கூகுள் தேடுதலில் செய்ய கூடாதவைகள்

0
  • தங்களுக்கு தேவையான அப்ளிகேஷன்களை கூகுள் தேடுதலில் பதிவிறக்கம் செய்யாதீர்கள். அவை போலியானதாகவோ, மால்வேர் உள்ளதாகவோ இருக்கலாம்.
  • இணையதள வங்கி சேவையை கூகுள் தேடலில் செய்யாதீர்கள். அவை பணம் இழப்பை ஏற்படுத்தலாம்.
  • வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண்களை தேடாதீர்கள் அவைகளில் போலி எண்களும் மறைந்திருக்க கூடும்.
  • மருந்துகள் விவரம் நோய்களின் அறிகுறி ஆகியவற்றை தேடுவதைத் தவிருங்கள். அவற்றை நீங்கள் தவறாக புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
  • தனிப்பட்ட நிதி மற்றும் பங்கு சந்தை அறிவுரைகளை தேடுவதை அறவே விட்டொழியுங்கள்.
  • அரசு இணையதளங்கள் தேடுவதில் சில இணையதளங்கள் அரசு இணையதளங்கள் போலவே உருவாக்கப்பட்டிருக்கும். ஆதலால் அதனையும் தவிருங்கள்.
  • சமூக வலைத்தள முகவரிகளை கூகுள் டேலில் லாகின் செய்து தேடுவதை செய்யாதீர்கள்.
  • இ-காமர்ஜ் வலைத்தளங்கள் மற்றும் அவை அளிக்கும் சலுகைகளை தேடுவதை தவிருங்கள்.
  • இலவச ஆன்டி-வைரஸ் அப்ளிகேஷன்களை கூகுள் தேடல் வாயிலாக பதிவிறக்கம் செய்தால் உங்கள் கணினி பழுதடைய வாய்ப்பிருக்கிறது..
  • கூப்பன்களின் கோட் மூலம் தள்ளுபடி பணதேவையை கூகுள் தேடல் வாயிலாக செய்வதை தவிருங்கள்.
  • பிறகென்ன ? நீங்கள் வலைத்தளத்தில் சிறந்தவராக மாறி விடுவீர்கள்.

– கே. அசோகன், மும்பை

சப்கா விஸ்வாஸ் (சட்டசிக்கல் தீர்வு) திட்டம் 2019

0

SVLDRS, 2019 என சுருக்கமாக அழைக்கப்படும் SABKA VISHWAS (LEGACY DISPUTE RESOLUTION) SCHEME, 2019 எனும் புதிய சட்டசிக்கல் தீர்வுதிட்டத்தின் குறிக்கோள்களாவன:

மத்திய கலால்வரி சேவை வரிதுறைகளின் கடந்தகாலத்தில் ஏற்பட்ட சட்ட தகராறுகளை தீர்வுசெய்வதற்கான ஒரு முறைமட்டுமான நடவடிக்கை, இணக்க வரி செலுத்துவோருக்கு தன்னார்வமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குதல்.

அதாவது, இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம் பழைய சேவை வரி, கலால்வரி ஆகியவற்றின் அடிப்படையிலான வழக்குகளில் முடக்கப்பட்டு உள்ள ரூ. 3.75 லட்சம் கோடி தொகையை சச்சரவுகளில் இருந்து வியாபாரிகளை விடுவித்து, தங்களுடைய வியாபார பணிகளை முழுமையாக தொடர அனுமதிப்பதாகும். எனவே, சேவை வரி, மத்திய கலால் வரி வழக்குகள் தொடர்பான நிலுவையில் உள்ள சச்சரவுகளை தீர்வுசெய்வதற்கு அதனால் பாதிக்கப்படுபவர் அனைவரும் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதனை தொடர்ந்து அவ்வாறான சச்சரவுகள் அனைத்தும் இந்த திட்டத்தின் வாயிலாக தீர்வுசெய்யப்பட்டு விடுவதால் அனைவரும் புதிய ஜிஎஸ்டியை நடைமுறைபடுத்துவதில் அதிக கவனம் செலுத்த முடியும்.

இந்த தீர்வு திட்டத்தின்கீழ் இரண்டு அடிப்படையான முக்கிய கூறுகள் உள்ளடங்கி உள்ளன:

தகராறுகளுக்கான தீர்வு: மத்திய கலால்வரி, சேவை வரி ஆகியவற்றின் கீழ் தகராறுகள் ஏதேனும் ஏற்கனவே உருவாகி பல்வேறு மேல்முறையீட்டு மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமூகமான தீர்வினை கொண்டு அதனை அறவே கைவிடுவது.

பொது மன்னிப்புதிட்டம்: இதன்படி, வரி செலுத்துவோர் நிலுவையில் உள்ள வரிகளில் குறிப்பிட்ட சதவீதத்தை செலுத்துவதற்கும் சட்டத்தின் கீழ் வேறு எந்தவொரு விளைவுகளில் இருந்து விடுபடுவதற்கும் ஒருமுறை மட்டுமான வாய்ப்பை வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மிகவும் கவர்ச்சிகரமான சிறப்பு என்ன என்றால், இது அனைத்து வகை வழக்குகளுக்குமான வரி நிலுவைகளில் கணிசமான நிவாரணம் அளிக்கின்றது. அத்துடன் வட்டி, அபராதம், தண்டம் ஆகியவற்றை முழுமையாக தள்ளுபடி செய்கின்றது. பழைய மத்திய கலால்வரி, சேவை வரியின் கீழான எந்தவொரு தருணங்களிலும் எழுந்த அனைத்து தகராறுகளின், வட்டி, அபராதம், தண்டம் ஆகியவற்றின் வேறு எந்தப் பொறுப்பும் இருக்காது. மேலும், அவ்வாறான வழக்குகளில் இருந்து முழுமையான பொது மன்னிப்பும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

பின்வரும் வழக்குகளுக்கு இந்த புதிய சட்டத்தகராறு தீர்வுதிட்டத்தின் கீழ் தீர்வு பெறமுடியும்
சேவை வரி, மத்திய கலால்வரி தொடர்பான ஜூன் 30, 2019 அன்று நிலுவையில் உள்ள காரணம் கோரும் அறிவிப்பு அல்லது மேல்முறையீடுகள்.

சேவை வரி , மத்திய கலால்வரி தொடர்பான வரித்தொகை செலுத்தாமல் நிலுவையாக உள்ளத் தொகை.

ஜூன் 30, 2019 அன்று அல்லது அதற்கு முன்னர் சேவை வரி , மத்திய கலால்வரி தொடர்பாக விசாரணை, புலனாய்வு விசாரணை அல்லது தணிக்கை ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டு நிலுவையில் உள்ள வரித்தொகை.

சேவை வரி , மத்திய கலால்வரி தொடர்பாக தானாகவே முன்வந்து செய்யப்படும் ஒரு தன்னார்வ வெளிப்பாடு.

இந்த புதிய சட்டத்தகராறு தீர்வுதிட்டத்திலிருந்தான விதி விலக்குகள்
மத்திய கலால்வரிச் சட்டம், 1944 இன் நான்காவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டு உள்ள பொருட்களின் வழக்குகள் (இதில் புகையிலை , பெட்ரோலிய பொருட்கள் அடங்கும்).

வரி செலுத்துவோர் மத்திய கலால் வரிச்சட்டம், 1944 அல்லது நிதிச் சட்டம், 1944 இன் கீழ் தண்டனை பெற்ற வழக்குகள்.
இந்த சட்டத்தின்கீழ் தவறாக பணத்தைத் திருப்பி வழங்கியது தொடர்பான வழக்குகள்.

இந்த சட்டத்தின்கீழ் தீர்வாணையத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்குகள்.

இந்த புதிய சட்டத்தகராறு தீர்வுதிட்டத்தின் கீழ்கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு
வட்டி, அபராததொகை (fine) , தண்டத்தொகை (penalty) ஆகியவற்றை மொத்தமும் தள்ளுபடி செய்வது.

வழக்கு விசாரணையில் இருந்து விடுவிப்பது.
தீர்ப்பு அல்லது மேல்முறையீட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்பு உடைய வரித் தொகையானது 50 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையில் இருந்து 70% நிவாரணமும் வழக்குகளில் தொடர்பு உடைய வரித் தொகையானது 50 லட்சத்துக்கு மேல் இருந்தால் அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையிலிருந்து 50%நிவாரணமும் கிடைக்கும்.

இந்த வரி தொடர்பான விசாரணை மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட வழக்குகளுக்கு வரிசெலுத்தும் கோரிக்கையானது 2019 ஜூன் 30 அல்லது அதற்கு முன்னர் குறிப்பிட்டுள்ள வரித்தொகை மட்டும் இதன்கீழ் நிவாரணம் கிடைக்கும்.

வரி செலுத்தவேண்டிய தொகை செலுத்தாமல் நிலுவையாக இருந்தால், அவ்வாறு செலுத்தவேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டத் தொகையானது 50 லட்சம் அல்லது 50 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையில் இருந்து 60% நிவாரணமும், மற்ற தருணங்களில் அதாவது அவ்வாறு செலுத்தவேண்டும் என உறுதிப்படுத்தப்பட்ட தொகையானது 50 லட்சத்திற்கு மேல் இருந்தால் அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையில் இருந்து 40% நிவாரணமும் கிடைக்கும்.

தன்னார்வமாக வெளிப்படுத்தப்பட்ட தருணங்களில், இவ்வாறு அறிவித்தவர் வெளிப்படுத்திய வரி செலுத்தவேண்டிய கடமையின் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தின் பிற சிறப்புகள்
ஏற்கனவே, இந்த வரிசெலுத்துவதற்காக செலுத்தப்பட்ட வைப்புத்தொகையை சரிசெய்து கொள்ளும் வசதி.
இந்த தீர்வு திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகையினை மின்னணு முறையில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு, செலுத்தப்பட்ட தொகை பின்னர் உள்ளீட்டு வரிவரவாகப் பெற முடியாது.

கேள்விக்கு உரிய நடவடிக்கைகளின் முழுவதுமாகவும், இறுதியாகவும் முடிவுக்கு கொண்டுவருதல். ஒரே விதிவிலக்கு என்னவென்றால், பொறுப்பை தானாக முன்வந்தால், ஒரு வருட காலத்திற்குள் தவறான அறிவிப்பை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் கடந்த கால மற்றும் எதிர்கால வரிவரவுகளுக்கான முன்னோடியாக கருதப்பட மாட்டாது. இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் இறுதி முடிவு கொண்டு வரப்படும்.

கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தனிப்பட்ட விசாரணைக்கு வாய்ப்பு இல்லாமல் இறுதி முடிவு இல்லை.
இந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் முழுமையாக தானியங்கியாக செய்யப்படும்.

– முனைவர். குப்பன்

மேம்போக்கான தன்மை உதவாது!

0

என் குடியிருப்புக்கு அருகே ஓர் ஆட்டோ ஓட்டுநர் இருக்கிறார். நான்கு வருடத்திற்கு முன், பிரபல அரசுக் கட்டடம் முனையில் தினசரி ஏடுகளை விற்று வந்தார். குறிப்பிட்ட ஏட்டை (15 நாளுக்கு ஒரு முறை வெளி வருவது) நான் சற்று தள்ளி வருவதைக் கவனித்துக் கொண்டிருந்து “என்னிடம் சொல்லுங்க! நான் கொண்டு வந்து போடுகிறேன்” என்றார்.

அது போலவே மறுமாதம் முதல் இல்லத்தில் போட்டார். கூடவே, பிரபல தினசரி ஏட்டையும் (சந்தா கட்டினது) வீட்டுக்குக் கொண்டு வினியோகித்தார். 2015 இறுதியில், திடீரென்று ஒரு நாள் அரசு இத்தகைய கடைகளை அப்புறப்படுத்தியது. அவ்வளவுதான்… இதுதான் சாக்கென்று பத்திரிகை வினியோகத்தையே நிறுத்திவிட்டார். “நல்ல வருமானம் இல்லீங்க இதில்” என்பது அவருடைய கோணம். அதே நேரம், வண்டி ஓட்டுவதில் முனைப்பாக இருக்கிறார் என்றும் கூற முடியாது.

ஒரு தினம் நான் அவர் வாகனத்தில் பயணம் செய்த போது உங்கள் பக்கம் ஒரு புது குடியிருப்பு வருகிறதாமே? வாடகை தர இருக்கிறார்கள் என்று வினவினார். உண்மைதான். ஆனால் வீட்டு உரிமையாளர் விதித்த நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லை என்று அந்த வாடிக்கையாளரை விட்டு வேறு ஒருவரைக் குறிப்பிட்டார். எப்போதிலிருந்து வாடகைக்கு விடுவாங்க, விசாரிச்சு சொல்லுங்க என்றார். அந்த நபரின் இயல்பு எனக்குப் புரிந்துவிட்டது. எதிலும் ஒரு தீவிர ஈடுபாடில்லை. மாங்காய் விழுந்தால் லாபம்தானே! என்கிற நினைப்பில் செயல்படுகிறார். ரியல் எஸ்டேட்டில் ஒன்று அமைந்தால்கூட, ரூ.5000 குறைந்தபட்சம் உரிமையாளரிடமிருந்து கிடைக்கும். ஆனால் அதற்கேற்ப குறிப்பிட்ட தொழிலில் சீரியஸான முனைப்பு காணோம். இது அவருடைய பலவீனம்.

மாறாக, வேறொருவரை எனக்கு அறிமுகம் உண்டு.
பல வருடங்களாகக் கோயிலுக்கெதிரில் தையல் கடை வைத்திருக்கிறார்; அவர் மனைவி எழுது பொருட்கள், பெண்களுக்கு வேண்டிய ஸ்டிக்கர் (சமீபத்திய வேலை பிரபல குரியர் நிறுவனத்துக்கு முகவர்) தையல் கடை நபர், பழைய காற்சட்டை, சட்டை இவற்றுடன் பெண்களுடைய ஜாக்கெட்டை சரி செய்வது, (இறுக்கமா இருந்தாலோ அல்லது தொள தொளவென்று இருந்தாலோ மாற்றி தைப்பது) நாங்கள் கடைக்குச் சென்று துணிகள் கொடுத்தால், வீடு தேடி வந்து திருப்பித் தந்து விட்டு பணம் பெற்றுக் கொள்வார்.

கூலி சிலநேரத்தில் அதிகமென்று தோன்றினால் தொழில் துல்லியமாக இருக்கும் என்பதில் ஒரு நிறைவு. ஆச்சரியம் என்னவென்றால், அந்த மனிதர், இவை தவிர, ரியல் எஸ்டேட் வேலையும் செய்து வருகிறார். இரு தரப்பாரிடமும் நன்கு திறம்படப் பேசி, சம்மதிக்க செய்து விடுகிறார்.
முதலில் குறிப்பிட்ட நண்பரின் குடியிருப்புக்குக்கூட நேரில் வந்து பார்த்து சில பயனுள்ள யோசனைகள் சொன்னார். வந்து பார்க்கும் போது பளிச்சென்று இருக்க வேண்டும். ஓரிரண்டு குழல் விளக்கு பொருத்தி விடுங்கள்.

அவரிடம் நான் கண்ட பிளஸ் பாயிண்ட்டுகள்:-

1. தொழிலில் உள்ள தேர்ந்த அறிவு
ஒரு சில காற்சட்டைகளை தைக்க மறுத்துவிடுவார். இவை ஆயத்த ஆடை (Ready Made)யாக வாங்கி இருக்கிறீர்கள். இதில் கை வைத்தால் கெட்டுப் போயிடும் என்று மிகச் சரியாக கணித்துவிடுவார்.

2. இதே போல்தான் ரியல் எஸ்டேட்டிலும்
சர்ச் பகுதி, தபால் நிலையம் அருகில், கடற்கரை பக்கம் என்று எங்கள் நகரிலுள்ள ஒவ்வொன்றும், இன்ன வாடகை (கட்டடமாக இருந்தால்) இவ்வளவுதான் பெறுமானம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்கேற்பத்தான் பேச்சைத் தொடங்குவார்.

3. குறித்த நேரத்தில் செயல்படுவது
இரவு எட்டு மணிக்கு வருகிறேன் என்றால்… நிச்சயம் வந்து விடுவார். அதே மாதிரி செய்ய இயலவில்லை என்றால், முன்கூட்டியே தகவல் தந்துவிடுவார்.

இதேபோன்ற, தன்மையுள்ள வேறு ஒரு ஆட்டோ ஓட்டுநரையும் நான் அறிவேன். நண்பருடைய பேரனை மாலை(டியூஷன்)வகுப்புக்கு இட்டு செல்வார். சில நாட்கள் வரமுடியாவிட்டால், தெரிவித்துவிடுவார். சாலை நடமாட்டம், எதாவது, ஊர்வலத்தால் ஏற்படுகின்ற நெரிசல், திடீரென்று மாறுகிற ஒரு வழிப்பாதை என எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்து இருப்பார்.

செய் தொழிலில் முன்னேற வேண்டுமெனில் தேவையான மூன்று

(அ) தொழிலில் அறிவு
அவ்வப்போதைய மாறுதல்களைத் தெரிந்து கொண்டு, அதைப் பின்பற்றுகிற முன்னடைவு.
(ஆ) நம்பகத் தன்மை.
இந்த ஆளிடம் இந்த வேலையை நம்பிக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தை வாடிக்கையாளரிடம் வளர்ப்பது.
(இ) காலத்தை வீணாக்காதிருத்தல்…
சிந்தித்துப் பார்த்தால் இந்த மூன்றில் எந்த இயல்பும் முதல் பத்தியில் விவரித்திருக்கும் ஆட்டோ ஓட்டுனருக்கு இல்லை என்பது கண்கூடு.

– வாதுலன்

கை கொடுத்த, 17-வது தொழில்

0

ஓயாத போராட்டத்திற்கு பிறகுதான் வெற்றி! என்பது வரலாறு நமக்குச் சொல்லித் தரும் மாறாத பாடம். ஆனால், திரு. மாரிமுத்து அவர்கள் தம் தொழிலில் வெற்றி பெறுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் கூடுதலானவை.பல்வேறு தொழில்களில் கால்பதித்து அதில் வெற்றி கிடைக்காமல், தான் ஈடுபட்ட பதினேழாவது தொழிலில்தான் அவரால் வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்க முடிந்திருக்கிறது.

காதல் மணம் புரிந்து, இரண்டு குழந்தைக்குத் தந்தை (இதில் ஒரு குழந்தை SPECIAL CHILD), உடன் பிறந்த இரண்டு தங்கைகளுக்கு ஆற்ற வேண்டிய கடமை. இப்படி குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு கூடவே சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளையும் செய்தபடி இந்த வெற்றியை ஈட்டி உள்ளார்.

அவர் மேற்கொண்ட தொழில் பயணத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய பேட்டியிலிருந்து…

“எங்களுடைய பூர்வீகம் உத்தரமேரூர். தொழில் வாய்ப்பு தேடி சென்னைக்கு என் முன்னோர் குடிபெயர்ந்தனர்.

மயிலாப்பூரில் மிகப்பெரிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் ஒன்றான பல்லக்கு மாநகரில், நான் பிறந்தது முதல் வசித்து வருகிறேன்.

என் தந்தையார் மிகச்சிறந்த’ பிளம்பர்’. இது தொடர்பான ஒப்பந்த பணிகளை எடுத்து ஆட்களை வைத்து செய்வார்.

தொழிலில் நல்ல வருமானம் ஈட்டினார். ஆனால் குடிப்பழக்கம் அவரை ஆட்கொண்டது. பணி முடித்து மாலையில் பணத்துடன் வரும் அவரை ஒரு கும்பல் சூழ்ந்து கொள்ளும்.அனைவரும் குடித்து, என் தந்தையார் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை காலி செய்து விடுவார்கள். நாளடைவில் நிலைமை மோசமானது. குடிப்பழக்கம் எங்கள் குடும்ப நிம்மதியை சீர்குலைத்தது. என் தந்தையாரையும் செயல் இழக்க வைத்தது.என் தாயார் சரோஜா நான்கு பிள்ளைகளையும் காப்பாற்ற போராடினார்.

நான் பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே வருவாய் ஈட்ட வேண்டிய நிலையில் இருந்தேன்.

எல்டாம்ஸ் ரோட்டில் கிளினிக் வைத்து நடத்திய பிரபல மருத்துவரிடம் மாலை நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டே ப்ளஸ் டூ மற்றும் டிப்ளமா முடித்தேன்.

அதன்பிறகும் அப்பணியில் தொடர்ந்தபடி, பகல் நேரங்களில் பழரசம் விற்பனை செய்வது, துணி-மணிகள் விற்பது, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு காய்கறிகள் வாங்கி கொடுப்பது, போன்ற சிறு சிறு தொழில்களை செய்தேன். ஒரு கட்டத்தில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை வாங்கிவிற்றேன். கம்ப்யூட்டர் பழுது பார்க்கக் கற்றுக் கொண்டு அது தொடர்பான பணியிலும் ஈடுபட்டேன்.

இத்தகைய முனைப்புகளுக்கு இடையே என் இரண்டு சகோதரிகளின் திருமணத்தை நடத்தி முடித்தேன்.

மேற்கொள்ளும் தொழிலில் சீரான வளர்ச்சி கிடைக்காதபோது அடுத்த தொழிலுக்கு மாறினேன்.

2003 ம் ஆண்டில், சிறீ எஸ்.கே.எஸ் சப்ளையர்ஸ்(SRI S. K. S SUPPLIERS) என்ற பெயரில் துணிப்பந்தல்(Shamiyana) ,சாப்பாட்டு மேசை, நாற்காலி, சமையல் பாத்திரங்கள் போன்ற பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் தொடங்கினேன். ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்து இதை செய்யத் தொடங்கியபோது ஆரம்பம் மிகவும் சிரமமாக இருந்தது.

கடை ஆரம்பித்த புதிதில் ஒரு நடுத்தர வயது பெண் “எனக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். நான்தான் கஷ்டப்பட்டு வளர்த்தேன். முதல் பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. சமையல் பாத்திரம் வேண்டும்,” என்றார்.என் தாயார் பட்ட சிரமங்கள் கண் முன் வந்தது. அப்போதுதான் புதிய “டபரா “வாங்கி வைத்திருந்தேன். மதிப்பு ரூ 6,000. அதை பெற்றுக்கொண்டு முன் பணம்கூட கொடுக்காமல் அப்பெண் சென்றார்.

உரிய காலத்தில் அவர் திரும்பத் தராததால் அவர் கொடுத்த முகவரிக்கு சென்றோம். அப்படி யாரும் அங்கு இல்லை என்று தெரிய வந்தது. தொடக்கமே அதிர்ச்சியை ஏற்படுத்திய தொழிலாக இருந்தது. ஆனாலும் முயற்சி செய்தேன். இராப்பகலாக கடினமாக உழைத்தேன் என் நண்பர்கள் நிறைய தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சீராக வளர்ந்து வருமானம் அதிகரித்தது.பத்தாயிரம் ரூபாய் முதலீடு படிப்படியாக உயர்ந்து பத்து லட்சம் ஆனது.என் தம்பி திரு. சுந்தரும் பக்கபலமாக இருந்து தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறார்.

தற்போது 300 சிறந்த வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகள் என்றால் முதல் அழைப்பு எனக்கு தான் வரும்.மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக இவர்கள் உள்ளனர்.

நிகழ்ச்சிகளுக்கு என்னிடம் தொடர்பு கொள்ளவும் போது, எது கேட்டாலும் ஒப்புக்கொண்டு, இல்லாத பொருளை என்னைப்போன்ற வணிகம் செய்யும் நண்பர்களிடம் வாங்கித்தருகிறேன் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைப்பகுதி கிளை செயலாளரான திரு. மாரிமுத்துவின் துணைவியார் திருமதி. சாமுண்டீஸ்வரி, இருவரும் காதல்மணம் புரிந்தவர்கள்.

திரு. மாரிமுத்து ஒரு புத்தகப் பிரியர். பண்டிகை தோறும் ஏராளமான புத்தகங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். “நேரம் கிடைக்கும்போது புத்தகங்கள் படிப்பேன்.பெரியார் எழுதியவற்றை விரும்பி படிப்பேன், என்கிறார் மகிழ்ச்சிபொங்க திரு. கா. மாரிமுத்து.

-ம.வி. ராஜதுரை

இயற்கை பண்ணை சுற்றுலா தளம் அமைப்பது எப்படி?

0

காடு போன்று நெருக்கமாக மரங்களை வளர்த்து விவசாயம் செய்வது எப்படி என்று கூறுகிறார் திருக்கழுகுன்றத்தை சேர்ந்த இயற்கை விவசாயி திரு. இறையழகன்.

என் பண்ணையின் பெயர் தமிழ் நிலம் தமிழ் பண்ணை. இதை உருவாக்கி 10 ஆண்டுகள் ஆகின்றது. இது, 15 ஏக்கர் பரப்பளவுகளை கொண்டது. நீண்டகால மரங்கள் 15 அல்லது 20 ஆண்டுகள் கழித்து பலன் கொடுக்கும். அதுவரைக்கும், நமக்கான வருவாய்காக அன்றாடம், வாரம், மாதம் பலன் கொடுக்கக் கூடிய பழ மரங்களான சப்போட்டா, நெல்லி, கொய்யா, எலுமிச்சை, மா, வாழை, தென்னை, பலா போன்றவற்றை வைத்து இந்த இயற்கைப் பண்ணையை உருவாக்கி உள்ளேன். அதுமட்டும் இல்லாமல், என் பண்ணையை பண்ணைச் சுற்றுலா மையமாக மாற்றவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.

அதற்கு ஏற்றாற்போல், தாழ்வானப் பகுதியில் ஒரு பண்ணைக் குளம் அமைத்து உள்ளேன். அதில், கட்லா, ரோகு, கெண்டை, மிர்கால் என நான்கு வகையான மீன்களை வளர்க்கிறேன். சுற்றுலா வருபவர்கள் மீன் பிடிக்கலாம், மிதிபடகு சவாரி செய்யலாம். குளத்திற்கு மூங்கில், தேக்கு, மகோகனி போன்ற நீண்டகால பலன் தரக்கூடிய மரங்களை வைத்து உயிர்வேலி அமைத்து உள்ளேன். நாம் ஒரு மூங்கில் நட்டால் அது, நாளடைவில் 50 மரங்களாக வளர்ந்து நிற்கும்.

கடந்த 2 ஆண்டுகளாக நிலத்திற்கு இடுபொருள் எதையும் சேர்க்கவில்லை. ஏனென்றால் அதற்கு முன்பு, 7 ஆண்டுகளாக ஜீவாமிர்தம், பஞ்சகவ்வியம் போன்ற இடுபொருள்களை சேர்த்து மண்ணை நன்கு வளப்படுத்தி உள்ளேன். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடுபொருள் சேர்க்கலாம் என்ற முறையானது இந்த நிலத்திற்குப் போதுமானது ஆகும். மேலும், 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விடுகிறேன். ஏனென்றால் மரங்களில் இருந்து உதிர்கின்ற காய்ந்த இலைகள் கீழே மூடாக்குபோல் உள்ளது. அவை ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளும். ஈரமும், இருட்டும் இருப்பதால் அங்கு நுண்உயிரிகள் இருக்கும். அவை மண்ணை மேலும் வளப்படுத்தும்.

தற்போது, பண்ணையில் 150 நெல்லி, 100 கொய்யா, சப்போட்டா போன்ற மரங்கள் உள்ளன. வரிசைக்கு வரிசை 20 அடியும், செடிக்கு செடி 15 அடி இடைவெளி விட்டு நட்டு உள்ளேன். அந்த இடைவெளியில் செம்மரம், மகோகனி போன்ற வணிக மரங்களை வைத்து உள்ளேன். இப்போது, பண்ணையில் 100 வகையான மரங்கள் மொத்தம் 10,000 உள்ளன.

நெல்லி வருடத்திற்கு இரண்டு முறை காய்கள் காய்க்கும். ஒரு நெல்லி மரத்தில் ஏறக்குறைய 200 நெல்லிக்காய்கள் கிடைக்கின்றன. எலுமிச்சை, பருவம் இல்லை என்றாலும் மரத்தில் காய் இருந்துக்கொண்டே இருக்கும். எனக்கு இதில் ஓரளவு வருமானம் கிடைத்து விடுகிறது. அதை வைத்து மேலும் பண்ணையை நன்கு என்னால் வளப்படுத்த, மேம்படுத்த முடிகிறது. நெல், வேர்க்கடலை ஆகியவற்றை பயிரிடமாட்டேன். வருமானத்தைப் பொருத்தவரை அவை நிரந்தரம் இல்லை.

அடுத்து, மரங்களையே தூண்களாக வைத்துப் பந்தல் அமைத்து உள்ளேன். அவ்வாறு செய்கையில் இடம் பற்றாக்குறை என்பது கிடையாது. அதில் புடலங்காய், பாகற்காய் போன்ற கொடி வகைகளை வளர்கிறேன். அனைத்தும் நாட்டு காய்கறி வகைகள் ஆகும். மருத்துவ குணம் உடைய வெற்றிலையை வளர்த்து அதை நாற்றாக அனைவருக்கும் வழங்கவேண்டும் என்பது என் எண்ணம். வெற்றிலைக் கொடியில் நன்கு முற்றிய பகுதியே வெற்றிலை நாற்று ஆகும் (இரண்டு கணுக்கள் மட்டும் தெரியும் அளவு).

நாங்களே இயற்கை உரங்களை தயாரிக்கிறோம். ஆடு, மாடு கழிவுகளையும் உரமாக பயன்படுத்துகிறோம். மேலும், நெல்லி, வெல்லம், கடுக்காய் தூள் இவற்றை 50 நாட்கள் ஊறவைத்து அதை உரமாகப் பயன்படுத்துகிறோம்.

மரம் வளர்க்கிறோம் என்றால், மேலே பார்த்தால் வானம் தெரியக்கூடாது, கீழே பார்த்தால் நிலம் தெரியக்கூடாது என்ற நம்மாழ்வாரின் சொல்லை நான் மெய்பிக்க விரும்புகிறேன். இன்னும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் 25 வகையான காய்கறிகள், 50 வகையான பழங்கள், 500 வகையான மரங்கள் வைக்கவேண்டும் என்பதே என் இலக்கு ஆகும்.

-சா.கு. கணிமொழி

மனைவிக்காக ஒரு ஈவன்ட் தொழில்

0

நம் நாட்டின் வணிகம் சார்ந்த வரலாற்றை புரட்டிப்பார்த்தோமானால் ஆர்வம் உள்ள தொழில்முனைவோர்களுக்கு சந்தையில் சிறப்பான வாய்ப்பு இருப்பது தெரியவரும். சிலருக்கு சந்தையை கைப்பற்றும் அளவிற்கு வணிகம் சார்ந்த புத்திக்கூர்மை இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர்தான் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி. இனி, அவர் பேசியதில் இருந்துஞ்..

தூத்துக்குடியில் எனக்கு சொந்தமாக ‘மாருதி சால்ட்’ என்ற பெயரில் உப்பள நிறுவனம் உண்டு. அப்பாவுக்கு பிறகு நான்தான் கவனிக்கிறேன். எனக்கு மீடியா மீது ஒரு விரும்பம் இருந்தது. அதனால், மீடியா தொடர்பாக படிக்க சென்னை சென்றேன். அங்கு, புகழ்பெற்ற ஒரு இன்ஸ்ட்டியூட்டில் விஸ்காம் சேர்ந்தேன். வாரத்தில் மூன்று நாட்கள் படிப்பேன். மூன்று நாட்கள் உப்பளம் செல்வேன். அப்போதான், அம்மணிய பார்த்தேன்( மனைவி). பார்த்த உடனே பிடித்தது பொய் சொல்ல மாட்டேன். நாங்க ரெண்டு பேரும் பேச பேச எங்களுக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டது. என் வீட்டில் என்னோட விருப்பம் என்று கூறிவிட்டனர். அவங்க வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இன்றுவரை பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. படிப்பு முடிவதற்குள்ளேயே திருமணத்தை முடித்தோம். இப்போது, மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அடுத்த கேள்விக்கு, நான் பதில் சொல்கிறேன் என்று கணவரின் வாயைப் பொத்தினார் விஜயலட்சுமி.

இவர், உப்பளம் பிஸ்னஸ் கவனித்துக் கொண்டு இருந்தார். நான் வீட்டில் சும்மாதான் இருந்தேன். எனக்கு அப்பப்போ விலை உயர்ந்த செல்போன், லேப்டாப்ன்னு வாங்கி கொடுத்துக் கொண்டு இருந்தார். அவற்றை டைம் பாஸ்காக பார்க்க தொடங்கினேன். அதுவே, ஒரு கட்டத்தின் பிஸ்னஸ் ஆசையே தூண்டி விட்டது. அப்போது, ராஜீவ்காந்தியிடம் பேசினேன். நம்ம ஏன் திருமணம் மற்றும் பிஸ்னஸ் புரோமோஷன் மாதிரியான ஈவன்ட் தொழில் செய்யக்கூடாது? என்றேன். அவருக்கு முகமெல்லாம் மலர்ச்சி. காரணம், ‘நாம படிச்ச மீடியா படிப்ப இப்போவாவது பயன்படுத்த நினைச்சயே சூப்பர்’ என்றார்.

அவர், அழகாக ஓவியம் வரைவார், வீடியோ எடிட்டிங்-ம் அற்புதமாக செய்வார். அதனால், முதலில் ‘செல்ஃபிபுள்ள’ என்கிற பேரில் ஒரு யுடியூப் சேனல் தொடங்கினோம். அதில், சில சுற்றுலா தளங்கள் பற்றியும், புது ஜோடிகள் தங்கி மகிழும் சில ரிசார்ட் பற்றியும் பதிவு செய்தோம். எங்களை வெவ்வேறு வகையான நிறுவனங்கள் நாடின. குறிப்பாக, ஜூவல்லர்ஸ் நிறுவனம் எங்களை நாடி, எங்களிடம் உள்ள திருமண நகைகளை புரோமோட் செய்ய வேண்டிக் கேட்டார்கள். சிலர் திருமணத்திற்கான ஃபோட்டோகிராஃபி மற்றும் வீடியோ கிராஃபி செய்யும்படி கேட்டனர். முதலில் அதை மட்டுமே செய்து கொடுத்தோம்.

ஃபோட்டோ கிராஃபி மற்றும் வீடியோகிராஃபியை பொறுத்தவரை விதவிதமான ஆல்பம் கொடுப்போம். அவர்கள் சொல்வதற்கு ஏற்ற மாதிரி பட்ஜெட் கொடுப்போம். எங்கள் விருப்பப்படி செய்வதற்கு நாங்கள் ஒரு பட்ஜெட் வைத்து உள்ளோம். அந்த பட்ஜெட்டில் திருமணம், வரவேற்பு மற்றும் திருமண ஜோடிகளை அழைத்து அவுட்டோர் சூட்டிங் எடுத்து ஃபோட்டோஸ் என அனைத்தும் சேர்த்து ஆல்பம் போட்டுக் கொடுப்போம். அதே போல, வீடியோவையும் எடிட்டிங் செய்து ஆவணப்படமாக கொடுப்போம். இந்த இரண்டையும் தவிர வேறு வேலைகளை எடுத்துக்கொள்ள மாட்டோம்.

அதேபோல, அவர்களின் திருமண அழைப்பிதழை வைத்து சோசியல் மீடியாவில் புரோமோ கொடுப்போம். இவை தவிர, திருமண வீட்டாரே அனைத்து வேலைகளையும் பார்க்க சொன்னால், திருமண அட்டை அச்சு செய்வது முதல் வரவேற்பு பெண்(வெல்கம் கேர்ள்), வரவேற்பு நடனம் மற்றும் மேடை அலங்காரம் என அசத்தி விடுவோம். இப்போது, தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சி நடத்துவது மற்றும் ஃபோட்டோ கிராஃபி கலைக்கு முதன்மையான இடத்தில் இருக்கிறோம். தென் மாவட்டங்களில் எங்களுக்கு அதிகமான சலுகைகள் கிடைக்கிறது. தமிழ்நாடு முழுக்க முதன்மையான இடத்திற்கு வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய நீண்ட நாள் ஆசை.

இப்போது, இந்த ஈவன்ட் தொழிலில் பயண ஏற்பாடு தொழிலையும் இணைத்து உள்ளோம். இந்தத் தொழிலை இணைத்ததற்கு காரணம் உண்டு. எங்கள் குடும்பத்துடன் அண்மையில் குற்றாலம் சென்றிருந்தேன். வெறும் குற்றாலம் என்ற கோணத்தில் மட்டும் சிந்திப்பவர்களுக்கு அருவி மட்டுமே கண்களை குளிர்ச்சியாக்கும். ஆனால், அந்தத் தளத்தை சுற்றுலா தளமாக பார்க்க விரும்பினால் நிறைய உள்ளன. குறிப்பாக, ரிசார்ட் மட்டுமே பல வகையான ரிசார்ட்கள் உள்ளன. மேற்கு மலைத் தொடர்ச்சியில் இந்த மாதிரியான ரிசார்ட்கள் அமைந்திருப்பது வியப்பாக இருந்தது. நாங்கள், கொஞ்சம் இன்டீரியர் ரிசார்ட்டில் தங்கினோம். அவ்வளவு அழகாக இருந்தது. அங்குள்ள ரிசார்ட்டில் தங்தான் குற்றாலம் முதன்மை அருவி முதல் பாலருவி வரை சுற்றிப் பார்ப்பதற்கான இடங்களைப் பட்டியல் செய்தோம். 15 இடங்கள் சிக்கின. இது எங்களுக்கு வியப்பாக இருந்தது. அப்போது, இதையும் எங்களுடைய தொழிலாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தோம். அதுமுதல், நானும் என் மனைவியும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் என தென் மாவட்டங்கள் முழுவதும் சுற்றுலா தளங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் என மிகப்பெரிய பட்டியல் வைத்து உள்ளோம்.

இப்போது, நெறுங்கிய நண்பர்களுக்கு தங்கும் எற்பாடுகளையும் சுற்றி காட்டுவதற்கான வழிகாட்டியையும் ஏற்பாடு செய்து வருகிறோம். உப்பள தொழிலை பொறுத்தளவில் ஒரு நிலையான தொழில் அது கைவந்த கலை என்பதால், இந்தப் புதிய ஈவன்ட் தொழிலில் அதிக அக்கறை எடுத்து வருகிறேன். தென்னகத்தில் எங்களுக்கான மிகப்பெரிய சந்தை காத்திருப்பதாக நினைக்கிறேன்.

– தாமு. தமிழமுதன்

டிஜிட்டல் மார்கெட்டிங் பேஃக் லீங்க் – 6

0

நம்முடைய வலைத்தளத்திற்கு மற்ற வலைத்தளத்தில் (Website), வலைப்பூக்களில் (Blogger)) தொடர்பு (Link) ஏற்படுத்துவதே Back Link என்று அழைக்கப்படுகிறது. இவற்றை லிங்க் பில்டிங்(Link Building) என்றும் டிஜிட்டல் மார்கெட்டிங் -ல் குறிப்பிடப்படும்.

சான்றாக, நாம் ஒரு தொழில் செய்து வருகிறோம் அந்த தொழில் பற்றி மற்றவர்களிடம் சொல்லுவோம். நாம் மட்டுமே சொன்னால் சில மக்களையே சென்று சேரும் கூடவே நம் தொழிலை பற்றி நம் நண்பர்கள், உறவினர்கள், வாடிக்கையாளர்கள், நமக்கு அறிமுகமான மனிதர்கள், இவர்கள் எல்லோரும் நம் தொழில் பற்றி மற்றவர்களிடம் பேசினால் நம் தொழில் பல நபர்களை சென்று சேரும். அதாவது, நம் தொழிலுக்கு இவர்கள் எல்லாம் பின்னால் இருந்து உதவி செய்கிறார்கள் இவர்கள்தான் நம் தொழிலுக்கான backlink.

இதே போல் நம் வலைத்தள முகவரி கொண்டு நேரடியாக நம் தொழில் பற்றி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். ஆனால், அனைவருக்கும் நம் வலைதள முகவரி தெரிவதற்கு பல மாதங்கள் ஆகலாம். அதனால், நம் வலைத்தளத்தை பற்றி மற்ற வலைத்தளங்கள் அவர்களுக்கு தெரிவித்தால் இன்னும் வேகமாக அனைவரிடமும் சென்று சேரும். இவைதான் டிஜிட்டல் மார்கெட்டிங் -ல் back link என்று அழைக்கப் படுகின்றன.

இந்த தொடரின் தொடக்கத்தில் ON Page Seo பார்த்தோம். அதில் மற்றொன்று OFF Page Seo ஆகும். Back-link முழுவதும் இந்த OFF Page Seo வை குறிக்கும். அதாவது, OFF Page Seo என்பது Back-Link உருவாக்குவதை குறிக்கிறது. நிறைய வலைத்தளங்கள் நம் தொழில் வலைத்தளத்தை விளம்பரம் செய்ய உள்ளன. அவற்றில் நம் வலைத்தளத்தை பற்றி குறிப்பிடலாம். நம் தொழில் மற்றும் பொருட்களை பற்றி PPT உருவாக்கி அவற்றை பதிவேற்றலாம்.

சான்றாக, www.slideshare.net என்ற வலைத்தளத்தில் உங்கள் தொழில் பற்றிய செய்திகளை PowerPoint(PPT) ஆக வெளியிட்டால் வாடிக்கையாளர்கள் கூகுள் வழியாக நம் பொருட்களை தேடினால் அதில் நம் வலைத்தளம் வரலாம் அல்லது நாம் பதிவு செய்துள்ள ppt யம் அவர்களுக்கு தெரியலாம்.

உங்கள் தொழில் பற்றி சிறிய வீடியோ ஒன்றை எடுத்து அவற்றை வீடியோ வலைத்தளங்களில் பதிவேற்றுங்கள். https://www.youtube.com போன்ற சில வலைத்தளங்கள் நிறைய உள்ளது. உங்கள் தெரிந்தவர் வலைபூக்களில்(blogspot), வலைத்தளத்தில் (Website) உங்கள் வலைத்தளத்தை பற்றி அவர் எழுதினால் அதன் மூலம் அவரின் நட்பு வட்டாரங்களுக்கு உங்கள் வலைத்தளம் அறிமுகமாகும் இவற்றை guest posting என்று டிஜிட்டல் மார்கெட்டிங் -ல் அழைப்பார்கள். உங்கள் தொழில் பற்றிய நம்பகத்தன்மை அதிகமாகும் guest posting மூலம்.

நீங்களே ஒரு வலைப்பூ(Blogger) உருவாக்கி அதில் தொடர்ந்து உங்கள் தொழில், நிகழ்ச்சிகள், புதிய பொருட்கள் அறிமுகம், வாடிக்கையாளர் கருத்துக்கள் போன்றவற்றை தொடர்ந்து எழுதி வருவதன் மூலம் இணையத்தில் உங்கள் தொழில் பற்றிய செய்திகள் பரவலாக இருக்கும்.

உங்கள் தொழில், பொருட்கள் பற்றி சிறு கட்டுரை எழுதி அவற்றை www.freeprwebdirectory.com போன்ற article submision வலைதளத்தில் பதிவேற்றலாம். இதுபோல் நிறைய வலைத்தளங்கள் உள்ளது. Top 10 article submission website என்று கூகுளில் தேடினால் நிறைய உங்கள் பார்வைக்கு வரும் அதில் சிலவற்றை தேர்ந்து எடுத்து பதிவேற்றுங்கள்.

நமக்கு தெரியாத விடைகளை நாம் கூகுளில் தேடி தெரிந்து கொள்வோம். நமக்கு தோன்றும் கேள்விகளை நீங்கள் www.quora.com போன்ற கேள்வி பதில் வலைத்தளத்தில் கேட்டால் பதில் தெரிந்தவர்கள் அதற்கு பதில் சொல்வார்கள். அதனால், நீங்கள் quora வலைத்தளத்தில் ஒரு கணக்கு தொடங்கி உங்கள் தொழில் சார்ந்து யாராவது கேள்வி கேட்டிருந்தால் அதற்கு பதில் சொல்லி உங்கள் வலைத்தளத்தை அதில் பதிவிட்டால் கேள்வி கேட்டவர் அதை படித்து அதை தெடர்ந்து உங்கள் வலைதளம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் இது போன்ற வலைத்தளத்தை கவனியுங்கள். Image share செய்வதற்கு சில வலைத்தளங்கள் (social Media) உண்டு. சான்று, www.pinterest.com போன்ற படங்கள் பதிவேற்றும் வலைத்தளத்தில் உங்கள் பொருட்கள், தொழில் தொடர்பான படங்களை பதிவிட்டால் வாடிக்கையாளர்கள் அவற்றை பின்பற்றி உங்கள் வலைத்தளத்திற்கு வருவார்கள்.

இதே போல் Bookmark submission, Document Sharing, Classified Submission போன்று நிறைய வலைத்தளங்கள் உண்டு அவற்றில் எல்லாம் உங்கள் தொழில் செய்திகள், படங்கள் என்று தொடர்ந்து பதிவு செய்து கொண்டே வாருங்கள். சில மாதங்கள் பிறகு இணையத்தில் பரவலாக உங்கள் தொழில் மற்றும் வலைத்தளம் பற்றிய செய்திகள் இருக்கும்.

வாடிக்கையாளர் உங்கள் பொருட்களை கூகுளில் தேடினால் இவற்றில் ஏதாவது ஒன்று அவர்கள் பார்வைக்கு வரும். அதன் மூலம் அவர்கள் உங்கள் பொருட்களை வாங்கலாம், வலைத்தளத்தை பார்வை இடலாம், உங்கள் தொழில் செயல்பாடுகள் அவர்களுக்கு சுலபமாக தெரியவரும்..
மேலே உள்ள அனைத்தும் மற்றவர்கள் வலைதளத்தில் நம் தொழில் பற்றி செய்திகள் பதிவு செய்வது ஆகும். அதனால் நமக்காக அந்த வலைத்தளங்கள் நம் தொழில் பற்றி மற்றவர்களுக்கு வழங்கும். இவைதான் backlink என்று டிஜிட்டல் மார்கெட்டிங் -ல் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய விரும்புவோர்கள் கண்டிப்பாக உங்கள் தொழில் பற்றி இணையத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் பதிவு செய்யுங்கள். நாளடைவில் இணையம் எங்கும் உங்கள் தொழில் நிறைந்து இருக்கும்..

– செழியன்.ஜா

இந்தியாவின் சிறு, நடுத்தரத் தொழில்கள் டிஜிட்டல் மயமாக்கம்: 1 பில். டாலர்களை முதலீடு செய்ய அமேசான் திட்டம்

0

3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமேசான் தலைவர் ஜெஃப் பெசாஸ் இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை டிஜிட்டல் மயமாக்க இங்கு 1 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெசாஸ் கூறும்போது, “21ம் நூற்றாண்டு இந்திய நூற்றாண்டாகப் போகிறது. இதில் முக்கியமான கூட்டணி இந்திய-அமெரிக்கக் கூட்டணியாகும்” என்றார்.

மேலும் 2025-ம் ஆண்டு வாக்கில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள மேக் இன் இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அமேசான் சி.இ.ஓ பெசாஸின் 3 நாள் இந்தியப் பயணம் புதனன்று தொடங்கியது, முன்னதாக ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார் பெசாஸ்.

ரிசர்வ் வங்கி துணை கவர்னராக மைக்கேல் பத்ரா நியமனம்

0
புதுடெல்லி

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக மைக்கேல் பத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு இவர் இந்த பொறுப்பில் இருப்பார்.

கடந்த 2017 ஜனவரியில் வீரல் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பொறுப்பேற்றார்.அவருடைய பணிக்காலம் முடிய 6 மாதங்கள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து துணை கவர்னர் பதவி காலியாக இருந்துவந்த நிலையில், தற்போது மைக்கேல் பத்ராவை நியமிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவர் பணியில் சேருவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக உள்ள இவர் நிதிக் கொள்கை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். பொதுவாக இப்பொறுப்புக்கு வெளியில் இருந்து பொருளாதார நிபுணர்கள்தான் நியமிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்பு உர்ஜித் படேல் இப்பொறுப்பை வகித்தார். அதற்குப் பிறகு பத்ரா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 நிதிக் கொள்கை முடிவுகளில் ஆர்பிஐ கவர்னர் எடுத்த வட்டிக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு பத்ரா ஆதரவாக வாக்களித்துள்ளார்.

துணை கவர்னர் பதவிக்கு இவரிடம் நிதி அமைச்சகம் நேர்முக தேர்வு நடத்தியது. நிதித்துறைச் செயலர் ராஜீவ் குமாரும் நேர்முக தேர்வை நடத்தினார். இவரது நியமனத்துக்கு பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐஐடி மும்பையில் பொருளாதாரத்துக்கான முனைவர் பட்டம் பெற்ற மைக்கேல் பத்ரா, முதுநிலை முனைவர் பட்டத்தை ஹார்வர்ட் பல்கலைகழத்தில் பெற்றார். ரிசர்வ் வங்கியில் 1985-ம்ஆண்டு இணைந்தார்.

அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 1.1 சதவீதம் வீழ்ச்சி

0

தொடர்ந்து மூன்றாவது மாதமாக அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி சரிந்துள்ளது. பெட்ரோலியத் தயாரிப்புகள், தோல் தயாரிப்புகள், ஜவுளிப் பொருட்கள், தரை விரிப்புகள், பண்ணைப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி மதிப்பு 1.1 சதவீதம் குறைந்து 26.4 பில்லியன் டாலராக உள்ளது. அதேபோல் இறக்குமதி 16 சதவீதம் அளவில் குறைந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு 37.4 பில்லியன் டாலராக உள்ளது. இந்நிலையில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை சென்ற ஆண்டு இதே காலத்தில் 18 பில்லியன் டாலரில் இருந்த நிலையில், தற்போது 11 பில்லியன் டாலராக குறைந்து உள்ளது.

மொத்தமாக நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், ஏற்றுமதி மதிப்பு 2.4 சதவீதம் அளவில் சரிந்து 186 பில்லியன் டாலராக உள்ளது. இறக்குமதி 8.4 சதவீதம் அளவில் குறைந்து 281 பில்லியன் டாலராக உள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை 116 பில்லியன் டாலரில் இருந்து 95 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

உலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாக தேவை குறைந்துள்ளது. அதன் விளைவாக ஏற்றுமதி குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மக்களின் நுகர்வு திறன் குறைந்து உள்ளது. விளைவாக நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து உள்ளன. இதன் காரணமாக உற்பத்திக்கு தேவையான கச்சாப் பொருட்களின் இறக்குமதி குறைந்துள்ளதாக இந்திய வர்த்தக மேம்பாட்டுக் குழுவின் தலைவர் மோஹித் சிங்லா தெரிவித்து உள்ளார். அதேசமயம், ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் ஆகிய பிரிவுகளில் ஏற்றுமதி சற்று உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதத்தில் தங்கம் இறக்குமதி 4.7 சதவீதம் உயர்ந்து 1.8 பில்லியன் டாலராக உள்ளது.