ளது.

இனி தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதை கட்டடத் தொழிலில் இருப்போர் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

– வீரஜோதிமணி அங்கிடிசாமி, கட்டுமான பொறியாளர்

தொழில் பயத்தை தாண்டுவது எப்படி?

0

பயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் தொடங்கும்போது மட்டும் பயம் (fear) வருவது இல்லை, தொழிலின் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு செல்லும் போதும் பயம் வரும். பயம் ஏற்படுவது மனித இயல்புதான். பயத்தைத் தாண்டி வெளியே வரும் போதுதான் வெற்றி கிடைக்கும்.

தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான காரணம், வெற்றி பெறுவோமா, ஒரு வேளை தோல்வி அடைந்து விடுவோமோ என்ற எண்ணம், தொழில் மீது நமக்கு இருக்கும் சந்தேகம், சார்ந்து உள்ளவர்கள் என்ன சொல்லுவார்களோ என்ற எண்ணம், தொழிலின் மீது நம்பிக்கை அற்ற நிலை இந்த மனநிலையுடன் இருக்கும் போது நிச்சயம் தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படும்.
நீங்கள் தொழில் தொடங்க எடுத்து வைக்கும் முதல் அடிதான், பயத்தை கடப்பதற்கான (overcome) முதல் படியாகும்.
நீங்கள் தொழில் தொடங்குவதால் எதை எல்லாம் இழக்க வேண்டி வரும் என்பதையும் (What do You have to lose, when You start business), தொழில் தொடங்குவதால் என்னவெல்லாம் கிடைக்கும் (what gaining do You get) என்பதையும் சிந்தித்து பட்டியல் இடுங்கள்.

உறுதியாக, தெளிவாக, நம்பிக்கையுடன் தொழில் தொடங்குவது பற்றி முடிவு எடுக்கும் போது பயம் ஏற்படுவது இல்லை மாறாக அதிக தைரியம் இருக்கும், ஒரு மேம்போக்கான, தெளிவு இல்லாமல் தொழில் தொடங்குவது பற்றி முடிவு எடுக்கும் போதுதான் பயம் ஏற்படுகிறது.
தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான மற்றொரு காரணம், தொழிலில் வருமானம் எங்கு இருந்து வரப்போகிறது, அதை எப்படி ஈட்டப் போகிறோம் என்பது தெரியாமல் இருக்கும்போதும், வருமானம் ஈட்டுதல் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கும் போதும் பயம் ஏற்படும்.
பல தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்து எப்படி சேவை (Service) வழங்குவது என்பது தெரிந்த அளவிற்கு, எப்படி வருமானம் ஈட்டப் போகிறோம் என்பது பற்றிய ஒரு தெளிவு இல்லாமல் இருக்கின்றன.
தொழிலில் வருமானம் ஈட்டும் வழி தெரிந்தால் நிச்சயம் பயம் வருவதற்கு வாய்ப்பு குறைவு. தொழில் தொடங்குவதற்கு முன் நீண்ட காலத்திற்கு வருமானம் ஈட்டக் கூடிய வழிகளை (income generation activities) கண்டு பிடிக்க வேண்டும். வருமானம் கிடைக்கும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவதற்கான, தொடர்வதற்கான நம்பிக்கை பிறக்கும்.

– முனைவர் எச். சி. அசீசா ஜலாலுதீன், சிங்கப்பூர்

கணக்குப் பதிவில் இருக்கிறது வளர்ச்சி!

0

“கிராமப் பொருளாதாரம் உயர்ந்தால் மட்டுமே, நாடு உயரும். அதற்கு கிராமத்து மனிதர்களின் பொருளாதாரம் உயரவேண்டும். இதற்கு கிராமத்தில் உள்ளவர்கள் கணக்கு எழுதிப் பழக வேண்டும். கணக்குப் பதிவுப் பழக்கம் தனி மனிதர்களின் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் பயன்படும். இதற்கு கிராமங்கள் தோறும் ஆடிட்டர்கள் உருவாக வேண்டும். ஆடிட்டர்கள், தனி மனிதர்களுக்கும், தொழில் துறையினருக்கும் கணக்குகளை சரியாகக் கையாள உதவ வேண்டும்.” என்கிறார், ஜான் மோரிஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர், ஆடிட்டர் திரு. ஜான் மோரிஸ். மேலும் அவர் கூறியதாவது,

கன்னியாகுமாரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டு அங்கேயே இளங்கலை படிப்பு படிப்பை முடித்து, சென்னயில் சி.ஏ(சிகி) படிப்பதற்காக வந்தேன். படிப்பை முடித்து அதன் தொடர்பான தொழிலை செய்து வரும்பொழுது சில ஆராய்ச்சி செய்ததில் நம் நாடு உயரவேண்டும் என்றால் கிராமங்கள் பொருளாதாரத்தில் உயரவேண்டும் என்று தெரிந்தது. அதற்கு கிராமத்திற்கு ஒரு பட்டய கணக்காளர் நிச்சயம் உருவாக்க வேண்டும்.

கணக்கு எழுதும் முறை என்ன மாற்றத்தை எற்படுத்தும் என்பதற்கு ஒரு சான்றைச் சொல்கிறேன். சி.ஏ படிப்பைப் பற்றிய விழிப்புணர்வு செய்வதற்க்காக மார்த்தாண்டம் சென்று இருந்த பொழுது, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் என்னிடம், வீட்டின் சூழ்நிலையால் படிப்பை முடித்து, அடுத்த வருடம் ரப்பர் பால் அறுக்க சென் றுவிடுவேன். ஆனால் எனக்கு சி.ஏ படிக்க வேண்டும் என்ற ஆசை என்று கூறினார். நான் கூறினேன், உங்கள் வீட்டு வரவு-செலவு கணக்கை சிறு நோட்டில் எழுதி வையுங்கள். சான்றாக அப்பா செலவுக்கு பணம் எடுத்தால் இவ்வளவு எடுத்தார் என்று மட்டும் எழுதுங்கள். மற்றும் அதே போல் ஒவ்வொரு செலவையும் எழுதி வரும்படி சொன்னேன். ஒரு நோட்டில் வலது, இடது பக்கத்தில் எப்படி வரவு செலவு எழுத வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தேன்.

மூன்று மாதம் பிறகு மீண்டும் அந்த பள்ளிக்கு சென்று பேசிய பொழுது அந்த மாணவி எழுதி வைத்திருந்த வரவு-செலவு நோட்டை கொண்டு வந்து கொடுத்தார். கூடவே அந்த மாணவியின் அம்மா, அப்பாவும் வந்திருந்தார்கள். வரவு செலவைப் பார்த்த பொழுது மாணவியின் அப்பா மட்டும் வீட்டின் மொத்த பண வரவான பதினைந்தாயிரம் ரூபாயில், ஏழாயிரம் வரை செலவு செய்வது தெரிய வந்தது. ஆக வீட்டின் இருக்கும் ஒருவர், வரவில் பாதி பணத்தை செலவு செய்தால் அந்த வீடு பொருளாதாரத்தில் ஏற்றம் காண முடியாது. மாணவியின் பெற்றோருக்கு விளக்கி சொல்லி புரிய வைத்தபொழுது மாணவியின் அப்பா ஏற்றுக் கொண்டார். அடுத்து என்னுடைய ஆலோசனைக்கு ஏற்ப அப்பா தனது தேவையற்ற செலவுகளைக் குறைத்தார். மீதியை சேமித்தார்கள். இப்பொழுது அந்த மாணவி மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இதுதான் வரவு செலவு கணக்கு எழுதி வைத்துப் பார்ப்பதால் ஏற்படும் பயன் ஆகும்.

கணக்கு எழுதாமல் விடுவதால் நாம் எந்த நிலையில் இருக்கிறோம், எந்த செலவை குறைக்கவேண்டும் போன்றவை தெரியாததால் வீட்டின் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி விடும். அதனால் ஒவ்வொரு மனிதரும் கணக்குப் பதிவு நோட்டில்வ்வவரவு செலவு கணக்குகளை எழுதி வைக்கவவேண்டும். அதன் மூலம் தேவையில்லாத செலவுகளை குறைத்து பொருளாதார வளர்ச்சி அடையமுடியும்.கணக்குப் பதிவு நுட்பங்கள் தொழில் முனைவோருக்கு பெரிய அளவில் கைகொடுக்கும்.

தொழில் முனைவோர் தங்கள் குழந்தைகளை சிஏ படிக்க ஊக்கப்படுத்த வேண்டும். நம் நாட்டில் இருக்கும் உயர் படிப்புகளில், சி.ஏ படிப்பும் ஒன்று ஆகும். இந்த படிப்பின் மூலமாக தங்கள் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும். இன்றைக்கு பல பெரிய தொழிலதிபர்கள் சிஏ படித்தவர்களாக இருப்பதைக் காணலாம்.

சிஏ படித்தவர்களுக்கு பணி வாய்ப்புகளும் அதிகம்; சொந்தமாக ஆடிட்டராகவும் தொழில் புரியலாம்.இன்று எங்கு நிறைய தொழில் நிறுவனங்கள் இருக்கிறதோ, அங்கு நிறைய செயல்கள் நடைபெறுகின்றன. பணசு சுழற்சியும் அங்கு நிறைய இருக்கிறது. அங்குதான் ஆடிட்டர்களும் இருக்கிறார்கள். ஆக பணம் இருக்கும் இடத்தில் ஆடிட்டர் இருக்கிறார். சென்னை, கோவை, திருச்சி போன்ற மாநகரங்கள் தவிர்த்து மற்ற நகரங்களில் ஆடிட்டர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே சிஏ படிப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் நான் சிறு நகரங்கள், கிராமங்கள் சென்று சிஏ படிப்பைப் பற்றிய விழிப்புணர்வு பரப்புரை செய்து வருகிறேன்.

என் சொந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் இதற்கென ஒரு பயிற்சி நிறுவனத்தை தொடங்கி உள்ளோம். அங்கு இருநூறு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்தது வருகிறோம். ஆடிட்டர்களின் தொழில் வாய்ப்பு என்பது நம் நாட்டுடன் மட்டும் முடிந்து விடுவது இல்லை. உலகம் முழுவதும் வாய்ப்புகள் உண்டு. அதனால் ஆடிட்டர்கள் உலகம் முழுவதும் தொழில் செய்யமுடியும்.

அமெரிக்காவிற்கு அடுத்து அதிக ஆடிட்டர்கள் உடைய நாடு இந்தியாதான். இந்தியாவில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஆடிட்டர்கள் உள்ளனர். ஆடிட்டர் தொழில் தொடர்ந்து முன்னேற்றம் அடையக் கூடிய தொழிலாகும்.

Also Read: அரசு உயர் அதிகாரிகளிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

‘சி.ஏ படிப்பது மிகவும் கடினமானதாகும். படிப்பவர்கள் அனைவராலும் தேர்ச்சி அடைய முடிவது இல்லை என்ற பொதுவான ஒரு நம்பிக்கை இருக்கிறது. இது ஒரு தவறான நம்பிக்கை. எல்லா படிப்பையும் போலவே உழைப்பைக் கொடுத்தால் இதிலும் கண்டிப்பாக தேர்ச்சி அடைய முடியும். இன்றய மாணவ, மாணவிகள் அதிக நேரத்தை முகநூலிலும், வாட்சாப் போன்றவற்றிலும் வீண்டிக்கிறார்கள். மாணவர்கள் தங்கள் கவனத்தை வேறு எங்கும் திருப்பாமல் முழுவதும் படிப்பில் செலுத்தினால் சிஏவிலும் சாதிக்கலாம். எங்கள் அலுவலகத்தில் தினமும் காலை ஏழு மணிக்கு படிக்கும் மாணவர்களை வரவைத்து பயிற்சி கொடுக்கிறோம்.

படிப்புகளிலேயே மிக குறைந்த கட்டணம் உள்ள படிப்புகளில் சி.ஏ படிப்பும் ஒன்றும் ஆகும். மொத்தம் ஐம்பதாயிரம் செலவு செய்தால் போதும். படிக்கும் பொழுதே வேலையும் செய்ய முடியும். அதன் மூலமும் வருமானம் வரும். சிஏ முடித்தவர்கள் எந்த ஊருக்கு, எந்த மாநிலத்திற்கு சென்றாலும் பணம் சம்பாதிக்க முடியும்.
சி.ஏ படிப்பவர்களை அதிகம் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் பல கல்லூரிகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளோம். சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முதல் பல கல்லூரிகளில் சிஏ தொடர்பான பயிற்சி கொடுக்கிறோம்.

இரண்டு விதமாக சிஏ படிக்கலாம். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து நேரடியாக சிஏ படிக்கலாம் அல்லது ஒரு டிகிரி படித்துக் கொண்டே படிக்கலாம். சென்னை போன்ற நகரத்தில் இருக்கும் மாணவர்கள் நேரடியாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து சிஏ படிக்க வருகிறார்கள். ஆனால் கிராமப் புற மானவர்கள் இப்படி நேரடியாக சிஏ சேர்வதற்கு பதில் ஒரு இளங்கலை பட்டப் படிப்பை படித்துக் கொண்டே சிஏ படிப்பது நல்லது.

இப்பொழுது அரசாங்கமும் இருபத்தைந்தாயிரம் மாணவர்களுக்கு சிஏ பயிற்சி கொடுத்து வருகிறது. இது ஒரு பாராட்டத் தகுந்த முயற்சி ஆகும்.” என்றார், திரு. ஜான்மோரிஸ்.

– செழியன். ஜா

சுவைபட, செறிவாக எடுத்துரைக்க பழகுவோம்!

0

தான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர்.

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார் – (குறள் 722)

உலக அரசியல் உங்கள் விரல் நுனியில் இருக்கலாம், பன்பாடு, கலாச்சாரம், இந்திய வரலாறு, புவிசார் அரசியல், பொருளாதாரம், வியாபாரம் என எல்லா வற்றிலும் கைதேர்ந்தவராக இருக்கலாம். நாம் தினமும் சந்திக்கும் மனிதர்களில் எல்லோரும் ஏதொ ஒரு துறையில் அறிஞர்களாகவே இருக்கிறார்கள். அவர்களை கற்றவர்கள் என்கிறார், வள்ளுவர். மாறாக, தான் தெரிந்து கொண்ட நுணுக்கங்களை, ஆய்ந்து அறிந்தவற்றை மற்றவர்களும் பயன் பெறும் வண்ணம் விளக்கிக் கூறும் சான்றோர்களை கற்றாருள் கற்றார் என்று புகழ்கிறார்.

தொலைக்காட்சி விவாதங்களில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கவே கலந்து கொள்கி றார்கள். ஆனால் விவாதம் தொடங்கி சிறிது நேரம் ஆனவுடன் விவாதப் பொருளில் இருந்து விலகி தத்தமது தலைமைகளின் விசுவாசிகளாக மாறி; அங்கு வெற்று இரைச்சல் பரவுவதை நாம் பார்க்க முடியும்.

எல்லோரையும் தொலைக்காட்சி விவாதங்களுக்கு நெறியாளர்கள் அழைப்பது இல்லை. தமது கருத்துகளை நயம்பட எடுத்துக் கூறவல்லவர்கள் என்று நெறியாளர்களால் கருதப்படுகிறவர்களே அழைக்கப்படுகிறார்கள்.

அந்த அரங்கத்தில் இருக்கும் அனைவருமே கற்றவர்கள்தான். ஆனால் மற்றவர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தமது வாதத்தை எடுத்துக் கூறுவதில்தான் சிக்கல் இருக்கிறது. அந்த நுட்பம் அறிந்தவரே கற்றாருள் கற்றாராக அறியப்படுகின்றார். நான் அறிந்த வரையில் தோழர்.சுப. வீரபாண்டியன் அவர்களின் நேர்த்தியான வாதமும், நாகரிகமான எதிர்வினையும் அரங்கத்தில் இருப்பவர்களிடம் மட்டும் அல்ல, தொலைக் காட்சியில் அதனை பார்க்கும் பார்வையாளரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

இந்த திறமைக்கும், நமது தொழிலுக்கும், செய்யும் வேலைக்கும் என்ன தொடர்பு? இவையெல்லாம் அரசியல்வாதிகளிடமும், இயக்கங் களிடமும் இருக்க வேண்டிய ஒன்று என்று எண்ணி விட வேண்டாம். நாம் தற்போது செய்து கொண்டிருக்கும் தொழிலோ, வேலையோ சிறியதாக தெரியலாம். அதனை மேம்படுத்தும் நோக்கமும், முட்டுக் கட்டைகளை உடைத்தெறிந்து முன்னேறியே ஆக வேண்டும் என்ற கனவும் உங்களுக்கு இருக்குமானால் நாமும் கற்றாருள் கற்றாராய் இருந்தே ஆக வேண்டும்.

தொழில் முனைவோர் தங்களுக்குள் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த புரிதலில் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான ஒரு களமாக தமிழர் பரிந்துரை வணிகம், தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம், பிஎன்ஐ (Business Network International) போன்றவை இருக்கின்றன. வாரம் ஒருமுறை ஒன்று கூடி தங்கள் தொழில் குறித்தும் அதன் நோக்கம், வளர்ச்சி குறித்தும் அங்கே கலந்துரையாடுவார்கள்.

சுழற்சி முறையில் ஒவ்வொரு தொழில் முனைவோரையும் ஒரிரு நிமிடங்கள் பேச மேடைக்கு அழைப்பார்கள். ஒரு தொழில் செய்ய வேண்டுமானால் அதன் சாதக பாதகங்களை அறிந்திருக்க வேண்டும். நீண்ட நெடு நாட்களாக ஒரு தொழிலை செய்து வருபவர் என்றால் அந்த துறை சார்ந்த நுணுக்கங்களும், எதிர்காலத் திட்டங்களும் நிச்சயம் இருக்கும்.

வள்ளுவரின் கூற்றுப்படி அவரும் ஒரு கற்றவர். இத்தகைய அமைப்புகளின் ஒவ்வொரு வாராந்திர கூட்டமும் அவ்வகையில் கற்றார் நிறைந்த அவையாகவே இருக்கும். இப்போது சொல்லுங்கள், உங்கள் தொழில் குறித்து, நீங்கள் உற்பத்தி செய்யும் பொருள் குறித்து, நீங்கள் வழங்கிக் கொண்டி ருக்கும் சேவை குறித்து கற்றோர் நிறைந்திருக்கும் ஒரு அவையில்; அவர்களிடம் சுவைபட/செறிவாக எடுத்துரைப்பது அவசியமா, இல்லையா?

தமிழர்களிடம் ஒரு மாபெரும் குறை உண்டு. தன் திறமைகளின் மேல் உள்ள குறைந்த மதிப்பீடு. அதன் தொடர்ச்சியில் வந்து சேரும் தாழ்வு மனப்பான்மை. தெரிந்தவற்றை எனக்கு தெரியும் என்று ஒத்துக் கொள்வதற்கு கூட ஒரு விதத் தயக்கம். தாமாக முன் வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதில் பயம். வேறு யாராவது அதை செய்ய முன்வந்தால் அவருடன் முரண்பட்டு நிற்பது. இறுதியில் தொடங்கிய இடத்திலேயே நின்று கொண்டு புலம்புவது. போட்டி நிறைந்த தற்கால சூழலிலும் பெரும்பான்மை தமிழர் களிடம் இந்த குணம் காணப்படுவது வேதனை. நான் வேறு யாரையும் குறிப்பிடவில்லை. என்னை முன்னிருத்தியே இவற்றை தீர்மானமாக சொல்லி இருக்கிறேன்.

Also Read: சிறந்த உரையாடல் உருவாக்கும், நட்பு வலைப்பின்னல்!

முகநூலில் எழுதிக் கொண் டிருந்த என்னை ஆசிரியர் திரு. ஜெயகிருஷ்ணன் “நல்லா எழுதுறீங்க, உங்க துறை சார்ந்து எழுதுங்க” என்றார்.

”நானெல்லாம் என்ன சார், எழுதுவது. இந்த விளம்பரத் துறையில் மிகப் பெரிய ஆட்களெல்லாம் அமைதியாக இருக்கிறார்கள்” என்றேன்.

”அவர்கள் அமைதியாகவே இருந்து விட்டுப் போகட்டும். உங்கள் அனுபவமும், சிந்தனையும் பலருக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றால்; அதை செய்து விடவேண்டியதுதானே?” என்றார்.

திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் பாட்டு வாத்தியார் பாணப்பத்திரர் போல ஏதோ முகநூலில் கவிதை என்கின்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருக்கிறோம், நம்மால் நீண்ட கட்டுரைகளை தொடர்ந்து எழுத முடியுமா என்ற தயக்கம் இருந்தது. அதனை புரிந்து கொண்ட ஆசிரியர் “அதெல்லாம் எழுதலாம்; எழுதுங்க, நீங்க எழுத்தாளர்தாங்க” என்றார்.

பிறகு உருவானதுதான், இந்த “அச்சம் விடுவோம்; உச்சம் தொடுவோம்” தொடர் கட்டுரை.

நாளிதழ் கூட வாசிக்கக் கிடைக்காத கிராமத்தில் பிறந்த என்னால் ஒரு பத்திரிகைக்கு, அதுவும் ஒரு தொழில் வணிக இதழுக்கு தொடர்ந்து கட்டுரை எழுத முடியும் என்று என்னால் அப்போது நம்ப முடியவில்லை. அதற்கு முழு முதற்காரணம் என்னுடைய திறமை மீதான குறைந்த மதிப்பீடு.

நம்மை விட சிறப்பாக எழுதவல்ல நமது துறை சார்ந்த வல்லுநர்கள் அமைதியாக இருக்கும்போது, நாம் என்ன எழுதுவது என்ற தாழ்வு மனப்பான்மை. ”நன்றாக எழுதுகிறீர்கள்” என்று ஒரு பத்திரிகை ஆசிரியரே சொல்லும் போதும் கூட “என்னால் இது முடியும்” என்று முன் வந்து பொறுப்பேற்க ஒரு வித தயக்கம்.

இவை எல்லாவற்றையும் தாண்டி ஆசிரியர் தந்த ஊக்கமும், எங்கள் தமிழ் ஐயா திரு. ஆடியபாதம் கற்றுத் தந்த மொழிப் புலமையும், நன்மை தீமைகளை கற்றுத் தந்த அனுபவமும் இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறது. அனுப வத்திலும், ஏட்டிலும் பெற்றுக் கொண்ட நல்லவைகளை வளர்தொழில் வாசகர் களோடு சுவைபட பகிர்ந்து கொண்டி ருக்கிறேன் என்று திடமாக நம்புகிறேன்.

எழுத்து என்பது அதனை வாசிக்கிற மனிதனை மாற்றாவிட்டாலும் பரவா யில்லை, குறைந்தபட்சம் அதை எழுதுகிற வனையாவது மாற்ற வேண்டும்; அது தான் உண்மையான எழுத்து என்று ஒரு நிகழ்வில் ஞானபாரதி திரு. வலம்புரி ஜான் சொன்னார். உண்மையில் இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்த எனது எண்ண ஓட்டத்துக்கும் அது பயணித்த திசைக்கும் இன்று அது பயணிக்கும் திசைக்கும் வேகத்துக்கும் நிறைய மாற்றங்கள் இருப்பதை உணர்கிறேன்.

கால்கள்
கட்டப்பட்டுள்ளதாய்
களிறுகள் எண்ணிக்கொள்கின்றன;
பாகன்களுக்கு – அது
பயனாய் விளைகிறது!

எதுவும் இங்கே
தடைகள் இல்லை;
காதறுந்த தயக்கச் செருப்பை
தூர எறிந்து விடுங்கள்
வானளாவ பறக்கும் நமக்கு
சுமை கூட்டும் செருப்பெதற்கு…?

– முற்றும்

ஏழாயிரம் ரூபாயில் மாடித்தோட்டம்!

0

சென்னை நகரில் தோட்டம் அமைக்க தரையில் இடம் இல்லாத, ஆனால் சொந்த வீட்டு மாடியில் இடம் உள்ளவர்களிடம் மாடித் தோட்டம் அமைக்கும் எண்ணத்தை இயற்கை ஆர்வலர்கள் வளர்த்து வருகிறார்கள். சிலர் மாடித் தோட்டம் அமைத்துக் கொடுப்பதைத் தொழிலாகவும் செய்து வருகிறார்கள்.

அப்படி தொழிலாக செய்து வருபவர்கள், திரு. பிரேம்ராஜ் மற்றும் திரு. ஆனந்தன் என்ற இரு நண்பர்கள். மாடித் தோட்டம் அமைப்பது பற்றி அவர்கள் கூறும்போது,

”சென்னையில் மக்கள் மாடித்தோட்டம் அமைக்க விரும்புகிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் அழகுச் செடிகளை வைப்பதுதான் தோட்டம் என்று நினைக்கிறார்கள். அவர்களிடம் அழகு செடிகளை விட காய்கறிச் செடிகளை வளர்க்கலாம் என்று ஆலோசனை கூறுகிறோம். அவர்களிடம் பொறுமையாக இயற்கை மாடித் தோட்டத்தை பற்றி விளக்கிச் சொன்னால் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களிடம் தேவையான தண்ணீர் வசதி இருக்க வேண்டும்.

அதன்பிறகு மாடித் தோட்டம் அமைத்துத் தரும் பணியை வழங்குவார்கள்.

செடிகளை, மண் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் வாங்கி வருவோம். இவ்வகை செடிகள் பார்ப்பதற்க்கு நன்றாக இருக்கும். அவ்வாறு வாங்கி வரும் ரோஜா செடியில் அல்லது மல்லிச் செடியில் பூக்கள் கூட பூத்து இருக்கும். இந்த கவர்ச்சியைப் பார்த்து செடிகளை வாங்கி விடுவார்கள். ஆனால் ஒரு மாதம் கடந்த பிறகு அவை அவற்றின் தன்மையை இழந்து விடும். காரணம் பிளாஸ்டிக் பையில் இருக்கும் மண்ணில் தொடந்து நாம் நீர் ஊற்றும் பொழுது மண் மிகவும் கெட்டியாகி விடுகிறது. அதனால் வேர்கள் அதன் தன்மையை இழந்து, மேற்கொண்டு வளர்வதில்லை.

ஆனால் நாங்கள் கோகோஃபீட் என்று சொல்லப்படும் தேங்காய்நாரில் செடிகளை வளர வைப்பதால், மண் கெட்டியாக மாறுவது இல்லை, நெகிழும் தன்மையில் இருப்பதால். நாம் வளர்க்கும் செடிகளும் நன்றாக வளரும்.

ஒரு மாடித் தோட்டம் அமைக்க குறைந்தது, ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகும். இதில் தேவையான விதைகள், கோகோஃபீட், இயற்கை உரங்கள், தோட்டக் கருவிகள், நிழற்கூட அமைப்பு, அமைத்து தரும் பொறுப்புகள், தொடர்ந்து தேவைப்படும் உதவிகள் இதில் அடங்கும்.

முதலில் விதைகளை கொண்டு தோட்டம் அமைத்து, ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் வந்து விதையில் இருந்து முளைத்துள்ள செடிகளை தனியே எடுத்து முழுமையாக தோட்டத்தை அமைப்போம். மாதம் ஒரு முறை அவர்களை தொடர்பு கொண்டு செடிகளின் வளர்ச்சி எப்படி உள்ளது, உரங்கள் ஏதாவது தேவைப்படுகிறதா என்று விசாரித்து செயல்படுகிறோம்.

மாடித் தோட்டத்தின் மூலம் தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், கீரைகள் போன்றவற்றை விளைவித்து பயன்படுத்தலாம்.

நாங்கள் மாடித்தோட்டம் அமைத்துத் தருவதுடன், ஓவியங்களையும் வரைந்து அழகுபடுத்துகிறோம். குறிப்பாக வீட்டில் உள்ள சுவிட்ச் பெட்டிகள் மீது மற்றும் மாடிப்படிக்கட்டு சுவர் போன்றவற்றில் ஓவியங்கள் வரைந்து அழகு படுத்துகிறோம்.
ஓவியங்களுக்கு ஆன கட்டணத்தை முதலிலேயே தெரிவித்து ஒப்புதல் பெற்ற பின்னர் வரைந்து கொடுப்போம். பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் வரையும் பயிற்சியும் கொடுக்கிறோம்.” என்றனர், இவர்கள். (79046 82203, 99404 26648)

– செழியன். ஜா

 

 

அரசு உயர் அதிகாரிகளிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

0
திரு.எஸ். ராஜரத்தினம்

ஓர் அரசு ஊழியர் பொதுவாக ‘அதிகாரி ‘ என்றே அறியப்படுகிறார். அவருடைய பணிக் காலத்தில் அவர் வளர்த்துக் கொண்டு உள்ள தனிப் பன்புக் கூறு அவருக்கு இருக்கிறது. அவர் தன்னை இயல்புக்கு மீறிய திறமை உள்ளவராக நம்புகிறார். ஏனென்றால் அவர் ஒரு போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பது மட்டும் அல்ல; அவர் யாருடன் செயல் தொடர்பு வைத்து இருக்கிறாரோ அந்த மக்களுக்கு மேலான திறமை படைத்தவராகத் தம்மைக் கருதிக் கொள்கிறார். அவருடன் பணியாற்றுவோர், அவருக்குக் கீழே உள்ள அலுவலர்கள், அவரிடம் ஏதாவது ஓர் உதவியை நாடிவரும் மக்கள் என்று இவர்கள் அனைவரையும் விடத் தம்மை மேலானவராக அவர் கருதிக் கொள்கிறார்.

அரசுப் பணியில் நுழைகின்ற போதே ஊதி உப்பிய தன்முனைப்புடனேயே அவர் உள்ளே நுழைகிறார். அரசுப் பணியில் ஓர் அரசு ஊழியராகத் தாம் சேர்ந்து உள்ளதாக அவர் கருதவில்லை. மாறாக அரசு வேலைக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிலருள் ஒருவராகத் தம்மைக் கருதிக் கொள்வார்.

பம்பாயில் என் பயிற்சிக் காலத்தில் எங்களுக்குக் கற்றுக் கொடுக்கபட்ட பாடம் ‘அலுவலக நடைமுறைச் செயற்பாடுகள்’ என்பதாகும்.
தூய்மையான வெண்ணிறக் கதராடை அணிந்த ஓர் அதிகாரி, பல்வேறு துறைகளின் விதிமுறைகளின் சாரத்தை விளக்கிக் கொண்டு இருந்தார். பயணப்படி பெறுவதற்கான தகுதியைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார். அக்காலத்தில் முதல்நிலை அதிகாரிகளுக்கு ரயில் பயணத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய உரிமை அளிக்கப்பட்டு இருந்தது.

இரண்டாம் நிலை அதிகாரிகளாகிய எங்களைப் போன்றவர்களுக்குச் சிறப்பு இரண்டாம் வகுப்பு அளிக்கப்பட்டது. அப்போது ரயிலில் நான்கு வகுப்புகள் இருந்தன. முதல்வகுப்பு, சிறப்பு இரண்டாம் வகுப்பு, பொதுவான இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்பவை அவை.

சிறப்பு இரண்டாம் வகுப்பில் படுக்கை வசதியை ஒதுக்கீடு செய்து கொள்ளும் உரிமை இருந்தது. பொதுவான இரண்டாம் வகுப்பில் பயணிகள் உட்காரும் இடவசதியை மட்டும் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம்.

முதல் வகுப்பிற்கும், சிறப்பு இரண்டாம் வகுப்பிற்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. என்னுடன் தகுதி காண் பருவத்தில் இருந்த ஓர் இளம் அதிகாரிக்கு இது எரிச்சல் ஊட்டியது. அவர் ஒரு கேள்வியை எழுப்பினார். ‘எங்களால் மதிப்பீடு செய்யப்பட்டு வரிவிதிக்கப் படுகிறவர்கள் முதல் வகுப்பிலும், அதிகாரிகளாகிய நாங்கள் இரண்டாம் வகுப்பிலும் பயணம் செய்தால், அவர்கள் எப்படி எங்களை மதிப்பார்கள்?’ என்று கேட்டார்.

அந்த விரிவுரையாளர், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார். வாழ்க்கைத் தரத்திலும், தகுதியிலும் வருமானவரி அதிகாரி, தன்னால் வரி விதிக்கப்படுகிறவர்களுக்கு மேம்பட்டவராக இருக்க வேண்டும் என்ற கருத்து எனக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை.

அந்தக் கேள்வியின் அறியாமையை நினைத்து எனக்குச் சிரிப்பு வந்தது. பின்னர் நான் எழுந்து சொன்னேன், ‘அய்யா, என்னுடைய நண்பர் கேட்ட கேள்விக்கு துணையாக நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். மும்பையில் வரி செலுத்துவோர் பலர் பெரும் பணக்காரர்கள். அவர்கள் அனைவரும் ‘மலபார் மலை(Malabar Hill) போன்ற உயர்ந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு ‘பூத் கானா (வொர்லி என்ற இடத்தில் உள்ள ஒரு பாழடைந்த பழைய கட்டிடம்) வில் இடம் கொடுத்து இருக்கிறார்கள். எங்களுக்கும் ‘மலபார் மலை’ யில் வரிசெலுத்துவோர் வாழும் இடங்களுக்கு உயர்வான இடத்தில் தங்குவதற்கு இடவசதி செய்து தர வேண்டும் என்று நான் கருதுகிறேன். இதைத் கேட்டவுடன் ஒவ்வொருவரும் அதிர்ச்சியடைந்து போனார்கள்.

நான் உண்மையாகவே கேட்கிறேனா, இல்லையா என்று தெரியாமல் அவர்கள் திகைத்தார்கள். ஆனால் அந்த விரிவுரையாளர் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டுப் பின்னர் புன்முறுவல் பூத்தார். நான் கேட்ட கேள்வி அந்த நண்பரைக் கிண்டல் செய்வதற்காகவே, வரி செலுத்துவோருக்கு இணையாக ரெயில் வசதி கேட்ட அவரைக் கேலி செய்வதற்காகவே, என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

அவரைப் பார்த்துச் சொன்னார், ‘நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன். நம்முடைய வாழ்க்கைத் தரத்தில். வரிசெலுத்துகின்ற பணக்காரனை விட நாம் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது தேவையில்லை. வரிசெலுத்தும் பலர் வளமாக இருக்கிறார்கள். ஓர் அரசு ஊழியர் வாங்கும் ஊதியத்தை விடப் பன்மடங்கு வருமானம் அவர்களுக்கு வருகிறது. நான் பேருந்தில் பயணித்து என் அலுவலகத்திற்கு வருகிறேன்; அதே நேரத்தில் என்னால் வரி விதிக்கப் பட்டவர்கள் சொந்த காரில் என் அலுவலகத்திற்கு வருகிறார். அதனால் அவர்களை விட நான் தாழ்ந்தவன் என்று என்னை ஒரு போதும் கருதியதில்லை. அவர்களைப் போல் நாம் வாழவில்லையே என்று நீங்கள் கருதினால் அது தாழ்வு மனப்பான்மை; அதனை நாம் விட்டொழிக்க வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ‘பொதுநலப் பணியாற்றும் மதிப்பிற்கு உரியவர்கள் நாம் என்ற பெருமை நமக்கு இருக்கிறது.’

வகுப்பு முடிந்ததும் விரிவுரையாளர் என்னை தட்டிக் கொடுத்து விட்டுச் சொன்னார். ‘அந்த நண்பருக்கு பொருத்தமான பதிலைக் கொடுத்து விட்டீர்கள். இதே போன்ற சிந்தனையோடு இத்துறையில் உங்கள் நீண்ட பயணம் இனிதே தொடர்வதாக!’

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நான் உதவி ஆணையராக இருந்த போது மீண்டும் அவரைச் சந்தித்தேன். அவர் அப்போது ஆணையர். அவர் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

‘உங்களைப் பற்றி நான் அடிக்கடி கேள்விப் படுவேன்; இந்தத் துறையில் நீங்கள் நன்கு செயல்படுவீர்கள், உண்மையாக உழைப்பீர்கள் என்று நான் கணித்தது உண்மையாகி விட்டதல்லவா!’ என்று சொன்னார் அவர்.

‘உங்களைப் போன்ற நல்லுள்ளம் கொண்டோர் முடிவு செய்து கூற வேண்டியது அது; நானே என்னைப் பற்றிச் சொல்லக் கூடாது. உங்கள் விரிவுரையை அன்று நான் மகிழ்ந்து விரும்பிக் கேட்டதைப் போலவே இன்று எனது பணியை அனுவித்து மகிழ்வோடு செய்து வருகிறேன்’ என்றேன். இருவரும் சிரித்து மகிழ்ந்தோம்.

எனக்கு முன் பணியாற்றிய ஒரு நண்பர் ஒருநாள் நெல்லூரில் நான் மிதிவண்டியில் அலுவலகத்திற்குப் போய் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டார். ஒரு விசாரணைக்காக அவர் சென்னையில் இருந்து நெல்லூருக்கு வந்து முகாமிட்டிருந்தார்.

அவர் சொன்னார், ‘நம்முடைய அதிகார (அலுவலக) மதிப்பைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நாம் அதைச் செய்யவில்லை என்றால் நம்மை யார் மதிப்பார்கள்?’

இந்த அறிவுரையை நான் நினைத்துப் பார்க்கிறேன். ‘நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள்’ என்ற உயர்வு மனப்பான்மையை அனைத்து அதிகாரிகளும் மிக விரைவில் வளர்த்துக் கொள்கிறார்கள். ‘பொதுமக்கள் மீது ஒரு கருத்தற்ற பாராமுகம், அக்கறையின்மை ஆகிய இவை பொதுவான அறிகுறிகள்.

தங்களைப் பார்க்க வரும் அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதில் இவை வெளிப்படுகின்றன.

என் அதிகாரிகளின் கூட்டம் ஒன்றில் ‘நம்மைப் பார்க்க வரும் மக்களைக் காத்திருக்க வைக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும்’ என்று அவர்களிடம் அறிவுறுத்தினேன்.

அவர்கள் முன்னரே நேரம் குறித்து அனுமதி வாங்கிக் கொண்டு வந்திருந்தாலும் இல்லையென்றாலும் பொதுமக்களைக் காத்திருக்க வைக்கக் கூடாது. நீண்ட நாட்களுக்கு முன்னரே வாரியம், ‘நம்முடைய வேலைகளை முறைப் படுத்திக் கொண்டு காத்திருக்க வைக்கும் நேரத்தை மிகமிகக் குறைக்க வேண்டும்’ என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதனை நான் பின்பற்றி வருகிறேன். வேறு ஏதாவது காரணத்திற்காக முன்கூட்டியே கொடுக்கப் பட்ட நேரம் சற்று அதிகமாகி விட்டால் நானே வெளியில் சென்று அல்லது பணியாளர் மூலமாக காத்திருப்போரிடம், ‘இன்னும் நீங்கள் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்’ என்ற செய்தியைத் தெரிவித்து விடுவேன்.

காத்திருந்த மக்கள் விரும்பினால் காத்திருந்து பார்த்து விட்டுச் செல்லலாம் அல்லது இந்த வாரமோ அடுத்த வாரமோ என்னைச் சந்திப்பதற்கான நேரத்தை அலுவலக எழுத்தரிடம் கலந்து பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

சில அதிகாரிகள் நான் கூறியவற்றில் எந்தத் காரணமும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறினர். இது தேவையில்லாத ஒன்று என்று அவர்கள் கருதினார்கள்.

அவர்களில் ஒருவர் சொன்னார், ‘அவர்கள் காத்திருக்கிறார்கள் என்றால்; நான் அலுவலகத்தில் சோம்பேறிக் தனமாக உட்கார்ந்திருக்கிறேன் என்றோ, அவர்களை வேண்டுமென்றே காத்திருக்க வைத்திருக்கிறேன் என்றோ பொருளல்ல; வேலைச்சுமை அதிகம் இருப்பதால் ஓய்வில்லாமல் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆதலால் இவ்வாறு காத்திருப்பது தவிர்க்க முடியாதது’ என்றார்.

சில நேரங்களில் இது தவிர்க்க முடியாமல் போய் விடும் என்பது உண்மை தான். ஆனால் இவை வழக்கமான வேலையாகி விடுகிறது. அதற்காக அதிகாரிகள் வருந்துவது இல்லை.தேவை இல்லாமல் மக்களை நீண்ட நேரம் காக்க வைப்பதற்காக நாம் வருந்த வேண்டாமா?

ஓர் அதிகாரி, வேறு சில அதிகாரிகளும், கணக்காளர்களும் உடனிருந்த உரையாடலின் போது, கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே, ‘அதிகாரிகள், அவர்களுக்கு உரிய மதிப்புக் கொடுக்கப்படுகின்ற வகையில் அவர்கள் நடந்து கொள்வது தேவையாகின்றது’ என்று சொன்னார்.

அவர்கள் அதிகாரிகளை எளிதாக நினைத்து நடத்தக் கூடாது. அவர்கள் மதிப்போடு நடத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓர் அரசு அதிகாரி என்ற முறையில் அவர்தம் கடமைகளைச் செய்யும்போது அவருக்கு உரிய மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். நம்மில் சில அதிகாரிகள் மலிவான விளம்பரத்திற்காக, அரசு அதிகாரி என்ற முறையிலான உயர் தன்மையைக் கடைப் பிடிப்பதில்லை,’ என்று பேசினார்.

அது குறிப்பாக என்னைப் பற்றிக் கூறப்பட்ட கள்ளத் தனமான குறிப்பு. மேலும், அவர் தொடர்ந்தார். அவரது வரம்புக்கு உட்பட்ட பகுதியில் இருந்த ஒரு வங்கிக்கு வரைவோலை பெறுவதற்காகப் போனாராம். அங்கு நீண்ட நேரம் அவர் காக்க வைக்கப்பட்டு இருக்கிறார்.

‘அங்கிருந்த வங்கி மேலாளருக்கும், உதவியாளர்களுக்கும் நான் வருமான வரி அதிகாரி என்பது நன்கு தெரியும். விரைவில் எனது வேலையை முடித்துக் கொடுக்குமாறு நான் கத்தினேன். பின்னர் ஒரு வாரம் கழித்து அந்த வங்கி மேலாளருக்கு ஒரு குறிப்பாணை அனுப்பினேன். வரி செலுத்துநர் ஒருவரின் அந்த வங்கிக் கணக்கை நான் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். ஆதலால் அந்த வரி செலுத்துநரின் கணக்கேடுகளை எடுத்துக் கொண்டு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு ஆணை அனுப்பினேன். காலை பத்து மணிக்கு அவருக்கு நேரம் ஒதுக்கியிருந்தேன். ஆனால் 12:30 மணிக்கு அவரை அழைத்தேன். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குரிய கணக்குகளின் ஒரு படியை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு அவரை அனுப்பி விட்டேன். இது அவருக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும். ஒரு வருமான வரி அதிகாரியின் மதிப்பு மிக்க நேரத்தை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் வருமான வரி அதிகாரியை மலிவாக எண்ணி நடத்தக் கூடாது என்பதை இனி அவர் புரிந்து கொள்வார்.’

இவ்வாறு அவர் தற்பெருமை பேசிக் கொண்டு போனார். அதைப் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்த நாங்கள் அவரது கொடுமை தாளாமல் வியப்படைந்து போனோம். அங்கு இருந்த பட்டயக் கணக்காளர்கள் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே இருந்தனர். ஆனால் அந்த அதிகாரி, எங்களுடைய எதிர் வினைச் செயல்பாடுகள் அவரை ஆதரிப்பனவாக இல்லை என்பதை உணராமல், அரசு அதிகாரியின் மதிப்பையும் மாண்பையும் காப்பாற்றிக் கடைப்பிடித்தமைக்காக அவர் பாராட்டப் படுகிறார் என்று நினைத்தார்.

இரக்கமன்றி வரிª சலுத்துவோரை நீண்ட நேரம் காத்திருக்கச் செய்வது, இப்போது பொது இயல்பாகி விட்டது. ஆங்கிலேயர் ஒருவர், வரித்துறையில் இயக்குநராக இருந்த போது அனுப்பிய பழைய சுற்றறிக்கை ஒன்று மக்களிடம் அன்பு காட்டுமாறு வற்புறுத்துகிறது.

வரி செலுத்துநர் ஒருவரிடம், ஓர்அதிகாரி, தான் அவரை விட உயர்ந்தவராக நடந்து கொள்ளக் கூடாது. அதிகாரி வரி செலுத்துநரின் இடத்தில் தன்னை வைத்து பார்க்க வேண்டும். அப்பொது அவரும் தனது வருமானத்தையே விரும்பியே துணிவோடு குறைத்துக் காட்டலாம்; அல்லது அவரது வணிகச் சூழல்களில் காரணமாக தனது வருமானத்தையே குறைத்துக் காட்டலாம். மதிப்பீடு செய்யப் பெற்று வரி செலுத்தும் அவர் இப்போது இரக்கமில்லாமல் நடத்தப் படுவதை போல அந்த அதிகாரி நடத்தப் பட்டால் அவரது மனநிலை எப்படி இருக்கும்? – இந்தக் கேள்வி தான் அதில் எழுப்பப் பட்டிருக்கிறது. நான் தகுதிகாண் பருவத்தில் இருந்த போது எங்களுக்கு அலுவலக நடைமுறைச் செயல்பாடுகளை பற்றிப் பாடம் நடத்திய வருமானவரி அதிகாரி இந்தச் சுற்றறிக்கையை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து காட்டிய போது, அந்த அறிக்கை தந்த பாடம் என்னை மிகவும் ஈர்த்துக் கொண்டது.

அதிகாரிகளின் தன் முனைப்பு, அலுவலகத்துடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. அது எல்லா இடங்களிலும் பரவி நிற்கிறது. எடுத்துக் காட்டாக அதிகாரிகள் கடை வீதிக்குச் செல்லும்போது அவர்களின் பணியாளர்களையும் உடன் அழைத்துச் செல்கின்றனர். பணியாளர்கள் தங்கள் அடையாள முத்திரையை அணிந்தவாறு அவர்களுடன் போகிறார்கள்.

விற்பனை வரித் தீர்ப்பாய உறுப்பினராக நான் பொறுப்பேற்றுக் கொண்ட போது, என் வீட்டில் எனது அலுவலகப் பணிகளைக் கவனிப்பதற்கு உதவியாகத் தனிப் பணியாளர் ஒருவர் நியமிக்கப்படுவதாக என்னிடம் கூறினார்கள். அது ஒர் அதிகாரிக்கு தேவையானது என்று சொன்னார்கள். அது நான் ஏற்றிருக்கும் பதவிக்காகத் தரப்பட்டது.
மாநில அரசின் உயர் அதிகாரிகள், பணியாளர்களை தங்கள் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது, எனக்கு அமர்த்தப்படவிருந்த அந்தப் பணியாளரின் மனத்துயரத்தை எண்ணிப் பார்த்தேன்; எனக்கு அப்படி யாரையும் பணி செய்ய அனுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

Also Read: பெண்களின் தொழில் முனைவை உற்சாகப்படுத்தும் அப்சராவின் ‘வானமே எல்லை’!

இதற்காகவே- இந்த உரிமையை விட்டுக் கொடுத்தமைக்காக மாதம் ரூ.75 எனக்கு கிடைத்தது. அதிகமாக ஓர் எழுபத்தைந்து கிடைத்ததால் எனக்கு மகிழ்ச்சி. மய்ய அரசு அதிகாரிகள், கடை நிலை ஊழியர்களை (Class 4)தங்கள் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம்தான். அது பொது இயல்பாகி விட்டது. ஜூனாகத்தில் என் அனுபவங்களைப் பற்றி எழுதுகிற போது இதைப் பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
அங்கு பார்ப்பனச் சமையல்காரர்களுக்கு ‘மகராஜ்’ என்று பெயர். அதிகாரிகளின் வீடுகளில் இவர்களைச் சமையல் வேலைக்கு அமர்த்துவார்கள். இது எழுதப் படாத ஒரு சட்டம்; இப்போது இவர்களை சமையல் வேலைக்கு அமர்த்தும் பழக்கம் இல்லை.
ஆனால் ஓர் அதிகாரி, தன் சொந்த நலன்களுக்காகத் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இன்னும் நிலைத்து இருக்கிறது.

என் பணிக் காலத்தில் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் குறைவானது என்று சொல்ல முடியாது; ஒரு வசதியான நல்ல வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமான அளவு இருந்தது. என் ஓய்வூதியத்தில் உயர்த்தபட்ட தொகையில் இருந்து சம்பளம் எவ்வளவு கணிசமான அளவு உயர்ந்து இருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.

நான் பணியில் இருந்த போது கூட இவ்வளவு சம்பளம் ஒரு போதும் பெற்றது இல்லை. இவ்வளவு ஊதியம் பெறும் அவர்கள் கடமை உணர்ச்சியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

– வரியியல் வல்லுநர் திரு. ச. இராஜரத்தினம் எழுதிய ”என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்” நூலில் இருந்து. வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1, ஈ. வெ. கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007. விலை: ரூ.600

ஏற்றுமதிக்கு உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்!

0

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை தற்போது சந்தித்து உள்ளது. அதிலும் குறிப்பாக, சென்ற இரண்டு மாதங்களில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு கிட்டத்தட்ட ரூபாய் 69-ஐ நெருங்கி விட்டது. பிறகு, சிறிதளவு முன்னேற்றம் தெரிந்தது. ஆகஸ்ட்,3-ஆம் தேதி ரூபாயின் மதிப்பு டாலருக்கு 68.60 ஆக நிலை கொண்டது.

இந்தியா ரூபாய் மதிப்பு சரிவுக்கு, கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருதல், மேற்கு ஆசிய நாடுகளில் அடிக்கடி ஏற்படும் அரசியல் பதற்றங்கள், அதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு என பல காரணங்கள் உள்ளன.

இந்திய ரூபாயின் மதிப்பு, முதல் முறையாக 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.60 -அதிகமாக வீழ்ச்சி அடைந்த போது, பொருளாதார வல்லுநர்கள் அதை ஒர் ‘அபாய அறிவிப்பு’ என்று கூறினர். அதன் பின் ஐந்து ஆண்டுகள் ஒடி விட்டன. மீண்டும் தற்போது ரூபாயின் மதிப்பு 68.60 – இல் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, நாம் ஒரு விஷயத்தை ஆராய வேண்டியது அவசியமாகிறது.

எப்போதெல்லாம் இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறதோ, அப்போதெல்லாம் இந்தியப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். ஏனெனில், இந்தியப் பொருள்களுக்கு வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் குறைவான டாலர்களைக் கொடுத்தால் போதுமானது. இப்போது ரூபாய் மதிப்பு குறைந்து, விலை சரிந்து உள்ள போதிலும், ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. இதற்குக் காரணம் என்ன ?
2018 ஏப்ரல் மாதம் இந்திய ஏற்றுமதி, குறிப்பாக, ஜவுளி, ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், ஆபரணக் கற்கள், தோல் பொருள்கள் ஆகிய பல காலமாக பிரபலமாக இருந்துவரும் பொருள்கள் கூட ஏற்றுமதியில் சரிவை சந்தித்து உள்ளன என்பதை மத்திய அரசின் புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கிறது. எனவே, நடப்புக் கணக்கில் ஏற்பட்டு உள்ள பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், ரூபாயின் மதிப்பை ஒரளவேனும் தாங்கிப் பிடிப்பதற்கும் ஒரே ஒரு வழிதான் உண்டு. பிற நாடுகளில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு நாம் செலவிடும் டாலர்களை விட, நாம் பொருள்களை ஏற்றுமதி செய்து, அதன் மூலம் கூடுதல் டாலர்களை சம்பாதிக்க வேண்டும். அதாவது அந்நியச் செலாவணியில் செலவை விட வரவு அதிகமாக இருக்க வேண்டும்.

நாம் அதிகமாக எதை இறக்குமதி செய்கிறோம்? முதலாவது, கச்சா எண்ணெய்; அடுத்ததாக, தங்கம். தங்க இறக்குமதி அண்மைக் காலமாக சற்று குறைந்து உள்ளது. புதிதாக, மின்னணுப் பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளோம். காலங்காலமாக, இந்தியப் பொருளாதாரம் ஏற்றுமதியை சார்ந்திருக்கிறது. ஆனால், தற்சமயம் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி) ஏற்றுமதியின் பங்களிப்பு வெறும் 12 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரம், தென் கொரியாவை எடுத்துக் கொண்டோமானால், அந்த நாட்டின் ஜிடிபி யில் ஏற்றுமதியின் பங்கு 42 சதவீதம்!
சீனாவின் ஏற்றுமதியும் குறைந்து உள்ளது. அந்த நாட்டின் ஜிடிபி சில ஆண்டுகளுக்கு முன் 13 சதவீதம் என உச்சத்தில் இருந்த போது, அந்த நாட்டின் ஏற்றுமதியின் பங்கு 37 சதவீதமாக இருந்தது.

சீனாவில் ஏற்றுமதி குறைந்து உள்ள இந்தத் தருணத்தில், அதை பயன்படுத்திக் கொண்டு இந்திய ஏற்றுமதியை நாம் அதிகரிக்க வேண்டாமா? இனியாவது, சீனாவின் ஏற்றுமதியின் சந்தையில் ஒரு பகுதியையாவது இந்திய ஏற்றுமதியாளர்கள் கைப்பற்ற முனைய வேண்டும். மாறாக, வங்க தேசம் போன்ற சின்னஞ்சிறு நாடுகள் தங்கள் ஏற்றுமதியை அதிகரித்து உள்ளன. 2017-18-இல் நமது ஏற்றுமதி 13 சதவீதம் மட்டுமே. ஏற்றுமதி 20 சதவீதத்தை எட்டிப் பிடித்த காலம் ஒன்று இருந்தது. 2018-ஆம் ஆண்டு மே மாதத்தின் ஏற்றுமதி, 2017 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் என்பது, காரிருளில் ஒளிக்கீற்று தெரிவது போல் நம்பிக்கை அளிக்கிறது.

இந்த சூழலில், ஜிஎஸ்டி ஏற்றுமதியை பாதிப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன. சான்றாக, ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்யும் கச்சா பொருள்களுக்கு(Raw material) அவர்கள் செலுத்தும் வரித் தொகையில் திரும்ப கொடுக்க வேண்டிய(Refund) தொகையை விரைந்து கொடுக்க வேண்டும் என்கிற ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

ஏற்றுமதியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் நாளுக்குநாள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது மற்றொரு புகார். இதனால் சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் குழப்பம் அடைகிறார்கள். ஏற்றுமதியை இது நேரடியாக பாதிக்கக்கூடியது. சான்றாக, மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியம் (Central Board of Excise and customs) 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் (மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்களில்) ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகள் குறித்து 173 அரசாணைகளை பிறப்பித்து இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

இந்தியாவில் பல பெரிய துறைமுகங்களில் மின்னணு தகவல் பரிமாற்ற முறை (Electronic Data Interchange) நடைமுறையை விரைந்து அறிமுகம் செய்ய வேண்டும். இதன் மூலம் ஆவணங்கள் அளிப்பதில் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் கால விரயம் குறையும்.

உலகு வங்கியின் அண்மைய ஆய்வின் படி, இந்தியாவில் ஏற்றுமதியாளர்களுக்கு துறைமுக விதிமுறைகளை நிறைவு செய்வதற்கு, சீனாவில் ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப்படும் நேரத்தை விட நான்கு மடங்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. உலகில் ஏற்றுமதி செய்யும் 190 நாடுகளின் வரிசையில் இந்தியா 146- வது இடத்தில் உள்ளது என்கிறது உலக வங்கியின் ஆய்வறிக்கை.

நாம் வழக்கமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முன்பு நிலவிய பொருளாதார மந்தநிலை குறைந்து தற்போது பொருளாதார மீட்சி ஏற்பட்டு உள்ளது.

இந்த சாதகமான சூழலை பயன்படுத்திக் கொண்டு நாம் ஏற்றுமதியை உயர்த்த முனைய வேண்டும். அதற்கு ஏற்ப, ஏற்றுமதியாளர்களுக்கு அரசு அனைத்து வகையிலும் உதவிக் கரம் நீட்ட வேண்டும்.

வங்கிகளும் ஏற்றுமதியாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் புரியும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி கடன், ஏற்றுமதிக்கு முந்தைய தயாரிப்புக் கடன் (பேக்கிங் கிரடிட்) ஆகியவற்றை வழங்குவதில் பரிவுடனும் விரைந்தும் செயல்பட வேண்டும். ஏற்றுமதியாளர்கள் வெறும் வியாபாரம் மட்டும் செய்வதில்லை. நாட்டுக்கும் நல்லது செய்கிறார்கள் என்பதை வங்கிகள் மனதில் கொள்ளவேண்டும்.
நியூசிலாந்து, கேமேன் தீவுகள், லட்டிவா, லித்துனியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை புதிய, வளரும் சந்தைகளாக அரசு அறிவித்தது. இது ஒரு ‘ஃபோக்கஸ்’ திட்டம். இந்த திட்டத்தை எத்தனை ஏற்றுமதியாளர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆய்வு செய்ய வேண்டும்.
அந்த ஆய்வின் விளைவாக கிடைக்கும் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் அந்த திட்டத்தை மேம்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். ஒருவேளை அந்த திட்டம் நல்ல பலனை அளித்து உள்ளது என்றால், மேலும் புதிய சந்தைகளை ‘ஃபோக்கஸ்’ திட்டத்தில் இணைப்பது நல்லது.

ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சவால், ஒட்டு மொத்த ஏற்றுமதியில் பரிமாற்ற செலவு மட்டும் 7 சதவீதம் முதல் 10 சதவிதம் வரை ஆகிறது. துறைமுகக் கட்டணங்கள், வங்கி கட்டணங்கள், அந்நியச் செலாவணி கட்டணங்கள் ஆகியவற்றை கட்டுப்படியாகும் அளவிற்கு குறைக்க வேண்டும். ஏற்றுமதியாளர் அமைப்புகளின் இந்த கோரிக்கையை மத்திய வர்த்தக அமைச்சகம் பரிசீலித்து, நியாயமான நிவாரணம் அளிக்க முன்வர வேண்டும்.

இந்திய ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிப்பவை ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியாகும். அப்படி இருந்தும், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் சவால்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

இதற்கு, சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு ஆகிய விஷயங்கள் தான் காரணம் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. சாயப்பட்டறைகள், சலவைஆலைகள், போன்றவை சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்பது வெளிப்படை..
இதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் – தமிழ்நாடு உள்பட – நீதிமன்ற ஆணைகளுக்கிணங்க ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்படுகின்றன. இதனால் ஏற்றுமதி இழப்பு ஏற்படுவது மட்டுமல்ல, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பணி வாய்ப்புகளும் பறிபோகின்றன.

இந்த பிரச்சனை, சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு, ஜவுளித்தொழில், ஜவுளி கலைநயம் ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, அந்நியச் செலாவணி, பொதுமக்கள் நலம் போன்ற பல்வேறு கோணங்களில் ஆராயப்படவேண்டும்.

இப்பிரச்னையை மேம்போக்காக அணுகாமல், மத்திய , மாநில அரசுகள் மற்றும் பொதுநலம் பேணும் வல்லுநர்கள் இணைந்து, ஆழமாக பரிசீலித்து, நடைமுறை சாத்தியமான தீர்வைக் கண்டு, விரைந்து சீரமைக்க வேண்டும். இதுதான் அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும். அத்தகைய செயல்பாடு ஏற்றுமதி ஏற்றம் பெற நிச்சயம் உதவும்.

– எஸ். கோபாலகிருஷ்ணன், நிதியியல் வல்லுநர் (தினமணியில்)

 

சட்டைகள் உற்பத்தித் தொழிலில், இரண்டு ஆண்டுகளில் நல்ல பயிற்சி கிடைத்தது!

0

ட்ருஃபாக்ஸ் என்ற பெயரில் ஆண்களுக்கான சட்டைகள் உற்பத்தி செய்து சந்தைப் படுத்துகிறார், திரு. பி. சவுந்தர்ராஜன். தனது தொழில் பற்றி இவர் கூறும்போது,

”தொடக்கத்தில் சில தொழில்களைத் தொடங்கி நடத்தி, போதிய அனுபவம் இல்லை என்பதால் அவற்றில் வெற்றி காண முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து வேறு என்ன தொழில் தொடங்கலாம் என்று கள நிலவரங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஆண்கள் அணியும் சட்டைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்தால் வளர முடியும் என்று தோன்றியது.

அதன் பிறகு, அது தொடர்பான தகவல்களைத் திரட்டத் தொடங்கினேன். வாடிக்கையாளர்கள் எத்தகைய ஆடைகளை விரும்புகிறார்கள், ஆண்டு விற்பனை எந்த அளவுக்கு இருக்கிறது, மூலப் பொருட்கள் எங்கே கிடைக்கின்றன, விற்பனைச் சங்கிலி எப்படி செயல்படுகிறது என்பது போன்ற விவரங்களை முயன்று பெற்றேன்.

ஆடைகள் விற்பனை என்று முடிவு செய்தவுடன், ஆண்களுக்கான சட்டைகள் தயாரித்து விற்பனை செய்யலாம் என உறுதியான முடிவு எடுத்தேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ட்ருஃபாக்ஸ் (Trufox) என்ற பெயரை பதிவு செய்து தொழில் தொடங்கினேன். நிறுவனத்தின் பெயரை முறைப்படி ட்ரேட் மார்க் (Trade Mark) பதிவு செய்து உள்ளேன்.

முதலில் ஆண்கள் அணியும் டி-ஷர்ட் தயாரித்து விற்பனையில் கவனம் செலுத்தினேன். ஆண்கள், டி-சர்ட்டை விரும்பி வாங்கினாலும் விடுமுறை போன்ற நாட்களில் மட்டுமே அதனை அணிகிறார்கள். அதனால் டி-சர்ட் விற்பனையை பெரிய அளவில் கொண்டு வர முடியாது என்று நினைத்து, சட்டைகள் தயாரிப்பில் கவனம் செலுத்தினேன்.

சென்னையில் ஆடை தயாரிப்பவர்கள், அதற்கான மூலப் பொருளான துணி வகைகளை வாங்க பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு நகரங்களுக்கு மட்டுமே செல்வார்கள். அகமதாபாத்தை விட பெங்களுரில் விலை சிறிது உயர்வாக இருக்கும் என்பதால், துணி குறைவாக வாங்கும் பொழுது பெங்களூரிலும், பண்டிகை காலத்தில் அதிகம் விற்பனை ஆகும் என்பதால் அகமதாபாத் சென்றும் வாங்குவோம்.

சென்னை, வண்ணாரப்பேட்டையில் அதிக அளவில் துணிகளின் மொத்த விற்பனைக் கடைகள் இருப்பது போல், துணி தைக்கும் நிறுவனங்கள் வியாசர்பாடியில் அதிக அளவில் உள்ளன. அங்கு நிறைய துணி தைக்கும் சிறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.. பெங்களூர், அகமதாபாத் போன்ற நகரங்களில் இருந்து வாங்கி வரப்படும் துணிகளை வியாசர்பாடியில் கொடுத்து எங்களுக்கு ஏற்ற விதங்களில் தைத்து வாங்கிக் கொள்வோம்.

தைக்கப்பட்ட சட்டைகள், தையல் நிறுவனத்தில் இருந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள எங்கள் கிடங்குக்கு வரும். சரக்குக் கிடங்கில் இருந்து முகவர்கள், ஷோரூம், சிறு துணி கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவோம்.

முகவர்களுக்கு ஒரு விலையிலும், நேரடி விற்பனை ஆகும் ஷோரூம், சிறு துணி கடைகள் போன்றவற்றுக்கு ஒரு விலையிலும் கொடுப்போம். எங்களிடம் வாங்கும் முகவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் கடைகளுக்கு விற்பனைக்குத் தருவார்கள்

சென்னையை வடக்கு, தெற்கு, மேற்கு, நடு என்று பிரித்து அங்கு உள்ள துணிக் கடைகளுக்கு ட்ருஃபாக்ஸ் சர்ட் வகைகளை விற்பனைக்கு கொடுக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் முகவர்களை நியமிக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடைகளுக்கு விற்பனைக்குக் கொடுக்கும்போது, சரக்குக்கான பணம் உடனடியாக கிடைக்காது. சுமாராக ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதங்கள் வரை காலம் எடுத்துக் கொள்வார்கள். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக பணம் தருபவர்களும் உண்டு. எனவே பண வசூலுக்கு என்றே பணியாளர்களை நியமித்து இருக்கிறோம்.

பணம் உள்ளே வந்தால்தான் நாம் நாம் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க முடியும். இது ஒரு சங்கிலி வியாபாரத் துறையாகும். தொடக்கத்தில் நமக்கு யாரும் கடனில் தர மாட்டார்கள். நிலைத்து நின்று, நாம் நாணயமானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினால்தான், நாமும் கடனுக்கு துணிகளைப் பெற முடியும். கடன் கொடுத்து வாங்கும் தொழிலாக இருப்பதால் நடப்பு முதலீட்டுக்குத் தேவையான பணம் எப்போதும் கையில் இருக்க வேண்டும்.

நாங்கள் எங்கள் உற்பத்தியைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன என்பதால் கடைகளில் பரவலாக தெரிய தொடங்கி விட்டது. ஆண்கள் அணியும் துணிகள் என்று எடுத்து கொண்டால் சராசரியாக ஒரு ஃபார்மல் பேன்ட அல்லது ஜீன்ஸ் பேன்டுக்கு நான்கு, ஐந்து சட்டைகள் வைத்து இருப்பார்கள். ஆக சட்டைகள் அதிகமாகவும், பேன்ட்கள் குறைவாகவும் வாங்குவதால், பல டிசைனகளில், வண்ணங்களில் சட்டைகளைத் தைத்து சந்தைப்படுத்தினால் மட்டுமே வளர முடியும். இதற்கு வாடிக்கையாளர்களின் தேர்வு எப்படி இருக்கிறது என்பதை தொடரந்து கண்காணித்து வர வேண்டி இருக்கிறது.

எங்களைப் போன்ற புதிய நிறுவனங்கள், எற்கெனவே உள்ள பெரிய பிராண்டுகளைப் பின்பற்றியே செயல்பட வேண்டி இருக்கிறது. அவர்கள் அறிமுகப்படுத்தும் வண்ணங்கள், டிசைன்களையே நாங்களும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பெரிய பிராண்டுகள் அறிமுகப்படுத்தினால் ஏற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் எங்களைப் போன்றவர்கள் அறிமுகப்படுத்தினால் வாங்குவதற்குத் தயங்குகிறார்கள். எனவே பெரிய பிராண்டுகளின் செயல்பாடுகளை நாங்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்போம்.

சான்றாக ஸ்லிம் ஃபிட் என்ற சட்டை வகைகள், உடலோடு ஒட்டியபடி சற்று இறுக்கமாக இருக்கும். இந்த வகை சட்டைகளை பெரிய பிராண்டுகள் அறிமுகம் செய்ததாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாக இளைஞர்கள் இந்த வகை சட்டைகள் விரும்பி வாங்குகிறார்கள். எங்களைப் போன்றவர்கள் ஸ்லிம் ஃபிட் சட்டைகளை அறிமுகப்படுத்தி இருந்தால், சட்டைத் துணியை மிச்சம் பிடிப்பதற்காக இப்படி இறுக்கமாகவும், உயரத்தைக் குறைத்தும் தைத்து இருக்கிறார்கள் என்று கூறி புறக்கணித்து இருப்பார்கள்.

பெரும்பாலும் பெரிய பிராண்டுகளைப் பின்பற்றியே சட்டைத் தயாரிப்பில் ஈடுபடுகிறோம். வழக்கமான நார்மல் ஃபிட் சட்டைகளின் விற்பனையும் எப்போதும் போல இருக்கிறது. எங்கள் கணிப்பின்படி இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே ஸ்லிம் ஃபிட் சட்டைகளின் விற்பனை இருக்கும். பின்னர் படிப்படியாக குறைந்து விடும். பிறகு வேறு ஏதேனும் டிசைன்களில் சட்டைகள் தயாரிக்கப்படக் கூடும். ஆனால், நார்மல் ஃபிட் சட்டைகளின் விற்பனைக்கான வாய்ப்பு நிலையாக இருக்கும்.

பெரிய நிறுவனங்கள் என்ன மாறுதல்களைக் கொண்டு வந்தாலும் அதிக அளவிலான விளம்பரங்கள் மூலம் மூலம் மக்கள் மனதில் பதியச் செய்து விடுவார்கள். வாங்கும் ஆசையை உருவாக்கி விடுவார்கள்.

இன்று ஆண்கள் அணியும் ஸ்லிம்ஃபிட் சட்டைகளைம் தைக்க நார்மல் சட்டைக்குத் தேவைப்படும் துணி அளவை விட குறைந்த அளவு துணி இருந்தாலே போதும். அதன் மூலம் நிறுவனங்களுக்கு நிறைய பணம் மிச்சமாகும். பத்து சட்டைகளுக்கான துணியில் பதினொன்று தைத்து விடலாம். அதனால் இன்று பெரிய நிறுவனங்கள் இவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கின. ஆனால் இந்த வகை சட்டையை ஆண்கள் அணிந்தால் மிகுந்த இறுக்கமாக இருக்கும். கையை தூக்க முடியாது, இழுத்துப் பிடிக்கும். ஆனால் விளம்பரங்கள் அதனை மறக்கடித்து மக்களை வாங்க வைத்து விடுகிறது. விளம்பரங்கள் மூலம் ஒருமுறை மட்டுமே வாங்க வைக்க முடியும். ஒருமுறை வாங்கி அணிந்தவர்கள் மறுபடியும் ஸ்லிம்ஃபிட் சட்டைகளை வாங்குவதாகத் தெரியவில்லை.

நாங்கள் தயாரிக்கும் சட்டைகளின் தரம் பெரிய பிராண்டுகளின் தரத்துக்கு இருந்தாலும், அவற்றைப் போல நாங்கள் விலை வைக்க முடியாது. அவர்களிடம் ஆயிரம் ரூபாய், ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு கிடைக்கும் சட்டைகளை, அதே தரத்துடன் நாங்கள் ஐநூறு ரூபாய் முதல் அறுநூற்று ஐம்பது ரூபாய் விலையில் விற்பனை செய்கிறோம்.

ஆண்கள் அதிகமாக தனிவண்ண (பிளைன் நிறம்) சட்டைகளையே வாங்குகிறார்கள். இவற்றின் விற்பனை எப்போதும் அதிகமாகவே இருக்கும். இதற்கடுத்து சிறிய கட்டம் போட்ட சட்டைகள் விற்பனை ஆகின்றன. பெரிய கட்டம், பெரிய கோடுகள், புள்ளிகள் உடைய சட்டைகளின் விற்பனை குறைவாகவே இருக்கின்றன. நாங்கள் பிளைன் நிற சட்டை வகைகளையே அதிக அளவில் தயாரிக்கிறோம்.

நிறங்கள் என்று பார்த்தால் பொதுவாக நீலம், வெள்ளை, கருப்பு நிற சட்டைகள் அதிகம் விற்பனை ஆகின்றன. விழாக் காலங்களில் பளபளப்புடன் இருக்கும் சட்டைகளை விரும்பி வாங்குவதைப் பார்க்க முடிகிறது. ஆடைகள் வணிகம் என்றும் வருமானத்தைக் கொண்டு வரும் தொழிலாகும். இன்னும் கிராமங்களில் உள்ள துணி வணிகர்கள் சைக்கிளில் அல்லது மோட்டார் சைக்கிளில் ஆடைகளை மூட்டையாகக் கட்டி வந்து விற்பனை செய்வதை இப்போதும் பார்க்கலாம். இவர்களில் சிலர் தவணை முறையிலும் விற்பனை செய்வதைப் பார்க்கலாம். குறைந்த முதலீட்டிலும், அதிக முதலீட்டிலும் செய்வதற்கு ஏற்ற தொழில் இதுவாகும்.

Also Read: உணவகத் தொழில்: வாழ்க்கையை மாற்றிய வானொலி நேயர்கள்

ட்ருஃபாக்ஸ் நிறுவனம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டதால், எதிர்கால திட்டங்கள் என்று சிலவற்றை வரைந்து உள்ளேன். போதுமான அனுபவம் இல்லாமல் தொடங்கினாலும், இப்போது தேவையான அனுபவம் கிடைத்து விட்டது. தொழிலைப் பற்றிய புரிதல் ஏற்பட்டு விட்டது. முதன்மையான புரிதல், அனைத்தையும் விட கடைகளில் இருந்து வசூலிக்க வேண்டிய பணத்தை வசூலிப்பதில் சிறிதும் சுணக்கம் காட்டக் கூடாது. இதில் சுணக்கம் காட்டினால் பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

தற்போது எங்கள் ட்ருஃபாக்ஸ் சட்டைகளை சென்னையில் உள்ள கடைகளுக்கு நாங்களே நேரடியாக விற்பனைக்கு வழங்கி வருகிறோம். அடுத்ததாக வெளி மாவட்டங்களிலும் எங்கள் விற்பனையை விரிவாக்க இருக்கிறோம். அங்கெல்லாம் முகவர்களை நியமிக்க இருக்கிறோம். வெளி மாவட்டங்களில் நேரடியாக சப்ளை செய்ய வாய்ப்பு உள்ள இடங்களில் நேரடியாகவும் சப்ளை செய்வோம். அமேசான், ஃபிளிப்கார்ட் வாயிலாகவும் விற்பனை செய்கிறோம்.

எங்களிடம் முகவர்களாக விரும்பிகிறவர்களுக்கு தேவையான ஆலோசனைகளைத் தருகிறோம். ஆர்வம் இருப்பவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்.
சென்னையில் பெரிய ஆயத்த ஆடைகள் அங்காடி ஒன்றைத் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் நாங்களும் ஒரு பெரிய பிராண்ட் ஆக வேண்டும் என்ற இலக்கோடு உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார், திரு. சவுந்தரராஜன். இவர் எம்பிஏ பட்டம் பெற்று இருக்கிறார். (89399 11357)

– செழியன். ஜா

கால்நடை வளர்ப்பு: அரசின் சிந்தனைக்கு..

0

பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில், கருவூட்டல் செய்யப்பட்டு பிறந்த கன்றுகளையும், பசுக்களையும் விவசாயிகள் விற்று விடாமல் இருக்க, கிடேரிக் கன்று வளர்ப்புக்காக மாதம்தோறும் பத்து ரூபாய் வீதம் மானியமாக வழங்கினார்கள். அந்தக் கன்று பசுவாக வளர்ந்து கன்று போடும் வரை அந்த மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதனால் தமிழ் நாட்டில் பல்லாயிரக் கணக்கான பசுக்களும், கன்றுகளும் விற்கப்படாமல் பாதுகாக்கப்பட்டன. பால் உற்பத்தி பெருகியது. சாணம், கோமியம் மண்ணிலேயே கலந்து மண் வளம் பெற்றது. விவசாயிகள் பிள்ளைகளை படிக்க வைக்க முடிந்தது.

தற்போதைய சூழ்நிலையில் அந்த திட்டத்தை நவீனப்படுத்தி காலத்திற்கு ஏற்றவாறு கால்நடைத் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தலாம். கிராமப்புற ஏழை மக்கள் பயன் அடைவார்கள். பொருளாதார உற்பத்தி பெருகும். கிராமங்களின் ஏழ்மை நிலையை இந்த திட்டம் பெருமளவில் குறைக்கும்.

கால்நடைத் துறையில் செயல்பட்டு வரும் சுமார் மூவாயிரம் கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவக் கிளை நிலையங்களில் கருவூட்டல் செய்யப்பட்டு பிறக்கும் பசு, எருமை, கிடேரிக் கன்றுகளுக்கு, நிலையத்திற்கு ஐம்பது கன்றுகள் வீதம் மொத்தம் மூவாயிரம் ஜ் ஐம்பது = ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கன்றுகளுக்கு, ஒரு கன்றுக்கு முன்னூறு ரூபாய் வீதம் தொடர்ந்து இருபது மாதங்கள், அதாவது கன்று சினை பிடித்து, கன்று போடும் வரை கொடுக்கப்பட வேண்டும். இது அந்த அந்த நிலையங்களிலேயே கொடுக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் விவசாயிகள் பசுவையும், கன்றையும் விற்று விடாமல் அக்கறையோடு பாதுகாப்பார்கள். கூடுதலாக ஒரு அலுவலர் கூட நியமிக்க வேண்டியதில்லை. உதவித் தொகை ரூ.300ஜ்20=6000 முதலீட்டில் ரூ.60,000 பெறுமானமுள்ள பசுவும், கன்றும் கிடைக்கும். அப்பசு நாள்தோறும் காலை சுமார் இருபது லிட்டர், மாலை எட்டு லிட்டர் பால் கறக்கும். வளர்ப்பு, தேய்ப்பு முறைகளைப் பொறுத்து கறவை கொஞ்சம் முன்பின் இருக்கலாம். தமிழகத்துக்கு நாளொன்றுக்கு சுமார் முப்பது லட்சம் லிட்டர் பால் கூடுதலாகக் கிடைக்கும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு இருபது மாதங்களுக்கு தொன்னூறு கோடி ரூபாய் செலவாகும். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு (அறுபது மாதம்) இருநூற்று எழுபது கோடி ரூபாய் செலவாகலாம்.

தமிழ்நாடு அரசு இச்செலவை ஏற்க இயலா நிலை அமைந்தால் நடுவணரசுக்கு விண்ணப்பித்து தேவையான நிதியைப் பெறலாம். நடுவணரசு வேளாண் மேம்பாட்டுக்காக நிதிநிலை அறிக்கையில் இரண்டு லட்சத்து பதினாறாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. தமிழ் நாடு அரசு இந்த ஆலோசனையை நிறைவேற்றினால் சிற்றூர்களில் உள்ள சாதாரண விவசாயிகளின் பொருளாதாரத்தில் குறிப்படத்தக்க அளவுக்கு வளர்ச்சி ஏற்படும்.

– இரா. இரத்தினகிரி, தஞ்சாவூர்

புதுச்சேரியில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

0

உலகத் தமிழர் பொருளாதார மய்யம் சார்பில் தொடர்ந்து உலகத் தமிழர் பொருளாதார மாநாடுகளை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கிறார், திரு. விஆர்எஸ். சம்பத். வழக்கறிஞரான இவர் சட்டக்கதிர் என்னும் சட்ட விழிப்புணர்வு மாத இதழின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருக்கிறார். இது வரை நான்கு உலகப் பொருளாதார மாநாடுகளை இவர் நடத்தி இருக்கிறார். வரும்  அக்டோபர், 11 முதல் 15 வரை புதுச்சேரியில் நடைபெற இருக்கும் ஐந்தாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இது பற்றி திரு. சம்பத் கூறியபோது,

“தொழில் துறையில் உள்ள தமிழர்களிடையே வணிகத் தொடர்புகள் ஏற்படவும், தொழில் வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ளவும், தொழில் முனைப்பு தொடர்பான சிந்தனைகளை தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்பதையும் முதன்மையான நோக்கங்களாகக் கொண்டு உலகத் தமிழர் பொருளாதார மாநாடுகளை நடத்தி வருகிறோம். இதுவரை நான்கு மாநாடுகள் நடைபெற்று இருக்கின்றன. 2009 – ம் ஆண்டு சென்னையிலும், 2011 – ம் ஆண்டு துபாயிலும், 2016 – ம் ஆண்டு மீண்டும் சென்னையிலும், 2017 – ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பனிலும் நடைபெற்றன. இந்த ஆண்டு புதுச்சேரியில் நடைபெறுகிறது.

தமிழர்கள் தொழில்களைத் தொடங்க வேண்டும், தற்போது தொழில் நிறுவனங்களை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் மேலும் முன்னேற வேண்டும் என்ற எண்ணங்களுடன் தமிழ்நாட்டில் பலர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களும் இந்த மாநாடு நடைபெறுவதில் ஆர்வம் காட்டுவதோடு தங்களால் முடிந்த ஒத்துழைப்புகளையும் தந்து வருகின்றனர்.

தமிழகத்தில் படித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வமே நிறைய மாணவர்களிடம் காண முடிகிறது. அவர்களிடம் ஓரளவுக்காவது தொழில் தொடங்கி வளர வேண்டும் என்ற எண்ணங்களை விதைப்பதற்கு இத்தகைய மாநாடுகள் உதவும் என்று எண்ணுகிறோம். குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்தியர்கள் தொழிலில், வணிகத்தில் ஈடுபடுவதை ஆர்வமாகச் செய்கிறார்கள். அதைப்போல தமிழர்களிடையேயும் வணிக எண்ணங்களைத் தூண்ட வேண்டும்.

இதற்கு தொடர்ந்து தொழில் தொடர்பான விழிப்புணர்ச்சி ஊட்டும் நிகழ்ச்சிகள், பயிற்சிகள் நடைபெற வேண்டும். தொழில் தொடர்பான விழிப்புணர்வை தமிழக மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று, தொடக்கத்தில் பல தொழில் கருத்தரங்குகளை நடத்தினோம். அந்த கருத்துரங்குகளில் நிறைய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அதன் தொடர்ச்சியாகவே இப்படிப்பட்ட மாநாடுகளைத் திட்டமிட்டு நடத்துகிறோம்.

புதுச்சேரியில் நடைபெறும் மாநாட்டில், மொரீஷியஸ் நாட்டின் ஜனாதிபதி, டாக்டர். பரமசிவம் பிள்ளை, திரு. வையாபுரி, புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி, ஆளுநர் செல்வி. கிரண்பேடி, தமிழகத்தின் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர் திரு. க .பாண்டியராஜன் மற்றும் தொழில் அதிபர்கள், மற்றும் வெளிநாட்டு பொருளாதார அமைச்சர்கள், பொருளியல் வல்லுநர்கள் கலந்து கொண்டு மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்கள்.

விருதுகள் வழங்குதல், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், பொருளாதார ஆய்வு அறிக்கைகள் வழங்கல் போன்றவையும் நடைபெறுகின்றன. மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்கள் தொழில் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்வதற்கும் திட்டம் உள்ளது. புதுச்சேரிக்கு அருகில் சென்னை உள்ளது என்பதால், சென்னையில் உள்ள தொழில் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்ல போக்குவரத்துத் துறைகளிடம் பேசி வருகிறோம்.

மாநாட்டில் நடைபெற இருக்கும் சிறப்பு கருத்தரங்குகளில் இந்தியா-சீனா பொருளாதார வளர்ச்சி, பணமதிப்பு இழப்பால் ஏற்பட்டு உள்ள பொருளாதார மாற்றங்கள், சரக்கு மற்றும் சேவை வரியால் தொழிலில், வணிகத்தில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள், உலக அளவில் உள்ள பொருளாதார வாய்ப்புகள் போன்ற தலைப்புகளில் அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகள் பெற உள்ள பிற வாய்ப்புகள் குறித்தும் மாநாட்டில் ஆலோசனைகள் கிடைக்கும். எங்கள் இணைய முகவரி – economicconference.in ” என்றார், திரு. விஆர்எஸ். சம்பத்.

– செழியன். ஜா