சீனாவிடம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?

0

 

இந்தியா மீண்டும் உலகில் எந்த நாடும் வளராத வேகத்தில் வளர்வதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சி தொடர்ந்தால் ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எளிதாகச் சந்திக்கும் எனவும் ஒரு கட்டுரை வெளிவந்து உள்ளது. மற்றொரு புறம், மோடி வெல்வதற்கு வளர்ச்சி எல்லாம் தேவை இல்லை; இந்துத்துவாவும், சங்பரிவாரும் மெய்யறு அரசியலும் மட்டுமே போதுமானவை எனக் கருதுவோர் உண்டு.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு நாடு விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய இரு வழிகளில் பயணிக்கலாம். ஒரு வழி, மேலான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, விலை உயர்ந்த பொருட்களை (மதிப்பு அதிகம் கூட்டப்பட்டவை) உற்பத்தி செய்வதன் வாயிலாக விரைவான வளர்ச்சியை அடையலாம். இதை ஹை ரோடு (High Road) என்பார்கள். மாறாக, ஆரம்ப கட்டத் தொழில் நுட்பம் கொண்டு அதற்குப் பதிலாக நம்மிடம் பெரும் அளவில் உள்ள தொழிலாளர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் குறைவான அளவில் மதிப்புக் கூட்டல் (Value Addition) கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யலாம். ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாக இதைப் புரிந்து கொள்ளலாம்.

நம் நாட்டில் இருந்து பெரும் அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி ஆகின்றன. திருப்பூர் நகரத்தில் இருந்து மட்டுமே ஆண்டுக்கு ரூ. 25,000 கோடிக்குப் பின்னலாடைகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். குறைவான கூலிக்குக் கிடைக்கும் தொழிலாளர்களைக் கொண்டு சிறிய தொழில் நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி பின்னலாடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறார்கள். இதன் விளைவாக, திருப்பூர் நகரில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களின் மதிப்பு தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது.

இதை யூனிட் வேல்யூ (Unit Value 1) டாலர் என்ற அளவிலேயே தொடர்கிறது. இதையே உயர் தொழில் நுட்பம் கொண்டு தயாரித்தால் யூனிட் வேல்யூ உயரும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் மென்பொருட்களின் சாஃப்ட்வேர் (Software) மதிப்பும் மிகவும் குறைவானதே.

மாறாக, அயர்லாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்யும் மென்பொருள்களின் யூனிட் வேல்யூ மிகவும் கூடுதல். இதே போன்றவைதான் பொறியியல் பொருட்களும். லோ ரோடிலிருந்து(Low Road) ஹை ரோடுக்கு (High Road)மாற உயர் தொழில் நுட்பம் தேவை. உயர் தொழில் நுட்பம் எவ்வாறு உருவாகும்? அடிப்படை ஆராய்ச்சிகள் வாயிலாக மட்டுமே இது சாத்தியமாகும்.

அதனால்தான் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற பொருளாதாரங்கள் உயர் தொழில் நுட்பத்தை உருவாக்கிப் பெரும் செல்வம் ஈட்டுகின்றன. அந்தத் தொழில் நுட்பத்தை வழங்கி சீனா போன்ற நாடுகளில் பொருளை உற்பத்தி செய்து பெரும் லாபம் பார்க்கின்றனர். அமெரிக்கா மைக்ரோ சிப்களை (Micro chip) வடிவமைப்பதும் சீனம் அதைத் தயாரிப்பதும் தொடர்கிறது.

மேற்கு உலக நாடுகளின் தொழில் நுட்பத்தைக் கொண்டு அந்நாடுகளுக்குப் பொருள் உற்பத்தி செய்வதால் ஈட்டும் லாபத்துக்கு ஓர் எல்லை உண்டு. இதை நன்கு உணர்ந்த சீனம் தனது தொழில் நுட்பத் துறையை வளர்த்தெடுக்கப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதை மின்ட் பத்திரிகையில் நாராயண் ராமச்சந்திரன் என்பவர் 05.03.2018 அன்று கட்டுரையாக எழுதி உள்ளார்.

சீனம் தற்போது அறிவியல், பொறியியல், தொழில் நுட்பத் துறையில் பெரும் கவனம் செலுத்துகிறது. தொலைத் தொடர்பு, உயிரியல், விண்வெளி, கணினி, செயற்கை நுண்ணறிவு, நானோ டெக்னாலஜி போன்ற துறைகளில் ஆராய்ச்சியை முடுக்கி விட்டு உள்ளனர்.

சென்ற ஜனவரி மாதம் அமெரிக்காவின் National Science Foundation ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கை சீனத்தின் பொரும் பாய்ச்சலைப் படம் பிடிக்கிறது. 2016 ஆம் ஆண்டு சரித்திரத்திலேயே முதன் முறையாகச் சீனத்தில் இருந்து வெளியான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை, அமெரிக்காவில் இருந்து வெளிவந்த கட்டுரைகளின் எண்ணிக்கையை விஞ்சியது என்கிறது அந்த அறிக்கை. 2016 ஆம் ஆண்டு சீனம் 4,26,000 கட்டுரைகள் வெளியிட்ட போது அமெரிக்கா 4,09,000 கட்டுரைகள் மட்டுமே வெளியிட்டது தெரிகிறது.

இதைச் சாதிக்கப் பெரும் முதலீடுகளையும் சீனம் செய்கிறது. ஆண்டுக்கு ஆண்டு சீனம் அறிவியல் ஆராய்ச்சிக்காகச் செலவிடும் தொகை 279 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இத்தொகை அமெரிக்கா ஆண்டுக்கு ஆண்டு செலவழிப்பதை விட சற்றே குறைவாகும். அறிவியல் ஆராய்ச்சிக்காகச் செலவிடுவதில் சீனா அமெரிக்காவைப் பின்தள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது புலப்படுகிறது.

உவகில் உள்ள எல்லா நாடுகளும் செலவிடும் தொகையில் சீனம் செலவு செய்யும் தொகையின் பங்கு இருபத்தொன்று விழுக்காடாகும். ஆண்டுக்கு பதினெட்டு விழுக்காடு என்ற அளவில் இந்தச் செலவை சீனம் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஆண்டுக்கு 2,00,000 மாணவர்கள் அறிவியல், பொறியியல் துறைகளில் பட்ட மேற்படிப்பை முடிக்கும் வேளையில் சீனத்தில் 2,00,000 மாணவர்கள் படித்து முடிக்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளாகவே, சீனத்தில் அறிவியல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றோர் எண்ணிக்கை அமெரிக்காவை விட அதிகம்.

அது மட்டுமல்லாது அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெறுவோர் மூவரில் ஒருவர் வெளிநாட்டு மாணவர். அவர்களில் பெரும்பாலானோர் சீனத்தவர். (இதில் இந்திய மாணவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்).

சீனத்தில் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் உயர் படிப்புப் படித்த அறிவியல் அறிஞர்களை மீண்டும் தாய் நாட்டுக்கு ஈர்க்கச் சிறப்புத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தி வருகிறது சீனம். ஆனால், வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் இங்கு திரும்புவது இல்லை. ஒன்றிய அரசும் அவர்கள் மீண்டும் ஈர்க்க எந்தத் திட்டமும் போடவில்லை.

இந்த ஆராய்ச்சிப் பாய்ச்சலின் விளைவாகச் சீனத்தில் பிரமிக்கத் தக்க நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. மரபணு ஆய்வில் உலகில் மேற்கொள்ளப்படாத ஆய்வுகள் சீனத்தில் நடந்தேறுகின்றன. நிலவுக்கு யாரும் செல்லாத பகுதிகளுக்குச் செல்ல ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆக, மேற்கு உலக நாடுகளையும் விஞ்சும் தொழில் நுட்பங்களை உருவாக்க சீனம் எடுத்து வரும் முயற்சியின் பயனாக, சீனம் லோ ரோடு என்ற பாதையில் இருந்து ஹை ரோடு வளர்ச்சிப் பாதைக்கு மாறத் தோது செய்து வருகிறது. இனிமேல் அந்நாடு உலகின் தொழிற்சாலையாக மட்டுமே திகழாது; இனி அதனிடம் தொழில் நுட்பமும் இருக்கும்; தொழிற்சாலைகளும் இருக்கும். சீனத்தின் வளர்ச்சியை விஞ்சி நாங்கள் வளர்கிறோம் எனப் பீற்றிக் கொள்ளும் இந்தியாவின் நிலை என்ன?

இந்தியா செலவிடும் தொகை (ஆராய்ச்சிக்கு) ஆண்டுக்கு 36 பில்லியன் டாலர்கள். இந்தியா காணும் கனவுக்கு அது செலவிடும் தொகை மிகவும் சொற்பம். பணம் என்பது ஒரு சிறு சிக்கல். பல்கலைக் கழகங்களும், ஆய்வு நிறுவனங்களும் தனித் தனியாகச் செயல்படுகின்றன. (இது அறிவியல் துறையில் மட்டுமல்ல; சமூகப் பொருளாதார ஆய்வுத் துறையிலும்தான்).

இரண்டும் எந்தத் தொடர்பும் இல்லாமல் தனித் தீவுகளாக இயங்குகின்றன. பல்கலைக் கழகங்களில் ஆய்வுப் பணிகள் மிகவும் சொற்பம். ஆய்வு நிறுவனங்களில் பாடம் நடத்தப்படுவது இல்லை. இதன் விளைவாகப் பல்கலைக் கழகங்கள் வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் ஒரு சந்தைக் கூடமாகச் சீரழிந்துவிட்டன. அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் பல உருவாக்கப்பட்டு உள்ள போதும் அவற்றில் இருந்து செல்லிக் கொள்ளும் படியான ஆய்வுகள் வெளிவரவில்லை. இந்தப் போக்குக்குச் சில ஏவிதிவிலக்குகள் உள்ளன. Tata Institute Fundamental Research, Indian Institute of Science, National Centre for Biological Science போன்ற சில இடங்களில் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அங்கு எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ள முடியும்?

தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். இங்கு ஏழு கோடிப் பேர் இருக்கிறார்கள். 25க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் உள்ளன. நூற்றுக் கணக்கான பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. ஆனால், உலகத் தரத்தில் ஓர் ஆய்வாவது இங்கு நடைபெறுகிறது என்று நம்மால் கூற முடியுமா? இதுவேதான் இந்தியா முழுமைக்குமான நிலை. இதில் பெரும் பேச்சுப் பேசி கனவு காண்பது மட்டும் குறையாமல் நடைபெறுகிறது. இந்தப் போக்கு தொடருமானால் சீனா அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் விஞ்சி வளரும் போது ஹை ரோடு இந்தியா ஒரு மெடியோக்ரி (Mediocre) அறிவியல் தொழில் நுட்பத் துறையைக் கூட வளர்த்தெடுக்க முடியாது.

இதன் தொடர்ச்சியாகப் பொருளாதார வளர்ச்சியின் அடுத்த கட்டமான ஹை ரோடு என்ற பாதை கானல் நீராகி விடும். நாட்டுக்கும் உய்வில்லை; நாட்டு மக்களுக்கு உய்வில்லை. இதை முன்னெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு செலவைக் குறைத்து பெரும் செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக உருவாக்குவதில்தான் முனைப்பாக இருக்கிறது. நீண்டகாலத் திட்டமிடல் என்பதே இல்லாமல் செயல்படுகிறோம் என்பது தான் இன்றைய நிலை.

– பொருளியல் அறிஞர் திரு. ஜெ. ஜெயரஞ்சன்
எழுதிய ‘இந்தியப் பொருளாதார மாற்றங்கள் 2018’ நூலில் இருந்து

தங்கத்தேரின் தங்கத்தில் கலப்படம்!

0

‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’, என்பது வள்ளுவர் வாய்மொழி இது பொய்யாமொழி. இன்று தனி வாழ்விற்கும், குடும்ப வாழ்விற்கும், சமுதாயக் கூட்டுப் பணிகளுக்கும், அரசியல் செயல்பாட்டிற்கும், சமயங்களின் நடவடிக்கைகளுக்கும் பொருள், பணம் ஆதாரமாக இருப்பதைக் காண்கின்றோம்.

ஒவ்வொரு வாழ்க்கை முறைக்கும் ஒரு பொருளாதாரம் இருக்கின்றது. அதற்கு என்று சில நெறிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றுகின்றவரை சிக்கல் இல்லை. வாழ்க்கை சீராக, செம்மையாக நடைபெறும்.

கோவில்களைச் சமயம் சார்ந்தவைகளாகக் கருதுகின்றோம். சமயத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று, கொள்கைச் சமயம். இது தத்துவம் சார்ந்தது. இதன் உயர்நிலை ஆன்மீகம். மற்றொன்று சடங்குச் சமயம். இதற்கு கோவில் வேண்டும்; சடங்குகள் வேண்டும். தனித்தனி வழிப்பாட்டு முறைகளை உருவாக்கி இருப்பார்கள். தனித்தனி அடையாளங்கள் இருக்கும். இது அமைப்பு வழி இயங்கும்.

சடங்குச் சமயம் பொருள் சார்ந்த சமயமாக இருக்கும். இயற்கை வழிபாடாகத் தொடங்கி, கடவுளுக்கும் உருவம் தந்து கோவில் கட்டியது ஊர்கள் தோன்றிய காலத்தில். வேளாண்மை வேரூன்றிய பொழுதுதான். ஆடு மாடுகள் மேய்த்து காடுகளில் சுற்றித் திரிந்த மனிதன் வேளாண்மை செய்த காலம் பொருளாதார வளர்ச்சிக் காலம். தனக்கு வீடு கட்டிக் கொண்டது போலவே, கோவிலும் கட்டினான். கோவிலைச் சுற்றி சமயம் வளர்ந்தது.

ஆதி மனிதன் தான் கண்டு அஞ்சியவற்றை, அடக்க முடியாதவற்றை வழிபடத் தொடங்கினான் அப்படி அவன் முதலில் வழிபட்டது நெருப்பாக இருக்கலாம். கதிரவன், மழை என வழிபாடு விரிவடைந்தது. பின்னர் அறிவும், கற்பனையும் வளர இறைவன் என்று உருவம் கொடுத்தான்; கதைகள், காவியங்கள் புனைந்தான்.

கோவில் வரலாறு மிகவும் நீண்டது; நெடியது. தொடக்க காலத்தில் ஊர்களில் சிறிய, சிறிய கோவில்களைக் கட்டி வழிபட்ட காலத்தில் பொருளுக்கு இருந்த இடம் குறைவு.

பொங்கல் வைப்பார்கள்; தேங்காய் பழங்கள் படைத்து வழிபடுவார்கள். படைத்தவற்றை எல்லாம் பகிர்ந்து உண்பார்கள். திருவிழாக்கள் என்றால் ஒவ்வொரு குடும்பமும் தங்களது வளத்திற்கேற்ப பொருள் தருவார்கள். ஊர் கூடி விழா எடுப்பார்கள். இன்னும் கிராமங்களில் இந்த நிலை தொடர்வதைக் காணலாம்.

மன்னர்கள் மிகப் பெரிய கோவில்களைக் கட்டிய பிறகு கோவிலுக்கு என்று அணிகலன்களும், சொத்துகளும், நிலங்களும் வழங்கப் பெற்றன. அவற்றை நிர்வகிக்க அறங்காவலர்கள் தோன்றினார்கள். கோவில்களுக்கு என்று சொத்துகளும் வருவாயும் சேர்ந்தன.

பெரிய கோவில்களில் திட்டமிட்டு வழிப்பாட்டு முறைகளை வகுத்தனர்; பெரிய விழாக்களை நடத்தினர். எல்லாவற்றிலும் பொருளாதாரக் கண்ணோட்டம் வந்தது. கோவில்களின் புகழுக்கு ஏற்ப அதன் பொருளாதாரக் கட்டுக்கோப்பும் உயர்ந்தது.

இன்று, பல பெரிய கோவில்களின் சொத்துகளையும் வருவாயையும் மதிப்பிடக் கூட முடியாது. எடுத்துக் காட்டாக திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு பெரிய கோவிலின் விலை மதிப்பற்ற பொருட்கள் இருக்கும் சில அறைகளை இன்னும் திறக்கக்கூட முடியவில்லை. கோவிலில் உள்ள சிலைகளின் மதிப்பைக் கணிக்க முடியாது.

கோவிலின் வருவாய் பல வழிகளில் ஓடி வரும் ஆற்று நீர் போல வற்றாது வந்து கொண்டு இருக்கின்றது. சான்றுக்கு இரண்டு கோவில்களைக் குறிப்பிடலாம்.

ஒன்று திருப்பதி வேங்கடாசலபதி கோவில். இந்தக் கோவிலில் வரிசையில் நின்று காணிக்கை போடுவதைக் காணலாம். இது பணக்கார சாமி. லட்டு வியாபாரம் மட்டும் கோடியைத் தாண்டும். இதனைச் சுற்றி வளரும் வாணிபம் விண்ணைத் தொடும்.

மற்றோன்று ஐயப்ப சாமி கோவில். இது கேரளாவில் இருந்தாலும், பெரிதும் தமிழக பக்தர்களைக் கொண்ட கோவில். இதன் வருவாய்க்கும் அளவு இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் காட்டில் வாழ்ந்த மலை மக்களின் ஐயனார் வழிபாடாகத்

தொடங்கியது, ஐயப்பன் கோவிலாக அதனை வளர்த்து எடுத்தனர்.
அந்தக் கோவிலை பந்தளம் அரச குடும்பம் சொந்தம் கொண்டாடியது. பின்பு திருவனந்தபுரம் அரசின் கட்டுபாட்டிற்குள் வந்து, பின்னர் திருவாங்கூர் தேவஸ்வம் அமைப்பின் கீழ் வந்தது. அதன் வருவாய் கூடக் கூட, வழிபாட்டு முறைகளும், கட்டுப்பாடுகளும் கூடி இருக்கின்றன.

வருவாய்ப் பெருக்கத்திற்கும், பக்தர்களின் தேவைக்கும் ஏற்ப கோவில் கட்டமைப்பு விரிவடைந்து இருக்கின்றது. முதலில் கோவிலுக்கு அடித்தட்டு மக்கள் மிகுதியாக வந்தனர். காலப் போக்கில் நடுத்தர மக்கள், மேல்மட்ட மக்களின் எண்ணிக்கை சென்ற நூற்றாண்டின் இறுதியில் இலட்சத்தைத் தாண்டியது.

கோவில் அமைந்து இருக்கும் மலைகள் சூழ்ந்த இயற்கை வளம் நிறைந்த சுற்றுச் சூழல் மனிதர்களை ஈர்க்கிறது.. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் இதயப் பகுதி போன்ற இடத்தில் அமைந்து இருக்கின்றது. இந்தப் பகுதியில் புலிகள் சரணாலயம் உள்ள பெரியாறு பகுதியும் உள்ளது.

திருவனந்தபுரம் தேவஸ்தான அமைப்பு சபரிமலை வளர்ச்சித் திட்டத்திற்காக மலைப் பகுதியில் நிறைய நிலத்தை ஒதுக்கி உள்ளது. இதில் வனவிலங்குகள் பாதுகாப்பு, காடுகள் – இயற்கைச் சூழல் பாதுகாப்பு பற்றிக் கவலைப் படாமல், ஐயப்ப சாமி கோவில் நகர் வளர்ச்சித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. மிகப் பெரிய தங்கும் விடுதிகளும், வணிக நிலையங்களும் கட்ட தனியாருக்கு கணிசமான நிலத்தை ஒதுக்கித் தருகின்றது.

கோவில் இடமான சபரி மலை சுற்றுலாத் தலமாகவும், வணிகத் தலமாகவும் மாறி வருவது குறிப்பிடத் தக்கது. கோவில் பொருளாதாரம் வாணிபப் பொருளாதாரமாக மாறுகின்றது..

கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு உதவும் வகையில் முறையான வாணிபம் நடைபெறுவதில் தவறு இல்லை. ஆனால் உழைக்காமல் வருவாய் பெறும் நோக்கில், கோவில் அறங்காவலர்களோ, பணியாளர்களோ முறையற்ற நோக்கில் வருவாய் பெற கோவிலைப் பயன்படுத்துகின்ற பொழுதுதான் சிக்கல் வருகின்றது.

எடுத்துக் காட்டாக ஒன்றைக் கூறலாம். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல பெரிய கோவில்களில் தங்கத் தேர் செய்தார்கள். அதற்காகத் தனியே நன்கொடை பெற்றார்கள். கோவிலில் சேர்த்து வைத்து இருந்த பணத்தை, தங்கத்தைப் பயன்படுத்தினார்கள்.

இதில் சில இடங்களில் தங்கத் தேரில் உள்ள தங்கத்தில் கலப்படம் செய்து விட்டதாகவும், முறைப்படி கணக்கு வைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.

சில கோவில்களில் கையிருப்பு நகைகளில் மோசடி நடத்தி இருப்பதாகவும், சரியான கையிருப்புப் பார்க்கப்படவில்லை என்றும் செய்திகள் உள்ளன.

சிலைகள் திருட்டு தொடர்ந்து நடந்து இருப்பது வெளிப்படை. தனிக் காவல்படை செயல்படுகின்றது. கோவிலுக்குத் திருப்பணி என்றோ, கோவில் கட்டவென்றோ நன்கொடை கேட்டால் நமது மக்கள் தாராளமாக, ஏராளமாகத் தருவார்கள். அப்படி வசூலிக்கும் பணத்தை எந்த அளவிற்கு, எதற்கு வசூலித்தார்களோ அதற்கே செலவிடுகின்றார்களா என்பது பெரிய கேள்வி.

ஒரு கதை சொல்வார்கள். மூன்று பேர் சேர்ந்து ஊரில் ஒரு கோவில் கட்ட பணம் வசூலித்தார்களாம். அவர்கள் எதிர்பாத்ததைவிட பலமடங்கு பணம் வசூலானதாம். அவர்களுக்கு பணத்தை அப்படியே கோவில் கட்டச் செலவிட மனம் இல்லை.

ஒருவன், ‘இவ்வளவு பாடுபட்டுப் பணம் சேர்த்து இருக்கின்றோம். இதில் நமக்கு ஒரு பங்கு எடுத்துக் கொள்ளலாம்’, என்றானாம். மற்றவர்களும் ஏற்றுக் கொண்டராகள்.
‘எப்படி?’ என்ற கேள்வி பிறந்தது அடுத்தவன் சொன்னானாம், ‘ஒரு கோடு போடுவோம். பணத்தைத் தூக்கிப் போடுவோம். கோட்டுக்கு அந்தப் பக்கம் விழுவது சாமிக்கு; இந்தப் பக்கம் விழுவது நமக்கு’, என்றானாம்.

அடுத்தவனோ, ‘கோட்டுக்கு அந்த பக்கம் நிறைய விழுந்தால் என்ன செய்வது? ஒரு சிறிய வட்டம் போடுவோம். பணத்தைத் தூக்கிப் போடுவோம். வட்டத்திற்குள் விழுவது சாமிக்கு; வெளியில் விழுவது நமக்கு’, என்றானாம்.

அதற்கும் உடன் படாத முதலாமவன், ‘பணத்தைத் தூக்கிப் போடுவோம்; மேலே போவது இறைவனுக்கு; தரையில் விழுவது நமக்கு’, என்றானாம்.
இப்படித்தான் இன்றைய நிலை போய்க் கொண்டு இருக்கின்றது.

கோவில்களும், சொத்துகளும், வருவாய்களும் சமுதாய உடமைகள். கோவில் பொருளாதாரம் அன்பையும், அறனையும் அடிப்படையாகக் கொண்ட சமத்துவப் பொருளாதாரமாக இருக்க வேண்டும்.

– டாக்டர் மா. பா. குருசாமி

விற்பனை வாய்ப்பு !

0

 

பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ள நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்ற மாற்று சிந்தனை தற்போது ஏற்பட்டு உள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி துணிப்பை, சணல் பை, வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டைப் பொருட்கள், அலுமினியம் பூசப்பட்ட காகிதம், காகித உருளைகள், தாமரை இலைகள், கண்ணாடி தம்ளர்கள், மூங்கில் மரத்தாலான பொருட்கள், காகித உறிஞ்சு குழாய்கள், காகிதப் பைகள் போன்றவற்றின் விற்பனையில் ஈடுபடலாம்.

உலர்ந்த மந்தாரை இலைகளை பூந்துடைப்பம் கட்ட பயன்படுத்தும் புல்குச்சிகள் கொண்டு தைத்து விற்பனை செய்யலாம்.

இதற்கு பெண் தொழிலாளர்களை பீஸ் ரேட்டில் பயன்படுத்தலாம்.

– ஆர்.அருண்குமார்

காம்போசிஷன் வரிப் படிவங்கள்

0

 

சிறு வணிகர்களுக்கு பயனிக்கும் வகையில் காம்போசிஷன் முறையில் வரி செலுத்தும் முறை ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 10 படி நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறையில் வரி செலுத்துவதை தொகுப்பு வரி, இணக்க வரி, கலவை திட்டத்தில் வரி செலுத்துதல் என்றும் கூறுவார்கள். முந்தைய நிதி ஆண்டில் ஒரு கோடிக்கு குறைவாக வருமானம் (வருமான உச்ச வரம்பு 1.50 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது – அறிவிப்பு விரைவில் வர உள்ளது) உள்ள வணிகர் இத்திட்டத்தில் வரி செலுத்தலாம்.

இந்தியாவில் உள்ள அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிஜோராம், சிக்கிம், நாகலாந்து திருபுரா, ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள வணிகர்களுக்கு இந்த உச்ச வரம்பு 13/10/2017 ரூ. 50 லட்சமாக இருந்து பின்பு ரூ. 75 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

காம்பொசிஷன் முறையில் வரி செலுத்த விரும்பும் நபர் நிரந்தர கணக்கு எண் (Pan) கொண்ட அவருடைய எல்லா நிறுவனங்களுக்கும் இதே முறையில்தான் வரி செலுத்த வேண்டும். இது வெவ்வேறு மாநிலத்தில் (அ) வெவ்வேறு வணிகம் புரிந்தாலும் பொருந்தும்.

வரி விகிதம்

இத்திட்டத்தில் செலுத்த வேண்டிய வரி விகிதம் கீழ் வருமாறு –

அ) பொருள் தயாரிப்பவர்கள் (Manufacturers) செலுத்த வேண்டிய வரி 0.05% சிஜிஎஸ்டி + 0.50% எஸ்ஜிஎஸ்டி (மொத்தம் 1%) 01-01-2018 முன்பு இந்த வரி 1% + 1% (மொத்தம் 2%) ஆக இருந்தது. இந்த வரி ஐஸ் கிரீம், பான் மசாலா, புகையிலை போன்ற அரசால் அறிவிக்கப்பட்ட பொருள்களுக்கு பொருந்தாது.

ஆ) உணவக சேவை புரியும் வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி 2.5% சிஜிஎஸ்டி + 2.5% எஸ்ஜிஎஸ்டி (மொத்தம் 5%)

இ) வர்த்தகர்கள் 0.50% சிஜிஎஸ்டி + 0.50% எஸ்ஜிஎஸ்டி (மொத்தம் 1%) வரி செலுத்த வேண்டும். 31-12-2017 முன்பு மொத்த விற்பனை மீது 1% வரி விதிக்கப் பட்டு வந்தது (வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருள்கள் உட்பட).

இந்த முறையில் வரி செலுத்துபவர், தான் வெளியே சப்ளை செய்யும் பொருள் மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கக் கூடாது. அதே போல் உள்வரும் அனைத்து பொருள் மற்றும் சேவைகள் மீது உள்ளீட்டு வரி வரவு பெற முடியாது. காம்போசிஷன் முறையில் வரி செலுத்துபவர் அவர் வழங்கும் விற்பனை பட்டியல், பெயர்ப் பலகை, வணிக இடம் ஆகிய அனைத்திலும் அதை குறிப்பிட வேண்டும்.

வரிப் படிவங்கள்

காம்பொசிஷன் முறையில் வரி செலுத்தும் வணிகர் ஒவ்வொரு மாதமும் வரிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காலாண்டுக்கு ஒரு முறை தாக்கல் செய்தால் போதும். அவை பற்றிய விவரம் பின் வருமாறு,

படிவம் ஜிஎஸ்டிஆர் – 4ஏ

பொருள் வழங்கல் செய்யும் வணிகர் தாக்கல் செய்யும் ஜிஎஸ்டிஆர் – 1 படிவம் அடிப்படையில் காம்போசிஷன் திட்டத்தில் வரி செலுத்தும் வணிகருக்கு கிடைக்கப் பெற்ற உள்வரும் பொருள்களின் விவரம் தானாக இந்த படிவத்தில் கிடைக்கப் பெறும்.

படிவம் ஜிஎஸ்டிஆர் – 4

படிவம் ஜிஎஸ்டிஆர் – 4ஏ இல் இருந்து வெளி செல்லும் அனைத்து பொருள்கள் உட்பட தானாக நிரப்பப்பட்ட விவரங்கள் மற்றும் செலுத்த வேண்டிய வரி குறித்த விவரங்கள், 4ஏ இல் மேற் கொள்ளப்பட்ட சேர்க்கைகள், நீக்கங்கள் (அ) மாறுதல்கள் குறித்த விவரங்கள் படிவம் ஜிஎஸ்டிஆர் 4 இல் காலாண்டுக்கு ஒரு முறை வழங்க வேண்டும். காலாண்டு முடிவில் அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

படிவம் ஜிஎஸ்டிஆர் – 9ஏ

வரி செலுத்திய விவரங்களுடன் காலாண்டு தாக்கல்களின் தொகுப்பு விவரத்தை இந்தப் படிவத்தில் ஒரு முழு நிதி ஆண்டுக்கு வழங்க வேண்டும். இதற்கான காலக்கெடு அடுத்த நிதி ஆண்டின் டிசம்பர் 31. இந்த நிதி ஆண்டுக்கு இது 31-03-2018 வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

சில நிபந்தனைகள்

கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு காம்போசிஷன் முறையில் வரி செலுத்த வேண்டும்.

சேவை வழங்குபவர்களுக்கு பொருந்தாது, உணவக சேவை வழங்குபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மின்னணு வணிகர்கள் (இ – காமர்ஸ் ஆப்பரேட்டர்) மூலம் வணிகம் புரிபவராக இருக்க வேண்டும்.

வெளி மாநிலத்தில் வரி உள்ள வெளி வழங்கல் செய்யக் கூடாது. வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்பவராக இருக்க கூடாது. உள் வழங்கலில் பெறப்பட்ட பொருள் மற்றும் சேவைகளுக்கு பிரிவு 9(3)/9(4) படி, எதிரிடைக் கட்டணம் (RCM) செலுத்தி இருக்க வேண்டும்.

01-07-2017 அன்று இருப்பில் உள்ள பொருள்கள் வெளி மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்டதாகவோ, பதிவு பெறாத வணிகர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதாகவோ இருக்கக் கூடாது.

காம்போசிஷன் முறையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

காம்போசிஷன் முறையில் வரி செலுத்தாத ஒருவர், காம்போசிஷன் முறையில் வரி செலுத்த விரும்பினால், அடுத்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் மட்டுமே அதை தேர்வு செய்ய முடியும். அதற்கான விண்ணப்பத்தை முந்தைய நிதி ஆண்டின் மார்ச் 31 ஆம் நாளுக்கு முன்னரே தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த ஆண்டில் அதற்கான வரிப் படிவத்தை சரியாக வழங்க முடியும்.

காம்போசிஷன் முறையில் வரி செலுத்துபவர் சாதாரண முறையில் வரி செலுத்துபவராக ஒரு நிதி ஆண்டின் நடுவில் மாற முடியும். ஆனால் மீண்டும் அவர் அதே நிதி ஆண்டில் காம்பொசிஷன் முறையில் செலுத்துபவராக மாற முடியாது.

காம்போசிஷன் முறையில் வரி செலுத்துபவர் சாதாரண முறையில் வரி செலுத்துபவராக மாறும் போது காம்போசிஷன் முறையில் வரி செலுத்தாமல், சாதாரண முறையிலேயே வரி செலுத்தலாம். அவ்வாறு மாறும் நாளின் முந்தைய நாளில் அவரிடம் உள்ள இருப்பு பொருள் மீதான உள்ளீட்டு வரியை அவர் செலுத்த வேண்டிய வரியில் நேர் செய்து கொள்ளலாம்.

காம்போசிஷன் முறையில் வரி செலுத்துபவர்களுக்கான படிவங்கள்
படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-01: காம்போசிஷன் திட்டத்தில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம்.

படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-02: காம்போசிஷன் முறையில் வரி செலுத்த விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பம்.

படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-03: பதிவு பெறாத வணிகர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருள்களின் விவரம்.

படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-04: காம்போசிஷன் முறையில் வரி செலுத்துவதில் இருந்து விலகுவதற்காக தெரிவிக்கும் விண்ணப்பம்.

படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-05: ஜிஎஸ்டி சட்டத்தில் ஏதேனும் பிரிவு (அ) விதியை மீறும் போது அனுப்பப்படும் அறிக்கை.

படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-06: அறிக்கை ஜிஎஸ்டி சிஎம்பி – 05 படி வழங்கப் படும் அறிக்கைக்கான பதில்.

படிவம் ஜிஎஸ்டி சிஎம்பி-07: அறிக்கையின் மீதான ஆணை.

01-04-2019 முதல் என்ன மாற்றம்?

ஜனவரி 10, 2019 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 01-04-2019 முதல் கீழ்கண்ட மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

காம்போசிஷன் முறையில் வரி செலுத்துபவர்களின் வருமான உச்ச வரம்பு ரூபாய் ஒரு கோடியில் இருந்து ரூ. 1.50 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும். ஆனால் வரிப் படிவம் ஆண்டுக்கு ஒரு முறை தாக்கல் செய்தால் போதும். இது பொருள் மற்றும் சேவை புரிவோர் ஆகிய இருவருக்கும் பொருந்தும்.

காம்போசிஷன் முறையில் வரி செலுத்தும் திட்டம், சேவை புரிபவர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டு உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் ரூ. 50,000 வரை வருமானம் உடைய சேவைகள் மட்டும் புரிபவர் மற்றும் சேவையோடு மிக்ஸ்டு சப்ளையும் (Mixed Supply) இணைந்து செய்பவர்களுக்கு இந்த புதிய திட்டம் பொருந்தும். இதற்கான

வரி விகிதம் 6% (3% சிஜிஎஸ்டி + 3% எஸ்ஜிஎஸ்டி).

மேற்கண்ட மாற்றங்கள் சிறு பொருள் விற்பனையாளர்களுக்கு சேவையாகவும், தொழில் புரிபவர்களுக்கும் பயன் உள்ளதாகவும் இருக்கும்.

– சு. செந்தமிழ்ச் செல்வன்

நிறுவனங்கள் வரி விலக்கு பெற ஒரு அருமையான திட்டம்!

0

ஒரு தனி மனிதர் ரூ.1,50,000 வரை வீட்டுக் கடன் வட்டி, காப்பீட்டுத்
தொகை, அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதன்
மூலம் வருமான வரியிலிருந்து விலக்கு பெற முடியும். ஆனால்,
நிறுவனங்கள் இப்படி விலக்கு பெற வேண்டுமென்றால் வித்தியாசமானதொரு
திட்டம் ஒன்று இருக்கிறது. விவரம் அறிய : 8072167846

மொபைல் கடைகளை வளர்ப்பது எப்படி?

0

வணிகர்களின் மகன்களுக்கு வணிகம் செய்யும் இயல்பு தங்கள் தந்தைகளிடம் இருந்து இயல்பாகவே கிடைத்து விடுகிறது. அண்ணாமலை செல் சிட்டி என்ற மொபைல் ஃபோன் கடையை பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வரும் திரு. காசிராஜன், தன் மகன் திரு. பவித்ரனையும் தன்னுடைய தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தன் தந்தையுடன் வணிகத்தை கவனித்து வரும் திரு. பவித்ரன், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வரும் மொபைல் ஃபோன் கடைகள் மற்றும் மொபைல்களின் விற்பனை பற்றி திரு. பவித்ரன் கூறும்போது,

”தொடர்ந்து மொபைல் ஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு வீட்டில் அப்பா மற்றும் அம்மா மட்டும்தான் மொபைல் ஃபோன் வைத்து இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு வீட்டில் இருக்கும் அனைவரும் ஆளுக்கு ஒரு மொபைல் ஃபோன் வைத்து இருக்கிறார்கள். சில வீடுகளில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட தனி மொபைல் ஃபோனில் விளையாடிக் கொண்டு இருக்கிறது.

இனி வரும் காலங்களில் இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஒருவர் இரண்டு மொபைல் ஃபோன்கள் வாங்கிப் பயன்படுத்தும் சூழல் உருவாகி வருகிறது. இதனால் மொபைல் ஃபோன்களின் விற்பனை நிச்சயம் அதிகரித்துக் கொண்டுதான் செல்லும்.

இன்றைய சந்தை நிலவரத்தின்படி பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்பும் மொபைல் எம்ஐ (MI) பிராண்ட் மொபைல்கள்தான். எனது கடைகளிள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எம்ஐ பிராண்ட் மொபைல்கள்தான் அதிக அளவில் விற்பனை ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதற்கு முதன்மையான காரணம் அந்த செல்பேசி தரும் கூடுதல் வசதிகளும், குறைந்த விலையும் ஆகும். இவர்கள் தரும் வசதிகளைத் தரும் மற்ற பிராண்ட் மொபைல்களின் விலை அதிகம்.

எம்ஐ கம்பெனியின் முக்கிய தொழில் கோட்பாடு, மற்ற பெரிய நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களை காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது. அது ‘குறைந்த விலை, அதிக விற்பனை, அதிக வருமானம்’. இதனை அந்த நிறுவனத்தின் நிறுவனர் திரு. லெய்ஜுன் (LeiJun) பல நிகழ்வுகளிள் குறிப்பிட்டு இருகின்றார்.

என்னைப் போன்றவர்களுக்கு மொபைல்கள் விற்பனை செய்யும் எவரும் போட்டியாளர்கள்தான் அதே நேரத்தில் ஆன்லைன் இ-காமர்ஸ் (e-commerce) வலைத் தளங்களும் போட்டிதான். இணைய வழி விற்பனை அறிமுகம் ஆன புதிதில் எங்களைப் போன்றவர்களுக்கு அதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஏன் என்றால், நான்கு ஆண்டுகளுக்கு முன் வரை ஆன்லைன் மற்றும் கடைகளில் விற்கப்படும் மொபைல்களின் இடையே விலை வேறுபாடு அதிகமாக இருந்தது.

இதனால் வாடிக்கையாளர்களில் பலர் ஆன்லைனில் வாங்கினார்கள். கடைகள் வைத்திருந்த பலருக்கும் விற்பனை பெருமளவில் குறைந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. மொபைல்களின் விலையில் ஆன்லைனுக்கும், கடைகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் இணையம் வழி என்ன விலைக்கு கிடைக்கிறதோ, அதே விலைக்கு கடைகளிலும் வாங்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. சிலர் இன்னும் ஆன்லைனில் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இணையம் வழியாக மொபைல்களின் மாடல்கள், விலை போன்றவற்றைத் தேடி அறிந்து கொண்டு, வாங்குவதற்கு கடைக்குத்தான் வருகிறார்கள். கடைகளில் மொபைல்களை நேரில் பார்த்து, கையால் தொட்டு அறிந்து வாங்க முடிகிறது. அதாவது இதை ஆங்கிலத்தில் Touch and Feel என்று சொல்வார்கள். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இப்படி வாங்கவே விரும்புகிறார்கள். இணையம் வழி வாங்க வேண்டும் என்றால் அந்த அளவுக்கு விலை மலிவாக இருந்தால்தான் அங்கே போவார்கள். கடையிலும், இணையத்திலும் ஒரே விலை என்றால் கடைக்குத்தான் வருவார்கள். நாற்பது சதவீதம் வாடிக்கையாளர்கள் இணையம் வழி வாங்கினால் அறுபது சதவீதம் வாடிக்கையாளர்கள் கடைகளில்தான் மொபைல்களை வாங்குகிறார்கள்.

மொபைல்களைப் பொறுத்த வரை அவற்றின் உதிரி உறுப்புகளுக்கு முதன்மையான பங்கு இருக்கிறது. சான்றுக்கு ஒரு மொபைலின் ‘மைக்’ என்ற உறுப்பை ஐயாயிரம் ரூபாய்க்கு தர ஆட்கள் இருக்கிறார்கள். ஐந்து ரூபாய்க்கு தரவும் ஆட்கள் இருக்கிறார்கள். ஆக மொபைல்களின் விலையை நிர்ணயிப்பதில் அதன் ஊதிரிபாகங்களே பெரும் பங்கு வகிக்கின்றன.

இதனால்தான் ஒரு நிறுவனம் வழங்கும் 25000 ரூபாய் விலை உள்ள ஒரு மொபைலை வேறு ஒரு நிறுவனத்தால் அதே ஸ்பெசிஃபிகேஷன்ஸ் உடன் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வழங்க முடிகின்றது.

இப்போது வரும் பெரும்பாலான மொபைல்கள் ‘யூஸ் அண்ட் த்ரோ’ என்று சொல்லப்படும் வகை மொபைல்களே. தற்போது ஒருவர் நினைத்தாலும் அவரால் ஒரு மொபைலை அதிக அளவாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியாது. ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் அவ்வப்போது வரும் அப்டேட்கள் அந்த செல்பேசிகளின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே இருக்கும். இதன் மூலம் ஒரு மொபைலை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு விடுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் பழுது ஆனால் பழுது நீக்கி திரும்ப பயன்படுத்த நினைத்தாலும், அது அவர்களுக்கு எமாற்றத்தையே தரும்.

ஜிஎஸ்டி (GST) அனைத்து மொபைல்களுக்கும் பன்னிரண்டு சதவீதம் அரசால் வசூலிக்கப்படுகின்றது. ஆனால் துணைக் கருவிகள் மற்றும் உதிரி பாகங்களுக்கான வரி வேறுபடுகிறது.

ஜிஎஸ்டி வந்ததற்கு பிறகு எங்களைப் போல் வணிகம் செய்பவர்களுக்கு சிக்கல் என்பதை விட, தேவையற்ற பணிச் சுமைகள் அதிகரித்து விட்டன. சினிமா நகைச்சுவை காட்சியில் வரும் வசனத்தில் தம்பி ராமையாவிடம் ஒரு ஜோதிடர் கூறுவது போலத்தான். ‘அதுவே பழகிடும்’ என்பது போல் இப்போது ஜிஎஸ்டி ஆகி விட்டது.

நான் என் அப்பாவுடன் இணைந்து வணிகம் செய்யக் கிடைத்த வாய்ப்பு காரணமாக அதிக அளவில் பயனடைந்து வருகிறேன். முதல் முதலாக அவர் வழியாகதான் வணிக உலகத்தைப் பார்த்தேன். அவர் எனக்கு எப்போதும் வணிகம் சார்ந்த அத்தனை செய்திகளையும் பொறுமையாக எடுத்துக் கூறுவார். வணிகம் தொடர்பாக மும்பை, டெல்லி எந்த நகரத்துக்கு சென்றாலும் என்னையும் உடன் அழைத்துச் சென்று அங்கு உள்ள வணிகர்களின் அறிமுகத்தை ஏற்படுத்தித் தருவார்.

தொழிலில் ஒரு சிக்கல் என்றால், அதற்கு, அந்த சிக்கல் அப்படித்தான் இருக்கும். அதனை நீயே எதிர்கொண்டு அதற்கான தீர்வைக் கண்டுபிடித்து செயல்படுத்துமாறு ஊக்கப்படுத்துவார். ஏதேனும் தவறாக் செயல்பட்டு விட்டால் அதற்காக கடிந்து கொள்ள மாட்டார். அதனை எப்படி எதிர் கொண்டிருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பார். தங்கள் பிள்ளைகள் தொழிலில் வளர்க்க வேண்டும் என்று எண்ணும் அப்பாக்களுக்கு என்னுடைய அப்பா ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். நான் அவர் நிழலில்தான் செயல்படுகின்றேன். அப்படி செயல்படுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மொபைல் ஃபோன்கள் உற்பத்தியில் தற்போது உலகில் முதல் இடத்தில் இருப்பது சீனாதான். அதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் அரசாங்கம் என்று கூறலாம். எப்படி என்று சொன்னால் அரசாங்கம் அங்கு இருக்கும் தொழில் முனைவோருக்கு நிறைய ஊக்கம் அளித்து, தொழிலில் வெற்றி பெறுவதற்கான எல்லா உதவிகளையும் செய்கின்றது. இது தொழில் செய்ய அங்கு நல்ல சூழல் நிலவுவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. சீன நிறுவனங்கள், ”நாங்கள்தான் இந்த உலகிற்கு புதிய தொழில் நுட்பங்களை அளிப்பவர்களாக இருக்க வேண்டும்” என்று கருதுகின்றன. அதை அவர்கள் கிட்டத்தட்ட உண்மையாக்கியும் வருகிறார்கள்.

இப்போது பொரும்பாலும் மொபைல் விற்பனை எளிதாகி விட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு போல, இப்போது ஒரு வாடிக்கையாளருக்கு ப்ளூடூத் என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்றெல்லாம் சுமார் ஒன்றரை மணி நேரம் விளக்கிக் கூற வேண்டியது இல்லை. வாடிக்கையாளர்களை இப்போது அதிக தொழில் நூட்பச் செய்திகளை தெரிந்து வைத்து இருக்கிறார்கள். இன்றைக்கு கடைக்குள் வரும்போதே சில வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டிய மொபைல் ஃபோனை முடிவு செய்து, அதைப் பற்றி இணையத்தில் நன்கு ஆராய்ந்து பார்த்த பிறகுதான் வருகிறார்கள். கடைக்கு வந்து அவர் விரும்பும் நிறம் மற்றும் மாடல் இருக்கின்றதா என்றுதான் கேட்கின்றனர். அந்த நேரத்தில் அவர்கள் கேட்கும் நிறமுள்ள மொபைல் இருந்தால் உடனடியாக வாங்கி விடுவார்கள். மணிக் கணக்கில் அவர்களிடம் பேசி விற்பனை செய்ய வேண்டிய நிலை மாறி விட்டது.

இருந்தாலும் புதிய தொழில் நுட்பங்களை நாங்களும் அத்துப்படியாக தெரிந்து வைத்திருந்தால்தான் எங்கள் வணிக வளர்ச்சிக்கு நல்லது. சிறிது காலத்துக்கு முன் ஃபேஸ் அன்லாக் (Face unlock) தொழில் நுட்பத்துடன் மொபைல்கள் வந்தன. இவை முகம் பார்த்து மொபைலை அன்லாக் செய்யும். இதைத் தொடர்ந்து ஐரில் அன்லாக், அதாவது கண் கருவிழியை ஸ்கேன் செய்து அன்லாக் செய்யும் தொழில் நுட்பம் அண்மையில் வந்து உள்ளது. இந்த தொழில் நுட்பம் அதிக விலை கொண்ட மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இது மிகவும் புதிய செய்திகளை நாம்தான் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கும்.
விரைவில் குறைந்த விலை மொபைல்களிலும் இந்த வசதி வர இருக்கின்றது. புதிய தொழில் நுட்பங்களை எங்கள் கடையில் பணி புரியும் அனைவருக்கும் கற்றுக் கொடுத்து விடுவேன். வாடிக்கையாளர்களை கையாள பணியாளர்களுக்கான இந்த பயிற்சி மிகவும் தேவை என்று கருதுகிறேன்.

சில பிரபல நிறுவனங்கள் முன்பு போல் இல்லாமல் இப்போது எங்களுக்கான வர்த்தக தள்ளுபடியைக் குறைத்து விட்டன. பாதிப்பு என்றால் இதுதான் எங்களுக்கு ஒரு பாதிப்பாக இருக்கிறது. ஏனெனில் எங்களுக்கான லாப விகிதம் குறைந்து விடுகிறது.
எங்கள் கடையில் மொபைல்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகின்றோமோ, அதே போல் துணைக் கருவிகள் மற்றும் உதிரி பாகங்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றோம். ஒரு வாடிக்கையாளர் ஒரு மாடல் மொபைல் கொண்டு வந்தால் எங்களிடம் அதற்கு ஏற்ற பவுச்கள் குறைந்தது ஐந்து வகைகளாவது இருக்கும். மூன்று வகை டெம்பர்ட் கிளாஸ் (Tempered Glass) ஆவது இருக்கும். இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு பிடித்த மாடல் உதிரிபாகங்களை வழங்க முடிகிறது..

நான் வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன. இன்றும் நான் புதிது புதிதாய் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். கற்றுக் கொள்வதில் எனக்கு உற்சாகம் கிடைக்கிறது. எனது வாடிக்கையாளர்களுடன் எப்போதும் நட்புறவு கொண்டு இருப்பேன். இது எனக்கு கூடுதலாக நண்பர்களையும் பெற்றுத் தந்து இருக்கிறது.

கடந்த பொங்கல் திருநாளன்று செங்குன்றத்தில் புதிதாக எஸ்கேஎல்எஸ் கேலக்சி மால் எதிரில், மூவாயிரம் சதுர அடியில் இந்தப் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய அளவில் இரண்டு தளங்கள் கொண்ட கிளையை திறந்து இருகிறோம். இதில் மொபைல்களுடன் புதிதாக ஸ்மார்ட் டிவிக்களும் சேர்த்து விற்பனை செய்கிறோம். இதற்கும் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது.” என்றார்.

– செ. தினேஷ் பாண்டியன்

பால் கடை நடத்துவது எப்படி?

0

எம். ஜி. மில்க் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் மாட்டுப் பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து பால் நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகிறது. அறுபது ஆண்டுகள் நிறுவனமான இதன் இப்போதைய மேலாளர் திரு. மதன்ராஜ், இன்றைய பால் பண்ணைத் தொழில் மற்றும் பால் விற்பனை குறித்து வளர்தொழிலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

”இப்போது பால் வியாபாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருவர் பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்த, அவர் குறைந்தது பதினைந்து பசு மாடுகள் அல்லது பத்து எருமை மாடுகள் வைத்து இருக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு அந்த தொழில் இலாபரகமாக அமையும்.

நேரடியாக பால் கிடைக்கும் பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்கு பசுவின் பாலையே விரும்பி வாங்குகிறார்கள். உணவகங்கள், தேநீர் விடுதிகளில் எருமைப் பாலை விரும்பி வாங்குகிறார்கள். இப்படி கறந்த பால் கிடைக்காத பகுதிகளில்தான் பாக்கெட் பாலை வாங்குகிறார்கள்.

எங்கள் மையத்தில் கொள்முதல் செய்யும் பசும் பாலையும், எருமைப் பாலையும் எந்த காரணத்திற்காகவும் ஒன்றாக கலந்து விட மாட்டோம். அப்படிக் கலந்தால் அவற்றுக்கு உள்ள சிறப்புத் தன்மை மாறிவிடும்.

நாங்கள் நாள்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளையும் பால் கொள்முதல் செய்கிறோம். பால் விரைவில் கெட்டுப் போகக் கூடிய உணவுப் பொருள் என்பதால், அதனை நாங்கள் கொள்முதல் செய்த உடனேயே பதப்படுத்தி விடுவோம். பால் கறந்து இரண்டு மணி நேரத்திற்குள் அதனை பதப்படுத்தி விட வேண்டும். அப்போதுதான் அதில் நுண்ணுயிரிகள் (பாக்டீரியா) பெருகாமல் இருக்கும். பால் கறந்து நான்கு மணி நேரத்திற்கு பிறகு அந்த பாலில் நுண்ணுயிரிகள் வளரத் தொடங்கி விடும்.

அதனால் தான் பால் கறந்து இரண்டு மணி நேரத்திற்குள் பாலை பதப்படுத்தி விடுகின்றோம். பாக்டீரியாக்கள் பெருகி விட்டால் அந்த பால் இளம் மஞ்சள் நிறமாக மாறி விடும். பாலை பேஸ்சுரைசேஷன் (pasteurization) என்ற முறையைப் பயன்படுத்தி பதப்படுத்துவார்கள். அதன் விளைவாக அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து விடும்.

பேஸ்சுரைசேஷன் செய்யப்படும் போது பாலில் இருக்கும் எல்லா நுண்ணுயிரிகளும் அழிந்து விடாது. அப்படி அழிந்து விட்டால் அது பேஸ்சுரைசேஷன் கிடையாது. பேஸ்சுரைசேஷன் செய்யப்பட்ட பாலில் 90% நுண்ணுயிர்கள் அழிந்து விடும். பேஸ்சுரைசேஷன் முறை இரண்டு வகைகளில் நடைபெறுகின்றது. அவை Low temperature long time (LTLT) செய்முறை மற்றும் High temperature short time (HTST) செய்முறை ஆகும்.

மாட்டுப் பண்ணைகள் வைத்து இருப்பவர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்கின்றோம். பெரும்பாலும் பாலை அவர்களே வந்து மையத்தில் கொடுத்து விடுவார்கள். சில நேரங்களில் பாலை நாங்களே நேரில் சென்று கொள்முதல் செய்ய வேண்டி இருக்கும். பால் கொள்முதல் செய்த பிறகு அவர்களுக்கு பாலில் உள்ள கொழுப்பு அளவின் அடிப்படையிலேயே விலை கொடுக்கிறோம். இதற்கான சோதனையை அல்ட்ராசோனிக் மில்க் அனலைசர் (Ultrasonic Milk Analyser) என்கிற மின்னணு எந்திரம் உதவியுடன் அறிகின்றோம்.
முன்பு எல்லாம் பாலின் கொழுப்புத் தன்மையை அறிய குறைந்தது முப்பது முதல் நாற்பது வினாடிகள் ஆகும். ஆனால் தற்போது ஐந்து வினாடிகளிலேயே இந்த சோதனையை செய்து விடலாம். முன்பு இருந்த லாக்டோஸ்கேன் மில்க் அனலைசரை விட அல்ட்ராசோனிக் மில்க் அனலைசரில் புதிய தானியங்கி தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

பத்து நாட்களுக்கு ஒரு முறை பால் பண்ணையாளர்களின் வங்கிக் கணக்கில் தவறாது அவர் கொடுத்த பாலின் அளவுக்கேற்ப கணக்கிட்டு பணத்தை செலுத்தி விடுவேம். கொழுப்பு என்பது பாலைப் பொறுத்த வரை மிகவும் முக்கியமானது. பாலின் தரத்தை பாலில் உள்ள கொழுப்பின் அளவுதான் நிர்ணயிக்கும். சிலர் பாலில் தண்ணீரைக் கலந்து கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது. இதை பாலில் இருக்கும் கொழுப்புச் சத்தின் அளவு மற்றும் எஸ்என்எஸ் (SNS) என்கிற அளவு முலமாகவே அறிய முடியும். எப்போது பால் கொள்முதல் செய்தாலும் அந்த பாலை உடனடியாக சோதனை செய்து பால் வழங்கியவரின் கணக்கில் பதிவு செய்து விடுவோம்.

பசும் பாலில் நான்கு முதல் ஐந்து சதவிதம் வரை கொழுப்புச் சத்து இருக்கும். எருமைப் பாலில் இது சாதாரணமாக ஏழு சதவீதமாக இருக்கும். எஸ்என்எஸ் என்கிற பாலின் அடர்த்தித் தன்மை பொதுவாக எட்டாக இருக்கும். மாட்டுக்கு போதுமான சத்துள்ள உணவு வழங்கப்படாவிட்டால் அந்த மாடு கறக்கும் பாலில் கொழுப்புத் தன்மை குறைவாக வாய்ப்பு இருக்கிறது.

பாலின் அதிகரித்து வரும் விற்பனையை கணக்கில் கொண்டு வேறு தொழில்களில் இருந்தவர்களும் பால் கொள்முதல் செய்து விற்கும் தொழிலில் இறங்கி உள்ளார்கள். புதிதாய் மாட்டுப் பண்ணைகளும் தொடங்கப்பட்டு வருகின்றன. சில இளைஞர்களும் பகுதி நேர தொழிலாக பால் விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர்.
நாங்கள் எங்கள் மையத்தில் அதிக பட்சமாக 200 லிட்டர் பசு மற்றும் எருமைப் பாலை கொள்முதல் செய்து வருகின்றோம். பசு மாடு பொதுவாக காலை நான்கு லிட்டர் பால் மற்றும் மாலை ஐந்து லிட்டர் பாலை தரும்.

தற்போது ஆர்கானிக் மில்க்(Organic Milk) என்று புதிதாய் பேசப்பட்டு வருகின்றது. ஆர்கானிக் மில்க் என்பது பசு மாடுகளுக்கு வழங்கப்படும் எல்லா விதமான உணவுகளிலும் சிறிது கூட ரசாயன உரம் போடாமல் இயற்கை முறையில் பயிர் செய்து விளைந்த உணவை பசுக்களுக்கு தந்து அந்த பசுக்களில் இருந்து கறக்கப்படும் பாலையே ஆர்கானிக் பால் என்கிறார்கள்.

ஆர்கானிக் பால் இப்போது எல்லா பகுதிகளிளும் கிடைப்பது இல்லை சில பண்ணைகளில் மட்டுமே கிடைக்கிறது. திருவள்ளுரில் சில இளைஞர்கள் ஆர்கானிக் பால் விற்பனை செய்து வருகிறார்கள். ஆர்கானிக் பால் அதிக விலை வைத்து விறபனை செய்யப்படுகிறது. நகரப் பகுதிகளில் உள்ளவர்களிடம் மட்டுமே ஆர்கானிக் பாலுக்கு வரவேற்பு இருக்கிறது. ஒரு லிட்டர் ஆர்கானிக் பாலின் விலை 85 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை உள்ளது.

சென்னைக்கு அருகே செங்குன்றத்தில் உள்ள எங்கள் எம். ஜி. பால் பண்ணையில் தயிர், மோர், வெண்ணை, பசு நெய், பனீர், கோவா, ரோஸ் மில்க், பாதாம் மில்க் போன்றவற்றையும் தயாரித்து மக்களிடம் நேரடியாக விற்பனை செய்து வருகின்றோம்.

எங்களுக்கு ஐயப்பன்தாங்கலிலும் ஒரு விற்பனை நிலையம் உள்ளது. அடுத்த கட்டமாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று பாலை வழங்கும் முயற்சியையும் செய்ய இருக்கிறோம்.” என்றார் திரு. மதன்ராஜ் (90424 01090).

– செ. தினேஷ் பாண்டியன்

மருந்துக் கடை நடத்தி வெற்றி பெறுவது எப்படி?

0

அலோபதி மருந்துக் கடைகளின் வளர்ச்சி பெரிய அளவில் இருக்கிறது. உடல்நலம் சார்ந்த விழிப்புணர்ச்சி அதிகரித்து வருவதாலும், மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் மருந்துகளின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. தனி உரிமையாளர்கள் மருந்துக் கடை நடத்தி வருவதுடன், பெரிய மருத்துவ மனைகள், மருந்து நிறுவனங்களும் தனி உரிமைக் கிளை (ப்ரான்சைஸ்) அடிப்படையில் நாடு முழுவதும் மருந்துக் கடைகளைத் திறந்து வருகின்றன. சென்னைக்கு அருகில் உள்ள செங்குன்றத்தில் ஐம்பத்து ஏழு ஆண்டுகளாக வெங்கடேஸ்வரா மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்துக் கடை நடத்தி வருகிறார், பார்மசிஸ்ட் திரு. சண்முகவடிவேல் சுந்தரம். மருந்துக் கடைகள் தொடர்பாக அவரை பேட்டி கண்டபோது பயனுள்ள பல செய்திகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியவற்றில் இருந்து..,

”முன்பு இருந்ததற்கும், தற்போது இருப்பதற்கும் மருந்துக் கடைகளில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் அதிகம். முன்பு எல்லாம் மருந்துக்கடை நடத்துபவர்கள் சேவை மனப்பான்மையோடு நடத்தினார்கள். ஆனால் தற்போது பல மருந்துக் கடைகள், இது ஒரு சேவை சார்ந்த தொழில் என்ற எண்ணத்தை முற்றிலும் மறந்து லாபத்தை மட்டும் மையமாக கொண்டு இயங்குகின்றன.

ஒருவர் மருந்துக் கடையை புதிதாக தொடங்கி நடத்த வேண்டும் என்றால் அவர் குறைந்தது டி ஃபார்ம் என்கிற இரண்டு ஆண்டு டிப்ளெமா படிப்பை முடித்து இருக்க வேண்டும். படித்து முடித்த பின்னர் கட்டாயமாக 90 நாட்கள் அரசு மருத்துவ மனையில் பணி புரிய வேண்டும். அப்படி பணி புரிந்தால் மட்டுமே அவருக்கு எந்த மருந்து எதற்கு பயன்படுகிறது என்று முழுமையாக தெரிய வரும். இந்த பயிற்சியை பெற்றால்தான், படித்து முடித்ததற்கான சான்றிதழை அரசிடம் இருந்து பெற முடியும். இல்லை என்றால் டி ஃபார்ம் படிப்பு நிறைவடையாது.

அண்மைக் காலமாக ஃபிரான்சைஸ் (தனி உரிமைக் கிளைகள்) மருந்துக் கடைகள் அதிகரித்து வருகின்றன. அவை முழுக்க முழுக்க லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு உள்ளன. இத்தகைய தனி உரிமைக் கிளைகளாக இருக்கும் மருந்துக் கடைகள் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகளை மட்டுமே பெருமளவில் வாங்குகிறார். அந்த மருந்துக் கடையை நடத்துவது அந்த உரிமையாளர்தான் என்றாலும், அவருக்கு பெயர் உரிமை கொடுத்து உள்ள பிராண்டின் பெயரைப் பார்த்து வாடிக்கையாளர்கள் அந்த கடைகளை நாடுகிறார்கள்.

அந்த மருந்துக் கடை பிராண்டுகள் பெரிய அளவில் குறிப்பிட்ட மருந்துகளை வாங்கி அதை தங்கள் பெயர் உரிமைக் கிளைகளுக்கு தள்ளுபடி விளையில் தருகிறார்கள். ஆனாலும் இத்தகைய கிளைகள் அனைத்துமே லாபத்தில் இயங்குவதாகக் கூற முடியாது. சில லாபத்தில் இயங்குகின்றன. சில இழப்புடன் தவித்துக் கொண்டிருக்கின்றன. கடைகள் அமைந்து இருக்கும் இடத்தைப் பொறுத்தே விற்பனை அமைகின்றது.

ஆன்லைனில் மருந்துகள் வாங்குவதற்கு என இப்போது நிறைய ஆப்-கள் மற்றும் வலைத் தளங்கள் இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் அவற்றின் முலம் மருந்துகள் வாங்கும் போது மிகவும் கவனத்துடன் வாங்க வேண்டும். ஏன் என்றால் ஒருவர் மருந்துக் கடைக்கு சென்று மருந்து வாங்குகிறார் என்றால் அந்த மருந்துக் கடையில் கண்டிப்பாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருக்கும். அப்படி குளிர்சாதன வசதி செய்யப்பட்டு உள்ளதால் மருந்துகளின் தன்மை சீரான நிலையில் பரமரிக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் ஒருவர் ஆன்லைனில் மருந்துகளை வாங்குகிறார் என்றால், அந்த மருந்து பேக்கிங் செய்து கூரியரில் வந்து சேர மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும். அந்த நேரத்தில் மருந்தின் வீரியம் மற்றும் தன்மை மாற அதிகம் வாய்ப்பு இருக்கின்றது. இதனால் தான் இப்போது 90% மருந்துக் கடைகள் ஏசி செய்யப்பட்டு இருக்கின்றன.
வாடிக்கையாளர்களால் எல்லா நேரங்களிலும் மருந்துகளை ஆன்லைனில் வாங்க முடியாது ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி என்றால் அதற்குரிய மருந்து அவருக்கு உடனடியாக தேவைப்படும். அப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டு காத்துக் கொண்டு இருக்க முடியாது. அந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் அருகில் இருக்கும் மருந்துக் கடைகளையே நாடுவார்கள். ஆன்லைனைப் பொறுத்தவரை தொடர்ந்து அதிக நாட்கள் உட்கொள்ள வேண்டிய சில மாத்திரை மருந்துகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து பயன்படுத்த முடியும்.

ஆன்லைனில் மருந்து வாங்கும் சில வாடிக்கையாளர்கள் இத்தகைய சிக்கல்களையும் சந்திக்க நேர்கிறது. அண்மையில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகள் – ஒருவர் மருத்துவர் கொடுத்த மருந்து சீட்டை ஆன்லைனில் பதிவு செய்து மருந்துகள் வாங்கி உள்ளார். அப்போது அவருக்கு தவறாக புற்று நோய்கான மருந்து விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது அவருக்கு தெரியாது. பின்னர் சில நாட்கள் கழித்து மருத்துவரை சந்திக்கச் சென்ற போது மருந்துகளை காட்டி இருக்கிறார். அவற்றைப் பார்த்த மருத்துவர், இது நான் எழுதிக் கொடுத்த மருந்து இல்லை எந்த கடையில் மருந்துகள் வாங்கினீர்கள் என்று திகைப்பு அடைந்திருக்கிறார். எனவே வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வாங்குவதை விட நேரில் மருந்துக் கடைகளில் வாங்குவதையே அதிகமாக விரும்புகிறார்கள்.

மற்றொருவர் குறிப்பிட்ட நோய்க்கான ஒரு மாதத்திற்குத் தேவையான மருந்துகளை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு இருபது மாத்திரைகள் மட்டுமே வந்தன. இது போன்ற சில சிக்கல்கள் இருப்பதால்தான் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தெரிந்த மருந்துக் கடைகளில் வாங்குவதையே விரும்புகிறார்கள்.
ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மருந்துக் கடைகளின் பணிச்சுமை கடுமையாக அதிகரித்து விட்டது.. ஏன் என்றால் முன்பாகவே அட்டவணை புத்தகம் மற்றும் பல கணக்கு புத்தகங்களை மருந்துக் கடைகளில் கட்டாயமாக, முறையாக எழுதி வைத்து இருக்க வேண்டும். தற்போது ஜிஎஸ்டி வந்தற்கு பின்பு வேலைகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. எங்களுக்கு மிகவும் சிக்கலாகவும், கூடுதல் செலவை உருவாக்குவதாகவும் இருக்கிறது. ஜிஎஸ்டி வரி கட்டும் நடைமுறைகளை இன்னும் எளிதாக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விகிதம் என்பது மருந்துகளைப் பொறுத்தவறை அவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து வகைப்படுத்தபட்டு உள்ளன.

உயிர்காக்கும் மருந்துகள், புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் சில மருந்துகளுக்கு குறைவாக இருக்கிறது. சில மருந்துகளுக்கு முழு வரிவிலக்கும் இருக்கிறது. மக்களால் அதிகமாக வாங்கப்படும் காய்ச்சல், தலைவலி மருந்துகளுக்கு 5% முதல் 12% வரை வரி வசூலிக்கபட்டு வருகின்றது. சில வைட்டமின் மாத்திரைகள் மற்றும் புரதச்சத்து மாவு போன்ற பொருட்களுக்கு 18% முதல் 28% வரை மிகவும் அதிக அளவில் வரி வசூலிக்கப் படுகிறது.

மருந்துக் கடைகளைப் பொறுத்த வரை பணி ஆட்கள் மிகவும் முக்கியம். சற்று விவரமான ஆட்களாக அவர்கள் இருக்க வேண்டும். குறைந்தது மேல்நிலைக் கல்வியையாவது முடித்து இருக்க வேண்டும். இவர்களால் டி. ஃபார்ம் முடித்த ஒருவரிடம் உதவியாளர்களாகப் பணிபுரிய முடியும் மருத்துவர் தரும் மருந்துச் சீட்டை அவர் படித்துப் புரிந்து கொண்டு, அந்த மருந்தை எடுத்து டி ஃபார்ம் முடித்தவரிடம் வழங்குவார். மருந்தாளுநர் அந்த மருந்துகளை, மருந்துச் சீட்டுடன் ஒப்பிட்டு சரி பார்த்த பின்பே வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். இதுதான் உரிய நடைமுறை என்றாலும் சில மருந்துக் கடைகள் இதை முறையாகப் பின்பற்றுவது இல்லை.
இப்போது ஆயிரக் கணக்கான மருந்து நிறுவனங்கள் புதிது புதிதாய் மருந்துகள் தயாரித்து அறிமுகப்படுத்தி வருகின்றன. முன்பு எல்லாம் இந்தியாவில் வெளிநாட்டு மருந்துகள் குறைந்த அளவிலேயே கிடைதன. ஆனால் தற்போது வெளிநாட்டு மருந்துகள் மிக அதிக அளவில் எளிதாக கிடைக்கின்றன. பல மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதால் அவை அதக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதை எல்லாம் அரசு கண்காணித்து கட்டுப்படுத்தினால்தான் இந்த மருந்துகள் மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கும்.

மருந்து மொத்த விற்பனை நிறுவனங்கள் சில்லரை மருந்துக் கடைகளுக்கு பெரிதும் உதவியாய் இருக்கின்றன. சான்றாக, கடைகளில் குறிப்பிட்ட மருந்து இல்லை, விரைவில் தேவைப்படுகின்றது என்று கேட்டால் அதிக பட்சமாக ஆறு மணி நேரத்திற்குள் அந்த மருந்தை கடைகளில் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு விநியோகஸ்தர் என்ற அளவில் இருப்பார்கள். அவர்கள் முலமாகவே மருந்துகள் மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அந்த அந்த பகுதிகளில் இருக்கும் மருந்துக் கடைகளுக்கு வந்தடைகின்றன. ஒரு கடைக்கு மருந்துகள் விற்பனைக்கு வந்தடைய, அந்த மருந்துகள் முன்று அல்லது நான்கு கைகள் மாறித்தான் இறுதியில் கடைகளுக்கு வந்தடைகின்றன. அத்தனை கைகளுக்கும் லாபம் சென்றடைகிறது. வாடிக்கையாளர் அத்தனை கைகளுக்கும் சேர்த்தே விலை கொடுக்கிறார்.

மருந்துக் கடைகளில் கணினித் தொழில் நுட்பம் சிறப்பாகப் பயன்படுகிறது. எந்ந மருந்து எப்போது காலாவதி ஆகும் என்கிற விவரம், விற்கப்படாமல் இருக்கும் மருந்துகளின் பட்டியல், ஜிஎஸ்டி தொடர்பான தகவல்கள், மருந்துகள் பற்றிய குறிப்புகள், வாடிக்கையாளர் வாங்கிய மருந்து விவரங்கள் மற்றும் அவரின் பழைய ரசீது என்பது போன்ற பல முக்கிய தகவல்களை சேமித்து வைக்க முடிகிறது. ஒரு வாடிக்கையாளரின் பழைய ரசீது முலம் அவர் வாங்கிய மருந்துகளை மீண்டும் அவருக்கு உடனடியாக வழங்க முடியும்.

பெரும்பாலான மருந்துக் கடைகளில் மருந்துகளை வரிசைப்படுத்தி அடுக்கும் போது ஏபிசிடி என அதாவது அகர வரிசைப்படியே மருந்துகளை அடுக்கி வைப்பார்கள். ஏன் என்றால், அப்போதுதான் மருந்துகளை எடுப்பதற்கு எளிதாக இருக்கும். மருந்துகளை நிறுவனங்கள் பெயர் அடிப்படையில் வரிசைப் படுத்தி வைத்தால் அது எடுப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும்.

டிரக் இன்ஸ்பெக்டர்கள் (Drug Inspector) எனப்படும் மருந்து ஆய்வாளர்கள் கண்டிப்பாக எல்லா மருந்துக் கடைகளுக்கும் மாதத்திற்கு ஒரு முறையாவது கடைக்கு நெரில் வந்து எல்லா மருந்துகளும் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்வார். ஒரு குறிப்பிட்ட கடையின் மேல் குற்றச்சாட்டு இருந்தால் அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் சென்று சோதனை செய்வார்கள்.

மருந்து ஆய்வாளர்கள் பொதுவாக எல்லா மருந்துக் கடைகளுக்கும் கூறும் அறிவுரை, மருந்துக் கடைகளில் கண்டிப்பாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும். சில மருந்துகள் போதைத் தன்மையை எற்படுத்தும். அது போன்ற மாத்திரைகள் மற்றும் மருந்துகளை மருத்துவர் குறிப்புச் சீட்டு இல்லாமல் வாடிக்கையாளருக்கு கொடுக்கக் அப்படிபட்ட மருந்துகளை முறையாக கணக்கு வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.

ஜெனரிக் மருந்துகள் (Generic Medicines) என்பது பொதுவான மருந்துகள். அப்படி என்றால் அந்த மருந்தில் உள்ளே இருக்கும் இரசாயனம் ஒன்றுதான், பிராண்டின் பெயர் அதாவது தயாரிக்கும் நிறுவனம் மட்டுமே வேறுபடும். சான்றுக்கு தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்வோம். எண்ணெய் ஒன்றுதான். ஆனால் அதனை வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்து தங்கள் நிறுவனப் பெயர்களில் விற்பனை செய்வதைப் போன்றது. இப்படிபட்ட மருந்துகளை எந்த நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும் வாங்குவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இது போன்ற மருந்துகளை வாடிக்கையாளர்கள் வாங்கும் போது மருந்தைப் பற்றிய அடிப்படைச் செய்திகளை அறிந்து வாங்க வேண்டும்.

அது மட்டும் இன்றி, அப்படிப்பட்ட மருந்துகளை விற்பனை செய்யும் கடைகளும், கடைக்காரரும் அந்த ஜெனரிக் மருந்துகளைப் பற்றி நன்கு அறிந்து இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். எனக்கு தெரிந்த ஒரு வாடிக்கையாளர், புதிதாக ஜெனரிக் மருந்துகளை வாங்கி பயன்படுத்தி வந்தார். மூன்று முறை பயன்படுத்தியும் அவருக்கு புதிய கடையில் வாங்கிய அந்த மருந்து அவருக்கு கைகொடுக்க வில்லை. பின்னர் ஒரு நாள் எங்கள் கடைக்கு வந்து என்னிடம் கேட்டு பழைய மருந்தை வாங்கிச் சென்று பயன்படுத்தினார். பயன் கிடைத்தது. இதனால்தான் ஜெனரிக் மருந்துகளை கவனத்தோடு வாங்கி பயன்படுத்த வேண்டும் என்கிறோம்.

இப்போது மருந்துக் கடைகள் தெருவுக்கு ஒன்று என வந்து விட்டன. புதிதாய் மருந்துக்கடை தொடங்கி வெற்றி பெறுவது சவாலான ஒன்றாக இருந்தாலும், சாத்தியமானதுதான்.. தற்போது உள்ள சூழ்நிலையில் தனியாக இயங்கும் மருந்துக் கடைகள் வெற்றி பெறுவது கடினம். ஏன் என்றால் அவர் புதிதாய் வாடிக்கையாளர்களுடன் பழகி நம்பிக்கையை உருவாக்கி விற்பனையை அதிகரிக்க வேண்டும். அந்த பகுதியில் இருக்கும் அல்லது ஒரு புதிய மருத்துவர் உதவி உடன் மருந்துக் கடையை நடத்தினால்தான் வெற்றி பெற முடியும் என்பது இன்றைய சூழ்நிலை.

எங்கள் மருந்துக் கடை தொடங்கி 57 ஆண்டுகள் ஆகின்றன. எங்கள் கடையைப் பொறுத்த வரை வாடிக்கையளர்களின் நம்பிக்கையை பெற்று இருக்கிறோம். அண்மையில் அனைத்து தமிழ்நாடு மருந்துக் கடைக்காரர் மற்றும் வேதியியலாளர் சங்கம் சார்பில், ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் மருந்துக் கடை நடத்தி வருபவர்களுக்கான விருதை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறு கடைகளுக்கு வழங்கினார்கள். அந்த விருது எங்கள் கடைக்கும் வழங்கப்பட்டது குறித்து பெருமிதம் அடைந்தோம்..

மருந்துக் கடைகளைப் பொறுத்த வரை மருத்துவர் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றால்தான் தொடர்ந்து நடத்த முடியும். மருத்துவர் நம்பிக்கை பெற அடிப்படையாக அவர் கூறும் எல்லா மருந்துகளையும் எப்போதும் நாம் நம் கடையில் இருப்பு வைத்து இருக்க வேண்டும். ஒன்று கொடுத்து ஒன்று இல்லை என்றால் மருத்துவர் அடுத்து மருந்து எழுதிக் கொடுக்கும்போது நம்பிக்கையுடன் எழுத மாட்டார். இருக்குமோ, இருக்காதோ என்ற தயக்கம் ஏற்பட்டால், நம்முடைய கடைக்குதான் பாதிப்பு. அவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை உடனுக்குடன் எடுத்துக் கொடுக்கும் அளவில் இருந்தால் அவருடைய நம்பிக்கை அதிகரிக்கும். வாடிக்கையாளர்களும், ஒரு மருந்தை நம் கடையில் வாங்கி விட்டு, இன்னொரு மருந்துக்கு வேறு கடைக்கு செல்ல வேண்டும் என்ற நிலையை விரும்ப மாட்டார்கள்.
நான் என்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட அக்க¬ற்யோடு கவனமாக மருந்துகளை தருகின்றேன். அது மட்டும் இன்றி அவர்களுக்கு மருந்து குறித்த எந்த விதமான சந்தேகமாக இருந்தாலும் அவர்களுக்கு முழுமையாக தெளிவு படுத்த தயங்குவது இல்லை. மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கிக் கூறுவதோடு, முடிந்தால் தனியாக காகிதத்தில் எழுதிக் கொடுக்கிறேன். எந்த மருந்தை எப்போது உட்கொள்ள வேண்டும் என்று நிதானமாக எடுத்துக் கூறுகின்றேன்.

ஒரு மருந்துக் கடை நடத்துபவருக்கு அவ்வப்போது புதிதாய் அறிமுகப்படுத்தப்படும் மருந்துகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். இனி வர இருக்கும் புதிய மருந்துகள் பற்றியும் சில அடிப்படை செய்திகளை சேகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். சேவை எண்ணத்தோடு தொடர்ந்து நடத்தி வந்தால் மருந்துக் கடை தொழிலில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்” என்கிறார். திரு. சண்முகவடிவேல் சுந்தரம்.

– செ. தினேஷ் பாண்டியன்

துணிப் பைகள் தயாரிக்கலாம், பணம் சம்பாதிக்கலாம்!

0

இந்த ஆண்டின் தொடக்கம் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பவர்களுக்கு கவலை தருவதாகவும், பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைந்து இருந்தது. பிளாஸ்டிக் பொருட்களில் சிலவற்றிற்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டிய கட்டாயத்தை அரசு உருவாக்கி விட்டது.

அந்த வகையில் பிளாஸ்டிக் தாள், மெல்லிய பிளாஸ்டிக் தட்டுகள், தேநீர் கப்கள், தண்ணீல் தம்ளர்கள், பிளாஸ்டிக் பை ரகங்கள், பிளாஸ்டிக் அரசியல் கட்சிகளுக்கான கொடிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்று தடை செய்யப்பட்ட பொருள்கள் பட்டியிலிடப்பட்டு உள்ளன.

இப்படி தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களாக மந்தார இலை, பாக்கு மரத் தட்டுகள், கிண்ணங்கள் போன்றவை பயன்படுத்துப் படுகின்றன. ஏற்கனவே, பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிப்பதிலும், விற்பதிலும், சந்தைப்படுத்துவதிலும் ஆர்வம் செலுத்தி வந்த வணிகர்கள் இனி, சணல் பைகள், துணிப் பைகள், காகிதப் பைகள் தயாரிப்பு பற்றி சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள். சில புதிய தொழில் முனைவோரும் உருவாகி இருக்கும் புதிய வாய்ப்பை எப்படி தொழிலாக மாற்றிக் கொள்வது என்று முனைப்பு காட்டி வருகிறார்கள்.

துணிகளால் ஆன பைகளை குறைந்த முதலீட்டில் தையல் மெஷின்களை வைத்து சிறு, குறுந் தொழிலாக செய்வதன் மூலமாக வருமானம் ஈட்டலாம். இதற்கு மூலப் பொருள் காடா துணி. காடா துணி ப்ளீச் செய்தும், ப்ளீச் செய்யாமலும் இரண்டு வகைகளாக வருகின்றன. இவற்றைப் பயன்படுத்தி பலவித அளவுகளில் பைகளை தைத்து சந்தைப்படுத்தலாம். வேறு ஏதேனும் மெல்லிய, விலை குறைந்த துணி வகைகள் சந்தையில் கிடைத்தால் அவற்றையும் பயன்படுத்தலாம்.

மளிகை சாமான்கள், காய்கறிகளை வாங்கும் பையின் அளவானது நீளம் 14 அங்குலமாகவும், அகலம் 12 அங்குலாமாகவும் இருக்க வேண்டும். இதில் இரண்டு பாகங்கள் மற்றும் இரண்டு கைப்பிடி பகுதியும் அவசியம் ஆகும். காடா துணி சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, கரூர், சேலம் போன்ற தமிழக நகரங்களில் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கிறது. மதுரா கோட்ஸ், வர்த்தமான் நூல் ரகங்களைக் பயன்படுத்தலாம். தையலானது ஒரு அங்குலத்திற்கு பத்து முதல் பன்னிரண்டு வரையில் இருப்பது தரமானதாக இருக்கும்.

சுமார் பத்து முதல் இருபது தையல் மெஷின்களை அமைத்துக் கொண்டு மளிகை சாமான்கள் விற்பனையகங்களில் இருந்து ஆர்டர் பெற்று தயாரித்து விநியோகப் படுத்தலாம். சாதாரணமாக ஒரு தையல் எந்திரம் வீட்டில் இருந்தாலும் கூட பைகளை மட்டுமே தைத்து விற்று இலாபம் பறலாம்.

12 க்கு 14; 15க்கு 12; 12க்கு 10; 20க்கு 15 அங்குலம் என்ற பொதுவான அளவுகளிலும், வேறு தேவைக்கேற்ற அளவுகளிலும் பைகளை வெட்டி தைத்து விற்பனை செய்யலாம். கலர் துணி வகைகளிலும் பைகளைத் தயாரித்து விற்பனை செய்யலாம். பெரும்பாலான ஜவுளிக் கடை, கல்யாண நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுகின்ற மஞ்சள் பை சிவப்பு பிரின்ட் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குவதைக் காணலாம். காஞ்சிபுரத்தில் இன்றளவும் பட்டு நெசவு சேலை, வேட்டி தயாரிப்பாளர்கள் இத்தகைய மஞ்சள் பைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.

கரூரில் மஞ்சள் பை புழக்கம் அதிக அளவில் இருப்பதைக் காண முடிகின்றது. துணியினால் ஆன கேரி பைகளானது தற்போது பிளாஸ்டிக்குக்கு பதிலாக இடம் பிடித்து வருகின்றன.

.இந்த வணிகத்தை நடுத்தர அளவிலோ அல்லது பெரிய அளவிலோ செய்யலாம்.
நடுவண் அரசின் கீழ் நடந்து வரும் எம்எஸ்எம்ஈ-யில் திட்ட விவர அறிக்கையையும், போதிய வழிகாட்டுதலையும் கேட்டு அறியலாம். துணியினால் ஆன கேரி பேக், ஓட்டல்கள், பழங்கள், காய்கறிகள் கடைகள், பளிகைக் கடைகளுக்கு இன்றைக்கு மிகவும் தேவையானவை ஆகி விட்டன.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை என்பது ஜனவரி 2019 முதலாகத்தான் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. பெரும்பாலான மாநிலங்களில் இதற்கு முன்னரே பிளாஸ்டிக் பைகளுக்கான தடை நடைமுறைக்கு வந்து விட்டது.

சாதாரண துணிப் பைகளை வீட்டில் இருந்த படியே குடிசைத் தோழில், சிறு/குறு தொழிலாக செய்வதன் மூலமாகவும், மகளிர் சிறு உதவிக் குழுக்களாக சேர்த்தும் கூட செய்து பணம் ஈட்டலாம். தையல் மெஷின் பவர் மெஷினாக இருந்தால் கூடுதல் உற்பத்தியைக் பெறலாம்.

குறிப்பாக Siruba, Kinglion, Juki, Brother போன்ற பிராண்ட்களில் உள்ள தையல் மெஷின்களே தற்போது ரெடிமேட், ஏற்றுமதி பைகள் தயாரிப்பு நிறுவனங்களில் பயன்பாட்டில் உள்ளன. ஒரு மீட்டர் காடா/லாங்கிளாத்/பாப்ளின்/கைத்தறி/விசைத்தறித் துணியில் சுமார் நான்கு பைகள் தைக்கலாம்.

சான்றுக்கு ஒரு மீட்டர் காடா துணி ரூ. 40, நூல் ரூ. 4, தையல்கூலி ரூ.10. நான்கு பைகளுக்கான தயாரிப்பு செலவு ரூ.54. ஒ,ரு பைக்கான உற்பத்தி செலவு சுமார் ரூ. 13. 50, இருபது விழுக்காடு லாபமான ரூ.2. 70-ஐ கூட்டினால் ரூ.16.20. ரூ. 18 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யலாம்.

– ஆர். எஸ். பாலகுமார் (9283182955)

மானிய நிலங்களை அதிகம் அனுபவித்த பிராமணர்கள்!

0

நிலத்திற்காக அரசுக்கு தீர்வை (வரி) கட்டுகிறவர்களின் ‘ஏ’ பதிவேட்டிலும், தாங்கள் வைத்து இருக்கும் நிலத்திற்கு தீர்வை (வரி) கட்டாமல் நில ரிசர்வேசனையும், வரிச் சலுகையையும், அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களை ‘பி’ ரெஜிஸ்டரிலும் அரசு வட்டம் (தாலுகா) கணக்கில் பராமரித்து வந்தது. ஜமீன் கிராமங்களில் பர்மனன்ட் செட்டில்மென்ட் கணக்கு முறையிலும் இரயத்து கிராமங்களில் இரயத்துவாரி செட்டில்மென்ட் கணக்கு முறையிலும் ‘ஏ’ பதிவேட்டு கணக்குகளை பராமரித்து வந்தனர்.

அதேபோல் ஜமீன் கிராமங்களிலும், இரயத்து கிராமங்களிலும் இலவச நிலங்களையும், நில ஒதுக்கீடுகளையும், தனி நபர் பெயராலும் மற்றும் கோயில்கள் பெயராலும் அனுபவித்து வந்தவர்களின் பெயர்களை தாலுகா கணக்கின் ‘பி’ பதிவேட்டில் பராமரித்து வந்தனர்.

1953 களில் இனாம் ஒழிப்பு சட்டம் வந்த பிறகு தனி நபர் பெயர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம் கிராமங்களை ஒழித்து, அதில் குடிவார உரிமையில் யாரெல்லாம் அந்த நிலத்தில் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்களுக்கு உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்ற உரிமை அடிப்படையில் பட்டாக்கள் வழங்கியது அரசு.

அப்படி இனாம்களை ஒழிக்கும் போது அங்கே இரயத்துகள் யாரும் இல்லாத நிலையில் மேற்படி நிலங்களை ‘அனாதீனம்’ என்று வகைபடுத்தி வைத்தது. மேலும் இனாம் ஒழிப்பின் போது ஆன்மீக மடங்கள், ஆதீனங்கள் பெயரில் இருக்கும் பல ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு தற்போதைய ‘ஏ’ பதிவேட்டு கணக்கு பட்டா கொடுக்கப்பட்டு தீர்வை மட்டும் கட்டும் நிலங்களாக மாற்றி இருக்கிறார்கள்.
நிறைய பேர் கேட்கிறார்கள், ”மானியங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டது. பிறகு ஏன் இன்றும் ‘கோயில் மானியம்’ என சொல்கிறீர்கள்”, என்று. மானியத்தை, இனாம் நிலத்தை அரசு கைப்பற்றவில்லை. அதனை வரி அற்ற மானியமாக இருந்த நிலையில் இருந்து, வரி செலுத்த வேண்டும் என்ற நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். அதனால்தான் இன்னும் பேச்சு வழக்கில் மானியம் என்று சொல்லப்படுகின்றது.

பூசாரி மானியம், தலையாரி மானியம், வெட்டியான் மானியம் என்று வரி கட்ட வேண்டாத நிலங்களை அவர்களிடமே ஒப்படைத்து வரி கட்டும் மானியங்களாக மாற்றி இருக்கிறார்கள். அதாவது ‘பி’ பதிவேட்டு கணக்கை முடித்து, அனைத்தையும் ‘ஏ’ பதிவேட்டுக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் போதுமானது. ஆக இப்பொழுது மானியமோ, இனாமோ (வடமொழியில் மானியம் மற்றும் உருது மொழியில் இனாம்) கிடையாது. அனைத்து நிலங்களும் தீர்வை செலுத்த வேண்டிய நிலங்களே.

இடம் வாங்கப் போகும் போது, மேற்படி நிலங்கள் இனாம் நிலங்கள் என்று சொல்லப்பட்டால், அல்லது மானியம் என்று பேச்சு வழக்கில் சொல்லப்பட்டால் அது ‘ஏ’ பதிவேட்டுக் கணக்குக்கு ‘பி’ பதிவேட்டில் இருந்து வந்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்தால், தற்போது நிலம் விற்பவருக்கு, அந்த நிலம் எந்த வழியில் வந்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த இனாம்கள் அல்லது மானியங்கள் பற்றி அறிந்து கொள்வோம். இனாம்கள் எல்லாம் வெள்ளையர்கள் கொடுத்தது அல்ல; அதற்கு முன் இருந்த இந்திய அரசர்கள் தானமாகக் கொடுத்ததை, வெள்ளையர்கள் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

எப்படி என்றால், பொதுவாக இனாம்கள் ஆதீனங்களுக்கும், மடங்களுக்கும் அதிக அளவிலும், மசூதிகளுக்கும் சர்ச்களுக்கும் அவற்றை விடக் குறைந்த அளவிலும் என்று பல லட்சம் ஏக்கர்கள் கொடுக்கப்பட்டு ‘பி’ பதிவேட்டில் பதிந்து இருப்பது முதல் வகை இனாம்.

தனிப்பட்ட முறையில் ராணுவ வீரர்களுக்கு, படைத் தளபதிகளுக்கு, ஆசை நாயகிகளுக்கு, தேவதாசிகளுக்கு, கலைஞர்ளுக்கு என்று கிராமங்களை இனாம்களாக கொடுத்து இருக்கிறார்கள். வெள்ளையர்கள் வருவதற்கு முன்னர் இந்த நாட்டை ஆண்ட அரசர்களுக்கும், நொடிந்து போன அரச குடும்பங்களுக்கும் கிராமங்களை இனாமாக கொடுத்து இருக்கிறார்கள்.

கிராமத்தில் ஊழியம் செய்யும் நாவிதர், தச்சர், கருமான், சோழியர், வண்ணார், பூசாரி, வெட்டியான், காவல்காரர்கள், தலையாரி போன்ற சேவைகளை செய்வதற்கு சேவை மானியம் என்ற பெயரில் நிலங்களை ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள்.

இனாம்களின் வகைகள்:

தேவதாயம்தமிழகத்தில் இந்தச் சொல் இன்றைக்கும் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் தேவதானம் என்றும், கேரளாவைச் சேர்ந்த மலபார் பகுதிகளில் தேவசம் என்றும் சொல்வார்கள். ஏக்கர் கணக்கான நிலங்களை கோவில் பெயரில் வைத்துக் கொண்டு பட்டர்கள், குருக்கள், பூசாரிகள் மற்றும் கோவில் வழிபாடுகளில் பொறுப்பு எடுத்துக் இந்த நிலங்களில் இருந்து வரும் வருமானத்தை அனுபவித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம், திருவரங்கம், திருப்பதி, இராமேசுவரம், மதுரை போன்ற பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு பரந்து விரிந்த இனாம் நிலங்கள் இருக்கின்றன. இஸ்லாமிய, கிறிஸ்துவ கோவில்களுக்கும் இனாம்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள சிறிய கோயில்களுக்கும் கூட இனாம் நிலங்கள் இருக்கின்றன.

தர்மதாயம்
வேத பாடசாலைகள் அமைக்க, கோவிலுக்கு விளக்கு எரிக்க, கோவில் சார்ந்து கிணறு மற்றும் குளம் வெட்ட, பக்தர்களுக்கு சத்திரம், அன்னதானம் செய்ய, மண்டபங்கள் கட்ட அறக்கட்டளைகளுக்கு கொடுக்கப்பட்ட இனாம் நிலங்கள் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டன. தர்மதாயம் அதன் முக்கிய நபர் பெயரில் இந்த இருக்கும்.

பந்த் விருத்தி                                                                                            பத்தொன்பது பிராமணர்களுக்கு இனாமாக வழங்கப்படுவதை குறிக்கும். பந்த் விருத்து இனாம்களை தமிழகம் முழுதும் அதிக அளவில் பார்க்க முடியும்.
ஸ்தோத்திரியம்
வேதம் கற்று, வேதம் பரப்பும் பிராமணர்களுக்காக கொடுக்கப்படும் நிலங்களை ஸ்தோத்திரியம், ஸ்மிருதியம் என்பார்கள். இத்தகைய இனாம்களை திருவைகுண்டம் அருகில் பார்த்து இருக்கிறேன்.

அக்ரஹாரம்
அக்ரஹாரம் அனைத்தும் மானியமாக கொடுக்கப்பட்டதுதான். முதலில் சொன்ன பந்த் விருத்தியும், ஸ்தோத்திரியமும் தனிப்பட்ட பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டவை. அக்ரஹாரம், குறிப்பிட்ட பிராமண குழுக்களுக்கு தானமாக வழங்கபடுவது ஆகும். அக்ரஹாரம் இனாமை பின்வருமாறு பிரித்து வழங்கி உள்ளனர். அவை,

சர்வ அக்ரஹாரம் – நூறு சதவீதம் வரி இல்லாதது.
பிலுமுக்த அக்ரஹாரம் – வரி ஒருமுறை கட்டினால் போதும்.
ஜோடி அக்ரஹாரம்: குறைவான வரி. ஆனால், தொடர்ந்து கட்ட வேண்டும்.
கைரதி
இது முஸ்லிம் உலமாக்களுக்கு, முஸ்லிம் அரசர்கள் கொடுத்த தனிப்பட்ட இனாம்.

ஜாகிர்
இது முஸ்லிம் படைத்தளபதிகளுக்கு, வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம். ஜாகிர் இனாம்கள் தமிழகத்தில் பரவலாக இருக்கின்றன.

அல்தாங்க் இனாம்
இதை சிவப்பு முத்திரை இனாம் என்றும் சொல்வார்கள். இது முஸ்லிம் மசூதிகளும், அவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் அனுபவித்துக் கொள்ள கொடுக்கப்பட்ட இனாம்.

தேஷ்முக் மற்றும் தேஷ்பாண்டே இனாம்
இந்த இனாம் நிலங்களை மும்பையில் பார்க்கலாம். தேஷ்முக் வருவாய் துறையினருக்கு, தேஷ்பாண்டே காவல் துறையினருக்கு கொடுக்கப்படும் இனாம்.

அமாம் மற்றும் கட்டுபாடி இனாம்
இந்த இனாம் நிலங்களை சித்தூர், திருப்பதி பகுதிகளில் பார்க்கலாம். ராணுவ வீரர்களுக்கு இனாமாக கொடுப்பப்பட்டவை.

தேசபந்தம் இனாம்
நீர்க்காவல், நீர்ப்பிடிப்பு காவல், மடை காவல் பார்க்கிறவர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம். தமிழகத்தில் இந்த இனாம் பரவலாக சிறிய பரப்பளவுகளில் கொடுக்கப்பட்டு உள்ளன. கிராம தலைவர், கிராம கணக்கர், தலையாரி, வெட்டியான்களுக்கு கொடுக்கப்படுவதை களிங்குல மானியம் என்பர். கிராம மருத்துவர், கருமான், தச்சர், வண்ணார், ஜோசியர் ஆகியோருக்கு கொடுக்கும் மானியம் தேசபந்த மானியம்.
இப்படி பல மானியங்கள், பத்திர பதிவுகளில் ஆவணமாகி, பிறகு மானிய முறைகள் ஒழிக்கப்பட்டு அவை எல்லாம் வருவாய் கணக்கில் பட்டாவாகி இப்பொழுது அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பெங்களூரில் இன்னும் ‘ஏ’ கணக்கு தனியாகவும், ‘பி’ கணக்கு தனியாகவும் இருப்பதைக் காணலாம். ‘ஏ’ கத்தா ‘பி’ கத்தா என்று அங்கு சொல்வதைக் கேட்கலாம். பொதுவாக ஒரு சொத்து வாங்கும் போது அதன் பூர்வீக வரலாற்றையும், தற்போதைய சொத்து வரலாற்றையும், தொடர்புப் படுத்திப் பார்க்கும் போதுதான் நமக்கு உண்மையான தன்மை தெரிய வரும்.

– சா. மு. பரஞ்சோதிபாண்டியன்
8110986111