நட்புடன் கையாளுகிறோம்; வாடிக்கையாளர்கள் பெருகுகிறார்கள்

0

பெண்கள் தொடங்கி நடத்த ஏற்ற தொழிலாக, பலர் பெண்கள் அழகு நிலையத்தைக் கருதுகிறார்கள். தேவையான இடம் பிடித்து கட்டமைப்பை ஏற்படுத்தி விட்டால் போதும். பின்னர் வாடிக்கையாளர்களை வரவைக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டாலே போதும் என்பதோடு லாப விகிதமும் அதிகம். மற்ற தொழில்களைப் போலவே இதற்கும் ஆட்கள் கிடைப்பதுதான் அரிதாக இருக்கிறது. என்னதான் பத்திரிகைகளில் விளம்பரம் போட்டு ஆட்களை எடுத்தாலும், பெரும்பாலானோர் நீண்ட நாட்கள் இருப்பது இல்லை. தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

அழகு நிலையத்தை நடத்தும் உரிமையாளர்களுக்கே அத்தனை பணிகளும் தெரியும் என்றால் சிக்கல் இல்லை. எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம். அப்படி அத்தனை அழகு நிலையப் பணிகளிலும் நல்ல பயிற்சி உள்ள திருமதி. சுமதி, திருமதி. ஆனந்தி இருவரும் சேரந்து, சென்னை, இராமாபுரம், இராயலா நகரில் பெண்கள் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் வளர்தொழிலுக்காக பேட்டி கண்டபோது,

”நாங்கள் ஐந்து ஆண்டுகளாக இந்த அழகு நிலையத்தை நடத்தி வருகிறோம். பொதுவாக பெண்களுக்கு தங்களை அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகம். வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள முடிந்தவற்றை தாங்களாகவே செய்து கொள்வார்கள். ஆனால் எல்லாவற்றையும் வீட்டிலேயே செய்து கொள்ள முடியாது. சில அழகுபடுத்தல் வேலைகளை அழகு நிலையம் வந்துதான் செய்து கொள்ள முடியும்.

தொடக்கத்தில் போதுமான வாடிக்கையாளர்கள் வரவில்லை என்றாலும், காலப்போக்கில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
நாங்கள் ஸ்ட்ரெயிட், யு கட், டீப் கட், வி கட், ஸ்டெப் கட், லேயர் கட், பேபி கட், மஷ்ரூம் கட், ஃப்ரன்ட் கட், ஃபெதர் கட் என சுமார் பத்து வகைகளில் முடி வெட்டுகிறோம். வரும் பெண்கள் இவற்றில் எது தங்களுக்கு பிடிக்கிறதோ அதை தேர்வு செய்து முடியை அழகு படுத்திக் கொள்வார்கள். அந்த நேரங்களில் முடி தொடர்பான அழகுக் குறிப்புகளை அவர்களுக்கு சொல்வோம். அது அவர்களுக்கு அதிகம் பிடிக்கும்.

முகத்தை மேலும் பொலிவாக்க, இளமையுடன் தோன்ற பெண்கள் ஃபேசியல் செய்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். நாங்கள் ஃப்ரூட் ஃபேசியல், சில்வர் ஃபேசியல், பனானா ஃபேசியல், பியர்ல் ஃபேசியல், கோல்டன் ஃபேசியல், ஹனி ஃபேசியல், க்ளோ ஃபேசியல், டயமண்ட் ஃபேசியல், பிளாட்டினம் ஃபேசியல் என பல விதமான ஃபேசியல்களை செய்கிறோம். இதற்கான கட்டணம் ஐநூறு ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

அடுத்தது, ப்ளீச்சிங். ப்ளீச்சிங் செய்வதாலும் முகத்துக்கு கூடுதல் பொலிவு கிடைக்கிறது. ஃபேர் க்ளீன் அப், டி டான் ப்ளீச், ஃப்ரூட் ப்ளீச், ஃபெம் ப்ளீச், ஆலிவ் ப்ளீச், ஆக்சி ப்ளீச், கோல்ட் ப்ளீச், லேக்டோ ப்ளீச், டயமண்ட் ப்ளீச் என ப்ளீச்சிங்கிலும் பல வகைகள் உள்ளன.

த்ரெடிங் என்பது முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது ஆகும். ஐ ப்ரோ (புருவம்), லிப் (உதட்டுன் மேல்பகுதி), சின் (நாடி), சைட் பர்ன்ஸ் (காதோரம்), சீக்ஸ் (கன்னங்கள்), நோஸ் (மூக்கு), நாஸ்ட்ரில்ஸ் (நாசித் துளைகள்), ஃபோர்ஹெட் (நெற்றி), ஜா (தாடை), நெக் (கழுத்து), ஃபுல் ஃபேஸ் (முழு முகத்துக்கும்) என்று அங்குள்ள முடிகளை த்ரெடிங் முறையில் நீக்குகிறோம். பெரும்பாலும் புருவ முடிகளை ஒழுங்கு படுத்துவதற்கே அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். புருவ முடிகளை மாதம்தோறும் செய்ய வேண்டும் என்பதால், தொடர்ந்து செய்து கொள்ள வருவார்கள்.

ஸ்பா என்பது மசாஜ் செய்வதைக் குறிக்கும். தலைக்கு மசாஜ் செய்து விடுவோம். இது செய்து கொள்பவர்களுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். நிறைய பியூட்டி பார்லர்களில் இந்த மசாஜ் இருப்பதில்லை. எங்களிடம் இந்த சேவையும் உள்ளது.

இவை தவிர கைவிரல் நகங்களை சீராக வெட்டி அழகு படுத்துதல் (மனிக்யூர்), கால்விரல் நகங்களை சீராக வெட்டி அழகு படுத்துதல் (பெடிக்யூர்), வேக்சிங் மூலம் கை, கால்களில் உள்ள முடிகளை அகற்றுதல், உடல் மசாஜ், மணப்பெண்ணை அலங்கரித்தல் போன்ற பணிகளையும் செய்கிறோம். மணப்பெண் அலங்காரம், வீட்டு விழாக்களுக்கான பெண்கள் அலங்காரம் போன்றவற்றை அவர்கள் வீட்டுக்கே சென்று செய்து கொடுப்போம்.

திருமண விழாக்களில் மணப்பெண்ணுக்கு மட்டுமல்லாமல், அவர்களுடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கூட அலங்காரம் செய்யும் பணிவாய்ப்பு கிடைக்கும். முக அழகு, சேலை அணிந்து விடுதல், மருதாணி போட்டு விடுவது, சடை அலங்காரம், ஆபரணங்கள் அணிந்து அழகு படுத்துவதுஎன அத்தனையையும் செய்து கொடுப்போம். மணமகள் அலங்காரத்துக்கு தேவையான ஆபரணங்களுக்கான வாடகையாக தனியே இரண்டாயிரம் ரூபாய் பெற்றுக் கொள்வோம். மணப்பெண் அலங்காரத்துக்கு ஐந்தாயிரம் ரூபாய் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை பெறுகிறோம்.

மஞ்சள் நீராட்டு விழாவுக்கும் எங்களுக்கு அழைப்பு வரும். விருந்து, விழாக்களில் கலந்து கொள்ள செல்லும் பெண்களும் எங்களிடம் வந்து அழகு படுத்திக் கொண்டு செல்வார்கள்.

வாடிக்கையாளர்களுடன் நாங்கள் இருவருமே நட்புடன் தோழிகளைப் போல பேசுவோம். இது அவர்களுக்கு நிறைய பிடிக்கும். வரும் அனைவருக்கும் எங்கள் விசிட்டிங் கார்டுகளை கொடுத்து அனுப்புவோம். அவர்கள் செல்பேசி எண்களை நாங்கள் எங்கள் செல்பேசியில் பதிந்து வைத்துக் கொள்வோம். இதனால் அவர்கள் எங்களிடம் பேசும்போது, அவர்களிடம், அவர்கள் பெயர் சொல்லி பேச முடிகிறது. இது ஒரு நெருக்கத்தை எற்படுத்துகிறது. இது எங்கள் வாடிக்கையாளர்களை நிலைப்படுத்திக் கொள்ள உதவுகிறது.

அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு எங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். குறிப்பாக அவர்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டு திருமண விழாக்களுக்கு எங்களை பரிந்துரைக்கிறார்கள்.

அழகுக் கலை தொழிலை, தகுந்த பயிற்சியுடன் எவரும் தொடங்க முடியும். ஆனால் திறமை, ஆர்வம், ஈடுபாடு, கவனம், நட்புடன் கூடிய அணுகு முறை அத்தனையும் இந்த தொழிலில் வெற்றி பெறத் தேவையானதாகும். பொழுது போக்காக செய்கிறேன் என்று செயல்பட்டால் வெற்றி பெற முடியாது. பெண்களுக்கு எப்போதும் அழகு பற்றிய ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக இளம் வயது பெண்களுக்கு இந்த ஆர்வம் அதிகம். எனவே எங்கள் தொழிலுக்கு சரிவு என்பதே இருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம்.

நாங்கள் எங்கள் அழகு நிலையத்தைத் தொடங்க சுமார் ஐந்து லட்ச ரூபாய் முதலீடு செய்தோம். எங்கள் முயற்சிக்கேற்ற லாபம் கிடைத்து வருகிறது.” என்றனர்.

– ஆர். நந்தினி

இரண்டு தவளைகள்தான்; சத்தம்தான் அதிகம்!

0

சீன விவசாயி ஒருவரின் வீட்டிற்கு அருகே தவளைகள் நிறைந்த குளம் ஒன்று இருந்தது. அதில் ஏராளமான அளவிற்கு, அதாவது நூற்றுக் கணக்கில் தவளைகள் இருப்பதாக கருதினார். நீண்ட நாட்களாக அவை இரவு முழுவதும் கத்திக் கொண்டே இருப்பது அவருக்கு எரிச்சலாக இருந்தது. நகரில் உள்ள அவருடைய நண்பரிடம் சென்று, ”என் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் உள்ள நூற்றுக் கணக்கான தவளைகள் இரவெல்லாம் கத்தி என்னைத் தூங்க விடாமல் செய்கின்றன. இதற்கு என்ன செய்யலாம்?”என்று ஆலோசனை கேட்டார்.

அதற்கு நண்பர், அந்த தவளைகளை எல்லாம் பிடித்து ஒரு உணவகத்துக்கு விற்பனை செய்து விடலாம் என்று ஆலோசனை கூறினார். சீனாவில் தவளைகளை உண்ணும் பழக்கம் உள்ளது.

இரண்டு நண்பர்களும் சேரந்து வலை வீசினர். குளம் முழுவதும் துழாவியும் இரண்டே இரண்டு தவளைகள்தான் கிடைத்தன.

ஒரு ஜோடி தவளைகள் சேர்ந்து சத்தமிடுவதைத்தான் இரவின் இருளில் எண்ணிக்கை அறியாமல் நூற்றுக் கணக்கான தவளைகள் சத்தம் போடுவதாக அந்த விவசாயி தவறாக நினைத்ததைப் போன்று மற்ற நிறுவனங்களின் உண்மை செயல் பாட்டினை அறியாமல் அல்லது தெரியாமல் பல தொழில் முனைவோர் போட்டியாளர்களை தவறாக கணித்துச் செயல்படுகிறார்கள்.

– முனைவர் ச. குப்பன்

வெற்றிக் கதவைத் திறக்கும் பணம்

0

எனது கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கும் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். அவரிடம் அறிவாற்றலும், முயற்சியும் இருப்பது பேச்சில் வெளிப்பட்டது. ஒரு சந்தேகத்தைத் தெளிவு படுத்த வந்திருந்தார்.

”தொழிலைத் தொடங்கி நடத்த நான் தயார். ஆனால் எனது திட்டங்கள் எல்லாம் கற்பனையில் விண்ணில் கோட்டை கட்டுவதைப் போல இருக்கின்றன. வேண்டிய நிதியை எப்படி பெறுவதென்று புரியவில்லை; தெரியவில்லை. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதைப் போல எனது தொழில் விருப்பங்கள் இருப்பதாக எனது நண்பர்கள் கூறுகிறார்கள்” என்றார். அவரது குரலில் வேதனை மண்டிக் கிடந்தது.

அவரது தொழில் திட்டத்தைப் பற்றிக் கேட்டேன். ஒரு குண்டூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உருவாக்குவது அவரது நோக்கம்; அதனைப் பற்றி எல்லா விவரங்களையும் திரட்டி வைத்திருந்தார்.

நிதி உதவிக்கு வங்கிகளை அணுகியிருக்கின்றார். அவர்கள் அவரிடம் நன்றாகப் பேசினாலும் கடன் வழங்க தயங்குவது வெளிப்படையாகத் தெரிந்திருக்கின்றது. அந்த மனநிலையில்தான் என்னைப் பார்க்க வந்தார்.

நான் அவரிடம் நிதி கிடைக்கக் கூடிய வழிமுறைகளைப் பற்றி எல்லாம் பேசினேன். எப்படி நிதியை நிர்வகிக்க வேண்டும் என்பதையும் விளக்கினேன். புதிய நம்பிக்கையோடு எழுந்து விடை பெற்றுச் சென்றார்.

ஒரு விளக்கு எரிவதற்கு மின்சாரம் எப்படி ஆதாரமாக இருக்கின்றதோ, அது போல், தொழில், வணிக நிறுவன வளர்ச்சிக்கு நிதி ஆதாரமாக இருக்கின்றது.

ஒரு தொழிலுக்கு வேண்டிய மூலதனத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று நிலையான மூலதனம் (Fixed Capital) மற்றொன்று செயல்பாட்டு மூலதனம் (Working Capital).

நிலையான மூலதனம் என்பது நிலம், கட்டடம், எந்திரங்கள் என்று நிலைத்திருக்கும் வகையில் முதலீடு செய்வதாகும். இதன் அளவு தொழிலின் இயல்பை ஒட்டி அமையும்.

செயல்பாட்டு மூலதனம் என்பது மூலப் பொருள்கள் வாங்க, கூலி கொடுக்க, மின்சாரக் கட்டணம் செலுத்த என அன்றாட செலவுகளுக்குத் தேவையான பணமாகும். இதன் அளவு உற்பத்தியினை ஒட்டி இருக்கும்.

முதலில் சொந்தமாக நம்மால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமென்று பார்க்க வேண்டும்.

இன்று பலபேர் சொந்த முதலே இல்லாமல் தொழிலைத் தொடங்க முயல்கின்றனர். இது தரையில் ஊன்றாமல் கரணம் போட முயல்வதைப் போன்றது. எல்லோருக்கும் இது வாய்ப்பதில்லை.

சொந்த முதலென்றால் நமது கையிலேயே இருக்க வேண்டுமென்பதில்லை. தொழிலைத் தொடங்குவதற்கு முன்னால் நம்மால் சேர்க்கக் கூடியதைச் சொந்த முதலாக கருதலாம். இதற்கு பல வழிகள் உள்ளன.

நமது பெற்றோரை, உடன் பிறந்தவர்களை, நம்மீது நம்பிக்கை கொண்ட உறவினர்களை முதலீடு செய்யும்படி கூறலாம். அவர்களுக்கு வட்டியோ, ஆதாயத்தில் பங்கோ தருவதாக ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

ஒரு நிறுவனத்திற்கு நிதி கிடைக்க சில வழிமுறைகள் உள்ளன.
சொந்தமாகத் தொழில் செய்கின்றவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது முன்பை விட எளிதாகி இருக்கின்றது. வங்கிகளிடன் நிதி பெறுவதில் சிரமங்கள் இருக்கலாம். ஆனால், அது இயலாத ஒன்று என்று கூறி விட முடியாது.

வங்கிகளிடன் கடனையும், அரசு தரும் மானியங்கள் போன்ற சலுகைகளையும் பெற்று தொழிலை வளர்த்திருக்கும் பலரை நான் அறிவேன்.

இப்பொழுது பல தனியார் நிதி நிறுவனங்களும் தொழில் கடன் தருகின்றன. இவற்றிடமிருந்து நிதி பெறுகின்ற பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவற்றின் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.

நிதி நிர்வாகம்

ஒரு தொழிலை நடத்துவதில் நிதி நிர்வாகம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். கிடைக்கின்ற நிதியைச் சரியாகப் பேணிக்காத்து, தக்க முறையில் முதலீடு செய்ய வேண்டும்.

ஏராளமாக நிதி இருந்தால் சிறப்பாகத் தொழிலை நடத்தி விடலாமென்று பலர் நினைக்கின்றனர். உண்மை அதுவன்று. இருக்கின்ற நிதியை நாம் எப்படி நிர்வகிக்கின்றோம் என்பதை ஒட்டித்தான் வெற்றிப் பாதையின் கதவு நமக்குத் திறக்கும்.

நமது தொழிலின் வளர்ச்சி நிலையில் எப்பொழுதெல்லாம் எவ்வளவு பணம் தேவை என்பதைத் திட்டமிட வேண்டும். அதற்கான நிதியை எத்தெந்த வகையில் பெற முடியும் என்பதை முடிவு செய்து, அதற்கு வேண்டியவற்றைச் செய்து கொள்ள வேண்டும்.
தொழில் நடத்துகின்ற பொழுது கிடைக்கின்ற ஆதாயத்தை வெளியில் எடுக்கக்கூடாது.

அதனைச் சேமிப்பாக மாற்றி, தொழிலில் மறு முதலீட்டிற்குக் கொண்டு வர வேண்டும். வைப்பு நிதிகளாக சேமிப்பை மாற்றுகின்ற பொழுது, எதிர்காலத்தில் அவை நிதி மூலங்களாகி தொழில் வளர்ச்சிக்குக் கை கொடுக்கும்.

நாம் கொடுக்க வேண்டிய, செலுத்த வேண்டிய பணத்தை உரிய காலத்தில் கொடுக்க வேண்டும். கையில் பணம் தேங்கக்கூடாது. சேர்கின்ற பணத்தை ஏற்ற முறையில் பயன்படுத்த வேண்டும். கையில் மூலப் பொருள்களாக செய்து முடித்து விற்பனைக்குச் செல்லும் பொருள்களாக இருப்பு வைக்கலாம். பணமாக இருப்பு வைத்தால் வட்டி நட்டமாகும்.

நமக்கு வரவேண்டிய பணத்தை வசூலிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ரொக்க விற்பனை சிறந்தது. ஆனால் பெரும்பாலான தொழில்களில் கடனுக்குக் கொடுத்து வாங்காமல் தொழில் செய்ய முடியாது. ஆதலால் கடன் கொடுப்பதைத் தவிர்க்க முடியாது ஆனால் கடன் கொடுக்கின்ற பொழுது அவர்களின் நம்பகத் தன்மை அறிந்து கொடுக்க வேண்டும். நமது நிதி சுழற்சி முறையைப் பாதிக்காத வகையில் கடன் கொடுத்து வாங்க வேண்டும்.

ஒரு நிருவனத்திற்கோ, ஓராளுக்கோ நிறைய கடன் கொடுக்க கூடாது. கடன் நிற்வாகம் நிதி நிர்வாகத்தில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது.
நமது நிதி நடவடிக்கைகளை இணைத்துச் செயல்படுத்த வேண்டும். நமது முதலீடு, முதலீட்டுக்கு வாங்கும் கடன், கட்டடங்களைக் கட்டுதல், எந்திரங்கள் வாங்குதல், மூலப் பொருள்களைப் பெறுதல், கூலி, சம்பளம் தருதல், விற்பனை செய்தல், விளம்பரம் போன்ற வளர்ச்சிச் செலவுகளை மேற்கொள்ளுதல், கொடுத்த கடனை வசூலித்தல், பெற்ற கடனைத் திருப்பிக் கொடுத்தல், வரி செலுத்துதல் என்று பல்வேறு நிதி நடவடிக்கைகள் இருக்கும்.

நிதி நடவடிக்கைகளைப் பொறுத்தவரை ‘முக்கியம்’ ‘முக்கியமில்லை’ என்று வகைப்படுத்த முடியாது; கூடாது. எல்லாம் முக்கியம்தான். எல்லா நிதி நடவடிக்கைகளும் உரிய காலத்தில் நடைபெற வேண்டும். பணம் வாங்குவதிலும் செலுத்துதலிலும் காலதாமதம் கூடாது.

எல்லா நிதி நடவடிக்கைகளும் தனித்தனியாக நடைபெற்றாலும், அவற்றிற்கிடையில் ஓர் இணைப்பும் தொடர்பும் இருக்கும். இவற்றைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வசூலாகின்ற பணம் தடங்கலின்றிக் கிடைத்தால்தான், செலுத்துகின்ற பணத்தை முறையாகச் செலுத்த முடியும்.

நிதியைப் பொறுத்தவரை நாம் எப்பொழுதும் விழிப்போடு செயல்பட வேண்டும். நிறுவனத்திற்கு வருகின்ற எல்லாப் பணத்தைப் பற்றியும், செலுத்துகின்ற, செலவிடுகின்ற எல்லாப் பணத்தைப் பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டும். முறையாகக் கணக்கு வைப்பதும், அவ்வப்போது கணக்கைச் சரிபார்ப்பதும் தேவையாகும்.

– டாக்டர் மா.பா. குருசாமி

பிரியாணி விற்பனை அதிகரிக்க வேண்டுமா?

0

பிரியாணி உணவு, மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுத் திகழ்கிறது. மேலும் இது ஒரு குறைந்த முதலீட்டுத் தொழிலாகவும் விளங்குகிறது. இதனால் நிறையப் பேர் தங்களுக்கு ஏற்ற வகையில் பிரியாணி தயாரித்து விற்பனை செய்கிறார்கள். பெரிய உணவகங்கள் முதல், சாலை ஓரக் கடைகள் வரை பிரியாணி தாராளமாகக் கிடைக்கிறது. சென்னை, பல்லாவரத்தில் பிஸ்மி பிராயாணி என்ற பெயரில் பிரியாணி கடை நடத்துகிறார், திரு. முகமது ஷெரிஃப்.
அவர் நடத்தும் பிரியாணி கடை பற்றி அவரிடம் கேட்டபோது,

”நான் முதலில் எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் போதுமான வருமானம் இல்லாததால், வீட்டில் இருந்தபடியே, கேட்பவர்களுக்கு பிரியாணி தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். பின்னர் திருமணம் போன்ற விழாக்களுக்கும் எம்எஸ் கேட்டரிங் என்ற பெயரில் பிரியாணி தயாரித்துக் கொடுத்தேன்.

பிறகு நாம் ஏன் ஒரு பிரியாணி கடை போடக்கூடாது என்று எண்ணினேன். பல்லாவரத்தில் என்னுடைய பொருளாதார நிலைக்கு ஏற்ப ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்தேன். எனக்கு சமைப்பதில் இயற்கையாகவே ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் பிரியாணி தயாரிப்பு நுட்பங்களை கற்றுக் கொண்டேன். உதவிக்கு ஆட்களை வைத்துக் கொண்டேன்

பிரியாணி வகைகளில் தம் பிரியாணி, வடி பிரியாணி, ஐதராபாத் பிரியாணி, செட்டிநாடு ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஆற்காடு பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி என பல வகைகள் உள்ளன. நான் ஆற்காடு வகை பிரியாணியை தயாரித்து விற்பனை செய்கிறேன்.

எல்லா விதமான மசாலாக்களையும் சேர்த்து, பிரியாணி தயாரித்த பிறகு பாத்திரத்தின் மேல் தட்டை வைத்து அதன் மீது நெருப்பு கங்குகளை குறிப்பட்ட நேரம் போட்டு வைப்பார்கள். இப்படி தயாரிக்கப் படுவதுதான் தம் பிரியாணி.

ஆம்பூர் பிரியாணி, விறகு அடுப்புகளில் தேக்சா எனப்படும் பெரிய பாத்திரத்தில் ஆட்டுக் கறியுடன், பாசுமதி அரிசி கலந்து சமைக்கப்படுகிறது. ஐதராபாத் பிரியாணி போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும், கூடுதலாக தக்காளியும், சிறதளவு மஞ்சள் தூளும் சேர்க்கப்படுவதால் மற்ற பிரியாணிகளை விட ஆம்பூர் பிரியாணி சற்று செம்மஞ்சளாக இருக்கும்.

ஐதராபாத் பிரியாணியைப் பொறுத்த வரை, முதலில் அரிசியை வேக வைத்து எடுத்துக் கொண்டு, பிறகு இறைச்சி, மசாலா கலந்து தயாரிக்கப்படுகிறது. ஐதராபாத் பிரியாணியில் சோம்பு சேர்ப்பது இல்லை, அதற்கு பதிலாக ஷாஜ்ரா மசாலா சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பெரிய சூப்பர் மார்க்கெட்களில் பிரியாணி செய்வதற்கு தேவையான அத்தனை மசாலா வகைகளும் கிடைக்கின்றன. என்னைப் பொறுத்த வரை நானே சொந்தமாக மசாலா வகைகளை எனது தேவைக்கு ஏற்ப அரைத்து வைத்துக் கொள்கிறேன்.

அஜினமோட்டோ, செயற்கை வண்ணங்களை பிரியாணி தயாரிப்பின் போது நாங்கள் பயன்படுத்துவது இல்லை. பிரியாணியுடன் வெங்காய பச்சடி, எண்ணெய் கத்தரிக்காய் சேர்த்து வழங்குகிறோம். மாலை நேரங்களில் சிக்கன் பகோடா, சிக்கன் 65 ஆகியவற்றையும் எனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறேன்.
திண்டுக்கல் பிரியாணியில் பாசுமதி அரிசிக்கு பதிலாக சீரக சம்பா அரிசி பயன்படுத்தப் படுகிறது. எனக்கு எல்லா வகையான பிரியாணிகளையும் சமைக்கத் தெரியும் என்பதால் வெளி ஆர்டர்களின் போது, அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தயாரித்துக் கொடுக்கிறேன்.

பிரியாணி சுவையாக அமைய சோறு உதிரியாக இருக்க வேண்டும். சரியான பதத்தில் இறைச்சியை வேக வைத்து இருக்க வேண்டும். இறைச்சி புதிதாக இருக்க வேண்டும். நான் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை குன்றத்தூரில் உள்ள எனக்கு நம்பிக்கையான கடையில் வாங்குகிறேன். அவர்கள் புதிய, தரமான இறைச்சியை தருகிறார்கள்.

சுகாதாரமான முறையில், சுவையாக தயாரித்து வழங்குவதால் எனக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

எந்த பிரியாணி கடைக்காரரும் கெட்டுப் போன இறைச்சியை தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக பயன்படுத்த மாட்டார்கள். சில சமூக விரோதிகள் கொஞ்சம் கூட அறிவு நாணயம் இன்றி நாய்க்கறி அது இது என்று வதந்திகளை பரப்புகிறார்கள். இவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்றார்.

– சை. நஸ்ரின்

நினைப்பை மாற்றிய ‘ரிச் டேட்; புவர் டேட்’

0

பணம் சேர்ப்பது பாவச் செயல் என்றும், செல்வந்தர்கள் செல்வத்தால் அல்லல்படுகிறார்கள் என்ற பணம் சம்பாதிப்பதற்கு எதிரான ஒரு பார்வையை இன்றும் சிலர், குறிப்பாக மத போதகர்கள் சொல்லிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இது ஒரு தவறான கருத்து ஆகும். .”ஏழை கால் வயிற்றுக் கஞ்சியைக் குடித்தாலும் நிம்மதியாய்த் தூங்குவான், கோடீஸ்வர்கள், பணக்காரகளுக்கு நிம்மதி என்பது இருக்காது. தூக்கம் வராது” என்று போலியான, பாசாங்கான கருத்துகளை தங்களுக்குத் தாங்களே சொல்லி சுகம் காண்பவர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் நம் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைபோடும் கருத்துகள்.

“செல்வர் விண்ணரசில் புகுவது கடினம். செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்பார்கள். நன்னெறிகளை போதிப்பதாகக் கூறும் பெரும்பாலான அற நூல்கள், பொருளாதார முன்னேற்றம் குறித்தும், பொருள் ஈட்டும் வழிகள் குறித்தும் பேசுவது இல்லை.

பொருளின் பொருளை முழுமையாக உணர்ந்து, பொருள் ஈட்ட வேண்டும் என்று மிகவும் வலிமையாக வலியுறுத்திய பெருமை பெரும்புலவர் திருவள்ளுவருக்கே உண்டு. இதற்கென பொருள் செயல்வகை என்ற ஒரு அதிகாரமே எழுதி உள்ளார்
இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ற வகையில். பணம் குறித்தும், செல்வம் சேர்ப்பது குறித்தும் கோடிக் கணக்கான மக்கள் கொண்டு இருந்த தவறான, புராதன கால நம்பிக்கைகளைத் தகர்த்து எறிந்தவர் என்ற புகழ் ராபர்ட் கியோஷாகி-க்கு உண்டு.

இவர் எழுதிய “பணக்காரத் தந்தை, ஏழைத் தந்தை” (Rich Dad Poor Dad) என்ற புத்தகம் இதுவரை வெளிவந்து உள்ள தனிநபர் வளர்ச்சி, நிதி நிர்வாகப் புத்தகங்களின் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்ததோடு மட்டும் அல்லாமல் உலகின் பல மொழிகளிலும் தமிழ் உட்பட மொழி பெயர்க்கப்பட்டு அந்த நூல்களும் விற்பனையில் சாதனை படைத்து உள்ளன. “நியூயார்க் டைம்ஸ்” இதழ் தொகுத்து வழங்கும் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் இந்த புத்தகம் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து இடம் பெற்றது.

இந்தப் புத்தகத்தில் பணத்தின் முதன்மை குறித்து மட்டுமல்ல; பணத்தைப் பெருக்குவதற்கான நுணுக்கங்களை, அறிவியல் ரீதியாகச் சொல்லி இருக்கிறார்.. புத்தகம் முழுவதும் ஏராளமான இன்றியமையாத குறிப்புகள் மற்றும் பொருள் சேர்ப்பது பற்றிய வழிகாட்டல்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவை நமக்குத் தேவையான உண்மைகளை உரக்கச் சொல்கின்றன. அந்த நூலில் இருந்து சில துளிகள்…

> பணம் என்பது ஒரு வகையான சக்தி, ஆனால் பொருளாதாரக் கல்வி அதைவிட சக்தி வாய்ந்தது.

> பணத்திற்க்காக வேலை செய்யாதீர்கள். பணம் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும்.

> பணத்துடன் அதிக ஒட்டுதல் கொண்டுள்ளது எவ்வளவு பெரிய மனநோயோ, அதே போல் பணத்தைத் தவிர்ப்பதும் ஒரு நோயாகும்.

> ஏழ்மை அல்லது பொருளாதார சிக்கல்களுக்கான காரணம், பயமும், அறியாமையும்தானே தவிர, பொருளாதாரமோ, அரசாங்கமோ அல்லது பணக்காரர்களோ அல்ல.

> நிஜ உலகில் சாமர்த்தியமானவர்கள் முன்னேறுவதில்லை. துணிச்சல்கார்கள்தான் முன்னேறுகிறார்கள்.”

– எஸ். எஸ். ஜெயமோகன்

தொழில் முனைப்பைத் தூண்டும் பேரா. கிறிஸ்டினா!

0

இன்றைக்கு நிறைய கல்லூரிகளில் பிபிஏ, எம்பிஏ போன்ற தொழில், வணிகம் சார்ந்த படிப்புகள் உள்ளன. ஏராளமான மாணவர்கள் இவற்றில் சேர்ந்து படிக்கின்றனர். இத்தகைய படிப்புகளைப் படிக்கும் மாணவ, மாணவியரிடம் அந்த படிப்புகள் தொழில் முனைப்பு ஆர்வத்தைத் தூண்டுகின்றனவா, அவ்வாறு தூண்ட கல்லூரிகள் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கின்றன என்ற கேள்வியோடு, சென்னை போரூருக்கு அருகே உள்ள கோவூரில் உள்ள செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லுரியின் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர். கிறிஸ்டினா அவர்களை அணுகியபோது,

”பிபிஏ போன்ற படிப்புகள் வணிக நிர்வாகம் சார்ந்த படிப்பு ஆகும். இதன் வழியே மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம், உற்பத்தி போன்ற தொழில் துறையின் அடிப்படைகளைப் பற்றிய பாடங்களை மாணவர்கள் பயில்கிறார்கள். இந்த பாடங்கள் அனைத்தும் தொழில் முனைவுக்கு உதவக் கூடிய பாடங்கள் ஆகும். பிபிஏ-வின் இறுதி ஆண்டில் தொழில் முனைவோர் ஆவதற்கான பாடத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

எங்கள் கல்லூரியில் பிபிஏ படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளது. மற்றவர்கள் படித்து விட்டு ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள்.

பெரும்பாலான தொழிலதிபர்கள், வணிகர்களின் பிள்ளைகள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கிறார்கள். தங்கள் தந்தையின் தொழிலில் அவர்களுக்கு உதவவும் அந்த தொழிலை மேலும் முன்னெடுத்துச் செல்லவும் விரும்பி அவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கிறார்கள்.

நாங்கள் எங்கள் மாணவர்களை தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று காட்டுகிறோம். அண்மையில் ஃபாக்லி (fogli) என்ற நிறுவனத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்றோம். அங்கு என்னென்ன பிரிவுகள் உள்ளன, என்னென்ன செயல்பாடுகள் நடக்கின்றன என்பதை எல்லாம் நேரடியாகப் பார்த்து அறிந்து கொண்டார்கள்.

எங்களிடம் படிக்கும் மாணவர்களில் சிலர் படிக்கும் பொழுதே சிறிய தொழில்கள், வணிகங்களைத் தொடங்கி நடத்துகிறார்கள். சில மாணவர்கள் படித்துக் கொண்டே பகுதி நேரப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். எங்கள் மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இருப்பதை விட வேலை கொடுப்பவர்களாக உயர வேண்டும் என்றே விரும்புகிறோம். அதற்கேற்ப அவர்களை உற்சாகப்படுத்துகிறோம். தனிப்பட்ட முறையில் நானும் வணிக இதழ்களில், வணிக ஆங்கில நாளேடுகளில் படித்த செய்திகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வணிக இதழ்களைப் படிக்குமாறு ஆலோசனை கூறுகிறேன்.” என்றார், திருமதி. கிறிஸ்டினா.

– ஆர். நந்தினி

தந்திரம் !

0

அது வர்த்தகப் பொருள்களைத் தயாரிக்கும் ஓர் நிறுவனம். அங்கு விற்பனை மேலாளர் பதவி காலியாக இருந்தது. அதற்காகப் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு இருந்தனர். அந்தப் பதவிக்காக பலர் விண்ணப்பித்து இருந்தனர். அன்று நேர்முகத் தேர்வு ஏராளமானோர் வந்திருந்தனர். வந்தவர்கள் பட்டதாரிகள், விற்பனைத் துறையில் அனுபவம் நிறைந்தவர்கள். பலரும் தங்களுக்கு எப்படியாவது இந்த வேலை கிடைத்து விடாதா என்ற ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ஒவ்வொருவரையும் அலுவலக உதவியாளர் பெயர் சொல்லி அழைத்துச் சென்றார். நேர்முகத் தேர்வில் நிறையக் கேள்விகள் கேட்டு மிகவும் திறமையானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் அந்த நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் குமார் மிகவும் கவனமாக இருந்தார். நேரம் கடந்தது. கிட்டத் தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் சொல்லி அனுப்பி வைத்தார். கடைசியாக செழியன், எழிலன், முகிலன் ஆகியோரை மட்டும் காத்திருக்குமாறு கூறி இருந்தார். சிறிது நேரம் கழித்து மூவரையும் அழைத்தனர்.

மூவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து குமார், ”இந்த நிறுவனத்தில் விற்பனை மேலாளர் பதவிக்கு உங்களில் ஒருவரை மட்டுமே தெரிந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. ஏனென்றால், இந்தத் தேர்வில் மூவருமே ஒரே மதிப்பெண் பெற்று உள்ளீர்கள். அதனால் கடைசியாக உங்களுக்கு ஒரு தேர்வு வைக்கப் போகிறேன் அதில் உங்கள் திறமை எப்படி என்பதைப் பார்த்த பிறகு தான் தேர்ந்தெடுக்க முடியும். என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

உடனே மூவரும், ”சரி சார், நீங்கள் கூறுவதைத் தாராளமாக ஏற்றுக் கொள்கிறோம்” என்றனர். உடனே குமார் ஒரு பெட்டியைத் திறந்து அதில் இருந்து ஒரு பொருளை எடுத்தார். அது, அந்த நிறுவனம் தயாரிக்கும் வாசனைத் திரவியம். அதை மூவரின் முன்பாகக் காட்டி, ”இது இந்த நிறுவனத்தின் தயாரிப்பாகும். நான் உங்களிடம் தலா ஐம்பது பாட்டில்களைத் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, இதை இரண்டு நாள்களில் நீங்கள் விற்க வேண்டும். ஒரே நபரிடம் கொடுக்கக் கூடாது. உங்கள் உறவினர்களுக்கும் கொடுக்கக் கூடாது. அவர்களாகவே விரும்பி வாங்க வேண்டும்.

அதன் பிறகு என் முடிவைக் கூறுகிறேன்” என்றவர் அவர்களிடம் தலா ஐம்பது பாட்டில்களைக் கொடுக்குமாறு உதவியாளரிடம் கூறினார். அதைப் பெற்றுக் கொண்ட மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.

சரியாக இரண்டு நாட்கள் கழித்து மூவரும் அந்த நிறுவனத்துக்கு வந்தனர். குமார் அவர்களை தனித் தனியாக வரவழைத்தார்.

முதலில் உள்ளே சென்ற செழியன், ”சார்.. பல இடங்களில் விற்க முயற்சி செய்தேன். இதை விட விலை குறைவாக நிறைய நிறுவனத் தயாரிப்புகள் இருக்கின்றது. அதனால் விற்பனை சுமாராகத்தான் இருந்தது. ஐந்து பாட்டில்கள்தான் விற்க முடிந்தது” என்றார்.

அடுத்து சென்ற எழிலன், ‘சார்.. இன்னும் கொஞ்சம் குவாலிட்டி வேண்டும். முயற்சி செய்து விற்க வேண்டும். என்னால் பத்து பாட்டில்கள் தான் விற்க முடிந்தது” என்றார்.

கடைசியாக முகிலன் சென்றார். ”சார். நான் எல்லா பாட்டில்களையும் விற்று விட்டேன். இன்னும் ஐம்பது இருந்தால் கூட விற்று இருப்பேன்” என்று எந்த வித தயக்கமும் இல்லாமல் கூறினார். இதைக் கேட்ட குமாருக்கு அளவு கடந்த வியப்பு. ”எப்படி அனைத்து பாட்டில்களையும் விற்பனை செய்தீர்கள்?” என்றார்.

உடனே முகிலன், ”நீங்க கொடுத்த ஒவ்வொரு பாட்டில் கூடவும் அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்பட நட்சத்திரத்தின் வண்ணப்படத்தை இலவசமாகக் கொடுத்தேன். இந்த இலவச உத்தியால் என்னால் அனைத்தையும் விற்க முடிந்தது” என்றார். முகிலன் தேர்வு செய்யப்பட்டார்.

”எந்த ஒரு செயலை செய்யும் போதும் அதில் ஒரு ஈடுபாடு இருக்க வேண்டும். ஒரு தந்திரம் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும். அதை நீங்கள் சரியாக செய்து இருக்கிறீர்கள்” என்று முகிலனை பாராட்டவும் செய்தார், குமார்.

– ஆர். அருண்குமார்

அதிகரித்து வரும் இளநீர் விற்பனை

0

சென்னை போன்ற நகரங்களில் இளநீர்க் கடைகள் இல்லாத சாலைகளே இல்லை என்று எளிதில் சொல்லி விடலாம். அந்த அளவுக்கு இளநீர்க் கடைகள் சாலை ஓரக் கடைகளாக இயங்கி வருகின்றன. அதே போல இளநீர் விற்பனை செய்யும் மூன்று சக்கர சைக்கிள்களும் ஆங்காங்கே சுற்றி வருகின்றன. ஆண்கள் மட்டுமே இளநீர் சீவிக்கொண்டிருந்த நிலையில் இப்போது ஏராளமான பெண்களும் இளநீர் சீவிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை, இராமாபுரம், மவுன்ட் – பூந்தமல்லி சாலை ஓரமாக இளநீர்க் கடை வைத்து இருக்கிறார், திருமதி. தேவி. அவரிடம் இளநீர் வியாபாரம் பற்றிக் கேட்டபோது,

”நான் இருபத்தைந்து ஆண்டுகளாக இளநீர் விற்பனை செய்து வருகிறேன். முதலில் இதே இடத்தில் பழைய இரும்புக் கடை வைத்திருந்தோம். அரசு நகருக்குள் உள்ள பழைய இரும்புக் கடைகளை தடை செய்த போது, இளநீர்க் கடைக்கு மாறினோம்.
நாங்கள் பழைய இரும்பு மறுசுழற்சிக் கடை நடத்திக் கொண்டிருந்த போது, அருகில் ஒருவர் இளநீர்க் கடை வைத்து இருந்தார்.

அவ்வப்போது அந்த கடையை எங்களை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, அவர் தனது வேறு பணிகளை முடித்து விட்டு வருவார். அப்போது இளநீர் வெட்டி பழகிக் கொண்டேன். பழைய இரும்புக் கடையை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது, இளநீர்க் கடையை எங்களிடமே ஒப்படைத்து விட்டு அவர் வேறு பணிக்கு சென்று விட்டார்.

என்னுடைய கணவரின் மறைவுக்குப் பிறகு முழுநேரமாக நான்தான் கடையைப் பார்த்துக் கொள்கிறேன். இது எனக்கு ஒரு வருமானம் தரும் தொழிலாக இருந்தாலும், மக்களின் தாகம் தணிக்கும் சேவை செய்கிறோம் என்ற மனநிறைவும் எனக்கு இருக்கிறது. இளநீரைப் பார்த்தாலே அது வழுக்கை உள்ள இளநீரா, வெறும் தண்ணர் மட்டும் உள்ள இளநீரா, முற்றிய இளநீர் என்பதை என்னால் கண்டு பிடித்து விட முடியும். வாடிக்கையாளர் கேட்பதற்கு ஏற்ப தேர்வு செய்து சீவிக் கொடுப்பேன்.

புதுச்சேரி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில இருந்து சென்னைக்கு நிறைய இளநீர் கொண்டு வரப்படுகிறது. இளநீர் மொத்த வணிகர்களிடம் இருந்து நாங்கள் எங்கள் தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்கிறோம். வாங்கும் விலைக்கேற்ப ஒரு காய்க்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை லாபம் வைத்து விற்பனை செய்வோம்.

வெயில் காலத்தில் இளநீர் விற்பனை நன்றாக இருக்கும். பனிக் காலம், மழைக் காலங்களில் அவ்வளவாக விற்பனை இருக்காது. விற்பனைக்கேற்ப கொள்முதல் செய்து கொள்வேன். அதிக அளவாக ஒரு நாளில் ஐநூறு இளநீர்க் காய்கள் வரை விற்பனை செய்து இருக்கிறேன். சில நாட்களில் இருபது இளநீர் அளவுக்கு கூட விற்பனை ஆகி இருக்கிறது.

தற்போது அருகே பெரிய கட்டடங்கள் வந்து விட்டதால், அங்கு வருபவர்கள் எங்கள் கடையை மறைத்தபடி தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால், விற்பனை குறைந்து விட்டது. எனவே வேறு இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பொதுவாக மக்களிடம் இளநீர் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. அதில் உள்ள சத்துகள், அது உடலுக்கு தரும் நன்மைகள் பற்றி எல்லோருக்கும் தெரிகிறது. இதனால் செயற்கை கோலா பானங்களை குடிப்பதற்கு பதில் இளநீர் குடிப்பதை விரும்புகிறார்கள். எனவே இளநீர் விற்பனைக்கு சரிவு எற்பட வாய்ப்பே இல்லை. இதற்கான வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்தபடியேதான் இருப்பார்கள்.” என்றார்.

– ரா. காயத்ரி

இணையம் வழி வணிகம் உங்களுக்கும் தேவை!

0

ஒரு காலத்தில் டீக்கடை, துணிக்கடை, கறிக்கடை, காய்கறிக்கடை என பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்த இங்கிலாந்து நாட்டின் பர்சலாம் நகரின் வணிக வீதிகள் இன்று அந்த பரபரப்பு குறைந்து காணப்படுகின்றன. விக்டோரியா காலத்து வணிகக் கட்டிடங்களை நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வாடகைக்கு எடுத்த காலம் எல்லாம் இப்போது மலை ஏறிப்போய், அந்த கட்டிடங்கள் பல, ”வாடகைக்கு விடப்படும்” போர்டுடன் காட்சி அளிக்கின்றன.

ட்ராவல் ஏஜென்சி கடைகளும், வீடியோ கேம்ஸ் நிலையங்களும் தேடுவாரற்றுக் கிடப்பதைப் பார்க்க முடிகிறது.

இப்படி நகரத்து வீதிகள் எல்லாம் காற்று வாங்கிக் கிடப்பதற்குக் காரணம், ஒரு இரண்டு மைல் தூரத்தில் புதிதாக முளைத்த வோல்ஸ்டான்டன் ரீட்டெயில் பார்க் (Wolstanton Retail Park) என்ற இடத்திற்கு மக்கள் படை எடுக்கத் தொடங்கியதுதான்! அங்குதான் வால்மார்ட் நிறுவனத்தின் அஸ்டா (Asta) போன்ற பெரிய கடைகள் எல்லாம் இயங்குகின்றன. இதனுடன் சேர்த்து இன்னொரு காரணமும் மக்களை திசை திருப்பியது.

அதுதான், அங்கிருந்து 25 மைல் தொலைவில் தொடங்கப்பட்ட அமேசான்.காம் (Amazon.com) நிறுவனம் ஆகும். கிட்டத் தட்ட பத்து கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவைக் கொண்ட அந்த நிறுவனம்தான், தனது ஆன்லைன் விற்பனை மையம் மூலம் நாட்டின் 18 சதவிகித சில்லறை விற்பனையை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இந்த விற்பனை அமெரிக்காவை விட இரண்டு மடங்கு அதிகம். உலகின் வேறெந்த நாட்டை விடவும் இது மிக அதிகமான விற்பனை விகிதம் என்றே சொல்லலாம்.

”ஆன்லைனில் விலை குறைவாகக் கிடைக்கும் போது, நாம் ஏன் கடைக்குப் போய் வாங்க வேண்டும்?” என்கிறார், பார்சலாம் நகரைச் சேர்ந்த 65 வயது பால் டைக்ஸ். போக்குவரத்துச் செலவும் மிச்சம் தானே என்பது அவரது கருத்து.

பிரிட்டனில் உள்ள தரமான நெட்வெர்க் சேவை மற்றும் அதி வேகமான இணைய இணைப்புகள் பெரும்பாலும் 93 சதவிகித வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இலட்சக் கணக்கான மக்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சென்ற ஆண்டு இங்கிலாந்தில் அமேசானின் விற்பனை 19 சதவிகிதமாக உயர்ந்து 11.4 பில்லியன் டாலர் லாபத்தை ஈட்டித் தந்தது.

வெப் கிராசர் நிறுவனம், ஆகேடோ குரூப் 12 சதவிகித விற்பனையை அதிகரித்து, 1.3 பில்லியன் டாலர் வருமானத்தை அள்ளியது. அதே போல் ஃபேஷன் ரீட்டெய்லர் அசோஸ் (Fashion Retailer Asos) நிறுவனம், தனது விற்பனையின் மூலம், 16 சதவிகிதம் வருவாயை உயர்த்தி உள்ளது. மார்க்ஸ் & ஸ்பென்சர் குரூப் டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ்களின் சந்தை மதிப்பை இது மிஞ்சி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் பொருட்களை வாங்குவதில் இங்கிலாந்து மக்கள் மிகவும் முன்னோக்கி இருக்கிறார்கள். விரைவில் எல்லா மக்களிடமும் இதை எதிர்பார்க்கலாம் என்கிறார், ரிச்சர்ட் ஹைமென், சில்லறை வர்த்தக நிறுவனமான ராஹ் அட்வைசரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

1995களிலேயே இந்த மாபெரும் வர்த்தக புரட்சியில் தடம் பதித்து, அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறது, இங்கிலாந்தின் டெஸ்கோ (Tesco) நிறுவனம்.

முதன் முதலில் மேற்கு லண்டன் நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், தங்களிடம் உள்ள பொருட்களை பட்டியல் போட்டு ஃப்ளாப்பி டிஸ்க்குகளாக அனுப்பி வைத்து ஆர்டர் எடுக்கத் தொடங்கினார்கள். அதுவே சில ஆண்டுகளில் இணைய வழி வர்த்தகத்திற்கு மாறும் விற்பனை முறையை எளிதாக்கியது. நாட்டின் 90 சதவிகித வீடுகளுக்கு இந்த நிறுவனம் இன்று சேவை செய்து கொண்டு இருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனம் என்ற பெயர் எடுத்து இருக்கிறது.

மளிகை பொருட்களை ஆன்லைனில் தேர்வு செய்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள். அனால் அந்த தடையையும் மீறி டெஸ்கோவில் பொருட்கள் வாங்கும் மக்கள் ஏராளம் என்கிறார், டிசிசி க்ளோபல் நிறுவனத்தின் ஆய்வாளர், பிரையன் ராபர்ட்ஸ் (Brain Roberts).

இணைய வழி வணிகத்திற்கு மக்கள் மாறிப் போனதால், பிரிட்டனின் பெரு வீதிகளும், வியாபார மையங்களும் அடி வாங்கி உள்ளன. சில்லறை வணிகம் ஒரு தலைமுறை மாற்றத்தை சந்தித்து உள்ளது. இதனுடைய தாக்கமும், விளைவும் முன்பு இருந்த எந்த மாற்றத்தை விடவும் மிகப் பெரிது என்கிறார்கள், சூப்பர் மார்கெட் உரிமையாளர்கள்.

– முனைவர். பார்வதி அழகர்சாமி

 

இதுவா, பொருளாதார வளர்ச்சி ?

0

நமது நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்து வருவது போன்ற ஒரு தோற்றத்தை, நம்பிக்கையை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அரசியல் சூதாட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் பகடைக் காயாக உருட்டப்படுகிறது.

நாட்டின் மொத்த உற்பத்தி, மொத்த வருவாய், சராசரி வருவாய் உயர்கின்றது என்ற புள்ளி விவரங்களை நமக்கு முன் அள்ளி வீசுகின்றனர். ஆனால் நடைமுறை நிலைகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன.

நகரங்கள் விரைந்து வளர்கின்றன; மிகப் பெரிய கிராமங்கள் நகரத்தின் தோற்றப் பொலிவைப் பெறுகின்றன; ஒரு வழிச் சாலைகள் இரு வழிச் சாலைகளாகவும், இரு வழிச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாகவும் மற்றும் நான்கு வழிச் சாலைகள் எட்டு வழிச் சாலைகளாகவும் விரிவடைந்து வருகின்றன. நகரங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் விண்ணைத் தொட முயல்கின்றன.

உற்பத்தி அளவு தேவைக்கு ஏற்ற அளவிற்கு உயரவில்லை. குறிப்பாக வேளாண்மை, சிக்கல்களில் சிக்கித் திணறுகின்றது. கிராமப் பொருளாதாரம் நிலை குலைந்து இருக்கின்றது. சிறுதொழில்கள், நடுத்தரத் தொழில்கள் பல சிக்கல்களை எதிர் கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றன. பெரிய தொழில்கள் அரசைக் கைக்குள் போட்டுக் கொண்டு சிறு, நடுத்தர தொழில்களின் சறுக்கலுக்கு காரணமாகி வருகின்றன.

மிகப் பெரிய தொழில்கள் கூடுதலாக ஆதாயம் தரும் பொருட்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன. எடுத்துக் காட்டிற்கு கார், பைக் உற்பத்தியைக் கூறலாம். சேவைப் பணிகள் விரைந்து பெருகுகின்றன. உணவு விடுதிகள், கடைகள், கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், கணினிச் சேவைகள், விளையாட்டுப் போட்டிகள், திரைப்படங்கள், அரசியல் பணிகள் என்று அடுக்கிக் கொண்டு போகலாம்.

சட்டத்திற்குப் புறம்பான வகையில் லஞ்சம், இயற்கைச் செல்வங்களை கொள்ளையடித்தல் மற்றும் அரசு ஒப்பந்தங்கள் தொடர்பான ஊழல்களில் நிறையப் பணம் புரள்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக நமது பொருளாதாரம் கடன் பொருளாதாரமாக மாறி வருகின்றது. அரசியல் சட்ட திட்டங்கள் எல்லா பண நடவடிக்கைகளையும் வங்கிகள் மூலம் செயல்படச் செய்கின்றன. இதனால் மக்களின் சேமிப்புகள் அனைத்தும் வங்கிகளில் சேர்கின்றன. இதனால் தான் மிகப் பெரிய வணிகர்களுக்கு, தொழில் அதிபர்களுக்கு கணக்கு வழக்கின்றி கடன் தருகின்றனர். இதன் விளைவுகளை இப்பொழுது பார்க்கின்றோம்.

”விரலுக்கேற்ற வீக்கம்”, என்பது போல ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கேற்ப கடன் வாங்குகின்றனர். இன்று ஏதாவது ஒரு வகையில் கடன்படாதவர்களே இல்லை. அரசின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் குறைந்தபாடு இல்லை. அரசின் பற்றக்குறை வரவு செலவுத் திட்டம் தன் பங்கிற்கு பணப் புழக்கத்தைக் கூட்டுகின்றது.

இந்த கடன் பொருளாதார வளர்ச்சி, ஒரு பலூனை வாங்கி, காற்றை ஊதி பெரிதாக்கிக் கொண்டே போவதைப் போன்றது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலைக்குத்தான் அமெரிக்கா தள்ளப்பட்டது. அதனைச் சரி செய்ய அமெரிக்கா பெரும்பாடு பட்டதை மறந்து விட முடியாது.

இப்பொழுது இந்திய ரிசர்வ் வங்கி நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றி இருப்பதற்குக் காரணம் இந்தப் பணப் புழக்கம்தான். நாம் உலகப் பொருளாதாரதில் உயர்ந்த இடத்தைப் பெற வேண்டுமானால் சரியான உற்பத்திக் கொள்கையைக் பின்பற்ற வேண்டும். அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளைப் பின்பற்றுவது சரியாக இருக்காது.

நாம் இரண்டு வகையான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். ஒன்று உற்பத்தி, முதலீடு தொடர்பானது. மற்றொன்று பணப் புழக்கம் சார்ந்தது.

பொருள் உற்பத்தியும் அதனை ஒட்டிய சேவைப் பணிகளும்தான் உண்மையான நாட்டு வளத்தையும், வருவாயையும் பெருக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை முதன்மைத் தொழிலாக வேளாண்மை கருதப்படுகின்றது. அதனைச் சார்ந்த தொழில்களும், வாணிபமும் இரண்டாம் வகையைச் சாரும். இன்று பெருந்தொழில்கள் பொருள் உற்பத்தியில் பெரும் பங்கு பெறுகின்றன. ஏற்றுமதி, இறக்குமதியும் இவற்றோடு சேர்ந்து கொள்கின்றன. இவை எல்லாம் நாட்டு வருவாய் பெருக்கத்திற்குத் துணை செய்கின்றன.

திரைப்படத் துறையிலும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுத் துறையிலும் சில சேவைப் பணிகளிலும் கோடிக் கணக்கில் பணம் புழங்குகின்றது. இவை பலரின் வருவாயைக் கூட்டுகின்றன. ஆனால், இது உண்மையான வருவாய்ப் பெருக்கம் அல்ல பணம் கைமாறுகின்றது. அவ்வளவுதான்.

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் கணக்கில் கொண்டு வரப்படாத கருப்புப் பணத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பணம் தான் அரசியலில் குத்தாட்டம் போடுகிறது.இரண்டாவதாக அரசு அச்சடித்து வெளியிடும் பணமும், வங்கி உருவாக்கும் கடன் பணமும் பொருளாதார நடவடிக்கைகளின் பெருக்கத்திற்குத் துணை செய்கின்றன. தேவைக்கு மேல் பண அளிப்பு கூடுகின்ற பொழுது பண வீக்கம் ஏற்படுகிறது. கட்டுக் கடங்காத பணப்புழக்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதைப் போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றது. இது உண்மையான வளர்ச்சி இல்லை.

நமது நாடு வேளாண்மையை மையமாகக் கொண்ட நாடு. வேளாண்மைக்கு வேண்டிய நீர்வளத்தைப் பெருக்கி, அவர்களது விளை பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்கச் செய்தால் வேளாண்மை வளரும். வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதே உண்மையான பெருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும்.

பரவல் முறையில் சிறு தொழில்களையும் பெருக்க வேண்டும். அதன் மூலம் நாட்டின் மொத்த உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நாம் நமது நிலவளத்தையும், இயற்கை வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ஐந்தாண்டுத் திட்டங்களில் நிறைவேற்றாத திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.

அயல்நாட்டு கடன் உதவியையோ, முதலீட்டையோ சார்ந்து இருக்காமல் உள்நாட்டுச் சேமிப்பை எப்படி முதலீட்டிற்குப் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்க வேண்டும். நமது நாட்டுச் சேமிப்பு இங்கு வீட்டில் முடங்குவதோ, வெளிநாட்டிற்குச் செல்வதோ நல்லது அல்ல.

நமது நாட்டுக் கல்வி முறையில் நிறைய மாற்றங்கள் தேவை. கல்வியை வழங்குவது அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும். இப்பொழுது இந்தப் பொறுப்பை அரசு தனியாரிடம் விட்டு விட்டதால் கல்வி வாணிபம் ஆகி விட்டது. ஒரு மாயையை உருவாக்கி மழலையர் கல்வி முதல் பல்கலைக் கழக கல்வி வரை தேவையற்ற கல்வி வழங்கும் நிலை தொடர்கின்றது. படித்து விட்டு வேலையற்று நிற்கும் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்களே இதற்குச் சான்று.

நமது நாட்டின் வேளாண்மை, தொழில்களின் வளர்ச்சிக்குத் துணை செய்யும் தொழிற்கல்வி தேவை. மேலை நாட்டு அறிவியல் தொழில் நுட்பத்தை நாம் அப்படியே பின்பற்ற முடியாது. நமக்கு ஏற்ற தொழில் நுட்பத்தைப் பின்பற்ற வேண்டும்.

இப்பொழுது சில மிகப் பெரிய தொழில்கள், பெரிய சாலைகள், மின் உற்பத்தி போன்ற திட்டங்களை விளைநிலங்களில் கொண்டு வர முயல்கின்றனர். பொருளாதார முன்னேற்றத்தின் பெயரால் கொண்டு வருவதாகக் கூறுகின்றனர். ஆனால் இவை மக்கள் நலனுக்கும், வேளாண்மைக்கும் பாதகமாக இருப்பதால் மக்களின் எதிர்ப்பு தோன்றுகின்றது.

உண்மையான பொருளாதார வளர்ச்சி என்றால் எல்லா மக்களின் வாழ்விலும் வளர்ச்சி இருக்க வேண்டும்.

இன்று எல்லா அதிகாரங்களும் அரசிடம் குவிந்து விடுகின்றன. தேர்தல் நடந்து முடிந்த உடன் ஐந்தாண்டு காலத்திற்கு சட்ட மன்றங்களும், நாடாளுமன்றங்களும், அமைச்சர்களுமே ஆற்றல் மிக்கவர்களாகி விடுகின்றனர். மக்கள் வெறும் பார்வையாளர்கள் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்.

ஆட்சியாளர்கள் வெறும் அதிகாரம் செலுத்துபவர்களாக இல்லாமல், தொலை நோக்கோடு நாட்டின் நலம் காப்பவர்களாக இருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் முயற்சியால் வருவது. மக்களின் விழிப்புணர்ச்சியின் விளைவு அது. சிந்தித்து செயல்படுகின்ற அறிவார்ந்த மக்களால்தான் உண்மையான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.

”வளர்ச்சி என்பது நம் கையில்” என்ற தெளிவினை, நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்போம்; முன்னேற்றம் காண்போம்.

– டாக்டர் மா. பா. குருசாமி