தனி வீடு வாங்க ஆர்வம் காட்டுவது ஏன்?

0

– ரியல் எஸ்டேட் ஆலோசகர் திரு. செல்வகுமார்

கடந்த சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் தொழில் கடுமையான சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறது. கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னும் விற்க முடியாமல் திணறுகின்றன, அடுக்கு மாடிக் குடியிருப்பு நிறுவனங்கள். அவசரத்துக்குக் கூட வீட்டையோ, மனையையோ முன்பு போல உடனே விற்பனை செய்ய முடியாத நிலை. இந்த நிலையில் நிறைய பேர் ரியல் எஸ்டேட் தொழிலில் நீடிக்க முடியாமல் இந்த தொழிலை விட்டே போய் விடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன, ரியல் எஸ்டேட் தொழில் எப்போது மீண்டு வரும் என்பது போன்ற கேள்விகளை சென்னை, செங்குன்றத்தில் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வரும் திரு. ஆர். செல்வகுமார் இடம் கேட்ட போது,

”தற்போது அரசாங்கம் புதிதாக அறிவித்த ஆணைப்படி முன்பாகவே அங்கீகரிக்கப் பட்ட வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் மட்டுமே பத்திரப் பதிவு செய்ய முடியும். ரியல்எஸ்டேட் தொழில் செய்வோர் வீட்டு மனைகளுக்கு சிஎம்டிஏ அங்கீகாரம் பெற அணுகும்போது, விரைவில் கிடைப்பது இல்லை. ஆறு மாதங்களுக்கு மேல் அலைக்கழிக்கப் படுகிறார்கள். ரியல் எஸ்டேட் தொழில் முடங்கிப் பொனதற்கு இது ஒரு முதன்மையான காரணம் ஆகும்.

மேலும், புதிய வீட்டு மனைகளுக்கு மக்களிடம் குறிப்படத்தக்க அளவுக்கு வரவேற்பு இல்லை. முன்பே அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள வீடுகள் மற்றும் வீட்டுமனைகள்தான் ஓரளவுக்கு விற்பனை ஆகின்றன.

இணைய வழி ரியல் எஸ்டேட் வணிகமும், வழக்கமான ரியல் எஸ்டேட் தொழில் முனைவோரை பாதிக்கத் தொடங்கி இருக்கிறது. படித்த இணைய சேவைகளை பயன்படுத்தத் தெரிந்தவர்கள் தாங்கள் வாங்க விரும்பும் சொத்துகள் குறித்து இணையத்தில் தேடுகிறார்கள். அதற்கேற்ப பல இணைய தளங்கள் மாதக் கட்டணம் அல்லது ஆண்டுக் கட்டணம் வாங்கிக் கொண்டு அத்தகைய செய்திகளைத் தருகின்றன.

ஆனால் எங்களைப் போன்றவர்களிடம் கிடைக்கும் சேவைகள் அவர்களிடம் கிடைக்காது. சொத்துகளை விற்க விரும்பும் எல்லோருமே அந்த இணைய தளங்களில் பதிவு செய்வது இல்லை. எங்கள் பகுதிகளில் உள்ள சொத்துகள், விலை விவரங்களை இணையத்தில் இருந்து தெரிந்து கொள்வதை விட எங்களிடம் அதிகம் தெரிந்து கொள்ள முடியும். சில நுணுக்கமான செய்திகளை எங்களால்தான் வாடிக்கையாளர்களுக்கு சொல்ல முடியும். வாங்குவோருக்கும், விற்போருக்கும் பாலமாக இருந்து விலை முடிவு செய்வது முதல் பத்திரப் பதிவு வரை எங்களிடம் நட்புடன் கூடிய சேவை கிடைக்கும். இத்தகைய காரணங்களால் இணையத்தை நாடிப் போகிறவர்களை விட எங்களை நாடி வருபவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இணைய தளங்களால் எங்களுக்கு பாதிப்பு என்று கூற முடியாது.

2016 இறுதியில் மத்திய அரசால் கொண்டு வரப் பட்ட பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எங்களுடைய தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான். இந்த பண மதிப்பு இழப்பு சிக்கலால் பெரிய சொத்துகள் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

பத்து இலட்சத்திற்கும் அதிகமான மதிப்பு உள்ள சொத்துகளை வாங்குவதற்கு கண்டிப்பாக வருமானவரி அட்டை இருக்க வேண்டும் என்பதால், வளர்ந்து வரும் பகுதிகளில் உள்ள விலை குறைவான, அதாவது பத்து லட்சம் ரூபாய் விலைக்குள் உள்ள சிறிய அங்கீகரிக்கப் பட்ட வீடுகள் மற்றும் வீட்டு மனைகளை வாங்கவே பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தமிழக அரசால் 01.09.2016 முதல் 23.03.2017 வரை மற்றும் 21.04.2017 முதல் 12.05.2017 வரை இரண்டு முறை பத்திரப்பதிவு செய்வதற்குத் தடை செய்யப்பட்டு இருந்தது.

இந்த பத்திரப்பதிவுத் தடை காலத்தில் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ஏனென்றால், வாங்கிய வீடுகள் மற்றும் மிட்டு மனைகளை விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பத்திரப் பதிவுத் தடை இருந்ததால் அந்த நேரத்தில் தங்கள் வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான பணத் தேவையில் இருந்தவர்கள், வேறு அவசரத் தேவைகளுக்கு காலத்தில் பணம் தேவைப்பட்டவர்கள், பிள்ளைகளின் உயர்கல்விச் செலவுக்கு பணம் தேவைப்பட்டவர்கள் என பலரும் தங்கள் சொத்துகளை விற்க முடியாமல் பெரிதும் தவித்தனர்.

தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஆன்லைன் (இணைய வழி) பத்திரப் பதிவு திட்டத்தால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. பத்திரப் பதிவு செய்வதற்கு முன்பாக முதலில் ஆன்லைனில் எல்லா கணக்குகளையும் கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
எதேனும், தவறு இருந்தால் பத்திரப் பதிவு செய்ய இயலாது. பதிவு செய்யும் போது சான்றுக்கு, பட்டா எண் இல்லை என்றால் அந்த இடத்திற்கு பத்திரப் பதிவு செய்ய இயலாது. அது மட்டும் இன்றி ஆன்லைன் பதிவு திட்டத்தால் யார் வேண்டுமானாலும், எங்கு இருந்து வேண்டுமானாலும் பத்திரம் பதிவதற்கான முதல் கட்ட பணிகளைச் செய்யலாம். இது போன்ற நன்மைகள் சில இருந்த போதும் சிக்கல்களும் உள்ளன.

பதிவு செய்யபட்ட பத்திரங்களில் எதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தால் அதற்கு மாவட்ட பத்திரப்பதிவு கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றுதான் சரி செய்ய முடியும் என்ற சூழ்நிலை இருக்கின்றது. இப்படிப்பட்ட சிக்கல்களை அரசு விரைவில் தீர்த்து வைத்தால் மக்களுக்கு எளிதாக இருக்கும்.
ரியல் எஸ்டேட் தொழிலைப் பொறுத்த வரை அரசு எங்களுக்கான கமிஷன் ஆக 2% -ஐ நிர்ணயித்து உள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட 2% கமிஷன் பணம் என்பது, எல்லா நேரங்களிலும் சரியாக கிடைக்கும் என்று கூற முடியாது. எனென்றால் சிலர் நாங்கள் 1% கமிஷன்தான் கொடுப்போம் என்று கூறுவார்கள். சொத்தை வாங்கும் சிலர், எங்களிடம் கமிஷன் எதுவும் எதிர்பார்க்காதீர்கள், விற்பவர்களிடம் கமிஷன் வாங்கிக் கொள்ளுங்கள் என்பார்கள். சிலர் ஒரு இடத்தின் பத்திரப்பதிவு முடிந்த உடன் சற்றும் தயங்காமல் 2% கமிஷன் பணத்தைக் கொடுத்து விடுவார்கள். இது தான் கமிஷன் தொடர்பான நிலவரம்.

மக்களிடம் அடுக்குமாடி வீடுகள் வாங்குவதில் இப்போது ஒரு தயக்கம் ஏற்பட்டு உள்ளது. தனி மனைகள் வாங்கவே பலரும் விரும்புகிறார்கள். மேலும் தற்போது அடுக்க மாடி வீடுகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கிறது. இந்த விலைக்கு தனி வீடுகளே கிடைக்கின்றன. அடுக்கு மாடி வீடுகளில் வசூலிக்கப்படும் அளவுக்கு அதிகமான மெயின்டனன்ஸ் கட்டணம் வாடகை வீட்டில் குடியிருப்பதைப் போன்ற நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

சென்னை மற்றும் சென்னையைச் சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் மட்டும் மொத்தமாக 58,000 கட்டி முடிக்கப் பட்ட அபார்ட்மென்ட்கள் வீடுகள் விற்கப்படாமல் இருக்கின்றன(தி இந்து நாளேட்டில் வந்த செய்தியின்படி).

இப்போது மக்கள் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் பத்து இலட்சத்திற்கும் அதிகமான விலையில் ஒருவர் சொத்து வாங்கும் போது, கட்டாயமாக வருமானவரி அட்டை தேவைப்படுவதால் பெரும்பாலான பத்திரப் பதிவுகள் வங்கிக் கடன் உதவி மூலமாகவே நடைபெறுகிறது. ஒரு பத்திரப் பதிவு அலுவலகத்தில் நூறு பத்திரங்கள் பதியப்படுகின்றன என்றால் அவற்றில் ஐம்பது பத்திரங்கள் வங்கிக் கடன் உதவி மூலமாகவே பதியப்படுகின்றன. இனி வரும் காலங்களில் வங்கிக் கடன் வாங்கியே பெரும்பாலான சொத்துகள் வாங்கப்படும் நிலை வரும் என்று நம்புகிறேன்.

இளைய தலைமுறையினரை ரியல் எஸ்டேட் தொழில் அவ்வளவாக ஈர்க்கவில்லை. இதில் உள்ள நிலையற்ற தன்மை, மொபைல்களிலேயே மூழ்கிக் கிடப்பதால் பலரிடமும் இயல்பாக பேசும் ஆற்றல் இளைஞர்களிடம் குறைந்து வருவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.” என்றார் திரு. செல்வகுமார். (9444150356).

– செ. தினேஷ் பாண்டியன்

ஏலம் விட்டுப் பட்டியல் தொகையைப் பெற முடியுமாம்!

0

எம்எஸ்எம்ஈஸ் (MSMEs) என சுருக்கமாக அழைக்கப்படும், மிகச் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வர்த்தக வரவுகளின் அடிப்படையில் அந்த நிறுவனங்களுக்கு போதுமான கடன் அளிப்பதற்கு, ரிசர்வ் வங்கி, மார்ச் 2014 – ல்  Factoring-Trade Receivables Exchange எனும் அமைப்பை நிறுவி நடைமுறை மூலதன சிக்கலை தீர்வு செய்யலாம் எனும் கருத்தமைவை வெளிட்டது.

அதனைத் தொடர்ந்து பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த வழிகாட்டுதல்கள் Payment & Settlement Systems Act, 2007 (2007 ஆம் ஆண்டு 51 ஆவது) பிரிவின் 18 வது பிரிவுடன் பகுதி 10 (2) இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகிறது.

இதன்படி பொருட்களை அல்லது சேவைகளை பெறுவதால் உருவாக்கப்படும் வர்த்தக பெறுதல்களின் (Trade Receivables) அடிப்படையில் அவ்வாறான எம்எஸ்எம்ஈகளுக்கு நடைமுறை மூலதன கடன் அளிக்க உதவுவதற்கான நிறுவன அமைப்பு முறை (Trade Receivables Discounting System (TReDS)) என அழைக்கப்படும்.

இந்த டிஆர்டீஎஸ்கள் விலைப் பட்டியல் (Invoices), பில் ஆஃப் எக்ஸ்ச்சேஞ் (Bills of exchange) ஆகிய இரண்டிற்கான நடவடிக்கைகளையும் எளிதாக்குகின்றது. மேலும், அடிப்படைக் கூறுகள் ஒன்றுதான்.

இதனால் அதிக பணபரிவர்த்தனைகள் இந்த அமைப்புக்குள் வந்து, எம்எஸ்எம்ஈ நிலையை சிறந்ததாக நிர்ணயிக்கின்றன. இந்த டி.ஆர்.இ.டிஎஸ் இன் கீழ் செயல்படும் பரிவர்த்தனைகள் எம்எஸ்எம்ஈகளுக்கு “எந்த விதமான தொந்திரவும் இல்லாமல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

டிஆர்இடிஎஸ் என்பது வர்த்தக வரவுகளின் மீது கடன் வழங்க தயாராக இருக்கும் நிறுவனங்களிடம் ஏலம் விடுவதன் வாயிலாக கடன் திரட்ட அனுமதிக்கும் ஒரு மின்னணு தளம் ஆகும்.

அதாவது பட்டியல்களுக்கான தொகையை வழங்குவதற்கான காலக்கெடுவிற்கு முன் விற்பனையாளர் அந்த பட்டியலை ஒரு நிதியாளரிடம் சமர்ப்பித்து, அதன் மீது தள்ளுபடி வழங்கி பட்டியல் தொகையை முன்கூட்டியே பெறுகின்ற செயல் முறை இதுவாகும். அந்த தள்ளுபடி தொகையே வர்த்தக வங்கிகளுக்கான வட்டி போன்ற தொகையாகும்.

இந்த செயல் முறையில் எம்எஸ்எம்ஈகள் மட்டுமே பங்கேற்க முடியும். பெரிய நிறுவனங்கள் பங்கேற்க முடியாது. இந்த திட்டத்தை தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி (Payment And Settlement Systems Act இதன்படி Receivables Exchange of India (RXIL), A Treds Mynd Solution, Big Push ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கி உள்ளது.

– வசந்த குமார்

பங்குதாரர் நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட் ஆக பதிவு செய்வது எப்படி?

0

இதற்கு கம்பெனி சட்டம் 2013 பிரிவு 366 முதல் 374 வரையிலும், மேலும் நிறுவனங்கள் (பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெற்ற) விதிகள், 2014. ஆகியவை நமக்கு வழிகாட்டுகின்றன. இதற்கு பங்குதாரர் நிறுவனத்தின் அனைத்து சொத்துகளும், பொறுப்புகளும் சேர்ந்த வணிகத்தை, பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றி அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றைத் தயாரிக்க வேணடும்.
பிரைவேட் லிமிடெட் ஆக விரும்பும் அந்த பங்குதாரர் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 2 கூட்டாளிகளாகவாவது இருக்க வேண்டும்.

கூட்டு நிறுவனத்தின் அனைத்து கூட்டாளிகளும் புதிய பிரைவேட் லிமிடெட்டில் பங்குநர்களாக மாறும் நாளில், இவர்கள் ஏற்கனவே வைத்து உள்ள நிறுவனத்தின் புத்தகங்களில் இருக்கும் மூலதன கணக்குகளின் அதே விகிதத்தில் பங்குகளாக மாற்றப்படும். இவ்வாறு மாற்றம் செய்வதற்கு பெரும்பாலான கூட்டாளிகளின் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.

இதற்கு பங்குதாரர்கள் அனைவரையும் அழைத்து கூட்டம் கூட்டி அந்தக் கூட்டத்தில் பின்வரும் செயல்களுக்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
பங்குதாரர் நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றம் செய்வதற்கு தேவையான அனைத்து ஒப்பந்தங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை கையாளுவதற்கான அதிகாரத்தை ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கூட்டாளிகளுக்கு வழங்க வேண்டும்.

அனைத்து கூட்டாளிகளின் மொத்த மூலதனத்தை பங்குகளாக பிரித்தல்.
பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றி அமைப்பதை ஏற்றுக் கொள்வதற்கான ஒப்பந்த பத்திரம் தயார் செய்தல்.

இவ்வாறு மாற்றி அமைப்பதைக் குறித்த அறிவிப்பினை நாள் இதழ்களில் விளம்பரமாக கொடுப்பதற்கான விளம்பரப் படிவம் URC 2 -க்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.

முந்தைய மூன்று ஆண்டுகளில் அந்த பங்குதாரர் நிறுவனத்தின் சொத்துகளின் மதிப்பை மாற்றி அமைக்கவில்லை என உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.
பதிவு செய்வதற்காக அங்கீகாரம் பெற்றவருக்கு ஞிஷிசி என சுருக்கமாக அழைக்கப்படும் டிஜிட்டல் சான்றிதழை (Digital Signature Certificate) பெற வேண்டும்.
இயக்குநர்களின் குழுவில் இடம் பெற இருக்கும் ஒவ்வொருவருக்கும் பான், ஆதார் பெற வேண்டும். அப்போதுதான் இயக்குநர்களுக்குத் தேவையான டைரக்டர் இண்டெக்ஸ் எண் (DIN) பெறுவதற்கான படிவம் DIR – 3 -ஐ வழங்க முடியும்.
புதிய பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு RUN (Reserve Unique Name) அடிப்படையில் பெயரை பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

படிவம் URC-2 இல் ஒரு ஆங்கில மொழி, ஒரு வட்டார மொழி வெளியிடப் பெறும் இரு நாள் இதழ்களில் இந்த பங்குதாரர் நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றி அமைப்பதால் பாதிப்பு எவருக்கேனும் இருந்தால் அதனை 21 நாளில் அறிவிக்க வேண்டும் என்ற விளம்பரப்படுத்த வேண்டும்.
கம்பெனி சட்டம் 4 இன்படி பதிவு செய்வதற்கான பெயர் தயாராக இருக்கின்றது எனில் படிவம் URC-1 உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் கம்பெனி பதிவாளருக்கு வழங்க வேண்டும்.
டிஜிட்டல் படிவம் INC – 7 இல் நியமிக்கப்பட்டு உள்ள இயக்குநர்கள், பங்குநர்கள் பற்றிய விவரங்களை வழங்க வேண்டும். அதனை தொடர்ந்து படிமுறை 9 – இல் குறிப்பிட்டு உள்ள டிஜிட்டல் படிவம் INC – 7 இன் பின் இணைப்பாக முக்கிய மேலாண்மை பணியாளர்களை பற்றிய விவரங்களுக்கான டிஜிட்டல் படிவம் INC – 8 ஐ வழங்க வேண்டும்.

அவ்வாறே படிமுறை 9 – இல் குறிப்பிட்டு உள்ள டிஜிட்டல் படிவம் INC – 7 இன் மற்றொரு பின் இணைப்பாக பங்குநர்களின் உறுதி மொழிக்கான டிஜிட்டல் படிவம் INC – 9ஐ வழங்க வேண்டும்.

தொடர்ந்து மின் – படிவம் DIR – 12 இல் யார்யார் இயக்குநர்களாக நியமிக்கப் பட உள்ளனர் என்ற பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து இறுதியாக படிவம் INC – 22 இன் படி கம்பெனி உருவாக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அந்த நிறுவனத்திற்கான பதிவு அலுவலகத்தை சரிபார்ப்பதற்கான, பதிவு அலுவலக முகவரியை குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இவ்வாறான படிமுறைகளுடன் படிவம் SPICE-32, e-MOA, e-AOA ஆகியவற்றையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மேலே கூறியவாறான படிமுறைகளை சரியாக பின்பற்றினால் அந்த பங்குதாரர் நிறுவனமானது புதிய பிரைவேட் லிமிடெட் ஆக, பதிவு செய்யப்பட்டு அதற்கான பதிவு சான்றிதழ் (Certificate of Incorporation (COI)) வழங்கப்படும்

– முனைவர் ச. குப்பன்

விசிட்டிங் கார்டுகளை சாதாரணமாக நினைக்காதீர்கள்

0

மின் பணியாளர்களின் தேவை அதிகரித்து வரும் காலம் இது. எல்லா அலுவலகங்களுக்கும், வீடுகளுக்கும் அவசரத் தேவைக்கு கைகொடுப்பவர்கள் இவர்கள்தான். இந்த துறையில் படித்தவர்களும் வெற்றி பெறுகிறார்கள். கல்வி நிறுவனங்களில் படிக்காமல், எலெக்ட்ரீஷியன் ஒருவரிடம் உதவியாளராக இருந்து கற்றுக் கொண்டு தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள். திரு. ஜி. கோபி, குன்றத்தூரில் ஜிஎஸ் எலெக்ட்ரிகல் என்ற பெயரில் மின்சாதனங்கள் விற்பனையகம் ஒன்றை நடத்தி வருவதோடு வீடுகள், அலுவலகங்களுக்கான மின் பணிகளையும் செய்து கொடுக்கிறார். இவருடைய தொழில் பற்றி இவரிடம் கேட்ட போது,
”எனக்கு சிறு வயதில் இருந்தே எலெக்ட்ரிகல் வேலைகள் மீது ஆர்வம் இருந்தது.

பல வகையான மின் விளக்குகளைப் பார்த்து வியப்பேன். பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த உடன் எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்டரானிக்ஸ் டிப்ளமா படிப்பில் சேர்ந்தேன். அந்த படிப்பில் முதல் ஆறு மாதங்கள் மின்னியல் பற்றியும், அடுத்த ஆறு மாதங்கள் மின்னணுவியல் பற்றியும் கற்றுக் கொடுத்தார்கள்.

பின்னர் அனுபவம் பெற்ற எலெக்ட்ரிசிட்டி போர்டு லைசன்ஸ் ஹோல்டர் (Eb Licence Holder) ஒருவரிடம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தேன். சம்பளம் குறைவாக இருந்தாலும் வேலைகளைக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு நானே சொந்தமாக மின் பணிகளை செய்து கொடுக்கத் தொடங்கினேன். வாடிக்கையாளர்கள் அழைக்கும் நேரத்தில் உடனுக்குடன் சென்று பணிகளை முடித்துக் கொடுத்து நியாயமான கட்டணங்களைப் பெறுவேன். இதனால் என்னுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது.

மின் பணிகளுக்கான மின் பொருட்களை வேறு கடைகளில் வாங்கித்தான் பணிகளைச் செய்து கொண்டு இருந்தேன். கையில் கொஞ்சம் சேமிப்பு சேர்ந்த உடன் நாமே ஒரு மின்பொருட்கள் விற்பனையகம் நடத்தலாம் என்று முடிவு செய்து ஒரு கடையையும் தொடங்கினேன். மொத்த விலைக்கு பொருட்களை வாங்குவதால் விலை குறைவாக இருக்கும். இதன் வாயிலாகவும் என் லாபம் அதிகரிக்கிறது. இந்த தொழில் எனக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

இந்தத் தொழிலைப் பொருத்த வரையில் எப்போதும் வேலை இருந்துக் கொண்டே இருக்கிறது. எந்த வேலை எடுத்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். நிறைய விசிட்டிங் கார்டுகளை அச்சடித்து வைத்திருக்கிறேன். சந்திப்பவர்கள் அனைவரிடமும் என் விசிட்டிங் கார்டை கொடுப்பேன். இந்த பழக்கம் என் தொழில் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட அளவுக்கு உதவியது.

என்னிடம் இருவர் பணிபுரிகிறார்கள். எனக்கு இந்தத் தொழிலில் பதினைந்து ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. எனக்கு பிளம்பர் வேலைகளும் தெரியும். நான் எலக்ட்ரீஷியன் வேலைகளை கற்றுக் கொள்ளும் போதே பிளம்பர் வேலைகளையும் சேர்த்துக் கற்றுக் கொண்டேன். ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போது பிளம்பர் வேலைகளையும் செய்து கொடுக்கிறேன். பிளம்பர் தொழிலில் கூடுதாலாக லாபம் கிடைக்கும். சில இடங்களில் மின்பணி, பிளம்பிங் என்று இரண்டையும் சேர்த்துச் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

பிஇ படித்தவர்கள் இந்தத் தொழிலில் அதிகம் ஈடுபட்டு வேலைகளைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் நேரடியாக எதாவது தொழிற்சாலையில் சூப்பர்வைசர் பணிக்கு சென்று விடுவார்கள். அதனால் படித்து விட்டு வருபவருக்கும், எங்களுக்கும் எந்த வித போட்டியும் இருக்காது. நாங்கள் பல இடங்களில் வேலை செய்து கற்றுக் கொண்டதால் எங்கள் அளவிற்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாது. அவர்களுக்கு எங்கள் அளவிற்கு அனுபவம் இருக்காது.

வெற்றி என்பது நாம் கற்றுக் கொள்வதிலும், கவுரவம் பார்க்காமல் வேலைகளைச் செய்வதிலும் தான் இருக்கிறது என்று கருதுகிறேன். மேற்கண்ட பணிகளுடன் எனக்கு 300 அடி வரை மோட்டார் மாட்டத் தெரியும்; மெயின் போர்ட் அசெம்பிள் (Main Board Assemble) செய்ய தெரியும், ஈபி பாக்ஸ் லைன் (Eb Box Line) போட்டு ஒவ்வொரு அறைக்கு ஏற்ப பிரித்துக் கொடுக்கத் தெரியும், லைட், ஃபேன், மிக்சி மற்றும் க்ரைண்டர் போன்றவற்றிற்கு ஏஎல்எம்ஸ் (ALMS) மற்றும் எம்சிபி (MCB) போட்டு பிரிக்கத் தெரியும். அதனால்தான் என்னால் இந்தத் தோழிலில் சிறப்பாகவும் செயல்பட முடிகிறது, அதிக அளவில் லாபமும் பார்க்க முடிகிறது.” என்றார், திரு. கோபி.

-ச. சங்கீதா

காப்பீடு முகவர்களுக்கு உள்ள வாய்ப்புகள்

0

சேவைத் தொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கு பல வாய்ப்புகள் இன்று உண்டு. குறிப்பாக காப்பீட்டு முகவர்களுக்கு இன்று மேலும் பல வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
ஆயுள் காப்பீட்டு முகவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றி ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு குழு மேலாளராக இருக்கும் திரு. எல்லையா இது பற்றிக் கூறும்போது,
”ஒரு வாடிக்கையாளருக்கு ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, மியூச்சுவல் பண்ட் முதலீடு தொடர்பான பணிகளுக்கு அதற்கான முகவர்களை தனித்தனியே நாடி செல்வார்கள். ஆனால் ஆயுள் காப்பீட்டு முகவர் ஒருவரே, இவை அனைத்தையும் விற்பனை செய்து வருமானம் பெறலாம். அதற்கான வாய்ப்புகள் இன்று உண்டு.
அண்மையில் மருத்துவ காப்பீடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. இதற்கான முகவர் தனியாக இருக்கிறார் என்றாலும், ஆயுள் காப்பீட்டு முகவரும் இதனை விற்பனை செய்யலாம்.

முகவர்கள் முழு நேரமும் செயல்படலாம், அல்லது பகுதி நேரமும் பணி புரியலாம், எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களை நோக்கி செல்கிறோமோ, அந்த அளவுக்கு பயன் தரும். இவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அவர்கள் சேரும் நிறுவனங்களே வழங்கும். தேவைப்படும் பொழுது நிறுவன மேலாளர், முகவர்களுடன் வந்து வாடிக்கையாளர்களை சந்திப்பார்.

இன்று ஆயுள் காப்பீட்டு முகவர்கள் ஐஆர்டிஏ (IRDA) தேர்வு எழுதி ஆயுள் காப்பீடு விற்பனை செய்கிறார்கள். அதே போல் இவர்கள் ஏஎம்எஃப்ஐ (AMFI) தேர்வு எழுதி மியூச்சுவல் நிதி (Mutual Fund) முகவராகவும் செயல்படலாம்.

இவை தவிர நிறுவன பத்திரங்கள் (Company Bonds), கடன் பத்திரங்கள் (Debentures) போன்றவற்றைக் கூட விற்பனை செய்ய முடியும்.
காப்பீடு விற்பனை செய்த அடுத்த ஆண்டு நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்தும் நாளை நினைவுபடுத்தினால், வாடிக்கையார் உங்கள் மேல் மிகுந்த நம்பிக்கை வைப்பார். தொடர்ந்து அவர் மேற்கொள்ளும் காப்பீடுகளுக்கு உங்களையே தேர்வு செய்வார்.

காப்பீடு விற்பது ஒரு குடும்பத்தை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கு நிகராகும்.” என்றார், திரு. எல்லையா.

– ஜா. செழியன்

.

வீட்டில் இருந்தே சம்பாதிக்க, தையல்!

0

பெரிய அளவு மூலதனம் இல்லாமல், பெண்கள் வீட்டில் இருந்தவாறே சம்பாதிக்க கூடை பின்னுவது, தையல் ஆகியவை உதவும் என்கிறார், சிதம்பரம் அருகே உள்ள கோணயாம் பட்டினம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. ஜமுனா ராணி. இவரிடம் அது எப்படி என்று கேட்டபோது,
”நான் பத்து ஆண்டுகளாக வீட்டில் இருந்தே தையல் மற்றும் கூடை பின்னுவது ஆகியவற்றை செய்து வருகிறேன். நான் வாழ்வது ஒரு சிறிய கிராமமாக இருப்பதால் தையல் பயிற்சியில் சேர்ந்து கற்றுக் கொண்டு வீட்டில் இருந்தவாறே தையல் தொழில் செய்து வருகிறேன். சுடிதார், ஜாக்கெட் போன்றவற்றைத தைத்துக் கொடுப்பதால் ஓரளவுக்கு வருமானம் வரும். நகரங்களில் வருவதைப் போன்ற வருமானத்தை கிராமங்களில் எதிர்பார்க்க முடியாது.

எங்கள் அடிப்படை செலவுக்குத் தேவையான வருமானம் கிடைக்கிறது. இது தவிர யாராவது பிளாஸ்டிக் ஒயர் கூடை பின்னித் தருவேன். ஆனால் கூடை பின்னுவதை விட தையல் தொழிலில் தான் எனக்கு வருமானம் அதிமாக கிடைகிறது.
ஒரு கூடையின் உதிரிப் பொருட்களை 50 ரூபாய்க்கு என்று வாங்கி கூடையைப் பின்னி 150 ரூபாய் என்று விற்பனை செய்கிறேன். தையல் தொழிலில் ஒரு நாளைக்கு சுமார் ஐநூறு ரூபாய் அளவுக்குக் கிடைக்கும். நாங்கள் சொந்த வீட்டில் இருப்பதால் ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது. வாடகை வீட்டில் இருந்தால் சமாளிப்பது சிரமமாக இருக்கும்.
எனக்கு இந்தத் தொழிலகள் இருப்பதால் நேரம் போவதே தெரியாது. நேரத்தை வீணாக்காமல் என்னால் முடிந்த வேலைகளைச் செய்து பொருளீட்டுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்கிறார், இவர்.

– ரா. காயத்ரி

பெயின்டிங் – சில நுட்பங்கள்

0

நல்ல பெயின்டர்களுக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. இவர்கள் நாள் ஊதியத்துக்கும் பணி புரிகிறார்கள். ஒப்பந்த அடிப்படையிலும் பணி புரிகிறார்கள். பெயின்டர்களுக்கான தொழில் வாய்ப்பு எப்படி இருக்கிறது? சென்னை, போரூரில் பெயின்டர் ஆக இருக்கும் திரு. சையது இடம் கேட்ட போது, அவர் தன் தொழில் பற்றியும் பெயின்டிங் தொடர்பான சில நுட்பங்களையும் பகிர்ந்து கொண்டார்.
”நான் சொந்தமாக தொழில் செய்யத் தொடங்கும் முன் ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பதிமூன்று ஆண்டுகள் பணி புரிந்தேன். தனியார் நிறுவனத்தில் நாள்தோறும் வேலை இருக்கும். தனியாகச் செய்யும் இப்போது மாதத்தில் ஒரு வாரம் அளவுக்கு வேலை இருக்காது. ஒப்பந்தப் பணிகள் கிடைத்தால் தொடர்ந்து வேலை இருக்கும். லாபமும் கூடுதலாக இருக்கும். ஆனால் கையில் தேவையான முதலீடு இருக்க வேண்டும்.

நான் பெயின்டிங் செய்ய ரோலர் பிரஷ், கையால் அடிக்கும் பிரஷ், ஏர் கம்ப்ரஷர் ஸ்ப்ரே போன்றவற்றைப் பயன்படுத்துகிறேன். பட்டி பார்த்த சுவர்களில் மட்டுமே ரோலர் பிரஷ் பயன்படுத்த முடியும். சாதாரன சுவர்கள் மேடும், பள்ளமும் ஆக இருக்கும் என்பதால் ரோலர் பிரஷ்சைப் பயன்படுத்தினால் பெயின்ட் திட்டுத்திட்டாக இருக்கும். கையால் அடிக்கும் பிரஷ்சை எல்லா சுவர்களிலும் பயன்படுத்தலாம். பட்டி பார்க்கவில்லை என்றாலும் பெரிய பரப்பளவு உள்ள சுவர்களில் ஸ்ப்ரே பயன்படுத்தலாம்.

பட்டி பார்ப்பதற்கு தகடுகளை பயன்படுத்துகிறோம். இந்த தகடுகள் மூன்று அங்குல அகலம் முதல் பன்னிரெண்டு அங்குல அகலம் வரை கிடைக்கின்றன. சாதாபட்டி, சாதாபேஸ்ட் பட்டி, பிர்லா, ஜேகே, ஏசியன் பேஸ்ட் பட்டி என பல வகை பட்டிகள் உள்ளன. பிர்லா, ஜேகே, ஏசியன் பேஸ்ட் பட்டிகள் தரமாக இருக்கும்.

சுவர் சொரசொரப்பாக இருக்கும் போது அதிக பட்டி பிடிக்கும். அதுதான் தரமாக இருக்கும். சுவர் பளபளப்பாக இருந்தால் பட்டி குறைவாகப் பிடிக்கும். தரம் சற்று குறைவாக இருக்கும். பொதுவாக புதிய சுவர்களில் பட்டி பார்க்கும் போது ஒன்றன் மீது ஒன்றாக இரண்டு முறை பார்க்க வேண்டும். சுவர்களில் ஏர் கிராக் என்று சொல்லப்படும் லேசான விரிசல் இருந்தால் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் கொண்டு பட்டி பார்க்க வேண்டும்.
உயரமான இடங்களில் அடிக்க ஏணி போன்ற கயிற்றால் செய்த பாய்டொக்குகளைப் பயன்படுத்துவோம். அவற்றில் ஒற்றை டொக்கு என்ற வகையும் உள்ளது.

பாய்டொக்கை பெரிய இடங்களில் பயன்படுத்தலாம். சந்துகளில் பயன்படுத்த முடியாது. ஒற்றை டொக்கு என்பதை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம்.
ஓரு மாடிக்கு மேல் அடிக்க வேண்டிய வேலை இருந்தால் டொக்கை பயன்படுத்துவோம். அதற்கு கீழ் இருந்தால் ஏணியை பயன்படுத்தலாம்.
புதிய வீடுகளில் சிமென்ட் பூச்சு முடிந்த மூன்று வாரத்திற்கு பின்னால் நேரடியாக சுவரை பாதுகாக்கும் பட்டி பூச வேண்டும். இது சுவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். முதலில் வெள்ளை சிமென்ட் அல்லது பிரைமர் பூசுகின்றவர்கள் உள்ளனர். இது தவறான முறை ஆகும். பிரைமர் பூசி விட்டு பட்டி பூசக் கூடாது.” என்கிறார், திரு. சையது.

– சை. நஸ்ரின்

கடல்பாசியில் இருந்து மின்சாரம்

0

மத்திய அரசு, இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு மற்றும் பெட்ரோல், டீசலின் தேவையை குறைக்க வேண்டியதன் தேவையைக் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய குறைப்பு சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுக்கவும், இறக்குமதியை குறைக்கவும் தேவையாகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாரீசில் நடந்த உலக சுற்றுச் சூழல் மாநாட்டில், காற்றாலை, சூரிய சக்தி போன்றவற்றை கொண்டு 175000 மெகா வாட் மின்சார உற்பத்தி திறனை ஏற்படுத்தும் என இந்தியா கூறி உள்ளது.

காற்றாலை மற்றும் சூரிய சக்தி கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு மத்திய அரசு பெரிதும் ஆதரவு அளித்து வருகிறது. இந்தியாவின் சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் சுமார் 1500 மெகா வாட் என்ற நிலையில் இருந்து தற்போது 25000 மெகா வாட் அளவிற்கு உயர்ந்து உள்ளது. இதே போல், காற்றாலை சார்ந்;த மின்திறனும் கணிசமாக உயர்ந்து தற்போது 32500 மெகா வாட் என்ற அளவை எட்டி உள்ளது.

காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தித் திறன் இந்த அளவுக்கு நாலரை ஆண்டுகளில் கூடி இருக்கிறது. இருப்பினும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்திறன் இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் தேவையை போதுமான அளவு குறைக்காது.

தற்போது, இந்தியாவின் மொத்த மின் உற்பத்தித் திறன் 3,45,000 மெகா வாட். நாட்டின் மின்சார தேவை சுமார் 1,71,000 மெகா வாட். இந்தியாவின் 80 சதவீதம் மின் உற்பத்திக்கு . நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
நாட்டின் மின் தேவை ஆண்டொன்றிற்கு சுமார் 6.5 சதவீதம் கூடி வருகிறது. இத்தகைய கூடுதலான தேவை வருங்காலத்தில் தொடரும்.

இந்தியாவின் மின் உற்பத்தி கணிசமான அளவு நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவை எரிபொருளாக கொண்டு செய்யப்படுவதாலும், போக்குவரத்து, தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல் பெருமளவில் தேவைப்படுவதாலும், கடந்த ஆண்டு சுமார் 220 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆண்டொன்றிற்கு சுமார் 32 மில்லியன் டன் தான்.

இந்தியாவில் கடந்த ஆண்டு சுமார் 25000 மில்லியன் க்யூபிக் மீட்டர் (cubic metre) இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது இந்தியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆண்;டொன்றிற்கு சுமார் 32000 மில்லியன் க்யூபிக் மீட்டர் என்ற அளவே உள்ளது.

தேவை கூடி வருவதால் இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவின் இறக்குமதி ஆண்டிற்கு 6 சதவீதம் அளவு கூடி வருகிறது. இத்தகைய கூடுதல் வரும் காலத்திலும் தொடரும்.
தற்போது, இந்தியா ஈட்டும் அந்நிய செலவாணியில் 70 சதவீதம் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு இறக்குமதி செய்யவே செலவிடப்படுகிறது. மேலும் இறக்குமதி கூடும் நிலையில், இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு நிலை மிகவும் பாதிக்கப்படும். இவ்வாறு ஏற்படக்கூடிய இக்கட்டான நிலையை காற்றாலை, சூரிய மின்சக்தியை மேலும் கூட்டுவதனால் தவிர்க்க முடியுமா என்பதே இப்போது நம் முன் உள்ள கேள்வி.

சிக்கல் என்னவென்றால் சூரிய மின்சக்தி உற்பத்தித் திறனில், சுமார் 15 சதவீதம் அளவே மின்சக்தி உற்பத்தி செய்யக் கூடும். காற்றாலை மின் சக்தியில், சுமார் 30 சதவீதம் அளவே மின் சக்தி உற்பத்தி செய்யக் கூடும். இத்தகைய குறைவான மின் உற்பத்திக்கு காரணம், சூரிய ஒளி 24 மணி நேரமும் கிடைக்காது என்பதும், காற்று ஆண்டுக்கு சுமார் 4 மாதமே தேவையான வேகத்தில் வீசும் என்பதும்தான், சூரிய ஒளியை ஒரளவே மின் சக்தியாக மாற்ற முடியும்.

அதாவது 25000 மெகா வாட் சூரிய மின்சக்தி திறன் உள்ள நிலையில் மின் சக்தி உற்பத்தி அளவு 3750 மெகா வாட் அளவே கிடைக்கக் கூடும்.
அதாவது, இந்தியாவின் 1,75,000 மெகா வாட் சூரிய மின்சக்தி, காற்றாலை மின் சக்தி போன்றவற்றால் உற்பத்தித் திறன் கூடினாலும், கிடைக்கக்கூடிய மின்சாரம் சுமார் 35000 மெகா வாட் என்றே நிலையே காணப்படும்.

இந்தியா முழுவதும் மின்சாரம் கொண்டே ரயில் எஞ்சின்களை இயக்கத் தேவையான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
மின்சார வாகனங்கள், மற்றும் மின்சார ரயில் இயங்க பாட்டரிகள் தேவை. இந்த பாட்டரியை சார்ஜ் செய்ய மின்சாரம் தேவை. இந்த மின்சாரம் டீசலையோ, இயற்கை எரி வாயுவையோ கொண்டு தயாரிக்கப்பட்டால், நாட்டின் டீசல், இயற்கை எரிவாயுவின் தேவையும், இறக்குமதியும் குறையாது.

மாற்று நடவடிக்கை
சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி பெரிதளவில் அதிகரிக்கப்பட்டாலும், இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவின் தேவை ஒரளவே குறையும். கணிசமான அளவு குறையாது.

இத்தகைய நிலையில், கடல்பாசி கொண்டு எரிபொருள் தயாரிக்கக் கூடிய வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும்.
அண்மைக் காலங்களில் வளர்ந்த நாடுகளில், கடல் பாசியிலிருந்து எரிபொருள், மற்றும் வேதிப் பொருட்கள் தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் கடற்பாசியை குறித்த ஆராய்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

வளர்ந்த நாடுகளில், கடல்பாசியில் இருந்து எரிபொருள் தற்போது வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படுகின்றது.
கடல்பாசி விவசாயம் செய்ய தேவையானது சூரிய ஒளியும், கார்பன் டை ஆக்சைடும்தான். இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு கடல்பாசி விவசாயம் மிகவும் ஏற்றது. கடல்பாசி விவசாயம் அறுவடை செய்ய 30 முதல் 40 நாட்கள்தான் தேவை. கடல்பாசியில் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை எண்ணெய் காணப்படும்.

இந்தியாவில் சூரிய ஒளியும், கார்பன் டை ஆக்சைடும் தேவையான அளவு கிடைக்கின்றன. கடல் பாசியில் இருந்து எரி பொருளாக பயன்படுத்துவதற்கு ஏற்ற எண்ணெயை பிரித்து எடுத்து விட்டு மீதமுள்ள சக்கையில் இருநது எத்தனால் தயாரிக்கலாம்.

கடல்பாசியை கடல்புறங்களிலும், தரிசு நிலங்களிலும் விவசாயம் செய்து, அவற்றில் இருந்து எரிபொருள் மற்றும் வேதிப்பொருட்களை தயாரிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினால், எரிபொருள் கிடைப்பது மாத்திரமல்லாமல் விவசாயம், தொழில்துறைக்கும் மிகுந்த நன்மை ஏற்படும். வேலை வாய்ப்புகள் பெருகும்.

– என். எஸ். வெங்கட்ராமன், நந்தினி கன்சல்டன்சி

தர்பூசணி மற்றும் மரவள்ளி சாகுபடி – சில குறிப்புகள்

0

ஏற்ற பருவம் : நவம்பர்- டிசம்பர்

விதை நேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 4கிராம் டிரைகோடெர்மா கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும் .

ஒரு எக்டருக்கு 3.5 கிலோ விதை தேவைப்படும். குழித் தட்டு முறையில் நாற்றுகள் உற்பத்தி செய்து நடுவதால் வயலில் முழு அளவில் செடிகளை பராமரிக்கலாம். பன்னிரெண்டு நாட்கள் வயதுடைய நாற்றுகளை வரிசைக்கு வரிசை 2.5 மீட்டர் செடிக்கு செடி 0.9 மீட்டர் இடைவெளி பார்களில் நடவு செய்யலாம் .
அடியுரம் : தொழுஉரம் -20 டன்கள். ,வேப்பம் புண்ணாக்கு- 100கிலோ, அசொஸ்பிரில்லம் -2கிலோ ,பாஸ்போபேக்டிரியா -2 கிலோ, சூடொமொனாஸ் – 2.5 கிலோ ஒரு எக்டருக்கு கடைசி உழவுக்கு முன் இட வேண்டும்.

சூப்பர் 340 கிலோ பொட்டாஷ், 94 கிலோ அடி உரமாக இட வேண்டும் .மேலுரமாக 120 கிலோ யூரியா இட வேண்டும்.
எத்திரல் 10 லிட்டர் தண்ணீருக்கு 2.5 மில்லி என்ற விகிதத்தில் கலந்து விதைத்த 15ம் நாளிலிருந்து வாரம் ஒரு முறை வீதம் 4 முறை தெளிக்க வேண்டும் .

20*15 சே.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் 5 கிலோ நனைத்த கருவாட்டுடன் ஒரு பஞ்சில் 1 மிலி டைகுலோர்வாஸ் மருந்தை நனைத்து பொறியாக வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 50 பொறிகள் தேவைப்படும் .

மகசூல் : எக்டருக்கு 120 நாட்களில் 25-30 டன்கள்

மரவள்ளி சாகுபடி

விதைக் கரணை தேர்வு : நோய் தாக்காத மையப்பகுதியிலிருந்து 15 செ.மீ. நீளம் 8 செ.மீ .பருமன் உள்ள குச்சிகள் .
மரவள்ளி நாற்றங்கால் : மேட்டுப்பாத்திகளில் 5-7 செமீ வரிசைக்கு வரிசை, செடிக்கு செடி இடைவெளி இருக்குமாறு கரணைகளை நட வேண்டும் .விதைக் கரணைகள் ஊன்றிய 7 நாட்களில் முளைக்கத் தொடங்கும் 15 – 20 நாட்களில் வயலில் நட்டு விட வேண்டும் .விதைக் கரணைகள் முளை விட்டதும் தேமல் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் அத்தகைய செடிகளை களைந்து நல்ல கரணைகளை நடவு செய்ய வேண்டும் .நாற்றங்கால் அமைப்பதினால் கீழ்கண்ட நன்மைகளை பெறலாம்.

1. தரமான விதைக் கரணைகளை பெறலாம் .
2. தேமல் நோய் தாக்கிய கரணைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து நீக்கலாம்
3. வயலில் சரியான செடிகளின் எண்ணிக்கை
4. ஒரு முறை களை எடுக்கும் செலவும் . இரு முறை நீர்ப்பாசனம் செய்யும் செலவும் குறையும் .

ஒரு ஏக்கரில் பயிரிட 16 சதுர மீட்டர் நாற்றங்கால் போதுமானது.
விதைக் கரணை நேர்த்தி : விதைக் கரணைகளின் அடிப்பாகத்தை கார்பண்டாசிம் என்ற மருந்து 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து 15 நிமிடம் நனைத்து பின் நடவேண்டும் . ஒரு ஏக்கரில் நடவு செய்ய 80-120 கிராம் மருந்து தேவைப்படும் .

வறட்சியை தாங்கி வளர : மானாவாரியில் பயிரிடப்படும் மரவள்ளி பயிர் வறட்சியை தாங்கி வளர 1 லிட்டர் தண்ணீரில் 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு என்ற விகிதத்தில் கலந்த கரைசலில் கரணைகளை சுமார் 20 நிமிடங்கள் நனைத்து பின் நடவேண்டும் .

அதிக அளவில் கிழங்கு பிடிக்க : ஒரு ஏக்கரில் நடவு செய்ய தேவையான கரணைகளை 30 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் மற்றும் 30 கிலோ செம்மண்ணை 60 லிட்டர் தண்ணீரில் கலந்து அக்குழம்பில் கரணைகளின் 5 செ .மீ . அளவு நனைத்து நடவேண்டும் ஏக்கருக்கு

தேவையான விதைக் கரணைகள் :
கிளைக்கும் தன்மையுள்ள ரகம்
மானாவாரி – இடைவெளி 75*75 செ .மீ.– 7111 எண்கள்
இறவை — 60*60 செ .மீ. — 11111 எண்கள்
கிளைக்கும் தன்மை குறைவாக உள்ள ரகம்
மானாவாரி – இடைவெளி 90*90 செ .மீ.– 4938 எண்கள்
இறவை — 90*75 செ .மீ. — 5925 எண்கள்

– மான்விழி பொன்னுசாமி

பங்குகள் இனி டிமேட்- ஆக மட்டுமே!

0

இனி அனைத்து பங்குப் பரிமாற்றங்களுக்கும் 2.10.2018 முதல் டிமேட் (Demat) முறையையே பரிமாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும் என கம்பெனி விவகாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. அதாவது இதுவரை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியல் இடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே டிமேட் வடிவத்தில் இருந்து வந்ததற்கு பதில் அனைத்து பங்குகளும் டிமேட் வடிவத்திலேயே கையாளப்பட வேண்டும். பங்கு பரிமாற்ற நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை, முதலீட்டாளர்களின் பாதுகாப்பு, கம்பெனி நிர்வாகத்தின் மேம்பாடு ஆகியவற்றிற்காக இந்த மாற்றம் என கூறப்பட்டு உள்ளது.

இந்த மாற்றத்தின் காரணமாக கிடைக்கும் முக்கிய நன்மைகள் பின்வருமாறு –
பங்குச் சான்றிதழ்கள் காணாமல் போதல், திருட்டு போதல், அழிந்து போதல், மோசடியாக அபகரித்தல் போன்ற அபாயங்கள் அறவே அகற்றப்படும் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். தவறான நடைமுறைகளை தடுக்கும் வகையில் நிறுவனங்களின் நிர்வாக அமைப்பு மேம்படும்.

பங்குகளின் பரிமாற்றத்தின்போது முத்திரை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு.
பங்குப் பரிமாற்றம், பங்குகளை அடமானம் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் எளிமை ஆகும்.
2.10.108 முதல் எந்தவொரு நிறுவனமும் பொதுப் பங்குகளை இனி டிமேட் வடிவத்தில் மட்டுமே வெளியிடும்.

Also Read: எதிலெல்லாம் முதலீடு செய்யக் கூடாது

ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் அனைத்தும் தற்போது நடப்பு பங்குகளை வைத்து இருக்கும் அனைத்து பங்குநர்களின் பங்குகளுக்கு இன்டர்நேஷனல் செக்யூரிட்டி ஐடென்டிஃபிகேஷன் எண் (International security Identification Number (ISIN) ஒதுக்கீடு செய்து அந்த தகவலை பங்குநர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும் எந்தவொரு வரும் தன் பங்குகளை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்ய விரும்பினால் முதலில் பங்குகளை டிமேட் வடிவத்துக்கு மாற்றிய பிறகே மாற்ற முடியும்.

டிமேட் செய்வதால் எழும் எந்தவொரு குறைபாடுகளையும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிய ஆணையத்தினை (The Investor Education and protection Fund Authority( IEPF)) அணுகி தீர்வு செய்து கொள்ளலாம்.

– முனைவர் ச. குப்பன்