சிறிய வியாபார நிறுவனங்களுக்கான குறைந்த செலவில் சந்தை படுத்துதலுக்கான ஆலோசனைகள்

0

பல்வேறு குறைந்த திட்ட செலவுகளிலான சந்தைப்படுத்தல் உத்திகள் நம்முடைய திட்ட செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தாது. ஆனால், அவை நம்முடைய கவனத்தை ஈர்க்கும். மேலும், இதற்காக நம்முடைய நிறுவனத்தின் நிதியை மிகத்திறனுடனும், சிக்கனமான வழிகளிலும் பயன்படுத்தலாம். அதைவிட, சந்தைப்படுத்தலுக்காக எவ்வளவு தொகையை ஒதுக்கீடு செய்கின்றோம் என்பது முக்கியம் அன்று. ஆயினும், அதே அளவு திட்ட நிதியை எவ்வளவு கால அளவிற்கு நீட்டிக்க முடியும் என திட்டம் இடலாம். அவ்வாறான சிறிய வணிக நிறுவனங்களால் செயல்படுத்தக் கூடிய மிகச்சிறந்த குறைந்த செலவில் சந்தைப்படுத்துதலுக்கான ஆலோசனைகள் பின்வருமாறு,

தற்போது, வியாபார உலகில் உள்ள எந்தவொரு நிறுவனமும் தமக்கென தனியாக இணைய பக்கங்களை வைத்துக் கொள்ளாமல் செயல்பட முடியாது என்ற மேம்பட்ட நிலையில் இயங்கி வருகின்றன. பெரிய நிறுவனங்கள் எனில் அவ்வாறு தமக்கென தனியாக இணையபக்கங்களை எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என உருவாக்கி பராமரித்து கொள்ளமுடியும். சிறிய நிறுவனங்கள் அவ்வாறு அதிக செலவிட அந்நிறுவனங்களின் பொருளாதார நிலை இடம் கொடுக்காது. அதனால், சிறிய நிறுவனங்கள்கூட குறைந்த செலவில் அவ்வாறான இணைய பக்கங்களை நிறுவுகை செய்து பராமரிக்கலாம். அதாவது, இணையபக்கங்களில் தம்முடைய வியாபார நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை பிளாக் என்பதன் வாயிலாக வழங்குவதற்காக பணியாளர்களை தனியாக நியமனம் செய்து தினமும் பல்வேறு செய்திகளை வெளியிடுவார்கள். அதற்கு பதிலாக, வெளியில் இருந்து ஒப்பந்த பணி (Outsource) பயன்படுத்தி தம்முடைய நிறுவனத்தை பற்றிய செய்திகளை கூறும். அதேபோன்ற பிளாக்கை வெளியிடும் பணியை செயல்படுத்தி செலவினை குறைத்து கொள்ளலாம்.

தற்போது, காணொளி காட்சியின் வாயிலாக தம்முடைய நிறுவனங்களை பற்றி விவரங்களை சந்தை படுத்துவதற்காக யூடியூப் எனும் இணையதள பக்கத்தின் இணைப்பினை வழங்கி வாடிக்கையாளர்களை தம்முடைய இணைய பக்கங்களில் இருந்து அங்கு செல்லுமாறு அந்த நிறுவனங்கள் திசை திருப்பி விடுகின்றன. இது சரியான வழிமுறையன்று. இதற்கு பதிலாக, கட்டற்ற பயன்பாடுகளின் துணையுடன் இதே காணொளி காட்சி வாயிலாக சந்தைபடுத்துதல் நடவடி க்கைகளை பதிவுசெய்து நம்முடைய இணைய பக்கங்களிலேயே வெளியிடுவது நன்று.

பக்கம் பக்கமாக எழுத்துகளின் மூலமான விளக்க உரையைவிட தம்முடைய உற்பத்தி பொருளை அல்லது சேவையை பற்றிய விவரங்களை வரைகலை படத்தின் வாயிலாக நுகர்வோர்களை காட்சி படங்களாக காணுமாறு செய்வது, எளிதாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். அதனால், உரைவடிவிலான விளக்கத்திற்கு பதிலாக விளக்க வரைகலையை பயன்படுத்தி அதிலும் பொம்மை வரைகலை விளையாட்டுகளின் வாயிலாக நிறுவனத்தை பற்றிய போதுமான தகவல்களை வழங்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றாக கூட்டி கட்டணமற்ற மாதிரி பொருட்களுடன், கட்டணமற்ற சேவைகளுடன் விருந்து
உடன் சேர்த்து வழங்குவது எனும் நடைமுறையானது இந்நிறுவனம் எளிதாக நம்முடைய கோரிக்கையை நிறைவேற்று கின்றார்கள் என்ற மனநிலையை வாடிக்கையாளர்களின் மனதில் உருவாக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் அல்லது குறிப்பிட்ட காலஇடைவெளியில் அரசு அல்லது முகமைகள் குறிப்பிட்ட உற்பத்திப் பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு பரிசுப்போட்டி நடத்துவார்கள். அதில், கண்டிப்பாக கலந்து கொண்டு பரிசுகளை நம்முடைய உற்பத்தி பொருள் அல்லது சேவையானது வெற்றி பெறும்போது இலவச விளம்பரமாக தானாகவே அந்த பரிசுப்போட்டியின் நம்முடைய வெற்றி செய்தியானது நம்முடைய உற்பத்தி பொருள் அல்லது சேவைக்கு கிடைக்கின்றது.

– முனைவர். ச. குப்பன்

மினி ரைஸ்மில் குறைந்த செலவு அதிக லாபம்

0

விவசாயிகளுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருப்பது மார்க்கெட்டிங் தான். விளைச்சல் நன்றாக இருக்கும்போது மார்க்கெட்டில் அதற்கான விலை குறைவாக இருக்கும். விலை சற்று அதிகமாக இருக்கும்போது விளைச்சல் குறைவாக இருக்கும். குறிப்பாக நெல் விவசாயிகளுக்கு லாபம் என்பது முழுமையாகத் தடைப்பட்டு உள்ளது. அவர்கள் நெல் விளைவித்து அதை ரைஸ்மில்லில் கொடுத்து அரிசியாக மாற்றி அதை விற்று வரும் பணத்தில் பாதி மில்லுக்கு கொடுக்கவேண்டும். அரிசி விற்கும் மொத்த வியாபாரிகள் அதை குறைந்த விலைக்கு வாங்கி இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்று அவர்கள் இலாபம் பார்க்கின்றனர். எனவே, இவர்களே சொந்தமாக சின்ன ரைஸ்மில் வைக்கலாம் என்ற நிலை தற்போது இருக்கிறது. அதில் அவர்களுக்கு இலாபமும் கிடைக்கலாம்.

பாக்கம் என்ற பகுதியில் ஜெயக்குமார் என்பவர் ஒரு அரிசி அரவை எந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார். அந்த எந்திரம் பார்ப்பதற்கு சிறியதாகவும், ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எளிதாகவும் உள்ளது.

அந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் 100 கிலோ நெல்லை அரிசியாக மாற்றுகிறது. எட்டு மணி நேரத்திற்கு ஒரு டன் வரை அரிசியாக மாற்றுகிறது. இதற்கு அதிக அளவு மின்சாரமும் தேவை இல்லை.

இந்த எந்திரத்தில் அரிசியின் அளவுக்கு ஏற்றவாறு மாறுபாடு செய்வதற்கான ஆப்ஷன்களும் உள்ளன. மெலிதான நெல்களுக்கு ஏற்ற மாறுபாடுகளும், பெரிய அளவிலான நெல்லுக்கு ஏற்ற மாறுபாடுகளும் அதில் உள்ளன. அரிசியாக மாறும்போது சில அரிசி உடைந்து வரும். அவற்றை பிரிப்பதற்கும் அதில் வழி இருக்கிறது. அதாவது, உடைந்த அரிசி ஒரு வாயில் வழியாகவும், முழு அரிசி ஒரு வாயில் வழியாகவும் வருவதற்கான அமைப்பு அந்த எந்திரத்தில் உள்ளது.

அதுமட்டும் இல்லாமல், உமி, தவிடு ஆகியவற்றையும் தனியாகப் பிரிக்கிறது. அதை கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.

நெல்லை நன்கு உலர வைத்து பயன்படுத்தும் போது, மாற்றுதல் பணி சற்று வேகமாக நடைப்பெறுகிறது. இந்த எந்திரத்தின் மூலம் நுகர்வோர்களுக்கு என்ன பயன் என்றால் இதன்மூலம் பெறப்படும் அரிசியானது பட்டைத் தீட்டாதது ஆகும். அதாவது பாலிஷ் செய்யாதது ஆகும். சிவப்பு அரிசியானது 90% சிவப்பு நிறத்துடன் கிடைக்கிறது. ஆனால் ரைஸ்மில்லில் அரிசி சற்று நிறம் குறைந்துக் காணப்படுகிறது. அரிசி வாங்கிக் கொண்டு போனவர்கள் உடையவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

விளைவித்த உற்பத்தியாளரால் அந்த பொருளை முழுமையாக நுகரமுடியவில்லை. ஆனால், இந்த எந்திரத்தால் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தர முடியும். சரியான விலைக்கு விற்கமுடியும் என்கின்றபோது தேவையான நெல்லை எடுத்து அரிசியாக மாற்றி பயன்படுத்தும் வாய்ப்பை இந்த எந்திரம் ஏற்படுத்தித் தருகிறது. நெல் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால், அரிசி வண்டு வைத்துவிடும். எனவே இதன் மூலம் பொருட்களையும் பாதுகாக்கலாம்.

இது, தற்பொது 40,000ரூ. க்கு விற்கப்படுகிறது. இந்த எந்திரத்தின் மூலம் வருங்காலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தலாம். அதாவது, இதன் விற்பனை அதிகம் ஆகும்போது, ஆறுமாதங்கள் கழித்தோ அல்லது ஒரு வருடம் கழித்தோ பழுது பார்க்கும் தேவை ஏற்படும். எனவே, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோர்களின் வீட்டிற்கு அனுப்பி சரி பார்க்கலாம்.

உற்பத்தியாளர்களுக்கு இந்த எந்திரம் பெரும் உதவியாக இருக்கும், இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு

0

அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் காரணமாக, அமெரிக்கா உடனான இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல்பாதியில் 755 மில்லியன் டாலர் அளவில்அமெரிக்காவுக்கு இந்தியா கூடுதல் ஏற்றுமதியை மேற்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக வேதிப் பொருட்கள், உலோகங்கள், தாதுப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியா அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு முதலே அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வர்த்தகப் போர் நிலவி வருகிறது. சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவும், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவும் வரி விகிதத்தை கடுமையான அளவில் உயர்த்தின. இதனால் இரு நாடுகளும் பாதிப்பைச் சந்தித்தன. அந்தவகையில் சீனாவின் ஏற்றுமதி அமெரிக்காவில் குறைந்ததனால், அந்த வாய்ப்புகள் பிற நாடுகளுக்கு கிடைத்தன.

கிட்டத்தட்ட 21 பில்லியன் டாலர் அளவில் அமெரிக்கா உடனான சீனாவின் வர்த்தகம் வேறு நாடுகளுக்கு திசைமாற்றப்பட்டது. இதில் தைவான், மெக்ஸிகோ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பெரும் பயன் அடைந்தன. இந்தியா, கொரியா, கனடா ஆகிய நாடுகள் குறைந்த அளவில் பயன் அடைந்தாலும், அமெரிக்கா உடனான அந்நாடுகளின் வர்த்தகம் 0.9 பில்லியன் முதல் 1.5 பில்லியன் வரைஉயர்ந்துள்ளது.

இந்த வர்த்தகப் போரினால் இந்தியா நடப்பு நிதி ஆண்டின் முதல்பாதியில் அமெரிக்காவுக்கு 755 மில்லியன் டாலர் அளவில் கூடுதல் ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளது. வேதிப் பொருட்கள் 243 மில்லியன் டாலர் அளவிலும், தாது மற்றும் உலோகங்கள் 181 மில்லியன் டாலர் அளவிலும், மின் இயந்திரங்கள் 83 மில்லியன்டாலர் அளவிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தவிர வேளாண் பொருட்கள், அலுவலக இயந்திரங்கள், ஜவுளிப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியும் உயர்ந்துள்ளன.

நடப்பு நிதி ஆண்டின் முதல்பாதியில் 35 பில்லியன் டாலர் அளவில் அமெரிக்காவுடனான ஏற்றுமதியை சீனா இழந்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போர் அந்த இரு நாடுகளை மட்டும் பாதிப்பதில்லை, மாறாக உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது என்று ஐ.நா வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

சொல்லத் தயங்காதீர்கள் !

0

அமெரிக்காவில் சிக்காகோவில் கன்சாலஸ் என்றொரு பாதிரியார் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒருநாள் ஏழை எளிய மக்களுக்காக ஒரு சிறந்த தொழிற்கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

நல்லவற்றை போதிக்கும் அந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்க அவர் எவ்வளவு பணம் தேவை என்று கணக்கு போட்டுப் பார்த்தார். அவர் விரும்பும் அந்த சிறந்த கல்விக் கூடத்தைத் தொடங்க சுமார் ஒரு மில்லியன் டாலர் தேவைப்பட்டது.
அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. தம்மால் இது முடியாது என்று அவர் விட்டு விடவில்லை. நாள்தோறும் இதே எண்ணமாகவே இருந்தார். எப்பொழுதும் இதைப்பற்றியே சிந்தித்து வந்தார். இப்படியே சுமார் இரண்டு ஆண்டுகள் சென்றன.

இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்துப் பார்த்தபோது தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்த பின்னர் தனது எண்ணத்தை வந்திருப்போரிடம் சொல்லலாம் என்று முடிவு செய்தார். மனிதர்கள் உதவக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் அதன்படி 1890ம் ஆண்டில் ஒரு நாள் தான் நிறுவ விரும்பிய கல்விக் கூடத்தைப் பற்றி மிகச் சிறப்பாக விரிவான முறையில் எடுத்து உரைத்தார்.

அந்தக்கூட்டத்தில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவர் பெயர் ஆர்மர். கன்சாலசின் பேச்சும் எண்ணமும் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. உடனே பாதிரியாரை அணுகி தான் பத்து மில்லியன் டாலர் நன்கொடை தருவதாய்க் கூறினார். மேலும் கன்சாலஸ் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அந்த கல்வி நிறுவனத்தை தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் ஆர்மர் தான் தருவதாய் கூறிய தொகையின் ஒரு பகுதியாக ஒரு மில்லியன் டாலர் பணத்தையும் கொடுத்தார். கன்சாலஸ் ஒரு மில்லியன் டாலரைக் கொண்டு 1893ல் ஆர்மர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்றொரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். அவரே அக்கல்லூரியின் தலைவராகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். ஆர்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற பெயரில் புதிய கல்வி நிறுவனம் செயல்படத் தொடங்கியது.

இன்று உலகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.

குறைந்த முதலீட்டுத் தொழில்கள்!

1

உங்களிடம் நல்ல தொழில்கரு (ஐடியா) இருக்கிறதா? அந்த தொழில் கருவைப் பயன்படுத்தி, இன்றே தொழிலைத் தொடங்கி விடலாம். இதற்கு ரூபாய் 10 ஆயிரம் கையில் இருந்தால் போதும்.

“நல்ல தொழில்கரு, நல்ல நிறுவனத்தை உருவாக்கும்; நல்ல நிறுவனம், நல்ல பணியாளர்களை உருவாக்கும்; நல்ல பணியாளர்கள், நல்ல வாடிக்கை யாளர்களை உருவாக்குவார்கள்; நல்ல வாடிக்கையாளர்கள் நல்ல சந்தையை உருவாக்குவார்கள்” என்பது புதிய தொழில் முனைவோருக்கான இலக்கணம்.

பில்கேட்ஸ் முதல், வால்ட் டிஸ்னி வரை, இப்படித்தான் உருவானார்கள். “உங்களால் கனவு காண முடிந்தால், உங்களால் செய்யவும் முடியும்” என்கிறார் வால்ட் டிஸ்னி. இங்கு, நம்மூரில் குறைந்த முதலீட்டில் என்னென்ன தொழில்களைச் செய்யலாம் என்பதைக் காணலாம்.

மொபைல் ஃபோன் ரீசார்ஜ் கடை

ஆன்லைனில் ரீசார்ஜ் செய்ய ஆயிரம் வழிகள் இருந்தாலும், இன்றும் பெரும் பாலான வாடிக்கையாளர்கள், பெட்டிக் கடைகளிலும், குட்டிக் கடைகளிலும்தான் ரீசார்ஜ் செய்கிறார்கள். இந்த வணிகம் செய்ய விரும்புபவர்கள், ஒரு குட்டிக் கடையை (இடத்தை) வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வாடகை, உங்களால் இயலும் தொகையாக இருக்க வேண்டும்.
பின்னர் உங்கள் பகுதியில் செயல்படும், ஏர்டெல், வோடாஃபோன், பீஎஸ்என்எல், ஜியோ – போன்ற நிறுவனங்களுடன் ஒரு வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்படி, ரீசார்ஜ் செய்யப்படும் தொகையில் எத்தனை விழுக்காடு டேட்டா (கமிஷன்) கிடைக்கும் என்பதும் உடன்படிக்கையில் இருக்கும். பிறகு, தொழிலைத் தொடங்கி விட வேண்டியது தான்.

டிடிஎச் ரீசார்ஜ் கடை

மேற்கண்ட மொபைல் ஃபோன் ரீசார்ஜ் கடையில், டிடிஎச் ரீசார்ஜ் தொழிலையும் சேர்த்துக் கொள்ளலாம்; அல்லது தனியாகவும் செய்யலாம். தற்போது செயல்படும் டாட்டாஸ்கை, வீடியோகான், ஏர்டெல், டிஷ்-டிவி – முதலிய டிடிஎச் நிறுவனங்களுடன் இதுபோன்றே, தரகு (கமிஷன்) உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, பட்டையைக் கிளப்பலாம்.

உணவுக் கடைகள்

நாம் வாழும் இடங்களில் எத்தனையோ குட்டி குட்டி உணவுக் கடைகளைப் பார்த்திருப்போம். அவற்றில் சாப்பிட்டும் இருப்போம்.
‘வயிற்றுக்கு தரமான உணவூட்டும் எந்தத் தொழிலும் தோல்வியடைந்த வரலாறு இல்லை’ என்பது நாம் அனுபவத்தில் கண்ட உண்மை.
நாமும் ஒரு சிறிய இடத்தை வாடகைக்குப் பிடித்து, அதில் இட்லி, தோசை, பூரி போன்ற காலை உணவு களையோ, அல்லது சப்பாத்தி, பரோட்டா போன்ற இரவு உணவுக் கடைகளையோ நடத்தலாம்.
தொடக்க காலத்தில், நமது உணவு தயாரிக்க, பரிமாற, நம்மோடு சேர்த்து, நம் குடும்ப உறுப்பினர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வர்த்தகம் சற்று சூடுபிடித்த பின்பு, வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்ளலாம்.
இதுவும் 10 ஆயிரம் ரூபாய்க்குள் அடங்கிவிடும், என்ன, உணவுத் துறை அலுவலர்களிடம் இதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். வெறும் 3000 – 5000 ரூபாய் பட்ஜெட்டில் தள்ளுவண்டியில் கடை நடத்தி, வெற்றி பெறுபவர்களும் நம்மூரில்தான் இருக்கிறார்கள்.

Also Read: அவர்கள் முடியாது என்றார்கள்; நாங்கள் வென்று காட்டினோம்!

டிராவல் ஏஜென்சி

பெரிய பெரிய மனிதர்கள் எப்போதும் சுற்றுலா அல்லது பயணத்திலேயே ஆர்வம் காட்டுவார்கள். அதுபோல சாதாரண சிறிய சிறிய வணிகர்களும், வர்த்தகர்களும், முகவர்களும் அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருக்கும்.
நாம் வீட்டிலேயே டிராவல் ஏஜென்சி தொடங்கி நடத்தலாம். இதற்கு ஹோஸ்ட் ஏஜென்சிகளைப் பிடித்து, அவர்களுடன் உடன்பாட்டை மேற்கொள்ள வேண்டும். நாம் ஏற்பாடு செய்யும் சுற்றுலா அல்லது பயணத்தைப் பொறுத்து கமிஷன் கிடைக்கும். இதற்கும் முதலீடு 10,000 ரூபாய்க்குள் இருந்தால் போதும்.

தனிப்பயிற்சி (டியூஷன்) நிலையம்

டியூஷன் மையத்தை நம் வீட்டில் இருந்தே நடத்தலாம். வீடுகளில் நடத்தினால் முதலீடு இல்லை. இதற்கு சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யலாம். அல்லது நம் வீட்டு வாயிலின் முன்னால், ‘இங்கு டியூஷன் எடுக்கப்படும்’ என்று அட்டையில் எழுதி தொங்க விடலாம்.
நாம் வாழும் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வருவார்கள்.
நமக்குத் தெரிந்த பாடத்தை மட்டுமே நடத்தலாம். ஆங்கிலப் பாடம், கணிதப் பாடம், கணினிப் பாடம் போன்ற துறைசார் பாடங்களை நடத்தலாம். முக்கியமாக கணிதப் பாடத்திற்கு மதிப்பு அதிகம். அதிகளவில் மாணவர்கள் வரும்போது, ஏதாவது ஓரிடத்தை வாடகைக்குப் பிடித்துக் கொள்ளலாம்.

பழச்சாற்றுக் கடை

இதுவும் எளிதாகத் தொடங்கிவிடும் தொழில்தான், இதற்கு பழச்சாறு பிழியும் எந்திரத்தை வாங்க வேண்டி இருக்கும்.
உங்கள் பகுதியில் சிறிய கடையைப் பிடித்து, பழச்சாற்றுக் கடையைத் தொடங்கி விடலாம். பத்து ஆயிரம் ரூபாய்க்குள் பழச்சாறு பிழியும் எந்திரங்கள் கிடைக்கின்றன.
தையற்காரர்கள்

சென்னை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களிலும், சிறிய நகரங்களிலும் நல்ல தையற்காரர்களுக்கு தேவை அதிகம். இதற்குத் தேவை நல்ல தையல் எந்திரம். 5000 ரூபாய் முதல் தையல் எந்திரம் கிடைக்கிறது.
விரைவாக தையல் செய்ய, மின்சார தையல் எந்திரத்தை வாங்கலாம். நம்மூரில் பெரும்பாலான வருமானம் குறைந்த பெண்களை வாழ வைத்து, அவர்களை ஓரளவு நடுத்தரக் குடும்பமாக உயர்த்தி வைப்பது தையல் தொழில்தான்.
தற்போது தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை இருப்பதால், துணியில், நல்ல டிசைன் போட்டு, வகை வகையான பைகளைத் தயாரித்து, பெரிய பெரிய கடைகளிலும், உணவகங்களிலும் விற்பனை செய்யலாம்.

ஆன்லைன் பேக்கரிக் கடை

ஓவன்பிரஷ் என்ற ஆன்லைன் பேக்கரிக் கடையைப் பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கலாம். இதுபோல பலரும் இந்த துறையில் வெற்றி பெற்று உள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்த சாருலதா கோஸ், வெறும் 2000 ரூபாயில், 2013 இல், ஆன்லைன் பேக்கரிக் கடையைத் தொடங்கினார்.
இப்போது நாடு முழுவதும், கிளைகளைக் கொண்டு, சிறப்பாகச் செயல்படுகிறது. சென்னையில் கூட பல்வேறு கிளைகளைக் கொண்டு இயங்குகிறது.

இணையதளம்/பிளாக் தளங்கள்

இப்போது பல்வேறு பிளாக் தளங்கள் இலவசமாகவே தொடங்கி விடலாம். ஒரு மின்னஞ்சல் கணக்கைத் தொடங்கி, பிளாக் தளத்தில் நம் படைப்புகளை, சிந்தனைகளை எழுதத் தொடங்கி விடலாம்.
மேலும் இணையதளத்தைக் கூட தொடங்கி நடத்தலாம். இதற்கு ஹோஸ்டிங் மற்றும் வடிவமைப்பு என மொத்த செலவு 3600 – 5000 ரூபாய்க்குள் ஆகலாம்.
நம் தளத்தைப் பார்க்கும் பார்வையாளர் எண்ணிக்கை கூடும் போது, அதில் கூகிள் போன்ற நிறுவனங்கள் விளம்பரம் செய்யும், அந்த விளம்பரத்தை எத்தனை பேர் கிளிக் செய்கிறார்களோ, அதற்கேற்ப நம் வங்கிக் கணக்கில் காசு வந்துவிடும்.
இதற்கு ஃபேஸ்புக், வாட்சாப் போன்ற சமூக வலைத்தளங்களில் இலவசமாக விளம்பரம் செய்து, பார்வையாளர்களை அதிகளவில் ஈர்க்க முடியும். அதற்கேற்ப, நம் படைப்புகளையும் கவர்ச்சிகரமாக அமைத்தால்தான், மீண்டும் மீண்டும் வந்து படிப்பார்கள்.

யூடியூப் சேனல்கள்

யூடிப்பில் நமக்கென ஒரு சேனலைத் தொடங்கிக் கொண்டு, நம் மொபைல் ஃபோனில், நாமே நல்ல கருத்துகளை, நம் எண்ணங்களை, நம் சமையல், கலை, தொழில் குறிப்பு, சுடச்சுட செய்தி, விமர்சனம் என பேசி பதிவுசெய்து, இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
யூடியூப்பிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பார்த்து, அதிகளவில் சப்ஸ்கிரைப் செய்திருப்பின் நம் வங்கிக் கணக்கில் பணம் அனுப்பி வைக்கப்படும். பார்வையாளர்கள் கூடும் போது, அந்த நிறுவனமே, நம் சேனலில் விளம்பரங்களைக் காட்டி, அதற்கான தொகையை நம் கணக்கில் சேர்த்து விடும்.

நிகழ்ச்சி அமைப்பு (ஈவன்ட் ஆர்கனைசிங்)

நிகழ்ச்சி அமைப்பு மேலாளர்கள் – எந்நேரமும் அலுவலகத்தில் இருப்பது இல்லை. எப்போதும் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் நகரில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்ற பட்டியல் இருக்கும். இதனை 24/7 துறை என அழைப்பார்கள்.
அந்த நிகழ்ச்சி நடத்துபவர்களைத் தொடர்பு கொண்டு, நிகழ்ச்சிக்குத் தேவையான ஒலிபெருக்கி, மேடை, நாற்காலிகள், விளக்கு வசதிகள், பங்கேற்பாளர்களுக்கான உணவு, எழுதும் டைரிக் குறிப்பு, பேனா – போன்றவற்றை ஏற்பாடு செய்வார்கள். அதற்கென ஒரு பில் போட்டு, நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் வாங்கி விடுவார்கள். அவர்களின் சேவை தரமாக இருந்தால், இவர்களுக்கான தேவையும், வரவேற்பும் அதிகமாக இருக்கும்.

Also Read: அண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை!

திருமண இணையதளம்

இன்று திருமணம் என்பது, மிகப்பெரிய வர்த்தகமாக ஆகி விட்டது. அதற்கான தேவையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இன்று ஆண் மற்றும் பெண்ணின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், பெரும்பாலும் இணையதளங்களிலேயே தங்களுக்கான துணைவரைத் தேடுகின்றனர்.
திருமண இணையதளம் நடத்துவதற்கு தொடக்க செலவு ஓர் இணையதளம் பதிவுசெய்து, வடிவமைப்பதுதான் இதற்கு 4000 – 6000 ரூபாய் தொடக்க முதலீடு இருந்தால் போதும்.
இந்த திருமண தளத்தை இலவசமாகக் கொடுத்து, அதில் விளம்பரங்களை வெளியிட்டும் வருமானம் ஈட்டலாம்; அல்லது திருமணப் பதிவு செய்பவர்களிடம் சிறிய சேவைக் கட்டணம் வாங்கியும் வருமானம் ஈட்டலாம்.

ஆன்லைன் கோர்ஸ்கள்

20 – 30 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல் வழியாக நடத்தப்பட்ட பயிற்சிகள், இப்போது ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகின்றன.
முன்பு அஞ்சல் வழியாக ஆங்கிலம், அக்கவுன்ட்ஸ், ஃபோட்டோகிராபி கற்றுக் கொடுத்தனர். இப்போது ஆன்லைன் மூலமாக பலரும் கற்றுக் கொடுக்கின்றனர்.
உங்களிடமும் தொழில் திறமை இருந்தால், ஆன்லைன் கோர்ஸ்களை நடத்தலாம். நீங்களே வீடியோ, ஆடியோ அல்லது எழுத்துப் பாடங்களைத் தயாரித்து, அதனை குறிப்பிட்ட கட்டணம் பெற்று, கொடுக்கலாம்.
இதற்கான ஓர் இணையதளத்தைத் தொடங்கி, உங்கள் ஆன்லைன் கோர்ஸ்களைக் கொடுக்கலாம். அல்லது, ஏற்கெனவே இத்தகைய ஆன்லைன் கோர்ஸ்களை நடத்தும் நிறுவனங்களில் நீங்கள் கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொண்டு, அவர்கள் தயாரிப்புகளை (வீடியோ, ஆடியோ, டெக்ஸ்ட்) நீங்கள் வாங்கிக் கொடுக்கலாம்.

நிழற்படக் கலை

திருமணம், குடும்ப விழாக்களில் நிழற்படங்கள், வீடியோ எடுப்பது ஒருவகை தொழில்தான். ஆனால் அதையும் தாண்டி, உங்களிடம் நல்ல டிஎஸ்எல்ஆர் கேமரா இருந்தால், நல்ல நிழற்படங்களை எடுத்து, ஆன்லைனில் சில தளங்களுக்கு விற்பனை செய்யலாம்.
உங்கள் நிழற்படத்தின் தரத்தைப் பொறுத்து, அதனைத் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட நிழற்படத்தை, அந்த தளங்களில் இடம்பெறச் செய்வார்கள்.
யாராவது, சர்ச் செய்யும் போது, உங்கள் நிழற்படத்தை விரும்பினால், அதனை பணம் கொடுத்து பதிவிறக்க வேண்டும். அந்தப் பணத்தில் இணைய நிறுவனத்தின் கமிஷன் போக, மீதி பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும். ­­ஷட்டர்-ஸ்டாக், அலாமி, அடோப்-ஸ்டாக், புளூ-மெலான் போன்றவை இத்தகைய பணிகளைச் செய்கின்றன.
அவ்வாறு வாடிக்கையாளர்கள் பதிவிறக்கிய உங்கள் படத்தை, வாடிக்கையாளர்கள், தங்களது விளம் பரங்களில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

மறுசுழற்சி புத்தகக் கடை

சென்னை முதல் குமரி வரை, தமிழகத்தின் அனைத்து நகர்களிலும், நீங்கள் ஏதாவது பழைய புத்தகக் கடையைப் பார்த்திருப்பீர்கள். உங்களால் இயலும் வாடகையில் கடையைப் பிடித்து, மறுசுழற்சி புத்தகக் கடையை நடத்தலாம்.
நூலகங்களில் மிகவும் பழைய புத்தகங்களை ஆண்டுதோறும் ஏலம் விடுவார்கள். அந்த ஏலத்தை நீங்கள் எடுக் கலாம். அல்லது, பழைய புத்தகங்களை மொத்த வணிகர்களிடம் இருந்தும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
அல்லது, நீங்களே வீடுவீடாகச் சென்று, பழைய புத்தகங்களை எடைபோட்டு எடுக்கலாம். வணிகம் கொஞ்சம் சூடுபிடிக்கும் போது, பழைய புத்தகம் எடுக்க ஆள் வைத்துக் கொள்ளலாம்.
அல்லது வீடுவீடாக சென்று பழைய நாளிதழ், புத்தகங்கள் எடுக்கும் தொழிலாளர்களிடம் நீங்கள் உடன்பாடு வைத்துக் கொள்ளலாம்.

இன்று ஓஎல்எக்ஸ் போன்ற விற்பனை இணையதளங்களில் கூட, பழைய புத்தகங் களையும், பாடப் புத்தகங்களையும், பலர் விற்பனை செய்வதைப் பார்த்து இருக்கலாம். அவர்களை சாட் அல்லது மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்டு, உங்களுக்கு தேவைப்பட்டதை வாங்கிக் கொள்ளலாம்.
பெரும்பாலும் மாணவர்களும், பத்திரிகையாளர்களும், ஆய்வு செய்பவர்களும், உங்கள் வாடிக்கையாளர் களாக இருப்பார்கள். சில பதிப்பகங்கள், விற்காமல் மிகவும் பழையதான புத்தகங்களைக் கூட மொத்த விலைக்கு தரும். அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்று, ‘ஒரு கிலோ புத்தகம் இத்தனை ரூபாய்’ என எடைக்கு எடை போட்டு புத்தகங்களை விற்பனை செய்யும் மறுசுழற்சிக் கடைகள் இப்போது அதிகளவில் காணப்படுகின்றன.
ஏதாவது திருமண மண்டபம் அல்லது சமூகக் கூடத்தை, சீசன் இல்லாத காலத்தில் வாடகைக்குப் பிடித்து மூன்று நாள் விற்பனை, ஏழு நாள் விற்பனை என பலரும் விற்பனை செய்கின்றனர்.

நேரடி சமையல்/தொழில் வகுப்புகள்

என்னதான் யூடியூபில் சமையல் வீடியோக்கள் கொட்டிக் கிடந்தாலும், பலர் நேரடி சமையல் பயிற்சி பெறவே விரும்புகின்றனர்.
நம்மிடம் நல்ல சமையல் திறமை இருந்தால், சமையல் வகுப்புகளை நடத்தலாம். இதற்கு ஃபேஸ்புக், வாட்சாப் போன்ற சமூக ஊடகங்களில் விளம்பரம் போட்டு, வாடிக்கையாளர்களைப் பிடிக்கலாம்.
சமையலில் கூட, அசைவ உணவுகள், சைவ உணவுகள், சமைக்காத உணவுகள், இயற்கை உணவுகள் என தரம்பிரித்து, பயிற்சியை நடத்தலாம்.
இதுபோல தையல் பயிற்சி, ஓவியப் பயிற்சி, இசை/கீபோர்ட் பயிற்சி எனவும் நடத்தலாம்.

தேநீர் கடை

காலையில் எழுந்த உடன் பெரும் பாலான இந்தியர்கள் தேநீர்/காபிக் கடையை நோக்கியே ஓடுவார்கள். வருமானத்திற்கு வஞ்சகம் செய்யாத தொழிலில் இதுவும் ஒன்று.

காலை/மாலை இருவேளைகளிலும் சுவையான, தரமான தேநீர் அல்லது காபி தயாரித்துக் கொடுத்தால், நல்ல வருமானத்தைப் பெறலாம்.
மக்கள் அதிகமாகப் புழங்கக் கூடிய இடத்தில் சிறிய கடையைப் பிடித்து, ஒரு தேநீர் மாஸ்டரை பணிக்கு அமர்த்தி, நேர்மையாக செய்தால், நம்மை வாழ வைக்கும்.
விற்பனை சூடுபிடித்த பின்பு, தேநீருடன் சுக்கு காபி, மூலிகைத் தேநீர், வடை, பஜ்ஜி – என வணிக எல்லையை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இங்கு குறிப்பிடப்பட்ட எல்லா தொழில்களும் 5000 – 10,000 ரூபாய்க்குள் தொடங்கக் கூடியவை.

– ஹெலன் ஜஸ்டின்

நாங்கள் ஏன் பெயரை மாற்றினோம் ?

0

ஒரு நிறுவனம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்குப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், நிச்சயம் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகிறார் டேப்ட்ரீ (Tab Tree) நிறுவனர் திரு. விஜயன். நமது இதழுக்காக அவரிடம் பேட்டி காண சென்னை இராயப்பேட்டையில் உள்ள அவரது நிறுவனத்திற்குச் சென்றோம். அப்போது அவர் இவ்வாறு கூறினார்-

“நான் ஒரு பொறியியல் பட்டதாரி. 2001 ஆம் ஆண்டு தங்கவேலு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டம். பெற்றேன். கல்லூரியில் படிக்கும்போதே நண்பர்களுக்காக கணினிகளை பழுதுபார்க்கும் வேலையைச் செய்து வந்தேன். 2001 -ல் கல்லூரி முடிந்தது. எனது நண்பர்கள் அனைவரும் வேலை தேட ஆரம்பித்தனர்.

அப்போது ஐடி துறை மிகவும் சரிவடைந்த நிலையில் இருந்தது. அதனால் மிகக் குறைந்த ஊதியம் மட்டுமே தரத் தயாராக இருந்தார்கள். அதனால், கல்லூரி முடிந்து சில நாட்களிலே எனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் சேல்ஸ் அண்டு சர்வீஸ் செய்ய ஆரம்பித்தேன்.

அப்போது சவுக்கார் பேட்டையில் ஒரு சிறிய இடத்தில் எங்களது நிறுவனத்தை பிட்ஸ் அண்டு பைட்ஸ் என்ற பெயரில் ஆரம்பித்தேன். தொடக்கத்தில் வீடுகள், அலுவலகம் என எங்கெல்லாம் கணினியில் சிக்கல் உள்ளதோ, அங்கே சென்று அவர்களிடம் இருந்து கணினியை எடுத்து வந்து சரிசெய்து ஒரு நாளிலே டெலிவரி செய்து விடுவோம். ஆறு ஆண்டுகள் வரை இந்த சேல்ஸ் அண்டு சர்வீஸ் வேலையை செய்து வந்தோம். அப்போது நிறைய அனுபவங்கள் கிடைத்தன.
எனக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிவதும், அவற்றைப் பயன்படுத்தி அலுவலகங்களில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதும் மிகவும் விருப்பமான ஒன்றாக இருந்தது. அதன் காரணமாக 2006 ஆம் ஆண்டு அதே பெயரில் ஐடி கன்சல்டிங் சேவையை ஆரம்பித்தேன். அதாவது ஒரு நிறுவனத்திற்கு கணினி தொடர்பாக தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குதே இதன் நோக்கம்.

நான் தொடங்கியது ஐடி கன்சல்டிங் நிறுவனம்தான். ஆனாலும் நான் சேல்ஸ் அண்டு சர்வீஸ் சேவையையும் இதே பெயரில் நடத்தி வந்ததால் எங்களை ஒரு ஐடி கன்சல்டிங் நிறுவனமாக யாரும் பார்க்கவில்லை. எந்த வரவேற்பும் இல்லை. அதனால் மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் என்பதும் ஒரு நிறுவனத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொண்டேன் பின்னர் டேப்ட்ரீ என்று எங்கள் நிறுவனத்தின் பெயரை மாற்றினோம். அதற்கென வெப்சைட் நிறுவினோம்.

Also read:டிடிஎச் சேவைகளில் வந்துள்ள புதிய தொழில் நுட்பங்கள்!

நான் எனது நிறுவனத்திற்கான சிறந்த மார்க்கெட்டிங் ஆக நினைப்பது எங்கள் நிறுவனத்தால் மனநிறைவு அடைந்த வாடிக்கையாளர், எங்களின் சேவையை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்வதைத்தான்.

எங்கள் நிறுவனத்தில் தற்போது பல சேவைகள் இருக்கின்றன. அவற்றுள் முதன்மையாக நான்கு சேவைகள் உள்ளன. அவை, இன்ஃப்ரா கன்சல்ட்டிங், டேர்ன் கீ ப்ராஜெக்ட், மெயின்ட்டனன்ஸ், டேட்டா கேப்சர் ஆகும். இந்த நான்கிற்குள் எங்களது அனைத்து சேவைகளும் அடங்கும். இன்ஃப்ரா கன்சல்டிங் என்பது, ஒரு நிறுவனத்திற்கு தேவையான அனைத்துக் கணினிகளையும் அமைத்துக் கொடுப்பது. அதில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் எங்கு வாங்க வேண்டும், எந்த தரத்தில் வாங்க வேண்டும் என அனைத்து விவரங்களுக்கும் ஆலோசனை தருவோம்.

டேர்ன் கீ ப்ராஜெக்ட் என்பது புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவனம் எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்கள் நிறுவனத்திற்கு என்னென்ன தேவை என்பதை கூறிவிடுவார்கள். அதற்கு ஏற்றாற்போல் கணினி அமைத்தல், மென்பொருள் நிறுவுதல், இணைய இணைப்பு ஏற்படுத்துதல், ஆன்ட்டி வைரஸ் நிறுவுதல், பேக்கப் எடுத்தல், செக்யூரிட்டி அலெர்ட் செட்டிங்ஸ் என அனைத்தையும் முடித்துக் கொடுப்போம். மெயின்ட்டனன்ஸ் என்பது கணினி அமைத்த பிறகு எந்த சிக்கல் வந்தாலும் அதனை சரி செய்ய எங்களது பொறியாளர் ஒருவர் அந்த நிறுவனத்திலேயே இருப்பார்.

டேட்டா கேப்சர் என்பது ஒரு நிறுவனம் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரிப்போம். அதாவது, எங்கள் சேவைகளை செயல்படுத்துவதற்கு முன்னர், மற்றும் செயல்படுத்திய பின்னர் என இரு வகையாக தரவுகளை சேகரிப்போம். எங்கள் சேவைகளுக்கு முன்னர் அவர்களது செயல்பாட்டுக்கான வேகம் மற்றும் தெளிவு, தரம் ஆகியவற்றால் அவர்களது லாபம் எவ்வளவு இருந்தது, எங்கள் சேவைகளை செயல்படுத்திய பின்னர் எவ்வாறு இருந்தது என்று இந்த தரவுகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

எங்கள் சேவைகள் நடுத்தர நிறுவனங்களுக்குப் பெரிதும் பொருந்தும். எங்களிடம் தற்போது 800 நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். நாங்கள் நிறுவனம் தொடங்கிய காலத்தில் 4 ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது எங்களிடம் 134 ஊழியர்கள் இருக்கிறார்கள். மற்றும் பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் எங்கள் நிறுவனம் இருக்கிறது. பெங்களூர் மற்றும் சேலத்தில் எங்கள் எங்களது குழுக்கள் உள்ளன.

எனது தொழில்நுட்பத் திறமைக்கு ஏற்றவாறு எனது இலக்குகளையும் வைத்து இருக்கிறேன். இன்னும் அதை நான் அடையவில்லை. அதை அடையத் தேவையான வேலைகளைச் செய்து வருகிறேன் என்றார், திரு. விஜயன் (9840990784).

– எஸ். உஷா

பதிவினை எப்பொழுது நீக்கம் செய்யலாம்?

0

வணிகராக ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பதிவை பிரிவு 29-ன் படி உரிய அலுவலர் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் நீக்கம் செய்யலாம்.

அ) அதிகாரியே சில காரணங்களுக்காக நீக்கம் செய்யதல்
ஆ) பதிவு செய்த நபரின் இறப்பின் காரணமாக அவருடைய சட்டப்படியான உரிமை உடையவர்களால் அளிக்கப்படும். விண்ணப்பத்தின் அடிப்படையில் நீக்கம் செய்யலாம்.
இ) வணிகம் நிறுத்தப்பட்டாலோ அல்லது உரிமையாளரின் இறப்பைத் தொடர்ந்து வணிகம் முழுவதும் மாற்றப்பட்டலோ அல்லது வேறு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டாலோ அல்லது பிரிக்கப்பட்டாலோ நீக்கம் செய்யலாம்.
ஈ) வணிகக் கட்டமைப்பில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அல்லது பிரிவு 25(3) -இல் கூறிய நபர் தவிர மற்றவர்கள் பிரிவு22 மற்றும் 24-ன் கீழ் பதிவு செய்து கொள்ளும் வரம்பிற்குள் இருந்தால், வகுத்துரைக்கப்பட்ட அத்தகைய முறையிலும் மற்றும் அத்தகைய கால அளவிற்குள் பதிவை நீக்கம் செய்யலாம்.

எப்படி தெரிவிக்க வேண்டும்?
வணிகர் இறந்த தினத்தில் இருந்து முப்பது நாட்களுக்குள் அவருடைய சட்டப்படியான உரிமை உடையவர் வணிக நிறுத்தத்தை படிவம் ஜிஎஸ்டி ஆர்இஜி-16 இன் மூலம் ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும். அந்த படிவத்தில் அந்த நாளில் இருந்த கையிருப்பு பொருளின் மதிப்பையும் (stock-in-trade) தெரிவிக்க வேண்டும்.
தானாக முன்வந்து பதிவு செய்து கொண்ட வணிகராக இருந்தால், அவர் நீக்கம் செய்வதற்காக விண்ணப்பித்து, ஒரு ஆண்டு முடிந்த பின்னரே வணிகத்தை நிறுத்த விண்ணப்பம் செய்ய முடியும். இந்த கால அளவிற்கு முன் வணிகத்தை நிறுத்த விண்ணப்பம் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

உரிய அலுவலர் பதிவு சான்றை எப்போது நீக்கம் செய்யலாம்?
அ) பதிவு பெற்ற வணிகர் சட்டம் அல்லது விதிகளை மீறி இருந்தால்,
ஆ) பிரிவு 10-ன் கீழ் இணக்க வரி (காம்போசிஷன்) செலுத்தும் வணிகர், தொடர்ச்சியாக ஒரு காலாண்டிற்கு (மூன்று மாதம்) வரிப்படிவம் தாக்கல் செய்யாமல் இருந்தால்,
இ) மற்ற வணிகர்கள் தொடர்ச்சியாக ஆறு மாத கால அளவிற்கு வரிப்படிவம் தாக்கல் செய்யவில்லை என்றால்,
ஈ) தானாக முன்வந்து பதிவு செய்து கொண்ட வணிகர், பதிவு செய்த நாளில் இருந்து ஆறு மாதகாலம் வரை வணிகத்தை ஆரம்பிக்கவில்லை என்றால்,
உ) மோசடி, தவறான தகவல்கள் அல்லது உண்மையை மறைத்து பதிவு பெற்று இருந்தால்,
ஊ) பதிவு செய்துள்ள இடத்தில் வணிகம் செய்யாமல் இருந்தால்,
எ) வெளி வழங்கல் செய்யாமல், வரிப்படிவம் மட்டும் வழங்கி இருந்தால்.
எப்படி நீக்க வேண்டும்?

Also read:பதிவு செய்ய கட்டாயமற்ற ஆவணங்கள்

ஒரு வணிகரின் பதிவை நீக்கம் செய்வதற்கு முன், உரிய அலுவலர் அந்த வணிகருக்கு நேரடியாக விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு அளிக்காமல் பதிவை நீக்கம் செய்யக் கூடாது. வணிகரின் பதிவை ஏன் நீக்கக் கூடாது என்பதற்கான காரணத்தை அளிக்குமாறு படிவம் ஜிஎஸ்டி ஆர்இஜி-17 இல் தொடர்பான வணிகருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இந்த அறிக்கைக்கான பதிலை வணிகர் ஏழு தினங்களுக்குள் படிவம் ஜிஎஸ்டி ஆர்இஜி-18 -ன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும்.

வணிகத்தை நிறுத்தம் செய்ய வணிகரே விண்ணப்பித்து இருந்தால், உரிய அலுவலர் அந்த விண்ணப்பம் கிடைத்த முப்பது நாட்களுக்குள் படிவம் ஜிஎஸ்டி ஆர்இஜி-19 இல் பதிவை நீக்கம் செய்து அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். உரிய அதிகாரி தானாகவே முன் வந்து பதிவை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து இருந்தால், வணிகர் அதிகாரியின் அறிக்கைக்கு பதில் கொடுத்த முப்பது நாட்களுக்குள் பதிவை நீக்கம் செய்து படிவம் ஜிஎஸ்டி ஆர்இஜி-19 இன் மூலம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

மையப் பொருள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் பதிவினை நீக்கம் செய்து இருந்தால், அது தமிழ்நாடு பொருள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழும் நீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்பட வேண்டும்.

வரியை செலுத்துதல்
பதிவு நீக்கம் செய்யப்பட்ட வணிகர் அவ்வாறு நீக்கம் செய்யப்படும் முன் அல்லது அதற்குப் பின் ஏதேனும் வரி செலுத்த வேண்டியது இருந்தாலோ அல்லது சட்ட விதிகளின் படி அவர் ஆற்ற வேண்டிய கடமைகள் இருந்தாலோ அது அந்த வணிகரின் கட்டுப்பாட்டினை பாதிக்காது.

பதிவு நீக்கத்தை திரும்ப பெறுதல்: பிரிவு-30
உரிய அலுவலர் பதிவினை நீக்கம் செய்து இருந்தால், அந்த உத்தரவை நீக்கிவிட்டு அந்த பதிவு எண்ணை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. பதிவு நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு கிடைத்த முப்பது நாட்களுக்குள் வணிகர் படிவம் ஜிஎஸ்டி ஆர்இஜி-21 இல் பதிவை திரும்ப பெற வணிகர் விண்ணப்பம் செய்ய வேண்டும். வரிப் படிவம் தாக்கல் செய்யாததற்காகவோ, வரி, வட்டி, தாமத கட்டணம், தண்டத் தொகை ஆகியவை செலுத்தாதற்காகவோ பதிவு நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அதை நிவர்த்தி செய்த பின்னரே, பதிவை திரும்பப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

– சு.செந்தமிழ்ச்செல்வன்
(9841226856)

ராபர்ட் கியோசாகி சொல்லும் பதினைந்து வழிகள்

0

தொழில் அதிபர்களில் எழுதுபவர்கள் மிகச் சிலரே! என்னதான் வணிகக் கல்வி வழங்கும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் தொழில் பற்றியும் வணிகம் பற்றியும் எழுதினாலும், தொழிலதிபர்கள் எழுதும் எழுத்துகள் அளவுக்கு அனுபவம் சார்ந்து இருக்காது. அதனாலேயே தொழிலதிபர்கள் எழுதும் நூல்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகமாக உள்ளது. ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்.

திரு. ராபர்ட் கியோசாகி (Robert Kiyosaki) அமெரிக்காவைச் சேர்ந்த தொழி லதிபர். இவர் தொழில் முன்னேற்றம் குறித்தும், வாழ்வில் உயரத் தேவையான பண்புகள் குறித்தும் நிறைய எழுதி இருக்கிறார். தன்னம்பிக்கை உருவாக்கும் பயிற்சியாளர். வணிகக் கல்வி அளிக்கும் ரிச் டாட் (Rich Dad) பயிற்சி நிறுவனத்தை தோற்றுவித்தவர். இவர் எழுதிய ரிச் டாட் புவர் டாட் (Rich Dad Poor Dad) புத்தகம் உலக அளவில் அதிகமாக விற்பனை ஆன புத்தகங்களில் ஒன்று.

திரு. ராபர்ட் கியோசாகி, வெற்றிக்கான முதன்மையான பதினைந்து விதிகளாக பின்வருவனவற்றைக் கூறுகிறார்.
1. நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலான நேரங்கள் உங்களுக்கு வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும். நீங்கள் வேகமாக செயல்படுவீர்கள்.

2. வெற்றி நோக்கியே உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். உங்கள் தொழில் வெற்றியே உங்களுக்கான முதன்மை இலக்காக இருக்கட்டும். கவனம் முழுவதும் வெற்றயை நோக்கியே குவியட்டும்.

3. வாழ்க்கையை எளிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்.
அது உங்கள் உறுதித் தன்மையை அதிகரிப்பதோடு தன்னம்பிக்கை யையும் அதிகரிக்கும்.

4. உங்கள் திறமைகளை அதிகரிக்க, வல்லமையை அதிகரிக்க அனுபவங்கள் நிச்சயம் கைகொடுக்கும், அவை நல்ல அனுபவங்களாக இருந்தாலும், கெட்ட அனுபவங்களாக இருந்தாலும்.

5. ஏதேனும் தவறுகள் நடந்து விட்டால், அவற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.

Also read:உங்களுக்கு உதவும் குறிப்புகள்

6. தொடர்ந்து கற்றுக் கொள்வது என்பது உங்கள் வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாகட்டும். ஒரு போதும், எந்த வயதானாலும் கற்றுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள்.

7. பணம் தொடர்பான இலக்குகளில் தெளிவாக இருங்கள். அவை முடிந்த வரை துல்லியமாகவும் இருக்கட்டும்.

8. பொறுப்புகளை ஏற்கத் தயங்கா தீர்கள். பெரும்பாலான மனிதர்களுக்கு பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் குணம் இருக்கிறது. வளர்ச்சிக்கு பயன்படாத இயல்பு இது.

9. எல்லோரும் திடீரென மாட்டிக் கொண்டு தவிப்பது, எதிர்பாராத செலவினங்கள் ஏற்படும்போதுதான். எனவே எதிர்பாராத, எதிர்கால செலவுகள் குறித்தும் திட்டங்களுடன் இருங்கள். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து வைத்திருங்கள்.

10. செலவுகள் எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கட்டும். தேவை யற்ற செலவுகளை தவிர்க்கத் தயங்கா தீர்கள்.

11. உங்களை மதிக்கும், உங்களுக்கு ஆதரவாக இருக்கும், உங்களைப் போல எண்ணும் மனிதர்களின் எண்ணிக்கை உங்கள் நட்பு வட்டத்தில் அதிகமாக இருக்கட்டும். இதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருங்கள்.

12. தோல்விகளையும், இழப்புகளை யும் கண்டு அஞ்சாதீர்கள். இவற்றைக் கண்டு அஞ்சினால் உங்கள் ஓட்டம் உங்களை அறியாமலேயே தடைபட்டு விடும்.

13. எதற்காக உழைக்கிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். இது வேறு ஒன்றுமில்லை, தெளிவான இலக்கு உங்களுக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் கடினமாக உழைப்பதற்கான பயன் கிடைக்கும்.

14. நீங்கள் ஈட்டும் பொருளை சேமிப்பதை விட முதிலீடு செய்யுங்கள். சரியாக முதலீடு செய்யப்படும் பணம் கூடுதல் லாபத்தை ஈட்டித் தரும்.

15. ஒரு பொருளை வாங்கும் முன், இது இப்போது தேவைதானா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இதற்கான பணத்தை எப்படிக் கொண்டு வரப்போகிறோம் என்பதிலும் தெளிவாக இருங்கள்.

– மலர்

இவர்கள் தரும் வெற்றிக்கான குறிப்புகள்

0

பிராக்டோ (Practo), மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், சலூன்கள், ஜிம் ஆகியவற்றை தங்கள் பகுதிகளில் கண்டறிவதற்கும், மருத்துவர் களிடம் முன் பதிவு செய்வதற்கும், மருத்துவர்களிடம் ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை பெறுவதற்கும் உதவும் ஒரு ஆப் (platform & health app) ஆகும்.
சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலும் தனது சேவைகளை வழங்குகிறது. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், எட்டாயி ரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பதிவு செய்து உள்ளனர். மாதத்திற்கு நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இதன் மூலம் மருத்துவர்களிடம் முன் பதிவு செய்கின்றனர்.
இந்த நிறுவனம் திரு. சஷாங் (Shashank) என்பவரால் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

திரு. சஷாங் தொழில் முனைவோருக்கு பின்வரும் குறிப்புகளைக் கூறுகிறார் –
> பின்னடைவை ஊந்துதலாக எடுத்துக்கொள்ளுங்கள்
> நிறுவனத்தின் தொடக்க காலத்தில் இருந்த பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு விலகுவது, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவது, போதிய முதலீடு இல்லாமல் தவிப்பது போன்றவை எல்லா தொழில் முனைவோருக்கும் நேர்வதுதான். இத்தகைய நிகழ்வுகள் உங்களுக்கும் நேரும். இவற்றை சமாளிக்கும் மன உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
> எல்லா ஏற்ற இறக்கங்களும் உங்களை உறுதியுடன் செயல்படச் செய்ய வேண்டுமே தவிர சோர்வு அடையச் செய்து விடக்கூடாது. எல்லா இறக்கங்களும் உங்களுக்கு உந்துதலைத் தர வேண்டும்.

Also read:என்ன செய்தால், எப்படி செயல்பட்டால் நாம் வளரலாம்?

> தீர்க்க வேண்டிய சிக்கல்களைக் காதலியுங்கள் ஆனால் ஐடியாவை அல்ல. நீங்கள் தொழில் தொடங்கும் போது கொண்டிருக்கும் ஐடியாக்கள் கொஞ்ச நாள் சென்ற பிறகு வேறு விதமாக மாறலாம். அதனால் ஐடியாக்களை காதலிக்காதீர்கள்.

இவரைப் போலவே ‘அலிபாபா’ திரு. ஜாக் மா என்ன கூறுகிறார்?
> நிறுவன நோக்கத்தை முதன்மை யாக்குங்கள், இது பணியாளர்களிடம் ஊக்கத்தை உருவாக்கும். இதனால் நோக்கத்திற்கு எது நல்லது என்பதே முதன்மையாக அமையும்.
> எப்போதும் ஒரிரு நிமிடங்களில் நிறுவனம் பற்றிய ஐடியாக்களை விளக்குவதற்கு தயாராக செய்திகளை வைத்திருங்கள்.
> முதல் ஆயிரம் வாடிக்கையாளர்கள் பெறுவது கடினமாக இருக்கும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க கூடுதல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கும்.
> ஒரு சந்தையில் நன்றாக கால் பதித்த பிறகே புதிய சந்தையில் நுழையுங்கள். முதலில் ஒரு சந்தையை கைப்பற்ற உங்கள் முழு ஆற்றலையும் பயன்படுத்துங்கள்.

– மலர்

ஆண்டுதோறும் நிரப்பி அனுப்ப வேண்டிய விற்பனை வருமான படிவம் (ரிட்டர்ன்)

0

ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய்து வரி செலுத்தும் ஒவ்வொரு வணிகரும் (சில குறிப்பிட்டவர்கள் தவிர) சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 44-ன் படி தங்களின் ஒரு ஆண்டுக்கான மாதம்தோறுமான மற்றும் காலாண்டு விற்பனை தொடர்பாக வழங்கப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து படிவம் ஜிஎஸ்டிஆர் – 9 -ல் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஒரு ஆண்டுக்கான ரிட்டர்ன் படிவ மாதிரியை (Annual Return) அறிக்கை எண் – 39/2018 (மத்திய வரி) மூலமாக 04-09-2018 அன்று நடுவண் அரசு வெளியிட்டு உள்ளது.

இந்த படிவம் யாருக்கு பொருந்தாது?
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற பின்வருபவர்கள் ஆண்டுப் படிவம் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை.
1. வரி உள்ள வெளி வழங்கல் செய்யும் தற்செயல் வணிகர்கள்.
2. உள்ளீட்டு சேவை வழங்கும் விநியோகிப்பாளர்கள்.
3. வரி விதிக்கத்தக்க வெளிவழங்கல் செய்யும் இந்தியாவில் வசிக்காத வணிகர்கள்.
4. பிரிவு 51 -ன் படி வரிப் பிடித்தம் செய்து வரி செலுத்தும் வணிகர்கள் அல்லது சேவை வழங்குநர்கள். இது நடுவண் அரசின் அறிக்கை எண் – 51 (மத்திய வரி) 13-09-2018 படி 01-10-2018 முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
5. பிரிவு 52 -ன் படி வரி சேகரித்து (டிசிஎஸ்) வரி செலுத்தும் இ-காமர்ஸ் ஆப்பரேட்டர்கள் ஆண்டு ரிட்டர்னை படிவம் ஜிஎஸ்டிஆர் -9 – ஙி தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த படிவத்தை இதுவரை நடுவண் அரசு வெளியிடவில்லை.
பிரிவு – 52 நடுவண் அரசு அறிக்கை எண் : 51 (மத்திய வரி) 13-09-2018 படி 01-10-2018 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
எப்போது தாக்கல் செய்ய வேண்டும்?

ஒரு நிதி ஆண்டுக்கான ரிட்டர்ன் படிவம் அடுத்த ஆண்டுக்குள்ளோ அல்லது டிசம்பர் 31 அன்றோ தாக்கல் செய்ய வேண்டும். அதாவது, 2017-18 நிதி ஆண்டுக்கான (01-07-2017 முதல் 31-03-2018 வரை) ஆண்டு ரிட்டர்ன் படிவம் 31-12-2018 அன்றோ அதற்கு முன்ன தாகவோ தாக்கல் செய்யப்பட வேண்டும். 01-04-2017 முதல் 30-06-2017 வரை உள்ள விற்பனை விவரத்தை இந்த ஆண்டு ரிட்டர்ன் படிவத்தில் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை.

ஆண்டு ரிட்டர்ன் படிவங்களின் வகைகள்:
படிவம் ஜிஎஸ்டிஆர் – 9
படிவம் ஜிஎஸ்டிஆர்-1,2,3 தாக்கல் செய்து வரி செலுத்தும் வணிகர்கள் அனைவரும் இந்த படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
படிவம் ஜிஎஸ்டிஆர் 9-A
இணக்க வரி (காம்போசிசன் வரி) செலுத்தும் எல்லா வணிகர்களும் இந்த படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
படிவம் ஜிஎஸ்டிஆர் 9-B
ஒரு நிதி ஆண்டில் படிவம் ஜிஎஸ்டிஆர் – 8 தாக்கல் செய்த இ காமர்ஸ் ஆப்பரேட்டர்கள் அனைவரும் இந்த படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
படிவம் ஜிஎஸ்டிஆர் 9-C
ஒரு நிதி ஆண்டின் விற்பனை இரண்டு கோடி ரூபாயைத் தாண்டினால், அவர் படிவம் ஜிஎஸ்டிஆர் 9-C- ஐ தாக்கல் செய்ய வேண்டும். இவருடைய கணக்குகள் ஒரு ஆடிட்டரால் (சிஏ அல்லது ஐசிஏஐ) தணிக்கை செய்யப்பட வேண்டும். இதன் நகல் ஏற்கெனவே செலுத்தப்பட்ட வரி, தணிக்கை செய்யப்பட்ட பின் செலுத்த வேண்டிய வரி பற்றிய அறிக்கை ஆகியவற்றை படிவம் படிவம் ஜிஎஸ்டிஆர் 9-C உடன் இணைக்க வேண்டும்.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிஎஸ்டி பதிவு எண்கள் பெற்று இருந்தால், ஒவ்வொரு பதிவு எண்ணும் ஒரு தனி ஆளாக கருதப்படும். ஆகவே ஒவ்வொரு பதிவு எண்ணுக்கும் தனித்தனியாக ஆண்டு விற்பனை வருமான படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.
தண்டத் தொகை
ஆண்டு விற்பனை வருமான படிவத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யாவிட்டால், பிரிவு 46-ன் படி பதினைந்து நாட்களுக்குள் படிவத்தைத் தாக்கல் செய்யுமாறு பதிவு பெற்றவருக்கு அறிக்கை வழங்கப்படும்.
படிவம் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டால், அவ்வாறு எத்தனை நாட்கள் தாமதம் ஆனதோ, அத்தனை நாட்களுக்கும் நாள் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் (சிஜிஎஸ்டி ரூ.100+எஸ்ஜிஎஸ்டி ரூ.100) வீதம் தண்டம் விதிக்கப்படும். ஐஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் தண்டம் விதிக்கப்படாது. அதிகபட்ச தண்டத் தொகையாக ஆண்டு விற்பனை வருமானத்தின் மீது 0. 50%-க்கு மிகாமல் (சிஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் 25% + எஸ்ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் 25%) தண்டம் விதிக்கப்படும். சிஜிஎஸ்டி சட்டம் பொதுப்பிரிவு 125 படி ரூ.25,000 வரை தண்டம் விதிக்க முடியும். தாமத கட்டணத்துடன் ஆண்டுக்கு 18% வட்டியும் சேர்த்து வசூலிக்கப்படும்.

படிவத்தை திருத்த முடியுமா?
ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 44/விதி 40 ஆகிய இரண்டிலும் ஆண்டு விற்பனை வருமான படிவம் தாக்கல் செய்த பின் அதை திருத்தம் செய்வது குறித்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. ஆகவே ஆண்டு விற்பனை வருமான படிவம் தாக்கல் செய்தால் அதுவே இறுதியானது. அதில் எந்த மாறுதலும் செய்ய முடியாது.
ஆண்டு விற்பனை வருமான தகவல்கள்
படிவம் ஜிஎஸ்டிஆர் – 9, ஆறு பகுதிகளாகவும் 19 அட்டவணை களாகவும் பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த படிவத்தில் கொடுக்க வேண்டிய தகவல்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

பகுதி – 1 : வரி செலுத்துபவர் பற்றிய பின்வரும் அடிப்படை விவரங்களைக் கேட்கும் தன்மையில் இருக்கும்.
> நிதி ஆண்டு, ஜிஎஸ்டி பதிவு எண், பதிவு செய்துள்ளவரின் சட்டப்பூர்வமான பெயர், பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனத்தின் பெயர்.
இந்த விவரங்கள், ஏற்கெனவே பதிவு செய்து இருப்பதால், தானாகவே ஆன்லைனில் இருந்து தோன்றும்.

பகுதி- 2 : நிதி ஆண்டில் தெரிவிக்கப்பட்ட வெளி வழங்கல், உள் வழங்கல் பற்றிய விவரங்கள். இது அந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட கீழ்க்கண்ட விற்பனை வருமானங்களின் சுருக்கத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் எடுக்கப் பட்டதாக இருக்கும்.
> பதிவு பெறாத வணிகர்களுக்கு செய்யப்பட்ட வெளிவழங்கல் (B2C)
> பதிவு பெற்றவர்களுக்கு செய்யப் பட்ட வெளிவழங்கல் (B2B)
> வரி செலுத்தி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வழங்கல் (சிறப்பு பொருளாதார மண்டல வழங்கல் தவிர)
> வரி செலுத்தி சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு செய்யப்பட்ட வழங்கல்
> கருதப்பட்ட ஏற்று மதிகள்(Deemed Export)
> பெறப்பட்ட முன் பணத்துக்கு வரி செலுத்திய பின்னும் விலைப் பட்டியல் (டேக்ஸ் இன்வாய்ஸ்) எழுப்பப்படாமல் இருந்தால் அதைப்பற்றிய விவரம்.
> எதிரிடை வரி (ரிவர்ஸ் சார்ஜ்) செலுத்த வேண்டிய உள்வழங்கல்.
மேற்கண்டவற்றின் மொத்த தொகையில் வரவு குறிப்பு (கிரடிட் நோட்) தொகையைக் கழித்து பற்றுக் குறிப்பு (டெபிட் நோட்) தொகையைக் கூட்டிக் கொள்ள வேண்டும். மாத படிவத்தில் திருத்தங்கள் (அமெண்ட்மென்ட்) இருப்பின், அதாவது வழங்கலோ அல்லது வரியோ கூட்டியோ, குறைத்தோ இருந்தால் அத்தகவலை தெரிவிக்கலாம். இறுதியாக வழங்கல் மற்றும் முன்பணத்தின் மீது செலுத்த வேண்டிய வரியைக் குறிப்பிட வேண்டும்.

Also read:காம்போசிஷன் வரிப் படிவங்கள்

வரி செலுத்தத் தேவையில்லாத வெளிவழங்கல் மற்றும் வரி பற்றி அந்த நிதி ஆண்டில் பின்வரும் தகவல்களும் தெரிவிக்கப்பட வேண்டும்-
> வரி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெளிவழங்கல்.
> வரி செலுத்தாமல் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நிறுவனங்களுக்கு செய்யப்பட்ட வழங்கல்.
> பெறுபவர் எதிரிடை வரி அடிப்படையில் செலுத்த வேண்டிய வரி.
> வரியற்ற வழங்கல், வரிவிலக்கு பெற்ற வழங்கல் மற்றும் ஜிஎஸ்டி இல்லாத வழங்கல்.
மேற்கண்டவைகளின் மொத்த தொகையில் கிரடிட் நோட் தொகையைக் கழித்து டெபிட் நோட் தொகையைக் கூட்டி தெரிவிக்க வேண்டிய தொகை.
> வரி செலுத்தத் தேவையற்ற மொத்த தொகை மற்றும் முன்பணம் உட்பட்ட மொத்த விற்பனை வருமான தொகை.

பகுதி – 3 : நிதி ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மாதாந்திர படிவங்களில் தெரிவிக்கப்பட்ட மொத்த உள்ளீட்டு வரி விவரங்கள் –
> படிவம் ஜிஎஸ்டிஆர் – 2 கி மூலமாக பெறப்பட்டு மொத்த உள்ளீட்டு வரி வரவு (அட்டவணை 3 & 5 விவரம் தானாகத் (Auto Populated) தோன்றும்.
> 2017 – 18 நிதி ஆண்டில் உள்வழங்கல் பெறப்பட்ட ஏப்ரல் 2018 முதல் செப்டம்பர் 2018 வரை பெறப்பட்ட உள்ளீட்டு வரிவரவு. (இதில் இறுக்குமதி மற்றும் எதிரிடை உள்ளீட்டு வரி வரவு இதில் சேராது). சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட சேவை மீதான உள்ளீட்டு வரி வரவை சேர்த்துக் கொள்ளலாம்.
> மேற்கண்ட இரண்டுக்கும் உள்ள உள்ளீட்டு வரி வரவில் உள்ள வேறுபாட்டுத் தொகை.
> உள்ளீட்டு வரி வரவு இருந்து அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் அதைப் பற்றிய விவரம்.
> உள்ளீட்டு வரி வரவு இருந்து, ஆனால் பெறத் தகுதியற்ற வரி வரவு.
> இறக்குமதி மீது செலுத்தப்பட்ட ஜஜிஎஸ்டி பற்றிய விவரம் (சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட உள்வழங்கல் உட்பட) இறக்குமதி மூலம் பெறப்பட்ட ஐஜிஎஸ்டி வரவு தானாகத் திரையில் தோன்றும்.
> ஐஜிஎஸ்டி செலுத்தியதற்கும், பெறப்பட்ட தொகைக்கும் உள்ள வேறுபாடு.
> இறக்குமதி செய்யப்பட்ட பொருள் மீது பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி வரவு.

பகுதி – 4 : சென்ற நிதி ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட படிவங்கள் படி செலுத்தப்பட்ட வரி விவரம்.
> ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, செஸ், தாமதக் கட்டண வட்டி, தண்டத் தொகை, மற்றும் வேறு ஏதேனும் வரி செலுத்த வேண்டி இருந்தால், அது பற்றிய விவரம். இதில் செலுத்தப்பட்ட செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு, உள்ளீட்டு வரி மூலம் நேர் செய்யப்பட்ட சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் எவ்வளவு என்பது தொடர்பான மொத்த தொகைகளை தனித்தனியாக தெரிவிக்க வேண்டும்.

பகுதி – 5 :
> நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல், 2018 முதல் செப்டம்பர், 2018 வரை சென்ற நிதி ஆண்டுக்கான நடவடிக்கைகள் பற்றி தாக்கல் செய்து இருந்தால், அதற்குரிய வரி வருமானம், செலுத்த வேண்டிய சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் பற்றிய விவரம்.
> திருத்தம் செய்யப்பட்டதால் செலுத்த வேண்டிய வரி, செலுத்திய வரி ஆகியவற்றை சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, செஸ் மற்றும் வட்டி எவ்வளவு என்பதை தனித்தனியாக தெரிவிக்க வேண்டும்.

பகுதி – 6 : (பிற தகவல்கள்)
> திரும்பப் பெற வேண்டிய மொத்த வரி, அனுமதிக்கப்பட்ட வரித் திருப்பம் (ரீஃபண்ட்), அனுமதிக்கப்படாத வரித் திருப்பம், கிடைக்கப் பெறாமல் இருக்கும் மொத்த திருப்பத் தொகை.
> கோரப்பட்ட மொத்த வரி, செலுத்தப்பட்ட வரி, செலுத்தப்படாமல் இருக்கும் மீதி வரி.
> இணக்க வரி (காம்போசிசன் வரி) செலுத்துவோர் மூலம் பெறப்பட்ட வழங்கல், பொருள் வழங்கலாகக் கருதப்படும் (பிரிவு 143 படி). ஒப்புதல் அடிப்படையில் பொருள் வழங்கப்பட்டு, பொருள் திரும்பப் பெறாதது பற்றிய விவரம்.
> எச்எஸ்என் கோட்-படி பெறப்பட்ட உள்வழங்கல், அனுப்பப்பட்ட வெளிவழங்கல் ஆகியவற்றின் மொத்த தொகை, எண்ணிக்கை, வரி விகிதம், அதற்குரிய சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் பற்றிய விவரம்.
> சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி சட்டங் களின் கீழ் செலுத்த வேண்டிய, செலுத்திய தாமதக் கட்டணம் பற்றிய விவரம்.

இறுதி படிவம் : ஆண்டு விற்பனை வருமான படிவமும், இறுதி படிவமும் ஒன்றா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இறுதி விற்பனை வருமான படிவம் ஜிஎஸ்டிஆர் – 10 என்பது ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்தவரின் பதிவு நீக்கப்பட்டாலோ, பதிவை திரும்ப ஒப்படைத்தாலோ தாக்கல் செய்ய வேண்டும். மற்றவர்கள் இந்த படிவத்தை தாக்கல் செய்ய வேண்டியது இல்லை. இந்த படிவம் நீக்கம் செய்யப்பட்ட அல்லது திரும்ப ஒப்படைத்த மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

– சு. செந்தமிழ்ச்செல்வன்