வாய்ப்புகள் அதிகம் உள்ள சுற்றுலாத் தொழில்கள்

0

சென்னையில் உள்ள மதுரா டிராவல்ஸ் நிறுவனம் பற்றியும், அதன் மேலாண் இயக்குநர் திரு. விகேடி. பாலன் பற்றியும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அவர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து சென்னைக்கு வந்து, தன்னுடைய உழைப்பாலும், முயற்சியாலும் முன்னேறி வந்த கதையை அறிந்து ஊக்கம் பெற்ற தொழில் முனைவோர் எண்ணற்றவர்கள். இவர் பொதிகை தொலைக்காட்சியில் நெறியாளுகை செய்த ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ இவருடைய சமுதாய அக்கறையை வெளிக்காட்டிய நிகழ்ச்சியாக அமைந்ததோடு, அந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற பலரின் வாழ்க்கையில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது.

இன்றைக்கு தமிழ்நாட்டுத் தொழில்துறையில் உள்ள சிக்கல்களில் ஒன்றாக அறியப்படுவது, தொழிலதிபர்களின், வணிகர்களின் பிள்ளைகள் படித்து விட்டு வேலைக்கு செல்லும் மனநிலை வளர்ந்து வருவது ஆகும். தொழில்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பு அளிக்கும் பெரிய தளம் தங்களிடம் இருப்பதை உணராமல், இத்தகைய இளைஞர்கள் வேலை பார்க்கச் செல்லும் மனநிலையை மாற்ற வேண்டும் என்று தமிழர்கள் வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய இளைஞர்களை தொழில் துறையில் சாதிப்பவர்களாக உருவாக்க வேண்டும் என்ற கருத்துப் பரப்பலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தன்னுடைய மகன் திரு. ஸ்ரீகரன் பாலனை, தன்னுடைய ‘மதுரா டிராவல்ஸ்’ நிறுவன நிர்வாகப் பணிகளில் வெற்றிகரமாக ஈடுபடுத்தி இருக்கிறார், திரு. விகேடி. பாலன்.

பொறியியல் பட்டதாரியான திரு. ஸ்ரீகரன்பாலனை சென்னை எழும்பூரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வளர்தொழில் இதழுக்காக பேட்டி கண்டோம். மிகுந்த உற்சாகத்துடன் நம்முடன் பேசினார். அவருடைய பேட்டியில் இருந்து…
”சென்னை மந்தைவெளியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 12-ம் வகுப்பை முடித்து விட்டு சோழிங்க நல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பி.இ.,(மெக்கானிகல்) படித்தேன்.

எனக்கு பிடித்த பாடங்கள் கணக்கும், இயற்பியலும்.. படிப்பை முடித்தவுடன் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை. நான் விரும்பிப் படித்த மெக்கானிக்கல் துறை சாரந்த வேலைக்கு முயற்சி செய்தேன். அதன் விளைவாக, ஒரு பிரபல நிறுவனத்தில் நான் விரும்பும்படியான வேலை கிடைத்தது. குறிப்பட்ட தேதியில் வேலையில் சேரும்படி அழைப்பு வந்தது. வேலையில் சேர்வதற்கு சில நாட்களுக்கு முன், நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கினேன். என் முழங்கால் மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். அதுவரை என்னுடைய படிப்பு, வேலை தொடர்பாக, அப்பா என்னுடைய விருப்பப்படியே செயல்பட அனுமதித்து இருந்தார். வேலை தேடும் முயற்சி தொடர்பாகக் கூட அவர் தடை சொன்னது இல்லை.

அன்று படுக்கையில் இருந்த என்னிடம் முதல் முறையாக எனக்கு வழிகாட்டும் வகையில், ”நம்மிடம் நல்ல தொழில் உள்ளது. உனக்கு விருப்பம் இருந்தால் நீ ஏன் இதில் கவனம் செலுத்தக் கூடாது?” என்று ஒரு ஆலோசனை போலச் சொன்னார். அவர் குரலில் வற்புறுத்தல் தொனி எதுவும் இல்லை. எந்த முடிவாக இருந்தாலும் நீ எடுக்கலாம் என்பது போன்ற தொனிதான் இருந்தது.

முதலில் எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த பாடங்கள் கணக்கும், இயற்பியலும். சுற்றுலா தொழில் புவியியல் சார்ந்தது. இருந்தாலும் அப்பா மீது நான் வைத்திருந்த அளவு கடந்த மதிப்பு காரணமாக மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக் கொண்டேன். இதுவரை நம்மிடம் அப்பா எதுவுமே கேட்டது இல்லை; முதல் முறையாக கேட்கிறார், இதை மறுக்கக் கூடாது என்ற உணர்வும் இருந்தது.
தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பு அதன் அடிப்படைகளையும், நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ள விரும்பினேன். எங்கள் நிறுவனப் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் எனக்கு இல்லாததால் எனக்கு பயிற்சி வேண்டும் என்று கருதினேன்.

அப்பா, தன்னுடைய நண்பரும், எங்களைப் போன்ற டிராவல்ஸ் தொழில் நிறுவனத்தை நடத்துபவருமான திரு. சில்வஸ்டர் தாமஸ் நிறுவனத்தில் என்னை பயிற்சிக்காக சேர்த்து விட்டார். அரவுண்ட் த வேர்ல்ட் (Around The World) என்ற பெயர் கொண்ட அந்த நிறுவனம், சென்னை உள்பட இந்தியா முழுவதும் அலுவலகங்களைக் கொண்டது.

வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று பாஸ்போர்ட் வழங்குவது, படிவங்களை நிரப்பிக் கொடுப்பது போன்ற வேலைகளை முதல் மூன்று மாதங்களுக்கு செய்தேன். அதுவரை அந்த நிறுவனத்தின் தலைவர் திரு. சில்வஸ்டர் தாமஸ் அவர்கள் என்னிடம் பேசக்கூட இல்லை. என்ன ஏது என்று கூட விசாரிக்கவில்லை. இது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பயிற்சியில் தொடர்வதா, வேண்டாமா என்று நினைக்கத் தொடங்கினேன்.

அப்பாவிடம் சொல்லி விட்டு விலகிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் அவர் என்னை அழைத்து, தன் அருகில் அமர வைத்துப் பேசினார். அன்று முதல் அடுத்த மூன்று மாதங்களில் சுற்றுலா தொழில் தொடர்பான பல்வேறு நுட்பங்களை படிப்படியாக கற்றுக் கொடுத்தார். அவரைப் பற்றி நான் நினைத்தது தவறு என்பதைப் புரிந்து கொண்டேன்.

ஒரு வாடிக்கையாளரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர் மூலம் பல வாடிக்கையாளர்களைப் பெறுவது எப்படி, தொழிலில் ஏமாற்றுபவர்களை அடையாளம் காண்பது எப்படி, தொழிலை மேலும் வளர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன போன்ற ஏராளமான செய்தகளை அன்புடன் சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். அப்பா ஏன் அங்கே அனுப்பினார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

நான் அங்கு பயிற்சியில் இருந்த போதே கனடா நாட்டு நிறுவனம் வழங்கிய சுற்றுலா தொடர்பான ஆறுமாத படிப்பையும் முடித்தேன். இந்த படிப்பில் தென் இந்தியாவிலேயே முதல் மாணவனாக வந்தேன். திரு சில்வெஸ்டர் தாமஸ் என்னை பாராட்டி வாழ்த்தி நினைவு பரிசு வழங்கி அனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து, எங்களுடைய மதுரா டிராவல்சில் இணைந்து தந்தையுடன் பணியாற்றத் தொடங்கினேன்.

நான் சேர்ந்த தொடக்கத்தில், இங்கு சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுப்பது மற்றும் விசா வாங்கித் தருவதுதான் முக்கிய சேவையாக இருந்தது. அதோடு கூடுதலாக சுற்றுலா ஏற்பாடு செய்வதையும், சுற்றுலா செல்வதற்கு ஆலோசனை வழங்குவதையும் இணைத்தேன்.

சுற்றுலா ஏற்பாடு என்பது இன்று உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழில். சுற்றுலா செல்வோர் சுற்றிப் பார்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். மற்ற அனைத்து வேலைகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் அவர்களுக்கு தேவையான தங்கும் அறைகள் பதிவு செய்து கொடுத்தல், வாகன ஏற்பாடு செய்தல், தகுதி வாய்ந்த சுற்றுலா வழிகாட்டி உள்பட அனைத்துக்கும் நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்.

சுற்றுலாப் பயணிகள் புறப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள், அவர்களுக்கு உதவக் கூடிய அனைத்து தகவல்களையும் வழங்குகிறோம். தற்போது எங்கள் நிறுவனத்தில் நடைபெறும் எண்பது சதவீத பணிகள் சுற்றுலா தொடர்பான சேவைகள்தான். இந்த சேவையை நான் தொடங்கிய போது கை கொடுத்தவர்கள் என் நெருங்கிய நண்பர்கள்தான். முதன் முதலில் நான் வெற்றிகரமாக ஏற்பாடு செய்த ஐரோப்பா சுற்றுலாவுக்கு அவர்கள்தான் காரணம்.

இன்றைக்கு நேரடி ஆன்லைன் பதிவு அனைத்து மட்டங்களிலும் காணப்படுகிறது. பணத்தை சிக்கனப்படுத்தும் நோக்குடன் இதில் ஈடுபடுகிறார்கள். இதை நான் குறை சொல்ல மாட்டேன். ஆனால், இணைய வழியில் பதிவு செய்து பணம் செலுத்தியவர்கள் சுற்றுலா செல்லும் போது சில நேரங்களில் சிக்கல் உருவாவதைப் பார்க்க முடிகிறது.

என் நண்பருக்கு வேண்டியவர் குடும்பத்துடன் ஊட்டி சென்றார். ஆன்லைனில் அறையை பதிவு செய்து விட்டு சென்று சேர்ந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கொஞ்சம் தாமதமாக சென்ற காரணத்தால் அந்த அறையை வேறு ஒருவருக்கு ஒதுக்கி விட்டனர். குளிரில் கைக் குழந்தையுடன் காரில் இருந்தபடி எங்களை தொடர்பு கொண்டு உதவி கேட்டார். உடனே வேறு விடுதியில் தங்க நாங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தோம்.
இன்னொரு நிகழ்வையும் இங்கு கூறியாக வேண்டும். எங்கள் மூலம் வளைகுடா நாடுகளுக்கு தனியாக பயணம் செய்த ஒருவருக்கு கொச்சி விமான நிலையத்தில் வைத்து திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. விரைந்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையை தெரிவித்து உடனடி உதவிகள் அவருக்கு கிடைக்க உதவினோம்.

ஒரு சான்றுக்காக இந்த நிகழ்வுகளைச் சொன்னேன். அந்த பொறுப்பு எங்களிடம் வரும் போது நாங்கள் ஒவ்வொரு கட்டத்தையும் கண்காணிக்கிறோம். நம்பகத் தன்மை கொண்ட ஓட்டல், விடுதிகள் எங்களுக்குத் தெரியும். அறை முன்பதிவு, வாகன ஓட்டுநரை தயாராக இருக்கச் செய்வது அத்தனையையும் எங்கள் பணியாளர்கள் கவனித்தபடி இருப்பார்கள். இடையில் ஏதேனும் குறைபாடு நேர்ந்தால் உடனே செயல்பட்டு அந்த குறையை களைந்து, பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். இணைய வழி பதிவு செய்து செல்வோருக்கு இந்த தனிப்பட்ட அக்கறையுடன் கூடிய சேவை கிடைக்குமா என்பது ஐயத்துக்கு உரியது.
எனவே வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் ஒரு நல்ல சுற்றுலா நிறுவனம் மூலம் செல்வதுதான் பாதுகாப்பானது.

வாடிக்கையாளர்களுக்கு விசா வாங்கிக் கொடுப்பது கவனமாக செய்ய வேண்டிய பணி. இதில் புதுப்புது விதிகளை அயல்நாடுகள் புகுத்திக் கொண்டே இருக்கின்றன. முன்பெல்லாம் பாஸ்போர்ட் மட்டும் போதும். இப்போது வங்கிப் புத்தகத்தின் ஆறுமாத கணக்கு விவரம் மற்றும் வருமானவரித் தாக்கல் விவரம் போன்றவற்றை கேட்கிறார்கள். நாட்டுக்கு நாடு அணுகு முறையில் வேறுபாடு உள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால் விசா கிடைக்காது.

எங்களைப் பொருத்தவரை இதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். புதிய விதிமுறைகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குகிறோம்.

நான் இங்கு பொறுப்பேற்ற பிறகு விசா வாங்கித் தருவதில் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தினேன். அதன்படி, எங்கள் நிறுவனத்திற்காக ஒரு மொபைல் ஆப் உருவாக்கினோம். வீட்டில் இருந்தபடியே ஒரு வாடிக்கையாளர் இதன் மூலம் விசா பெற முடியும்.

இன்றைக்கு பலர் பெற்றோரை இங்கு விட்டுவிட்டு வெளிநாடுகளில் பணி புரிகிறார்கள். அங்கு இருந்தபடியே எங்களை அழைத்து பெற்றோருக்கு விசா வாங்கிக் கொடுத்து, அனுப்பும்படி கேட்டுக் கொள்வார்கள். எங்கள் ஊழியர்களை தொடர்புள்ள வீடுகளுக்கு அனுப்பி இப்பணியை செய்து கொடுக்கிறோம்.

கடந்த ஏழு ஆண்டுகளில் இதுவரை 32 வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். அங்கு உள்ள சுற்றுலா வாய்ப்புகளை ஆராய்ந்து அறிந்து கொண்டேன். இவற்றில் 28 நாடுகளுக்கு போய் வந்த செலவை, அரசு தொடர்பான சுற்றுலாத் துறைகளே ஏற்றுக் கொண்டன. ஏன் என்றால் என் பயணம் அவர்கள் மேம்பாட்டையும் உள்ளடக்கியது.

இங்கிலாந்து நாட்டில் பயணம் செய்த போது ஒரு இடத்தில் பயணிகளோடு பயணியாக ஒருவர் நின்று பூங்கொத்து கொடுத்து என்னை வரவேற்றார். பின்னர்தான் தெரிந்தது அவர் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்று. அங்கு மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையை எவ்வளவு ஆர்வத்துடன், எளிமையாக செய்கிறார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

அண்மையில் குடும்ப உறவினர்கள் ஒன்று சேர்ந்து 220 பேர் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். 119 பேருக்கு விசா கிடைத்து விட்டது .ஒருவருக்கு மறுத்து விட்டனர் .அந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி. நாங்கள் தொடர்புடைய அரசிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறிப்பிட்ட நபர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிய அங்கு சென்றவர் என்பதும் குறிப்பிட்ட நாட்களை விட அனுமதி இன்றி கூடுதலாக அங்கு தங்கியதால் திருப்பி அனுப்பப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவருக்காக நாங்கள் உத்தரவாதம் அளித்து அனுப்பி வைத்தோம்.

இன்றைக்கு நினைத்துப் பார்க்க முடியாத புதிய உலகில் வலம் வந்து கொண்டு இருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்குப் பயணம் செய்யும் போதும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறது. வளர்தொழில் இதழ் வாயிலாக தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது “உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப சுற்றுலா செல்வதை வாழ்வில் ஓர் அங்கமாக்கிக் கொள்ளுங்கள். அது உற்சாகத்தை புதிய சிந்தனைகளை உங்களுக்குள் விதைக்கும்”.

பதினைந்து நாள் பயணமாக சீனா சென்று இருந்தேன். அங்கு ஜின் ஜூ என்ற மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 3000 பேர் வசிக்கிறார்கள். கிராமத்தைச் சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர் அமைத்து உள்ளார்கள். கிராம மக்கள் அனைவருமே நாள்தோறும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கிராமத்தை ஒட்டி உள்ள மிகப்பெரிய உடற்பயிற்சி மையத்தில் காலை ஆறு மணி முதல் ஏழு மணிவரை உடற்பயிற்சி செய்கிறார்கள். பின்னர் வேலைக்கு செல்கிறார்கள்.

பணி முடித்து அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து ஒருவரோடு ஒருவர் உரையாடிய படி, இரவு உணவை சாப்பிடுகிறார்கள் சரியாக எட்டு மணிக்கு உறங்கச் சென்று விடுகிறார்கள். மனதிற்கு பரவசமூட்டிய அந்தக் கிராம சூழலில், ஒரு 92 வயதுப் பாட்டி என்னைப் பெரிதும் கவர்ந்தார். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து அங்கு வருகை தருவதால் சுற்றுலா வரைபடங்களை குவித்து வைத்து முகமலர்ச்சியுடன் விற்பனை செய்து கொண்டு இருந்தார். சீன நாட்டில் நட்பும், உறவுமாக ஒற்றுமையுடன் கூடி வாழ்கிறார்கள்.

மேலை நாடுகளில் திட்டமிட்டு அனைத்து பணிகளையும் செய்கிறார்கள்.
இதுபோல எண்ணற்ற அனுபவங்கள் வெளிநாடுகளில் எனக்கு கிடைத்தன. நம் நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டுக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் நிறைந்த மாநிலம் நம்முடையது.

திறமை மிக்க மருத்துவர்களுடன் ஏராளமான மருத்துவ மனைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு வந்து குறைந்த செலவில் தரமான சிகிச்சைகளை பெற்றுச் செல்கிறார்கள். ‘பல்’ தொடர்புடைய சிகிச்சைகள் பல மேலைநாடுகளில் காப்பீட்டு வரம்புக்குள் வருவதில்லை. அந்த வகையில் அங்கு ரூ 3 லட்சத்துக்கு கிடைக்கும் தரமான சிகிச்சை இங்கு முப்பதாயிரத்திற்கு கிடைக்கிறது. இதனால் மருத்துவ சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் வருகிறார்கள்.

நான் இந்த தொழிலுக்கு வந்த புதிதில் ஒரு அதிர்ச்சியான தகவலை கேட்டேன். கல்லூரிகளில் சுற்றுலாவை முதன்மைப் பாடமாக கொண்ட பட்டப் படிப்புகளில் அதிக மாணவ மாணவியர் சேருவது இல்லை. இந்தத் துறையில் குவிந்து உள்ள தொழில் வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் அவர்களிடம் கொண்டு செல்வதற்காக சென்னையில் 12 கல்லூரிகளை தேர்வு செய்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இந்த நிகழ்வுகளில் வெளிநாட்டு சுற்றுலாத் துறையினர் நம் மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கின்றனர். நம் மாணவ, மாணவகள் வெளிநாட்டு மொழிகளை எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். அண்மையில் விசா வழங்கும் இங்கிலாந்து நாட்டின் அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு நம்முடைய அரசு கல்லூரியில் படித்த ஒரு மாணவி பணியாற்றிக் கொண்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் நீங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றது இந்த வேலைக்கு வர காரணமாக அமைந்தது என்றார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

தன்னம்பிக்கை மிகுந்த என் அப்பாவிடம் நேர்மை, நாணயம் நம்பிக்கையை கற்றுக் கொண்டேன் என்றால், என் அம்மா திருமதி. சுசீலாவிடம் நான் கற்றது விடா முயற்சியை, கடின உழைப்பை. என் அப்பாவுக்கு இன்றைக்கும் அவர் பக்கபலமாக உள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வது எனக்கு பெரும் வியப்பாக இருக்கும். வாழ்க்கையிலும், தொழிலிலும் அவர்கள்தான் எனக்கு ‘ரோல் மாடல்’. அலுவலகத்தில் கணக்காளர் விடுமுறை எடுத்தால் அந்த இடத்தை அம்மா நிறைவு செய்து இருக்கிறார். என் அப்பா நடத்திய இணைய வானொலியின் செய்தி வாசிப்பாளர் வராத நாட்களில் அம்மாதான் செய்தி வாசிப்பாளர்.

என் வாழ்விணையர் திருமதி. திவ்யாவும் அதே போலத்தான். வணிக சூழலைப் புரிந்து கொண்டு எனக்கு எல்லா வகையிலும் பெரும் துணையாக இருந்து வருகிறார். .திவ்யா ஒத்துழைப்பு தருவதால்தான் வணிக வளர்ச்சியில் அடுத்தடுத்த கட்டங்களை என்னால் எட்ட முடிகிறது.

எங்களுக்கான செயலியை (மொபைல் ஆப்) உருவாக்ககிய போது, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி, இளைஞர் ஜெகதீஷ் இடம் அந்தப் பணியை ஒப்படைத்தோம். கணினி நுட்பத்தில் வல்லவரான அவருக்கு கைவிரல்கள் மட்டுமே வேலை செய்யும். வீல்சேரில் அமர்ந்து கொண்டுதான் எந்த செயலையும் அவரால் செய்ய முடியும். கணினி தொடர்புடைய முதல் கட்ட பணிகளை எங்களுக்கு செய்து தருவது அவர்தான்.

சுற்றுலா ஏற்பாடு ஒரு கூட்டுப் பணி. எங்களைப் போன்ற நம்பகமானவர்களுடன் பணிகளை பகிர்ந்து கொள்கிறோம். இது நவீன தொழில்நுட்ப உலகம். இன்னும் பதினேட்டு ஆண்டுகளுக்குள் சந்திரனுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டு விடும். அந்த நாள் வரும்போது, எங்கள் வாடிக்கையாளர்களையும் நிலாவுக்கு அழைத்துச் சென்று வரும் சுற்றுலா ஏற்பாட்டாளராக நாங்கள் உயர்ந்து நிற்போம்” என்றார், திரு ஸ்ரீகரன் பாலன். (9841691234)

மதுரா டிராவல்ஸ் கடந்த 32 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. திரு. ஸ்ரீகரன், மதுரா டிராவல்ஸ் பணிகளை மேலாண்மை செய்யத் தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகின்றன தாய் ((TAAI) Travel Agent Association Of India) அமைப்பின், டூரிசம் சப் கமிட்டி தலைவராகவும். தமிழ்நாடு டிராவல் மார்ட் சொசைட்டியை (ஜிக்ஷீணீஸ்மீறீ விணீக்ஷீt ஷிஷீநீவீமீtஹ்) உருவாக்கிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

 – ம. வி. ராசதுரை

சிப்ஸ் பிளாஸ்டிக் உறைகளுக்கு மட்டும் ஏன் தடை இல்லை?

0

– தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவர் திரு. ஜி. சங்கரன் பேட்டி

தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கம் (டான்பா) , பிளாஸ்டிக் தொழில் முனைவோருக்கு வழி காட்டும் அமைப்பாகவும், ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும்போது அவற்றுக்கு தீர்வு காண முயற்சிக்கும் சங்கமாகவும் இருக்கிறது. இதன் தலைவர் திரு. ஜி. சங்கரன். பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது, எனவே அவற்றின் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுந்து உள்ள நிலையில், சில பகுதிகளில் தடையும் விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசும் வரும் ஆண்டில் இருந்து பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இது பற்றி திரு. சங்கரன், பிளாஸ்டிக் பயன்பாட்டை முறைப்படுத்தி எப்படி சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் செயல்படுத்த முடியும் என்பதை விளக்கிக் கூறினார். அவர் கூறியவற்றில் இருந்து..
”தொடக்க காலங்களில் மெலமைன், ஃபார்மல்டிஹைட் போன்ற மூலப் பொருட்களைக் கொண்டு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப் பட்டன. பழைய கருப்பு டெலிஃபோன்கள், மின்கருவிகள், உணவு தட்டுகள் போன்றவை மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் மூலப் பொருட்களால்தான் தயாரிக்கப்பட்டன. ஆனால் மேற்படி பொருட்கள் கழிவுகளாக மாறியவுடன் தூக்க எறிவது என்பது அன்றாட நிகழ்வு கிடையாது. அப்பொருட்களை பல ஆண்டுகள் பயன்படுத்திய பிறகுதான் குப்பையாக மாறும்.
மேலே சொன்ன பல பொருட்கள் நாளடைவில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் மூலப் பொருட்களால் உற்பத்தி செய்யத் தொடங்கிய உடன், மறுசுழற்சி செய்ய முடியாது என்னும் சிக்கல் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.
இந்தியாவில் 1991-க்குப் பிறகு தாராளமயப் பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, மக்களிடையே அதிக அளவில் நுகர்வு பொருட்களை பயன்படுத்தி வாழும் வாழ்க்கை முறை பெருகத் தொடங்கியது. மெல்ல மெல்ல வணிகத்தின் அனைத்து துறைகளிலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் வளரத் தொடங்கியது. அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல், அவற்றின் இயற்கைத் தன்மை மாறாமல் இருக்க, அதற்கேற்ற பேக்கிங் பொருட்கள் தேவைப்பட்டன.
பல்வேறு திறன் கொண்ட பிளாஸ்டிக் மூலப்பொருட்களை பல அடுக்குகளாகச் சேர்த்து, புதிய முறைகளில் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டன. மேற்படி பல அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படும் பொருட்கள் பல மாதங்கள் கெடாமல் இருந்தன. ஆனால் பல அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக் பைகள் கழிவிகளாக மாறும்போது, அவை மக்கவும் இல்லை; அந்த பைகளை சேகரித்து மறுசுழற்சி செய்யவும் முடியவில்லை.
இன்று வரை இந்தியாவில் வணிகமுறையில், பல அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக் பைகள் (மல்டி லேயர் பிளாஸ்டிக்ஸ்) வரத் தொடங்கிய் நாட்களில் இருந்து இன்று வரை உருவாகி வரும் மல்டி லேயர் பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் நிலத்தில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோதான் வருகின்றன.
தற்போது தடை இல்லை என்று தமிழக அரசு விலக்கு அளித்துள்ள எண்ணெய் பைகள், நெய் பைகள் போன்றவை அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத பல அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பைகள்தான். மறுசுழற்சி செய்யக்கூடிய ஒரு அடுக்கு கொண்ட சாதாரண பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை, ஆனால் மறுசுழற்சியே செய்ய முடியாத பல அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை இல்லை என்கிறது, அரசு. இந்த அறிவிப்பு வியப்புக்கு உரிய ஒன்றாக இருக்கிறது.
தவிர பன்னாட்டு நிறுவனங்களான இந்துஸ்தான் லீவர், நெஸ்லே, அமுல், ஐடிசி போன்ற அனைத்து நிறுவனங்களும் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகளில்தான் அடைத்து விற்கப்படுகின்றன. பெட்டிக் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் சரம்சரமாகத் தொங்கும் அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள்தான்.
1999-ம் ஆண்டு நடுவணரசு, மறுசுழற்சி செய்யக்கூடிய கேரி பேக்குகள் குறைந்தது இருபது மைக்ரான் தடிமன் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது. மறுசுழற்சி செய்ய இயலும் பைகளுக்கு ஒரு நிலை, மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களுக்கு ஒரு நிலை என்ற போக்கை நாங்கள் தொடர்ந்து அப்போது முதலே எதிர்த்து வருகிறோம்.நடுவணரசி 1999 – ஆண்டில் கொண்டு வந்த பிளாஸ்டிக் பற்றிய சட்டத்துக்கு மாற்றாக, 2011- ம் ஆண்டு ‘பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை’ என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்த போது, எங்கள் சங்கம், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையை மீண்டும் விடுத்தோம். பிறகு 2016-ல் நடுவணரசு பிளாஸ்டிக் தொடர்பாக மீண்டும் ஒரு சட்டத்தைக் கொண்டு வர முயற்சித்த போதும், எங்கள் சங்கமும், எங்களுடன் இணைந்து செயல்படும் மற்ற சங்கங்களும் சேரந்து மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினோம். இதன் காரணமாக அந்த சட்டத்தில், 18-03-2018 – க்குள் பல அடுக்குகள் கொண்ட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்னும் ஒரு விதியைச் சேர்த்தனர்.
சங்கங்களும் நம் முயற்சிகளுக்கு பயன் கிடைத்தது என்று மகிழ்ந்தன. இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 18-03-2018 – க்கு இருபது நாட்களுக்கு முன் நடுவணரசு 2016 பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அந்த திருத்தத்தில், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தடை செய்யப்படும் என்ற சட்டவிதி நீர்த்துப் போகும் அளவில், முற்றிலுமாக விதிகளில் மாற்றம் செய்து வெளியிட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடுவணரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டது.
இந்த நேரத்திலாவது தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் அளவுக்கு செயல்பட வேண்டும்.
இதற்கிடையே நடுவணரசு இருபது மைக்ரான், நாற்பது மைக்ரான், ஐம்பது மைக்ரான் என்று கேரி பைகளின் தடிமனைக் கூட்டிக் கொண்டே போனதே தவிர, கேரி பைகள் தயாரிப்பவர்கள் எந்த காலத்திலும் எந்த மைக்ரானைப் பற்றியும் கவலைப் படாமல், அவர்கள் விருப்பப்படி பத்து மைக்ரானுக்கும் கீழே என்று தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இந்த தடிமன் குறைந்த பிளாஸ்டிக் கேரி பைகளால், பிளாஸ்டிக் தொழில் அடைந்த அவமானம் அதிகம். தயாரிப்பாளர்களிடன் தடிமன் குறைந்த கேரி பைகளை ஓட்டாதீர்கள் என்றால் அவர்கள் கேட்பதில்லை.
பதினெட்டு மாநிலங்களில் பிளாஸ்டிக் கேரி பைகளை தடை செய்து விட்டார்கள். அதைப் பார்த்தாவது அரசு விதித்து உள்ள தடிமனில் பிளாஸ்டிக் கேரி பைகளை ஓட்டுவார்கள் என்று எதிர்பார்த்தால், அந்த எதிர்பார்ப்புக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. பழையபடியே தடிமன் குறைந்த பைகள்தான் ஓட்டபடுகின்றன. இதனால் எங்களைப் போன்ற சங்கங்களும் கேரி பைகளை தடை செய்வது சரிதான் என்று சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
நான் ஒரு முறை வெளியூர் சென்றபோது வழியில் காரை நிறுத்தி, ஒரு உணவகத்தில் இரண்டு இட்லி கொண்டு வருமாறு கூறினேன். பரிமாறுபவர் தட்டில் ஒரு பிரியாணி ஷீட்டை வைத்து அதன் மேல் இரண்டு இட்லிகளை வைத்து பரிமாறினார். முதலில் அந்த தட்டில் தொட்டுக் கொள்ள சட்னி போட்டார். ஒன்றும் ஆகவில்லை. அடுத்ததாக, சாம்பாரை ஊற்றினார். ஊற்றிய உடனேயே மஞ்சள் நிறத்தில் இருந்த சாம்பார் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி பிங்க் வண்ணமாகி விட்டது. அதிர்ச்சி அடைந்த நான், இட்லிகளை சாப்பிடாமலேயே அதற்கான பில்லுக்கு உரிய பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்து விட்டேன்.
நடவணரசு 1999 – ம் ஆண்டு முதலே தெளிவாக அறிவுறுத்தி வருவது, மறுசுழற்சி வாயிலாக கிடைக்கப்பெற்ற பிளாஸ்டிக் மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் ஷீட்டுகளையோ, கன்டெய்னர்களையோ, டப்பாக்களையோ உணவுப் பொருட்களை சேமிக்கவோ, எடுத்துச் செல்லவோ, பரிமாறவோ பயன்படுத்தக் கூடாது என்பதாகும்.
இன்றைக்கு சட்னி, சாம்பார் போட்டுக் கொடுக்கும் பைகள் ஆகட்டும், பிரியாணி ஷீட்டுகள் ஆகட்டும், ஒன்றாவது அசல் மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறாதா, என்று கேட்டால் இதற்கான பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கிறது. அனைத்தும் மறுசுழற்சி மூலப் பொருட்களில் இருந்து தயாரிக்கபடுபவை ஆகத்தான் இருக்கின்றன. இப்போது எல்லாம் மறுசுழற்சி பிளாஸ்டிக் பைகளில் சூடாக உள்ள காப்பி, தேநீர் கூட விற்கப்படுகின்றன. இவை எல்லாம் உடல் நலனுக்கு கேடானவை. இதை எல்லாம் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் புறக்கணித்து செயல்படும்போதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது.
பெரிய உணவகங்கள்ளோ, சிறிய உணவகங்களோ அனைத்திலும் உணவுப் பொருட்கள் தொடர்பாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அவற்றின் வேலை முடிந்த பிறகு, அப்படியே தெருக்களில் அல்லது குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள். எனவே இங்கே திடக்கழிவு மேலாண்மை கடைப்பிடிக்காததுதான் சிக்கல்களை உருவாக்குகின்றன. முறையாக பயன்படுத்திய பிளாஸ்டிக்கை மக்காத குப்பை என்று தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவது ஒன்றுதான் இதற்கான முறையான தீர்வு ஆக இருக்கும்.
பிளாஸ்டிக் கேரி பைகள் தடை செய்யப்பட்ட மாநிலங்களில், அதை எதிர்த்து உயர்நீதி மன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயங்களில், தடையை நீக்க வழக்குகள் தொடர்ந்தபோது, குப்பைகளுக்கு உற்பத்தியாளர்கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும், குப்பையை முறையாக அப்புறப் படுத்த வேண்டியது அரசாங்கத்தின் வேலைதானே என்று வாதாடினால், அதற்கு அரசுகள் அளிக்கும் பதில் மனுவில், குப்பைகளை எங்களால் சரியாக கையாள முடியவில்லை; அதற்கு வேண்டிய நிதி வசதியும் இல்லை; ஆட்களும் இல்லை, ஆகவேதான் பிளாஸ்டிக் கேரி பைகளைத் தடை செய்தோம் என்று கூறுகிறது. தீர்ப்பாயங்களும் அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்டு பிளாஸ்டிக் கேரி பைகளை தடை செய்தது சரிதான் என்று தீர்ப்பு அளித்து விடுகின்றன.
2002 -ல் பிளாஸ்டிக் கேரி பைகளுக்குத் தடை என்ற அறிவிப்பு வந்தபோது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தடை இல்லை. அந்த தடையை எதிர்த்து போராடினோம், வெற்றி பெற்றோம். ஆனால் 2018 -ன் நிலைமை வேறு. தற்போது பதினெட்டு மாநிலங்களில் ஏற்கெனவே தடை நடைமுறையில் உள்ளது. நம் மாநிலம் பத்தொன்பதாவது ஆகும். கேரி பைகளைப் பொறுத்தவரை அதைத் தயாரிப்பவர்கள் தவிர, மற்ற பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பவர்கள் அனைவரும் அதற்கு எதிர்ப்பாகத்தான் உள்ளனர். அதைப் போன்றே உணவுப் பொருட்கள் தொடர்பான தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு மீதும் கோபத்தில்தான் உள்ளனர்.
எனவேதான் எங்கள் சங்கம், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்; பனியன் டைப்பில் உள்ள கேரி பைகள் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு தடை செய்யப்பட வேண்டும்; உணவுப் பொருட்கள் தயாரிக்க, பரிமாற, சேமித்து வைக்க, விற்பனை செய்ய, எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய வேண்டும்; மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் தவிர மற்ற அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் எந்த வித தடையும் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.” என்றார், திரு. சங்கரன்.(90030 23815)

– நேர்மன்

வரவு, செலவுகளை மனைவி பார்த்துக் கொள்கிறார்!

0

– பால்சன் எஞ்சினியரிங் திரு. அழகுதுரை

வேலை பார்த்தாலும், தொழில் செய்தாலும் முழு மனதுடன் செயல்பட வேண்டும். அதுவே வளர்ச்சியைக் கொண்டு வரும். சிறப்பாக வேலை செய்பவர்கள், அந்த நிறுவனத்தின் உயர்பதவிகளுக்கு செல்வார்கள். அல்லது வாய்ப்பு வரும்போது சொந்தமாக தொழில் தொடங்கி வெல்வார்கள். இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறார், திரு. அழகுதுரை. இவர் சென்னை, திருமுல்லைவாயில் தொழிற்பேட்டையில் உள்ள பால்சன் எஞ்சினீயர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்.
பாளையங்கோட்டை அரசினர் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் பி. இ. பட்டம் பெற்றபின், சென்னையில் உள்ள ஒரு பெரிய வாட்டர் பிளான்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கே அவர் எப்படி பணி புரிந்தார்? அடுத்த கட்ட வளர்ச்சி எப்படி தொடங்கியது? இது பற்றி அவர் கூறியபோது,
”வேலை பார்த்த அந்த நிறுவனத்தில் ஆர்வத்துடன் உழைத்தேன். நான், வேலை பார்த்த அந்த நிறுவனத்தின் உரிமையாளரே அசந்து போவார். போதுமான ஆட்கள் இல்லாத நிலையிலும் பலமுறை நான் தனியாக இருந்து, எந்திரங்களை வடிவமைத்து இருக்கிறேன். அந்த உழைப்புதான் என்னுடைய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது. உரிமையாளரிடமும் நல்ல பெயர் வாங்கித் தந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்தமாக வாட்டர் பிளான்ட் தொழிலில் இறங்கலாம் என்று எண்ணி அந்த நிறுவன உரிமையாளரிடம் அதைப்பற்றிக் கூறியபோது, அவர் என்னை ஊக்கப்படுத்தி, அவருக்கு வந்திருந்த சில ஆர்டர்களையும் கொடுத்து உதவினார்.
தொழிலை என் நண்பர் ஒருவரோடு சேர்ந்து தொடங்கினேன். நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. இடைஇடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் எங்களுக்குள் வரத் தொடங்கின. நண்பரிடம் நேரடியாக இது பற்றிப் பேசி, அவரிடம் இருந்து பிரிந்து எனது வாழ்விணையர் திருமதி. சொர்ணகலாவுடன் இணைந்து பால்சன் (Paalson) எஞ்சினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினேன்.
ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். பொதுவாக, நீர் சுத்திகரிப்பு பிளான்ட் அமைப்பவர்கள், அவற்றுக்கான எந்திரங்கள், கருவிகளை வெளி நிறுவனத்தில் இருந்து வாங்குவார்கள். நாங்கள் அப்படி வெளி நிறுவனங்களில் இருந்து வாங்குவது இல்லை. அனைத்து விதமான எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களை சொந்தமாக தயாரித்து பயன்படுத்துகிறோம். எங்கள் நிறுவனத்தில் ஏழு மெக்கானிக்கல் பொறியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள். நேர்மையான உழைப்பாளிகள். குறிப்பாக, நேரத்திற்குள் பிளான்ட்டை அமைத்து முடித்து விடுவார்கள்.
அண்மையில் தூத்துக்குடியில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்ககு கடல் நீரை குடிநீராக்கும் பிளான்ட் ஒன்றை அமைத்துக் கொடுத்தோம். ஒரு மணி நேரத்திற்கு மூன்றாயிரம் லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்றித் தரும் இந்த பிளான்டில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் நாங்களே தயாரித்தவைதான்.
எங்களிடம் நூற்றுக்கும் குறையாத நிலையான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அதாவது, பிளான்ட் அமைத்துத் தருவதோடு எங்கள் வேலை முடிந்துவிடுவதில்லை. அதற்கான பழுதுபார்ப்பு சேவைகளையும், நாங்களே செய்து தருகிறோம். ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய்க்கு அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் ஒரு ஏக்கரில் எந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. சுமார் நூறு பேர்களுக்கு நேர்முகமாகவும், சுமார் ஐநூறு பேர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்குகிறோம்.
எங்கள் தொழில் சிறப்பாக நடப்பதற்கு ஐந்து உத்திகளை பின்பற்றுகிறேன். அவை,
1. எந்திரங்கள் தயாரித்துக் கொடுத்தல் மற்றும் பிளான்ட் அமைப்பதை விரைவாக முடித்துக் கொடுத்தல்.
2. வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த செலவை விட குறைந்த செலவில் செய்து கொடுக்கிறோம்.
3. வாடிக்கையாளர்களுடனான நட்புறவை பேணிக் காக்கிறேன். அவர்களுக்கான வேலைகளைச் செய்து கொடுக்கும்போது ஒரு அணுகுமுறை, வேலை முடிந்தவுடன் ஒரு அணுகுமுறை என்று இருக்காது. எப்போதும் ஒரே மாதிரியாக பழகுவேன். ஒரு பிளான்ட்டில் சின்னதாக ஒரு பழுது ஏற்பட்டிருக்கும். அந்தப் பழுதை நாம் போய் செய்து கொடுத்தால் அதற்கான கட்டணமாக ஒரு சிறிய கட்டணத்தையே பெற முடியும். ஆனாலும் அதனை எந்த தயக்கமும், தள்ளிப்போடலும் இல்லாமல் செய்து கொடுப்பேன்.
4. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிக்கவனத்துடன் பணிகளைச் செய்து கொடுப்பேன்.
5. நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்.
நாங்கள் அமைக்கும் பிளான்ட்கள் தவிர மற்ற எங்களைப் போன்ற தொழில் செய்யும் நிறுவனங்களுக்குத் தேவையான எந்திர வடிவமைப்புகளையும் செய்து கொடுக்கிறோம். தற்போது புதியதாக உணவுப் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்கு தேவையான குழாய்களையும் அமைத்துத் தருகிறோம். இந்த வாய்ப்பு கூட வாடிக்கையாளர்களிடன் நாங்கள் கொண்டிருக்கும் நட்புணர்வால் கிடைத்தது. அதாவது, நாங்கள் அமைத்துக் கொடுத்த ஒரு வாட்டர் பிளான்ட்டில் இருந்த மேலாளர், இன்னொரு நிறுவனப் பணிக்கு சென்றார். அங்கே உணவத் தொழில் பிரிவுக்கான குழாய்கள் அமைக்க வேண்டும். அவர், உடனே என்னை அழைத்து, அந்த பணியை செய்து கொடுக்கும் வாய்ப்பை வழங்கினார். இப்போது எங்கள் நிறுவனத்தின் பணிகளில் அதையும் இணைத்துக் கொண்டோம்.
எங்கள் நிறுவனம் இலாபகரமாக செயல்படுவதற்கு என் மனைவி திருமதி. சொர்ணகலா இயக்குநராக இருப்பதும் ஒரு காரணம். பண வரவு செலவை அவர்தான் நிர்வகிக்கிறார். இதனால் என்னால் மற்ற பணிகளை சிறப்பாக கவனிக்க முடிகிறது.” என்றார், திரு. அழகுதுரை.(8825846135)
இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள தலைவன்கோட்டை. இவருடைய தந்தையார் ஒரு பருத்தி வணிகர். திரு. அழகுதுரை ஒரு தமிழ் ஆர்வலர். தமிழர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு வடமொழி கலவாத தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும் என்று விரும்புகிறவர். அதை பரப்புரையாகவும் மேற்கொள்பவர். இதன் காரணமாகவே தன் மகனுக்கு அதியமான் என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

ஆ. வீ. முத்துப்பாண்டி

எட்டு வழிச் சாலை – சில உண்மைகள்

0

எட்டு வழி சுங்கச் சாலையின் நோக்கம் தூரத்தையும், நேரத்தையும் குறைப்பதுதான் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே உள்ள சென்னை-சேலத்திற்கான 3 சாலைகளுக்கான தூரமும், பயணிப்பதற்கான நேரமும், மதுரவாயல் முதல் சேலம் வரை கணக்கிடப்பட்டு உள்ளது.
புதிதாக உத்தேசிக்கப்பட்டு உள்ள எட்டு வழிச்சாலைக்கான தூரமும், நேரமும் வண்டலூரை தாண்டி உள்ள புறவழிச்சாலையில் இருந்து கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் பழைய சாலைகளோடு ஒப்பிட்டு நேரமும், தூரமும் குறைவு என்று காட்டப்படுகிறது.
புதிய சாலை 277 கிலோ மீட்டர் தூரம் என்றும், பழைய சாலை 333 கி.மீ எனவும், பழைய சாலையில் செல்வதற்கு 5 மணி நேரத்திற்கு மேலாகும் என்றும், புதிய சாலையில் செல்வதற்கு 3 மணி நேரம் போதும் என்றும் இதற்கென தயாரிக்கப்பட்ட வாய்ப்பறிக்கையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் மதுரவாயலுக்கும், வண்டலூர் அருகில் தொடங்கும் சாலைக்கும் இடையே 24.89 கி.மீ தூரம் இருக்கிறது என்பதையும் அது பதிவு செய்திருக்கிறது. அதாவது பழைய சாலைக்கும், உத்தேசிக்கப்பட்டு உள்ள சாலைக்கும் இடையே 30 கி.மீ தூரம் மட்டுமே குறையும் என்பதை இந்த அறிக்கையை படிக்கிற எவராலும் புரிந்து கொள்ள முடியும்.
வண்டலூர் முதல் மதுரவாயல் வரை உள்ள போக்குவரத்து நெரிசலையும், அதனால் ஏற்படும் கால தாமதத்தையும் கணக்கிட்டால் வாகனப் போக்குவரத்து உச்சமாக இருக்கிற சமயங்களில், ஒரு மணி நேரத்தை விட அதிக நேரம் இதை கடக்க ஆகிறது. எனவே, தூரம் நேரம் குறித்து அறிக்கையில் சொல்லப்பட்டு உள்ள அம்சங்களும், அரசால் முன்வைக்கப்படும் வாதங்களும் மோசடியானவை, உண்மையை மறைக்கக் கூடியவை.
அஞ்சும் விவசாயிகள்
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கும், அனல்மின் நிலையத்திற்கும் நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு இன்று வரையிலும் அரசால் ஒத்துக் கொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு, இழப்பீடு தரப்படவில்லை. 2009ம் ஆண்டு உளுந்தூர்ப்பேட்டை – சேலம் சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இன்று வரையிலும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
இந்த அரசு, அந்த அரசு என்பதல்ல சிக்கல். இறுதியாக அரசுகளின் துணையோடு அதிகார வர்க்கமும், ஆளும் கட்சியும் இதைப்பற்றி எவ்வித கவலையும் இன்றி சாலை போட்டதோடு, தங்கள் பணி முடிந்து விட்டதாக மூட்டை கட்டி விடுகிறார்கள். நிலத்தின் வருமானமும் இழந்து, பயிரிடுவதற்கு நிலமும் இன்றி, அதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் துயரத்தை அரசு கவனத்தில் கொள்ளவில்லை.
காரில் போவோரும் கதறப் போகிறார்கள்
தமிழகத்தில் இயங்குகிற எந்த பேருந்தும் சராசரி 120 கி.மீ. வேகத்தில் செல்ல முடியாது. எனவே பேருந்தில் பயணம் செய்யும் சராசரி மனிதர்களுக்கு இதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவது இல்லை.
இந்த தடத்தில் அமையப் போகும் 8 சுங்கவரிச் சாவடிகள் மூலம் இழக்கப் போகும் தொகையை கணக்கில் கொண்டால் காரில் போகிறவர்களும் கதறவே போகிறார்கள்.
எது முன்னேற்றம்?
எந்த விதமான முன்னேற்றமும் வரக் கூடாதா? இந்தியா வளரக் கூடாதா? மாட்டு வண்டியில்தான் போக வேண்டுமா? இந்தியா வல்லரசாகக் கூடாதா என்கிற கேள்வியை தேசத்தின் நலனை முன் வைப்பவர்கள் என்கிற தோற்றத்தோடு ஒரு சிலர் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தேசம் என்பது நில எல்லை அல்ல. அதில் இருக்கும் மக்கள் என்பதை புரிந்து கொண்டால் இந்த தமிழகத்தின் கிராமப் புறங்களில், தாங்கள் உற்பத்தி செய்யும் தானியங்களையும், பொருட்களையும் கொண்டு செல்ல ஒற்றையடி பாதை கூட இல்லாத – மழைக்காலங்களில் குளங்களின் நடுவே நடந்து செல்கிறவர்களைப் பற்றி தெரிந்து இருக்கும் அரசு, அங்கு உள்ள அந்த சீரற்ற சாலைகளை மேம்படுத்தினால் இதே 10000 கோடி ரூபாய் பல லட்சம் பேருக்கு அவர்கள் பொருளை விரைவாகவும், இலகுவாகவும் கொண்டு செல்ல வாய்ப்பளித்து அவர்களுடைய வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும்.
ஆனால் இந்த சாலை சில விரல் விட்டு எண்ணத் தக்க பெரும் பணக்காரர்கள் லாபம் ஈட்டுவதற்கு உதவலாம். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அனைவரும் அறிய வேண்டும்.
எட்டு வழி சுங்கச் சாலையில் நிற்க முடியாது, பொருட்களை ஏற்றி இறக்க முடியாது. இளைப்பாற முடியாது. அதைத் தடுக்கும் வகையில் இரு பக்கமும் சுவர் எழுப்பப்பட்டு இருக்கும். ஒருவரின் நிலத்தின் நடுவே சாலை சென்றால் நிலத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கோ, அடுத்த பக்கம் உள்ள மற்றொரு நிலத்திற்கு செல்வதற்கோ அவர்கள் நடக்க வேண்டிய தூரத்தையோ, அதனால் அவர்கள் இழக்கும் நேரத்தையோ வாய்ப்பறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை.
தொழில் பெருகுமா?
சாலைகள் போட்டு விட்டதாலேயே தொழில் பெருகும், வேலை வாய்ப்புகள் வரும் என்றால் சென்னை – நாகர்கோவில் வழித்தடத்தில் இருக்கிற எல்லா மாவட்டங்களிலும் தொழில் செழித்தோங்கி வளர்ந்திருக்கிறதா? இந்தக் கேள்விக்கான பதில் என்ன?.
புதிய தொழில், வேலைவாய்ப்பு வருவது இருக்கட்டும், ஏற்கெனவே இருந்த 50,000 சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு விட்டதாகவும் அதன் காரணமாக 5 லட்சம் வேலை வாய்ப்புகள் பறி போய் விட்டதாகவும் தமிழக அமைச்சர் சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார். அதற்கான காரணமாக திரு. நரேந்திர மோடி அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி வரியும்தான் என்றும் சொல்லி இருக்கிறார்.
இதைச் சொல்லிக் கொண்டு இருக்கிற இந்த நேரத்தில் நம் மாநிலத்தில் ஒரு ஒப்பந்தக்காரர் வீட்டில் இருந்து ரூபாய் 174 கோடி பணமும், 105 கிலோவுக்கு மேல் தங்கமும் கைப்பற்றப்பட்டு உள்ளன என்று செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. எனவே கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை பொய் நம்பிக்கை ஆகி விட்டது.
சாலைக்கு மட்டும் நிதி ஓடி வருவது ஏன்?
ஒருசாலைக்கு 10,000 கோடி ரூபாய் தரத் தயாராக இருக்கும் மத்திய அரசு, தமிழகத்தில் இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு +2க்கு மேல் வழங்கக் கூடிய கல்வி உதவித் தொகையை கடந்த சில ஆண்டுகளாக முழுமையாக தரவில்லை.
அண்மையில் சட்டமன்றத்தில், துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டபடி இந்த வகையில் தமிழகத்திற்கு வர வேண்டிய தொகை ரூ. 1900 கோடி. முதன் முதலாக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியபோது அது ரூ.1500 கோடியாக இருந்தது. இப்போது ரூ.1900 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
படிப்புக்கு, வர்தாபுயலுக்கு, சென்னை வெள்ளத்திற்கு நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு பணம் தராத மத்திய அரசாங்கம், சாலைக்கு ஏன் ஆயிரம் கோடிகளை கொண்டு வந்து கொட்டுகிறது? இப்போதும் கூட மத்திய அரசாங்கம் இந்த 8 வழி சுங்கச் சாலைக்கு, 10.69 கி.மீ சாலை தூரம் மலைவழி செல்வதற்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைப்பு அனுமதி அளிக்கவில்லை. முதலமைச்சர் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தனது சொந்த விருப்பத்திற்குரிய திட்டம் என்று பலமுறை பேசி இருக்கிறார். அதில் காட்டாத அவசரத்தை இந்த சாலை தொடர்பாக காட்டுவது ஏன்?

– க. கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பால்பண்ணைகளை நம் நாட்டுக்கு ஏற்ப அமைக்க வேண்டும்

0

இஸ்ரேல் என்று அழைக்கப்படும் அந்த நாட்டில் வேளாண்மையும், பால்பண்ணைத் தொழிலும் உலகத்திலேயே மிகச் சிறப்பாக செய்யப்படுகிறது. இயற்கை வளம் குன்றிய வறண்ட பகுதி அதிகம் உள்ள இந்த நாட்டில், பசுக்கள், சராசரியாக ஒரு நாளைக்கு முப்பத்தைந்து லிட்டர் பால் தருவது ஒரு வியப்பு ஆகும். இதற்கு இங்கு குடியேறி உள்ள கூர்மதி நுட்பமும், ஆர்வமும் கொண்ட விவசாயிகளே காரணம்.
நாளொன்றுக்கு பன்னிரெண்டு லிட்டர் பால் தந்த பலாடி இனப் பசுக்கள் இருந்த இஸ்ரேல் நாட்டில் முப்பத்தைந்து லிட்டர் பால் தரும் பசுக்களை உருவாக்கி பெரும் பயன் அடைந்து உள்ளார்கள்.

இஸ்ரேல் மலைகளும், பாலைவனமும் கொண்ட ஒரு வறண்ட நாடு. இஸ்ரேலின் வடக்கு பக்கத்தில் மலைகளும், தெற்கு பக்கத்தில் பாலைவனமும் அமைந்து உள்ளன. இஸ்ரேல் நாட்டின் மொத்த நிலப்பரப்பு 27,800 சதுர மைல். அதில் 4,360 சதுர மைல் மட்டுமே பயிர் செய்யத் தகுதி வாய்ந்தது. ஆனால் தண்ணீர்ப் பற்றாக்குறையால் சுமார் இரண்டாயிரம் சதுர மைல் மட்டும்தான் விவசாயம் செய்கிறார்கள். இன்று உலகில் ஆரஞ்சு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இஸ்ரேல் நாட்டுக்கு ஒரு தனி இடம் உள்ளது.

பால் பண்ணைத் தொழில் அங்கு முழுமையாக கணினி மயம் ஆக்கப்பட்டு உள்ளது.­ சுமார் எண்ணூறு வகையான பால்பொருட்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

இங்கு அருங்காட்சியகங்கள் பல உள்ளன. நம் நாட்டில் உள்ளது போன்ற கலை, கலாச்சாரம், தொல்பொருள் ஆய்வுகள் சார்ந்த அருங்காட்சியகங்கள் தவிர பால்பண்ணைத் தொழில், அச்சுத் தொழில், தொடர்வண்டித் துறை, தானியங்களைப் பாதுகாத்தல் போன்ற பல தொழில்களுக்கும் தனித்தனியாக அருங்காட்சியகங்கள் உள்ளன.தொடக்கத்தில் இருந்த பலாடி இன பசுக்கள் குறைந்த அளவே பால் கொடுத்ததால் சிரியா. லெபனான் ஆகிய நாடுகளில் இருந்து அதிக பால் தரும் டமாஸ்கஸ் ரெட் என்ற இனப் பசுக்களை இறக்குமதி செய்தார்கள். இவற்றின் பால் அளவும் போதுமானதாக இல்லாததால் ஐரோப்பாவில் இருந்தும் அதிக பால் தரும் இனங்களை இறக்குமதி செய்தார்கள். இந்த பசுக்கள் உண்ணி காய்ச்சல் வந்து இறந்து விட்டன். ஆனால் டமாஸ்கஸ் ரெட் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஹாலந்து, அமெரிக்கா, கனடா நாடுகளில் இருந்து ஹால்ஸ்டீன், ஃப்ரீசியன் காளைகளை இறக்குமதி செய்து, டமாஸ்கஸ் ரெட் பசுக்களுடன் கலந்து ஆண்டுக்கு பத்தாயிரம் லிட்டருக்கு மேல் பால் தரும் இஸ்ரேலி ஹால்ஸ்டின் என்ற இனத்தை உருவாக்கினார்கள். இஸ்ரேலின் வறண்ட பகுதிகளில் வாழும் ஆற்றலும், அதிக பால் தரும் தன்மையும் உள்ளதாக இந்த இனம் அமைந்தது.

ஃப்,ரிசியன் போன்ற கால்நடைகளுக்கு குளம்புப் பகுதிகள் மிகவும் மென்மையாக இருக்கும். இவ்வகைக் கால்நடைகளுக்கு மென்மயான தரைதான் உகந்தது. இதனால் அங்குள்ள பால் பண்ணைகளில் கடினமான சிமென்ட் தளம் போடுவது இல்லை. தரை மென்மையாக இருக்க, ஆற்றுமணலைப் பரப்பி விடுகிறார்கள். ஆனால் நம் நாட்டில் சில பண்ணைகளில் விவரம் தெரியாமல் கான்கிரீட் தரை போட்டு விடுகிறார்கள். இது ஒரு தேவையற்ற செலவு ஆகும். பசுக்கள் உணவு உண்டபின் படுத்து ஓய்வு எடுக்க நல்ல மிருதுவான மெத்தை போன்ற தரையுள்ள கொட்டகைதான் உகந்தது. அவ்வாறு இல்லாமல் கடினமான கான்கிரீட் தரையிலோ, கருங்கல் பதித்த தரையிலோ படுக்க விட்டால், அவற்றுக்கு உடல்வலி ஏற்படும். அவ்வாறு வலி ஏற்படும்போது பசுக்களின் அசைபோடும் நிகழ்வுகள் தடைப்பட்டு செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அது மட்டுமின்றி அதிக எடை உள்ள பசுக்கள் கருங்கல் அல்லது கான்கிரீட் தரை மீது நிற்க நேர்வதால் பலவிதமான குளம்பு நோய்கள் வந்து விடுகின்றன. மேலை நாடுகளில் ஒரு பழமொழி உண்டு. ”குளம்பில் வலி ஏற்பட்டால், இருபது குடம் பால் கொடுக்கும் பசு கூட இரண்டு குவளை பால் கொடுக்கும் பசுவாக ஓர் இரவுக்குள் மாறிவிடும்”. இந்த பழமொழியை அறிந்த மேலை நாட்டினர்,அவர்கள் பசுக்களுக்கான கொட்டகைகள் அமைக்கும் முன், இது பற்றி நன்கு தேர்ச்சி பெற்ற ஆர்க்கிடெக்ட்களின் ஆலோசனை பெற்றே இடம் தேர்வு செய்து கொட்டகைகள் அமைக்கிறார்கள்.

பால் பண்ணைகள் அமைக்கும்போது, புவியியல் ரீதியாக நம் நாட்டுக்கு, நம் மாநிலங்களுக்கு ஏற்றபடி திட்டமிடாமல், மேலை நாட்டின் ஏதாவது ஒரு பால்பண்ணையின் மாதிரி வரைபடத்தைத் தேர்வு செய்து இமயம் முதல் குமரி வரை இது போன்றே இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. அதனால்தான் அரசு அமைத்த பால்பண்ணைகளின் முதலீடு அதிகமானதோடு, வெற்றிகரமாகவும் இயங்க முடியாமல் போனது.
இஸ்ரேலில் பால்பண்ணை அமைக்கும்போது தரத்தோடும், குறைந்த செலவோடும் அமைப்பதற்கென்றே சிறப்பு பயிற்சி பெற்ற கட்டடக் கலைஞர்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் பால்பண்ணை அமையும் இடத்தை அறிவியல் சார்ந்து ஆய்வு செய்து தேர்ந்து எடுக்கிறார்கள். அந்த பகுதியில் அடிக்கும் காற்றின் வேகம், ஈரப்பதம், சுற்றுப் புறத்தில் எழும் ஒலியின் அளவு போன்ற அனைத்தையும் கணக்கில் கொண்டு கட்டட வரைபடத்தைத் தயாரிக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கான பொருட்களைத் தீர்மானிக்கிறார்கள். பசுக்களின் வாழ்வு முறையை அறிந்தவர்களாக இருப்பதால், அவர்களால் மாடுகளுக்கான வீடுகளை சிறப்பாக அமைக்க முடிகிறது. அவர்கள் மாட்டுக் கொட்டகை என்று அழைப்பதில்லை. கால்நடைகளின் வீடு என்றே குறிப்பிடுகிறார்கள்.

தகடுகளால் ஆன கூரைகள், இரும்புத் தூண்கள் கொண்டே பெரும்பாலும் மாட்டு வீடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் விலை மலிவான பொருட்களைக் கொண்டே கட்டி உள்ளனர். தண்ணீல் தொட்டகளைக் கூட கான்கிரீட்டால் கட்டவில்லை. பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளையே பயன்படுத்துகின்றனர்.
எல்லாப் பசுக்களையும் கட்டுப்பாடு இல்லாமல் திரிய அனுமதித்து உள்ளனர். பசுக்கள் வெளியே செல்லாமல் இருக்க சுற்றிலும் கழிகளைக் கொண்டு தடுப்பு அமைத்து உள்ளனர். தீவனம் இருக்கும் பகுதிக்கு பசுக்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லும் வசதியோடு அமைத்து உள்ளனர். சில பகுதிகளில் மட்டுமே மேல் கூரை அமைத்து உள்ளனர். சில பகுதிகளில் கூரை கிடையாது. ஆங்காங்கே பல தண்ணீர்த் தொட்டிகள் வைத்து இருக்கிறார்கள். தீவனம் உண்டபின் பசுக்கள் தங்கள் விருப்பம்போல் கூரைக்கு அடியிலோ அல்லது திறந்த வெளியிலோ எங்கு வேண்டுமானாலும் சென்று படுத்து அசை போடலாம்.
மாடுகளின் உடல் வெப்பத்தைக் குறைக்க தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்தல் (ஸ்ப்ரிங்ளர், தண்ணீரைப் பனித்துளிகள் போலாக்கி சாரல் பரப்புதல் (மிஸ்டர்ஸ்) என்ற இரண்டு முறைகள் உள்ளன. இரண்டு முறைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்துகிறார்கள்.

இஸ்ரேல் நாட்டில் நம் ஊர்களில் செய்வது போல், பசுக்களை அவை கட்டி இருக்கும் கொட்டகையிலேயே வைத்து பால் கறப்பது இல்லை. அங்கு பால் கறப்பதற்கு என தனி பகுதிகள் அமைத்து இருக்கிறார்கள். நாள்தோறும் காலையும், மாலையும் பசுக்களை அங்கு ஓட்டு வந்து பால் கறந்த பின் அவை தங்கும் கொட்டகைக்கே அனுப்பி விடுகின்றனர். பால் கறக்கும் கருவிகள் கொண்டு பால் கறக்கப்படுகிறது.
குறைந்த நிலப்பரப்பும், தண்ணீர் பற்றாக் குறையும் உள்ள அந்நாட்டில் அவர்களால் தீவனப் பயிர்களை அதிகம் பயிரிட இயலவில்லை. பருத்தி. ஆரஞ்சு, மற்றும் பேரிக்காய்களையே அதிகம் பயிரிடுகின்றனர். அங்கு எந்த கால்நடைகளுக்கும் பசும் புல்லையோ அல்லது வேறு பசுந்தீவனங்களையோ தனித் தீவனமாக கொடுப்பது இல்லை. அவர்கள் உணவாகக் கொடுப்பது அடர் தீவனம் மட்டுமே. அதை டிஎம்ஆர் என்று குறிப்பிடுகிறார்கள். டிஎம்ஆர் என்பது பசுக்கள் உண்ணும் எல்லா உணவுப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொடுப்பது ஆகும். எந்த ஒரு தனி தீவனப் பொருளையும் தனி உணவாகத் தருவது இல்லை.

இந்த அடர் தீவனம் தயார் செய்ய, வழக்கமான நார் தீவனங்களான உலர் புல், பதனப் பசுந்தீவனங்களை மிக குறைவாகவும், அத்துடன் ஆரஞ்ச் தோல்கள், காய்கறிக் கழிவுகள், உலர்ந்த கடலைக் கொடிகள், பீர் ஆலைகளில் கிடைக்கும் தானியப் புண்ணாக்குகள், கோழி எரு, பருத்திச் செடி தண்டுகள் என்று விவசாயக் கழிவுகளைக் கொண்டு தீவனம் தயாரிப்பதால் செலவும் குறைகிறது. இவை கூட தகுந்த ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
ஒரு பால் பண்ணையின் மொத்த செலவில் 65% தீவன செலவு ஆகும்.
வேளாண்மையில் கணினியைப் பயன்படுத்துவது போலவே, பால் பண்ணைத் தொழிலிலும் எல்லா நிலயிலும் எல்லா செயல்பாடுகளையும் கணினி மூலம் ஒருங்கிணைத்து உள்ளார்கள். பால் கறக்கும் கருவிகளுடன், கணினியால் இயக்கப்படும் பால் அளக்கும் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. பால் கறந்து முடிந்த உடன் அந்த பசு எவ்வளவு பால் கறந்தது என்ற செய்தி கணினியில் பதிவாகி விடுகிறது.

இஸ்ரேலில் பாலின் கொள்முதல் விலை, அந்த நாட்டில் உள்ள விவசாயிகள் ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவழிக்க வேண்டி உள்ளது என கணக்கிட்டு, அதன் அடிப்படையிலேயே கொள்முதல் விலை ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது.
பாலைப் பதப்படுத்தி விற்கும் தொழிற்சாலைகள் என்ன விலைக்கு பாலை விற்க வேண்டும் என்றும் முடிவு செய்து அறிவிக்கபடுகிறது. நாட்டின் குடிமக்கள் வாங்கும் திறனும் கணக்கில் கொள்ளப்படுகின்றனது.
பாலையும், பால் பொருள்களையும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தைப்படுத்த பல புதிய உத்திகளை பால் பண்ணையாளர் குழுமம் வகுக்கிறது. அவர்களை பாலை ஏற்றுமதி செய்யாமல், மதிப்பு கூட்டப்பட்ட சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டிகளையே ஏற்றுமதி செய்கிறார்கள்.

அண்மைக் காலமாக பல முன்னோடி இந்திய பால் பண்ணையாளர்கள், இஸ்ரேல் நாட்டுக்கு சென்று, பல புதிய நுட்பங்களைக் கற்றிறிந்து வந்து செயல்படுத்தி வெற்றி பெறுகிறார்கள்.

– டாக்டர் வே. ஞானப்பிரகாசம்

வணிக வளர்ச்சிக்கு காந்தி சொன்ன ஆலோசனைகள்

0

அண்ணல் காந்தியடிகளை பொதுவாக நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தவர் என்றுதான் பெரும்பாலானவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் அவர் பன்முக ஆளுமை கொண்ட மாமனிதர். தனி மனித வாழ்விலும், பொது சமுதாய வாழ்விலும் அவர் தொட்டு முத்திரை பதிக்காத துறைகள் இல்லை.

அவர் ஒரு சிறந்த தொழில் முயல்வோர். தொழில்களை உருவாக்கியவர். அதற்கான முதலீட்டைக் கண்டு பிடித்தவர். வேலை வாய்ப்பை உருவாக்கியவர். உற்பத்தி செய்த பொருட்களுக்கு அங்காடியைக் கண்டு பிடித்தவர். ஒரு சிறந்த உற்பத்தியாளர், வணிகர் ஆகியோருக்கு வேண்டிய அத்தனை பண்புகளையும் பெற்று இருந்தவர் இது கற்பனை அல்ல; நாடறிந்த வரலாற்று உண்மை.

அவர் கதர், கிராமத் தொழில்களை வளர்ப்பதன் மூலம் கிராமப் பொருளாதாரத்தை வலுவான அடிப்படையில் அமைக்க முயன்றார் என்பதைப் பலர் அறிந்து இருக்கலாம். அந்த முயற்சியில் அவர் ஒரு உற்பத்தியாளராகவும், வணிகராகவும் செயல்பட்டார்.
அவர் அகில இந்திய நூற்போர் சங்கத்தையும், அகில இந்திய கிராமத் தொழில் சங்கத்தையும் நிறுவினார். அவற்றிற்கான ஊழியர்களை பயிற்சி அளித்து உருவாக்கினார். வீடுகளில் உற்பத்தி செய்த பொருட்களை விற்க கதர் கடைகளை ஏற்படுத்தினார். விற்பனைக்கு வழிகாட்டினார்.

ஆதாயமும் வளர்ச்சியும்:
கதர் கிராமக் கைத்தொழில் நிறுவனங்கள் சேவைக்காக உருவாக்கப் பெற்றவை. ஆனால் அவை தொடர்ந்து வாழ ஆதாயம் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இப்பொழுது நிர்வாகத் துறையினர் நீடித்த தொடர் வளர்ச்சி (Sustainable Growth) என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர். அதாவது தொழில், வாணிக நிறுவனங்கள் எதிர்கெள்ளும் சிக்கல்களைத் தாக்குப் பிடித்து வளர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதுதான் சரியான வளர்ச்சி.

காந்தியடிகள் இந்தக் கருத்தினைச் செயல் படுத்திக் காட்டினார். அவர் காலத்தில், அவர் வழி காட்டுதலில் தொடங்கப் பெற்ற கதர்க் கடைகள் இன்றும் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆலைத் தொழில்களின் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஈடு கொடுக்க முடிகின்றது. காரணம் அவை பின்பற்றும் நடைமுறைக் கொள்கைதான்.
வாடிக்கையாளருக்கு முதலிடம்:

அவர் கதர், கிராமத் தொழில் பொருள் வாணிபத்தில் வாடிக்கையாளருக்கு முதலிடம் கொடுத்தார். பொருட்கள் உற்பத்தியின் நோக்கம், நுகர்வோரின் தேவையை நிறைவு செய்வது. அதாவது பயன்பாடுள்ள பொருட்களை உற்பத்தி செய்வது. பயன்பாடு என்பதில் மன நிறைவு அடங்கி இருக்கின்றது. எடுத்துக் காட்டாக சேலையைக் கூறலாம். அது வெறும் துணி மட்டும் அல்ல. உடுத்துபவரின் அழகுக்கு அழகு சேர்ப்பதாகவும் இருக்க வேண்டும். அதாவது உற்பத்தியிலும் நுகர்வோர்தான் நோக்கமாக இருக்கின்றார்.
விற்பனையில் நுகர்வோர் நேரிடையாக பங்கு பெறுகின்றார். ஒரு கடையில் வந்து பொருளை வாங்குபவர் அந்தக் கடைக்கு வாடிக்கையாளர் ஆதாரமாக அமைகின்றார். இதனை மிக அருமையாக அண்ணல் வலியுறுத்திக் கூறிகின்றார்.

ஐந்து மணியான கருத்துக்கள்: ஒரு முறை அண்ணல் ஒரு கதர்க் கடையைத் திறந்து வைக்கின்ற பொழுது வாடிக்கையாளரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஐந்து மணிக் கருத்துகளைக் கூறியுள்ளார். அவை இன்றும், என்றும் வணிகர்கள் மனங்கொள்ள வேண்டியவை. அவற்றை விளக்கலாம்.

1.வாடிக்கையாளர் நமது இடத்திற்கு வரும் மிக முக்கியமானவர்
ஒரு கடை வைத்திருப்பது பொருட்களை விற்பனை செய்வதற்காக. கடைக்கு வருகின்றவர்களின் நோக்கம் பொருட்களை வாங்குவது; வேடிக்கை பார்ப்பது அல்ல.
கடைக்க வருபவர்களில் சிலர்தான் வந்த உடனே இந்த பொருள் வேண்டு மென்று கூறி விலையைக் கேட்டு தேவைப் பொருளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் ஒரு பொருள் வாங்க பல பொருட்களைப் பார்ப்பார்கள். விலை, தரம் பற்றி பல கேள்விகள் கேட்பார்கள். வாங்கலாம். இல்லை பக்கத்துக் கடைகளைப் பார்த்து விட்டு வகுவதாகக் கூறிச் செல்லலாம். இந்த நிலையில்தான் விற்பனையாளர்.பொறுமை காப்பது கடமையாகின்றது. விற்பனையாளர் நடந்து கொள்ளும் முறையில் வாடிக்கையாளர் திரும்பத் தேடி வர வேண்டும்.கடைக்கு வருகின்ற நுகர்வோரை நமது வாடிக்கையாளராக மாற்றுவது தனிக் கலை. இதற்கு நிறையத் திறமை வேண்டும்; பொறுமை வேண்டும். அதற்கு கடைக்கு யார் வந்தாலும் அவர் முக்கியமானவரென்று கருதும் மனம் வேண்டும்.
முக்கியமானவர் என்று கருதினால், அவருக்குத் தக்க மரியாதை கொடுப்போம். சிறப்பாக உபசரிப்போம். அன்போடு பேசுவோம். இது விற்பனையைக் கூட்டும்.

2. அவர் நம்மை நம்பி இல்லை; நாம் அவரை நம்பி இருக்கின்றோம்
காந்தியடிகள் ஒரு ஆதாரமான பொருளாதாரக் கருத்தை மிக எளிமையாகக் கூறி விடுகின்றார். பொருளாதார நடவடிக்கைகளில் யார் யாரைச் சார்ந்திருக்கின்றார்கள் என்பது முக்கியம். வாடிக்கையாளர் கடையைத் தேடி வருவதால் அவர் தன்னைச் சார்ந்திருப்பதாக எண்ணக் கூடாது. அப்படி எண்ணுவது ஒரு மயக்கமான கருத்து.
இந்தக் கடை இல்லை என்றால் சந்தைக் கடை, என்று ஒரு பழமொழி கூறுவார்கள். இதுதான் நுகர்வோரின் மனநிலை. ஒரு கடைதான் இருக்கின்றது; அதை விட்டால் வேறு வழி இல்லை, என்ற முற்றுரிமை நிலை பெதும் இருப்பதில்லை. இதனைக் கடைக்காரர் உணர்ந்து செயல் பட வேண்டும்.
இதில் ‘நம்பிக்கை’ என்ற கருத்து உள்ளடக்கம். வாடிக்கையாளருக்கு கடையின் மீது, வாங்கும் பொருளின் மீது நம்பிக்கை எற்பட வேண்டும். இந்த நம்பிக்கைதான் நல்ல எண்ணமாக (Good Will) உருவாகின்றது. கடைக்கு வருகின்ற நுகர்வோர் வாடிக்கையாளராகி தொடர்ந்து வருவது விற்பனையாளரின் கையில் இருக்கின்றது.

3. நம் வேலையில் அவர் குறுக்கிடவில்லை. நம் வேலைக்கு ஆதாரனமானவர்
பொதுவாக விற்பனையாளரிடம் இருக்கும் மனோபாவத்தை காந்தியடிகள் சுட்டிக் காட்டுகின்றார்.
சில வேளைகளில் கடைக்கு வருகின்ற சிலர், பொருட்களின் விலைகளை விசாரிக்கின்ற பொழுது அவர்கள் வாங்குபவர்கள் போல் தோன்றாது. அப்படிப்பட்ட சமயங்களில் விற்பனையாளர் ஏனோ தானோ வென்று ஈடுபாடின்றி பதில் கூறலாம். இதனால் விற்பனை பாதிக்கும். மாறாக, அவரை ஆதாரமானவர் என்று கருதி ஈடுபாட்டோடு அவரைக் கவனித்தால் விற்பனை கூடும்.
இது ஒர் உளவியல் அணுகுமுறை. வருகின்ற வாடிக்கையாளர் பற்றி உடன்பாட்டு அணுகு முறையைப் (Positive Approach) பின்பற்ற வேண்டுமென்று கூறுகின்றது, உளவியல். எதிர்மறை அணுகுமுறை இருந்தால் நமது செயலில் வெறுப்பு வெளிப்படும். அது வாடிக்கையாளரை நோகடிக்கும்.

4. அவர் நமது வியாபாரத்திற்கு அந்நியரல்லர்; அவர் அதன் உறுப்பாவார்
காந்தியடிகளின் இந்தக் கருத்து கதர்க்கடை போன்ற பொது நிறுவனங்களுக்குச் சரியாக இருக்கலாம். தனியார் நிறுவனங்களுக்கு இந்தக் கண்ணோட்டம் சரியாக இருக்குமா? என்ற கேள்வி எழலாம்.
வாணிகம் என்பது இன்று நேற்றுத் தோன்றியதல்ல. எப்பொழுது தொழில்களில் தனித் திறமைகளை வளர்த்துக் கொண்டு தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்தார்களோ, அப்பொழுதே வாணிபம் பண்டமாற்றாகத் தொடங்கி விட்டது. பணம் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் விரைந்து வளர்ந்து இருக்கின்றது.
வாடிக்கையாளர்களை தங்களவர்களாக உறவு கொண்டு பழகுவது நமது பழக்கம்; மரபு; பண்பாடு. இதனை இன்று கிராமங்களில், நகரங்களில், சிறு கடைகளில் காணலாம். ஒரு வாடிக்கையாளர் சில நாட்களாக கடைக்கு வரவில்லை என்றால், வழியில் எங்கு பார்த்தாலும் “என்ன நீங்க நம்ம கடைக்கு வரக் காணோம்?”, என்று கடைக்காரர் கேட்பார். கடைக்காரரை வயதுக்கேற்ப, அண்ணாச்சி, அக்கா, அய்யா, அம்மா என்று அழைப்பதையும், அதே போன்று வாடிக்கையாளர்களை வணிகர்கள் கூப்பிடுவதும் இன்றும் நடைமுறை. இது நமது நாகரிகத்தின் வெளிப்பாடு.
இதன் அடிப்படை, வணிகர்கள் வாடிக்கையாளர்களை உற்றார், உறவினர்களாகக் கருதுவதுதான். குடும்ப நிகழ்வுகளுக்குக் கூட அழைப்பதைக் காணலாம்.
இந்த மனோபாவம் இருந்தால் வாணிபம் விரைந்து வளரும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வணிகர்கள் வாடிக்கையாளர்களைப் போற்றிக் கவனிப்பார்கள்.

5.அவருக்கு வேலை செய்வதன் மூலம் நாம் அவருக்கு உதவி செய்ய வில்லை. சேவை செய்ய வாம்ப்பளிப்பதன் மூலம் அவர் நமக்கு உதவி செய்கிறார்
காந்தியடிகள் கதர், கிராமத் தொழில் வளர்ச்சியை கிராம நிர்மாணப் பணியாகக் கருதியதால் “சேவை” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். கடைக்காரர்களைத் தொண்டர்களாகக் கருதினார்.
ஆனால் இந்தக் கருத்து அப்படியே வணிகத்திற்கும் எற்றதாக இருக்கக் காணலாம். எப்படி?
வணிகர்கள் வணிகத்தை ஒரு பணியாக ஏற்றுக் கொண்டவர்கள். அவர்கள் ஊதியத்தோடு ஓரளவு ஆதாயமும் எதிர்பார்ப்பவர்கள். அவர்கள் இயல்பு இலாபம் (Normal Profit) மட்டும் பெறுகின்ற வரை, அவர்கள் பணியிலும், “மக்களின் தேவையை அறிந்து நிறைவு செய்தல்”, என்ற சமுதாய நோக்கம் இருக்கும்.
மேலும் அவர்களின் தொழில் வளர்ச்சி வாடிக்கையாளர்களின் வளர்ச்சியை ஒட்டித்தான் அமையும்.
இப்பொழுது இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவிட்டு விளம்பரங்கள் செய்து வாணிபத்தைப் பெருக்கும் போக்கு வளர்ந்திருக்கின்றது. அவற்றை ஊன்றிக் கவனித்தால் மிகப் பெரிய தொழில், வாணிப நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைச் சார்ந்தே இருப்பது தெளிவாகும்.
இதில் அடிப்படையான ஒரு பொருளாதாரப் பேருண்மை அடங்கி இருக்கின்றது. ஒரு நாட்டின் பொருளாதார இயக்கமும், வளர்ச்சியும் ஒரு சாராரை மட்டும் சார்ந்து இருப்பதில்லை. ஒரு சமுதாயத்தில் உள்ள அனைவரும் அவரவர் ஆற்றலுக்கும், வளத்திற்குமேற்ப தங்களது பங்களிப்பை வழங்குகின்ற பொழுதுதான் பொருளாதாரம் முன்னேறும்.

தொலை நோக்குப் பார்வை:
அண்ணல் காந்தியடிகளின் முதன்மை நோக்கம், மக்கள் நலவாழ்வு. குறிப்பாக சமுதாயத்தில் அடித்தளத்தில் உள்ள கடையர்கள் கடைத்தேற வேண்டுமென்று கருதினார். அதற்கு நாட்டின் விடுதலையை வழி முறையாக எண்ணினார். நாட்டு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த பொழுதே பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொண்டார். அதன் விளைவுதான் பொருளாதார வாணிப வளர்ச்சி முயற்சிகள்.
காந்தியடிகளின் நோக்கில் தொழில்களின், வாணிபத்தின் வளர்ச்சி மக்களின் நல வாழ்வின் அடிப்படையில் அமைய வேண்டும். எல்லோரும் இணைந்து வாழ்கின்ற கூட்டு வாழ்வின் நலனில் தனிமனித நலம் அடங்கி இருக்கின்றது.
இங்கு ஒரு பொருளாதார பொது உண்மையைச் சுட்டுக் காட்டலாம். ஒரு நோக்கில் அனைவருமே நுகர்வோர்தான். பொருள் உற்பத்தியாளர்களும் கூட மற்றவர்களின் உழைப்பு, மூலப்பொருட்கள், சேமிப்பு ஆகியவற்றுக்கு நுகர்வோர்களாகவே இருக்கின்றனர். ஆதலால் நுகர்வோர் நலம் என்பது சமுதாய நலம் ஆகின்றது.
வாடிக்கையாளர்கள் நலம் பேணப்படுகின்ற பொழுது வாணிபமும், தொழில்களும் வளர்கின்றன. இதனால் சமுதாய நலமும் வளமும் காக்கப்படும்; பேணப்படும்.

– டாக்டர் மா. பா. குருசாமி

ஓய்வுக்குப் பிறகும் கடை வைக்கலாம்!

0

சென்னையில் உள்ள புனித இசபெல் மருத்துவமனையில் காவலராக இருந்து ஓய்வு பெற்றவர் திரு. ஜான்சன். இவருடைய மகன் திரு. பிரகாஷ் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் மயிலாப்பூரில் ஒரு தேநீர்க் கடை நடத்தி வருகிறார். ஒய்வு பெற்ற பிறகு தனி ஆளாக ஒரு கடை நடத்தும் அனுபவத்தை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

” நான் ஓய்வு பெற்ற பிறகு ஏதாவது செக்யூரிட்டி வேலைக்கு போகலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போது காவேரி மருத்துவமனையில் பில்லிங் பிரிவில் வேலை பார்க்கும் என் மகன் திரு. பிரகாஷ்தான் இந்த தேநீர்க் கடை வைக்கும் எண்ணத்தை உருவாக்கி அவரே அதற்கான எல்லாவற்றையும் செய்து கொடுத்தார்.

இப்போதும் நாள்தோறும் அவருக்கு நேரம் இருக்கும்போது கடைக்கு வந்து எனக்கு உதவுவார். தேவையான ஆலோசனைகளைச் சொல்வார். சில நேரங்களில் தேவைப்படும் பொருள்களையும் கொள்முதல் செய்து தருவார். என்னுடைய மனைவியும், மருமகளும் கூட எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

இதற்காக தேநீர் வகைகளை தயாரிக்க, பழச்சாறு தயாரிக்க கற்றுக் கொண்டேன். மற்றபடி பொதுவாக ஒரு தேநீர்க் கடையில் இருக்கும் பிஸ்கட் வகைகள், சாக்லேட் வகைகள், சமோசா, பானிபூரி, போன்ற தின்பண்டங்களையும் விற்பனை செய்கிறேன். இவை போக என் கடையின் சிறப்பம்சமாக ஆவாரம்பூ தேநீர் வழங்குகிறேன். உடல் நலனில் ஆர்வம் செலுத்துபவர்களும், சர்க்கரை குறைபாடு உள்ளவர்களும் ஆவாரம் தேநீரை விரும்பிக் குடிக்கிறார்கள்.

எனக்கு வியாபாரம் புதிது என்பதால் முதலில் கொஞ்சம் திணறல் இருந்தது. இப்பபோது நன்றாக பழகி விட்டது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் முதலில் இருந்ததை விட கணிசமாக அதிகரித்து உள்ளது.

அருகில் மேல்நிலைப் பள்ளி இருப்பதால் மாணவர்கள் நிறையப் பேர்கள் வருகிறார்கள். மருத்து மனை ஒன்றும் அருகில் இருக்கிறது. அங்கு மருத்துவம் பார்க்க வருபவர்களுக்கு பழச்சாறு வாங்கிக் கொண்டு போய்க் கொடுப்பவர்களால் பழச்சாறு விற்பனையும் அதிகரித்து வருகிறது.

கடைக்குத் தேவையான காப்பி ஃபில்ட்டர், மிக்சிகள் போன்றவற்றையும், மற்ற ஃபர்னிச்சர்களையும் என் மகனேதான் விசாரித்து வாங்கிக் கொடுத்தார். மருமகளும் விற்பனை உயர்வுக்க தேவையான நல்ல ஐடியாக்களை தருவதோடு பானிபூரிக்கு தேவையான மசாலாவைத் தயாரித்துத் தருவார். இந்த கடை நடத்துவது எனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது. எனக்கு தற்போது அறுபத்தொன்று வயது ஆகிறது.

ஆனாலும் ஒரு இளைஞரைப் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்கு வாய்ப்பை ஏற்படுத்திய என் மகனுக்கு நன்றி” என்றார், திரு. ஜான்சன்.

– ஆர். நந்தினி (மாணவ பத்திரிகையாளர்)

பன்றிப் பண்ணை வைக்க ஏற்ற இடம் எது?

0

– திரு. ஜான் எட்வின் பேட்டி

பன்றி இறைச்சி உண்ணுபவர்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் பன்றிப் பண்ணை வைத்தால் நிச்சயம் வெற்றி அடையலாம் என்கிறார், திரு. ஜான் எட்வின்.
கன்னியாகுமரி மாவட்டம், பொன்மனை, காயக்கரைக்கு அருகே சித்திரம் கோடு என்ற ஊரில் அமைந்து உள்ள தன்னுடைய பன்றிப் பண்ணையை எப்படி வெற்றிகரமாக நடத்துகிறார் என்பது குறித்து அவர் வளர்தொழில் இதழுக்கு அளித்த பேட்டியின் போது,
”’நான் எனது பன்றிப் பண்ணையில் வெள்ளைப் பன்றிகளையே வளர்த்து வருகிறேன்.

வெள்ளைப் பன்றிகளில் ஒயிட் யார்க்ஷையர், லார்ஜ் ஒயிட் யார்க்ஷையர், மிடில் ஒயிட் யார்க்ஷையர், ஸ்மால் ஒயிட் யார்க்ஷையர் என பல வகைகள் உள்ளன. இவை மட்டும் அல்லாமல் கருப்புப் பன்றி, டியூரோக் போன்ற வகைகளும் உள்ளன. வெள்ளைப் பன்றி விரைவில் எடை கூடும். கருப்புப் பன்றி எனப்படும் நாட்டுப் பன்றியின் எடை மெதுவாகத்தான் கூடும். இதனால் பொதுவாக அனைவரும் தங்கள் பண்ணைகளில் வெள்ளைப் பன்றிகளையே வளர்ப்பார்கள். ஆனால் வெள்ளைப் பன்றி இறைச்சியின் சுவையை விட கருப்புப் பன்றி இறைச்சியே அதிக சுவையுடன் இருக்கும்.

பன்றிப் பண்ணை வைக்க விரும்புகிறவர்கள் அந்தஅந்த பகுதியில் உள்ள மக்களின் உணவுப் பழக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும். பன்றி இறைச்சியை விரும்பி உண்ணுபவர்கள் இருக்கும் பகுதி என்றால் எளிதில் வளர்ந்த பன்றிகளை விற்பனை செய்ய முடியும். இல்லாவிட்டால் பன்றிகளை விற்பனை செய்வது அத்தனை எளிதாக இருக்காது. பன்றி இறைச்சி உண்ணும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைத்தே விற்பனை செய்ய முடியும்.

பன்றிகள் நிறைய குட்டிகள் போடும். ஒரு பன்றி ஒரு ஆண்டுக்கு இரு முறையும், இரண்டு ஆண்டுகளுக்கு ஐந்து முறையும் குட்டிகள் போடும். பன்றிப் பண்ணை அமைக்க விரும்புகறிவர்கள் தொடக்கத்தில் பத்து பெண்பன்றிக் குட்டிகளுடனும், ஐந்து ஆண்பன்றிக் குட்டிகளுடனும் தொடங்கலாம். விரைவிலேயே பன்றிகளின் எண்ணிக்கை பெருகி விடும். ஒரு ஆண்டில் ஒரு பன்றியின் எடை நூற்று இருபது முதல் நூற்று முப்பது கிலோ வரை வந்து விடும். ஒரு கிலோ நூற்றுப்பத்து ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

சிலர் ஐம்பது, அறுபது கிலோ இருக்கும்போதே கூட விற்பனை செய்வார்கள். அந்த பன்றிகளின் இறைச்சி சுவை குறைவாக இருக்கும். இலாபமும் குறைவாக இருக்கும். முழு வளர்ச்சி அடைந்த பிறகு விற்பனை செய்வதே லாபகரமானதாக இருக்கும். நான் நேரடியாக இறைச்சிக் கடைகளுக்கோ, உணவகங்களுக்கோ விற்பனை செய்வது இல்லை. தொடர்பாளர்களாக செயல்படும் வணிகர்கள் மூலமாகவே விற்பனை செய்கிறேன்.

பெரிய அளவுக்கு பன்றிகளுக்கு நோய்கள் எதுவும் வருவது இல்லை. அதனால் அவற்றுக்கு தடுப்பு ஊசிகள் அல்லது வளர்ச்சிக்கான ஊசிகள் எதுவும் போடும் தேவை இல்லை. எப்போதாவது அரிதாக நோய் வந்தால் சோர்ந்து படுத்துக் கொள்ளும். உணவு எடுத்துக் கொள்ளாது. உடனே கால்நடை மருத்துவரிடம் கேட்டு உரிய மருந்துகள் கொடுத்து குணப்படுத்த வேண்டும்.

பன்றிப் பண்ணைக்கான இடம் தேர்வு செய்யும் போது மக்கள் குடியிருப்பு அல்லாத இடங்களில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் தேர்வு செய்ய வேண்டும். கூடாரம் அமைத்து இருக்க வேண்டும். பண்ணையைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கக் கூடாது. மின்சார வசதி, தண்ணீர் வசதி இருக்க வேண்டும். இடம் தாராளமாக இருக்க வேண்டும். பன்றிகள் மீது ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீர் பீய்ச்சி குளிப்பாட்ட வேண்டும். எப்போதும் ஒரு பணியாளர் மேற்பார்வை செய்து கொண்டே இருக்க வேண்டும். போக்குவரத்து வசதியும் இருக்க வேண்டும்.

என்னுடைய பண்ணை கன்னியாகுமரி, திருவனந்தபுரம் அருகே இருப்பதால், அங்கெல்லாம் பன்றி இறைச்சிக்கு விற்பனை வாய்ப்பு இருப்பதால் என்னுடைய பண்ணை லாபத்துடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

உணவு விடுதிகளில் உள்ள உணவுக் கழிவுகளையே பன்றிகளுக்கு உணவாகக் கொடுக்கிறேன். அவற்றில் காய்கறி உணவுக் கழிவும், அசைவ உணவுக் கழிவுகளும் கலந்து இருக்கும். அதனால் பன்றிகளுக்குத் தேவையான புரதம் முதல் அனைத்து சத்துகளும் கிடைத்து விடும். உணவு விடுதிகளில் இருந்து உணவுக் கழிவுகளை எடுக்க நமக்கு பணம் கொடுப்பார்கள். அந்த வகையிலும் ஒரு சிறு லாபம் கிடைக்கும். பெரும்பாலும் திருவனந்தபுரத்தில் உள்ள உணவு விடுதிகளில் இருந்தே உணவுக் கழிவுகளை சேகரித்துக் கொண்டு வருகிறேன்.

கம்பு, மக்காச் சோளம், புண்ணாக்கு போன்றவற்றை கலந்தும் கொடுப்பேன். இந்த உணவு பன்றிகளின் எடையை கூட்ட உதவும். காலை, மாலை என இரண்டு வேளையும் உணவு கொடுக்க வேண்டும். இல்லையெனில் இருவேளைக்கான உணவையும் காலையில் போட்டு விட்டால், அவையே பிரித்து உண்ணும்.

பன்றிகளுக்கு உணவு மிகவும் முக்கியமானது. சரியாக உணவு அளித்தால் மட்டுமே அவை அமைதியாக இருக்கும். அவற்றுக்கு உணவு போதுமான அளவுக்கு இல்லாவிட்டால் கத்திக் கொண்டே இருக்கும்.

பன்றி வளர்ப்புத் தொழில் லாபகரமான தொழில் என்று நண்பர்கள் வாயிலாக கேள்விப்பட்டு, இது பற்றிய விவரங்களை எனக்குத் தெரிந்த கால்நடை மருத்துவரிடம் சென்று மேலும் அறிந்து கொண்டேன். இப்போது நான் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வந்து கொண்டு இருக்கிறது.” என்றார், திரு. ஜான் எட்வின்.(9095575884)

– ச. சங்கீதா (மாணவ பத்திரிகையாளர்)

சுற்றுலா தொழிலில் என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

0

சென்னையில் உள்ள மதுரா டிராவல்ஸ் நிறுவனம் பற்றியும், அதன் மேலாண் இயக்குநர் திரு. விகேடி. பாலன் பற்றியும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அவர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து சென்னைக்கு வந்து, தன்னுடைய உழைப்பாலும், முயற்சியாலும் முன்னேறி வந்த கதையை அறிந்து ஊக்கம் பெற்ற தொழில் முனைவோர் எண்ணற்றவர்கள். இவர் பொதிகை தொலைக்காட்சியில் நெறியாளுகை செய்த ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ இவருடைய சமுதாய அக்கறையை வெளிக்காட்டிய நிகழ்ச்சியாக அமைந்ததோடு, அந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற பலரின் வாழ்க்கையில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது.

இன்றைக்கு தமிழ்நாட்டுத் தொழில்துறையில் உள்ள சிக்கல்களில் ஒன்றாக அறியப்படுவது, தொழிலதிபர்களின், வணிகர்களின் பிள்ளைகள் படித்து விட்டு வேலைக்கு செல்லும் மனநிலை வளர்ந்து வருவது ஆகும். தொழில்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பு அளிக்கும் பெரிய தளம் தங்களிடம் இருப்பதை உணராமல், இத்தகைய இளைஞர்கள் வேலை பார்க்கச் செல்லும் மனநிலையை மாற்ற வேண்டும் என்று தமிழர்கள் வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய இளைஞர்களை தொழில் துறையில் சாதிப்பவர்களாக உருவாக்க வேண்டும் என்ற கருத்துப் பரப்பலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தன்னுடைய மகன் திரு. ஸ்ரீகரன் பாலனை, தன்னுடைய ‘மதுரா டிராவல்ஸ்’ நிறுவன நிர்வாகப் பணிகளில் வெற்றிகரமாக ஈடுபடுத்தி இருக்கிறார், திரு. விகேடி. பாலன்.

பொறியியல் பட்டதாரியான திரு. ஸ்ரீகரன்பாலனை சென்னை எழும்பூரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வளர்தொழில் இதழுக்காக பேட்டி கண்டோம். மிகுந்த உற்சாகத்துடன் நம்முடன் பேசினார். அவருடைய பேட்டியில் இருந்து…
”சென்னை மந்தைவெளியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 12-ம் வகுப்பை முடித்து விட்டு சோழிங்க நல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பி.இ.,(மெக்கானிகல்) படித்தேன்.

எனக்கு பிடித்த பாடங்கள் கணக்கும், இயற்பியலும்.. படிப்பை முடித்தவுடன் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை. நான் விரும்பிப் படித்த மெக்கானிக்கல் துறை சாரந்த வேலைக்கு முயற்சி செய்தேன். அதன் விளைவாக, ஒரு பிரபல நிறுவனத்தில் நான் விரும்பும்படியான வேலை கிடைத்தது. குறிப்பட்ட தேதியில் வேலையில் சேரும்படி அழைப்பு வந்தது. வேலையில் சேர்வதற்கு சில நாட்களுக்கு முன், நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கினேன். என் முழங்கால் மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். அதுவரை என்னுடைய படிப்பு, வேலை தொடர்பாக, அப்பா என்னுடைய விருப்பப்படியே செயல்பட அனுமதித்து இருந்தார். வேலை தேடும் முயற்சி தொடர்பாகக் கூட அவர் தடை சொன்னது இல்லை.

Also Read: தர்பூசணி மற்றும் மரவள்ளி சாகுபடி – சில குறிப்புகள்

அன்று படுக்கையில் இருந்த என்னிடம் முதல் முறையாக எனக்கு வழிகாட்டும் வகையில், ”நம்மிடம் நல்ல தொழில் உள்ளது. உனக்கு விருப்பம் இருந்தால் நீ ஏன் இதில் கவனம் செலுத்தக் கூடாது?” என்று ஒரு ஆலோசனை போலச் சொன்னார். அவர் குரலில் வற்புறுத்தல் தொனி எதுவும் இல்லை. எந்த முடிவாக இருந்தாலும் நீ எடுக்கலாம் என்பது போன்ற தொனிதான் இருந்தது.

முதலில் எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த பாடங்கள் கணக்கும், இயற்பியலும். சுற்றுலா தொழில் புவியியல் சார்ந்தது. இருந்தாலும் அப்பா மீது நான் வைத்திருந்த அளவு கடந்த மதிப்பு காரணமாக மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக் கொண்டேன். இதுவரை நம்மிடம் அப்பா எதுவுமே கேட்டது இல்லை; முதல் முறையாக கேட்கிறார், இதை மறுக்கக் கூடாது என்ற உணர்வும் இருந்தது.
தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பு அதன் அடிப்படைகளையும், நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ள விரும்பினேன். எங்கள் நிறுவனப் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் எனக்கு இல்லாததால் எனக்கு பயிற்சி வேண்டும் என்று கருதினேன்.

அப்பா, தன்னுடைய நண்பரும், எங்களைப் போன்ற டிராவல்ஸ் தொழில் நிறுவனத்தை நடத்துபவருமான திரு. சில்வஸ்டர் தாமஸ் நிறுவனத்தில் என்னை பயிற்சிக்காக சேர்த்து விட்டார். அரவுண்ட் த வேர்ல்ட் (Around The World) என்ற பெயர் கொண்ட அந்த நிறுவனம், சென்னை உள்பட இந்தியா முழுவதும் அலுவலகங்களைக் கொண்டது.

வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று பாஸ்போர்ட் வழங்குவது, படிவங்களை நிரப்பிக் கொடுப்பது போன்ற வேலைகளை முதல் மூன்று மாதங்களுக்கு செய்தேன். அதுவரை அந்த நிறுவனத்தின் தலைவர் திரு. சில்வஸ்டர் தாமஸ் அவர்கள் என்னிடம் பேசக்கூட இல்லை. என்ன ஏது என்று கூட விசாரிக்கவில்லை. இது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பயிற்சியில் தொடர்வதா, வேண்டாமா என்று நினைக்கத் தொடங்கினேன். அப்பாவிடம் சொல்லி விட்டு விலகிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் அவர் என்னை அழைத்து, தன் அருகில் அமர வைத்துப் பேசினார். அன்று முதல் அடுத்த மூன்று மாதங்களில் சுற்றுலா தொழில் தொடர்பான பல்வேறு நுட்பங்களை படிப்படியாக கற்றுக் கொடுத்தார். அவரைப் பற்றி நான் நினைத்தது தவறு என்பதைப் புரிந்து கொண்டேன்.

ஒரு வாடிக்கையாளரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர் மூலம் பல வாடிக்கையாளர்களைப் பெறுவது எப்படி, தொழிலில் ஏமாற்றுபவர்களை அடையாளம் காண்பது எப்படி, தொழிலை மேலும் வளர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன போன்ற ஏராளமான செய்தகளை அன்புடன் சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். அப்பா ஏன் அங்கே அனுப்பினார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

நான் அங்கு பயிற்சியில் இருந்த போதே கனடா நாட்டு நிறுவனம் வழங்கிய சுற்றுலா தொடர்பான ஆறுமாத படிப்பையும் முடித்தேன். இந்த படிப்பில் தென் இந்தியாவிலேயே முதல் மாணவனாக வந்தேன். திரு சில்வெஸ்டர் தாமஸ் என்னை பாராட்டி வாழ்த்தி நினைவு பரிசு வழங்கி அனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து, எங்களுடைய மதுரா டிராவல்சில் இணைந்து தந்தையுடன் பணியாற்றத் தொடங்கினேன்.

நான் சேர்ந்த தொடக்கத்தில், இங்கு சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுப்பது மற்றும் விசா வாங்கித் தருவதுதான் முக்கிய சேவையாக இருந்தது. அதோடு கூடுதலாக சுற்றுலா ஏற்பாடு செய்வதையும், சுற்றுலா செல்வதற்கு ஆலோசனை வழங்குவதையும் இணைத்தேன்.

சுற்றுலா ஏற்பாடு என்பது இன்று உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழில். சுற்றுலா செல்வோர் சுற்றிப் பார்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். மற்ற அனைத்து வேலைகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் அவர்களுக்கு தேவையான தங்கும் அறைகள் பதிவு செய்து கொடுத்தல், வாகன ஏற்பாடு செய்தல், தகுதி வாய்ந்த சுற்றுலா வழிகாட்டி உள்பட அனைத்துக்கும் நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்.

சுற்றுலாப் பயணிகள் புறப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள், அவர்களுக்கு உதவக் கூடிய அனைத்து தகவல்களையும் வழங்குகிறோம். தற்போது எங்கள் நிறுவனத்தில் நடைபெறும் எண்பது சதவீத பணிகள் சுற்றுலா தொடர்பான சேவைகள்தான். இந்த சேவையை நான் தொடங்கிய போது கை கொடுத்தவர்கள் என் நெருங்கிய நண்பர்கள்தான். முதன் முதலில் நான் வெற்றிகரமாக ஏற்பாடு செய்த ஐரோப்பா சுற்றுலாவுக்கு அவர்கள்தான் காரணம்.

இன்றைக்கு நேரடி ஆன்லைன் பதிவு அனைத்து மட்டங்களிலும் காணப்படுகிறது. பணத்தை சிக்கனப்படுத்தும் நோக்குடன் இதில் ஈடுபடுகிறார்கள். இதை நான் குறை சொல்ல மாட்டேன். ஆனால், இணைய வழியில் பதிவு செய்து பணம் செலுத்தியவர்கள் சுற்றுலா செல்லும் போது சில நேரங்களில் சிக்கல் உருவாவதைப் பார்க்க முடிகிறது. என் நண்பருக்கு வேண்டியவர் குடும்பத்துடன் ஊட்டி சென்றார். ஆன்லைனில் அறையை பதிவு செய்து விட்டு சென்று சேர்ந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கொஞ்சம் தாமதமாக சென்ற காரணத்தால் அந்த அறையை வேறு ஒருவருக்கு ஒதுக்கி விட்டனர். குளிரில் கைக் குழந்தையுடன் காரில் இருந்தபடி எங்களை தொடர்பு கொண்டு உதவி கேட்டார். உடனே வேறு விடுதியில் தங்க நாங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தோம்.

இன்னொரு நிகழ்வையும் இங்கு கூறியாக வேண்டும். எங்கள் மூலம் வளைகுடா நாடுகளுக்கு தனியாக பயணம் செய்த ஒருவருக்கு கொச்சி விமான நிலையத்தில் வைத்து திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. விரைந்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையை தெரிவித்து உடனடி உதவிகள் அவருக்கு கிடைக்க உதவினோம்.

ஒரு சான்றுக்காக இந்த நிகழ்வுகளைச் சொன்னேன். அந்த பொறுப்பு எங்களிடம் வரும் போது நாங்கள் ஒவ்வொரு கட்டத்தையும் கண்காணிக்கிறோம். நம்பகத் தன்மை கொண்ட ஓட்டல், விடுதிகள் எங்களுக்குத் தெரியும். அறை முன்பதிவு, வாகன ஓட்டுநரை தயாராக இருக்கச் செய்வது அத்தனையையும் எங்கள் பணியாளர்கள் கவனித்தபடி இருப்பார்கள். இடையில் ஏதேனும் குறைபாடு நேர்ந்தால் உடனே செயல்பட்டு அந்த குறையை களைந்து, பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். இணைய வழி பதிவு செய்து செல்வோருக்கு இந்த தனிப்பட்ட அக்கறையுடன் கூடிய சேவை கிடைக்குமா என்பது ஐயத்துக்கு உரியது.
எனவே வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் ஒரு நல்ல சுற்றுலா நிறுவனம் மூலம் செல்வதுதான் பாதுகாப்பானது.

வாடிக்கையாளர்களுக்கு விசா வாங்கிக் கொடுப்பது கவனமாக செய்ய வேண்டிய பணி. இதில் புதுப்புது விதிகளை அயல்நாடுகள் புகுத்திக் கொண்டே இருக்கின்றன. முன்பெல்லாம் பாஸ்போர்ட் மட்டும் போதும். இப்போது வங்கிப் புத்தகத்தின் ஆறுமாத கணக்கு விவரம் மற்றும் வருமானவரித் தாக்கல் விவரம் போன்றவற்றை கேட்கிறார்கள். நாட்டுக்கு நாடு அணுகு முறையில் வேறுபாடு உள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால் விசா கிடைக்காது.

எங்களைப் பொருத்தவரை இதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். புதிய விதிமுறைகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குகிறோம்.

நான் இங்கு பொறுப்பேற்ற பிறகு விசா வாங்கித் தருவதில் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தினேன். அதன்படி, எங்கள் நிறுவனத்திற்காக ஒரு மொபைல் ஆப் உருவாக்கினோம். வீட்டில் இருந்தபடியே ஒரு வாடிக்கையாளர் இதன் மூலம் விசா பெற முடியும்.

இன்றைக்கு பலர் பெற்றோரை இங்கு விட்டுவிட்டு வெளிநாடுகளில் பணி புரிகிறார்கள். அங்கு இருந்தபடியே எங்களை அழைத்து பெற்றோருக்கு விசா வாங்கிக் கொடுத்து, அனுப்பும்படி கேட்டுக் கொள்வார்கள். எங்கள் ஊழியர்களை தொடர்புள்ள வீடுகளுக்கு அனுப்பி இப்பணியை செய்து கொடுக்கிறோம்.

கடந்த ஏழு ஆண்டுகளில் இதுவரை 32 வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். அங்கு உள்ள சுற்றுலா வாய்ப்புகளை ஆராய்ந்து அறிந்து கொண்டேன். இவற்றில் 28 நாடுகளுக்கு போய் வந்த செலவை, அரசு தொடர்பான சுற்றுலாத் துறைகளே ஏற்றுக் கொண்டன. ஏன் என்றால் என் பயணம் அவர்கள் மேம்பாட்டையும் உள்ளடக்கியது. இங்கிலாந்து நாட்டில் பயணம் செய்த போது ஒரு இடத்தில் பயணிகளோடு பயணியாக ஒருவர் நின்று பூங்கொத்து கொடுத்து என்னை வரவேற்றார். பின்னர்தான் தெரிந்தது அவர் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்று. அங்கு மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையை எவ்வளவு ஆர்வத்துடன், எளிமையாக செய்கிறார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

அண்மையில் குடும்ப உறவினர்கள் ஒன்று சேர்ந்து 220 பேர் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். 119 பேருக்கு விசா கிடைத்து விட்டது .ஒருவருக்கு மறுத்து விட்டனர் .அந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி. நாங்கள் தொடர்புடைய அரசிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறிப்பிட்ட நபர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிய அங்கு சென்றவர் என்பதும் குறிப்பிட்ட நாட்களை விட அனுமதி இன்றி கூடுதலாக அங்கு தங்கியதால் திருப்பி அனுப்பப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவருக்காக நாங்கள் உத்தரவாதம் அளித்து அனுப்பி வைத்தோம்.
இன்றைக்கு நினைத்துப் பார்க்க முடியாத புதிய உலகில் வலம் வந்து கொண்டு இருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்குப் பயணம் செய்யும் போதும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறது. வளர்தொழில் இதழ் வாயிலாக தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது “உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப சுற்றுலா செல்வதை வாழ்வில் ஓர் அங்கமாக்கிக் கொள்ளுங்கள். அது உற்சாகத்தை புதிய சிந்தனைகளை உங்களுக்குள் விதைக்கும்”.

பதினைந்து நாள் பயணமாக சீனா சென்று இருந்தேன். அங்கு ஜின் ஜூ என்ற மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 3000 பேர் வசிக்கிறார்கள். கிராமத்தைச் சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர் அமைத்து உள்ளார்கள். கிராம மக்கள் அனைவருமே நாள்தோறும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கிராமத்தை ஒட்டி உள்ள மிகப்பெரிய உடற்பயிற்சி மையத்தில் காலை ஆறு மணி முதல் ஏழு மணிவரை உடற்பயிற்சி செய்கிறார்கள். பின்னர் வேலைக்கு செல்கிறார்கள்.

பணி முடித்து அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து ஒருவரோடு ஒருவர் உரையாடிய படி, இரவு உணவை சாப்பிடுகிறார்கள் சரியாக எட்டு மணிக்கு உறங்கச் சென்று விடுகிறார்கள். மனதிற்கு பரவசமூட்டிய அந்தக் கிராம சூழலில், ஒரு 92 வயதுப் பாட்டி என்னைப் பெரிதும் கவர்ந்தார். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து அங்கு வருகை தருவதால் சுற்றுலா வரைபடங்களை குவித்து வைத்து முகமலர்ச்சியுடன் விற்பனை செய்து கொண்டு இருந்தார். சீன நாட்டில் நட்பும், உறவுமாக ஒற்றுமையுடன் கூடி வாழ்கிறார்கள்.

மேலை நாடுகளில் திட்டமிட்டு அனைத்து பணிகளையும் செய்கிறார்கள்.
இதுபோல எண்ணற்ற அனுபவங்கள் வெளிநாடுகளில் எனக்கு கிடைத்தன. நம் நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டுக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் நிறைந்த மாநிலம் நம்முடையது.

திறமை மிக்க மருத்துவர்களுடன் ஏராளமான மருத்துவ மனைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு வந்து குறைந்த செலவில் தரமான சிகிச்சைகளை பெற்றுச் செல்கிறார்கள். ‘பல்’ தொடர்புடைய சிகிச்சைகள் பல மேலைநாடுகளில் காப்பீட்டு வரம்புக்குள் வருவதில்லை. அந்த வகையில் அங்கு ரூ 3 லட்சத்துக்கு கிடைக்கும் தரமான சிகிச்சை இங்கு முப்பதாயிரத்திற்கு கிடைக்கிறது. இதனால் மருத்துவ சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் வருகிறார்கள்.

நான் இந்த தொழிலுக்கு வந்த புதிதில் ஒரு அதிர்ச்சியான தகவலை கேட்டேன். கல்லூரிகளில் சுற்றுலாவை முதன்மைப் பாடமாக கொண்ட பட்டப் படிப்புகளில் அதிக மாணவ மாணவியர் சேருவது இல்லை. இந்தத் துறையில் குவிந்து உள்ள தொழில் வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் அவர்களிடம் கொண்டு செல்வதற்காக சென்னையில் 12 கல்லூரிகளை தேர்வு செய்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இந்த நிகழ்வுகளில் வெளிநாட்டு சுற்றுலாத் துறையினர் நம் மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கின்றனர். நம் மாணவ, மாணவகள் வெளிநாட்டு மொழிகளை எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். அண்மையில் விசா வழங்கும் இங்கிலாந்து நாட்டின் அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு நம்முடைய அரசு கல்லூரியில் படித்த ஒரு மாணவி பணியாற்றிக் கொண்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் நீங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றது இந்த வேலைக்கு வர காரணமாக அமைந்தது என்றார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

தன்னம்பிக்கை மிகுந்த என் அப்பாவிடம் நேர்மை, நாணயம் நம்பிக்கையை கற்றுக் கொண்டேன் என்றால், என் அம்மா திருமதி. சுசீலாவிடம் நான் கற்றது விடா முயற்சியை, கடின உழைப்பை. என் அப்பாவுக்கு இன்றைக்கும் அவர் பக்கபலமாக உள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வது எனக்கு பெரும் வியப்பாக இருக்கும். வாழ்க்கையிலும், தொழிலிலும் அவர்கள்தான் எனக்கு ‘ரோல் மாடல்’. அலுவலகத்தில் கணக்காளர் விடுமுறை எடுத்தால் அந்த இடத்தை அம்மா நிறைவு செய்து இருக்கிறார். என் அப்பா நடத்திய இணைய வானொலியின் செய்தி வாசிப்பாளர் வராத நாட்களில் அம்மாதான் செய்தி வாசிப்பாளர்.
என் வாழ்விணையர் திருமதி. திவ்யாவும் அதே போலத்தான். வணிக சூழலைப் புரிந்து கொண்டு எனக்கு எல்லா வகையிலும் பெரும் துணையாக இருந்து வருகிறார். .திவ்யா ஒத்துழைப்பு தருவதால்தான் வணிக வளர்ச்சியில் அடுத்தடுத்த கட்டங்களை என்னால் எட்ட முடிகிறது.

எங்களுக்கான செயலியை (மொபைல் ஆப்) உருவாக்ககிய போது, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி, இளைஞர் ஜெகதீஷ் இடம் அந்தப் பணியை ஒப்படைத்தோம். கணினி நுட்பத்தில் வல்லவரான அவருக்கு கைவிரல்கள் மட்டுமே வேலை செய்யும். வீல்சேரில் அமர்ந்து கொண்டுதான் எந்த செயலையும் அவரால் செய்ய முடியும். கணினி தொடர்புடைய முதல் கட்ட பணிகளை எங்களுக்கு செய்து தருவது அவர்தான்.

சுற்றுலா ஏற்பாடு ஒரு கூட்டுப் பணி. எங்களைப் போன்ற நம்பகமானவர்களுடன் பணிகளை பகிர்ந்து கொள்கிறோம். இது நவீன தொழில்நுட்ப உலகம். இன்னும் பதினேட்டு ஆண்டுகளுக்குள் சந்திரனுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டு விடும். அந்த நாள் வரும்போது, எங்கள் வாடிக்கையாளர்களையும் நிலாவுக்கு அழைத்துச் சென்று வரும் சுற்றுலா ஏற்பாட்டாளராக நாங்கள் உயர்ந்து நிற்போம்” என்றார், திரு ஸ்ரீகரன் பாலன். (9841691234)

மதுரா டிராவல்ஸ் கடந்த 32 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. திரு. ஸ்ரீகரன், மதுரா டிராவல்ஸ் பணிகளை மேலாண்மை செய்யத் தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகின்றன தாய் ((TAAI) Travel Agent Association Of India) அமைப்பின், டூரிசம் சப் கமிட்டி தலைவராகவும். தமிழ்நாடு டிராவல் மார்ட் சொசைட்டியை (Travel Mart Society) உருவாக்கிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

– ம. வி. ராசதுரை

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முடியுமா?

0

அண்மைக் காலங்களில், உலகெங்கிலும் உள்ள சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை நெடுநாட்களுக்கோ அல்லது குறுகிய காலத்திற்கோ முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பிளாஸ்டிக்கிற்கு ஆன எதிர்ப்புக் குரல் போதுமான அளவு அறிவியல் அறிவும், பொறியியல் அனுபவமும் இல்லாத பொது மக்களிடம் பிளாஸ்டிக் குறித்து ஒரு பயம் கலந்த உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

நடுவண் அரசு 2022ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு முறை மட்டும் பயன்படுத்துப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக தடை செய்ய திட்டம் நிறைவேற்றப்படும் என்று தனது குறிக்கோளைஅறிவித்து, அதற்கு தேவையான திட்;டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தியாவில், இதுவரை, 22 மாநிலங்கள், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்வதாக அறிவித்து உள்ளன. தடை செய்யப்பட்டு உள்ள பொருட்களில் கைப்பை, கிண்ணம், தட்டு, கரண்டி, உறிஞ்சி (ஸ்ட்ரா) தெர்மோகோல் போன்றவை அடங்கும்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பல மாநில அரசுகள் தற்போது தடை செய்து இருக்கும் நிலையில், பலவிதமான பயன்பாட்டுக்கு பயன்படும் எல்லாவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என்று சிலர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்..

உலகெங்கிலும், பல கோடி டன் அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசிய நாடுகளில் மட்டும் பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில், 37% பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களில் பாலி எத்திலின், பாலி அசிட்டால், பாலி கார்பனேட், பீவிசி போன்ற பல பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கும். இவற்றில் குழாய்கள், மின்பொருள்கள், விவசாயம், மருத்துவ கருவி, மீன் பிடிக்கும் வலை, பேக்கேஜிங் போன்றவை அடங்கும்.

பிளாஸ்டிக் தற்போது இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் பொருளாதார, சமுதாய முன்னேற்றத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றது. இத்தகைய நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடியுமா என்பது ஒரு முதன்மையான கேள்வி ஆகும்.

எல்லாவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்வது நடைமுறையில் சாத்தியமல்ல.

ஏதேனும் ஒரு பொருள் மக்காமல் இருந்தால் அதனை ஒரு குறையாக எண்ண வேண்டிய தேவை இல்லை. மக்காத தன்மை உள்ள பிளாஸ்டிக் பலவிதமாக பல்வேறு பயன்பாடுகளுக்கு ஆண்டுக் கணக்கில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சான்றாக, தொலைக்காட்சி பெட்டி, தொலைபேசி, கைபேசி, பேருந்து, இரு சக்கர வாகனங்கள் போன்றவை பலவிதமான பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அவை மக்காத பொருளாக இருக்க வேண்டியது அவசியம்.

மக்காத தன்மை உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விலங்குகள் தின்று, யானையின் கழிவுப் பொருட்களில் காணப்படுகின்றது. பசுவின் வயிற்றில் காணப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. இதே போல், பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்டு பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட பல பொருட்கள் கடலில் பல காலமாக மிதப்பதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதே. அவற்றை சேகரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்த முழுமுயற்சி ஏன் எடுக்கப்படவில்லை என்ற கேள்வி நம் மனதில் எழுவதையும் தவிர்க்க முடியாது.

உலகெங்கிலும்,தற்போது மக்கக் கூடிய பிளாஸ்டிக் தயாரிக்க ஆராய்ச்சிகள் பல நாடுகளில் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. பாலிலாக்டிக் ஆசிட் (Polylactic acid), ஸ்டார்ச் கலந்த பிளாஸ்டிக் (starch based polymer) போன்ற மக்கும் பொருட்கள் தயாரிப்பும் தொடங்கி விட்டன. அவற்றை எல்லா விதமான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் மாற்று பொருள்களாக பயன்படுத்த முடியாது. மேலும் மக்கும் பிளாஸ்டிக்கின் உற்பத்தி செலவு கூடுதலாக உள்ள நிலையில், அவற்றின் விலையும் மிக அதிகமாக இருக்கிறது.

தற்போதைய தேவைக்கு ஏற்ப காகிதம், சணல், பருத்தி அடிப்படையாக கொண்டு உற்பத்தி செய்யப்படும் துணி போன்றவை பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுப் பொருளாக அமைய போதுமான அளவு கிடைக்காது.

மாற்றுப் பொருள் தேவையான அளவில் இல்லாமல், தெளிவான மாற்று திட்டமில்லாமல் பிளாஸ்டிக் தடை திட்டம் நடத்தப்படுகிறது என்பது வெட்ட வெளிச்சம். ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்த பல மாநில அரசுகள், எந்த அளவில் மாற்று பொருள் உள்ளது என்பதை குறித்து விரிவான ஆராய்ச்சி செய்ததாக தெரியவில்லை.

சிக்கல் பிளாஸ்டிக்கினால் அல்ல; பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை குப்பை என தூக்கி வீசாமல், அவற்றை முறையாக சேகரித்து மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த தேவையான வசதிகளை ஏற்படுத்தாமல் உள்ளதே பிளாஸ்டிக்கால் ஏற்படும் சிக்கல்களுக்கு காரணம் ஆகும்.

பல வளர்ந்த நாடுகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக்கை தெருக்களில், நீர்நிலைகளின் ஓரத்தில் தூக்கி வீசாமல் ஒன்று விடாமல் சேகரித்து மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் இதற்கான முயற்சிகள் போதுமான அளவில் இல்லை. ஜப்பானில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கில் 83 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகின்றது. இந்தியாவில் இது மிகவும் சிறிய அளவுக்கே உள்ளது.

தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் கூடுதல் வரி வசூலித்து வரும் நிலையில், அந்த பணத்தை இது தொடர்பான விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தவும், அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் பயன்படுத்தலாம்.

– என். எஸ். வெங்கட்ராமன்