வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய இவர்கள் உதவுகிறார்கள்!

0

கடந்த ஆண்டுக்கு முன் மத்திய அரசு எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, உங்களது வங்கிக் கணக்கில் பெரும் தொகை டெப்பாசிட் செய்தவரா? இதற்காக உங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வந்து உள்ளதா?


‘இத்தனை ஆண்டுகளாக வருமான வரி கட்டவில்லை. ஆனால் வரும் நாட்களிலும் இப்படியே தொடர்வது இயலாதோ?’ என்ற சந்தேகத்தில்… யோசனையில் இருப்பவரா?


“வரி கட்டுவதும், வரிக்கணக்கு தாக்கல் செய்வதும் சரிதான். ஆனால், அதற்கான ஆடிட்டர் கட்டணமே பெரிய தொகை போல தெரிகிறதே!” என்ற ஐயத்தில் உள்ளவரா?


கவலையை விடுங்கள்! மேலே சொல்லப்பட்டு உள்ள 4 விதமானவர்களில், நீங்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்கள் பயிற்சி பெற்ற இளைஞர்கள். வருமான வரித் துறையால் பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்கள். ஒரு வகையில் இதற்கான உரிமம் பெற்றவர்கள் என்று கூட சொல்லலாம்.


ஆம். டிஆர்பி…. அதாவது, டேக்ஸ் ரிட்டர்ன் பிரப்பேரர் என்ற பெயரில், செயல்படும் இவர்கள் மேலே உள்ள 4 தரப்பினருக்குமான தேவைகளை நிறைவு செய்வார்கள். அதோடு, இவர்கள் அதிக அளவாக 1000 ரூபாயில் இருந்து, குறைந்த அளவாக 250 ரூபாய் வரை கட்டணமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் உங்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்த தொகை மாறுபடும் என்கிறது இவர்களுக்கான வலைதளம்.


ஆங்கிலத்தில் TRP எனக் குறிப்பிடப்படும், இவர்கள் மத்திய அரசின் வருமான வரித் துறையால் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச்சட்டம் குறித்து நன்றாகத் தெரியும். அதன்படி, ஒருவரது ஆண்டு மொத்த வருமானத்தைக் கணக்கிடுவது எப்படி, அதில் இருந்து அவர் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு… அதை செலுத்துவது எப்படி…, எப்போது செலுத்த வேண்டும்…, ஒருவேளை கூடுதலாக வரி செலுத்தி இருந்தால், அதை அரசிடம் இருந்து திரும்பப் பெறுவது எப்படி… உள்ளிட்ட பல செய்திகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால், வருமான வரித்துறை என்றாலே, ஒரு விதமான அச்சத்தில் உள்ளவர்களும், ஆடிட்டர் அலுவலத்தைப் பார்த்த மிரட்சியில், அந்த திசையையே தவிர்த்து வருபவரும் கூட, இவர்களிடம் தேவையான சேவையைப் பெற்றுக் கொள்வது சாத்தியமே.


சரி… இவர்களை எங்கே தேடிக் கொண்டு போவது என்பதுதான் அடுத்த உங்களது கேள்வி என்றால், அதற்கு உடனடி, நேரடி பதில் – அவர்களைத் தேடி நீங்கள் போக வேண்டியது இல்லை. இருவருக்கும் ஏற்புடைய நேரம், தூரம் என்றால், அவர்களே கூட உங்களைத் தேடி வந்து நீங்கள் சொல்லும் இடத்தில் உங்களைச் சந்திக்க வாய்ப் புண்டு.


இது போன்ற பயிற்சி பெற்றவர்களை, அவர்கள் வசிக்கும் பகுதி வாரியாக பிரித்து, அவர்களை நீங்கள் அடையாளம் காண, அஞ்சல் முகவரி எண் அதாவது பின்கோடு வாரியாக பிரித்து இவர் களுக்காகவே தனியாக செயல்படும் வலைத் தளத்தில் பட்டியலாகத் தரப்படுகிறது. Www.trps cheme.com/locate-trps /12/ 12> என்ற முகவரிக்குச் சென்று தேடினால், உங்களுக்கு சேவை அளிக்க தேவையானவரை அடையலாம் காணலாம்.


நிதி நிர்வாகத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளைப் பொறுத்த வரை, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தொடங்கிய பல முயற்சிகளை, தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நிலையில், வரி வசூல் முயற்சிகளும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வருகின்றன.


இதில், கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி, செய்யப்பட்ட பணமதிப்பு நீக்கம் (Demonetization) தொடர்பான நடவடிக்கைகள் வருமான வரி வசூல் விஷயத்தில் பலரது எண்ணங்களை மாற்றி உள்ளது. அதனால், இதுவரை வருமான வரி செலுத்தாதவர்கள், அலுவலகங்களில் வரி பிடித்தம் செய்து விட்டார்கள் என வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என பலரும் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டி உள்ளது.


மறுபுறம், ஒருவரது ஆண்டு வருமானம் 10 லட்சத்துக்கு மேல் என்றால் அவர்கள் கட்டாயமாக ஆன்லைன் முறையில்தான் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று இருந்த வரம்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, இப்போது கிட்டத்தட்ட வரிக்கணக்கு தாக்கல் செய்யும் அனைவரும் ஆன்லைன் முறையை நாட வேண்டிய சூழல் உருவாகி வருகிறது.
எனவே, ஆன்லைனில் தாக்கல் செய்யும் வரிக் கணக்கு குறித்த விவரங்களை குறைந்த செலவில் செய்ய, இந்த டிஆர்பி-க்கள் பொருத்தமானவர்களாக தெரிகிறது.


இந்த திட்டம் 2006-07ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது நாடு முழுவதும் 5000 டிஆர்பி-க்கள் நியமிக்கப்பட்டார்கள். பின்னர் 2012-13ம் ஆண்டில் மீண்டும் ஒருமுறை இவ்விதம் டிஆர்பி-க்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். எனவே, நாடு முழுவதும் பல நடுத்தர நகரங்களில் கூட, இவ்விதம் அங்கீகரிக்கப்பட்ட ஓரிருவர்கள் உள்ளதால் அவர்களை அணுகி பயன் அடையலாம்.


மறுபுறம் ஒரு குறிப்பிட்ட டிஆர்பி சரியான முறையில் சேவை வழங்கவில்லை என்றால், அவர்கள் மீது புகார் செய்யவும் வாய்ப்பு உண்டு. இதற்கு அவர்களுக்கான தனி வலைதளத்தையோ, அதில் உள்ள மின்னஞ்சல் [email protected] முகவரியிலோ…., 011 – 2341 4177, 011 – 2341 5311 என்ற தொலைபேசி எண்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.


தற்போதைய நிலையில் தமிழகத்தில் மட்டும், அதன் பல்வேறு நகரங்களில் சுமார் 425 பேர் இவ்விதமான பொறுப்பில், பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


சரிதானே! வருமான வரி கட்ட, அதை சரியாகக் கணக்கிட்டுதர வேண்டும் என்றால், அதற்கு உடனடியாகவும், வரிக் கணக்கு தாக்கல் மட்டும் செய்ய வேண்டுமானால், அதற்கான நேரமான ஜூலை மாதத்திலும் இந்த டிஆர்பிக்களைப் பயன்படுத்திக் கொள்வது, இன்றைய சூழலுக்கு புத்திசாலித்தனமான செயல் மட்டுமல்ல; சிக்கனமானதும் கூட!

-ஆர். சந்திரன்

மார்க்கெட்டிங் சில அடிப்படைகள்

0

மார்க்கெட்டிங் என்பது விளம்பரப்படுத்துதல் மட்டும் அல்ல. அதைத் தாண்டியும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
வாடிக்கையாளர்களை நம் தயாரிப்புகள் அடைய ஒவ்வொரு நோக்கிலும் செல்லுதல் வேண்டும். நம் பொருள் வாடிக்கையாளருக்கு மனநிறைவு தந்தால்தான் மீண்டும் மீண்டும் நம்மிடம் வருவார்கள், மற்றும் மற்றவர்களுக்கும் அதை பரிந்துரை செய்வார்கள். அப்பொழுது நம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெருகும்.


மார்க்கெட்டிங் மிக்ஸ்:
மார்க்கெட்டிங் மிக்ஸ் எனப்படுவது பின்வருவனவற்றின் கலவை ஆகும்.

1.ப்ராடெக்ட் (Product)

2.ப்ரைஸ் (Price)

3.ப்ளேஸ் (Place)

4.ப்ரொமோஷன் (Promotion)

இவை நான்கும் மார்க்கெட்டிங்கின் 4 P எனப்படுகின்றன.


முதலில் வாடிக்கையாளரின் தேவையை அறிந்து பொருளை (ப்ராடெக்டை) உருவாக்க வேண்டும். பிறகு அந்த பொருளின் மதிப்பு மற்றும் வாடிக்கையாளரினால் செலவு செய்யக் கூடிய விலையில் (ப்ரைஸ்) இருக்க வேண்டும். மற்றும் அதை எங்கு விற்க முடியுமோ அந்த இடத்தில் (ப்ளேஸ்) விற்க வேண்டும். மற்றும் வாங்கத் தூண்டும் ஃப்ரொமோஷன் செயற்பாடுகளைச் செய்ய வேண்டும்.


எல்லா மார்க்கெட்டிங்கும் இந்த நான்கின் கலவை தான். ஆனால் அதன் விகிதம் மாறும். சான்றிற்கு ஒரு நட்சத்திர உணவகத்தைப் பொருத்த வரை விலை அதிகமாக இருக்கும். அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விலை ஒரு பொருட்டு அல்ல. இதுவே பட்ஜெட் உணவகத்தைப் பொருத்த வரை விலை குறைவாக இருக்கும். ஏனென்றால் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விலைதான் முக்கியம்.


சரியான விகிதத்தில் இந்த நான்கையும் கலந்தால் வெற்றி நிச்சயம். முக்கியக் குறிப்பு என்னவென்றால் இதன் கலவை விகிதம் நிலையானது அல்ல. நாளுக்கு நாள் மாறும். ஏனென்றால் ஒரு பொருளின் விலை அதிகமாக இருந்தால் வாடிக்கையாளர்கள் அதன் தரம் அதிகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். விளம்பரப்படுத்துதல் மூலமும் ஒரு பொருளை நல்ல விலையில் விற்கலாம்.


ப்ராடெக்ட்:
யாரை எல்லாம் நம் பொருள் மனநிறைவு அடையச் செய்யும் என்பதை நாம் அறிந்து இருத்தல் வேண்டும். சில நேரத்தில் அந்த பொருள் நம்முடைய தேவையை நிறைவு செய்யும் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களையும் நம் பொருள் சேருதல் வேண்டும்.


ஃப்ரைஸ்:
வாடிக்கையாளர் நம் பொருளை வாங்கும் பொழுது அதன் விலை அவர்களுக்கு மனநிறைவாகவும், நமக்கு லாபம் தருவதாகவும் இருத்தல் வேண்டும். தரமான நியாயமான விலை கொடுக்கலாம். விலையும் அதன் தரமும் ஒன்றுக்கு ஒன்று நேர்விகிதத்தில் இருத்தல் வேண்டும்.


ஃப்ளேஸ்:
இது வாடிக்கை யாளரையயும் பொருளையும் இணைக்கக் கூடியது ஆகும். அது மொத்த விற்பனை யாளர், சில்லரை விற்பனை யாளர் போன்றோரின் இடமாக இருக்கலாம். சில பொருட்களுக்கு அதன் இடம் ஒரு தடையாக இருக்காது. இணையம் ஆனது ஒரு பொருளின் விற்கும் இடத்தை எளிதாக்கி விட்டது.


ஃப்ரொமோஷன்:
ஒரு பொருளை மீடியா மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ விளம்பரப் படுத்தலாம். பெரிய நிறுவனங்களுக்கு விளம்பரம் ஒரு முக்கியமான செயல் பாடாகும். சில்லரை விற்பனையாளர் களுக்கும் அவர்களுக்கு ஏற்ற அளவிலாவது விளம்பரம் தேவைப்படும்.


சரியான விலையை நிர்ணயித்தல்:
நம்முடைய போட்டியாளர்கள் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்பதை நாம் முதலில் அறிதல் வேண்டும். பொருட்கள் தயாரிக்கும் அளவும், அதன் தேவையும் அதிகமாக இருந்தால், அது பொருட்களின் விலையை மாற்றி அமைக்கும். அதாவது மிகக் குறைவான விலையோ அல்லது மிக அதிகமான விலையோ அல்லாமல் சரியான அளவில் பொருட்களை தயாரிக்க வேண்டும்.


பப்ளிக் ரிலேஷன்:
இது மார்க்கெட்டிங் மிக்ஸின் ஐந்தாவது யாக அமைகின்றது. நம்முடைய நிறுவனத்தைப் பற்றிய நல்ல அறிமுகம் வாடிக்கையாளரிடம் இருத்தல் வேண்டும். பப்ளிக் ரிலேஷன் நுட்பங்கள் மூலம் நம்முடைய நிறுவனத்தின் இமேஜை மேல் நிலைக்குக் கொண்டு செல்லுதல் வேண்டும். நம்முடைய நிறுவனத்தைப் பற்றி என்ன விதமான பெயரை நம்முடைய நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படுத்துகின்றோம் என்பதில் கவனம் கொள்ள வேண்டும்.


வாடிக்கையாளரை அறிதல்:
வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் நமக்கு தெரிதல் வேண்டும். அவர்களுடைய தேவை, அவர்களுடைய வாங்கும் திறன் ஆகியவற்றை அறிந்து நம்முடைய பொருட்களை கொண்டு செல்லுதல் வேண்டும்.


வாடிக்கையாளரை பிரித்து அறிதல்:
குறைந்த விலையில் அதே நேரம் அடிக்கடி வாங்குபவர், எப்போதாவது வாங்குபவர், அதிக விலையில் அதே நேரம் அடிக்கடி வாங்குபவர், எப்போதாவது வாங்குபவர் என வாடிக்கையாளரைப் பிரித்து அறிதல் வேண்டும். தள்ளுபடிகள் மூலம் நிறைய வாடிக்கையாளர்களை அறியலாம்.


தகவல்களை பயன்படுத்துதல்:
ஏன் வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்குகிறார்கள் என்பதை முதலில் அறிய வேண்டும். இதன் மூலம் நிறுவனமானது மார்க்கெட்டிங் தீர்மானங்களை எடுக்கலாம்.


அறிந்து கொள்ள வேண்டியவை:
வாடிக்கையாளர் ஒரு தனி நபராக இல்லாமல், ஒரு நிறுவனமாய் இருந்தால் அவர்கள் வாங்கும் நடவடிக்கையைப் பற்றி இன்னும் அதிகமாய் அறிதல் வேண்டும். சர்வேக்களின் மூலமும் அதிக தகவல்களைத் திரட்டலாம்.

-முத்து கார்த்திகேயன்

வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து உருவாக்குகிறோம்!

0

வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்பட்டு வளர்ச்சி பெற்று வருபவர், திரு. உமாசங்கர். ஹார்டி ரேக்ஸ் என்ற பெயரில் கணினித் துறைக்குத் தேவையான ரேக்குகளைத் தயாரிக்கிறார். இது பற்றி திரு. உமாசங்கர் கூறும்போது, “நான் பி.எஸ்சி கணிதம் படித்து இருக்கிறேன்.

பின்னர், கணினித் துறையில் டிப்ளமா மற்றும் எம்பிஏ படித்து இருக்கிறேன். கம்ப்யூட்டர் விற்பனை செய்வதில்தான் எனது தொழில் துவங்கியது. ஆரம்பத்தில் ஒரு சிறிய நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தேன். பின்னர் சிறிது சிறிதாக முன்னேறி பல பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிந்தேன். அதன் காரணமாக இந்தியா முழுவதும் பல கிளைகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை வகித்தேன். எனக்கு சுமார் 20 ஆண்டுகள் இந்த துறையில் அனுபவம் உள்ளது.


எனக்கு சொந்தமாக தொழில் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது. அதனால் ஷான் ஐடி சொல்யூஷன் என்ற நிறுவனத்தைத் துவங்கி, முதலில் கம்ப்யூட்டர் ரேக்குகளை வாங்கி விற்பனை செய்து கொண்டு இருந்தோம். இவ்வாறு ரேக்குகளை வாங்கி விற்பனை செய்து கொண்டு இருந்த போது எனது வாடிக்கையாளராக ஒரு காற்றாலை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களது செர்வர் அறைக்காக ரேக்குகள் வாங்க வந்தார்கள்.

எங்களிடம் இருந்த செர்வர் ரேக்குகளை அவர்களுக்கு காண்பித்தோம். ஆனால் அவர்களுக்கு அது மனநிறைவு தரவில்லை. அதனால் அப்போது மார்க்கெட்டில் இருந்த சிறப்பான ஐந்து நிறுவனங்களின் ரேக்குகளை வாங்கி அவரிடம் காண்பித்தோம். அவர் அப்போது, அந்த ஒவ்வொரு ரேக்கிலும் இருந்து ஒவ்வொரு குறிப்பிட்ட சிறப்பம்சத்தையும் காட்டி தனக்குப் பிடித்து இருப்பதாகக் கூறினார்.


அப்போது நான் யூரோப்பில் இருந்து சிறந்த ஒரு தொழில்நுட்பத்தை அறிந்து வந்து அதற்கேற்ற பாகங்களை வாங்கி வந்து, அவரது தேவைக்கு ஏற்றாற்போல் உள்ள ஒரு சிறப்பான ரேக்கைத் தயாரித்துக் கொடுத்தேன். அதில், அவர் விரும்பிய அனைத்து சிறப்பம்சங்களையும் சேர்த்து தயாரித்து இருந்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் அதை வாங்கிச் சென்றார்.

அப்போது தான் இந்த ரேக்குகளை நாமே தயார் செய்து நம்முடைய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. அப்போது தான் ஹார்டி ரேக்ஸ் என்ற பெயரில் சிறிய அளவிலான தொழிற்சாலையை 2016 -ம் ஆண்டு நிறுவினோம். அதன் மூலமாக நாங்களே செர்வர் ரேக்குகளைத் தயாரிக்க ஆரம்பித்தோம். எங்களுடைய தயாரிப்புக்கான தொழிற்சாலை திருமுல்லைவாயிலில் உள்ளது.


தொடங்கிய ஒரு ஆண்டிலே சுமார் 70 க்கும் அதிகமான டேட்டா சென்டர் ரேக்குகள் விற்பனை ஆனது. ரேக்குகள் உடன் பிடியூ (புரோட்டோகால் டேட்டா யூனிட்), கேபிள் மேனேஜர், பிளாங்கிங் பேனல், ஃபேன் ட்ரே போன்ற சில உதிரி பாகங்கள் இந்த பேக்கேஜில் கிடைக்கும். மற்றும் இந்த உதிரி பாகங்கள் ஆனது வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப தனித் தனியாகவும் விற்பனை செய்கிறோம். பிடியூக்களில் வோல்ட்டேஜ் மற்றும் கரன்ட் ஆகியவற்றை காண்பிக்கும் எல்சிடி டிஸ்ப்ளே ஒன்றை இதனுடன் இணைத்து இருக்கிறோம். இதனால் பவர் ஷார்ட்டேஜ் போன்ற சிக்கல்கள் வருவதைத் தடுக்கலாம்.


பொதுவாக இன்டர்நேஷனல் தரத்தில் எவரும் தமிழ்நாட்டில் இந்த ரேக்குகளை தயாரிப்பது இல்லை என்றும், எம்என்சி நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கின்றன என்றும் எண்ணம் இந்த துறையில் உள்ளவர்கள் இடத்தில் நிலவி வருகிறது. ஆனால் எங்கள் நிறுவனம் இந்த தரத்தில் இந்த இன்டலிஜென்ஸ் ரேக்குகளை தயாரித்து வருகிறது.


விற்பனைக்குப் பிறகு சர்வீஸ் என்பது மிக முக்கியமான பகுதி ஆகும். எங்கள் நிறுவனம் விற்பனையை அடிப்படையாகக் கொண்டு இருப்பதால் சர்வீஸ் என்பது மிக முக்கியம் ஆகும். எங்கள் நிறுவனத்தில் விற்பனை செய்யும் அனைத்து தயாரிப்புகளுக்கும் சர்வீஸ் செய்து தருகிறோம். மற்றும் எங்கள் ரேக்குகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை வாரன்டி தருகிறோம். மற்றும் ரேக்குகள் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆயுட்காலத்தைக் கொண்டவை. எங்களிடம் சிறியது, பெரியது என பல அளவுகளிலும் ரேக்குகள் கிடைக்கின்றன. அளவிற்கு ஏற்றாற்போல் விலையும் மாறுபடும். எங்களிடம் 2000 முதல் 2 லட்சம் வரை டேட்டா சென்டர் ரேக்குகள் கிடைக்கும்.


என்னுடைய மனைவி ஆர்த்தி எனக்கு துணையாக நிறுவனத்தின் நிதி மேலாண்மையைப் பார்த்துக் கொள்கிறார். இதுவரை நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது எங்கள் நிறுவனம். எதிர்காலத்தில் பல வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்வதே எங்கள் இலக்கு” என்று கூறினார் திரு. உமாசங்கர் (9841066557).

-தேன்மொழி

அசைவ உணவகத்தை சிறப்பாக நடத்துவது எப்படி?

0

கால்சென்டரில் வேலை பார்க்கும்போது ஏற்பட்ட சொந்தமாக உணவகம் நடத்த வேண்டும் என்ற எண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுத்து இருக்கிறார், திரு ஸ்ரீஹரி. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள ஓஎம்ஆர் உணவகங்கள் தெருவில் சலாகேடூம் (Salakaydoom) என்ற பெயரில் அசைவ உணவகத்தை நடத்தி வரும் திரு. ஸ்ரீஹரி அவர்களை வளர்தொழில் இதழுக்காக பேட்டி கண்ட போது அவர், உணவகத் தொழில் பற்றிய பல்வேறு செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறிய செய்திகளில் இருந்து.


“சலாகேடூம் பெயரே வேறுபாடாக இருக்கின்றதே என்று பல வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள். உண்மையில் எந்த மொழியிலும் இப்படி ஒரு சொல்லே இல்லை என் நண்பர்கள் என்னை அழைக்கும் செல்லப் பெயர் இது. ”சலுமகேடும்’ என்றால் மலாய் மொழியில் ‘Have a good day’ என்று பொருள். பின்னர் அந்தச் சொல் மருவி சலாகேடூம் என ஆகி விட்டது. எனது நண்பர் ஒருவர் தற்செயலாக, நீ வருங்காலத்தில் ஒட்டல் வைத்தால் சலாகேடூம் என்றுதான் பெயர் வைப்பாய் என கிண்டல் செய்தார். அதை நினைவில் வைத்திருந்து, எனது உணவகத்துக்கு இந்த பெயரை சூட்டினேன். மாறுதலான இந்த பெயர் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.


எனக்கு உணவக தொழிலில் முன் அனுபவம் எதுவும் இல்லை. தொடக்கத்தில் எப்படி செயல்படுவது என்று தெரியாமல் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இறைச்சிகளை வீணடித்து உள்ளேன். பிறகுதான் எவ்வளவு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். வாடிக்கையாளர்களின் தேவையை கண்டவே எனக்கு மூன்று மாதங்கள தேவைப்பட்டன.
தவறுகள் செய்துதான் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டேன். பொதுவாக உணவக தொழிலில் முன் அனுபவம் இல்லை என்றால் தாக்குப்பிடிக்க முடியாது என்று கூறுவார்கள். அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது.


நான் 2006 இல், கடலூர் மாவட்டத்தில் இருந்து வேலைக்காக சென்னை வந்தேன் ஒரு கால்சென்டரில் வேலைக்கு சேர்ந்தேன். இரவுப்பணி. அந்த நேரத்தில் இரவு மூன்று மணிக்கு மேல் பசிக்கும். உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். அப்போது, வரும் காலத்தில் ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் அது ஒட்டல் தொழிலாக மட்டும்தான் இருக்க வேண்டும்; அதுவும் இரவு முழுவதும் திறந்து இருக்கும் ஓட்டலாக நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன்.


இப்போது இரவு முழுவதும் திறந்து வைக்க வேண்டும் என்னும் என் விருப்பம் நிறைவேறவில்லை என்றாலும், ஓஎம்ஆர் ஃபூட் ஸ்ட்ரீட் நிர்வாகம் இரவு ஒரு மணிவரை இயங்குவதற்கான பரிசீலனையை செய்து வருகின்றனர்.இனிவரும் காலங்களிள் 24 மணி நேர உணவகங்கள் என்பது இன்றியமையாததாகி விடும்.


சைவ ஓட்டல், அசைவ ஓட்டல் இரண்டுமே நடத்த கடினமயானதுதான். ஆனால் ரிஸ்க் அதிகம் என்று பார்த்தால் அது அசைவ ஒட்டலில்தான்.


அன்றைக்கு செய்த இறைச்சி உணவுகள் விற்பனை ஆகவில்லை என்றால் இழப்பின் அளவு அதிகமாக இருக்கும். அசைவம் சாப்பிடுபவர் கண்டிப்பாக சைவமும் சாப்பிடுவார். ஆனால் சைவ உணவு மட்டும் உண்பவர் அசைவம் சாப்பிட மாட்டார். எனது சலாகேடூம் முழுக்க முழுக்க அசைவ உணவகம். சைவ வகை உணவுகளே இல்லை. நண்பர்களுடன் வருபவர்களில் ஒருவர் சைவம் என்றால் பக்கத்து ஓட்டலில் வாங்கி வந்து சாப்பிடுங்கள் என்று அன்போடு கூறி விடுவேன்.


இந்த உணவகத்தை தொடங்குவதற்கு முன் சலாகேடூம் என்ற பெயரில் ஒரு வேனில் உணவகம் ஒன்றை வேளச்சேரி பகுதியில் நடத்தினேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதே இடத்தில் தொடர்ந்து இயங்க முடியவில்லை பல்வேறு சிக்கல்கள் வந்தது. இதனால் இடம் மாறி மாறி சென்றதால், வாடிக்கையாளர்களை தக்க வைக்கவோ முடியவில்லை.
இது போன்ற ஃபூட் டிரக் நடத்த ஏற்ற சூழல் தமிழகத்தில் எந்த நகரத்திலும் சரியாக அமைய வில்லை ஆனால் டெல்லி போன்ற நகரங்ளில் இதற்கென தனியே இடங்கள் ஓதுக்கித் தந்து, அரசும் ஆதரவு அளிக்கின்றது.


நான் ஃபூட் டிரக் உணவகம் நடத்திய போது காலை முன்று மணிக்கெல்லாம் பிரியாணி செய்து விற்பனை செய்தேன். இரவு நேரம் வேலை பார்த்து விட்டு வருபவர்கள் பாராட்டி ஆதரவளித்தனர். டிரக் நிறுத்த இடம் என்று பார்த்தால் நல்ல கூட்டம் கூடும் இடமாகவும் இருக்க வேண்டும் அதே நேரம் நம் வாகனத்தால் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் இருக்க கூடாது.


என் உணவகத்தின் சுவர்ப் பகுதிகளை சாப்பாடு தொடர்பான நகைச்சுவைக் காட்சிகளால் அலங்கரித்து உள்ளொம்..
எங்கள் உணவகத்தின் உணவுப் பட்டியலில் என்பது 22 வகைகள் மட்டுமே இடம் பெற்று உள்ளன. மக்கள் எதை அதிகம் விரும்புகிறார்களோ அவற்றை மட்டுமே மெனுவில் குறிப்பிட்டு உள்ளோம்.


எங்கள் உணவகத்தில் பெரும்பாலும் நல்லெண்ணையையே பயன்படுத்துகிறேன். அதேபோல இணிப்பு வகைகளிலும் பனை வெல்லம் பயன்படுத்திச் செய்யும் இனிப்பு வகைகளையும் தயாரித்து வழங்குகிறோம். எங்கள் உணவகத்தில் பிச்சி போட்ட கோழி, இறால் தொக்கு சிறப்பாக விரும்பப்படும் உணவு வகைகள். பிரியாணிக்கு சீரக சம்பா அரிசியையே பயன்படுத்துகின்றோம்.


எங்கள உணவுப் பட்டியல் பெரும்பாலும் தமிழ்ப் பெயர்களால் நிரம்பி இருக்கும். உணவகத்தை தொடங்குவதற்கு முன் சுமார் ஆறு மாதம் ஆராய்ச்சி செய்தே இந்த பட்டிலை தயாரித்து உள்ளேன்.


நான் இதுவரை ஏழு நாடுகளுக்கு சுற்றுப் பயணமாக சென்று உள்ளேன். நான் பார்த்த வரைக்கும் எந்த நாட்டிலும் உணவகங்களின் மீதான விருப்பம் சற்றும் குறையவில்லை.


பொதுவாக ஓட்டலில் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு உகந்தது அல்ல என்ற கருந்து நிலவுகின்றது. ஆனால் தற்போது உள்ள சூழலில் அத்தகைய கருத்துகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வீடுகளில் சமைக்க மக்கள் எங்கு சமையல் பொருட்களை வாங்குகிறார்களோ அங்கேதான் நாங்களும் பொருட்களை வாங்குகின்றோம். மளிகை பொருட்கள் தரமானதாக இருக்கின்றனவா என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பேன்.


ஒரு சில ஊழியர்கள் செய்யும் சிறு தவறுகள் மற்றும் கூடுதல் லாபத்திற்காக செய்யப்படும் செயல்களால்தான் இப்படிப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஊழியர்களுக்கு முதலாளிகள்தான் தரக்கட்டுப்பாட்டைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும். வேண்டும். எனது உணவகம் தொடங்கி மட்டன் கோலா உருண்டை இதுவரைக்கும் நாற்பது முறை முயற்சி செய்து பார்த்து இருப்பேன். தற்போது வரை நான் எதிர்பார்க்கும் சுவை வரவில்லை என்பதால் அதனை சமைத்துப் பரிமாறுவது இல்லை.
எல்லா அசைவ ஓட்டல்களிலும் சுவை ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. சமையலுக்கு நாங்கள் எல்லா பொருட்களையும் முதல் தரத்தில்தான் வாங்குகின்றோம்.


ஆனால், சுவை என்பது சமைக்கும் சமையல்காரர்களைப் பொறுத்தே அமைகிறது. நாம் என்னதான் விலை உயர்ந்த அரிசியை வாங்கிக் கொடுத்தாலும் உரிய நேரத்தில் வடிக்காவிட்டால் சோறு குழைந்து விடும். எங்கள் உணவக சமையல்காரர்களை அவர்கள் போக்கில் சமைக்க விடுவதுதான் என் பழக்கம்.


ஓட்டல் தொடங்கியபோது முதலில் மீன்களை தேர்வு செய்து வாங்கத் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது மீன் வகைகளை என்னால் தரம் பார்த்து வாங்க முடியும்.


பொதுவாக எல்லா அசைவ உணவகங்களிலும் அதிகம் விரும்பப் படும் உணவாக பிரியாணி இருக்கும். இதற்கு முதன்மையான காரணம், அதன் சுவைதான். ஒருவர் பிரியாணி சாப்பிட்டால் அதில் அவருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கும்.


எங்கள் ஓட்டலில் கேட்டரிங் படித்தவர்களைக் காட்டிலும், சற்று அனுபவம் உள்ளவர்களையே சமையல் செய்ய தேர்ந்தெடுக்கிறோம்.


ஃபார்முலா கிச்சன் எனப்படும் சமையல் முறை, எப்போதும் ஒரே அளவில் எல்லா மூலப்பொருட்களையும் சேர்த்து உணவு வகைகளைத் தயார் செய்யும் முறை ஆகும். உணவின் சுவை ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்தும் முறை இது. இது போன்ற ஃபார்முலா கிச்சன் சமையல் முறை வரும் காலங்களில் நம் ஊர்களிலும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.


எங்கள் உணவுகளை ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ், சொமேட்டோ போன்ற ஆன்லைன் தளங்களிலும் விற்பனை செய்து வருகின்றோம். இது போன்று உணவு டெலிவரி முறைகள் என்னைப் போன்று புதிதாக உணவகங்களை தொடங்கியவர் களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து உள்ளது.


உணவகத்தை பொருத்தவரை சீரான தரம், மற்றும் சுவையை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். உடனடியாக பணம் சம்பாதித்து விட வேண்டும் பரபரக்கக் கூடாது.


சுவையை சீராக வைத்து இருப்பது என்பது அசைவ உணவகங்களுக்கு சற்று கடினம்.
நான் எனது அடுத்த உணவகத்தை கோவையில் திறக்க திட்டமிட்டு உள்ளேன்.” என்றார். திரு. ஸ்ரீஹரி (97908 56068).

-தினேஷ் பாண்டியன். செ

எப்போதும் நம்பிக்கை தருபவராக இருங்கள்!

0

Be an encourager. When you encourage others,you boost their self-esteem,enhance their self confidence,make them successful in their endeavors.Be an encourager, ALWAYS – Roy.T.Benett


பிறரை ஊக்கப்படுத்துதலும் உற்சாகப்படுத்துதலும் ஒரு நேர்மறை அணுகுமுறை எனலாம். குறைகளை சுட்டிக் காட்டுவதோ விமர்சனம் செய்வதோ பெரிய விஷயமில்லை. நிறைகளை மனமார பாராட்டுதலும் குறைகள் இருப்பின் பிறர் மனம் புண்படாதவாறு நாசுக்காக சுட்டுவதும், அதனைக் களைய என்ன செய்யலாம் என சொல்வதுமே தலைமைப் பண்பு. சொற்களால், செயல்களால் மனதால் எப்போதும் நம்பிக்கையும் ஊக்கமும் தருபவராக இருங்கள்.


“அட சரியாக செய்தாய்” என்று ஒரு புன்னகை, ஒரு தலை அசைப்பு, முதுகில் ஒரு செல்லத் தட்டு – இவை நிகழ்த்தும் மாற்றங்கள் அளப்பரியது. உங்கள் குடும்பத்தார், நண்பர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், முகம் அறியாதோர் என யாராகிலும் அவர்களைப் பார்க்கும் போது அவர்களிடம் இருக்கும் ஒரு நேர்மறை விஷயத்தைப் பற்றி உண்மையாக பாராட்டுங்கள்.


அது அவர்களுக்கு மட்டில்லாத மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு, உங்களைப் பற்றி ஒரு பாசிட்டிவ் இமேஜையும் (positive image) உருவாக்கும். இடியும் மின்னலும் ஒரு செடியை வளர்க்காது. இதமான பருவ நிலையும், நல்ல நீர் வளமும் பக்குவமான மண்ணுமே வளர்க்கும். கோபம் கொண்டு இடியைப் போல் சத்தம் போடுவதால் எந்த வேலையும் நடக்காது. பண்பான இதமான பேச்சால்தான் காரியங்களைச் சாதிக்க முடியும்.


சொற்பொழிவாளர்களைப் பார்த்தி ருப்பீர்கள். சில பேச்சாளர்கள் பேசும்போது, மக்கள் அப்பேச்சுகளில் கட்டுண்டுக் கிடப்பார்கள். அதில் உண்மை இருக்கின்றதா, அறிவார்ந்ததாகப் பேசுகிறார்களா என்றெல்லாம் பெரும் பாலானவர்கள் பகுத்தறிந்து பார்ப் பதில்லை. ஏனெனில் கேட்பதற்கு இனிமையாக, நேர்மறை சொற்களால் கோர்வையாகக் கட்டமைக்கப்பட்டு பேசும் அவர்களின் திறன் மக்களுக்குப் பிடிக்கும்.


மனிதர்கள் எப்போதும் அன்புக்கு ஏங்குபவர்கள். தன்னை மற்றவர்கள் அங்கீகாரம் செய்ய மாட்டார்களா எனத் தவித்துக் கிடப்பவர்கள். இது சரியில்லை என்று சொல்வதைக் காட்டிலும் இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று சொல்லுதல் நலம் பயக்கும். வெற்று விமர்சனங்களால் ஒன்றும் விளைவது இல்லை.


ஒரு உரையாடலுக்குப் பிறகு நம்முடன் பேசியவருக்கு நாம் என்ன மாதிரியான உணர்வை விட்டு வைக்கிறோம் என்பது முக்கியம். அவருக்கு நம் சொற்கள் மகிழ்வுறச் செய்ததா, சோர்ந்து இருந்த மனத்திற்கு நம்பிக்கைகளை அளித்ததா, குழம்பிய மனதை ஆற்றுப்படுத்தியதா, எதுவும் இல்லை எனினும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இறுதியில், சரி சரி சீக்கிரம் சரியாகும் என்று ஆறுதல் கொடுத்ததா? என்பவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


நல்ல உரையாடல் என்பதை ஒரு அழகான கலை என்றே கூறலாம். சொல்ல வரும் கருத்தினை தெளிவாக, சரியான சொற்களைப் பொருத்தி எதிரில் இருப்பவருக்கு புரியும்படி பேசுகிறோமா என்பது முக்கியம். நாம் பயன்படுத்தும் சொற்கள் நம் மனதின் கண்ணாடி அல்லவா?


ஊக்கம் அளியுங்கள். மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கம் அளிக்கும் போது அவர்களின் சுயமதிப்பைப் பெருக்குகிறீர்கள், தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகிறீர்கள், அவர்களை உழைக்கத் தூண்டுகிறீர்கள், அவர்களை வெற்றி பெறச் செய்கிறீர்கள். எனவே ஊக்கம் அளிப்பவராகவே இருங்கள், எப்போதும்! என்று அறிவுறுத்துகிறார் ராய்.டி.பென்னட் என்ற எழுத்தாளர்.


செயல்பாட்டை நோக்கி உந்தித் தள்ளும் பேரார்வம்

Money is not a motivating factor. Money doesn’t thrill me or make me play better because there are benefits to being wealthy. Iam just happy with a ball at my feet . My motivation comes from playing the game.. I love. If I was not paid to be a professional footballer I would willingly play for nothing.

-Lionel Messi


பேரார்வம், உணர்ச்சிகரமான விருப்பம் என்பதை ஆங்கிலத்தில் பேஷன் (Passion) என்று கூறுகிறார்கள். ஒருவரின் வெற்றியும் அவரின் பேரார்வமும் பின்னிப் பிணைந்தவை. ஆர்வம் இல்லை எனில் வெற்றி இல்லை என்றே சொல்லலாம்.
எது உங்களின் பேஷன் என்பதை நீங்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும். எது உங்களை மிகவும் ஈர்க்கின்றது? எதனைச் செய்யும் போது உங்கள் மனம் மலர்கின்றது? எது உங்களை உயிர்ப்புடன் வைத்து இருக்கின்றது? எதில் வெல்ல முடியும் என்ற அசையா நம்பிக்கை தருகின்றது? எதனை எப்போதும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு இருக்கிறது உங்கள் மனம்?


பிறர் கேலி செய்தாலும் உங்கள் பேஷன் மீது நீங்கள் எரியும் தணல் போல் பெரும் விருப்பத்துடன் இருந்தால் வெற்றி நிச்சயம். உங்களுக்கு அந்த பேஷனில் இயல்பாகவே திறமை இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு வைரத்தைப் பட்டை தீட்டும் செயல்தான்.


நேரம் காலம் பார்க்காமல் அதில் ஈடுபட முடியும். ஆரம்ப கால தோல்விகள் நேர்ந்தாலும், மனம் சோர்வு அடையாமல் மீண்டும் உழைக்க முடியும். சொல்லப் போனால் நம் பேஷனைப் பின் தொடரும் போது அது வேலை என்ற சுமையாகத் தோன்றாது.


உங்கள் வேலை என்பது உங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை நிரப்பப் போகின்றது. உங்களுக்கு முழு நிறைவு வேண்டுமாயின் அது சிறந்த வேலை என்று நீங்கள் நம்ப வேண்டும். அதனை காதலித்து செய்தால்தான் அது சிறந்ததொரு வேலை என்று தோன்றும். அப்படியானதொரு வேலையை உங்கள் இதயம் கண்டு அடையும் வரை ஓயாதீர்கள் – இவை ஆப்பிள் நிறுவனர் திரு.ஸ்டீவ் ஜாப்சின் கருத்துரைகள்.


பெரும் வெற்றி பெறலாம் என்ற அளவிற்கு உங்கள் ஆர்வம் உங்களை வழி நடத்தும். உங்களின் படைப்பு, ஊக்கத்தின் அடிக்கல் இதுதான். எத்தனை இடர்கள், தடைகள் வந்தாலும் மன உறுதியுடன் எதிர்கொள்ளும் துணிவைத் தரும்.
அவர் ஒரு அறிஞர். சொற்பொழிவாற்றிக் கொண்டு இருந்தார். இடைமறித்த ஒருவர், “ஐயா, நான் ஒரு ஓவியனாக வெற்றி பெற வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டேன். ஆனால் நடைமுறை வாழ்வின் சமரசங்களுக்குள் விழுந்து ஒரு சாதாரண வேலையில் பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்” என்று குறைபட்டுக் கொண்டார்.
“அது வெறும் ஆசைதான். உன்னிடம் ஓவியத்தின் மீது பேஷன் இருந்து இருந்தால் நீ அவ்வாறே ஆகியிருப்பாய் ” என்று பதில் உரைத்தார் அந்த அறிஞர்.


வெற்றி அடைந்தவர்கள் என அடையாளம் காணப்படுபவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தோம் எனில், அவர்களின் பேஷன்தான் அவர்களை வழி நடத்தி இருக்கும்.


பணம் மட்டும் ஒரு ஊக்கம் தரும் காரணி அல்ல. பணம் எனக்குக் கிளர்ச்சி ஊட்டுவது இல்லை; நான் செல்வந்தன் ஆவேன் என்று விளையாடச் செய்வதில்லை. என் காலடியில் இருக்கும் பந்து என்னை மகிழச் செய்கிறது. நான் காதலிக்கும் விளையாட்டை நான் ஆடுவதில்தான் என் ஊக்கம் பிறக்கின்றது. தொழில் ரீதியான ஒரு கால்பந்தாட்டக்காரனாக ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும் நான் இவ்வாட்டத்தை ஆடுவேன்.
லியோனல் மெஸ்சி.

-ஜான்சிராணி, போரூர்

வேளாண் தொழில் முனைவோருக்கு உதவும் இணைய தகவல் தளங்கள்

0

விதைகள் மற்றும் உரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தங்களுக்கான விவரங்களை பல்லாயிரம் உழவர் களிடம் இருந்து சேகரித்து, திரும்ப அதே உழவர்களிடமே விற்பனை செய்கின்றன.


ஆறு தலைமுறைகளாக, பென் ரெயின்ஸ்கி-யின் குடும்பம், மேற்கு லோவா வில் உள்ள விண்ட்ஸ்வெப்ட் சமவெளியில் மக்காச் சோளமும் சோயா பீன்சும் பயி ரிட்டு வருகிறது. ஆனால் இன்று அவர், தனது 12 ஆயிரம் ஏக்கரில் தனது புதிய பயிர்களுடன் மதிப்புள்ள தகவல்களையும் அறுவடை செய்து வருகிறார். ரெயின்ஸ்கி என்ன சொல்கிறார்?
“எதிர்காலம் எளிய தகவல் பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப் படும்” என்கிறார்.

அவர் தனது தாத்தாவின் கையெழுத்தில் எழுதப்பட்ட நோட்டுப் புத்தகத்தைப் பாதுகாத்து வருகிறார். அதில், ஒரு மரக்கால் மக்காச் சோளம் எத்தனை கோழி முட்டைகளை உருவாக்கும் என்ற குறிப்பை எழுதி வைத்திருக்கிறார்.


கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் கிளைமேட் கார்ப் என்ற நிறுமத்தில் தகவல் பகுப்பாய்வு சேவையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ரெயின்ஸ்கி சொல்கிறார், “தனது சிறந்த பயிர்களை விதைக்கும் போது, ஆறு விழுக்காடு விதை களைக் குறைக்கிறார். அதுபோல 11 விழுக்காடு உரங்களைக் குறைக்கிறார்.


ஆனால் எப்போதுமே அவரது பயிர்களே சிறந்த பயிர்களாக வளர்ந்து நிற்கின்றன. இதில் எந்த ரகசியமும் கிடையாது. இவை எல்லாம் பயிரிடும் நிலத்தின் தன்மையைக் கண்டறிந்து, அவ்வப் போது குறிப்பெடுத்து வைத்தவை தான் என்கிறார். இப்போது எல்லாமே டிஜிட்டல் மென்கருவிகளாகக் கிடைக்கின்றன.


உழவர்களின் தொழிலறிவு, மகசூல்கள், எரு (உர) வகைகளின் பயன்பாடு, பயிர்கள் வளர்ச்சிக் காலம், மழையின் அளவு மற்றும் இத்தகைய பல்வேறு விவரங்களைத் தொகு த்து, பேயர், சின்கென்டா, டவ்டூபான்ட் மற்றும் பேஸ்ப் முதலிய உலகளாவிய வேளாண்துறை நிறுவனங்கள் செயல்படு கின்றன.


இந்த நிறுவனங்கள், இத்தகைய விவரங்களை ஒரு மென்பொருளில் கொடு த்து, அந்த மென்பொருள், விதைகளின் சேர்க்கை, எருக்கள் மற்றும் அதிகபட்ச மகசூலுக்கு விதைத் தெளிப்பு முறை போன்றவற்றை உழவர்களுக்கு முன்னறிவி த்துக் காட்டுகின்றன. இதனால் இத்தகைய மென்பொருட்களின் விற்பனை அதிகரித்து உள்ளது.


இந்த மென்பொருட்களுக்கு ஏராளமான உழவர்கள் சந்தாதாரர்கள் ஆகியுள்ளனர். கிளைமேட் கார்ப் நிறுவனத்தின் தலைவர் களில் ஒருவரான மைக் ஸ்டெர்ன் என்பவர், “உழவர்களின் வரலாற்று அனுபவங்களைப் பயன்படுத்தி, மென்பொருளை உருவாக்கி, டிஜிட்டல் மயமாக்கி, மீண்டும் உழவர் களிடமே விற்பனை செய்கிறோம்” என்கி றார். டேட்டாவே புதிய கரன்சி, அதாவது, “தகவலே புதிய பணத் தாள்” என்கிறார்.


வேளாண்மையை டிஜிட்டல் மயமாக்கி யது புதிதாக ஏற்பட்டது அல்ல, 1980 வாக்கில், மண் வகைகளைப் பற்றிய தகவல் கள், ஆறு அங்குலம் உள்ள ஃபிளாப்பி தட்டுகளில் பதிவு செய்யப்பட்டு, உரத்தின் தேவைகளைப் பற்றி கணக்கீடு செய்யப் பட்டது. மேலும் இவற்றை மேம்படுத்தி, இணைய நிறுவனங்கள் மாபெரும் தகவல் வங்கியை உருவாக்கின.


இந்த நுட்பம், இன்று உழவர்களின் கைக்கணினியில், ஒவ்வொரு சதுர அடியிலும், விதைத் தெளி ப்பு முறையில், எவ்வளவு விதைகளைப் போட்டால், அதிகபட்சமாக எவ்வளவு மக சூலைப் பெறமுடியும் என்கிற விவரம் வரை விரிவாக கணக்கீடு செய்து அறிவிக்கிறது.


இந்த மென்பொருளில், மேலும் மேலும் உழவர்களின் தொழிலறிவும் பகிர்வு செய்யப் பட்டு, இந்த தகவல் வங்கி, இன்னும் இன்னும் விரிவாகிக் கொண்டே செல்கிறது.


இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்டு, சிறந்த ஆலோசனைகளை உழவர்களுக்கு வழங்குகிறது. இது ஆக்கப் பூர்வமான சுழற்சி. மேலும் மேலும் அதிக தகவல்கள், இணையும் போது, அல்காரிதம்கள் அதிகரிப்பதால், துல்லியத் தன்மை கூடுகிறது.


“உழவர்களுக்கு முன்னறிவிப்பு செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக, அவர்களிடம் இருந்து மேலும் மேலும் தொழிலறிவு பெறப்பட்டு, தகவல் வங்கி இன்னும் பெரிதாகிறது” என்கிறார் பகுப் பாய்வாளர் சான்ஃபோர்டு சி பெர்ன்ஸ்டெயின்.
20 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில், டிஜிட்டல் வேளாண் சந்தை ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர் அதாவது சுமார் 7000 கோடி ரூபாய் என்ற அளவிலேயே எதிர்பார்ப்பு இருந்தது.


ஆனால் இன்று பெரு நிறுவனங்கள் தங்களது வேளாண் தகவல் வங்கியை இணைத்து, ஒரு ஏக்கருக்கு ஒரு டாலர் என்ற அளவில் சந்தா வசூலிக்கப்பட்டு, இத்தகைய மென்பொருட் களை புதிதாக வடிவமைக்கவும், பழையதை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.


“வர்த்தக அளவில் வெற்றிகரமான இத்தகைய பெருந்தகவல் வங்கி, வருங்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது” என்கிறார் பேஸ்ப் நிறுவனத்தின் முதன்மை நிதி அலுவலர் ஹான்ஸ் யுள்ரிச் எங்கெல்.
இந்த ஓட்டம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல்லாயிரம் உழவர்களின் வியப்பூட்டும் அனுபவ அறிவுகளை ஒருங்கிணைத்து வைத்துள்ளது.


பேயர் நிறுவனம் 160 மில்லியன் ஏக்கர் நிலங்களின் தகவல் அறிவுகளை ஒருங்கிணைத்து வைத்துள்ளது.
பேஸ்ப், சின்கென்டா மற்றும் டவ்டூ பான்ட் ஆகிய நிறுவனங்கள் இரண்டாவது இடங்களில் உள்ளன. “யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதைச் சொல்வது கடினம். மிகக் கூடுதல் தகவல், மிகச் சிறந்த தகவல் வங்கியை கட்டமைக்கிறது” என்கிறார் டான் பர்டெட். இவர் சின்கென்டா நிறுவனத்தின் முதல் நிலைத் தலைவராக உள்ளார்.


மேலும் இத்தகைய நிறுவனங்கள் தகவல் சேகரிக்கும் எந்திரனை (ரோபோ) உருவாக் கும் பணித் திட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.

தானியம் அல்லது மது தயாரிக்க மக்காச் சோளம் அல்லது பார்லி தேவைப்படுகிறது. இவை அதிகபட்ச ஸ்டார்ச் கொண்டவை. இவற்றை எந்த உழவரின் நிலத்தில், நம் தேவைக்கேற்ற தானியம் கிடைக்கும் என்பதை கணினித் திரையில் பார்த்தே எளிதாக ஆர்டர் செய்து விடலாம். நம் பயிர்களின் வளர்ச்சி நிலைகளும் அவர் களின் கணினித் திரையில் காட்டப்படும்.


இந்த எந்திரன்கள் சமமற்ற, சகதி நிறைந்த, எத்தகைய நிலமாக இருந்தாலும், அந்த நிலத்தை ஆராய்ந்து, அதன் குறைபாடுகளையும், அவற்றை ஈடுசெய்யும் வழிமுறைகளையும் எச்சரிக்கைகளையும் கொடுக்கும் என்பதாகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


“ஒரு பயிர் நோயில் அல்லது சிக்கலில் இருந்தால், அதன் மேற்புற இலையை சூரிய வெளிச்சத்தை நோக்கித் திருப்பும் வகையில், இந்த எந்திரன் அதன்+ முயற்சியைச் செய்யும்” என்கிறார், கேடபிள்விஎஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டுத் துறை வல்லுநர் லாரெலி டேவிஸ்.


எத்தகைய செயற்கைக் கோள் அல்லது தொழில் நுட்பம் இருந்தாலும், தனிப்பட்ட பயிரின் அல்லது செடியின் நோயை, துயரத்தை, அதன் இலையை வைத்துக் கண்டறிவது கடினம். ஆனால், இந்த எந்திரன்கள் இத்தகைய குறைபாடுகளைக் களையும் என்கிறார்.


ரெயின்ஸ்கி, தனது வேளாண் நிலத்தில் குழந்தைகளுடன் ஈடுபடுவதை பொழுது போக்குகாக வைத்துள்ளார். தகவல் புரட்சி வேளாண் வர்த்தகத்தை மாற்றியமைத்து வருவதாக சொல்கிறார். வாடிக்கையாளர் களின் உணவுத் தேவைகள் வெளிப்படை யானவை. எப்படி விதைப்பது, பயிரிடுவது, வளர்ப்பது, மகசூல் ஈட்டுவது என்பவை மதிப்பு மிக்க தகவல்.


தானியம் அல்லது மது தயாரிக்க மக்காச் சோளம் அல்லது பார்லி தேவைப்படுகிறது. இவை அதிகபட்ச ஸ்டார்ச் கொண்டவை. இவற்றை எந்த உழவரின் நிலத்தில், நம் தேவைக்கேற்ற தானியம் கிடைக்கும் என்பதை கணினித் திரையில் பார்த்தே எளிதாக ஆர்டர் செய்து விடலாம். நம் பயிர்களின் வளர்ச்சி நிலைகளும் அவர் களின் கணினித் திரையில் காட்டப்படும்.


ரெயின்ஸ்கி மேலும், “இந்த சரியான தொழில்நுட்பத்தால், என் பயிர்களுக்கான வாங்குபவர்கள் (வாடிக்கையாளர்கள்) எனக்குக் கிடைக்கிறார்கள்” என்கிறார்.

-ஆலன் பாரி

கமலா ஆரஞ்சு எப்படி பயிரிடப்படுகிறது?

0

மான்டரின் ஆரஞ்சு அல்லது கமலா ஆரஞ்சு வணிக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பழப் பயிராகும். கமலா ஆரஞ்சு நீலகிரி மாவட்டத்தில் 500 எக்டர் நிலப் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு 2760 டன் மகசூல் கிடைக்கிறது. தமிழ்நாட்டின் பழப் பயிர்கள் சாகுபடியில் கமலா ஆரஞ்சு ஐந்தாம் இடத்தை வகிக்கிறது.


இரகங்கள்
கூர்க் ஆரஞ்சு, நாக்பூர் ஆரஞ்சு, கொடை ஆரஞ்சு.
மண் மற்றும் காலநிலை
இது கடல் மட்டத்தில் இருந்து 500 முதல் 1500 மீட்டர் உயரத்தில் மிதமான தட்ப வெப்ப நிலையில் வளரக் கூடியது. ஆரஞ்சு சாகுபடிக்கு சுமார் 150 முதல் 250 செமீ வரை ஆண்டு மழை அளவும், மிதமான குளிரும், வெப்ப நிலையும் அவசியம். ஆழம் மிகுந்த நல்ல வடிகால் வசதியுள்ள செம்புறை மண் மிகவும் ஏற்றதாகும்.


பருவம்
ஜூன்-ஜூலை மற்றும் நவம்பர்-டிசம்பர் மாதங்கள் நடவு செய்ய ஏற்ற பருவமாகும்.


நடவு
மழைக்காலத்தில் நடவு செய்வது ஏற்றது என்ற போதிலும் அதிகமாக மழை பெய்யும் காலங்களில் நடவு செய்வதால், நீர் தேங்கும் சிக்கல் ஏற்படுகிறது. மரத்தின் அடிப்பாகத்தில் இலைகள், காய்ந்த சருகுகள் இவற்றைக் கொண்டு நிலப் போர்வை ஏற்படுத்துவதன் மூலம், வேர் பகுதியில் ஈரப்பதத்தைப் பாது காக்கலாம். மொட்டுக் கட்டிய செடிகளை 6 * 6 மீ இடைவெளியில், 75 * 75 * 75 செமீ அளவுள்ள குழிகளில் மே, ஜூன், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் நட வேண்டும்.


உரமிடுதல்
மரங்கள் நல்ல செழிப்புடன் இருப்ப தற்கும் தொடர்ந்து அதிக மகசூல் தருவதற்கும் தவறாமல் உரமிடுதல் வேண் டும். காய்க்கத் தொடங்காத மரங்களில் மரத்தைச் சுற்றி 15 முதல் 30 செமீ தொலைவில் குழி அமைத்து உரமிட வேண்டும். மண்ணில் தேவையான அளவு ஈரத்தன்மை உள்ளபோது மட்டுமே உரமிடு தல் வேண்டும். காய்க்கும் மரங்கள் நிறைந்த தோட்டத்தில் பாதிக்கும் மேற் பட்ட நிலம் வேர்களின் வளர்ச்சியால் மூடப்படுகிறது. அவ்வாறு உள்ள தோட்ட த்தில் உரங் களை ஒவ்வொரு மரத்தில் இருந்தும், 30 செமீ தொலைவில் இட வேண்டும்.

நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறை – அறிகுறிகள்


துத்தநாகக் குறைபாடு


இளந்தளிர் அமைப்பில் குறுகியும், குவிந்தும், பளபளப்பு நீங்கி, தோல் போன்ற தன்மையுடையதும், கிளை நுனியில் கிளை மொட்டுக்கள் தோன்றுவதும், இலை அடுக்குகள் நெருக்கமாகவும் காணப்படும். துத்தநாகக் குறைபாடு ‘ரோசட்டி’ நோய் என்று அழைக்கப் படுகிறது. இளம் இலை களில் நரம்புகளின் இடையே வெளுத்து விடும். இலை நரம்புகள் இலைப் பரப்புக்கு மேல் தூக்கியது போலத் தெரியும். முற்றிய நிலையில் இலை நடு நரம்பு மட்டும் கரும் பசுமையுடனும் இதர பகுதிகள் வெளிர் பச்சை அல்லது மஞ்சள் நிறத்துடனும் தோன்றும்.


இலைகள் கெட்டித்தன்மை அடையும். சில நேரங்களில் இலைகள் நீண்டும், இலை ஓரங்கள் இரு பக்கமும் சுருண்டும் காணப் படும். இளந் தளிர்கள் தோன்றும், குறைபாடு கள், வளர்ச்சி அடைந்த பின்பும் மறையாது தங்கிவிடும். பொதுவாக ஆரஞ்சின் இலை யில் துத்தநாகச் சத்து 25 இல் இருந்து 50 பிபிஎம் அளவு இருக்க வேண்டும். மேற்படி அளவிற்குக் குறைவாக இலையில் துத்தநாகச் சத்துக் குறைபாடு இலைகளில் ஏற்படும்.


மாங்கனீசு குறைபாடு


இளந்தளிர்களில் வெளிர் பச்சையும், இலையின் நரம்புகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகள் கரும்பச்சை நிறத்திலும் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் வெளிறிய மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மாங்கனீசு குறைபாட்டினால் இலைகளின் அளவு சிறுத்துக் காணப்படுவது இல்லை. மாங்கனீசு பற்றாக்குறை நன்கு வளர்ச்சி அடைந்த தளிர் இலைகளில் முதலில் தோன்றும். மேலும் நிழற்பாங்கான பகுதி யிலுள்ள மரங்கள் மற்றும் மரத்தின் உட்பகுதியில் உள்ள இலைகளில் அதிகம் தென்படும். சூரிய ஒளிபடும் இடங்களில் இலைகளின் மேல் எலுமிச்சம் பழ மஞ்சள் நிறம் தென்படும். முற்றிய இலைகளில் சூரிய ஒளி பட்டாலும் அவை மஞ்சள் நிறத்துடனேயே இருக்கும். சிலவேளை அத்தகைய இலை களில் மஞ்சள் நிறத்துடனே சிறுசிறு வெண் புள்ளிகள் தோன்றலாம். பொதுவாக ஆரஞ் சின் இலைகளில் மாங்கனீசு சத்து 25 முதல் 50 பிபிஎம் அளவில் இருக்க வேண்டும். அந்த அளவிற்குக் குறைந்தால் மேற்படி மாற்றங்கள் இலைகளில் காணப்படும்.


இரும்புச் சத்து குறைபாடு


இலைகளின் மேற்புற பகுதியில் இலை நரம்பு கள் மட்டும் பச்சை நிறத்துடன் காணப் படும். ஆனால் நரம்புகளுக்கு இடையே உள்ள பகுதி மஞ்சள் நிறத்துடன் காணப் படும். இரும்புச் சத்து பற்றாக்குறை அதிக மாக இருப்பின் இலை முழுவதுமே வெளுத்து விடும். புதிதாக வரும் இலைகள் வெளுப்பாக வரும். இளந்தளிர் இலைகளில் மட்டும் முதலில் இக்குறைபாடு மறைந்து போவதும் உண்டு. இலைகளில் இரும்புச் சத்து அளவு 50 இல் இருந்து 120 பிபிஎம் வரை இருத்தல் வேண்டும். அதற்குக் குறைந்தால் மேற்படி இரும்புச் சத்துக் குறைபாடு தோன்றும்.


செம்பு அல்லது தாமிரச் சத்து குறைபாடு


தாமிரச்சத்து குறைபாட்டின் அறிகுறி கள் இளம் இலைகளிலோ அல்லது தளிர்ப் பகுதிகளிலோதான் முதலில் தெரியவரும். நுனி இலைகள் வழக்கத்திற்கு மாறுபாடாக பெரியதாகவும், கரும் பச்சையாகவும் இருக்கும். அப்படியான இலைகளின் அடிப் பகுதியில் சிறுசிறு கொப்புளங்கள் அல்லது புள்ளிகள் தோன்றும். இவற்றுள் ஒரு வகையான பசை போன்ற நீர்மம் காணப் படும். இலை ஓரங்கள், இலைகள் முறுக்கிய நிலையிலும் வளைந்தும் வெளிறியும், துணை நரம்புகள் இலைப் பரப்பில் தூக்கியும் தென்படும்.


பழுப்பு நிறத்தில் அழுகிய பகுதிகள் காணப்படும். தாமிரக் குறைபாட்டை ‘சொறி நோய்’ என்று அழைக்கின்றனர். தாமிரக் குறைபாடு நீண்ட காலங்களுக்கு நீடித்தால் அடி நோக்கி கருகும் நோய் அதிகரிக்கும். பிறகு மரமே சிறுத்து முடிவில் பட்டுவிடும். தாமிரச் சத்து இலையில் 5 முதல் 12 பிபிஎம் அளவு இருத்தல் வேண்டும். அதற்குக் குறைந்தால் இலைகளில் தாமிரச் சத்துக் குறைபாடு தோன்றும்.

போரான் குறைபாடு


இலைகள் குறுகியும், நீண்டும் இருக்கும். இலையின் ஓரங்கள் சீராக இராது. இலைப் பரப்பு மென்மை இழந்து காணப்படும். இளந்தளிரில் இலை அமைப்பு மாறுதல், கொழுந்து கருகிப் போதல், கிளை நுனிகளில் வேறு மொட்டுகள் கிளைத்து வளருதல், இளந் தளிர்களில் ஏற்படும் இக் குறைபாடுகள் மறையாமல் தங்கிவிடும். போரான் குறைபாட்டால் பழங்களின் அமைப்பு மாறியும், அவற்றின் மேற்புறத்தில் கடினமான பகுதிகளும், பழுப்பு நிறப் புள்ளி களும் காணப்படும்.


மாலிப்டினம் குறைபாடு


இலைகள் கீழ்நோக்கி வளைந்து தொங்குதல், பெரிய அளவில் பழுப்பு கலந்த மஞ்சள் நிறப் பகுதிகள் இலைகளில் காணப் படும். இது மஞ்சள் புள்ளி நோய் எனப்படும்.

நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்

நுண்ணூட்டச் சத்துகளான துத்தநாக சல்ஃபேட் (0.5 விழுக்காடு) மாங்கனீசு சல்ஃபேட் (0.05 விழுக்காடு), இரும்பு சல்ஃபேட் (0.25 விழுக்காடு), மக்னீசியம் சல்ஃபேட் (0.5 விழுக்காடு), போரான் (0.1 விழுக்காடு) மற்றும் மாலிப்டினம் (0.003 விழுக்காடு) கொண்ட நுண்ணூட்டச் சத்துக் கலவையை மூன்று மாதங்களுக்கு அளிக்க வேண்டும். மேலும் மரம் ஒன்றுக்கு ஒவ் வோர் ஆண்டும் துத்தநாக சல்ஃபேட், மாங்கனீசு சல்ஃபேட் மற்றும் இரும்பு சல்ஃபேட் ஒவ்வொன்றிலும் 50 கிராம் உரமிடுதல் வேண்டும்.

கமலா ஆரஞ்சிற்கு ஏற்ற கரிம இலைவழி ஊட்டம்

கமலா ஆரஞ்சில் கரிம ஊட்டக் கலவையை இலை வழியாக தெளித்து மகசூலை அதிகரிக்கலாம். மரங்களில் நுண் ணூட்ட சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய கரிம ஊட்டக் கலவையை பின்வரும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கலாம்.


கருவாடு – 5 கிலோ, பொடியாக்கப்பட்ட எலும்புகள் – 5 கிலோ, ஈரமான சாணம் – 4 கிலோ, டிரைடாக்ஸ் புரோக்கும்பன்ஸ் களைகள் – 35 கிலோ பொடியாக வெட்டப்பட்ட இலைகள். மற்றும் வெல்லம் – 5 கிலோ, பால் – 5 லிட்டர். பசுமாட்டுக் கோமியம் – 5 லிட்டர்


மேற்சொன்ன அனைத்தையும் நன்றாகக் கலந்து, 200 விட்டர் தண்ணீருடன் கலக் கவும். இதனை நொதித்தல் முடியும் வரை ஒவ்வொரு நாளும் நன்றாகக் கலக்க வேண்டும். பொதுவாக 30-35 நாட்களுக்குள் நொதித்தல் முடிந்து விடும்.
இதற்கு அறிகுறி யாக நுரைத்தல் நின்றுவிடும். மேலும் கலவையின் மேல் பளபளக்கும் பச்சை நிறத்தில் நீர்போல் தேக்கம் காணப்படும். இதிலிருந்து 5 லிட்டர் கலவையை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். 45 நாட்களுக்குள் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு நீங்கிவிடும். மகசூலும் 15 விழுக்காடு அதிகமாகும்.


கவாத்து செய்தல்
நீர்த் தண்டுகள், காய்ந்த மற்றும் நோய் தாக்கப்பட்டுள்ள கிளைகள், உள்பக்கமாக வளரும் கிளைகள், வேர்களில் இருந்து வரும் தளிர்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். தரை மட்டத்தில் இருந்து 45 செமீ உயரம் வரை நடுத் தண்டில் இருந்து வளரும் இளந் தளிர்களை அகற்ற வேண்டும்.


நீர் பாய்ச்சல்
மண்ணின் ஈரப்பதம், மரத்தின் தோற்றம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டே நீர்ப் பாய்ச்சுதல் வேண்டும். நீர் பாசனம் செய்யும் பொழுது மரத்தின் அடிப் பாகத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மரத்தின் அடிப் பாகத்தில் நீர் தேங்குவதால் வேர் அழுகல் நோய் தாக்கு வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும், நீர் தேங்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் அடித்துச் செல்லப்படுகின்றன.
நீர் பாசனம் செய்யப் பயன்படுத்தும் தண் ரின் தரம் சரியில்லா விட்டால், மரத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில உப்புகள் வேர் பகுதிகளில் அதிகரித்து விடுகின்றன. தேவைக்கு அதிகமாக நீர் பாய்ச்சுவதாலும் மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும். எனவே, தேவைக்கேற்ப முறை யாக நீர் பாய்ச்சுதல் அவசியம்.


ஊடுபயிர்கள்
ஆரஞ்சு நடவு செய்த தொடக்கக் கட்டத்தில் மரங்களுக்கு இடையே உள்ள இடத்தை ஊடு பயிர்கள் நடவு செய்வதன் மூலம் லாபகரமாகப் பயன்படுத்தலாம். அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த பயிர் களான, பட்டாணி, பீன்ஸ் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் ஆரஞ்சு மரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது. ஊடுபயிர்களைத் தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விபரங்கள்.
ஆழமாக வேர்விடும் பயிர்களைத் தவிர்க்க வேண்டும். குறைந்த காலத்தில் மகசூல் தரக் கூடிய பயிர்களாக இருத்தல் வேண்டும். நிலத்தை நன்கு மூடி வளரும் பயிர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மண் அரிப்பைக் கட்டுப்படுத்தலாம். தேர்ந்தெடுக்கும் பயிர்கள் இலாபம் தரக் கூடியதாகவும், நிலத்தின் ஊட்டச்சத்து மற்றும் நீரை அதிக அளவிற்குக் குறைக்காதது ஆகவும் இருத்தல் அவசியம்.


வளர்ச்சி ஊக்கிகள்
ஆரஞ்சு மரங்களில் காய் உதிர்வது விவசாயிகளுக்கு பெரும் சிக்கலாக உள்ளது. காய் உதிர்வதைக் குறைத்து காய் பிடிப்பை அதிகரிக்க 2, 4-டி – 20 பிபிஎம் அல்லது என்ஏஏ 30 பிபிஎம் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளை பூக்கும் காலத்தில் ஒருமுறையும், மீண்டும் காய் பிடிக்கும் காலத்தில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு


பச்சை இலைப்புழு
சிறிய செடியாய் இருப்பின் கைகளால் புழுக்களைப் பொறுக்கி எடுத்து அழித்து விடலாம். வளர்ந்த மரமாக இருப்பின் குளோபைரிபாஸ் 1 லிட்டர் நீரில் 2.0 மில்லி புதுத் தளிர் விடும் காலத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பதனால் முழுப் பாதுகாப்பு பெறலாம்.


இலைத் துளைப்பான்
இலைத் துளைப்பான் சேதத்தைக் கட்டுப்படுத்த மிதைல் டெமட்டான் அல்லது குயினால்பாஸ் ஒரு லிட்டர் நீரில் 2.0 மில்லி இளந்தளிர் தோன்றும் காலங் களில் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.
தண்டுத் துளைப்பான்
மரங்களில் புழுக்கள் துளைத்த ஓட்டை தெரிந்தால் மோனோ குரோட்டோபாஸ், 10 மில்லி மருந்தை பஞ்சில் நனைத்து உட் செலுத்தி களிமண்ணால் மூடிவிடவும். புழுக் களின் கழிவுகள் தென்படும் மரங்களில் ஆல்ட்ரின் 50 விழுக்காடு நனையும் தூள் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் வீதம் கலந்து துளையிட்டு உட்செலுத்துவதன் மூலமும் கட்டுப்படுத்தலாம். நீர்ப்பாசன வசதியற்ற இடங்களில் செல்பாஸ் (பாஸ்டாக்சின்) மாத்திரை ஒன்றை துளையில் இட்டு களி மண்ணால் மூடிவிடவும். புழு தாக்கிய சிறிய கிளைகளை வெட்டி எரித்து விட வேண் டும். விளக்குப் பொறி வைத்துத் தாய் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.


அசுவிணி
ஒரு லிட்டர் நீருக்கு மிதைல் டெமடான் 2.0 மில்லி அல்லது மோனோ குரோட் டோபாஸ் 1.25 மில்லி என்ற அளவில் அசுவிணி தென்படும் காலத்தில் தெளிப் பதின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
செதிள் பூச்சி, மாவுப் பூச்சி, வெள்ளை ஈக்கள்
ஒரு லிட்டர் நீருக்கு கார்பரில் நனையும் தூள் 2 கிராம் அல்லது மிதைல் பாரத்தி யான் 1 மில்லி மருந்துக் கலவையை செடிக ளின் மீது நன்றாக நனையும்படி தெளிப்ப தால் இந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
மேற்கூறிய பூச்சிகளைத் தவிர தத்துப் பூச்சி இலைப் பேன், சிலந்திகள், இலைச் சுருட்டும் புழு, சிவப்பு எறும்புகள் போன்ற பூச்சி வகைகளும் ஆரஞ்சைத் தாக்குகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்த மேற்கூறியுள்ள மருந்துகளின் கலவையே போதுமானது. மிதைல் டெமடான் மற்றும் மோனோ குரோட்டோபாஸ் மருந்து தெளித்த பிறகு குறைந்தது 12 நாட்கள் கழித்தே பழங்களை அறுவடை செய்தல் வேண்டும்.


சாம்பல் நோய்
எக்டருக்கு 25 கிலோ கந்தகத் தூளை தூவுவதன் மூலம், தொடக்க நிலையில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். நோய் முதிர்ந்த நிலையில் ஒரு லிட்டர் நீருக்கு கார்பன்டசிம் 1 கிராம் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.


நுனிக்கருகல் நோய்
பாதிக்கப்பட்ட கிளைகளை வெட்டி விடவும். வெட்டிய பகுதியில் 1 விழுக்காடு போர்டோக் கலவை அல்லது பைடோலான் 0.2 விழுக்காடு மருந்தைத் தெளிக்க வேண்டும். ஆரஞ்சுச் செடிகளை போதிய உரமிட்டு வளமாக்கினால் நோய் தாக்காது.


கேங்கா நோய்
இந்நோய் தோன்றியவுடன் மற்ற மரங்களுக்குப் பரவாமல் தடுக்க, அக்ரிமைசின் அல்லது போசாமைசின் அல்லது கிளாண்டாமைசின் 250 பிபிஎம் என்ற அளவில் (4 லிட்டர் நீரில் ஒரு கிராம் வீதம்) அல்லது ஒரு விழுக்காடு போர்டோக் கலவையைத் தெளிக்க வேண்டும்.


நலிவு நோய்
நோயைப் பரப்பும் அசுவிணியைக் கட்டுப்படுத்த வேண்டும். இந் நோய்க்கு எதிர்ப்புத் திறனுடைய வகைகளான சாத்துக்குடி. ஆரஞ்சு. ஜம்பேரி செடிகளை அடிக் கன்றுகளாகப் பயன்படுத்தி ஒட்டுக் கட்டுவதாலும், இந்நோய் வராமல் தடுக்க லாம்.
ஆரஞ்சின் வைரஸ் நோய்க்காக தடுப்பு ஆற்றல் ஊட்டப்பட்ட கன்றுகளை நடவு செய்தால் நோய் வராமல் தடுக்கலாம்.


வேர் நூற்புழு
பாதிக்கப்பட்ட செடிகளின் வேர்ப் பகுதியைச் சுற்றி இரண்டு அல்லது மூன்று செமீ ஆழம் வரை மேல் மண்ணை இலே சாகக் கிளறி ஒரு மரத்திற்கு கார்போ பியூரான் குருணை 280 கிராம் தூவி உடனே நீர் பாய்ச்ச வேண்டும். குருணை இட்ட மரங்களில் நூற் புழுவின் சேதம் 10 மாதங்கள் வரை கட்டுப்படுத்தப் படுகிறது.


அறுவடை
ஒட்டுக் கட்டிய செடிகளை நடவு செய்த மூன்றில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் காய்க்கத் தொடங்கும். விதைகளில் இருந்து வந்த நாற்றுகள் காய்ப்பதற்கு ஐந்தில் இருந்து ஏழு ஆண்டுகளாகும்.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு ஆண்டில் இரண்டு பருவங்களில் அறுவ டைக்கு வருகிறது. முதல் அறுவடை ஆகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் அறுவடை நவம்பர் – டிசம்பர் மாதங் களிலும் உள்ளன. நவம்பர் – டிசம்பர் மாதங்களில் 80 விழுக்காடு அறுவடைக்கு வருகிறது.


மகசூல்
ஒரு ஆண்டில் எக்டருக்கு 15 இல் இருந்து 20 டன் வரை கிடைக்கிறது.

-ஆ. பபிதா

ஜிஎஸ்டி – மாதவாரியான அட்டவணையை காண வேண்டுமா?

0

பொதுவாக ஜிஎஸ்டி செலுத்துவதற்கான வரி பொறுப்பிற் கான GSTR-1 எனும் படிவம்;

அவ்வாறே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் போதும், வரியே இல்லாது அனுப்பிடும் போதும் வழக்கமான பொரு ளை அல்லது சேவையை பெறும் போதும் நம் கணக்கில் ஜிஎஸ்டி செலுத்திய வரி வரவுக்கான GSTR3B எனும் படிவம்;


ஒரு வியாபார நிறுவனத்திலிருந்து மற்றொரு வியாபார நிறுவனத்திற்கு B2B (business to business) என்றவாறு விற்பனை பட்டி வாயிலாக பொருட்களை அல்லது சேவைகளை பரிமாறிக் கொள்ளும் போது அதற்காக செலுத்தப் போகும் வரி வரவை (input tax credit (ITC)) குறிப்பிடுவதற்கான GSTR2A எனும் படிவம்;


ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவு, செலுத்தப் போகும் உள்ளீட்டு வரி வரவு ஆகிய படிவங்களை தனித் தனியாக ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு காலாண்டி ற்கும் இந்த ஜிஎஸ்டி இணைய தளத்தில் வழங்குவோம்.
பொருளை அல்லது சேவையை பெறுபவரும், வழங்குபவரும் இந்த படிவங்களை தனித்தனியாக வழங்கும் போது அவைகளை ஒப்பீடு செய்து சரி பார்ப்பது என்பது மிகச் சிரமமான பணியாகும். இதனை எளிதாக்க ஜிஎஸ்டி இணைய பக்கத்தில் இவைகளை ஒருங்கிணைத்து, நாம் கோரும் வரி வரவு வரி செலுத்து வதற்கான விவரங்களை மாதவாரியாக ஒரே அட்டவணையாக காண்பதற்கான புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


இந்த அட்டவணையின் வாயிலாக இப்படிவங்களில் ஏதேனும் மாறுதல் உள்ளதாவென ஒப்பிட்டு சரி செய்து கொள்ள முடியும்.


பொதுவாக வழக்கமான ஜிஎஸ்டி செலுத்துபவர் உள்ளீட்டு வரி வரவை GSTR3B எனும் படிவத்திலும், அவ்வாறு செலுத்தப் போகும் உள்ளீட்டு வரி வரவை GSTR2A எனும் படிவத்திலும் பதிவு செய்து மேலேற்றம் செய்வார்கள்.


அதனைத் தொடர்ந்து GSTR-1 எனும் படிவத்தில் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எவ்வளவு உள்ளீட்டு வரி வரவை கணக்கில் கொள்ள முடியும் என்ற அட்டவணை இந்த புதிய செயலி (ஆப்) வாயிலாக கிடைக்கின்றது. இந்த அட்டவணையை எக்செல் தாளாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்


இந்த வசதி ஜிஎஸ்டி – இன் இணைய பக்கத்தில் இதன் Returns எனும் முகப்பு பக்கத்தில் Comparison of liability declared and ITC claimed என்பதன் கீழ் உள்ளது.

-வசந்தகுமாரி

பதிப்புத் தொழிலில் ஒரு புதிய முறை : டிஜிட்டல் பிரின்டர் கை கொடுக்கிறது!

0

அச்சுத் துறை சரிவைக் கண்டு வரும் இந்த நவீன கால கட்டத்தில் பதிப்பாளர் களும், எழுத்தாளர்களும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு குறைந்து விட்டனர். இந்த நிலையிலும் அங்கொன்றும் இங்கொன்று மாக சிறிய எழுத்தாளர்களும், பதிப்பாளர் களும் ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவும் வகையில் புதிதாக பிரின்ட் ஆன் டிமாண்ட் என்ற பதிப்புமுறை வந்துள்ளதாகக் கூறுகிறார் திரு. ஸ்ரீகுமார். அதைப்பற்றி மேலும் அவர் கூறுகையில்,


“அச்சுத்துறை கடந்த சில ஆண்டுகளாக மிகுந்த சரிவைக் கண்டு வருகிறது. அதற்குக் காரணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அனைவரும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டோம். அதனால் தகவல் தொழில்நுட்ப முறைகளும் மாறிவிட்டன. இணையம் பெரிதாக வளர்ந்து விட்டது. அதனால் அனைத்துச் செய்திகளையும், உடனுக்குடன் அறிந்து கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.


அதனால் எழுத்தாளர்களும், தங்களது எழுத்துக்களையும், பதிப்புகளையும் இணையத்தில் பதிவிட ஆரம்பித்து விட்டனர். ஆனால் இப்போதும் புத்தகம் எடுத்துப் படிக்கும் ஆர்வம் உள்ள சிலர் இருக்கின்றனர். அவர்களுக்காக இயங்குகின்ற சில பதிப்பகங்களும் எழுத்தாளர்களும் இருந்து வருகின்றனர். ஒரு பதிப்பாளர் அல்லது எழுத்தாளரின் வாசகர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு தனது படைப்பைக் புத்தகமாகக் தனது சில வாசகர்களுக்காக கொடுக்க விருப்பம் உள்ளது. ஆனால் அந்த புத்தகத்தைப் பதிப்பிக்கச் செல்லும் போதுதான் சிக்கல்.


இந்த டிஜிட்டல் உலகிலும் ஆயிரக்கணக்கான பிரதிகளை வெளியிடும் பதிப்பகங்கள் உள்ளன. அவைகள் புத்தகங்களை பதிப்பிக்க ஆஃப்செட் முறையினையே பயன்படுத்துகின்றனர். இந்த ஆஃப் செட் முறையில் குறைந்த பட்சம் ஆயிரம் பிரதிகளையாவது அச்சிட வேண்டும். அதற்குக் குறைவாக பதிப்பிக்க வேண்டும் என்று எழுத்தாளர்கள் நினைத்தால் அதிக பொருட்செலவு செய்ய வேண்டி உள்ளது.


இந்த சிக்கலால் பல சிறிய எழுத்தாளர்களும், கவிதைத் தொகுப்பாளர்களும் குறைந்த அளவு புத்தகங்களை அச்சிட “பிரின்ட் ஆன் டிமாண்ட்” என்ற புதியமுறையைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளார். இதனால் என்ன பயன் என்றால், இதில் எத்தனை புத்தகங்கள் வேண்டுமோ அந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகளை அச்சிட்டுக் கொள்ளலாம். அதனால் வெறும் பத்து புத்தகங்கள்தான் வேண்டும் எனது வாசகர்களுக்கு என்றாலும், அதனை அச்சிட்டுக் கொள்ளலாம். இந்த முறையால் சிறிய எழுத்தாளர்கள் கூட தங்கள் புத்தகங்களை தாங்களே வெளியிடலாம். இதில் பயன்படுத்தப்படும் எந்திரமானது நாம் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டு இருக்கும் டிஜிட்டல் பிரின்டிங் கருவிதான்.


இந்த முறையைப் பயன்படுத்தி அச்சிடுவதற்கு, லேசர் பிரின்டிங் இயந்திரத்தில் சில மென்பொருட்களை மாற்றிப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் லேசர் தொழில்நுட்பம் என்பதால் சிறிது அதிக விலை தர வேண்டும். ஆனால் இந்த விலை என்பது ஆஃப் செட் பிரின்டிங் முறையில் அதிகப் பிரதிகளை அச்சிட்டு வீணாக்குவதை விட குறைந்த அளவில்தான் இருக்கும்.


நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்த ஒரு டெண்டருக்கு விண்ணப்பித்து இருந்தேன். அது, ஒரு கோடி வாக்காளர்களின் விவரங்களைப் பிரின்ட் எடுத்துத் தரும்படியான ஒரு டெண்டர். அதற்கு மிகக் குறைந்த கால அவகாசமே கொடுத்து இருந்தனர். அவ்வாறு விரைவாக பிரின்ட் எடுப்பதற்கு எனக்கு ஒரு அதிவேக பிரின்டர் தேவைப்பட்டது. அப்போதுதான் நான் லேசர் பிரின்டரைப் பயன்படுத்தி அந்த டெண்டரை முடித்துக் கொடுத்தேன்.


அந்த லேசர் பிரின்டரைப் பார்த்த எனது நண்பர் இந்த பிரின்டரைப் பயன்படுத்தி பிரின்ட் ஆன் டிமாண்ட் என்ற முறையில் புத்தகங்களை அச்சிட்டு குறைந்த அளவிலும் பிரதிகளை தயார் செய்து விற்பனை செய்யலாம் என்று கூறினார்.
அதன் பின்னரே இதனைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். நான் டிஜிட்டல் பிரின்டிங் துறையில் பல ஆண்டுகளாக இருந்து வந்ததால் எனக்கு இந்த பிரின்ட் ஆன் டிமாண்ட் தேவை இருக்கின்ற வாடிக்கையாளர்களை அடைவது மிக எளிதாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதனைச் செய்து வருகிறோம்.


இதனால் பல நன்மைகள் உள்ளன. பதிப்பாளர்களுக்கு மட்டும் அல்ல. பல அரிய படைப்புகளுக்கும்தான். இதனைப் பயன்படுத்தி பல பழைய அரிய காவியம், இலக்கியம் தொடர்பான புத்தகங்களையும் குறைந்த பிரதிகளாகப் பதித்து வைத்துக் கொள்ளலாம்.


இது, டிஎன்பிஎஸ்சி மற்றும் ஐஏஎஸ் அகாடமி, கோச்சிங் சென்டர்கள், பள்ளிகள் போன்ற சில பிரதிகள் தேவைப்படும் அலுவலகங்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த முறையில் பிரதிகளைத் தேவைப்படும் அளவிற்கு அச்சிட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் நிறைய புத்தகங்களை அடித்து இருப்பு வைத்திருக்கத் தேவை இல்லை” என்று கூறினார் திரு. ஸ்ரீகுமார்.

-உஷா. சி

தேங்காய் மட்டையைச் சுற்றி உள்ள பல தொழில்கள்!

0

கயிறு தொழில்கள் மற்றும் விவசாயத்திற்கு இந்திய அரசின் கயிறு வாரியம் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. அவை,

  1. கயிறு தொழில் துவங்க மானியம் வழங்குதல்.
  2. கயிறு தொழில்களான தென்னை நார் உற்பத்தி, கயிறு உற்பத்தி, சுருள் கயிறு உற்பத்தி, நார் கயிறு கட்டில் உற்பத்தி, நார் கழிவு உரம் தயாரித்தல், கயிறு மதிப்பூட்டப்பட்ட தொழில்கள், துவங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்குதல்.
  3. கயிறு பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த, வெளிநாடு சென்று வர, மற்றும் பொருட்காட்சியில் பங்குபெற மானியம் வழங்குதல்.
  4. கயிறு தொழில்களை புதுப்பிக்க மானியம் வழங்குதல்
  5. நார் கழிவுகளை இயற்கை உரமாக மாற்ற தொழில்நுட்பம் வழங்குதல்
  6. கயிறு பூவஸ்த்தரா கொண்டு ஆறு, குளம், ஏரி கரைகளில் மண் அரிப்பைத் தடுக்க தொழில்நுட்பம் வழங்குதல்
  7. கயிறு பொருட்களைப் பயன்படுத்தி பசும்புல்வெளி அமைக்கத் தொழில்நுட்பம் வழங்குதல்
  8. அதிக அளவு தண்ணீர்ப் பயன்பாட்டைக்குறைத்து, நார்க் கழிவுகளைப் பயன்படுத்தி நீரைச் சேமித்து வைத்து விவசாயம் செய்ய தொழில்நுட்பம் வழங்குதல்
  9. நார் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் நுண்ணுயிரியை ஆய்வுக் கூடத்தில் தயாரித்து விற்பனைக்கு வழங்குதல்
  10. மகளிருக்கான சுய தொழில் துவங்க மகிளா காயர் யோஜனாத் திட்டத்தின் மூலம் கயிறு திரித்தல் பயிற்சி, மிதியடித் தயாரித்தல் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்குதல்
  11. கயிறு கைவினை மற்றும் அணிகலன் தயாரித்தல் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்குதல்
  12. மேற்கண்ட பயிற்சிகளை பெறும் மகளிருக்கு மானியத்துடன் தொழில் துவங்க உதவி வழங்குதல்.
  13. கயிறு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு வழங்குதல்
  14. கயிறு தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி ஆகும் பொருட்களின் தரத்தை அறிய ஆய்வுக் கூட வசதிகள் வழங்குதல்
  15. தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் மானியம் வழங்கி புதிய தொழிற்சாலைகளை அதிக அளவில் உருவாக்கி அதன் மூலம் கிராமப் புறங்களிலேயே அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.

அஸ்பயர் திட்டம்

(A Scheme for Promotion Innovation Rural Industry And Entrepreneurship)

  1. தொழில் வாய்ப்பைப் பயன்படுத்தி வேலை இல்லாமையை குறைப்பது
  2. தொழில் முனைவோரின் கயிறு சார்ந்த பயிற்சியின் மூலமாக கயிறு சார்ந்த தொழிலாக முறைப்படுத்துதல்
  3. கீழ் மட்டத்தில் உள்ளோர்களை பொருளாதார ரீதியில் மேன்மைப்படுத்துதல்
  4. புதிய சந்தை வாய்ப்பு முறையைப் பயன்படுத்தி கயிறு தொழிலின் வர்த்தகத்தை உயர்த்துதல்
  5. புதிய தொழில்நுட்பத்தை மேம்பாடு செய்வதன் மூலம் கயிறு சார்ந்த தொழிலை வர்த்தக ரீதியாக வலிமைப்படுத்துதல்

கயிறு வாரியம், தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள மண்டல விரிவாக்க மையத்தில் வாழ்வாதாராத்திற்கான தொழில் வளர்ச்சி முனைப்பு என்கிற பெயரில் கயிறு மற்றும் கயிறு சார்ந்த தொழில்கள் வளர்ச்சிக்கான பயிற்சிகள் தரப்பட்டு வருகின்றன. கயிறு மற்றும் கயிறு சார்ந்த தொழில் தொடங்க விருப்பம் உள்ள புதிய தொழில் முனைவோர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கீழ்கண்ட பயிற்சிகளைப் பெற முயற்சிக்கலாம்.

இடம் விட்டு இடம் கொண்டு செல்லக் கூடிய நார் உற்பத்தி இயந்திரத்தில் பயிற்சி;


மோட்டார் பொருத்தப்பட்ட பரம்பரை ராட்டையில் கயிறு உற்பத்தி;


தானியங்கி ஸ்பின்னிங் மெஷினில் கயிறு உற்பத்தி;


மின்னனு ராட்டையில் கயிறு உற்பத்தி; கயிற்றால் ஆன கைவினைப்பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் உற்பத்தி;


அனுகிரஹா/அனுபம் தறிகள் கொண்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ் நெசவு நெய்தல்;

கயிறு நார்த்தூள்(காயர் பித்) கொண்டு வீட்டுத் தோட்டம்/புல்வெளி அமைத்தல்;

கயிறு நார்த்தூள் கொண்டு உரம் மற்றும் தூள் கட்டிகள் (பித் பிளாக்) செய்தல்;

நார் பதப்படுத்துதல்;

டெகார்டிக் கேட்டர் இயந்திரம் கொண்ட நார் உற்பத்தி செய்தல்;


கயிறு சார்ந்த உரங்கள் தயாரித்தல்;


கயிற்றாலான தோட்டக் கருவிகள் தயாரித்தல்;


கயிறு தொழில் விற்பனைக்குப் பயிற்சி;


வயது வரம்பு : 18 வயதிற்கு மேற்பட்டோர்
பயிற்சிக் கட்டணம் : ரூ.2000 + ஜிஎஸ்டி வரி
பெண்களுக்குப் பயிற்சிக் கட்டணம்: ரூ.1000 + ஜிஎஸ்டி வரி
SC/ST: ரூ.100 (அனுமதிக் கட்டணம் மட்டும்)

மேலும் விவரங்களுக்கு: வளர்ச்சி அலுவலர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்ப்பட்டி(அஞ்சல்) வல்லம்(வழி), தஞ்சாவூர்- 613 403, தொலைபேசி: 04362-264655


மின்னஞ்சல்: [email protected]
கயிறு வாரியப் பயிற்சி, கிளைகள், கடன், மானியம், மார்க்கெட் உதவி பற்றி அறிய:
secretary, coir board, govt.of india, mahathma gandhi road, cochin- 682016, kerala. ph: 0484-2372979, email: [email protected], website: www.coirboard.in

-எம். ஞானசேகர் (தொழில் ஆலோசகர்)