ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி: புதிய வடிவமைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்!

0

அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு சென்று வேலை பார்த்தால் நன்றாக சம்பாதிக்க முடியும் என்ற எண்ணம் நம் இளைஞர்கள் இடையே அதிகமாக நிலவி வருகிறது. ஏன், நம் அனைவருக்கும்கூட அமெரிக்கா என்றதும் நினைவிற்கு வருவது கணினி மென்பொருள்கள் தொடர்பான வேலை வாய்ப்புகள்தான். அது ஒரு வகையில் உண்மைதான். ஏனெனில் அமெரிக்காவில் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இருக்கின்றனர்.


அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்துறை முன்னணியில் உள்ளது. அங்குள்ள அதிக மக்கள் மோட்டார் வாகன உற்பத்தி, இராணுவத் தடவாளங்கள், மின்சாரம், குளிர்சாதனப் பெட்டி, வேளாண்மை, போக்குவரத்து போன்ற தொழில்களில் ஈடுபட்டு இருக்கின்றனர். எனவே அன்றாடப் பயன் பாட்டுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்கிறார்கள். இந்த வாய்ப்பை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் சீனர்களே. அமெரிக்காவிற்குத் தேவைப்படும் ஆப்பிள் கணினி முதல் விளையாட்டு பொம்மைகள் வரை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.


அமெரிக்காவின் மக்கள்தொகை 32 கோடி. பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பெரிய பணக்காரர்களும், வறுமையில் உள்ளவர்களும் சிறிய அளவில் இருக்கிறார்கள். அமெரிக்காவில் மக்கள் அனைவரும் நம் நாட்டு மக்களைப் போல சொத்துகள் சேர்த்து வைப்பது இல்லை. ஒரு கார், ஒரு வீடு என தேவைகளை அளவோடு வைத்துக் கொள்கிறார்கள். அங்கே, ஒரு வீடு இந்த குறிப்பிட்ட அளவில்தான் இருக்க வேண்டும் என்று அரசே தீர்மானிக்கிறது. பொதுவாக அவை அடுக்குமாடி குடியிருப்புகள்தான். அதேபோல் நம்மால் தனியாக நிலம் வாங்கி வீடுகட்ட முடியாது.

அதற்கென இருக்கின்ற நிறுவனங்கள் கட்டிய வற்றைதான் வாங்க வேண்டும். அந்த வீடுகள் அவர்களுக்குப் போதுமான அளவில் இருப்பதால் அனைத்து மக்களும் அதிலே வாழ்ந்து பழகிக் கொள்கிறார்கள். மற்றும் இரண்டாவது வீடு யாரும் வாங்குவது இல்லை. இந்த வாழ்க்கை முறையால் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை நன்றாக செலவு செய்கின்றனர்.
அதனால் பலவற்றை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். அது மற்ற நாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல பலனை தருகிறது. இந்த அரிய வாய்ப்பினை நாமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றுள் ஆயத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

ஆயத்த ஆடைகள்


அமெரிக்காவில் ஆடைகளில் பல வகைகளை இறக்குமதி செய்கிறார்கள். ஆண்கள், பெண்கள் இருவருமே பேன்ட்- சட்டை அணிகிறார்கள். அங்கே ஆறுமாதங்கள் வரை கடுங்குளிர் நிலவுகிறது. அதனால் அந்த குளிர்காலத்தில் கம்பளி ஆடைகள், தோல் பொருட்களால் செய்யப்பட்ட மேலாடைகள் ஆகியவற்றை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அதுவே கோடை காலங்களில் பருத்தி ஆடைகளைத் தேடி வாங்குகிறார்கள்.


அவர்கள் வாங்கும் இந்த பருத்தி ஆடைகள் பெரும்பாலும் வியட்நாம், கம்போடியா, மலேசியா, வங்காள தேசம் மற்றும் இந்தியா ஆகியவற்றின் தயாரிப்புகளாக இருக்கின்றன. இதில் இந்தியாவின் பங்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். இருபது ஆண்டுகளுக்கு முன்னால், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடை தயாரிப்பில் இரண்டு லட்சம் பேர் ஈடுபட்டு இருந்தனர். அதில் குறிப்பாக பெண்களும் அடங்குவார்கள். தற்போது சில ஆயிரம் பேர்கள் தான் இந்த தொழிலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல காரணங்களைக் கூறுகின்றனர்.

அண்மையில் நான் அமெரிக்காவில் தங்கி இருந்த போது பல நகரங்களுக்கும், கடைகளுக்கும் செல்ல வேண்டி இருந்தது. அங்கு பருத்தி ஆடைகள் அணிந்த பலரைப் பார்க்க முடிந்தது. அவை வியட்நாம், மலேசியா, கம்போடியா தயாரிப்புகளாக இருந்தன. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ஆடைகளும் கடைகளில் தொங்க விடப்பட்டு இருந்தன. விசாரித்த போது, மழைக்காலம் தொடங்கும் போது 50% தள்ளுபடிக்கு விற்பனை ஆகும் என்று கூறினார்கள். அதற்குக் காரணம், 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நீலம், சிவப்பு நிறங்களில் கட்டம் போட்ட சட்டைகள் இன்றளவும் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


நாம் அனைவரும் முன்பு இருந்தது போல பழைய வடிவமைப்பிலோ அல்லது நிறங்களிலோ இருக்கின்ற ஆடைகளை இன்றைக்கு பயன்படுத்துவது இல்லை. அவற்றை வாங்குவதும் இல்லை. இந்த நிலையில் நாம் ஏற்றுமதி செய்யும் அந்த தயாரிப்புகளின் தரத்திலும், வடிவமைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாமல் இருப்பது நமது வளர்ச்சிக்கு வழி வகுக்காது அல்லவா?.


மனிதர்கள் அனைவருமே புதிய மாற்றங்களை விரும்புகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் நாமும் அவர்களது தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். அவர்கள் வாங்கும் படியான தயாரிப்புகளை மற்ற நாடுகளே ஈடுசெய்கின்றன.
நான் இரண்டு ஆடைகள் வாங்கினேன். ஒன்று வியட்நாம் தயாரிப்பு. மற்றொன்று கம்போடியா தயாரிப்பு. அவற்றின் நேர்த்தியும், வண்ணமும், வடிவமைப்பும் அவ்வளவு அழகாக இருந்தன. எனவே தரமான நூல், புதுப்புது வடிவமைப்பு, சிறப்பான தையல் ஆகியவை ஏற்றுமதி செய்யும் ஆடைகளுக்கு மிக முக்கியம். இதில் கவனிக்க வேண்டிய மற்றோன்றும் இருக்கிறது. அமெரிக்கர்கள் பொதுவாக, ஆறடி உயரமானவர்கள். பருத்த நெடிய உடல் அமைப்பை உடையவர்கள். அதற்கு ஏற்ப பெரிய சட்டைகள் தேவை. அங்கே அதிகமாக, L,2L,3L,4L போன்ற அளவுள்ள சட்டைகள் விற்பனை ஆகின்றன.

பெண்களுக்கான ஆடைகள் தேவையான மாற்றங்களுடன் தைக்கப்பட வேண்டும். ஆடைகள் தங்கள் மதிப்பை உயர்த்தும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனமாகவே உள்ளார்கள். இப்படி நுணுக்கமாகக் கவனித்துச் செயல்பட்டால் ஏற்றுமதி வணிகத்துடன், தமிழ்நாட்டின் ஆயத்த ஆடைகள் தொழிலும் வளர்ச்சி அடையும். துணிகளில் புதுப்புது வடிவமைப்பு செய்ய செலவு அதிகம் ஆகும். ஏனெனில் அதற்கென ஆடைவடிவமைப்பு (ஃபேஷன் டெக்னாலஜி) படித்தவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டி இருக்கும். அவர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டி இருக்கும். நூலுக்கு வண்ணம் தீட்டுவதில் தொடங்கி நெசவு, தையல் என அனைத்திற்கும் செலவு செய்ய வேண்டி இருக்கும். கைத்தறி நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களும் இந்த செலவை சுமையாகவே பார்ப்பார்கள்.


எனவே பலர் கூட்டாகச் சேர்ந்து முதலீடு செய்து வடிவமைப்பு நிலையங்களைத் தொடங்கலாம். அல்லது ஆடை வடிவமைப்புக் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதன் மூலம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த வகை ஒப்பந்தங்கள் தற்போது உணவு விடுதிகளுக்கும் உணவக மேலாண்மைக் கல்லூரிகளுக்கும் இடையே ஏற்பட்டு உள்ளதால், பல நகரங்களில் உள்ள உணவகங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இதனை ஆடை ஏற்றுமதியாளர்களும் பின்பற்ற வேண்டும். இன்னும் சொல்லப்போனால், ஏற்றுமதியாளர்கள் இந்த ஆடை வடிவமைப்பு நிறுவனங்களுக்கும் நெசவாளர்களுக்கும் பாலமாகச் செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

-நாஞ்சில் செ. நடராசன்

போட்டிகளை கையாளும் வியூகங்கள் !

0

கோடிக் கணக்கில் புழங்கும் வணிகத்திற்கு எத்தனை வியூகங்கள் வகுக்க வேண்டும்? போட்டிகள் குவிந்து இருக்கும் பிராண்டுகளுக்கு எத்தகைய நுட்பங்களைத் தீட்ட வேண்டும்? மாறி வரும் சந்தையில் தன்னை நிலைநிறுத்த எப்படிப்பட்ட திட்டங்களைத் தீட்ட வேண்டி இருக்கும்?


போட்டி பிராண்டுகளின் வீக்னஸ் மீது, நம் வலிமையை பயன்படுத்துவதே வியூக த்தின் அடிப்படை. சந்தையில் நிலவும் வளமான வாய்ப்புகளை எளிதாகக் கைப்பற்ற பயன்படுத்தப்படும் நுட்பம்தான் வியூகம். செய்வதைத் திருந்த செய்வது மட்டும் அல்ல வியூகம். சரியான வழியைக் கணித்து தெளிவான பயணம் செய்யப் பயன்படுவதே வியூகம்.

கண்ணுக்குத் தெரியாத மாற்றம்


மாறிவரும் சந்தையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுபோல மாற வேண்டிய சந்தையை யும் புரிந்து கொள்ள வேண்டும். செய்ய வேண்டிய புதிய நிர்வாக முறைகளை, முறையாக அறிந்து கொள்ள வேண்டும். வர்த்தக உலகின் நாளொரு வளர்ச்சியும், பொழுதொரு மாற்றமும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. கடந்து வந்த காலத்தை கண் திறந்து பார்க்கும் போது தான் கண்மூடித் திறப்பதற்குள் நடந்த வளர்ச்சிகள் கண்கூடாகத் தெரிகிறது.


சந்தை மாறுவதும் தெரிவதில்லை, மாறும் விதமும் புரிவதில்லை. மாற்றத் திற்குத் தேவையான காலத்தைக் கூட கணிக்க முடிவதில்லை. கடந்த 15 ஆண்டு களில் சந்தை கண்ட மாற்றங்களை எண்ணிப் பார்த்தால்தான் நாம் கடந்து வந்த வழியின் மேடுபள்ளம் தெரியும். கடக்க வேண்டிய வழியிலுள்ள புதை குழிகள் புலப்படும். வர்த்தகத்தையும் சந்தை யையும் அணுக வேண்டிய வழிமுறைகள் புரியும்.

பிராண்டுகளின் குவியல்


அந்தக் காலத்தில் கடையில் எந்தப் பொருள் வாங்கினாலும் அதன் பில்லில் “விற்ற பொருள் திரும்ப எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது” என்று அச்சிடப்பட்டு இருக்கும். வாங்கிய பொருட்கள் சரியில்லா விட்டால், குப்பையில் தான் போட வேண்டும் என்ற நிலை.


இன்று வாடிக்கையாளர்களே பிரதமர், முதல்வர். வாங்கிய பொருளை திருப்பி எடுக்க மாட்டோம் என்ற நிலை மாறி, “எங்கள் பொருளைப் பயன்படுத்திப் பாருங் கள். பிடிக்கவில்லையா, திருப்பித் தந்து விடுங்கள், பணம் வாபஸ்” என்று கூறுகி றார்கள்.
கடைக்கு வந்த வாடிக்கை யாளரிடம், “வாங்க சார், ஒரு ஃபோன் போட்டா, வீட்டுக்கே வந்து தருவோமே?” என்று கெஞ்சுகிறார்கள்.


சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, எந்தப் பொருளை எடுத்தாலும், அதில், ‘பார்த்துக் கோ, எடுத்துக்கோ’ என்பது போல, ஓரிரண்டு பிராண்டுகளே இருந்தன. இன்றோ திரும்பிய பக்கங்களில் எல்லாம் பிராண்டுகள்.

நினைக்கும் நேரத்தில் அறிமுகம்


புதிய பிராண்டை அறிமுகப் படுத்து வோம் என்று நாம் நினைத்து முடிப்பதற் குள் நான் நினைத்த பிராண்டைப் போலவே வேறு மூன்று நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொண்டு இருக்க, மேலும் ஐந்து நிறுவனங்கள் அறிமுகப் படுத்தியே விடுகின்றன.


நாம் எதைச் செய்ய முடியா தென்று திகைத்து நிற்கிறோமோ, அதையே மூன்று பேர் செய்தே முடித்து விடுகிறார் கள். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி யைப் பார்க்க முடிவது இல்லை. எங்கிருந்து அதைக் கணிப்பது, பின் அதை எப்படிக் கையாள்வது?


ஒரு பக்கம் ஒரு பெரிய அறையை பூதம் போல அடைத்துக் கொண்டு இருந்த கணினியை, உள்ளங் கைக்குள் கைக் கணினியாக சுருக்கியது தொழில் நுட்பம் என்றால், இன்னொரு பக்கம், சிறிய டிவிகளை, திரையரங்கு அளவுக்கு பெரிதாக மாற்றியதும், தொழில் நுட்பமே.


வாங்க விரும்பும் பொருள எந்த இடத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தேடி, ஸ்மார்ட் ஃபோனில் ஆர்டர் செய்து விட முடிகிறது. அதே பொருளின் தரம் சரியில்லை எனில், ஃபேஸ்புக், டிவிட்டர், வலைப்பூ போன்ற சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு, காட்டிக் கொடுக் கவும் முடிகிறது.


இன்று சமூக வலைத் தளங்களில் ஒவ்வொரு மனிதனும் ஓர் ஊடகமே. தனிநபர்களை பகைத்துக் கொண்டால், நிறுவனங்களின் வண்ட வாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடும்.

உலக மயமாக்கம்


இத்தனை மாற்றங்களுக்கும் முக்கிய காரணமாக இருப்பது உலக மயமாக்கம் (குளோபலைசேஷன்). இந்த தத்துவம்தான் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கும் உலக நாடுகளை ஒரே ஊராக மாற்றி விட்டது. இந்த உலக மயமாக்கத்தை நாம் யாரும் தடுத்து நிறுத்த முடியாது. உலக மயமாக் கத்திற்கு ஏற்ப இன்று நிறுவனங்களும் மாறி வருகின்றன.


மூலப் பொருட்களை விலைகுறைந்த நாடுகளில் வாங்கி, குறைந்த வேலைக்கூலி நாடுகளில் உற்பத்தி செய்து, குறைந்த விலையில் விற்க முடிகிறது. எந்த நாட்டில் உற்பத்திச் செலவு குறைவோ, அந்த நாட்டுக்கு பொருள் உற்பத்தியை எளிதாக மாற்ற முடிகிறது. இன்று விற்பவர்களுக்கும், வாங்கு பவர்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்து வருகிறது. வாடிக்கையாளர் களுக்குத் தேவையான பொருள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஆர்டர் செய்து வாங்க முடிகிறது.

உலகம் விரிகிறது, போட்டி பெருகுகிறது


உற்பத்தியாளர்களின் பிராண்டுகள் உலகம் முழுவதும் விரிவடையும் அதே நேரத்தில், உலகில் உள்ள அனைத்து நிறுவ னங்களின் பிராண்டுகளும் போட்டிக்கு வந்து விடுகின்றன. ஒருபுறம் சந்தை விரிகிறது; இன்னொரு புறம் போட்டி பெருகுகிறது.


அடுத்த தெரு கடை, பக்கத்து ஊர் நிறுவனம் என்று கண்காணும் இடத்தில் இருந்த போட்டியாளர்கள், இன்று உலக வரைபடத்தில் புலப்படாத இடத்தில் இருந்தும் போட்டியாளர்கள் நம்முடன் சண்டைக்கு (சந்தைக்கு) வந்து நிற்கிறார்கள். கண் இமைக்கும் நேரத்தில், நம் வாடிக்கை யாளர்களை இழுத்துச் சென்று விடலாம்.


மாறிவரும் சந்தையில், உலகம் தழுவி பெருகி வரும் போட்டியில், பெருகிவரும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளின் நடுவில், நமக்கு புதிய சிந்தனைகள் தேவைப் படுகிறது. நம் தொழிலுக்குத் தேவை புதிய நிர்வாக முறைகள், புதிய சிந்தனைகள், புதிய நுட்பங்கள், புதிய வியூகங்கள். அடிப்படை மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்; புதிய வழிகளில் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் நம் வர்த்தகம் வளரும், தொழில் பெருகும்.

-சிவமுருகன், உப்பத்தூர்

விற்பனையும், மார்க்கெட்டிங்கும் ஒன்றா? வேறுவேறா?

0

நம்மில் பலரும், பொதுவாக மார்க்கெட்டிங் என்பதையும், விற்பனையையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள் வோம். ஆனால் உண்மையில் மார்க் கெட்டிங் எனப்படும் சந்தை வேறு, விற்பனை வேறு.


சந்தை என்பது பல படிகள் கொண்ட ஒரு செயல்முறை. நமது வாடிக்கையாளர் யார் என்று கண்டறிந்து, அவர் எதிர்பார்ப் பைப் புரிந்து, அவர் தேவையை போட்டி யாளர்களை விடச் சிறந்த முறையில் நிறைவு செய்து, அவரை ‘மகிழ்ச்சி’ என்று சொல்ல வைக்கும் நிலை.


மனிதனின் அடிப்படைத் தேவைகளை யும், அடிமனதில் அவனது விருப்பங்களை யும், அவனே உணராத ஆசைகளையும், அவனது உந்து ஆற்றல்களையும் உணர வைக்கும் இயலே சந்தையியல். ‘தெரிந்ததைச் செய்வோம், செய்ததை விற்போம்’ என்பது அந்தக் காலத்தில் சரியாய் இருக்கலாம். இந்தக் காலத்திற்குப் பொருந்தாது. ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.

நாம் பொருளை விற்கவில்லை
பயன்பாட்டை விற்கிறோம்


நாம் விற்பது ஒரு பொருளாக இருக் கலாம். ஆனால் வாடிக்கையாளர் வாங்கு வது பொருள் அல்ல, அவர் வாங்குவது ஒரு பயன்மதிப்பு அல்லது வேல்யூ. நாம் ஒரு பல்பு விற்பதாக நினைக்கிறோம். அல்லது நாம் நாம் விசிறி என்று நினைத்து விற்கிறோம். வாடிக்கையாளர் அதனைக் காற்று வீசும் பொருள் என்று, அதன் பயன்மதிப்பை (வேல்யூவை) மதிப்பீடு செய்கிறார்.


மேலும் நாம் ஏசி கருவியை விற்கவில்லை. வாடிக்கையாளர் கண்ணோட்டத்தில், குளிரை விற்பனை செய்கிறோம். நிறுவனத் தின் கண்ணோட்டத்தில் கார். வாடிக்கை யாளரைப் பொறுத்தவரை வசதியாக ஓரிடத் தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அலுங்காமல், குலுங்காமல் பயணம் செய்ய வைக்கும் கருவி.

விற்பனைக்கு இரண்டு படிகள்


வாடிக்கையாளர் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்து உற்பத்தி செய்ய வேண்டும்.. விற்பனைக்கு இரண்டே படிகள். ஒன்று, பொருளை உற்பத்தி செய்வது; இரண்டு, செய்த பொருளை விற்பது. மார்க்கெட் டிங்கையும் இதுபோல நினைப்பது தவறா கவே முடியும். ‘பொருளை உற்பத்தி செய், பின்பு விற்பனை செய்’ என்று நினைக்கும் உற்பத்தியாளர்கள் சிலர், தங்கள் பொருள் வாடிக்கையாளர்களுக்கு முழுவதும் பயன் படுமா, அவர்களின் தேவையை முழுவதும் நிறைவு செய்யுமா என்று சிந்திக்க மறுப்ப தால், சறுக்கல்களைச் சந்திக்கிறார்கள். ஆகவே, மார்க்கெட்டிங்குக்கு மூன்று படிகள் இருப்பதை நாம் உணர முடியும்.

சந்தைக்கு மூன்று படிகள்


முதல் படி : பயன்மதிப்பைத் தேர்ந்தெடுப் பது நம் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்மதிப்பை (வேல்யூ) வழங்குவது என்பதைக் கண்டறிய வேண்டும். எந்த பயன்மதிப்பு வாடிக்கையாளருக்கு முழுவ தும் பயன்படும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இரண்டாம் படி : பயன்மதிப்பை வடிவ மைப்பது – என்ன பயன்மதிப்பு என்று முடிவு செய்த பின்பு, தேர்ந்தெடுத்த பயன் மதிப்பை ஒரு பொருளாய் வடிவமைப்பது. நம் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நம் பொருளுக்கு வடிவம் கொடுக்க வேண்டும்.

மூன்றாம் படி : பயன்மதிப்பை வழங்குவது – வாடிக்கையாளருக்குத் தேவைப்படும் பொருளை, அவருக்குத் தேவைப்படும் வடி வத்தில், வாடிக்கையாளர் கைக்கு கொண்டு சேர்க்கும் படி இது. இந்த மூன்று படிகளுக்கும் தொடர்புள்ள இன்னொன்று சந்தைக் கலவை என்கிற ‘மார்க்கெட்டிங் மிக்சிங்’.

சந்தைக் கலவை


மேற்கண்ட மூன்று படிகளின் நான்கு அம்சங்கள் – பொருள், விலை, வழங்குதல், விற்பனை மேம்பாடு ஆகிய. இவைதான் நம் வெற்றியை உறுதி செய்பவை. இந்த நான்கு அம்சங்களையும் ஆங்கிலத்தில் பிராடக்ட், பிரைஸ், பிளேஸ், பிரமோஷன் – என நான்கு எழுத்துகளின் முதல் எழுத்தை வைத்து, 4பி என்பார்கள். இந்த நான்கு அம்சங்களின் கலவைதான் சந்தைக் கலவை.

விளம்பரம் செலவா, வரவா?


பல உற்பத்தியாளர்களும் விளம்பரம் என்பது வீண் செலவு என நினைப்பார்கள். ஆனால், விளம்பரம் என்பது செலவு அல்ல; முதலீடு. விளம்பரத்திற்கு நாம் செலவிடும் பணம் ஆயுள் காப்பீடு. இதுதான் நம் தொழிலை விழாமல் தூக்கி நிறுத்துகிறது. விளம்பரம் செய்வதை நாம் நிறுத்தி விட்டால், விற்பனைச் சந்தை சறுக்கி விடும்.

சந்தைக் கண்ணோட்டம் வேண்டும்


பீட்டர் ட்ரக்கர் என்கிற மேலாண்மை வல்லுநர், “சந்தை (மார்க்கெட்டிங்) மட் டுமே வர்த்தகத்தில் வருமானம் ஈட்டித் தரும் துறை; வர்த்தகத்தில் மற்ற துறைகள் எல்லாமே செலவுகள்” என்கிறார். சந்தை என்ற கண்ணாடி மூலம், நிறுவனத் தின் எல்லா செயல் திட்டங்களையும் நடை முறைப்படுத்துவது பயன் தரும்.

கடந்த 15 – 20 ஆண்டுகளில், தொழிலை அணுக வேண்டிய புதிய அணுகுமுறைகள், வர்த்தகத்தை நடத்த துணை செய்யும் புதிய சிந்தனைகள், வியூகங்களைச் சரியாக பயன் படுத்த புதிய நுட்பங்கள் என மேலாண்மை அடையாளம் தெரியாத வகையில் மாறி உள்ளது. இன்றும் மாறிக் கொண்டு இருக்கிறது.

என்ன செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்?


தொழில்களுக்குத் தேவை, ‘எப்படி செய்வது’ என்பதற்கான கருவிகள் மட்டு மல்ல, என்ன செய்வது என்பதற்கான வழிமுறைகளும் கூடத்தான். அதாவது ‘என்ன செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்?’ – இதுவே வர்த்தக உலகின் முதன்மை சவால்.


எதையாவது கண்டுபிடித்து எப்படி யாவது உருவாக்குவோம் என்ற ‘ஆய்வு – மேம்பாட்டுத் துறை’ இன்று, வாடிக் கையாளர் தேவைகளை, அவர்கள் உணரும் முன்பே, நிறைவு செய்யும் ‘கண்டறி – ஆய்வுசெய் – மேம்படுத்து’ துறையாக மாறி விட்டது.


மூலப் பொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்குவது மட்டுமே தன் வேலை என்று இருந்த ‘பர்சேசிங் துறை’ இன்று தரக் கட்டுப்பாடு கோட்பாடு களுடன் வாங்க வேண்டிய ‘ப்ரொக்யூர் மென்ட் துறை’யாக மேம்பாடு கண்டுள்ளது.

-வேல் முருகன், வேப்பம்பட்டு, சென்னை

DIR3KYC எனும் படிவம் !

0

எம்சிஏ என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய அரசின் கம்பெனிகளின் விவகாரத்துறை அமைச்சகமானது (Ministry of Corporate Affairs) ‘கம்பெனிகளின் இயக்குநர்களின் நியமனமும் தகுதியும் நான்காவது திருத்தம் விதிகள் 2018’ எனும் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது


இதன்படி எம்சிஏ இணைய பக்கத்தில் பதிவு செய்து DIN எனும் இயக்குநரின் பதிவு எண் பெற்ற ஒவ்வொரு இயக்குநரும் DIR3KYC எனும் படிவத்தை எம்சிஏ இணைய பக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 31 இற்குள் வழங்க வேண்டும்.
அதற்கு பிறகு எனில் அபாரதத்துடன் இந்த படிவத்தை வழங்க வேண்டி இருக்கலாம். சில நேரங்களில் கெடு தேதி நீட்டிக்கபடக் கூடும். இவ்வாறு சமர்ப்பிக்க வில்லையெனில் இவருக்கு ஒதுக்கப்பட்ட
DIN எண் செயல்படாமல் நிறுத்தம் செய்யப்பட்டு விடும்.


அதனைத் தொடர்ந்து அந்த இயக்குநர் வேறு எந்தவொரு கம்பெனியிலும் இயக்குநராக செயல்பட முடியாது. எம்சிஏ இணைய பக்கத்தில் பல்வேறு படிவங்களை பதிவேற்றம் செய்திடும் போது செயல்படாத இயக்குநரின் DSC எனும் டிஜிட்டல் கையொப்பத்தினை பயன்படுத்த முடியாது.

குப்பன்

கூகுளில் முதல் பக்கத்தில் இணைய தளத்தை வரவைக்கும் தொழில் நுட்பம்

0

தொழில் செய்யும் பெரும்பாலானோர் தங்கள் தொழில் பற்றிய தகவல்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ள, வலைத்தளம் ஒன்று உருவாக்கி இருப்பார்கள். அதில் தொழில் பற்றிய செய்திகள், படங்கள், விலைப் பட்டியல், முகவரி என்று நிறைய தகவல்கள் இருக்கும். ஒருவர் வலைதள முகவரியை நேரிடையாக கொடுத்து வலைத்தளத்தை பார்க்கலாம்.


இன்னும் சிலர் வலைதள முகவரி தெரியாமால் பொருட்கள் பெயர் கொண்டு கூகுளில் தேடுவார்கள். அப்பொழுது அந்த பொருட்களை விற்பனை செய்யும் பல வலைத்தளம் கூகுள் முதல் பக்கத்தில் வரும் அதில் நம் வலைத்தளம் வரலாம் அல்லது வராமலும் போகலாம் அதற்கு சில காரணங்கள் உண்டு.


நம் தொழில் வலைத்தளம் கூகுள் முதல் பக்கத்தில் வரவில்லை என்றால் நம் போட்டி நிறுவன வலைத்தளத்திற்கு அந்த வாடிக்கையாளர்கள் சென்று விட வாய்ப்பு உண்டு. கூகுள் முதல் பக்கத்திற்கு நம் வலைத்தளம் வரவேண்டும் என்றால் அதனை சரியான சொற்கள் கொண்டு உருவாக்க வேண்டும். இவற்றை எஸ்இஓ ((SEO) Search Engine Optimization) என்று அழைப்பார்கள். இதில் On page SEO மற்றும் Off Page SEO என்று இரண்டு வகை உண்டு. அதற்கு முன்பு கூகுள் எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம்.


கூகுள் தனக்கென்று ஒரு அல்காரிதம் (Algorithm) முறையை வைத்துக் கொண்டு தன்னிடம் தேடும் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை வழங்குகிறது. கூகுளின் இந்த அல்காரிதம் முறை யாருக்கும் தெரியாது. அப்படி மக்களுக்கு தெரியவந்தால் உடனே அல்காரிதம் முறையை மாற்றி விடும். ஒவ்வொன்றுக்கும் ஹம்மிங் பறவை பாண்டா, என்று பெயர் வைக்கப்படுகிறது.


கூகுள் ஆண்ட்ராய்டுக்கு லாலிபாப், கிட்காட் போன்ற பெயர் போல் அல்காரிதமுக்கு பெயர் வைக்கப் படுகிறது. கூகுள் எப்படி தகவல்களை எடுக்கிறது என்று சில வழிமுறைகளை வைத்து இன்று பரவலாக பின்பற்றப்படுகிறது. அவற்றை கொண்டே எஸ்இஓ செய்யப்படுகிறது.


நம் வலைத்தளத்திற்கு நிறைய வாடிக்கையாளர்கள் வரவேண்டும் என்றால் நம் வலைத்தளம் கூகுள் தேடுபொறியில் முதல் பக்கத்தில் வரவேண்டும். பொருள், சேவை, படிப்பு, மருத்துவம் என்று எது தொடர்பாக கூகுளில் தேடினாலும் நிறைய வலைத்தளம் நம் முன்பு காண்பிக்கும். அதில் முதல் நான்கு வலைத்தளம் கூகுள் வழியாக விளம்பரம் செய்தவர்களின் வலைத்தளம் ஆகும்.


இதன் தொடக்கத்தில் ஏடி (AD) என்று இருப்பதை பார்க்கலாம். அதற்கு அடுத்து வரும் வலைத்தளங்கள் ஆர்கானிக் வழியாக காண்பிக்கக் கூடியவை. ஆர்கானிக் வழி என்பது பணம் செலவழிக்காமல் நம் வலைத்தளத்தை காண்பிக்க வைப்பது ஆகும். (காண்க படம்-1)


அனைவராலும் பணம் செலுத்தி விளம்பரம் செய்வது கடினம். ஆனால் அவர்கள் ஆர்கானிக் (Organic Search) வழியாக தங்கள் வலைத்தளத்தை கூகுள் முதல் பக்கத்தில் வரவைக்க முடியும். இதற்கு எஸ்இஓ செய்ய வேண்டும். அவை கடினமான செயல் இல்லை சிறிது கவனித்து தெரிந்து கொண்டால் தொழில் செய்யும் அனைவரும் டிஜிட்டல் மார்கெட்டிங்க் வழியாக சந்தைப்படுத்தலாம். எஸ்இஓவில் இரண்டு வகை உண்டு என்று மேலே பார்த்தோம் அதில் ஆன் பேஜ் எஸ்இஓ பற்றி முதலில் பார்ப்போம்.


ஆன் பேஜ் எஸ்இஓ


ஒரு வலைத்தளத்தை பார்க்கும் பொழுது Ctrl+U என்று அழுத்தினால், புதிய விண்டோ ஒன்று திறக்கும் அதில் நிறைய எழுத்துக்கள், சொற்கள் இருப்பதை பார்க்கலாம். அவை எச்டிஎம்எல் என்ற வலைதள மொழியாகும். அனைவரும் இந்த மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. ஆனால் ஒரு சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டு அதன்படி செய்தால் நம் வலைத்தளமும் கூகுள் முதல் பக்கத்தில் வரவைக்கலாம். சான்றாக நாம் தொழில் செய்வதற்கு ஒரு கடை/ஷோரூம் வைத்து இருப்போம். அங்கு வாடிக்கையார்கள் வந்து பார்க்கும் பொழுது அவர்களை ஈர்க்கும் வகையில் பொருட்களை அடிக்கி வைத்து இருப்போம். அதில் சிலவற்றை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். அந்த பொருட்களை பார்வைக்கு வைக்காமல் எங்கேயோ மூட்டை கட்டி வைத்த இருந்தால் விற்பனை செய்வது கடினமாகவும். இதே முறையை நம் வலைத்தளத்திற்கும் பின்பற்ற வேண்டும்.


இங்கு வலைத்தளம் என்பது கடையாகும். கடையில் பொருட்களை வாடிக்கையாளர் ஈர்க்கும் வகையில் அடிக்கி வைத்து இருப்பது போல், வலைத்தளத்தை கூகுள் தேடுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்க வேண்டும். ஒருவர் கூகுளில் பொருட்கள் பெயர் கொடுத்து தேடும் பொழுது கூகுள் நம் வலைதள எச்டிஎம்எல் மொழியில் தேடிப் பார்க்கும் அங்கு காணப்படவில்லை என்றால் வேறு எந்த வலைத்தளத்தில் இருக்கிறதோ அவற்றை தேடி வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கும்.


எஸ்இஓ மெட்டா டேக் (எச்டிஎம்எல் மொழி)


எஸ்இஓஎம்-இல் மெட்டா டேக் (meta tag) என்பது முக்கிய இடத்தை வகிக்கிறது இவற்றை கொண்டே நாம் எஸ்இஓ செய்யப் போகிறோம். மெட்டா டேக் என்பது எச்டிஎம்எல் மொழியாகும். இதில் Title, Keyword, Description இந்த மூன்றையும் நிச்சயம் நம் வலைத்தளத்தில் கொடுக்க வேண்டும். இது போல் நிறைய மெட்டா டேக் உண்டு அதில் எஸ்இஓ-க்கு ஏற்ற சில டேக் கொடுத்து வலைத்தளத்தை அமைக்க வேண்டும். இவற்றை உங்கள் வலைதள வடிவமைப்பவர்களிடம் தெரிவித்தால் செய்து கொடுப்பார்கள். அல்லது சிறிது முயற்சியில் நீங்களே செய்யலாம்.


கீவேர்ட் என்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் என்ன சொல் கொடுத்து கூகுளில் தேடுகிறார் என்பது நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் நம் தொழிலுக்கு என்ன விதமாக தேடுவார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து அதற்கே ஏற்றார் போல் கீவேர்ட் அமைக்க வேண்டும்.


“H1” to “H6” tag, “alt” tag, robots போன்ற சில டேக் தெரிந்து கொண்டு எஸ்இஓ அமைக்கலாம். மேலே குறிப்பிட்ட அனைத்தையும் பற்றி அடுத்து பகுதியில் பார்க்கலாம்.


ஆஃப் பேஜ் எஸ்இஓ


ஆஃப் பேஜ் எஸ்இஓ (on Page SEO) செய்யும் பொழுது நம் வலைத்தளத்திற்குள் செய்ய வேண்டும். ஆனால் ஆஃப் பேஜ் எஸ்இஓ என்பது நம் வலைத்தளத்தை தொடாமல் வெளியே செல்வதாகும். நம் வலைத்தளத்தை பற்றி பரவலாக பல இடங்களில் தெரியப்படுத்த வேண்டும். சான்றாக நம் கடையை பற்றி தெரிந்தவர்களிடம் சொல்லுவோம், சிறு கூட்டங்களில் நம் பொருட்களை தொடர்பாக பேசுவது, டெலிபோன் டைரக்டரியில் நம் தொழில் முகவரியை பதிவு செய்வது போல் நம் தொழில் வலைத்தளத்தை பரவலாக இணையத்தில் பதிவு செய்தால் அதை பார்க்கும் வாடிக்கையாளர்கள் நம் வலைத்தளத்திற்கு வர வாய்ப்பு உண்டு. இவைதான் ஆஃப் பேஜ் எஸ்இஓ ஆகும்.


என்னவெல்லாம் செய்யலாம்


நம் தொழிலை, பொருட்களை, சேவையை பற்றி வீடியோ எடுத்து யூடியூபில் (Youtube) வலைதள முகவரியுடன் பதிவேற்றலாம். பொருட்கள் பற்றிய படங்களை இன்ஸ்டாகிராம் (Instagram), பிண்ட்ரெஸ்ட் (Pintrest) போன்றவற்றில் தெரிவிக்கலாம். தொழில் தொடர்ப்பான கட்டுரைகளை டாக்குமென்ட பகிர்தல் www.issuu.com வழியாக வெளிப்படுத்தலாம். நம் தொழில் செய்லபாடுகளை பவர் பாயின்ட் www.slideshare.net வழியாக தெரிவிப்பது, தொழிலுக்கு என்று ஒரு www.blogger.com உருவாக்கி தொடர்ந்து, அதில் தொழிலை பற்றிய கட்டுரைகளை வெளியிடுவது,


எல்லோ பேஜஸ் (yellow pages) போல் நம் தொழில் தொடர்பான செய்திகளை www.flegoo.com போன்றவற்றில் வெளியிடுவது, இணையத்தில் கேள்வி பதிலுக்கு என்று நிறைய வலைத்தளங்கள் உண்டு அதில் நிறைய பேர் பல விதமான கேள்விகள் கேட்டு அதற்கு பதில்கள் பெறுவார்கள். அதனால் நம் தொழில் தகவல்களை www.quora.com என்ற வலைத்தளத்தில் தெரிவிக்கலாம்.


இவை அனைத்தும் நம் வலைத்தளத்தை தொடாமல் மற்ற இடங்களில் நம் தொழில், வலைத்தளம் பற்றி தெரிவிப்பது ஆகும். மேலே குறிப்பிட்ட அனைத்திலும் முடிந்தால் தினமும், அல்லது வாரம் இரண்டு முறையாவது செய்து வரவேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும் பொழுது நம் தொழில் பற்றிய தகவல்கள் இணையத்தில் பரவலாக காணப்படும்.


ஒரு வாடிக்கையாளர் கூகுளில் தேடும் பொழுது நம் வலைத்தளம் உடைய இந்த ஏதாவது ஒரு வலைத்தளம் அவர்கள் பார்வைக்கு வரும். அதன் வழியாக நம் வலைத்தளத்திற்கு வருவார்கள். இவையே ஆஃப் பேஜ் எஸ்இஓ ஆகும்.
ஆன் பேஜ் ஒரு முறை செய்தாலும் போதும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம். ஆனால் ஆஃப் பேஜ் தொடர்ந்து செய்து வரவேண்டும்.

செழியன்.ஜா

வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழில்கள்

0

ஆன்லைன் டுட்டோரியல்: இணையத்தைப் பயன்படுத்தி டுட்டோரியல் எனப்படும் தனிப் பயிற்சி வழங்கும் பணியில் பலர் ஈடுபட்டு உள்ளார்கள். இவர்கள் வழங்கும் பயிற்சியைப் பெற கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு யாருக்காவது குறிப்பிட்ட துறைகளில் பயிற்சி வழங்கும் ஆற்றல் இருந்ததால் முயற்சித்துப் பார்க்கலாம். புதிய தொழில்நுட்பங்களை, இசை, நாட்டியம், ஓவியம், சமையல் போன்றவற்றை கற்க விரும்புகிறவர்களுக்கு கட்டணம் வாங்கிக் கொண்டு ஆன்லைனில் கற்றுத் தரலாம்.
அனிமேஷன்: அனிமேஷன் கற்று வைத்து இருப்பவர்கள், விளம்பரங்களை, காமிக்ஸ் கதைகளை உருவாக்குபவர்களுக்குத் தேவையான அனிமேஷன்களை உருவாக்கித் தரலாம். வீடியோ கதைகள், அறிவியல் விளக்கப் படங்களுக்கும் அனிமேஷன் தேவைப்படுகிறது. இதற்கு அனிமேஷன் தொடர்பான மென்பொருள்களை சிறப்பாக பயன்படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும். அதிக ஆற்றல் உள்ள கணினி ஒன்றும் தேவைப்படும்.

விளம்பரங்கள் உருவாக்கித் தருதல்: வாடிக்கையாளர்களைக் கவரும் அளவுக்கு விளம்பரங்களை உருவாக்க நல்ல கற்பனை மற்றும் படைப்பாற்றல் தேவை. இத்தகைய திறமைகள் உள்ளவர்கள் விளம்பரங்கள் உருவாக்கித் தரும் தொழிலைச் செய்யலாம். உள்ளூர் தொலைக் காட்சிகள் முதல் பெரிய தொலைக் காட்சிகளுக்கு வரை விளம்பரங்களைத் தர விரும்புகிறவர்கள்தான் உங்கள் வாடிக்கையாளர்கள்.
விளம்பர ஏஜென்சி: பெரும்பாலும் இதழ்களுக்கும், காட்சி ஊடகங்களுக்கும் விளம்பர முகவராக செயல்படும் ஒரு வாய்ப்பும் உள்ளது. இவர்களுக்கு இதழ் நிறுவனங்களும், தொலைக் காட்சி நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவு வர்த்தகக் கழிவு வழங்குவார்கள். நல்ல மார்க்கெட்டிங் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே ஏற்ற தொழில்.

விழாக்களுக்கான ஃபோட்டோ மற்றும் வீடியோகிராஃபர்: இன்றைக்கு திருமண விழாக்கள் முதல் அனைத்து விழாக்களையும் ஒளிப்படம் மற்றும் வீடியோ எடுப்பது என்பது இன்றியமையாத ஓன்றாக ஆகிவிட்டது. அதுவும் திருமண வீடியோக்களில் நிறைய மாற்றங்கள் வந்து உள்ளன. திருமணத்துக்கு முன்னரே கூட மணமக்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று, போஸ் கொடுக்க வைத்து படம் எடுக்கப் படுகிறது. ஒளிப்பட ஆல்பங்களிலும் நிறைய புதுமைகள் வந்து உள்ளன. இந்த தொழிலைச் செய்ய ஃபோட்டோகிராஃபி மற்றும் வீடியோகிராஃபி தெரிந்து இருக்க வேண்டும். அல்லது கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ஸ்டில் கேமரா, வீடியோ கேமரா தேவைப்படும். சென்னை போன்ற சில நகரங்களில் இவற்றை வாடகைக்குப் பெறும் வாய்ப்பும் உள்ளது.

எழுத்துப் பணி: நல்ல மொழி வளமும், பொது அறிவும் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்ப்பதற்கு ஏற்ற தொழில். இதழ்களுக்குத் தேவையான கட்டுரைகள், பேட்டிகள் எழுதித் தரலாம். வெளித் திறன் பெறுதல் என்ற அடிப்படையில் நிறுவனங்கள் இத்தகைய எழுத்துகளை ஏற்கின்றன. வெளியிடப்படும் படைப்புகளுக்கு மதிப்பூதியம் என்ற பெயரில் ஊதியம் வழங்குவார்கள். மொழி பெயர்க்கத் தெரிந்தவர்கள் மொழி பெயர்த்துத் தரும் பணிகளையும் ஏற்றுச் செய்யலாம்.

– முனைவர் ச. குப்பன்

‘ஐஸ்’ வைக்கத் தெரிந்தவர்கள் விற்பனையில் சாதிக்கிறார்கள்

0

இன்றைய உலகில் சில புகழ்பெற்ற குறியீடு (Brand) கொண்ட பொருள்களுக்குக் கூடச் சந்தைப்படுத்துதல் தேவைப்படுகிறது. பொது மக்களுக்கு நன்கு அறிமுகமான பொருள்களுக்கே புகழ்பெற்ற மனிதர்களை வைத்து விளம்பரம் செய்கிறார்கள்.


ஆனால் மருந்துகள், வீட்டுக் கருவிகள் போன்றவற்றை விற்பதற்குப் பிரதிநிதிகள் தான் முக்கியம். இப்போது புறநகர்களில் கூட நிறைய அடுக்கு வீடுகள் (Flats) எழும்பி வருகின்றன. உள் அலங்காரம், சமையலறை க்குத் தேவையான மாடூலர் வகை மின்தூக்கிகள் அனைத்துக்குமே விளம்பரப் படுத்துதல் இன்றியமையாதது.


அடுத்த தெருவில் வசிக்கும் நண்பர், தாங்கள் புதிதாகக் கட்டுகிற இரண்டு மாடித் தளத்துக்கு கூட்டிச் சென்றார். நாங்கள் போன போது, விற்பனைப் பிரதிநிதியுடன் கட்டடப் பொறியாளரும், ஒப்பந்ததாரரும் இருந்தார்கள். ‘‘இவர்தான் சார் வீட்டு உரிமையாளர், இவரிடம் சொல்லுங்கள்’’ என்று நண்பரைப் பொறியாளர் சுட்டிக் காட்டினார்.


அவ்வளவுதான்; பிரதிநிதி மடமடவென்று பாடம் ஒப்பிக்கும் மாணவன் போல், குறிப்பிட்ட மின்தூக்கியின் பிளஸ் பாயின்ட்களை சொல்லலானார். இந்த வகை மின்தூக்கி, மின்சாரம் தடைப்பட்டாலும், தானாகவே இயங்கத் தொடங்குமாம்; ஜெனரேட்டர் தேவைப்படாதாம். நண்பரின் கேள்விகளுக்கு எல்லாம் உடனுக்குடன் பதில் சொன்னார்; மின்னஞ்சலைக் கொடுத்து பிற விவரங்களைப் பார்க்கும் படியும் கூறினார்.


‘‘எஸ்டிமேட் கூடுதல்தான், ஆனா, மனைவியிடம் கேட்கணும்’’ என்று நண்பர் சொன்னாரே தவிர முகத்தில் நிறைவு தெரிந்தது.


ஆக, விற்பனையில் முதல் அம்சம் புலப்பட்டு விட்டதல்லவா? அணுகுமுறையில் (Approach) பொறுமை மிகத் தேவை. அணுகுமுறைத் திறனை ஓரளவு வளர்த்துக் கொள்ள இந்த நாளில் ஊடகங்களும், பத்திரிகைகளும் உதவுகின்றன. புரியவில்லையா? எந்தத் துறையில் ஒருவர் சற்றுப் புகழ்பெற்றவராக இருந்தாலும், அவரைப் பற்றிக் கால் பக்கத்துக்கு, படத்துடன் செய்திகள் வெளிவருகின்றன. குறிப்பாகக் கட்டுமானத் தொழிலிலும், மருத்துவத் துறையிலும்.


அவரை நினைவு வைத்துக் கொண்டு விற்பனைப் பிரதிநிதி, ‘‘உங்கள் பேட்டி படித்தேன் சார்’’ என்று சொன்னால் போதும், மனிதர் மகிழ்ந்து போய் விடுவார். மருத்துவத்தில், நீரிழிவு, வயிற்றுக் கோளாறு இவை பற்றி சில மருத்துவர்களின் கட்டுரைகள், பேட்டிகள் பல ஏடுகளின் இணைப்புப் பகுதியில் வருகின்றன. ஒருவேளை நீங்கள் நேரடியாகப் படிக்கா விட்டாலும், வேறு யார் மூலமாகவோ தெரிந்து கொண்டாலும் பரவாயில்லை. நீங்களே பார்த்ததாகச் சொல்லுங்கள். இயல்பாக இந்த நினைவாற்றல் உறுதியாக விற்பனை பிரதிநிதியின் அணுகுமுறையை மேலும் வலுப்படுத்தும். புகழ்ச்சிக்கு மயங்காத மிகச் சிலரிடம் மட்டுமே இந்த அணுகுமுறைக்கு பயன் இருக்காது. அடுத்துத் தேவைப்படுவது முழுமையான பகுத்தறிவு. குறிப்பாக மருத்துவத்துக்குத் தேவை. ஏனெனில் அலோபதி மருந்துகளுக்கு பக்க விளைவுகள் உண்டு. டாக்டர் இதைப் பற்றி எப்படி விசாரித்தாலும், நன்கு புரிந்து கொண்டு விளக்கும் திறமை தேவை. அவ்வப்போது நாளேடுகளில் வெளிவரும் கருத்துக்களை மேற்கோளிட்டுக் கூறலாம்.


‘‘அமெரிக்க ஆய்வு இந்த …. வேதிப் பொருள் ஒன்றும் தீங்கு செய்யாது என்று சொல்கிறது’’ என்று குறிப்பிடலாம். டாக்டருக்கோ, வல்லுநருக்கோ இது தெரியாமல் இருக்குமா? இருந்தாலும் நீங்களும் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள் என்பதுதான் பிளஸ் பாயின்ட்.


மூன்றாவது — விற்பனைக்குப் பின் சேவை. தொடக்கத்தில் சொன்ன நிகழ்வில், மின்தூக்கி பொருத்திய பின்; அதன் பயன்பாடு எப்படி என்று கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவு இலவச சேவையைச் சலிக்காமல் தொடர வேண்டும். நிறைய நிறுவனங்களும், தனியார் வங்கிகளும் இந்த – ‘‘விற்பனைக்குப் பின் சேவையை’’ முறையாகச் செய்வது கிடையாது. ஆக, விற்பனையில் முன்னணியில் நிற்க, மூன்று அம்சங்கள் – அதாவது A, K, A – (Approach, Knowledge, After Sales Service) முக்கியம் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். இதில் இரண்டாவதைத் தான் – அதாவது முழுமையான அறிவு – முதலில் பெற வேண்டும். மற்ற இரண்டையும் அனுபவத்தில் வளர்த்துக் கொள்ளலாம்

-வாதூலன்

இந்த மாதம் முதல் புதிய நடைமுறைகள்

0

 

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31’வது கூட்டம் 22-12-2018 அன்று நடைபெற்ற போது 01-02-2019 முதல் ஜிஎஸ்டி சட்டத்தில் நடைமுறைப்படுத்த உள்ள கீழ்க்காணும் திருத்தங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப் பட்டது. விரிவாகப் பார்க்கலாம்.

செங்குத்து வணிகம் (Business Vertical) பிரிவு 2(18)

ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய்துகொண்ட வணிகம் தவிர, வேறு மாறுபட்ட வணிகம் ஏதேனும் செய்தால் அதைத் தனியாக பதிவு செய்யும் முறை இதுவரை இருந்து வருகிறது. இதற்கு செங்குத்து வணிகம் என்று பெயர். இந்த பிரிவு நீக்கப்பட்டு, இதற்குப் பதிலாக ஒரு மாநிலத்தில் பல இடங்களில் வணிகம் புரியும் நபர், ஒவ்வோர் இடத்திற்கும் தனித் தனியாக பதிவுசெய்து கொள்ளும் வசதி (Multiple Registration) அறிக்கை எண்: 3/2019-சிஜி/29-01-2019 படி அனுமதிக்கப்பட்டு உள்ளது.

(எ.க.) ஒரு வணிகர் ஒரு இடத்தில் கணினி வணிகமும், வேறு ஒரு இடத்தில் தளவாடப் பொருள்களும் வணிகம் புரிந்து வந்தால் அந்தப் பதிவை அப்படியே தொடரலாம்.
இதே வணிகர் ஒரே இடத்தில் கணினி, தளவாடப் பொருள்கள் வணிகம் புரிந்தால் முன்பு செங்குத்து வணிகர் என்ற முறையில் தனித்தனிப் பதிவைப் பெற்று இருப்பார்.
இந்த புது விதிமுறைப்படி ஒரு இடத் திற்கு ஒரு பதிவு என்பதால் இரண்டு பதிவில் ஏதாவது ஒன்றை நீக்க வேண்டும்.

இ-காமர்ஸ் ஆப்பரேட்டர்கள்

பிரிவு 24 படி டிசிஎஸ் (TCS) சேகரிக்கும் மிண்னணு வர்த்தகர்கள் (இ-காமர்ஸ்) கட் டாயமாக ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய் துள்ளவராக இருக்க வேண்டும்.
பதிவு செய்வதற்கான உச்ச வரம்பான ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வருமானம் உடை யவர்கள் என்ற விதி இவர்களுக்குப் பொருந் தாது. சொந்தமாக வலைதளத்தின் மூலம் பொருள்கள் அல்லது சேவைகளில் ஈடுபடு பவர்கள் ஆண்டு வருவாயைப் பொருட் படுத்தாமல் கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த சட்டத் திருத் தத்தால் பிரிவு 52 படி சேகரிக்க தேவையற்ற வர்கள் பதிவு செய்வதற்கான நுழைவு விலக்கு வரம்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சேவைக்கான பிரிவு 2(102) திருத்தம்

கீழ்க்காணும் சேவைகளுக்கு இதுவரை வரி விதிக்கப்படவில்லை. பிரிவு 2(102) திருத் தப்பட்டு இனி வரி விதிக்கப்படும்.

ஆவணங்கள் கட்டணம் (Documentation Fee), தரகுக் கட்டணம் (Brooking Charges)
பத்திரங்கள் ஒழுங்கு படுத்துவதற்கான அனைத்துச் சேவைகள், பிராசசிங் கட்டணம் உட்பட

எதிரிடைக் கட்டணம் (ரிவர்ஸ் சார்ஜ்) – பிரிவு 9(4)

பதிவு செய்துள்ள ஒருவர்,, பதிவு செய்யா தவரிடம் இருந்து பெரும் உள் வழங்கல் களுக்குச் செலுத்த வேண்டிய எதிரிடைக் கட்டணப் பிரிவு 9(4) தற்பொழுது இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளது.

சில குறிப்பிட்டவர்களால் பெறப்படும் உள் வழங்கல் களுக்கு பதிவு பெறாத வர்களிடம் இருந்து பெறப்படும் வழங்கல்களுக்கு எதிரிடைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

அந்த குறிப்பிட்டவர்கள் யார் என்பதை அரசு அறிவிக்கப் பட்டவர்களுக்கு (Rectified) மட்டுமே தற்பொழுது இந்த மாற்றம் பொருந்தும்.
இந்தப் பிரிவில் சேர்க்கப்படாமல் இருக்கும் வரிசெலுத்தும் வணிகர்களுக்கு இது பணப் புழக்கத்தைக் குறைக்கும்.

பதிவு வரம்பு அதிகதிப்பு – பிரிவு 22

தற்பொழுது சில மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக ஆண்டு மொத்த வருமான வரம்பு ரூ.10 லட்சமாக உள்ளது.

இது அறிக்கை எண்: 10/2019/சிஜி/07-03-2019 படி ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது அசாம், அருணாசலப் பிரதேசம், ஹிமாச் சலப் பிரதேசம், மேகாலயா, சிக்கிம் (ம) உத் திரகாண்ட ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும்.
மணிப்பூர், மிஜோராம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ.20 லட்சமாக உள்ளது. ரூ. 40 லட்மாக 01-04-2019 முதல் உயர்த்தப்படுகிறது. இது கீழ்க்காணும் பிரிவினருக்குப் பொருந்தாது.
பிரிவு 24 படி கட்டாயப் பதிவு செய்ய வேண்டிய பிரிவினர்

ஐஸ்கிரீம், கோகோ சேர்க் கப்பட்டாலும் அல்லது சேர்க் கப்படாமல் இருந்தாலும் தயா ரிக்கப்பட்ட உணவாக இருந்தாலும் உண்ணத்தக்க ஐஸ்கிரீம், பான் மசாலா, புகை யிலை (ம) புகையிலைக்கான மாற்றுப் பொருள்களை விற்பனை செய்பவர்கள்.
அருணாசலப் பிரதேசம் மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா (ம) உத்தரகாண்டு ஆகிய மாநிலங்களில் இருந்து வெளி மாநிலத்திற்கு வெளி வழங்கல் செய்யும் பிரிவினர்.

ஒரு நிதி ஆண்டுக்கான கடன் / பற்றுக் குறிப்பு – பிரிவு 53(1-4)

வரிப் பட்டியலில் (Tax Invoice) ஏற்படும் பிழைகளைத் திருத்தம் செய்ய ஒவ்வொரு பட்டியலுக்கும் தனித்தனி கடன் வரவுக் குறிப்பு (கிரிடிட் நோட்) அல்லது பற்றுக் குறிப்பு (டெபிட் நோட்) வழங்கும் முறை தற்பொழுது ஒரு நிதி ஆண்டில் வழங்கப்பட்ட பல பொருள்களுக்கு ஓர் ஒருங்கிணைந்த வரவு / பற்றுக் குறிப்பு வெளியிடலாம்.

ஆனால் ஒவ்வொரு பட்டியலுக்கான வரிசை எண் / நாளை பற்று / வரவுக் குறிப்பில் குறிப்பிட வேண்டும்.

எந்த வரி செலுத்தவும் முதலில் ஐஜிஎஸ்டியை (மிநிஷிஜி) பயன்படுத்துதல் – பிரிவு 49
சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி/ஐஜிஎஸ்டி ஆகிய எந்த வெளி வழங்கல் வரியையும் செலுத்த இனி முதலில் ஐஜிஎஸ்டி வரி வரவைப் பயன்படுத்த வேண்டும்.

ஐஜிஎஸ்டி வரி வரவு முழுவதும் தீர்ந்த பின்னரே சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டியில் உள்ள வரி வரவை வெளி வழங்கலில் நேர்செய்ய பயன்படுத்த வேண்டும். ஐஜிஎஸ்டி கணக்கில் அடிப்படை நிதித் தீர்வைக் குறைக்க இந்த விதிமுறை சேர்க்கப்பட்டு உள்ளது.

சிஜிஎஸ்டி / ஐஜிஎஸ்டி உள்ளீட்டு வரவை ஐஜிஎஸ்டி வரி வரவு இல்லாத போது மட்டுமே பயன்படுத்துவதற்காக மட்டுமே இந்த தடை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பதிவு நீக்கும் போது இடை நிறுத்தம் அனுபதிக்கப்படுகிறது – பிரிவு 29
புதிய விதிமுறைப்படி பதிவு நீக்க வேண்டும் என்று முறையான அலுவலர் (ப்ராப்பர் ஆபீசர்) உறுதி செய்து விட்டால், பதிவு நீக்கம் முடியும் வரை அதை இடை நிறுத்தல் செய்யலாம். விதிமுறைகளில் பரிந்துரைக்கப்படும் காலம் மற்றும் முறைப்படியே இடைநீக்கம் இருக்கும்.

இடைநீக்கம் இருக்கும் வரிப்படிவம் எதுவும் வழங்க வேண்டியது இல்லை. பதிவுநீக்கம் செய்ய புறக்கணிக்கப்பட்டால் வரி வசூல் செய்தல், வரி செலுத்துதல் போன்றவற்றில் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்க நேரும். அவருடைய சொந்தப் பணத்தில் இருந்து வரியைச் செலுத்த நேரும். இது பெரிய சுமையாக இருக்கும்.

காம்போசிஷன் முறை வரி செலுத்துவதில் மாற்றங்கள் – (அறிக்கை எண்: 2/2019/சிஜி/07-03-2019)

பொருள் வெளி வழங்கல் (அ) சேவைபுரிவோர் (அ) இரண்டிலும் ஈடுபட்டு உள்ளவர்களின் ஆண்டு மொத்த வருமானம் ரூ. 50 லட்சத்திற்குள் இருந்தால் புதிய காம்போசிஷன் முறையில் 6% வரி (3% சிஜிஎஸ்டி + 3% எஸ்ஜிஎஸ்டி) செலுத்தலாம். இது 01-04-2019 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இங்கு மொத்த வருமானம் என்று குறிப்பிட்டு இருப்பதால் வரிவிலக்கு அளிக்கப்பட்ட வருமானத்திற்கும் சேர்த்து வரிசெலுத்த வேண்டும். ஆனால் இதில் வரிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ள சேவைகளான சேமிப்பு, வைப்பீடு, தொகை, கடன் (அ) முன்பணம், வட்டித் தள்ளுபடி போன்றவற்றைச் சேர்க்க வேண்டியது இல்லை.

பின்வரும் பிரிவினருக்கு இந்த புதிய திட்டம் பொருந்தாது

வெளி மாநிலத்திற்கு வழங்கல் செய்பவர்கள். ஜிஎஸ்டி சட்டத்தில் வரிக்கு உட்படாத வெளி வழங்கல் செய்பவர் (மது,பெட்ரோலியம் பொருட்கள் முதலியன)
ஒரு வரிக்கு உட்பட்ட தற்செயல் நபர் (Casual Person) வரி விதிக்கத்தக்க வழங்கல் செய்கிற குடியிராதவர் (Non – Resident taxable person), ஐஸ்கிரீம், பான் மசாலா, புகையிலைப் பொருள்களை வழங்கல் செய்யும் ஒருவர்.

இந்த திட்டத்தில் வரி செலுத்துபவர், பிரிவு 9(3) (ம) 9(4) படி எதிரிடை வேண்டும். எந்த உள் வழங்கலுக்கும் உள்ளீட்டு வரி வரவு பெற முடியாது. வெளி வழங்கல்களுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யக் கூடாது.

காம்போசிஷன் முறை வரியில் உச்சவரம்பு அதிகரிப்பு – பிரிவு 10
காம்போசிஷன் முறையில் வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு அறிக்கை எண்: 14/2019/சிஜி படி 01.04.2019 முதல் ஆண்டுக்கு 1.50 கோடியாக உயர்த்தப்படுகிறது.
அருணாசலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு இந்த உச்ச வரம்பு ரூ.75 லட்சமாகவே இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

உள்ளீட்டு வரி வரவு பெறுவதில் திருத்தம் – பிரிவு 16

வேறு ஒருவர் கணக்கில் அவர் வழிகாட்டல் படி வழங்கப்படும் சேவைகள் மீது எடுக்கப்படும் உள்ளீட்டு வரியில் கீழ்க்காணும் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.
உள்ளீட்டு வரி வரவு பெறும் பதிவுபெற்ற ஒருவர், பொருள் (அ) சேவை பெற வேண்டும்.

Billed to Shipped மாடல் வணிக நடவடிக்கையில் வழங்குபவர் பெறுபவரின் வழிகாட்டுதல் படி வேறு ஒருவருக்குப் பொருள்களை வழங்கினால் அது பொருள்களை வாங்கியதாகக் கருதப்படும்.

இந்த கருதப்பட்ட அனுமானம் இப்போது சேவைகளுக்கும் பொருந்தும். எனவே, உள்ளீட்டு வரி யாருடைய வழிகாட்டுதல் கணக்கிலும் ஒருவருக்கு அனுமதி வழங்கப்படும் மூன்றாவது நபருக்கு சேவை கிடைக்கும்.

மோட்டார் வண்டிகள் மீதான உள்ளீட்டு வரி வரவு – பிரிவு 17(5) பிரிவு (அ)
மோட்டார் வண்டிகளை வெளி சப்ளை செய்ய, பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்துதல், மோட்டார் வண்டிகள் ஓட்ட பயிற்சி அளிக்க பயன்படுத்துதல் உள்ளீட்டு வரி வரவு கிடைக்கும். இந்த வண்டி, ஓட்டுநர் உட்பட 13 பேரை ஏற்றிச் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும்.

டம்பர்கள் (Dumper), வேலை டிரக் (Work Truck), போர்க் லிஃப்ட் டிரக் ஆகியவற்றுக்கும் உள்ளீட்டு வரி வரவு கிடைக்கும். தனிப்பட்ட நோக்கத்திற்காக ஓட்டுநர் உட்பட 13 பேரை ஏற்றிச் செல்லும் வண்டி, கப்பல் (ம) வானூர்திகளைப் பயன்படுத்துதலுக்கு உள்ளீட்டு வரி வரவு கிடையாது. வங்கிகள் (அ) நிதி நிறுவனங்கள் பணம் எடுத்துச்செல்ல வண்டிகளைப் பயன்படுத்தினால் அதற்கு உள்ளீட்டு வரி வரவு உண்டு.

பொருள்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும் வண்டிகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி உள்ளீட்டு வரி வரவு அனுமதிக்கப்படுகிறது. கப்பல் (ம) வானூர்திகளைப் பொறுத்தவரை சில குறிப்பிட்ட நோக்கங் களைத் தவிர வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தினால் உள்ளீட்டு வரி வரவு தவிர்க்கப்படும்.
காப்பீட்டுச் சேவை வழங்குவதற்காக காப்பீட்டு நிறுவனங்களால் பயன்படுத்தப் படும் மோட்டார் வண்டிகள், கப்பல், வானூர்திகளுக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தால் உள்ளீட்டு வரி வரவு கிடைக்கும்.

அரசுத் துறைக்கும் தணிக்கை தேவையில்லை – (01.02.2019 முதல்)
பிரிவு 35(5) படி ஆண்டு மொத்த வருமானம் ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் பிரிவினர், தங்கள் கணக்கை ஒரு பட்டயக் கணக்கர் / காஸ்ட் அக்கவுன்டட் சான்றிதழ் பெற்று படிவம் 9-சி இல் வழங்க வேண்டும்.

இந்த விதி கணக்குத் தணிக்கையாளரால் (Comptroller & Audit General of India) தணிக்கைக்கு உட்படும் அரசுத் துறை / இலாக்காகளுக்குப் பொருந்தாது. அதற்கு ஏற்றபடி விதி 80 மாற்றப்படுகிறது.
படிவங்கள் வழங்க வேண்டிய நாள்

ஏப்ரல் 2019 -க்குப் பிறகு வழங்கப்பட வேண்டிய படிவங்களின் காலம் கீழ்க் காணுமாறு மாற்றப்பட்டு உள்ளது.

ஆண்டு மொத்த வருமானம் ரூ.1.50 கோடி வரையுள்ள ஒருவர், ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரை உள்ள காலாண் டுக்கு படிவம் ஜிஎஸ்டிஆர் – 1 ஐ 31.07.2019 -க்குள் வழங்க வேண்டும்.

ஆண்டு மொத்த வருமானம் ரூ.1.50 கோடிக்கு மேல் உள்ள ஒருவர் ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையுள்ள காலத்திற்கும் படிவம் ஜிஎஸ்டிஆர் – 1 ஐ ஒவ்வோர் அடுத்து வருகிற மாதத்தில் 11 ஆம் நாளுக்குள் வழங்க வேண்டும். (11.05.2019. 11.06.2019 மற்றும் 11.07.2019).

ஒவ்வொரு பதிவுபெற்றவரும் படிவம் ஜிஎஸ்டிஆர் 3-ஙி ஐ ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரை உள்ள காலத்திற்கு அடுத்து வருகிற மாதத்தில் 20 ஆம் நாளுக்குள் வழங்க வேண்டும். (20.05.2019, 20.06.2019 மற்றும் 20.07.2019).

– சு. செந்தமிழ்ச்செல்வன்,
வணிகவரி ஆலோசகர்
(9841226856)

குறைந்த முதலீடு போதும்

0

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு காலையில் காய்கறிகளை வெட்டுவதற்கு நேரம் இருப்பதில்லை.
பலவகையான காய்கறிகளை சந்தையில் மொத்தமாக வாங்கித் தூய்மைப்படுத்தி துண்டுகளாக வெட்டி தனித்தனிப் பொட்ட லங்களில் போட்டு விற்கலாம்.

கேரட் பொட்டலம் கத்தரிக்காய் பொட்டலம், உருளைக் கிழங்கு பொட்டலம் என விதவிதமாக பொட்டலம் கட்டி விற்கலாம். மேலும் கீரைகளை வாங்கி, நன்கு கழுவி, பதமாக நறுக்கி, பொட்டலங்களில் போட்டுக் கொடுக்கலாம்.

காலை முழுவதும் காய்கறிகளை வாங்கி, நன்றாகக் கழுவி, துண்டுத் துண்டாக நறுக்கி, பொட்டலம் தயாரிக்கத் தொடங்க வேண்டும். மாலையில், பணிபுரிந்து ஆட்கள் திரும்பும் நேரமான, 4 மணிமுதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்யலாம்.

பொதுவாக அரை கிலோ முழு கேரட் 10 ரூபாய்க்கு வாங்கினால், அதனை அரிந்து பொட்டலம் போட்டு 20 ரூபாய்க்கு விற்கலாம். அதுபோல 10 ரூபாய்க்கு ஒரு கட்டு கீரை வாங்கி, கிள்ளி, பொட்டலம் போட்டால் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

காய்கனிகளை வாங்கி, கழுவி, காய வைத்து காய்கனி வற்றல் தயாரிக்கலாம். கொத்தவரங்காய் வற்றல், பாகற்காய் வற்றல், மாங்காய் வற்றல், கத்தரிக்காய் வற்றல் – என விதவிதமாக வற்றல் போட்டு விற்கலாம்.

உணவுத் தொழில்

பெரிய முதலீடு வேண்டாம். வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம். வாய்க்கு சுவையாகச் சமைக்கும் கைப்பக்குவம் போதும்.
உங்கள் வீட்டைச் சுற்றி கடைகள், அலு வலகங்கள், பல நூறு வீடுகள், பேச்சலர்ஸ் குடியிருப்புகள், பெரிய பெரிய அடுக்கு மாடிகள் இருந்தால், நல்ல வாய்ப்புகளும் வருமானமும் காத்திருக்கின்றன.

சிறிய அளவில் தொடங்கி, ஆர்டர்கள் அதிகரிக்கும் போது, சில பெண்களை வேலைக்கு அமர்த்தி வேலையும் கொடுக்கலாம்.
நாளும் ஒரே மாதிரி சமைக்காமல், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகை அறுசுவை உணவுகளைச் சமைக்க வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்கள் சலிப்படைய மாட்டார்கள்.

வீட்டில் குட்டி பேக்கரி

வீட்டிலேயே குட்டி பேக்கரி வைக்கலாம். அதாவது மினி ஹோம் பேக்கரி. ஒரு பேக்கரியில் முக்கியமாக பன், ரொட்டி, கேக் மூன்றும்தான் முக்கியமாக இருக்கும்.

முதலில் வீட்டில் இருந்தவாறே கேக் ஆர்டர் பெற்று செய்து வழங்கலாம்.

இதற்கு விதவிதமான கேக் செய்ய தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதற்கு 3 -6 மாத பேக்கரி பயிற்சி களில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம். தற் காலத்தில் இணையத்தில் கூட ஆன்லைன் வகுப் புகள் பரவலாக நடத்தப் படுகின்றன. குறிப்பாக யூடியூப்பில் பலவகை கேக் செய்வதற்கான முறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

உங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவே கேக் செய்ய பல ஆணைகள் கிடைக்கும்.

மணப்பெண் அழகுசெய்தல்

முதலில் நல்ல அழகுக்கலை வல்லுநரிடம் சென்று முறைப்படி அழகுக்கலையைக் கற்றுவர வேண்டும். யூடியூப்பில் கூட, அழகு செய்தல் தொடர்பான பல வீடியோக்கள் உள்ளன.

உங்கள் தோழிகள், தெரிந் தவர்கள், உற வினர் பெண் கள் என தொடங்கி, அவர்கள் மூலம் இன்னும் பல மணப்பெண்கள் உங் களைத் தேடி வருவார்கள். தேவைப் பட்டால் மணப்பெண் வீட்டில் அல்லது திருமண மண்டபத்தில் கூட சென்று அழகு செய்யலாம்.

மணப் பெண்ணின் முகம் அழகு செய்தல், முடி அழகு, மருதாணி இடுதல், மணப்பெண் ஆடை அணிதல், கலரிங் செய்தல் – என பலதுறையிலும் ஈடுபட வேண்டும். மணப் பெண் மட்டுமல்லாமல், பொது மேடையில் பேசும் பெண் பேச்சாளர்கள் கூட அழகு செய்ய வருவார்கள்.

தையல் தொழில் – புதிய வாய்ப்புகள்

சுடிதார், பிளவுஸ், பட்டுப் பாவாடை, கவுன் – என பெண்கள், குழந்தைகள் உடையைத் தைத்துக் கொடுத்தது, பழைய கால முறை. ஆனால் இப்போது தையல் தொழிலில் இன்னும் புதிய வாய்ப்புகள் உள்ளன.

சான்றாக, தற்போது பிளாஸ்டிக் பைகள் ஒழிக்கப்பட்டு வருவதால், காடா துணி வாங்கி, பை தைத்துக் கொடுக்கலாம். அல்லது அரிசி மூட்டைப் பைகளை வாங்கி, வலுவான பைகளை (கேரி பேக்) தைத்து விற்பனை செய்யலாம்.

பட்டிமன்றம்/ வழக்காடு மன்றம் குழு தொடங்கலாம்

உங்களுக்கு நல்ல பேச்சுத் திறமை இருந்தால், உங்களைப் போலவே பேச்சுத் திறமை, வாதாடும் திறமையுள்ள 7 – 10 பெண்கள் சேர்ந்து கொள்ள வேண்டும்.

பின்பு தற்போது நாட்டில் அதிகமாக அலசப்படும் ஏதாவது தலைப்பு வைத்து பட்டிமன்றம் போலவோ அல்லது வழக்காடு மன்றம் போலவோ நடுவர் வைத்து வழக்காட வேண்டும்.

இப்படி பலமுறை பயிற்சியெடுத்து, உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொது இடத்தில் பேசலாம் என உங்கள் குழுவினருக்கு நம்பிக்கை வந்தவுடன், பொது இடங்களில் பேசத் தொடங்கலாம். சான்றாக, ஒரு திருமணத்தில் நீங்கள் பட்டிமன்றம் பேசுகிறீர்கள். அதற்கு 10 ஆயிரம் ரூபாய் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் நீங்கள் ஏழு பேர் கலந்து கொண்டால், ஆளுக்கு 1000 ரூபாய் வீதம் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். மீதியுள்ள 3000 ரூபாயை உங்கள் பட்டிமன்றக் குழுவின் வளர்ச்சிக்கு வைத்துக் கொள்ளலாம்.

இதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். முதலில் திருமண வீடுகள், குடும்ப விழாக்களில் பேசத் தொடங்கும் நீங்கள், பின்பு ஊர் விழாக்கள், அரசியல் விழாக்கள், மாவட்ட விழாக்கள் – என உங்கள் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே செல்லலாம்.

– நுண்ணல்

பணப்புழக்கத்தைக் கண்காணியுங்கள்

0

சிறுதொழில் முனைவர்கள், ஒரே நேரத் தில் டன் கணக்கான செயல்களை ஓவர் லோடாக செய்து கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்கள் தொழிலின் கணக்கு வழக்குகளை மேலாண்மை செய்யவோ அல்லது பணப் புழக்கத்தைக் கண்காணிக்கவோ அவர் களுக்குப் போதுமான நேரம் இருப்பது இல்லை. பணப்புழக்கத்தைக் கண்காணிக்கத் தவறியதால், பெரும்பாலான தொழில்கள் சிறிய மற்றும் பெரிய சறுக்கல்களைச் சந்தித்து உள்ளன.

சில மறைக்கப்பட்ட/ கண்டுகொள்ளப் படாத அல்லது அற்பமாக எண்ணப்படும் செலவுகளை, கணக்கு வழக்கில் கொண்டு வரத் தவறியதால், பல நிறுவனங்கள் தங்கள் பணப் புழக்கத்தில் தோல்வியைச் சந்தித்து உள்ளன. பின்வரும் தவறுகளில் ஏதாவது ஒன்றை நாம் செய்கிறோமா, அவற்றைச் சரிசெய்து, வெற்றி பெறுவது எப்படி?

வலுக்கட்டாய வளர்ச்சி

ஒருவர் ஃபேஸ்புக்கில் சிறிதாக விளம்பரம் செய்து, ஒரு மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார். முதல் மாதத்தில் தன் முதலீட்டிற்கு நல்ல வருமானம் பெற்றார். உடனே அவர் தான் ஈட்டிய வருமானத்தை விட, ஐந்து மடங்கு அதிகமாக தன் விளம் பரங்களுக்காகச் செலவழித்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்தது போல், வாடிக்கையாளர்களும் சரி, வருமானமும் சரி, ஐந்து மடங்கு பெருகவில்லை. மாறாக செலவுகள்தான் அதிகரித்தன. அந்தச் செல வுகளை ஈடுசெய்ய அவர் குறுகிய காலக் கடன் வாங்க வேண்டி இருந்தது.

ஒரு நிறுவனம் வளர்ச்சி பெறுவது, சீராக வளர்ச்சி பெறுவது நல்லதுதான். ஆனால் வலுக்கட்டாய செலவு வளர்ச்சி என்பது என்ன? சிறு வருமானம் பார்த்த உடன் பணி யாளர்களை நான்கு முதல் ஐந்து மடங்கு உடனே அதிகரித்தல்; நிறுவனம் இயங் குவதற்கு எடுத்தவுடன் மிகப்பெரிய இடத் தைப் பிடிப்பது; வருமானத்தை மீறி, விளம் பரங்களுக்குக் கொட்டிக் கொடுப்பது, இவை தான் வலுக்கட்டாய செலவு வளர்ச்சி.

இந்த வகையில் செலவைத் திணிப்பதால், மிகப் பெரிய செலவை இழுத்து விட்டுவிடும்.

நிறுவனத்தை விரிவுபடுத்துவது, பணி யாளர்களை அதிகரிப்பது போன்றவற்றை, நீண்டகால அடிப்படையில் நம் வருமானம் பெருகும் விகிதத்திற்கேற்ப, கொஞ்சம் கொஞ்சமாகச் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளரைக் கையகப்படுத்தும் செலவு

வாடிக்கையாளர்களைப் பிடிக்க, நிறு வனங்கள் வெவ்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. அதற்காக குறிப் பிடப்பட்ட தொகையும் செலவழிக் கப்படுகிறது. ஆனால் ஒரு நிறுவனம் ஒரு வாடிக்கையாளரைப் பிடிப்பதற்கான செலவை விட, அவரால் கிடைக்கும் இலாபம் அதிகமாக உள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஒரு வாடிக்கையா ளரைக் கையகப்படுத்த செலவழித்த தொகையை, கையகப்படுத்தும் செலவு என்பார்கள்.

இன்னொரு வகை ஒரு வாடிக்கை யாளரின் வாழ்நாள் மதிப்பு எனப்படுகிறது. ஒரு வாடிக்கையாளரின் வாழ்நாள் முழுவ தும் அவரால் கிடைக்கும் வருமானத்தை வாழ்நாள் மதிப்பு என்கிறோம். இந்த வகை யில், ஒரு வாடிக்கையாளரைக் கையகப் படுத்தும் செலவு அதிகமாக இருந்தாலும், அந்த நிறுவனத்திற்கு அவரால் கிடைக்கும் ஆயுட்கால வருமானம் பலமடங்கு அதிக மாக இருப்பதால், நிறுவனம் இதில் கவனம் செலுத்தினால், நிலையான பணப்புழக்கம் ஏற்படும்.

சிறு வாடிக்கையாளர்களுக்கு அதிக ளவில் கையகப்படுத்தும் செலவு செய்வது தவிர்க்கப்பட வேண்டும். பல வர்த்தகர் கள் இதில்தான் சறுக்குகின்றனர். அதிக வாடிக்கையாளர்கள், அதிக வருமானம் என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும். கையகப்படுத்தும் செலவில் மறைக்கப்பட்ட செலவுகள் அதிகம் உள்ளன. சான்றாக, விற்பனை யாளரின் அதிகளவு சம்பளம் மற்றும் அதிகமான கமிஷன்; மொபைல் மற்றும் இன்டர்நெட் செலவு ஆகியவையும் உள்ளடங்கும்.

இந்த மறைமுகச் செலவுகளும் கையகப்படுத்தும் செலவில் சேர்த்துக் கணக்கிடப்பட வேண்டும். இல்லை யெனில், வருமானத்தை விட, செலவுகள் அதிகரித்து, பணப்புழக்கம் பாதிக்கப்படும்.

வருமானத்தை தவறாகக் கணக்கிடுதல்

ஒருவர் இணைய வழியில் விற்பனையைத் தொடங்கினார். 2400 ரூபாய்க்கு மொபைல் ஃபோன் வாங்கி, அதனை 3600 ரூபாய்க்கு விற்பனை செய்தார். ஒரு மொபைல் ஃபோனுக்குக் கமிஷன் 1200 ரூபாய். அதாவது மூன்றில் ஒரு பங்கு இலாபம்.

ஆனால் அந்த ஆண்டு முடிவில் அவர் தன் இருப்பு நிலைக் கணக்கைத் தயாரிக்கும் போது, வருமான இழப்பு ஏற்பட்டு இருந்தது. காரணம் என்னவெனில், அவர் சந்தைக் கமிஷன், கூரியர் செலவு, பரிமாற்றச் செலவு, சரக்குகளை இருப்பு வைக்கும் கிடங்கிற்குக் கொடுக்கும் வாடகை முதலி யவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை.
அனைத்து செலவுகளையும் செலுத்திய பின்னரும், வங்கிக் கணக்கில் போதுமான பணம் இருந்தால் மட்டுமே, நிறுவனத்திடம் சரியான பணப்புழக்கம் உள்ளது என்று கருத முடியும்.

சீசன் வணிகம்

திருமண சீசன், பொங்கல் விழாக் காலங் களில், துணிவகைகள், நகைகள் போன்ற விற்பனை நன்றாக அமைந்து இருக்கும். தீபா வளி நேரத்தில் பட்டாசு விற்பனை அமோக மாக இருக்கும். போட்டிகள் கடுமையாக இருக்கும் போது, வாடிக்கையாளர்களை ஈர்க்க அதிக அளவில் தள்ளுபடி, கழிவுகள் அல்லது கேஷ்பேக் கொடுக்க வேண்டி இருக்கும். இவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். இந்த தள்ளுபடிகள் வரம்பு மீறா மல் இருக்க வேண்டும்.

நிதித் திட்டத்தில் இத்தகைய சீசன் விற் பனைக்கான சரியான முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும், சீசன் காலத்தில் பணப்புழக்கம் பெருகினாலும், சீசன் அல்லாத காலங்களில் பணப்புழக்கம் குறையலாம். சீசன் அல்லாத காலங்களில் வர்த்தகத்தை எவ்வாறு மேலாண்மை செய் வது என்பதைத் திட்டமிட வேண்டும்.

பிந்தி பெறப்படும் பணம்

வாடிக்கையாளர்களிடம் இருந்து நமக்கு வரவேண்டிய பணத்தை மிகவும் தாமத மாகப் பெற்றுக் கொள்வது; அதிக அளவில் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பது, பணப்புழக்கத்தைக் குறைக்கலாம். குறைந்தது மூன்று மாதத்திற்கு மேல் கொடுக்கப்படும் கெடு, பெரும்பாலும் நமக்கு சிக்கலையே ஏற்படுத்தும்.

நமக்கு சரக்குகளை சப்ளை செய்பவர்கள் இந்த அளவுக்கு நமக்காக காத்திருப்பது இல்லை. அவரிடம் நம்பகத் தன்மையை நிலைநாட்ட, அதிக வட்டிக்குக் கடன் வாங்கி அந்தக் கெடு காலங்களை சமாளிக்க வேண்டி இருக்கும். இதனால் அன்றாடம் நிறுவனத்தை நடத்தும் செலவிற்கும், பணி யாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவும், பல சிக்கல்களைச் சந்திக்க நேரலாம். எனவே, அதிகக் கெடு மற்றும் வரம்புமீறி கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வரிகளை தவறாகக் கையாளுதல்

நமக்கு உரிய அரசு வரிகளை உரிய காலத் தில் நாம் செலுத்தியே ஆக வேண்டும். இப் போது அனைத்து வரிகளும் ஜிஎஸ்டி-க்குள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இதற்கு உரிய கணக்குப்பதிவு அலுவலர்களின் ஆலோசனையின் படி செயல்பட வேண்டும்.
உரிய காலக் கெடுவிற்க்குள் வருமானக் கணக்குகளை சரியாக தாக்கல் செய்து, வர்த் தகத்திற்கான வரிகளை சரியாகச் செலுத் தவில்லை எனில், வணிகவரித் துறை நட வடிக்கை எடுக்க நம் நிறுவனத்தின் கதவைத் தட்டலாம்.

இதனால் கூடுதல் வரி மற்றும் அபராதம் விதிக்க நேரலாம். இதனால் பணப் புழக்கத்தில் மிகப்பெரிய துண்டு விழலாம். இதனால் கணக்கு வழக்குகள் துல்லியமாக கணக்கீடு செய்யப்பட வேண்டும். அதுபோல ஜிஎஸ்டி-யில் செய்யப்படும் திடீர் மாற்றமும் வர்த்தகத்தைப் பாதிக்கலாம். எனவே இத்தகைய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்பார்த்து, கவனமாக செயல்பட வேண்டும்.

எதிர்பாராத நிகழ்வுகள்

எதிர்பாராத செலவுகள், இயற்கைப் பேரி டர்கள் முதலியவை நிறுவனத்தின் பணப் புழக்கத்தை தீவிரமாகப் பாதிக்கும். மேலும், நமது நம்பிக்கைக்கு உரிய ஊழியர்கள் போட்டி நிறுவனம் தொடங்கலாம். நம் பல வாடிக்கையாளர்களை அவர்கள் பிடித்துக் கொள்ளலாம். இவற்றை எல்லாம் எதிர் பார்த்தே தொழில் நடத்த வேண்டும்.

பெரும்பாலும் இவற்றில் இருந்து நிறுவ னத்தைக் காப்பீடுகள் காப்பாற்றலாம். ஆனால் காப்பீடுகள் எல்லாவற்றையும் கவர் செய்யாது. சில அம்சங்களுக்கு காப்பீடு கிடைக்காது. மேலும், இழப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு மட்டுமே காப் பீடுகள் கிடைக்கும். இந்த சிறிய தொகையை வைத்து, குறைந்தபட்ச வணிகத் தேவைகளை நிறைவேற்ற தயாராக இருக்க வேண்டும்.

கரும்புள்ளி எடுத்தல்

நிறுவனத்திற்கு ஒரு சிறிய கடன் தேவைப் படலாம். ஆனால், கடன் கொடுக்கும் வங்கி களை அணுகும் போது, நமது கடந்த கால கரும்புள்ளி, நமக்குக் கடன் தருவதைத் தடுக்கிறது. சான்றாக, சப்ளையர்கள் அல்லது மொத்த வியாபாரிகளுக்குக் கொடுத்த காசோலை, நம் கணக்கில் போதுமான பண இருப்பு இல்லாத காரணத்தால், ரிட்டர்ன் ஆகி இருக்கலாம்.

அல்லது ஏற்கெனவே வாங்கிய கடன்களுக்கு ஒன்றிரண்டு தவணை கள் தவறி இருக்கலாம். இதுபோன்ற சிறுசிறு நிகழ்வுகளால் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் நம்மீது கரும்புள்ளியை வைத்து விடும். மேலும், ஜிஎஸ்டி முறை யாகச் செலுத்தப்பட்டு, நல்ல ஜிஎஸ்டி இணக்க மதிப்பீடு பெற்று இருக்க வேண்டும். இது போன்ற சிறுசிறு நிகழ்வுகளில் மிகுந்த கவனமாகச் செயல்பட வேண்டும்.

பொருத்தம் இல்லாத பணியாளர்களைத் தேர்வு செய்தல்

நல்ல பணியாளர்களாக இருப்பார்கள் என்று நினைத்துதான், நாம் ஊழியர்களை, நல்ல சம்பளம் கொடுத்து, தேர்வு செய்கி றோம். இரண்டு முதல் மூன்று மாதங்கள் பயிற்சிக்காகப் போய் விடுகிறது.

நான்கு முதல் ஐந்து மாதங்கள் தாண்டிய பின்பும் அவர்கள், இதுவரை அவர்களுக்காக நாம் செலவழித்த தொகைக்கு ஈடாக விற் பனை அல்லது உற்பத்தியைக் காட்ட வில்லை எனில், இதுவரை அவர்களுக்குக் கொடுத்த பயிற்சியும், ஊதியமும் வீணாகி விடுகின்றன. இது, நம் பணப்புழக்கத்தில் பெரிய பள்ளத்தையே ஏற்படுத்தும். எனவே, பணியாளர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

இதர மறைக்கப்பட்ட செலவுகள்

சில செலவுகள் தொடக்கத்தில் முக்கியம் இல்லாதது போல தோன்றலாம். அவற்றை நாம் தவிர்க்கும் போது, பின்னால் பெரிய இழப்பைச் சந்திக்க நேரலாம். சான்றாக காப் பீடு, கடன் அட்டைக் கட்டணம், பணி யாளர்களுக்கான நலன்கள், வரிகள் மற்றும் வணிகக் கட்டணம் போன்றவை. எனவே, தொழில் முனைவர்கள் அல்லது நிர்வாகிகள் இவற்றைச் சரியாக நிர்வகிக்க வேண்டும்.

திட்டமிட்ட மேலாண்மை

வருமானம் தண்ணீர் கசிவது போல் இருந்தாலும், செலவுகள் வெள்ளம் வழிந் தோடுவது போல் என்பார்கள். நாம் சரியான நிதித் திட்டத்தை மதிப்பீடு செய்து, எல்லாவிதமான செலவுகளையும் முறையாக மேலாண்மை செய்ய வேண்டும்.

எல்லா விதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். நல்ல கணக்குப் பதிவு வல்லுநர் மற்றும் நல்ல கணக்குப் பதிவு மென்பொருளைப் பயன் படுத்தி, நம் பணப்புழக்கத்தை சரியாக வைத்து இருக்க வேண்டும்.

– ஹெலன் ஜஸ்டின்,திருமுல்லைவாயில்