நல்ல லாபம் தரும் மறுசுழற்சிப் பொருட்கள் கடை

0

குன்றத்தூரை அடுத்த ஆண்டாள் குப்பத்தில் வசித்து வருகிறார் திருமதி. ஆர் சாந்தி. இவர் புதுப்பேடு என்னும் இடத்தில் ஆர்எஸ்ஆர் வேஸ்ட் ஸ்கிராப் மார்ட் கம்பனியை நடத்தி வருகிறார். அவரிடம் அவரின் தொழில் பற்றி கேட்டபோது,
எனக்கு முன் என் கணவர் இந்த தொழிலை செய்து வந்தார்.

அவர் அமரம்பேட்டில் சொந்தமாக கடை வைத்து இருந்தார். பத்து ஆண்டுகளாக இந்த தொழிலை செய்தார். தொழிலில் ஏற்பட்ட நட்டத்தால் கடன் அதிகமாகி விட்டது. என் கணவரும் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.

அதனால் சொந்த இடத்தை விற்க வேண்டிய தாயிற்று. இப்போது வாடகை இடத்தில் தான் கம்பனி வைத்து இருக்கிறேன். எனக்கு வேறு எந்த தொழிலும் செய்ய தெரியாததால் என் கணவர் பார்த்து வந்த இந்த தொழிலையே நானும் தேர்ந்தெடுத்தேன்.

அவர் இருக்கும் போது அவருடன் இந்த வேலைக்கு செல்வேன். அதனால் இந்த தொழிலை எளிமையாக புரிந்துக் கொண்டேன் என்று கருதுகிறேன். இப்போது நான் இந்த தொழிலுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் அதிகம் படிக்கவில்லை.

அதனால் கம்பனியின் கணக்கு வழக்குகளை என் கணவரின் தம்பி எம். இரத்தினகுமார் பார்த்துக் கொள்கிறார். இவர் இந்த தொழிலில் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். மெட்டல்களை வாங்கி வருவது, விற்பது போன்ற வேலைகளையும் இவரே பார்த்துக் கொள்வார்.

எங்கள் கம்பனி மிகச் சிறிய கம்பனி. மொத்தம் எட்டு நபர்கள் வேலை செய்கிறோம். அதில் நான்கு பேர் ஒரிசாக்காரர்கள். அதில் ஒருவருக்கு தான் தமிழில் பேச தெரியும்.
அவர்கள் வேலை நன்றாக செய்வார்கள். அதனால் என் கணவர் அவர்களை வேலைக்கு வைத்தார்.

அவர்கள் தங்குவதற்கு கம்பனி அருகிலேயே இடவசதி செய்து கொடுத்து இருக்கிறோம். இவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு செல்வார்கள். இரண்டு பேர் சென்றால் இரண்டு பேர் வேலை செய்வார்கள். மேலும் கம்பனியில் ஒரு தமிழ்க்காரரும் என் அம்மாவும் வேலை செய்கிறார்கள்.

வேலைய ஆட்களுக்கு வார சம்பளம் அளிக்கிறோம். இவர்கள் மெட்டல் கடைகளில் இருந்து வாங்கி வரும் கம்ப்ரசர், வாஷிங் மிஷின், பிரிட்ஜ் போன்றவைகளை உடைத்து இரும்பு தனியாக பிளாஸ்டிக் தனியாக பிரிப்பார்கள்.

செம்பை தனியாக பிரித்து எடுக்க நெருப்பில் காய்ச்ச வேண்டும். நான் அந்த வேலையை செய்வேன். பிறகு பிரித்து வைத்து உள்ளவற்றை ஏற்றிச் செல்ல வாகனம் சொந்தமாக வைத்து இருக்கிறோம். அவைகளை ஏற்றிச் சென்று அருகில் உள்ள காயலாங்கடைகளில் போடுவோம்.

இப்படி மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஏற்றிச் சென்று விற்று விடுவோம். இரும்பு ஒரு கிலோ ரூ. 24.50, ஒரு கிலோ செம்பு ரூ. 372. அரசு தற்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்து உள்ளது. அதனால் பிளாஸ்டிக்களின் விலை குறைந்து உள்ளது.

இப்போது நிறைய பேர் இந்த தொழிலை செய்து வருகிறார்கள். இந்த வேலை தூசி நிரம்பியது. அதனால் உடல் உபாதைகள், அரிப்பு போன்றவைகள் ஏற்படுவதாக கூறுகிறார்கள். எந்த தொழிலாக இருந்தாலும் எடுத்த எப்பிலேயே இலாபம் காண்பது அரிது. நம்பிக்கையும் விடாமுயற்ச்சியும் இருக்க வேண்டும்.

இந்த தொழிலில் முன்னேறுவதற்கு அதிக முதல் போட வேண்டும். நன்றாக உழைக்க வேண்டும். சொந்த வாகனம், சொந்த இடத்தில் கம்பனி வைத்து அதிக வேலைய ஆட்களை அமர்த்தி தொடர்ந்து வேலை செய்தால் இந்த தொழிலில் அதிகம் இலாபம் ஈட்டலாம் என்கிறார் திருமதி. ஆர் சாந்தி.

– மு. யோகி
(மாணவ பத்திரிகையாளர்)

பத்திரங்களை உங்களுக்கென உருவாக்குங்கள்!

0

பல லட்சம் அல்லது பல கோடி செலவு செய்து தேடி பிடித்து சொத்துக்களை வாங்குவார்கள், அப்படி வாங்கும் சொத்துக்களை பத்திரம் எழுதும் போது ஆவண எழுத்தர்கள் மூலம் மாதிரிகளை (Template) வைத்து பத்திரங்களை எழுதுகின்றனர், மாதிரிகள் என்றால் ஏற்கனவே வேறு ஒரு நபருக்கு பத்திரம் செய்த போது தட்டச்சு செய்ததை ஒரு ஃபார்மட்(Formate) ஆக வைத்து அதிலேயே புதிய ஆவணத்தை உருவாக்குவது ஆகும்.

இந்த நடைமுறை மிகவும் தவறானது, கொஞ்சம் கூட செலவானாலும் சரி நல்ல வழக்கறிஞர் அல்லது நல்ல ஆவண எழுத்தரை வைத்து மாதிரி இல்லாமல் உங்களுக்கு என்று பிரத்தியேகமாக ஆவணம் தயார் செய்வதே நல்லது. மேலும் முன்கூட்டியே இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அதிக நேரம் கொடுத்து வழக்கறிஞர் ஆவண எழுத்தர்களுக்கு கொடுத்து டிராஃப்ட் போட்டு கொடுக்க சொல்ல வேண்டும்.

பெரும்பாலும் சொத்து வாங்குபவர்கள் நல்ல நேரம் முடிய போகுது, நல்ல நாள் முடிய போகுது என்று தங்களுக்கு உள்ளேயே ஒரு பிலைஃப்ஸ் சிஸ்டத்தை (Beliefs System) உருவாக்கி கொண்டு பதட்டபட்டு கொண்டு இருப்பார்கள். அல்லது அவர்களுடைய உறவினர்கள், ரியல் எஸ்டேட் ஏஜண்ட்கள், இடத்தை விற்பவர்கள் இந்த நல்ல நேரம் நம்பிக்கையை பத்திர பதிவு அன்று சொல்லி அவசரபடுத்திக் கொண்டு இருப்பார்கள்.

இப்படி அவசரபடுத்தாமல் அங்கு இருக்கும் சூழ்நிலையிலேயே பயணித்து மன அமைதியுடன் டிராஃப்ட் போடும் வேலையை பார்த்தால் உங்கள் கிரய பத்திரம் மிக சிறப்பாக அமையும். அவசர மனநிலையிலும் நேர நெருக்குதலிலுமே தான் நிறைய பேர் டிராஃப்ட் போடுகிறார்கள். சில ஆவண எழுத்தர்கள் கடமைக்கு ஏற்கனவே இருக்கும் மாதிரியை வைத்து பத்திரம் போடுகிறார்கள். இப்படி செய்வதால் பத்திரங்களில் அதிக பிழைகள் தவறுகள் வருகிறது.

தந்தைக்கு பூர்விக சொத்து, பட்டா அவர் பெயரில் இறங்கி இருக்கிறது. எந்த வித உயில் ஏற்பாடுகள் செய்யாமல் இறந்து விட்டார். அவருக்கு ஒரு மனைவி, நான்கு பெண்கள், ஒரு ஆண் வாரிசு எல்லாரும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியில் வசிக்கிறார்கள். ஆண் வாரிசு மகன் வாரிசு வெளிநாட்டில் இருக்கிறார் .

ஒரு விடுமுறையில் அனைவரும் வேக வேகமாக பத்திர பதிவு அலுவலகம் வருகிறார்கள். சொத்தை ஐந்து பாகமாக பிரிக்க வேண்டும் என சொல்லி, சொத்தை நீள அகலத்துடன் சார்பதிவகத்தில் இருக்கிற ஆவண எழுத்தரை பார்க்கிறார்கள், ஆவண எழுத்தர் செட்டில்மென்ட் பத்திர டிராஃப்ட்டை கணினியில் இருந்து எடுத்து டிராஃப்ட் தயார் செய்து பத்திரபதிவு செய்து கொடுக்கிறார்.

அதாவது ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உண்டான பாகத்தை தனி தனியாக செட்டில்மென்ட் பத்திரம் எழுதி பதிந்து கொடுக்கிறார். சார்பதிவாளர் அலுவலகத்திலும் பத்திர பதிவு செய்யபடுகிறது. பிறகு வேகவேகமாக அவரவர் ஊர்களுக்கு சென்று விடுகின்றனர்.

சில மாதங்கள் கழித்து மேற்படி பத்திரங்கள் பட்டா பெயர் மாற்றத்திற்கு செல்லும் போது தான் அவர்களுக்கு மேற்படி பத்திரமே தவறு என்று தெரிய வருகிறது. ஆம்! தந்தையின் பூர்விக சொத்து அவரின் மனைவி உட்பட ஆறு பேருக்கும் வாரிசு உரிமைபடி நேரிடையாக இறங்கி விடுகிறது. மேற்படி சொத்தில் ஒரு நபருக்கு 1/6 பங்கு வருகிறது.

மேற்படி தாயாருக்கு மற்ற வாரிசுகளை போல ஆறில் ஒரு பங்குதான் வருகிறது. ஆனால் சொத்து முழுதும் அவருடையது போல் அனைவருக்கும் ஐந்து பங்காக பிரித்து எழுதி கொடுத்து விட்டார். அவ்வாறு செய்ய அவருக்கு உரிமை இல்லை.

தப்பான பத்திரம் திருத்தி வரசொல்லி விட்டார்கள். பத்திரம் சட்ட குழப்பங்களுக்கு உள்ளாகி விட்டது. இதோடு எப்படி மீண்டும் எல்லாரும் ஒரே நாளில் கூடி ஊருக்கு வந்து பழைய பத்திரங்களை இரத்து செய்து விட்டு புதிய பத்திரங்களை போடுவது என்றும் போக்குவரத்து அலைச்சல் செலவுகளை நினைத்து மலங்க மலங்க விழித்து கொண்டு இருக்கின்றனர்.

சென்னை வடபழனியில் ஒரு சொத்து கிரயம், மேற்படி சொத்துக்கு மெயின் ரோட்டில் இருந்து மூன்று அடி தனி வழி, அது அவர்களுக்கு மட்டுமே ஆன வழி. அந்த வழியுடன் சேர்த்து தான் மொத்த விஸ்தீரணம், மேற்படி வழியை ஒட்டி இரண்டு வெவ்வேறு சொத்துக்கள் இருக்கிறது.

கிரய சொத்திற்கு நான்கு எல்லைகள் பத்திரத்தில் நான்குமாலில் சொல்லும் போது ஒரு எல்லையில் இந்த மூன்று அடி வழியும் சொத்துக்குள் வருவதால் மூன்று அடி வழி தொடுகின்ற மெயின் ரோடும், வழியை ஒட்டி இருக்கிற இரண்டு பக்கத்தில் இருக்கிற வீட்டு உரிமையாளர் பெயரும் காட்ட வேண்டும்.

மாதிரி பார்த்து பத்திரம் அடித்ததில் வழியை ஒட்டி இருக்கும் இரண்டு பக்கத்தில் இருக்கிற வீடுகளை மட்டும் காட்டினார்கள். அந்த மூன்று அடி வழியையும் காட்டினார்கள். ஆனால் மூன்று அடி வழி அது தொட்டு கொண்டு இருக்கும் சாலை எல்லையை காட்ட வில்லை.

பத்திரம் பதிந்து விட்டார்கள் மேற்படி சொத்து கட்டிட அனுமதிக்கு போகும் போது வரைபடம் ரோடோடு இணைகிறது, பத்திரம் ரோடோடு ஒட்டவில்லை என திரும்ப அனுப்பி விட்டார்கள். மீண்டும் சொத்து விற்றவர்களை தேடி அவை சரி செய்யப்பட்டது.

எனக்கு தெரிந்த இன்னொரு கிரைய பத்திரத்திற்கு மாதிரியில் இருந்து சொத்துக்கள் காப்பி மற்றும் பேஸ்ட் செய்து போட்டு விட்டார்கள். பொதுவாக கிரயம் எழுதும் விதத்தில் சொத்து விற்பவர் இந்த சொத்தின் உடைய அனைத்து அசல் மற்றும் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று ஷரத்து எழுதப்பட்டு இருக்கிறது.

ஆனால் மேற்படி சொத்தில் இவர் நகல்கள் மட்டுமே பெற்று கொள்கிறார். அந்த பத்திரத்தில் வேறு ஒரு விற்கபடாத சொத்தும் இருப்பதால் அசல் பத்திரம் விற்பவரே வைத்து கொள்கிறார்கள்.

அப்படி என்றால் சொத்தில் நகல் மட்டும் பெற்று கொண்டார் என்று குறிப்பிட வேண்டும். ஏற்கனவே தாயரிக்கப்பட்ட மாதிரி என்பதால் அப்படியே அசல் மற்றும் நகல் என்று போட்டுவிட்டனர்.

மேற்படி சொத்து சிறிது நாளுக்கு பிறகு வங்கி கடனுக்காக செல்கிறது. வங்கியில் தாய் பத்திரங்களின் அசலை கொண்டு வாருங்கள் என்று சொல்லி லோன் தடுக்கபடுகிறது. அசல் பழைய உரிமையாளரிடம் இருக்கிறது என்று வங்கியில் பேசி பார்க்கிறார்கள் அப்படி என்றால் ஏன் அசல் கொடுத்து விட்டதாக பத்திர ஷரத்தில் இருக்கின்றன.

ஒன்று பழைய உரிமையாளரிடம் சென்று சென்று ஒரிஜினல் பத்திரம் வாங்கி வாருங்கள் அல்லது அசல் என்ற சொல்லை அழித்து பிழைதிருத்த பத்திரம் போடடுவிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டனர். அதனால் அவர்கள் பிழைதிருத்தம் போட அலைந்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் பணம் செலவு செய்வதை பற்றி கூட வருத்தபடவில்லை. அவர்களின் நேரமும் அலைச்சலும் அதிகமாவதை தான் நினைத்து சலித்து கொள்கிறார்கள்.

இப்படி பல கதைகளை என்னால் சொல்ல முடியுமம் சிறிது கட்டணம் அதிகம் என்றாலும் நல்ல வழக்கறிஞர்களை பார்த்து பத்திரம் போடுவது, உங்களுக்கு என்று பிரத்தியேக ஆவணங்கள் தயாரித்து இரண்டு மூன்று முறை சோதித்து பிழை திருத்தி இறுதி டிராஃப்ட் முடிவு செய்து பத்திரம் செய்தால் மிகவும் பாதுகாப்பான தண்ட செலவுகளும், அலைச்சலும் இல்லாத சொத்து பரிமாற்றம் நடைபெறும்.

– சா. மு. பரஞ்சோதிபாண்டியன்
8110872672

செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள்

0

மென்பொருள் தயாரிப்பாளர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மெஷின் லேர்னிங் கருவிகளை வர்த்தக நோக்கில் வழங்க முன்வந்து உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் மென்பொருள் மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்கிறது. அதோடு ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு, மொழி பெயர்க்கவும் செய்கிறது.

முக்கியமாக மாண்டரீன் மொழியில் இருந்து ஸ்வாஹிலி மொழிக்கு சிறந்த முறையில் மொழி மாற்றமும் செய்கிறது. மேலும் உலகின் சிறந்த சதுரங்கம் போன்ற விளையாட்டு வீரர்களை வெற்றி கொள்ளவும் செய்கிறது.

சந்தை நம்பிக்கை தருகிறதா?

பொதுவாக செயற்கை அறிவு, தகவல்கள் மற்றும் பழக்கத்தில் இருந்து (எக்ஸ்பீரியன்ஸ்) கற்றுக் கொண்டு, சில முன்கணிப்புகளை சிறப்பாக செய்கிறது. இது செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை இன்னும் ஆற்றல்மிக்கதாக மாற்றுகிறது.

இது பல்வேறு தகவல்களில் இருந்து, மனிதர்களை விட, அதிக சிக்கலான அல்லது நுட்பமான தொடர்புகளைக் கண்டறிந்து, இத்தகைய கணிப்புகளைச் செய்கிறது. எனவே மென்பொருள் தயாரிப்பாளர்கள் இத்தகைய மென்பொருகளை வர்த்தகரீதியாக தயாரித்து சந்தைப்படுத்தும் நம்பிக்கையில் உள்ளனர்.

ஆனால் பெரும்பாலான பணியாளர்களுக்கு இத்தகைய செயற்கை நுண்ணறிவு எந்திரங்களின் மீது இது நம்பிக்கை வைப்பது கடினமாக இருப்பதால், அவர்களை வேலைக்கு வைத்து இருக்கும் நிறுவனங்கள், இத்தகைய செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களுக்காக பெரும் தொகையை செலவிடுவதற்கு முன்வருவது இல்லை.

உடல் நலப் பாதுகாப்பு, நிதித் துறை மற்றும் சட்ட அமலாக்கத் துறைகளில் உண்மையும் கூட. மேலும் காப்பீட்டுத் துறைகளில் இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் பயன்படுத்தப்படுவது ஒரு சில குழப்பங்களையும் ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

மனிதக் கண்ணோட்டம் – எந்திரக் கண்ணோட்டம்:

ஒரே வகை உடல்நிலையிலும், வயதிலும் உள்ள இரண்டு வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு மட்டும் ஏன் அதிக அளவு காப்பீட்டுத் தவணை வாங்கப்படுகிறது என்றும் அமெரிக்க காப்பீட்டுத் துறை கேள்வி எழுப்பி உள்ளது. ஐரோப்பாவில், பொதுத் தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், “செயற்கை அறிவின் (எந்திர அல்காரிதம்) முடிவுகள், ஒரு மனிதனின் வெளிப்படுத்தும் உரிமையைப் பாதிக்கிறது” என கருத்து தெரிவித்து உள்ளது.

ஒருவர் கடன் வாங்க முனையும் போது, அனைத்து விவரங்களும் சரியாக இருந்தும், ஒரு கணினி, “முடியாது” (நோ) என சொன்னால், அவருக்குக் கடன் கிடைப்பது இல்லை. இதனால் வங்கி ஊழியர்கள் மீண்டும் வேறு வகையான முறையில் விவரங்களைக் கொடுத்து, மீண்டும் முயற்சி செய்ய வேண்டி உள்ளது.
கண்நோய்களை கண்டறியும் நிறுவனம்

ஆனால் ஐபிஎம் சர்வே, சுமார் 5000 வகையான வர்த்தகங்கள் இந்த செயற்கை அறிவைச் சார்ந்து செய்யப்படுவதாக சொல்கிறது. அங்குள்ள பணியாளர்களில் 82 விழுக்காட்டினர், இத்தகைய செயற்கை அறிவைப் பயன்படுத்தி, பணிகளைச் செய்வதில் ஆர்வமாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மேலும் மென்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறையினர், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் எப்படி சிந்தனை செய்கிறது என்பதைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் கொடுக்கின்றனர். கூகிள் நிறுவனம், பெரும்பாலும் தங்களது முடிவு எடுக்கும் செயல்பாடுகளில் மெஷின் லேர்னிங் அல்காரிதம்களை பயன்படுத்தி வருகிறது.

இங்கிலாந்தில் உள்ள ‘மூர்ஃபீல்ட்ஸ்” கண் மருத்துவமனை, இந்த மெஷின் லேர்னிங் மென்பொருள் மூலமாக, ஐம்பது வெவ்வேறு வகையான கண் நோய்களைக் கண்டறியப்பட்டு வருகிறது. இது இங்கு உள்ள கண் மருத்துவ வல்லுநர்களுக்கு இந்த செயற்கை அறிவின் மீது இன்னும் அதிக நம்பிக்கையைக் கொடுக்கிறது.

– ஜஸ்டின் ராபர்ஸ்

டாம் பீட்டர்ஸ் கூறும் ஆலோசனைகள்

0

`நொடிக்கு நொடி புதிய புதிய பிராண்ட்கள் சந்தையில் அறிமுகம் ஆகிக் கொண்டு இருக்கின்றன. அத்தனை பிராண்ட்களில் புகுந்து, நமது பிராண்ட் வெற்றி பெறுவது என்பது, பரபரப்பான தி. நகர் ரங்கநாதன் தெருவில், திருவிழா நாட்களில் புகுந்து வருவது போன்றது. ஆனால் இந்த நெருக்கடியான, குழப்பமான சூழலிலும், நமது பிராண்டை வெற்றிபெற வைப்பது எப்படி என்பதை, டாம் பீட்டர்ஸ் என்பவர், தனது த்ரைவிங் ஆன் சாவோஸ் (Thriving on Chaos) என்ற புத்தகத்தில் விரிவாக சொல்லி இருக்கிறார்.

முன்பெல்லாம் உள்ளூர் பொருட்கள் மட்டுமே நம்முடன் போட்டி போட்டன. இன்றைய திறந்த சந்தையில், பன்னாட்டுப பொருட்களும் நம்முடன் மோதிக் கொண்டு இருக்கின்றன. அந்த பன்னாட்டுப் பொருட்களுடன் மோத முடியாமல், பல உள்ளூர் பொருட்கள் குழப்பமான புதை குழியில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றன.

விளம்பரம் செய்வது என்றால், ஆயிரக்கணக்கான சேனல்கள், இதழ்கள், பண்பலை வானொலிகள் கண்முன் வந்து நிற்கின்றன. சேனல்கள் பெருகப் பெருக, அவற்றைப் பார்க்கும் ஆட்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். இத்தகைய குழப்பமான சூழலில், வழுக்கும் வணிகச் சந்தையில், நம் வண்டியை பேலன்ஸ் செய்து ஓட்டிச் செல்ல, டாம் பீட்டர்ஸ் தரும் ஆலோசனைகள் இதோ,

நம் வர்த்தகத்தில் புதுமையைப் புகுத்துவதை, ஆர்வமாகச் செய்யுங்கள். மற்றவர்களை விட, தரமானதாக, அதிகம் உழைப்பதாக, மற்றவர்களை விட, அதிக வசதி கொண்டதாக, நம் பொருட்களை உற்பத்தி செய்யுங்கள். சந்தைக்கு தனி தொழில் நுட்பக் குழுவை அமையுங்கள். மற்ற பொருட்களைப் பார்த்தாவது புதுமையைப் புகுத்தலாம். சந்தைக்கு படைப்பாளுமை மிக்க தனி வல்லுநரை நியமிக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் உங்கள் பிராண்டில் நீங்கள் செய்த புதுமை என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நம் பொருட்களின் பயனாளிகளிடம் அடிக்கடி கருத்துக் கணிப்புகள் நடத்துங்கள். அவர்களைத் தேடிப் போய், நம் பொருட்களில் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம், என கேள்வி கேளுங்கள். அதற்கேற்ப தரமான பொருட்களை உற்பத்தி செய்யுங்கள்.

உங்கள் பிராண்டிற்கு ஓர் இலக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வல்லுநர் குழுவிற்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுங்கள். உங்கள் பணியாளர்களுக்கு பரபரப்பான உற்சாகத்தைக் கொடுங்கள்.

உள்ளூர் மட்டும் போதும் என கையை இறுக்கமாக கட்டிக் கொள்ளாதீர்கள். உலகம் முழுவதும் உங்கள் பிராண்டின் வேர்களை படர விடுங்கள். அதற்காக, விற்பனையாளர்கள், கண்காணிப்பாளர்களை அதிகரியுங்கள்.

அடிக்கடி அவர்களுக்கு நல்ல வல்லுநர்களைக் கொண்டு, இதே தொழிலின் புதிய உத்திகளையும், உலக மாற்றத்தையும் பயிற்சியாகக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.
உங்களின் ஒவ்வொரு பணியாளர்களையும் உங்கள் பங்குதாரர்களாக எண்ணுங்கள்.

அதற்கேற்ப அவர்களுடன் கூட்டுறவாக செயலாற்றுங்கள். அவர்களை தங்களது சொந்த நிறுவனமாக உணர வையுங்கள். இவை அனைத்தையும் செய்தால், உங்கள் பிராண்ட் வெற்றி பெறுவது நிச்சயம்.

– ஆனி லினியா

நம்பிக்கையான வல்லுநர்களை தேர்ந்தெடுங்கள்

0

திருமணம் வருகிறது. விருந்து சமைக்க வேண்டும். அதற்கு சமையல் வல்லுநர்களை அழைப்போமா? அல்லது தெரிந்தவர் என்பதற்காக சமையலில் அடுப்பு கூட சரியாக பற்ற வைக்கத் தெரியாதவரை அழைப்போமா? பணத்தைக் கொட்டி, தொழில் முனைவோராக இருப்பவர்கள் எல்லோருமே, தானே மேலாண் இயக்குநராக இருப்பது சரியா, இல்லையா என்ற கலந்தாய்வு எல்லா மட்டங்களிலும் நடந்து கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு ஜவுளித் துறை குடும்பத் தொழிலாக இருக்கலாம், 4 – 5 தலைமுறைகளாக அந்த ஜவுளித் துறையில் கொடிகட்டிப் பறக்கலாம்.

ஆனால், அவருக்கு, மின்னணுக் கருவிகள் தயாரிக்கும் தொழில் செய்ய ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால், அவருக்கு அந்த தொழிலைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாத பட்சத்தில், தானே மேலாண் இயக்குநராக இருப்பேன் என்பது சரியா என்பதுதான் கேள்வி.

சில கோடி பணம் போட்டுத் தொடங்கிய நிறுவனம், வளமான வாய்ப்புகள் உள்ள தொழில். இதைப் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு இல்லாத பட்சத்தில், சந்தை முதல் மனிதவள மேம்பாடு வரை தொழிலின் முக்கிய அம்சங்கள் எல்லாவற்றையும் அறிந்து இருக்க வேண்டும்.

சிறிய சிக்கல் முதல் பெரிய சந்தேகம் வரை அனைத்தையும் சமாளிக்கும் நுட்பம் தெரிந்து இருக்க வேண்டும். எப்படி சமையலைப் பற்றி அனைத்தும் தெரிந்தவரை திருமண விருந்து சமைக்க அணுகுகிறோமோ, அதுபோலத்தான், இந்த புதிய தொழிலில், அனைத்தையும் தெரிந்தவர்தான் மேலாண் இயக்குநராக அல்லது முக்கிய நிர்வாகியாக இருக்க முடியும்.

தொழில் முனைவோர் எல்லாருமே நல்ல நிர்வாகியாக இருக்க முடியுமா? தொழில் முனைவு வேறு, நிர்வாகம் என்பது வேறு. அவை ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தொழிலை சிறப்பாக நிர்வகிக்க, தொழில்முறை மேலாண் இயக்குநரே தேவைப்படுகிறார். தொழில் முனைவோரே நல்ல நிர்வாகியாக அமைந்தால் சிறப்பு.

ஆனால், மேற்கண்ட ஜவுளிக் கடை உரிமையாளர், மின்னணுக் கருவிகள் தயாரிப்பு நிர்வாகத்தில், போதிய நிர்வாகத் திறமை இல்லாத பட்சத்தில், நல்ல நிர்வாக வல்லுநர்களை பணிக்கு அமர்த்திக் கொண்டு, புதிய தொழிலில் அடியெடுத்து வைக்கலாம். தொழில் தொடங்க பணம், துணிச்சல் இருந்தால் மட்டும் போதாது. தொழிலை திறம்பட நிர்வகிக்கவும் வேண்டும். தொழிலின் நெளிவு சுளிவுகள், சந்தையின் சந்து பொந்துகளை அறிந்து இருக்க வேண்டும்.

பல தொழில் முனைவோர்கள் தொடக்கத்தில், நல்ல வல்லுநர்களின் துணை உடன் தொழிலைத் தொடங்கிவிட்டு, நன்றாக கற்றறிந்த பின்பு, நிர்வாகத்தையும் தானே ஏற்று நடத்தி, வெற்றி பெறுகிறார்கள். ஆனால், அந்த தொழில் முனைவர், நிர்வாகத்திற்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது, நம்பிக்கை, நாணயம் கொண்டவர்களையே பணிக்கு அமர்த்த வேண்டும்.

அப்படி நம்பிக்கை கொண்டவர்கள் கூட பிற்காலத்தில் மாறிவிட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த நபர்கள் மீது கண்காணிப்பு வைத்து இருக்க வேண்டும். தொழில் முனைவோர் விழிப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்மூரைப் பொறுத்தவரை, நிர்வாகம் தெரியாத தொழில் முனைவோரால் கெட்ட தொழில்களும் உண்டு; அல்லது நம்பிக்கைக் துரோகம் செய்பவர்களை நிர்வாகத்தில் அமர்த்தி, கெட்ட தொழில்களும் உண்டு. நம் தொழில் எங்கு பயணிக்க வேண்டும் என்பதை ஒரு தொழில் முனைவோராய் திட்டமிடுங்கள். நம்பிக்கையான நிர்வாக ஆட்களை பணிக்கு அமர்த்துங்கள். அந்த நிர்வாகிகளைத் தொடர்ந்து கண்காணியுங்கள். தொலை நோக்குத் திட்டங்களைத் தீட்டுங்கள். அதை அடையும் பொறுப்பை அந்த நிர்வாக வல்லுநர்களிடம் விட்டுவிடுங்கள்.

– ஆலன்பாரி

ஃபேஷன் உடைகளைத் தைக்கலாம், பணம் சம்பாதிக்கலாம்

0

இன்றைக்கு புதுப்புதுப்பாணியில் உடைகளை வடிவமைத்து தைத்துத் தருவதால் சாதாரண தையற்கடையில் இருந்து மாறுபட்டு அதிக வருமானத்தை ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏராளமாகவே கொட்டிக் கிடக்கின்றதைக் காண முடிகின்றது.
மகளிர் ப்ளவுஸ் உடை சாதாரண மாதிரியில் தைக்க கூலி ரூ. 150 என்றால் ஃபேஷன் சார்ந்த ப்ளவுசிற்கு தையல் கூலி ரூ. 750 முதல் 2000 வரையில் தையல் கூலியை பெற முடிகின்றது.

எம்பிராய்டரி வேலைப்பாடுகள், ஆரி ஒர்க், மிரர் ஒர்க், சிக்கன்காரி ஒர்க், ஜர்தோஷி எம்பிராய்டரி வேலைப்படுகள் ப்ளவுஸ் உடையில் துணி மேலமைப்பு அலங்காரம் (Surface Ornamentation), தற்போது கட்டோரி ப்ளவுஸ் மூன்று துண்டுகள், நான்கு துண்டுகள் மற்றும் ஐந்து துண்டுகளில் கட்டிங் அமைப்பு செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்ற ப்ளவுஸ்களுக்கு டீன்-ஏஜ் பதின் பருவப் பெண்களிடையே நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கின்றன.

திருமண டிசைனர் ப்ளவுஸ் (Wedding Designer’s Blouse), செலிபிரிட்டி டிசைனர் ப்ளவுஸ்கள் தயாரிப்பதால் அதிக அளவில் வருமானம் ஈட்ட முடிகின்றது. கமீஸ், சுடி – டாப்ஸ், பட்டியாலா சல்வார், டோத்தி சல்வார், ப்ளசோ (Plazzo) பேன்ட் வகைகள் வாடிக்கையாளரின் உடல் அளவுகளைக் கொண்டு தயாரிக்கும் முறையில் (Made to Measure System) தொடர்ந்து வேலை இருந்த வண்ணம் இருக்கின்றன.

ஃபேஷன் டிசைனிங் டிப்ளமா, டிகிரி, முதுகலைப்பட்டப் படிப்புகள் பல்வேறு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் பாடாமாக போட்டிப்போட்டுக் கொண்டு நடத்த முன் வந்த வண்ணம் இருக்கின்றன. மாணவியரின் ஆர்வம் தற்போது ஃபேஷன் டிசைனிங் பக்கம் திரும்பி வலம் வரத்தொடங்கி இருக்கின்றன. சொந்தத் தொழில் செய்வதில் தற்போதைய பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

ஃபேஷன் உடைகளை உருவாக்குவதில் கலை ஆர்வமும், டிராயிங் அடிப்படை நுனுக்கங்களும் அடித்தளமாக உள்ளன. துணி இரகங்களைத் தேர்வு செய்தல், தேர்ந்தெடுத்த துணி இரகங்களில் ஃபேஷன் உடைகளாக வடிவமைக்க கிரியேட்டிவிட்டியும் (Creativity) அவசியமாகும்.

கடை எங்கு இருந்தாலும் வாடிக்கையாளர்கள் தேடி வந்து ஆர்டர் கொடுக்கக் கூடிய வகையில் நல்ல பொருத்தமான உடைகளைத் தைத்து குறித்த நேரத்தில் டெலிவரிக் கொடுப்பதால் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் சூழல் தானாகவே அமைந்துவிடும் என்பதில் ஐயப்பாடில்லை.

ஒரு வாடிக்கையாளருக்கு பொருத்தமான உடைகளைத் தைத்துக் கொடுப்பதன் மூலமாக அவர்களின் வாய்மொழி மூலமாகவே மேலும் பத்து புதிய வாடிக்கையாளர்களை பெற சாத்தியக் கூறுகள் காணக் கிடைக்கின்றன. இன்றைய ஃபேஷன் வடிவமைப்புகளால் ஆன உடைகளைக் காண்பதற்கு www.pinterest.com என்ற ­இணையத் தளத்திற்கு செல்லவும்.

புதிதாக ஃபேஷன் துறையில் காலடி எடுத்து வைப்பவர்கள் போதிய அளவு தையல் தொழில் செய்யும் அனுபவம் பெற்று இருத்தல் அவசியமாகும்.

பொழுதுக் போக்கிற்காகவும், வீட்டுச் செலவினங்களை சரிகட்டுவதற்கு ஏற்ற உபரி வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கும் பெண்களுக்கு ஃபேஷன் உடைத் தயாரிப்பு உதவிகரமானதாகவே அமையப்பட்டு இருக்கின்றதை உணர முடிகின்றது.

அவ்வப்போது நேரத்தை ஒதுக்கி ஃபேஷன் டிபார்ட்மென்ட்ஸ் ஸ்டோர்களுக்கு சென்று கவனித்தல் வாடிக்கையாளர் விரும்பும் ஃபேஷன் உடைகள், தரம், விலை, புதிய வடிவமைப்பு முறைகளை மார்கெட்டிங் சுற்றோட்டமிடுவதன் மூலமாக எளிதில் புரிந்துக் கொள்ளலாம்.

உடைகளைத் தைத்த பின்னர் மாதிரி உருவ பொம்மைகளில் உடுத்தி வைப்பது, புதிய வாடிக்கையாளர்களை மனம் கவரச்செய்து விடும். காட்சிபடுத்தும் வணிகமுறை (Visual Merchandising and window display) மூலமாகவும், தங்களின் புதிய ஃபேஷன் உடைகளை வெப்சைட்களில் விளம்பரம் செய்வதன் மூலமாகவும் இந்த தொழிலை மேலும் சிறப்பாக செய்யலாம். இதன் மூலமாக பணம் சம்பாதிக்கலாம்.

வாடிக்கையாளர்களின் விவரக் குறிப்புகளை கணினி வழிப்பதிவு செய்து வைத்துக் கொள்வதன் மூலமாக அவ்வப்போது வாடிக்கையாளர்களின் தொடர்பு இருந்துக் கோண்டே இருக்க செய்கின்றது. வாடிக்கையாளரின் முகத்தை படம் எடுத்துக் கொண்டு உடைகளின் லைப்ரரியில் மென்பொருள் பயன்படுத்தி உடையின் தோற்றப் பொலிவைக் காண வழிச்செய்வதன் மூலமாக நிறைய அளவு புதுப்புது வாடிக்காயாளர்களை எண்ணிக்கை அளவில் உயர்த்திக் கொண்டே போக வாய்ப்புகள் உள்ளன.

ஃபேஷன் உடைகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கான கைத்தேர்ந்த யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது ஃபேஷன் கண்காட்சி நடத்தி வெளி உலகிற்கு அறிமுகம் செய்வது என்பது இன்றைய காலக்கட்டத்தின் அவசியம் ஆகும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மேலும் பல புதிய டிசைன்களை தமது ஃபேஷன் தொழிற்கூடத்தில் உருவாக்குவது தொழில் விருத்திக்கு உறுதுணையாக இருக்கும்.

ஃபேஷன் உடைக்கு உகந்த ஃபேஷன் துணி இரகங்களைத் தேர்வு செய்வதில் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை கூறுவதும் அத்தியாவசியம் ஆகும். சென்னையில் பிரபலமாக இயங்கி வரும் ஃபேஷன் டிசைனிங் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவ / மாணவியர்கள் தமது ப்ராஜெக்ட் (Project) உடைகளுக்கான டிசைனிங் செய்த பின்னர் துணி இரகங்களைத் தேர்வு செய்வதற்கு என்று பிரத்தியேகமாக உள்ள கடைகளுக்கு படை எடுக்கத் தொடங்கிவிடுவது என்பது வாடிக்கையாகி விட்டது.

எனவே ஃபேஷன் துறையில் தொழில் முனைவோர் இந்த பாணியையும் மேற்கொள்வது நல்ல படிப்பாகவே கருதப்படுகின்றது.

திரைப்படத்துறை, சின்னத்துறை நடிக – நடிகையருக்கென்று பிரத்தியேக முறையில் புதுப்பாணியில் ஆன ஃபேஷன் உடைகளை வடிவமைப்பு செய்து தைத்துக் கொடுப்பதன் மூலமாக சினிமா / சின்னத் திரை சார்ந்த காஸ்டியூம் டிசைனராக அதிக அளவில் பெயரும், புகழும், பொருளும் ஈட்ட முடியும் என்பதே உண்மை ஆகும்.

“ஊக்குவிற்க ஆள்ருந்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்” என்கிற கவிஞர் வாலியின் பதிவு வைர வரிகளை இங்கு பதிவு செய்து இக்கட்டுரையை நிரைவு செய்கிறேன்.

– ஆர். எஸ். பாலகுமார்
(9283182955)

கொஞ்சம் இலவசம் கொடுங்கள்; விற்பனை அதிகரிக்கும்

0

தெரு ஓரங்களில், சாலை ஓரங்களில் பல குட்டி குட்டி உணவுக் கடைகளை நாம் கடந்து சென்று இருப்போம். ஆனால், அந்த பாட்டாளி தொழில் முனைவோர்களிடம் இருந்து நாம் பல பாடங்களைப் படிக்கலாம் என்று தெரியுமா? அவர்கள் தரும் பாடங்கள் என்னென்ன?

ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்

கையேந்தி உணவகங்களில், சட்னி சாம்பாரில் இருந்து கடைசியாக தூவப்படும் பருப்புப் பொடி வரை, அனைத்தும் ஒழுங்காக அடுக்கப்பட்டு இருக்கும். கையாள எளிதான பாத்திரங்களில், கடைக்காரர் எளிதாகவும்,. விரைவாகவும் எடுத்துப் பரிமாறும் வகையில் அமைந்து இருக்கும்.

இதனை நம் தொழிலுக்கும் பொருத்திப் பார்க்கலாம். எந்த தொழில் நுட்பம் அல்லது மூலப் பொருள் முதலில் தேவை, எவை கடைசியில் என்பதை சிந்தித்து உணர்ந்து வைத்து இருக்க வேண்டும். அவ்வாறு உணர்ந்தவற்றை அதே வரிசையில் செய்து முடிக்க வேண்டும்.

இடம் பார்த்துத் தொழில் செய்வோம்

கையேந்தி உணவுக் கடைகள், பொதுவாக வாடிக்கையாளர்கள் அதிகம் கூடும் இடங்களில் தான் அமைக்கப்பட்டு இருக்கும். இதுபோல, சரியான இடத்தில் நமது தொழிலை / பொருளை வைத்தால், அதை விட சிறந்த விளம்பரம் இல்லை.
விரும்புவதைக் கொடுப்போம்

கையேந்திக் கடைகளில், அந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் என்னென்ன உணவுகளை விரும்புவார்களோ அந்தந்த அயிட்டங்களை தயார் செய்து கொடுப்பார்கள். உடலுழைப்புத் தொழிலாளிகள் இருக்கும் பகுதிகளில் காரசாரமான கடினமான உணவுகளும்; அலுவலர்கள் இருக்கும் பகுதிகளில், மென்மையான உணவுகளும் தயாரிப்பதைப் பார்த்து இருப்போம்.

நம் பொருளுக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்கள் மாறிய காலம் போய் விட்டது. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன வேண்டுமோ, அதற்கேற்ப நம் பொருளின், உற்பத்தியின், சேவையின் வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்.

தேவையை முன்கூட்டியே கணிப்பது

மாலை 5.00 மணிக்குத் தொடங்கும் பரோட்டாக் கடைக்காக, கடைக்காரர், பிற்பகல் நேரங்களில் வெங்காயம் உரிப்பதையும், காய்கறிகளை வெட்டுவதையும் காணலாம். வாங்குவது வெட்டுவது அனைத்தும் கடை தொடங்கும் நேரத்திற்குள் முடிந்து விடும். இதனால் விரைவாக வாடிக்கையாளர்களைக் கவனிக்க முடியும்.

நம் தொழிலில் எதிர்காலத் தேவைக்கு (டிமாண்ட்) ஏற்றவாறு, முன்கூட்டியே கணித்து, நம் பொருட்களை உற்பத்தி செய்து வைத்து இருக்க வேண்டும். இதனால் வாடிக்கையாளரைக் காத்திருக்கத் தேவையில்லை.

ஒற்றுமையே உழைப்பு

கையேந்திக் கடைகளில் இரண்டு முதல் மூன்று பேர் இருப்பார்கள். ஒருவர் உணவு தயாரிப்பார்; இன்னொருவர் வாடிக்கையாளர் தேவையைக் கேட்டுப்பரிமாறுவார், இன்னொருவர் கல்லாவைக் கவனிப்பார். அனைவரும் ஒன்றிணைந்து உழைப்பார்கள்.

வாடிக்கையாளர்களை நேரில் சந்திக்கும் போது, உங்கள் சேவை நிறுவனத்தின் ஒற்றுமை முக்கியம். ஓர் அணியாக இணைந்து வேலை செய்யும் போது, தவறுகள் குறையும். நேரம் மிச்சப்படும். வேலையின் தரமும் உயரும்.

இலவசத்தின் தனித்துவம்

நாம் கையேந்திக் கடைகளில் சாப்பிடும் போது, நாம் விரும்பிச் சாப்பிடும் அயிட்டத்தை, வழக்கமான அளவை விட, கொஞ்சம் கூடுதலாகக் கொடுப்பார்கள். அல்லது 10 வடை பார்சல் வாங்கினால், இலவசமாக இரண்டு வடைகள் வைத்துக் கட்டுவார்கள்.

இந்த இலவசம் செய்யும் மாயம் அதிகம். வாடிக்கையாளர் கேட்பதைக் காட்டிலும், அதிகமாக அவருக்குக் கொடுத்து, அவரை அடுத்த முறையும் நம் பொருளை/சேவையைப் பயன்படுத்த உரிமையோடு வரவழைக்க வேண்டும்.

– ஜி. எஸ். மதன், குன்றத்தூர்

தூக்கி விட்ட வீட்டு மனை விற்பனை!

0
திரு. தி. நாராயணசாமி பன்முகத்திறன் கொண்டவர். வங்கியில் இருபது ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று வணிகத்தில் கால்பதித்தவர். பித்தளை, அலுமினியம் போன்ற உலோகப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் விற்பனை மையங்களை நடத்தியவர். தற்போது, ரியல் எஸ்டேட், கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த நாற்பது ஆண்டுகளில், தம் தொழில் வளர்ச்சிக்கு ஒதுக்கிய நேரத்திற்கு ஈடாக சமூக பணிகளிலும் ஈடுபட்டவர். தன் அனுபவம் இளைய தலைமுறைக்குப் பயன்பட வேண்டும் என்ற தாகம் கொண்டவர். அதே எண்ணத்துடன் நம்மிடமும் பேசினார். ‘வளர் தொழில்’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து…
”சென்னை, பல்லாவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று இளங்கலை கல்லூரிப் படிப்பை ஏஎம் ஜெயின் கல்லூரியில் முடித்தேன். என் தந்தையார் திரு. தியாகராஜன் அவர்கள் குத்துவிளக்கு தயாரித்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தார். அதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும் அளித்தார். எனவே, எனக்கு வேலைதேட வேண்டிய அவசியம் இல்லை. படிப்பை முடித்த கையோடு தந்தையாருடன் சேர்ந்து பணியாற்றினேன். என் சகோதரர்கள் சிவகுமார், பாலசுப்ரமணியன் ஆகியோரும் இத்தொழிலைக் கற்றுக் தேர்ந்தனர்.
என் தந்தையார் உழைப்பால் உயர்ந்தவர். சிறுவனாக இருந்தபோதே வீடுகளுக்கு தினசரி நாளிதழ்களை விநியோகிக்கும் ‘பேப்பர் பாய்’ பணி செய்தார். படிப்படியாக முன்னேறியவர். ஒரு கட்டத்தில் ஆங்காங் வங்கியில் (Hong Kong Bank) வேலை கிடைத்து பணியாற்றினார். சொந்தத் தொழில் மீது பேரார்வம். கொண்டு இருந்த அவர் வங்கிப் பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று இந்தத் தொழிலை நடத்தினார்.
தந்தையாரிடம் தொழில் கற்று இரண்டு ஆண்டுகள் அவருடன் பணியாற்றி வந்த எனக்கும் ஆங்காங் வங்கியில் வேலை கிடைத்தது. சுமார் இருபது ஆண்டுகள் அங்கு பணியாற்றிய காலம் எனக்கு பல்வேறு படிப்பினைகளைத் தந்தது. தொழில் முனைவோருக்கான சேவைப்பிரிவு, ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த செயல்பாடுகள் உள்பட வாடிக்கையாளர்களுக்கான அனைத்து சேவைப் பிரிவுகளிலும் பணியாற்றினேன்.
நிலையான வருமானம், நிறைய சம்பளம் என்ற சமூக அந்தஸ்துடைய வேலையில் இருந்தாலும் என் தந்தையாரிடம் கற்ற சொந்தத் தொழில் ஆளுமை அடிமனதில் சுடர்விட்டுக் கொண்டு இருந்தது. அந்த எண்ணம் நன்று வளர்ந்த உடன் வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று சென்னை பம்மலில் தொழிற்சாலை ஒன்றை நிறுவினேன்.
“பிரிமியர் கேப்ஸ்” (Premier Capes) என்ற பெயரில் மருந்து பாட்டில்களுக்கு அலுமினிய மூடி தயாரிக்கும் தொழில். மிகச் சிறப்பாக உற்பத்தியும், விற்பனையும் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. காலப்போக்கில் எதிர்பார்த்த வளர்ச்சியை இத்தொழில் தராததால் இதை நிறுத்திவிட்டு, மயிலாப்பூரில் பெரிய முதலீட்டில் ‘பிரவுசிங் சென்டர்’ தொடங்கினேன். இந்த மையங்களை சென்னையில் முதலில் தொடங்கிய சிலரின் நானும் ஒருவன். மக்கள் நெருக்கம் மிகுந்த ‘லஸ் கார்னர்’ அருகே இருந்த எங்கள் கடையில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதியது.
கணினி சார்ந்த அத்தனை சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுத்தோம். நாளடைவில் புற்றீசல் போல பிரவுசிங் சென்டர்கள் தோன்றின. எங்களுக்கு நடைபெற்று வந்த வணிகமும் குறைந்தது. முதலீடு உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லாததால், ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினேன்.
என் தந்தையாரின் உழைப்பாற்றல் என் கண்முன் எப்போதும் நிற்பதுபோல, என் தாயார் திருமதி. சாவித்திரி அவர்களின் ஈகை குணம் என் மனத்தில் ஆழப்பதிந்து விட்டது. இதன் காரணமாக, வங்கிப் பணியில் இருந்த போதும் தொடர்ந்து தொழிலுல் ஈடுபட்டு வந்த போதும் சமூக நலப் பணிகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தேன்.
குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் இயன்ற உதவிகளைச் செய்தேன். அதன் விளைவாக தொண்டு நிறுவன நண்பர்கள் பலரின் நெருங்கிய நட்பு கிடைத்தது.
என் சகோதரர் திரு. பாலசுப்ரமணியன் உடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியதும் நண்பர்கள் மூலம் ஏராளமான தொடர்புகள் கிடைத்தன. தாம்பரம் அருகே நிலம் வாங்கி சிஎம்டிஏ அங்கீகாரம் பெற்று நாங்கள் முதன் முதலாக விற்பனை செய்த வீட்டு மனைகள் உடனடியாக விற்றுத் தீர்ந்தன.
நேர்மையாக இத்தொழிலைச் செய்து வருவதால், எங்களின் சேவை பெற்ற ஒவ்வொரு வாடிக்கையாளரும், நண்பரர்களும், புது வாடிக்கையாளரை அனுப்பி வைத்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தொழிலில் நல்ல வளர்ச்சியை எட்டி உள்ளோம். வீட்டுமனைகள் விற்பனை உடன் கட்டுமானப் பணிகளையும் செய்து தருகிறோம்.
“பணமும் பின்பலம் இல்லை” என்ற சொத்தை கருத்தைச் சொல்லியே பலர் பொன்னான நேரத்தை வீணடிக்கின்றனர். நம் இளைஞர்கள் பலர் நேர்முகத் தேர்வு வரை சென்று அதன் பிறகு இயல்பாக பேச வராத நிலையில் தோல்வி அடைவது அதிகமாக உள்ளது. இத்தகைய இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு முனைவர் திருக்குறள் தாமோதரன் சென்னையில் ஒரு பூங்காவில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய திருவிக பேச்சுப்பயிலரங்கம் இன்று பல்வேறு பூங்காக்களில் நடைபெற்று வருகிறது.
மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைபெறும் இந்த அரங்கை கடந்த பதினோரு ஆண்டுகளாக நான் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறேன்.
என் மூத்தமகள் திருமதி. ராஜலட்சுமி அமெரிக்காவில் உள்ளார். கணினி வல்லுநரான அவரைப் பார்க்க அவ்வப்போது அங்கு சென்று வருவதுண்டு.
சிறப்பு இயல்புகளைக் கொண்ட இந்தியர்களின் ஆற்றலை அந்த நாடு பயன்படுத்திக் கொள்கிறது. நம் அரசு அவ்வாறு பயன்படுத்தத் தவறுகிறது. வணிகம் மற்றும் சமூகப் பணிகளில் நான் சிறப்பாக செயல்படுவதற்கு என் சகோதரர் பாலசுப்ரமணியன், நண்பர் ஸ்ரீதரன் மற்றும் வங்கிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று உள்ள என் மனைவி திருமதி. ஆனந்தி, இளைய மகளும் பொறியியல் முதுநிலை பட்டதாரியுமான செல்வி. பாரதி ஆகியோரின் உறுதுணையும் முக்கியக் காரணம்..” என்கிறார். திரு. நாராயணசாமி.
– எம். வி. ராஜதுரை

பிளாஸ்டிக் தடை – உருவாகும் புதிய வாய்ப்புகள்

0

தமிழக அரசு, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்ததால், இப்போது வாழையிலை, தேக்கு இலை மற்றும் பாக்கு மட்டை பிளேட் முதலியவை பயன்பாட்டுக்கு அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. இதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான சூழல் அமைகிறது.

அதிலும் பாக்குமட்டையில் உற்பத்தி செய்யும் பிளேட்டுகளுக்கு இன்று தேவை அதிகளவில் பெருகியுள்ளது. இந்தத் தொழிலுக்கு தொடக்க முதலீடு மிகவும் குறைவாகவே உள்ளது.

ஆனால் மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிகிறது. பலருக்கும் வேலைவாய்ப்பையும் கொடுக்க முடியும்.

பாக்கு மட்டை பிளேட் தயாரிக்கும் தொழில் தொடங்குவத்கு 10ஙீ10 சதுர அடி பரப்பளவுள்ள சிறிய அறை இருந்தால் போதும். ஆண் பெண் இருவரும் எளிதாக இந்தத் தொழிலைச் செய்யலாம்

இந்த பிளேட்களுக்கு உற்பத்திப் பொருட்கள் பாக்கு மட்டைகள்தான். இதன் விலை 2-3 ரூபாய் வரைதான் இருக்கும். மொத்தமாக வாங்கினால் இன்னும் சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம். மார்த்தாண்டம், சேலம், பொள்ளாச்சி, கோயமுத்தூர் முதலிய இடங்களிலும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் பாக்கு மட்டைகள் அதிகளவில் கிடைக்கின்றன.

பாக்கு மட்டைத் தட்டு உற்பத்தி செய்ய பல்வேறு எந்திரங்கள் உள்ளன. கையால் இயக்கும் எந்திரங்கள் 25 ஆயிரம் ரூபாய் முதல் 32 ஆயிரம் ரூபாய்களுக்குள் கிடைக்கின்றன. இவற்றை விட சற்று அதிகமான விலைகளில் கால்களால் பெடல் செய்யும் எந்திரங்களும் கிடைக்கின்றன.

நம் தொழில் கொஞ்சம் சூடு பிடித்த பிறகு, பாக்கு மட்டைத் தட்டு உற்பத்தி செய்ய, தானியங்கி எந்திரங்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.

தானியங்கி எந்திரங்கள் ரூபாய் 50 ஆயிரம் முதல், இரண்டு லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.

பாக்கு மட்டை தட்டை எளிதாக செய்துவிட முடியும். முதலில் பாக்கு மட்டையை 30 நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 30 நிமிடம் கழித்து, வெயிலில் சற்று காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இவை தட்டு செய்ய தயாராகி விடும்.

இப்படி தயாரான பாக்கு மட்டையை, கையால் இயக்கப்படும் எந்திரத்தில் வைத்து ஓர் அழுத்து அழுத்தினால் (பிரஷ் செய்தால்) போதும். பாக்கு மட்டை பிளேட் தயாராகி விடும்.

வாடிக்கையாளர் தேவைக்கேற்ப 4 – 12 அங்குல விட்டங்களில் அளவுகளை மாற்றி மாற்றிச் செய்து கொள்ளலாம். சிற்றுண்டிக்கு சிறிய பிளேட்டுகளும், சாப்பாட்டு பெரிய பிளேட்டுகளும் செய்து விற்பனை செய்ய வேண்டும்.

திருமணங்கள், பிறந்த நாள் விழாக்கள், குடும்ப விழாக்கள் போன்றவற்றிற்கு நாம் பாக்கு மட்டை பிளேட்களை சப்ளை செய்யலாம். அதுபோல, கையேந்தி பவன்கள், திருமண மண்டபங்கள், அரசியல் கட்சி விழாக்களுக்கும் இந்த பிளேட்டுகள் அதிகளவில் தேவைப்படும். மொத்த கடைகளில் கூட விற்பனை செய்யலாம்.

ஒரு பாக்குத் தட்டு ஒரு ரூபாய் என விற்பனை செய்தாலும், 50 ஆயிரம் தட்டுகளை உற்பத்தி செய்தால், உற்பத்திச் செலவுகள் போக, மாதம் 30 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும்.

– தேன்கனி, விருதுநகர்

அவர்கள் முடியாது என்றார்கள்; நாங்கள் வென்று காட்டினோம்!

0

ஒரு குறிப்பிட்ட ஆந்திர ஐஸ்கிரீம் நிறுவனத்திடம், அவர்கள் ஐஸ்கிரீமை விற்பனை செய்ய தனி உரிமைக் கிளை (ஃப்ரான்சைஸ்) கேட்டபோது, அந்த நிறுவனத்தில் இருந்து வந்து இடத்தைப் பார்வையிட்ட அந்த நிறுவன அலுவலர்கள், இந்த இடத்தில் நம் ஐஸ்கிரீம் விற்பனை ஆகாது என்று தனி உரிமைக் கிளை தர மறுத்து விட்டார்கள். இதையே ஒரு சவாலாக ஏற்று அதே இடத்தில் தானாகவே ஒரு ஐஸ்கிரீம் விற்பனையகத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார், ஸ்கூப்டு ஐஸ் கிரீம் பார் (Scooped Ice Cream Bar) உரிமையாளர் திரு. விசால். சென்னை, வேளச்சேரி, விஜய நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள இவரது விற்பனையகத்தில், இவரை பேட்டி கண்டபோது,

“ஐஸ்கிரீம் விற்பனை மற்றும் அதன் உற்பத்தி குறித்து எனக்கு எந்த ஒரு முன் அனுபவமும் இல்லை. பொதுவாக எனக்கு இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் வகை உணவுகள் மீது ஒரு தனி விருப்பம் உண்டு. விரும்பி உண்ணுவேன். எங்களின் இந்த விற்பனையகம் அமைந்திருக்கும் இடத்தில் முன்பு பொன்னு ஸ்டோர்ஸ் என்ற பெயரில் வீட்டுக்குத் தேவையான சாதனங்களை விற்பனை செய்யும் கடை வைத்திருந்தோம். பொன்னு ஸ்டோர்சின் கிளைகள் சென்னையில் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன. இந்த இடத்தை மட்டும் ஐஸ்கிரீம் விற்பனையகத்துக்காக தேர்ந்தெடுத்தோம்.

இன்னொரு பிராண்டிடம் தனி உரிமைக் கிளை கேட்பதை விட, தரமான, சுவையான ஐஸ்கிரீம் வகைகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கான தகவல்களை சேகரித்து அங்கு உள்ள ஒரு புகழ் பெற்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கினோம்.

எங்கள் கடைக்கு பெரும்பாலும் பதினைந்து வயது பள்ளி மாணவர்களும், இளம் தம்பதிகளும், குழந்தைகளுடன் வரும் பெற்றோரும் அதிக அளவில் வருகிறார்கள். குழந்தைகளுக்குப் பிடிக்கும் வண்ணம் விற்பனையகத்தை வடிவமைத்து உள்ளோம். குடும்பத்துடன் வருபவர்கள் காத்திருக்கும் நேரத்தில் விளையாடுவதற்கு செஸ், பரமபதம் போன்ற விளையாட்டுகளை வைத்துள்ளோம்.

தொடர்ந்து ஐஸ்கிரீம் உண்ணு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. அதனால்தான் இப்போது மூலை முடுக்கெல்லாம் ஐஸ்கிரீம் பார்லர்கள் தோன்றி வருகின்றன. வெயில் காலம் மழைக்காலம் என்றில்லாமல் எப்போதும் ஐஸ்கிரீம் விற்பனை இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் வெயில் காலத்தில் விற்பனை சற்று அதிகமாக இருக்கும்.

ஐஸ்கிரீம் தவிர மில்க் ஷேக்குகள், டெசர்ட்ஸ் ஜார், கேக்குகள், இனிப்பு வகைகளையும் விற்பனை செய்து வருகின்றோம். எங்கள் நிறுவனத்தின் பிரவுனி நியூட்டெல்லா ஐஸ் கிரீம் அனைவராலும் அதிகம் விரும்பப்பபடும் ஐஸ்கிரீம் ஆகும். எங்கள் கடைக்கு வரும் குழந்தைகளின் முதல் விருப்பம் இந்த ஐஸ்கிரீம்தான்.

பொதுவாக ஐஸ் கிரீம் இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை உருகாமல் இருக்கும். பார்சல் வாங்க வரும் குறைந்த தொலைவில் இருப்பவர் களுக்கு அதற்கேற்ப பேக் செய்து கொடுப்போம். சற்று அதிக தொலைவில் இருந்து வருபவர்களுக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை உருகாமல் இருப்பதற்கேற்ப ட்ரை ஐஸ் போட்டு பேக் செய்து கொடுப்போம்.

18% என்ற அதிகமான ஜிஎஸ்டி வரியால் ஐஸ்கிரீம் தொழிலும் பாதிக்கப்பட்டு இருந்தது. வணிக அமைப்புகளின் தொடர் கோரிக்கைக்குப் பின் இந்த வரி 5% ஆக குறைக்கபட்டு உள்ளது. இதனால் ஐஸ்கிரீம் தொழில் மீது இருந்த சுமை குறைக்கப்பட்டதோடு, விற்பனையும் அதிகரித்து உள்ளது.

தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்விக்கி, சோமேட்டோ, ஊபர் ­ஈட்ஸ் மற்றும் ஃபுட் பாண்டா போன்ற டெலிவரி சேவைகள் ஆன்லைன் வணிகத்தை உயர்த்தி வருகின்றன. இந்த டெலிவரி சேவைகள் வந்த பின் உணவுப் பொருட்களின் விற்பனை அதிகரித்தபடியே இருக்கிறது. இந்த டெலிவரி சேவைகள் வாயிலாக நாங்களும் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்து வருகின்றோம். வாடிக்கையாளர்களும் இந்த ஆன்லைன் பதிவு டெலிவரி சேவைகளைப் பயன்படுத்தி அதிக அளவில் ஐஸ்கிரீம்களை விரும்பி வாங்குகின்றார்கள்.

எங்கள் பார்லர் காலை பதினோரு மணி முதல் இரவு இரண்டு மணி வரை செயல்படுகிறது. நள்ளிரவு பன்னிரெண்டு மணி முதல் இரண்டு மணி வரை ஆன்லைனில் மட்டும் விற்பனை நடைபெறும். பகலில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் போலவே இரவிலும் மக்கள் ஐஸ்கிரீமை விரும்பி உண்ணுகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் முதல் நாளில் இருந்து குறிப்பிட்ட பிளாஸ்டிக் பேக்கிங் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதனால் எங்களைப் போன்ற ஐஸ்கிரீம் கடைக்காரர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஐஸ்கிரீம் ஒரு உருகும் உணவுப் பொருள். அதனை பேப்பர் பிளேட் மற்றும் பேப்பர் கப் போன்றவற்றில் வைத்துக் கொடுக்க முடியாது. உடனே ஈரமாகி பேப்பர் நைந்து போய் விடும்.

பிளாஸ்டிக் கப்புக்கு இணையான மாற்றுப் பொருள் ஐஸ்கிரீம் வைத்துக் கொடுக்க வேறு இல்லை. அரசு மறுசுழற்சி செய்ய முடியாத பெரிய நிறுவனங்களின் சிப்ஸ் பாக்கெட்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. பிளாஸ்டிக் கப்புகளை மறுசுழற்சி செய்ய முடியும். எனவே மீண்டும் பிளாஸ்டிக் கப்களை ஐஸ்கிரீம் தொழிலில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

இப்போது இருக்கும் புதிய தலைமுறையினருக்கு அவர்களுக்கு பிடித்த சுவை இருந்தால் போதும்; விலை சற்று அதிகமாக இருந்தாலும் கவலைப்படுவது இல்லை.. எங் களுக்குத் தேவைப் படும் பிரவுனி மற்றும் சில பொருட்களை தாங்களே தயாரித் துக் கொள்கிறோம்.

ஃப்ரீசரில் வைத்துப் பாதுகாக் கப்படும் ஐஸ்கிரீம் ஓர் ஆண்டு வரை கெடாமல் இருக்கும்.. ஆனால் எங்கள் கடை ஃப்ரீசரில் வைக்கப்படும் ஐஸ்கிரீம் ஒரு வாரத்துக் குள்ளாகவே விற்று விடும்.

கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று, ஐஸ்கிரீம் வாங்க திருமணமாகாத இளைஞரோ, இளைஞியோ வந்தால் அவர்களுக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கினால், ஒரு ஐஸ்கிரீமை இலவசமாகக் கொடுத்தோம். இந்த சலுகை இளைஞர்கள் நடுவில் பரவலாக வரவேற்பு பெற்றது. இந்த ஆண்டு காதலர் தினத்தன்றும் அந்த சலுகையை வழங்கினோம்.

அடுத்த கட்டமாக நாங்கள் எங்கள் தனி உரிமைக் கிளைகள் வழங்குவது குறித்து திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். சென்னை ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் – இல் இருக்கும் ஓஎம்ஆர் உணவுத் தெருவில் இரண்டு கடைகளை அடுத்த மாதம் ஐஸ்கிரீம் பார் பை ஸ்கூப்டு (Ice Cream Bar by Scooped) என்ற பெயரில் திறக்கவிருக்கிறோம்.

எனது துணைவியார் திருமதி. ஸ்டெபி கிரேஸ், ஒரு ஆர்க்கிடெக்ட். எங்கள் ஐஸ்கிரீம் விற்பனையகத்துக்கான இன்டீ ரியர் டிசைனை அவர்தான் இனி உருவாக்கயுள்ளார். இந்த முயற்சிகளில் பெரிய அளவுக்கு உதவியாக இருக்கிறார். கடைகளை வடிவமைப்பது முதல், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது வரை எனக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.” என்றார், திரு. விசால், பி.டெக்., (99625 05557).

– செ. தினேஷ் பாண்டியன்