வருமான வரிச் சட்டத்தின் புதிய பிரிவு 115BAA

0

நடைமுறையில் இருந்துவரும் வருமான வரிச்சட்டத்தில் தற்போது புதியதாக 115BAA எனும் பிரிவு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த புதிய பிரிவின் வழியாக, உள்நாட்டு நிறுவனங்கள் விரும்பினால் தற்போது செலுத்தும் 25% (அல்லது 30%) என்ற வருமான வரிவிகிதத்திற்கு பதிலாக வரிவிகிதத்தை 3% அல்லது 8% அளவிற்கு குறைத்து 22% எனும் புதிய வரி விகிதத்தில் வருமானவரி செலுத்தலாம். இந்த புதிய பிரிவு 115BAA இன்படி, தாம் வருமானவரி செலுத்தவிரும்புவதாக தேர்வுசெய்த எந்தவொரு உள்நாட்டு நிறுவனமும் அதனுடைய முந்தைய ஆண்டில் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நடப்பு ஆண்டில் ஈட்டிய அதனுடைய மொத்த வருமானத்தில் புதிய வரிவிகிதத்தில் வருமானவரி செலுத்தமுடியும். இதன் வாயிலாக, நடப்பு ஆண்டில் புதிய வருமான வரிவிகிதத்தில் வருமான வரியை செலுத்துவதற்கான வாய்ப்பு பல்வேறு உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கின்றது. இதன் விளைவாக, அவ்வாறான நிறுவனங்களில் வரி தொடர்பான பணப்பரிமாற்றமானது வெகுவாக குறைந்து அதனால் கிடைக்கும் நடைமுறை மூலதளத்தை வியாபார வளர்ச்சிக்கு பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளது.

ஏற்கனவே, இதேபோன்று அறிமுகபடுத்தப்பட்ட வருமான வரிசட்டம் பிரிவு 115BAB என்பதை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மட்டுமே சலுகைகளை பெறமுடியும் என கட்டுப்படுத்தப் பட்டது என்பது போன்று இல்லாமல், தற்போது இந்தியாவில் செயல்படும் அனைத்து உள்நாட்டு நிறுவனங்களும் இந்த புதிய பிரிவு 115BAA பயன்படுத்திகொள்ளமுடியும். ஆயினும், இந்த புதிய சலுகைகளை நடைமுறையில் பெறுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்ய வேண்டும். அத்தகைய உள்நாட்டு நிறுவனங்கள் பின்வரும் கழிவுகளையும் வரி விலக்குகளையும் கூறக்கூடாது.

பிரிவு 10AA. இன்படி, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள அலகுகள் தொடர்பான வரிவிலக்குகள், ஆந்திரா, பீகார், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் ஒரு சில பின்தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள், எந்திரங்கள் ஆகியவற்றை நிறுவுவதற்காக வருமான வரிச்சட்டம் பிரிவு 32 (1) (iia) இன்படி கூடுதல் தேய்மானமும் பிரிவு 32AD இன்படி முதலீட்டு படியும்
இந்தியாவில் பெட்ரோலியம் அல்லது இயற்கை எரிவாயு அல்லது இந்த இரு தொழில்களிலும் சேர்ந்து ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வருமானவரிச்சட்டம் பிரிவு 33ABA இன்படி தள மறுசீரமைப்பிற்கான வைப்புத்தொகை செய்வதன் மூலமான கழிவுகள்.

பிரிவு 35 இன்படி அறிவியல் ஆராய்ச்சிக்கு செலவிடப்பட்ட செலவுகளுக்கான கழிவுகள்.

பிரிவு 35AD இன்படி குறிப்பிட்ட வணிகத்தின் மூலதன செலவுகளுக்கான கழிவுகள்.

பிரிவு 35CCC இன்படி வேளாண் விரிவாக்கத் திட்டம் அல்லது பிரிவு35CCD இன்படி திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றிற்கான செலவுகளுக்கான கழிவுகள்.

VI-A இன் பிரிவு 80 / JJAA இன்படி புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான விலக்குகளைத் தவிர மிகுதி பிரிவு 80 uA, 80IAB, 80IB போன்றவற்றில் குறிப்பிடப்பட்ட வருமானத்தின் உள்ளிட்ட கழிவுகள்.

அத்தகைய இந்திய நிறுவனங்களானவை தங்களுடைய ஆண்டு வருமான வரி படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்கு முன்னதாகவே குறைக்கப்பட்ட இந்த புதிய22% எனும் வருமானவரி விகிதத்தில் வருமான வரி செலுத்துகின்ற வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நிறுவனமானது வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்க தவறிவிட்டாலும் அல்லது பிரிவு139 (1)இன்படி குறிப்பிடப்பட்ட தேதிக்குப் பிறகு வருமானவரி அறிக்கையை சமர்ப்பித்திருந்தாலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதற்கான விருப்பத்தை பிரிவு 139 இன்படி (இந்த புதிய பிரிவு 115BAA இன்படி [ 4])குறிப்பிடப்பட்ட தேதிக்கு முன்பே பயன்படுத்த வேண்டும்.

இ) இவ்வாறான வாய்ப்பை பயன்படுத்திய உடன், இந்த புதிய பிரிவு 115BAA திரும்பப் பெறுவது சாத்தியமில்லை. மேலும், வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 32 (1) (iia) இன்படி கூடுதல் தேய்மான சலுகைககளையும் பிரிவு 115JAA இன் படி குறைந்தபட்ச மாற்று வரி வரவு சலுகைகளையும் இலாபநட்ட கணக்கில் கொண்டுவருவது தொடர்பான பின்வரும் கருத்துகளில் தெளிவு பெற வேண்டும்.

1) பிரிவு 32 (1) (iia) இன்படி கூடுதல் தேய்மானத்தின் காரணமாக ஏற்படும் இழப்பு எண். 29/2019 நாள் 02.10.2019 அன்று வெளியிடப்பட்ட வருமான வரித் துறை சுற்றறிக்கையின்படி, 115BAA பிரிவின் கீழ் வருமான வரி செலுத்த விரும்புவதாகத் தேர்ந்தெடுத்த உள்நாட்டு நிறுவனங்களின் லாபநட்ட கணக்கில் கூடுதல் தேய்மானத்தின் காரணமாக ஏற்படும் இழப்பை பின்வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்லவோ அல்லது சரிசெய்து கொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

பொதுவாக, நிறுவனத்தின் ஏற்படும் இழப்புகளானவை, வருமானம் ஈட்டுவதற்காக அதிக படியாக செலவு செய்தல், நிலையான சொத்துக்களின் தேய்மானத்தால் ஏற்படும் இழப்பு ஆகிய இரண்டு வகைகளாக இருக்கலாம். நிறுவனத்தின் வருமான வரி அறிக்கையில் தேய்மானத்தை குறிப்பிடாவிட்டால் அந்நிறுவனத்திற்கு இலாபம் இருக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறான நிலையில், தேய்மானம் காரணமாக மட்டுமே ஏற்படுகின்ற இழப்பானது வருமான வரிச் சட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட தேய்மானம் என குறிப்பிடப்படுகின்றது. மேலும், இது எதிர்வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதற்கான காலவரையறை எதுவும் தீர்மானிக்கப்படவில்லை. இப்போது, பிரிவு 32 (1) (ii அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் தேய்மானத்தில் இருந்து இத்தகைய இழப்பு ஏற்பட்டால், இந்த இழப்பை எதிர்வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்லவோ அல்லது 115BAA பிரிவைத் தேர்ந்தெடுத்த நிறுவனத்தின் வருமானத்தில் அதை சரிசெய்துகொள்ளவோ முடியாது.

மேற்கண்ட விளக்கத்தை ஒரு எளிய சான்றுடன் விளக்கலாம். கம்பெனி ஏபிசி லிமிடெட் கூடுதல் தேய்மானம் காரணமாக பிரிவு 32(1)(iia) இன்படி ரூ. 10,00,000. ஆக அதன் நட்டம் ஏற்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிதியாண்டில், இந்நிறுவனம் அதன் மொத்த வருமானத்தில் 22% எனும் குறைந்த வரிவிகிதத்தில் வருமான வரியாக செலுத்துவதற்காக இந்த புதிய பிரிவு 115BAA ஐ தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இப்போது, இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 5,00,000. இந்த வருமானத்தில், மேற்கண்ட கூடுதல் தேய்மானத்திற்கான இழப்பு ரூ. 10,00,000 சரிசெய்து கொள்ள தகுதியற்றதாக மாறுகின்ற நிலை உருவாகும். மேற்கண்ட சட்டப்பிரிவானது, உள்நாட்டு நிறுவனத்திற்கு 115BAA ஐத் தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு இல்லாததால், முதலில் இந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பு ரூ .10,00,000 ஐ பின்வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக, வழக்கம்போன்ற சாதாரண வரிவிகிதத்தின் கீழ் வரி செலுத்துவதற்கான வருமானவரிஅறிக்கையை சமர்ப்பித்து விட்டு அதன்பின்னர் அடுத்துவரும் ஆண்டுகளிலிருந்து, பிரிவு 115BAA இன் குறைந்த வரிவிகிதத்தில் வரியை செலுத்துவதற்கு தெரிவுசெய்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகின்றது

பிரிவு 115JAA இன் கீழ் குறைந்தபட்ச மாற்று வரிவரவு:
பிரிவு 115BAA ஐத் தேர்ந்தெடுக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு, 115JB கணக்கிடுதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. பிரிவு 115BAA ஐத் தேர்ந்தெடுப்பதற்கு நிறுவனத்திற்கு குறைந்தபட்ச மாற்று வரி விதிமுறை பொருந்தாது என்பதால், வழக்கமான ஏற்பாட்டின் கீழ் கணக்கிடப்பட்ட அதன் இலாபத்தில் அதன் வரவு சரிசெய்து கொள்ளமுடியாது. மேற்கண்ட சட்டவரிகளானது இந்த ஆண்டு குறைந்தபட்ச மாற்று வரிவரவை சரிசெய்து, வரவை முழுவதுமாக சரிசெய்து கொள்ளலாம். பின்னர், அடுத்த ஆண்டு முதல் 115BAA பிரிவைத் தேர்வுசெய்து கொள்ளலாம். இந்த புதிய வாய்ப்பை தேர்வுசெய்வதற்குமுன், 115BAA பிரிவைத் தேர்ந்தெடுக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு, வருமானத்தைப் பொருட் படுத்தாமல் 10% கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். மதிப்பீட்டாளரின் மொத்த வருமானத்தில் 25.168% வரிக்கு பயனுள்ள வரி விகிதம் வருகிறது. (22% * 1.1 * 1.04), பிரிவு 115BAA இன் கீழ் வரி செலுத்துவதற்கு தேர்வுசெய்த பின்னர், அதை பின்வரும் அனைத்து கணக்கியல் ஆண்டிற்கும் பின்பற்றப்பட வேண்டும். பிரிவு 115BAA இன் கீழ் வரி செலுத்த விரும்பும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு பொருந்தும்.

– முனைவர். ச. குப்பன்

முகநூலில் தொழில் பக்கம் | டிஜிட்டல் மார்க்கெட்டிங் 8

0

தொழில் செய்பவர்கள் அனைவரும் முகநூலில் தொழில் பக்கத்தை (Business Page) உருவாக்க வேண்டும். தொழில்பக்கத்தை உருவாக்க உங்களுடைய பொதுப்பயன்பாட்டிற்காக உள்ள முகநூலில் மட்டுமே உருவாக்க முடியும். நேரடியாக தொழில் பக்கத்தை உருவாக்க முடியாது. முகநூலில், மேல் பக்கத்தில் உள்ள Page, Ad, Group, Event என்று நான்கு வகைகள் ஆப்ஷன்கள் வரும். அதில் Page என்பதை தேர்வு செய்யவும். அங்கு Business அல்லது Brand மற்றும் Community அல்லது Public Figure என்ற இரண்டு விதமாக தோன்றும். இங்கு தொழில் தொடர்பான பக்கத்தை உருவாக்க வேண்டுமென்பதால் முதலில் உள்ள Business என்பதை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.Community அல்லது Public Figure என்பது, சமூகத்தில் அனைவருக்கும் தெரிந்த நபர்கள் இவற்றை தேர்ந்து எடுத்தால், அவர்களுடைய ரசிகர்கள், தொண்டர்கள் இவரை பின்பற்ற (Follow) இந்த பக்கம் வசதியாக இருக்கும். காரணம், தனிப்பட்ட நண்பர்கள் சேர்ப்பில் ஐந்தாயிரம் நபர்களுக்கு மேல் சேர்க்க முடியாது என்பதால் அவர்கள் இந்த பக்கத்தை தேர்வு செய்து கொள்வார்கள்.

சென்னையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இரண்டு நாள் பயிற்சி

தொழில் பக்கத்தை தேர்வு செய்த பிறகு Page Name மற்றும் Category என்ற பக்கம் தோன்றும். அந்த இடத்தில் உங்கள் முகநூல் தொழில் பக்கத்திற்கு பெயர் வைக்கவும். அடுத்து, உங்கள் தொழில் எந்த வகையில் வருகிறது (சான்று- மொபைல் விற்பனை, கார் சர்விஸ்) என்று பார்த்து அவற்றை தேர்வு செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று தொழில் முகவரி தெளிவாக கொடுக்கவும். முகவரிக்கு பிறகு உங்கள் பக்கத்திற்கு என்று Profile picture மற்றும் Cover Banner இரண்டையும் இணைக்க வேண்டும். பொதுவாக, எந்த சமூக வலைத்தளத்திலும் கணக்கு தொடங்க இருந்தால் அதற்கு முன்பு Profile picture மற்றும் Cover Banner இவை இரண்டையும் தயார் செய்து கொள்ளுங்கள். அனைத்து சமூக வலைத்தளங்களில் இவை இரண்டும் தேவைபடும். Profile Picture என்பதில் உங்கள் தொழில் Logo பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் உங்கள் தொழில் logo தெரியவரும். இவற்றை தவிர்த்து வேறு படங்களும் அங்கு பயன்படுத்தலாம். ஆனால், அவை உங்கள் தொழில் சார்ந்து இருந்தால் நன்றாக இருக்கும். Cover Picture இடத்தில் உங்கள் தொழில் புகைப்படம் வைத்துவிடுங்கள் அல்லது உங்கள் விற்பனை பொருட்கள் படங்களும் இணைக்கலாம். மாதம் ஒருமுறை Cover Picture மாற்றுங்கள். உங்கள் பக்கத்திற்கு வருபவர்களின் கவனத்தை அவை கவரும். இப்பொழுது, முகநூலில் உங்கள் தொழிலுக்கென்று பக்கம் (Business Page) தயாராகிவிட்டது.

தொடக்கத்தில், பக்கத்தில் சில அடிப்படை செய்திகளை செய்யவேண்டும். உங்கள் தொழில் பக்கத்திற்கு என்று தனியாகப் unique பெயர் தேர்வு செய்ய வேண்டும். profile picture W› create unique name என்று தோன்றும் அவற்றை தேர்வு செய்து பெயர் கொடுங்கள் அந்த பெயர் வேறு யாராவது எடுத்து இருந்தால் வேறு பெயர் தேர்வு செய்யவேண்டும். அதேபோல், நீங்கள் தேர்ந்து எடுத்த பெயர் உலகில் வேறு யாரும் தேர்வு செய்ய முடியாது. இந்த பெயரைத்தான் facebook.com/uniquename என்று உங்கள் விளம்பரத்தில் கொடுக்க வேண்டும். இந்த பெயரை கொண்டு ஒருவர் தேடினால் நேரிடையாக உங்கள் பக்கத்திற்கு வரமுடியும். தொழில் பக்கத்தில் இடதுபுறத்தில் வரிசையாக கீழ் நோக்கி Home, Service, Photos, Videos, About என்று இன்னும் நிறைய Tabs இருக்கும். அவற்றில் முதலில் About என்பதை தேர்ந்து எடுத்துகொள்ளுங்கள். அதில், உங்கள் தொழில் தொடங்கிய ஆண்டு, மின்னஞ்சல், வலைதள முகவரி, தொலைபேசி எண், இன்னும் பிற அடிப்படை தகவல்களை கொடுத்துவிடுங்கள். ஒரு வாடிக்கையாளர் உங்கள் தொழில் பக்கத்திற்கு வந்தால் உங்களைப்பற்றி முழு தகவலும் அவருக்குத் தெரியவேண்டும்.

முகநூலில் நிறைய போலி கணக்குகள் இருப்பதால் மக்களுக்கு அவற்றின் மீது, சிறிது நம்பிக்கை குறைவாகவே இருக்கும். அதனால், நம் தொழில் பற்றிய அனைத்து தகவல்களும் அங்கு இருந்தால் வாடிக்கையார்கள் உங்களை தொடர்பு கொண்டு கேட்பார்கள். அதனால், முடிந்தவரை தொழில் தொடர்பான அனைத்து தகவல்களும் கொடுத்துவிடுங்கள்.

இன்று முகநூலில் மட்டுமே நிறையபேர் பொருட்களை விற்பனை செய்து தொழில் செய்து வருகிறார்கள். ஆனால், உங்கள் தொழிலுக்கென்று வலைத்தளம் ஒன்றை உருவாக்கி அதில் முகநூலை இணைத்து விற்பனை செய்யுங்கள். நாளை முகநூலில் எந்தவித term& condition மாற்றுவார்கள் என்று தெரியாததால் வலைத்தளம் நமக்கு பலமாக இருக்கும். முகநூல் தொடர்பாக இன்னும் நிறைய பயன்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

-செழியன்.ஜா

வங்கி ஊழியரின் விவசாயப் பயணம்

0

முப்பத்து எட்டு ஆண்டுகளாக வங்கியில் பணியாற்றிய செந்தமிழ்ச் செல்வன் என்பவர் வேலூர் மாவட்டம் லத்தேரிக்கு அருகில், அறிவுத் தோட்டம் என்று ஒருத் தோட்டத்தை நிறுவி விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் கூறியதாவது, நான் வங்கியில் வேலை செய்த தொடக்க காலத்தில் விவசாயிகள் கடன் வாங்கிவிட்டு ஏமாற்று பவர்களாக இருக்கிறார்கள் என்றுதான் நினைத்து இருந்தேன். பின்பு, வங்கியில் விவசாயிகளுக்கு கடன் உதவி அளிக்கும் துறையில் பணியாற்றியபோது தான் பல விவசாயிகள் கடன் வேண்டாம் என்று தவிர்ப்பது புரிந்தது. விவசாயமே ஒழுங்காக செய்யமுடியவில்லை என்ற நிலையில் கடன் வாங்கி என்னசெய்யப் போகிறோம் என்றனர். அடுத்து, பசுமைப் புரட்சிக்குப் பின்பு, இரசாயண உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துகின்றனர். அந்த கழிவுகள் உணவில் கலந்து நஞ்சு ஏற்பட்டு உள்ளது.

இதனால் பலநோய்கள் ஏற்படுகின்றன. இந்த இரண்டு செய்திகள் என்னில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. அதற்கு தீர்வுக் காணவேண்டும் என்பதற் காகவே நான் விவசாயத் தொழிலில் ஈடுபட்டேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன், இந்த நிலத்தை வாங்கும் பொழுது தென்னைமரங்கள் உயிருக்கு ஊசலாடும் நிலையில் இருந்தன. அதற்கு தண்ணீரும், இயற்கை உரங்களும் கொடுத்தேன். அந்தவகையில், கடல்பாசி உரத்தை தென்னைமரத்தின் வேர்களுக்குக் கொடுத்தேன். இது நன்கு பலன் அளித்தது. இந்த தோட்டத்தில் மாமரங்களும் நிறைய இருக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், 40 எலுமிச்சைச் செடிகளை வைத்தேன். தற்போது, நிறைய காய்களைக் கொடுக்கின்றன. வாரத்திற்கு ஒருமுறை பறிப்போம். 10 கிலோ காய்கள் கிடைக்கும். குறிப்பாக, இந்தத் தோட்டத்தில் நிறைய மரங்கள்தான் இருக்கும். அவைதான் இந்த தோட்டத்தின் மிகப்பெரிய சொத்து.

இரசாயணங்கள் சேர்த்தால் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் வரைக்கும் வளமாக இருக்கும். ஆனால், இயற்கை விவசாயத்தால் வாழ்நாள் முழுவதும் மரம் வளமாக இருக்கும் உரமிட்ட மரம் மட்டும் அல்லாது சுற்றி உள்ள அனைத்தும் வளமாக இருக்கும். காய்ப்பும் குறையாது, குறையவும் இல்லை.

இதனால், பலவகையான பறவைகளும், வண்ணத்துப் பூச்சிகளும் வந்து செல்கின்றன. விதைப் பரவலுக்கு பறவைகள் முக்கியமான காரணம் ஆகும். இதுவும் இங்கு நடைபெறுகிறது. இந்த தோட்டத்தில் நாங்கள் விதைக்காத, புதியதாக பலச் செடிகள் முளைத்து உள்ளன.

நாங்கள் மோனோ கிராஃப்ட் முறையிலும், மல்டி கிராஃப்ட் முறையிலும் பயிரிடுகிறோம். கொள்ளு, சாமை, கம்பு இவற்றை மரங்களுக்கு இடையில் விதைத்து உள்ளோம். இந்த தோட்டத்தில் பூச்செடிகளுக்கு என்று தனிப்பகுதி உள்ளது. செடிகளின் வளர்ச்சிக்கு வண்ணத்துப் பூச்சிகளும், வண்டுகளும் பெரும் உதவியாக இருக்கின்றன. இதேபோல், மூலிகைச் செடிகளுக்கும் தனிப்பகுதி உள்ளது. பிரண்டை, நொச்சி, ஆடாதொடை, சிரியா நங்கை, கற்றாழை, லெமன் கிராஸ், கல்யாண முருங்கை போன்றவைகள் உள்ளன. இந்தப் பகுதியானது சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு சிறு மருத்துவமனையாக செயல்படுகிறது.

இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் என்பது மிகவும் குறைவு, கிணறுகள் எல்லாம் வற்றி விட்டன. அதனால், போர் அமைத்து நீரைப் பயன்படுத்துகிறேன். மழைப் பெய்து சாலையில் வீணாக ஓடும் நீரை பள்ளம் தோண்டி நிலத்தடி நீராக சேமிக்கிறோம். பூமிக்கு அடியில் இருந்து எடுக்கும் நீரை திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

முதல் மூன்று ஆண்டுகள் பராமரிப்பிற்காக எடுத்துக் கொண்டேன். அதன் பிறகு, ஓரளவு இலாபம் வரத் தொடங்கியது. தென்னை ஆண்டுக்கு 10,000 காய்களைக் கொடுக்கின்றது. ஒரு காயின் விலை. 15 ரூபாய் என விற்கிறேன். தற்போது, ஏறக்குறைய ஆண்டுக்கு 4,00,000 வருமானம் வருகின்றது.

அதில் செலவிற்காக 2,00,000 போகின்றது. இன்றளவிலும், விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதல் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது. இதில் நானும் விதிவிலக்கு அல்ல. சுற்று வட்டாரத்திலும், என் நண்பர்கள் மூலமும் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறேன்.

நான் இந்த தொழிலை தொடங்கும்போது, விவசாயம் சாத்தியம், லாபகரமானது, பெரிய அளவில் பயனளிக்கும் என்பதைக் கொண்டுதான் தொடங்கினேன் என்றார்.

– சா. கு. கனிமொழி

பிளாஸ்டிக் பைகளை விட தீங்கு நிறைந்தது பேப்பர் பைகள்

0

பைகளில் பிளாஸ்டிக், பேப்பர், பருத்தி எதுவாக இருந்தாலும், அவை அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். முதலில், நாம் புதியதாக ஒரு பையை வாங்கினாலே அது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் செயல் என்கின்றனர் நிபுணர்கள். பிளாஸ்டிக் பைகள்தானே சுற்றுச்சூழலுக்குக் கேடு, பேப்பர் பைகளும், பருத்தி பைகளும் பயன்படுத்தினால் என்ன தவறு? என்று சிந்தித்தால் அவை பிளாஸ்டிக் பைகளைக் காட்டிலும் மோசமானவை. பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்ய முடியும்.

ஒரு பை, சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானதா என்று சிந்திக்கும்போது அதன் ஆயுட்காலம் முடிந்தபின் அது என்னவாகும் என்பதை பொறுத்தே முடிவு செய்கிறோம். ஆனால், அந்த பையை தயாரிக்க ஆகும் செலவு குறித்தோ அல்லது ஆற்றல் குறித்தோ சிந்திப்பது இல்லை. ஒரு பை சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானதா இல்லையா என்பதை இந்த நான்கு விஷயங்களை கொண்டு நாம் கணிக்க முடியும்.

அந்த பையை தயாரிக்க எவ்வளவு ஆற்றல் தேவைப்படும்; அதை எத்தனை முறை மறுசுழற்சி செய்யலாம்; மறுசுழற்சி செய்வது எளிதானதா; அதன் ஆயுட்காலம் முடிந்தவுடன் எத்தனை சீக்கிரத்தில் மக்கும்; `நான்கு மடங்கு ஆற்றல் தேவை`
பேப்பர் அல்லது பருத்தி பைகளை தயாரிப்பதும் சுற்றுச்சூழலை பாதிக்கும்.

2011ஆம் ஆண்டு வட அயர்லாந்து சட்டசபை, வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், பிளாஸ்டிக் பையை தயாரிக்க தேவைப் படும் ஆற்றலைக் காட்டிலும் பேப்பர் பையைத் தயாரிக்க நான்கு மடங்கு அதிக ஆற்றல் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேப்பர் பைகளை தயாரிக்க காடுகள் அழிக்கப்பட வேண்டும். ஆனால், எண்ணெய் சுத்திகரிப்பின் கழிவுகளால் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்படுகின்றன என்கிறது அந்த ஆய்வு. அந்த ஆய்வின்படி, பிளாஸ்டிக் பைகளைக் காட்டிலும் பேப்பர் பை தயாரிப்பு முறையில் நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தயாரிப்பதைக் காட்டிலும் அடர்த்தியான தீய ரசாயனங்கள் உற்பத்தியாகின்றன. “அது கணமாகவும் உள்ளது,” என்று நார்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் நீடித்த நிலைத்த கழிவு மேலாண்மையியல் பேராசிரியர் மார்கரெட் பேட்ஸ் தெரிவிக்கிறார். “எனவே அவற்றை எங்கு தயாரிக்கிறோம் என்பதைப் பொறுத்து அவற்றை எடுத்துச் செல்வதில் பல சுற்றுச்சூழல் விளைவுகளும் உள்ளன.”

அதில் சில சுற்றுச்சூழல் பாதிப்புகள், புதிய காடுகளை வளர்ப்பதன் மூலம் சரி செய்யப்படலாம். வளி மண்டலத்தில் வரக்கூடிய கார்பனை கட்டுபடுத்தி அது பருவநிலை மாற்றத்தை தடுக்க உதவும். அதிகளவிலான கார்பன் பேப்பர் பையை தொடர்ந்து பருத்தி பைகள். அதனை தயாரிக்க அதிகளவிலான கார்பன் மற்றும் நீர் தேவைப்படுகிறது.

“பருத்தி என்பது அதிகம் தண்ணீர் தேவைப்படுகிற பயிர். எனவே, இது பேஷன் துறையிலும் பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது.” என்கிறார் மார்கரெட்.

2006ஆம் ஆண்டு பிரிட்டனின் சுற்றுச்சூழல் முகமை பல பொருட்களால் ஆன பைகளை ஆராய்ந்தது. குறைந்த பருவநிலை மாற்றத் தாக்கம் ஏற்படுவதற்கு எத்தனைமுறை மறுபயன்பாட்டிற்கு அவை உட்படுத்தப்பட வேண்டும் என்று ஆராயப்பட்டது. அதில், பேப்பர் பைகள் குறைந்தது மூன்று முறையும், பிளாஸ்டிக் பைகள் நான்கு முறையும் மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அதே நேரம், பருத்தி பைகள் 131 முறை மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கண்டறியப்பட்டது.

பேப்பர் பைகள்தான் மிக குறைந்த முறையில் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும்; பேப்பர் பைகள் என்பது அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பயன்படுத்தப்படும். அது கிழிந்து போகலாம். முடிவாக, சுற்றுச்சூழல் முகமை, பேப்பர் பைகளே குறைந்த முறையில் மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது. என்று கூறுகிறது. மாறாக பருத்திப் பைகள், அதிக நாட்களுக்கு உழைக்க கூடியதாக உள்ளது.

பேப்பர் பைகள் குறைந்த நாட்களுக்கு மட்டுமே தாக்குபிடிப்பதால், அது சீக்கிரத்தில் மட்க கூடும். எனவே, அது அதிக நாட்களுக்கு குப்பையாகவோ அல்லது வன உயிர்களுக்கு ஆபத்தாகவோ இருக்காது. பிளாஸ்டிக் பைகள் மட்க 400 -1000 வருடங்கள் ஆகும். மேலும், பிளாஸ்டிக் மாசுபாடுக்கான காரணமாகவும் உள்ளது.

ஆனால், பிளாஸ்டிக் பையை கண்டுபிடித்த ஸ்டென் கஸ்டஃப் துலினின் குடும்பத்தினர், “இந்த பைகள் நமது பூமியை காக்க உருவாக்கப்பட்டன. இது அவருக்கு தெரிந்தால் அவர் மிகவும் வருத்தம் அடைந்திருப்பார்.” என்கின்றனர். இந்த பையை மக்கள் பயன்படுத்தி விட்டு தூக்கி போடுவர் என்று எனது தந்தைக்கு தெரிந்திருந்தால் அவர் மிகவும் வித்தியாசமாக உணர்ந்திருப்பார் என்கிறார் ஸ்டெனின் மகன் ராயோல் துலின்.

ஸ்டென் ஸ்வீடனில் 1959ஆம் ஆண்டு பிளாஸ்டிக் பையை கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் பலர் பேப்பர் பைகளை பயன்படுத்தி வந்தனர். அதனால் பல மரங்கள் வெட்டப்பட்டன. எனவே, அவர் அதிக நாட்கள் நீடிக்கக் கூடிய ஒரு பையை கண்டுபிடித்தார். அவரைப் பொறுத்தவரை அதை திரும்ப திரும்ப பயன்படுத்தவே இதை கண்டுபிடித்தார். எனவே, இதனால் குறைவான மரங்கள் வெட்டப்படும் என்றும் அவர் நினைத்தார். தற்போது நாம் ஏதாவது கடைக்கு சென்றால் நமது பையை கொண்டு போக வேண்டும் என்று சொல்கிறார்கள் அதைதான் அவர் 70 மற்றும் 80 களில் செய்தார், என்கிறார் ராயோல் துலின். ஆனால், மறு சுழற்சி பிளாஸ்டிக்கால் ஆன பையைக்கூட மக்கள் ஒரே ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுகின்றனர். எனவே, தற்போது இந்த உலகம் ப்ளாஸ்டிக் மாசுபாடால் தத்தளித்து வருகிறது. பையை அடிக்கடி மாற்றினாலும் சுற்றுச்சூழலில் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, எந்த பையாக இருந்தாலும் அது எதனால் ஆனதாக இருந்தாலும் அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதே சிறந்தது என்கிறார் மார்கரெட். பலர் தாங்கள் பல்பொருள் அங்காடிக்கு பொருட்களை வாங்க வரும்போது பைகளை எடுத்து வர மறந்துவிட்டு புதிய பைகளை வாங்குகின்றனர். இது சுற்றுச்சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலை வழி மரம் வளர்ப்பு

0

இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டுச் செடியாக வளரும் என்பதை தனது கண்டுபிடிப்பின் மூலம் நிரூபித்துள்ளார் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி எஸ். ராஜரத்தினம்.

திசு வளர்ப்பு முறை (Tissue Culture) அடிப்படையில் ‘இலை வழி நாற்று முறை’ எனப்படும் இந்த நுட்பம் நடைபெற்று உள்ளது. பொதுவாக, விதைகளில் இருந்து தான் வேர் உருவாகி, செடி, மரம் ஆகியவை வளரும். இதனால், மரங்களை வளர்ப்பதற்கு விதைகள் அதிக அளவில் தேவைப் படுகின்றன. தற்போது சந்தைபடுத்தப்படும் பெரும் பாலான விதை ரகங்கள் மரபணுக்களில் மாற்றம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இதை சரிசெய்ய களம் இறங்கிய ராஜரத்தினம், இலையிலிருந்து செடியை உருவாக்கும் ‘இலை வழி நாற்று முறையை அறிமுகம் செய்து வேளாண் விஞ்ஞானி களை வியப்பு அடையச் செய்து உள்ளார். அவர் கூறியதாவது, ”2010ஆம் ஆண்டு முதல் ‘இலை வழி நாற்று முறை’ குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறேன். பொதுவாக, பத்து லட்சம் மரக்கன்றுகளை உருவாக்க, பத்து லட்சம் விதைகள் தேவைப்படும். இதுவே, ஒரு மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருப்பதால், அவற்றையே விதையாக பயன்படுத்த முடியுமா என்ற அடிப்படையில்தான் இதை கண்டுபிடித்தேன். இதன் மூலம் உற்பத்திச் செலவு 30 சதவீதம் குறையும். அதே நேரத்தில் அதிகளவில் மகசூலும் கிடைக்கும்,” என்கிறார். ஐம்பது வயதாகும் இந்த விவசாயி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பண்ணைத் தொழில்நுட்பத்தில் இளங்கலை முடித்துவிட்டு, தற்போது முதுகலை பயின்று வருகிறார்.

”இலைவழி நாற்று முறை என்பது மிக எளிமையான இயற்கையான ஒரு நாற்று முறை. கலப்படம் இல்லாத மரபணுக்களைக் கொண்ட தாய் மரத்தில் இருந்து சுத்தமான ரகத்தின் இலையை எடுத்து, இளநீரில் ஊறவைத்து, ஈரமான மண்ணில் நட்டுவைத்துவிட்டு, மிதமான சூரிய ஒளியில் வைத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தண்ணீர் ஊற்றினால் போதும், நான்கு வாரத்தில் இலையிலிருந்து வேர் உருவாகிவிடும்.”

”இதுவரை இலைவழி நாற்று உற்பத்தி முறையில் கொய்யா, நாவல் மரங்களை உருவாக்கியுள்ளேன். தற்போது வேப்ப மரக் கன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு தாவர வகைகளை மீட்டுருவாக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்.”

”தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம், நடுவண அரசின் சிறு, குறு, மத்திய தொழில் களுக்கான அமைச்சகம் ஆகியவை 6.25 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கி எனது முயற்சியை ஊக்குவித்துள்ளன,” என தெரிவிக்கிறார் இவர். இந்த புதிய கண்டுபிடிப்புக்காக காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறார் வேளாண் விஞ்ஞானி என பாராட்டப்படும் விவசாயி ராஜரத்தினம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு இலை வழி நாற்று முறை குறித்த பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறார்.

”இலை வழி நாற்று முறையில் அனைத்து மரங்களையும், அரிய வகை மூலிகைச் செடிகளையும் மீட்டுருவாக்கம் செய்து, இயற்கையை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். மேலும், இம்முறையின் மூலம் மரம் வளர்ப்பை எளிமையாக்கி, தரமான தாவரங்களையும் பசுமையான சூழலையும் உருவாக்குவதே எனது நோக்கம். இலை வழி நாற்றுமுறை என்பது எதிர்காலத்தில் மிகப் பெரிய பசுமை புரட்சியாக அமையும்,” என நம்பிக்கை தெரிவிக்கிறார் ராஜரத்தினம்.

”திசு வளர்ப்பு முறை அடிப்படையில்தான் இலை வழி நாற்று முறையும் சாத்தியமாகி உள்ளது. திசு வளர்ப்பில் ஊக்கிகளை (inducers) பயன்படுத்தி அணுக்களின் வளர்ச்சி தூண்டப்படும். அதுபோலவே, இலையின் நடுவே இருக்கக்கூடிய நடுக்காம்பின் வளர்ச்சியை தூண்டுவதால் வேர் உருவாகக்கூடிய சாத்தியத்தை இவர் உறுதிபடுத்தி உள்ளார். சில தாவரங்களில் விதையில் இருந்தே நோய்கள் இருக்கும். இந்த முறையில் அவை தடுக்கப்படும். மேலும், அரிய வகை தாவர வகைகளை மீட்பதில் இலைவழி நாற்று முறை வருங்காலத்தில் பெரும்பங்கு வகிக்கும். இந்திய அளவில் முதல்முறையாக கோவையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது தமிழகத்திற்கு பெருமை,” என்கிறார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கத்தின் முன்னாள் இயக்குநர் ரா. முருகேசன்.

ஏர்டாஸ்கர் எனும் சேவைகளுக்கான சந்தை

0

ஏர்டாஸ்கர் என்பது, ஒரு நபருக்கு தம்முடைய பகுதியில் கிடைக்கின்ற சேவைகளை/பணிகளைக் கண்டுபிடித்து பயன்படுத்தி கொள்வதற்கும், அவ்வாறான பணிகளை/சேவைகளைச் செய்பவர்கள் ஆற்றும் பணிகளுக்கு/சேவைகளுக்கு போதுமான பணத்தை சம்பாதிப்பதற்கும் உதவுகின்ற ஒரு இணையதள சந்தையாகும்.

ஏர்டாஸ்கரானது, பணிகளை வெளியாட்களை கொண்டு செய்துகொள்வதற்கும், உள்ளூரில் பணியாளர்களை தேடிக்கண்டுபிடிப்பதற்கும், தொலைதூரத்தில் இருந்து பணிகளை செய்வதற்கும் அல்லது பணம் சம்பாதிக்க நம்பகமானதாகவும், மற்றும் முழுமையாக பணிகளை செய்வதற்கான ஒரு சமூக இணையதள சந்தை ஆகும். இந்த ஏர்டாஸ்கரானது, நடைமுறையில் வருவதற்கு முன்பு, திறமையும், பணிசெய்ய நேரமும் கிடைக்கக்கூடியவர்கள் தங்களுடைய உள்ளூர் சமூகத்தில் உள்ள மற்றவர்களை அடையாளம் காண எளிதான வழி எதுவும் இல்லாமல் இருந்தது.

பாரம்பரியமாக வகைப்படுத்தப்பட்ட விளம்பரம், நேரடி அஞ்சல்களைத் தவிர புதிய வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதற்காக சுயதொழில் செய்பவர்களுக்கும், சிறுவணிகர்களுக்கும், தொழில் வல்லுநர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட விருப்பங்களாக இருந்து வந்தன.

ஏர்டாஸ்கரில், பணியை செய்பவர்கள் தாங்கள் எந்தவொரு பணியையும் செய்யதயாராக இருப்பதாகவும், அதற்காக எதிர்பார்க்கப்படும் கட்டணத்தையும் குறிப்பிட்டு பதிவுசெய்து கொள்ளலாம். அவ்வாறே, ஒரு பணியை கொடுப்போர் பணிக்கு ஏற்ற கட்டணம் செலுத்த தயாராக இருப்பதாகவும், சலுகைகளை வழங்க இருப்பதாகவும் குறிப்பிடலாம். பின்னர், அவர்களின் அனைத்து சலுகைகளையும் மதிப்பாய்வு செய்து, வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேவையான நபரைத் இந்த டாஸ்கரில் தேர்ந்தெடுக்க முடியும். தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு ஒருவருக்கொருவர் கிடைக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பணியைச் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொள்ளவும் முடியும்.

டாஸ்கரில் விரும்பும் போதெல்லாம் வேலை வாய்ப்புகளை தேடி இணைய உலா வரலாம். அவர்களுக்கு ஆர்வம் உள்ள பணியைக் காணும்போது, அது குறித்து கேள்விகளைக் கேட்கலாம், சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளலாம். சலுகைகளை வழங்கலாம். அதனை தொடர்ந்து துவங்கிய பணி முடிந்ததும், டாஸ்கருக்கு அதற்கான பணம் கிடைக்கும். வீடுகளை சுத்தம் செய்தல், தோட்டம் பராமரித்தல், வழங்கும் பணிகள், பிளம்பிங் பணிகள், தளவாடங்களை ஒருங்கிணைத்தல், மொழிபெயர்ப்பு பணிகள், இணையதள அபிவிருத்தி, நகல் எழுதுதல், செல்லப்பிராணி வளர்ப்பு, குழந்தைகள் காப்பகம், உணவு வழங்குதல் ஆகியவை சமூகத்தில் இருக்கக்கூடிய சில பிரபலமான பணிகள் ஆகும்.

எந்தவொரு பணியையும் முடிக்க தேவையான திறன்கள் செய்யும் பணியை முழுமையாக சார்ந்து உள்ளது. சில பணிகளுக்கு நிபுணத்துவ திறன்கள் தேவை இல்லை. மறுதலையாக, குறிப்பிட்ட பணிக்கு சான்று அளிக்கப்பட்ட மெக்கானிக் அல்லது எலக்ட்ரீசியன் என்பன போன்ற தொழில் நுட்ப பணிகளுக்கு அவ்வாறான, பணிகளை முடிக்க அந்தந்த திறன்களை கொண்டிருக்க வேண்டும்.

ஏர்டாஸ்கரை பயன்படுத்துவதற்கான குறிப்புகள்:
நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை சரிபார்க்க உதவும் பேட்ஜ்கள் மூலம் கணக்கை சரிபார்த்து உறுதிசெய்யவும். இந்த இணையதள மேடையை உள்ளூர் சமூகம் போல நடத்த வேண்டும். சட்டவிரோத அல்லது மோசடி நடத்தையில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு, சட்டவிதிகளை மீறுவோர்களும், மோசடி நடத்தையில் ஈடுபடுவோர்களும் தளத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். உயர் நட்சத்திர மதிப்பீடு, நிறைவு வீதத்தை பராமரிக்க முயற்சி செய்யவும். ஏனெனில், அவை பணியின் தரத்தையும், பணியாளர்களின் நம்பகத்தன்மைக்குமான சுட்டிகாட்டிகளாக விளங்குகின்றன. மேலும் விவரங்களுக்கு airtasker.com எனும் இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

வர்த்தக முத்திரையில் (Trade Mark) அத்துமீறுதல் (Infringement)
இந்தியாவில் வர்த்தக முத்திரைகள் சட்டம் 1999 இல் 29 வது பிரிவின் கீழ், இது குறித்து பின்வருமாறு வரையறுக்கப்பட்டு உள்ளது. அங்கீகரிக்கப்படாத ஒருவர் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையுடன் ஒத்த (identical) அல்லது ஏமாற்றும் வகையில் ஒரே மாதிரியான (deceptively similar) வர்த்தக முத்திரையைப் பயன்படுத்தும் போது அது வர்த்தக முத்திரையில் அத்துமீறல் என அழைக்கப்படுகிறது. இவ்வாறான வர்த்தக முத்திரை அத்துமீறலை, நேரடி அத்துமீறல், மறைமுக அத்துமீறல் என இரண்டு வகையாக பிரிக்கலாம். நேரடி அத்துமீறல் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையின் சட்டரீதியான உரிமைகளின் எந்தவொரு அங்கீகாரமற்ற பயன்பாடும் நேரடி வர்த்தக அத்துமீறல் ஆகும். வர்த்தக முத்திரை சட்டம், 2019 இன் பிரிவு 29 இன் கீழ் பொருந்தக்கூடிய முதல்நோக்கில் வரையறுக்கப்படும் வர்த்தக முத்திரைகளின் அத்து மீறலின் கூறுகள் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளன.

அங்கீகரிக்கப்படாத நபர் – பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையின் உரிமையாளர் அல்லது உரிமம் பெறாத நபர்.

‘ஒத்த’ அல்லது ‘ஏமாற்றும் வகையில் ஒரே மாதிரியான’ – பொதுவாக, இதற்கான மதிப்பெண்கள் ஒரே மாதிரியானதா, இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு பொதுமக்கள் இடையே குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்பதன் மூலம் செயல்படுவது ஆகும். நுகர்வோர் இரண்டு மதிப்பெண்களுக்கும் இடையில் குழப்பமடைய வாய்ப்பு உள்ளதெனில், அத்துமீறல் உள்ளது என அறிந்து கொள்ளவும்.

பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை – ஒரு பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையில் மட்டுமே அத்துமீறுதலை காண முடியும். பதிவுசெய்யப்படாத வர்த்தக முத்திரையைப் பொறுத்தவரை, கடந்து செல்வதற்கான பொதுவான சட்டக் கருத்துமட்டுமே பொருந்தும்.

பொருட்கள் / சேவைகள் – இதில், அத்து மீறலை நிறுவுவதற்கு, அத்துமீறுபவரின் பொருட்களை/ சேவை களை கூட பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை பிரதிநிதித்துவப்படுத்தும் பொருள் களுடன் ஒத்ததாகவோ அல்லது அதே போன்று இருக்க வேண்டும்.

மறைமுக அத்துமீறல் என்பது ஒரு பொதுவான சட்டக் கொள்கையாகும். இது நேரடி அத்துமீறல் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, நேரடி அத்து மீறல்களைத் தூண்டுவதற்கான நபர்களுக்கும் பொறுப்புகளைக் கூறுகின்றது. மேலும், மறைமுக அத்து மீறலானது இரண்டாம் நிலை பொறுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இது பங்களிப்பு அத்து மீறல் பொறுப்பும் ஆகும்.

இரண்டு சூழ்நிலைகளில் பங்களிப்பு அத்துமீறல்களுக்கு ஒரு நபர் பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு நபர் அத்துமீறல் பற்றி அறிந்துகொண்டு இருந்தால், மற்றும் ஒரு நபர் அத்து மீறலைச் செய்ய நேரடியாக பொருள் ரீதியாக பங்களிக்கும்போது அல்லது தூண்டும்போது.
பின்வரும் சூழ்நிலைகளில் அத்துமீறுவதற்காக ஒரு நபர் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.

ஒரு நபர் நேரடியாக அத்துமீறுபவரின் செயல்களைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டிருக்கும்போது.

ஒரு நபர் அத்து மீறலில் இருந்து நிதி பலன்களைப் பெறும்போது.
ஒரு நபர் அத்து மீறல் குறித்த அறிவைக் கொண்டு அதற்கு பங்களிக்கும் போது.

பொதுவாக, முதலாளி-பணியாளர் உறவுகளில் வழக்கமான பொறுப்பு பொருந்தும். இது வர்த்தக முத்திரைகள் சட்டத்தின் 114 வது பிரிவில் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பிரிவின் படி, ஒரு நிறுவனம் இந்த சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்தால், நல்ல நம்பிக்கையுடனும், அத்து மீறல் பற்றிய அறிவும் இல்லாமல் செயல்பட்ட நபரைத் தவிர அந்த நிறுவனத்திற்கு பொறுப்பான ஒவ்வொரு நபரும் பொறுப்பேற்க வேண்டும்.

மொத்தத்தில், ஒரு நபர் நேரடியாக அத்துமீறவில்லை என்றாலும், மற்றொரு நபர் வர்த்தக முத்திரையில் அத்துமீறும் போது மறைமுக அத்துமீறல் ஏற்படுகிறது. தொடர்பு உடைய ஒவ்வொரு நபருக்கும் பொறுப்புக்கூற வேண்டி இருப்பதால், மறைமுக அத்துமீறல் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த மறைமுக அத்துமீறலுக்கு அடிப்படையாக மின்வர்த்தக (e-commerce) துறையின் வளர்ச்சி மிகவும் முக்கியமான காரணம் ஆகும். ஆகவே, நேரடியாக அல்லது மறைமுகமாக இருந்தாலும், இந்தியாவில் எந்தவொரு வர்த்தக முத்திரை அத்து மீறலும் பொறுப்பை ஈர்க்கும். வர்த்தக முத்திரைகளில் அத்து மீறுவதைத் தவிர்க்க, நம்முடைய பிராண்ட் அல்லது தயாரிப்பைத் தொடங்குவதற்கு முன் வர்த்தக முத்திரைகள் சட்டம் 1999 ஐ அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

– முனைவர் ச. குப்பன்

வருமானவரிச்சட்ட அறிவிப்பு

0

வருமானவரி செலுத்துபவர்களுக்கு அவர்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரி வாயிலாக, வருமானவரிச்சட்டம் 1961 பிரிவு 143(1) இன் கீழான அறிவிப்பு கிடைக்கப்பெற்ற உடன், தவறாக ஏதாவது வருமான வரிபடிவத்தை சமர்ப்பித்துவிட்டோமோ என பதறவேண்டாம். வருமானவரி படிவத்தை இணையத்தின் வாயிலாக சமர்ப்பித்தவுடன் வருமானவரித்துறையால் பராமரிக்கப்படும் சேவையாளர் கணினியானது E-Proceeding எனும் இணையதளபக்கத்தின் வாயிலாக இவ்வாறு சமர்ப்பித்திடும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சான்றாக, மார்ச் 2018 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ஒரு அறிவிப்பை தானியங்கியாக மார்ச் 2020 இற்குள் அனுப்பிவைத்திடுமாறு கட்டமைத்து உள்ளனர் என்ற அடிப்படை செய்தியை மனதில் கொண்டு அமைதி அடையுங்கள். அவ்வாறு எந்தவொரு அறிவிப்பும் கிடைக்க பெறவில்லை எனில் குறிப்பிட்ட நிதியாண்டிற்கு வருமானவரி படிவத்தை சமர்ப்பித்தவுடன் கிடைக்கும் ஏற்புகை படிவமான ITR- V என்பதை அவ்வாறான அறிவிப்பாக எடுத்துகொள்ள வேண்டும். இந்த அறிவிப்பானது சமர்ப்பித்த வருமானவரி படிவத்தில் பொருத்தம் அல்லாதவைகள் ஏதேனும் இருந்தால் அதனை சுட்டி காட்டியதாக இருக்கும். ஏதும் சுட்டிகாட்டப் படவில்லை எனில் நிகரமாக செலுத்த வேண்டிய வருமானவரி (Net Amount Payable) என்ற பகுதி பூஜ்ஜியமாக (Zero) உள்ளதா என சரிபார்த்து கொள்ளவும். திரும்ப வழங்க வேண்டிய தொகையை குறிப்பிடாமல் அல்லது பொருத்தம் அல்லாத இந்த அறிவிப்பு வந்திருந்தால் பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்.

முதலில் வந்து உள்ள அறிவிப்பின் As provided by Tax Payer in Return of Income , As computed under section 143(1) ஆகிய இரண்டு நெடுவரிசைகளில் எந்த பகுதி தொகை வேறுபாடாக பொருத்தமற்று இருக்கின்றன என ஒப்பிட்டு அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து, பிரிவு 154(1) கீழ் பதில் அளிப்பதற்காக வருமான வரித்துறையின் இணையதள பக்கத்திற்குள் உள்நுழைவு செய்து பிழையை அல்லது வேறுபாட்டினை சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்கவும். பின்னர், E-Proceeding என்ற வாய்ப்பினை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து சரிபார்க்கவும்.

சரிசெய்த மாற்றங்கள் E-Proceeding என்ற பகுதியில் சரிசெய்யப்பட்ட திரையில் தோன்றவில்லை எனில் மத்திய செயலாக்க மையத்திற்கு (Central Processing Center (CPC)) புகார் கடிதம் ஒன்றை மின்னஞ்சல் வாயிலாக simplifiedlaws.com/compliant- grievance-cpc-efiling-income-tax-return/ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மத்திய செயலாக்க மையத்திற்கு புகார் கடிதம் அனுப்பியும் சரிசெய்யவில்லை எனில் simplifiedlaws.com/do-you-know-about-income-tax-ombudsman என்ற முகவரிக்கு மற்றொரு புகார் கடிதத்தை அனுப்பி வைக்கவும்.

– முனைவர். ச. குப்பன்

அஞ்சலகத்தின் சிறந்த சேமிப்பு திட்டங்கள்

0

அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி அதிகம் கொடுக்க கூடிய முதன்மைத் திட்டங்கள்.

முதியோர்களுக்கான சேமிப்பு திட்டம்:
இத்திட்டம் 60 வயது அதற்கும் மேல் உள்ள மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். வயது முதிர்வு காரணமாக அவர்களது உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு கொடுக்க வேண்டி இருக்கும். அவர்களுக்கு வாழ்க்கையில் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் இந்த திட்டம் உருவாக்கும். மத்திய அரசு ஓய்வு வயதை 60 ஆகவும், மாநில அரசு 58 ஆகவும் நிர்ணயம் செய்து உள்ளது. சிலர் பணி முடிவடையும் முன்னமே விருப்ப ஓய்வு பெறுவார்கள். அவர்களுக்கு இந்த திட்டத்தின் பயனை அனுபவிக்கும் வகையில், அவர்களுக்கும் இந்த கணக்கை தொடங்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதில், ஒரு நிபந்தனை. அதாவது, விருப்ப ஓய்வு பெறுபவர்கள் தங்களது ஓய்வு பயன் பணத்தொகையை பெற்ற ஒரு மாதத்திற்குள் அஞ்சலகத்தில் இந்த திட்டத்தில் முதலீடு செய்துவிடவேண்டும்.

அஞ்சலக சேமிப்பு திட்டங்களிலேயே அதிக வட்டி கிடைக்கும் திட்டம் இதுதான். இந்த கணக்கில் குறைத்த பட்ச முதலீட்டு தொகையாக ரூபாய் 1000/-செலுத்த வேண்டும். அதன் பிறகு, ரூபாய் 1000/- மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடு தொகையாக 15லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் எத்தணை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். ஆனால், தொடங்கும் கணக்குகளின் மொத்த தொகை 15 லட்சத்திற்கு மேல் போக கூடாது. வட்டி விகிதம் தொடங்கும்போது என்ன சதவீதம் நிர்ணயிக்கின்றார்களோ, அதுதான் கணக்கு முடியும் வரை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தொடரும். இந்த கணக்கில் முதலீட்டு செய்பவர்களுக்கு நடப்பாண்டு அக்டோபர் 1 முதல் 8.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி வீதம் நாட்டின் பொருளாதாரத்தை மையமாக வைத்து மாறக்கூடியது. கணக்கு தொடங்கியதில் இருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அதாவது, மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30, மற்றும் டிசம்பர் 31 தேதிகளில் வட்டி கணக்கிட்டு வழங்கப்படுகிறது. வட்டி தொகையானது முதலீட்டாளர்களின் சேமிப்பு கணக்கில் வட்டி கணக்கிடப்பட்டு மாதங்களின் கடைசிதேதி அன்றே செலுத்தப்படும். இந்த திட்டத்தில் வாரிசு நியமித்துக் கொள்ளும் வசதி உண்டு. கணக்கைத் தொடங்கி முடியும் வரை வாரிசாக யாரை வேண்டு\மானாலும் நியமித்துக் கொள்ளலாம்.

இந்த கணக்கை அஞ்சலகம் மட்டும் அல்லாமல் குறிப்பிட்ட வங்கிகளிலும் தொடங்கலாம். இந்த திட்டத்தில் சேர்ந்து விட்டு, இடையில் விலகினால் அபராதம் செலுத்த வேண்டும். கணக்கு தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்தால் 1.5 சதவீதம் முதலீட்டு தொகையில் செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் 1 சதவீதம் செலுத்த வேண்டும். மூன்றாண்டுகளுக்கு நீடித்த நிலையில் ஓராண்டு நிறைவு பெற்ற பிறகு எடுக்கப்படும் தொகைக்கு அபராதம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஐந்து வருடங்கள் முடிவுற்றபின் விரும்பினால், மேலும் மூன்று வருடங்களுக்கு நீடித்துக் கொள்ளலாம். தற்போதைய வட்டி விகிதத்தின் படி மொத்தமாக 15 லட்சம் செலுத்தினால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூபாய் 32,250/- ஐந்து வருடங்களுக்கு கிடைக்கும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா. இது, தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டமாக 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக்கணக்கை இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் தொடங்கலாம்.

கணக்கைத் திறக்கும் முறை :
ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்த கணக்கை தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்கு .10 வயதுக்குட்பட்டு இருக்க வேண்டும். குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கணக்கைத் தொடங்கலாம்.
இத்திட்டத்தின் பதிவு காலம் முழுவதும் இந்த பெண் குழந்தை இந்திய குடியுரிமை பெற்று இருக்க வேண்டும். ஒருவேளை குடியுரிமை மாற்றப்பட்டால் வட்டி பெற இயலாது. மற்றும் முடிவடையும் காலத்திற்கு முன்னதாகவே கணக்கை முடித்து கொள்ளவேண்டும்.

காலம்:
கணக்கை திறந்ததில் இருந்து 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இத்திட்டம் அறிமுகம் செய்யப்படபோது அதிகபட்ச முதலீடு 14 வருடங்களே இருந்தது.

பணம் செலுத்தும் முறை:
பணம் அல்லது காசோலை வாயிலாக செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் நாம் கணக்கு தொடங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் மைய வங்கி தீர்வு இருந்தால் மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம்.

வழங்கப்படும் வட்டி விகிதம் :
சிறுசேமிப்பு திட்டம் போலவே செல்வமகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கும் மாறிக் கொண்டே வரும். தற்போதைய வட்டி விகிதம் அக்டோபர் மாதம் முதல் 8.4 சதவீதமாகும்.

செலுத்ததும் தவணைகளின் அளவு :
செல்வமகள் கணக்குகளை தொடங்கு பவர்கள் முதலில் ரூபாய் 250 செலுத்த வேண்டும்.அதிகபட்ச தொகை ரூபாய் 1.5 லட்சம் செலுத்தலாம். அதற்கும் மேல் செலுத்தினால் அந்தத் தொகைக்கு வட்டி எதுவும் கொடுக்க மாட்டார்கள். கூடுதலாக செலுத்திய தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். குறைந்த பட்ச தொகையான ரூபாய் 250 சரியாக செலுத்தவில்லை என்றால், 15 வருடங்கள் கழித்து வரும் போது தபால் நிலையத்தில் இயல்பாக வழங்கப்படும் வட்டியான 4 சதவீதம் மட்டுமே பெற இயலும்.

வட்டி தொகை சீராக கிடைக்க ஒவ்வொரு மாதமும் 10 தேதிக்குள் சந்தாதொகையை செலுத்த வேண்டும். காரணம், வட்டி கணக்கிடும் போது 11 தேதி முதல் மாத இறுதி தேதி 30 அல்லது 31 தேதி வரையிலான குறைந்த பட்ச தொகையைதான் கணக்கில் எடுத்து கொள்வார்கள்.

இடையில் கட்டாமல் விடுபட்ட கணக்கை மீண்டும் தொடங்குதல்:
கணக்கை சில காரணத்தால் தொடர்ந்து கட்ட இயலாது போது, அதாவது ஒரு வருடம் கட்டாமல் விட்டு விட்டால் ரூபாய் 50 அபராதம் செலுத்தி கணக்கை புதுபித்து மேலும் தொடரலாம்.

வருமான வரி விதி விலக்கு:
செல்வமகள் திட்டத்தின் கீழ் உங்கள் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு பிரிவு எண் 80சி இன் படி வரிவிலக்கு பெறலாம். அதாவது, கணக்கை தொடங்கிய பெற்றோர்கள் வருமானமாக அது கருதப்படும்.

முதிர்வு:
இந்த கணக்கு 21 வயது ஆகும் போது அதன் முதிர்வு காலத்தை அடைந்து விடும். அதற்கு பிறகு, வட்டி எதுவும் அளிக்கப்பட்ட மாட்டாது. ஆனால், திட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட போது கணக்கை மூடும் வரை வட்டி அளிக்கப்படும் என்று இருந்தது.

கணக்கை மற்றொரு கிளைக்கு மாற்றிக்கொள்ளுதல்:
கணக்கை வேறு ஒரு வங்கி அல்லது தபால் நிலையத்தின் கிளைகளுக்கு மாற்றிக் கொள்ள விரும்பினால் ரூபாய் 100 கட்டணமாக செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். அதற்கு கணக்கு தொடங்கிய அலுவலகம் அல்லது வங்கியை அணுகி விபரங்களை பெறலாம்.

செலுத்திய பணத்தை திரும்ப பெறுதல்:
ஒருவர் 50 சதவீதம் வரை கட்டப்பட்ட தொகையில் இருந்து 18 வயது நிரம்பியதற்கான சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு சான்றிதழ்களை வழங்கி அந்த தொகைகையை எடுத்துக் கொள்ளலாம். தற்போதைய விதிகளின் படி எவ்வளவு தொகை கட்டணமாகக் செலுத்த வேண்டுமோ அதை மட்டுமே பெற இயலும். மொத்தமாக எடுக்க வேண்டுமென்றால் ஐந்து தவணைகளாக எடுத்துக்கொள்ளலாம் .பெண்ணின் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு அல்லது திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு பின் மொத்த தொகையையும் எடுத்து கொள்ளலாம். ஆனால், இதற்கு 18 வயது பூர்த்தி அடைந்ததற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை முடித்துக் கொள்ளுதல் :
முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை முடித்து கொள்ளுதல் என்பது கணக்கு அறிமுகப் படுத்தப்பட்டபோது எப்போது வேண்டுமானாலும் முடித்துக்கொள்ளலாம் என்று இருந்தது. ஆனால், திருத்தப்பட்ட விதிகளின் படி குறைத்தது ஜந்து ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
சில நேரங்களில், ஏதேனும் மருத்துவ உதவி, காப்பாளர் போன்ற சில காரணங்களின் போது பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் அஞ்சல் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி கணக்கிடுவதைப் போல கணக்கிட்டு வழங்கப்படும். 18 வயது முடிந்து திருமணம் செய்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

– முனைவர் த. செந்தமிழ்ச் செல்வன்

தகுதி இருந்தும் புறக்கணிக்கப்பட்டேன்

0

விஜயபாரதி மற்றும் செந்தமிழ்ச்செல்வி என்கிற இரண்டு பெண்கள் ஒன்றிணைந்து சென்னை, வில்லிவாக்கத்தில் பாரதி அகடாமி என்கிற பெயரில் அரசுதேர்வு பயிற்சி நிலையத்தை துவங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவரான விஜயபாரதி நம்மிடம் தொழில் பயிற்சி பற்றி பகிர்ந்துகொண்டபோது..

என் கணவர் சென்னைத் துறைமுகத்தில் நடந்த விஷவாயு விபத்து ஒன்றில் இறந்தார். கையில் இரு குழந்தைகள். உறவுகள் கைக்கொடுக்காத சூழலில் எம்.எஸ்.சி. பி.எட்., கல்வியறிவு ஒன்றினை மட்டுமே மூலதனமாகக் கொண்டு நம்பிக்கையுடன் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்தேன். நேர்முத் தேர்வுக்கும் சென்றேன். ஆனால், ஆங்கிலம் சரளமாகப் பேசவில்லை என்ற ஒரே காரணத்தினால், என்னை நிராகரித்துவிட்டனர். அடுத்தடுத்துச் சென்ற பள்ளிகளிலும் இதேநிலை தொடர்ந்தது. ஆனாலும், மனம் தளரவில்லை. அப்போது, தேர்வுகளுக்குப் பயின்று வந்த செந்தமிழ்செல்வியுடன் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினேன்.

தமிழ் வழி படிப்பறிவு மற்றும் பாட அறிவு இருந்தும் வேலை கிடைப்பதில் உள்ள சிரமங்களையும், போட்டித் தேர்வுகளின் கடினம் என்ன என்பதையும், ஒரு இல்லத்தரசியாக, அம்மாவாக இருந்து கொண்டே படிப்பதன் கஷ்டத்தையும் உணர்ந்தேன். தமது வீட்டிலேயே ஒரு அறையில் பாரதி பெண்கள் படிப்பகம் என்ற பெயரில் ஒரு குழுவினைத் தொடங்கி அதன் ஒருங்கிணைப்பாளராக பொறியியல் பட்டதாரியான செந்தமிழ் செல்வியை நியமித்தேன். பின்னர், முற்றிலும் பெண்களுக்கான இலவசப் படிப்பகம் என்று மாற்றி, பாரதி அகாடமி என்ற பெயரில் வில்லிவாக்கத்தில் ஒரு பயிற்சி நிலையத்தை உருவாக்கினேன்.

பெண்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், கோடை வகுப்புகள் தொடர்ந்து வழங்கினேன். அடுத்தடுத்த தேர்வுகளில் இங்கு பயின்றவர்களின் தேர்ச்சி அதிகரித்தது. எனவே, ஒரு பயிற்சி தொழில் முனைவோராகவும் உயர்ந்தேன். மாணவர்களை மதிப்பெண் வங்கியாக மட்டும் உருவாக்குதல் கூடாது எனப் பள்ளி மாணவர்களுக்கான “கருத்துப் புரிதலுடன் கூடிய தனிப்பயிற்சியை” தொடங்கினேன். இவர்களின் சரியான புரிதல் பயிற்சி மாணவர்களுக்கு ஆழமான புரிதல் கல்வியையும் அதிக மதிப்பெண்களையும், பெற்றோருக்கு மகிழ்வையும் அளித்தது. அதன் விளைவாக, ஒரு மாணவன் என தொடங்கிய பயிற்சி நூறைத் தாண்டியது. மாணவர்களை செயல்வழிக் கல்வியில் செலுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்தினேன்.

தாய்மொழி வழிப் புரிதலே சரியான கல்வியறிவைத் தரும் என்ற நோக்கத்துடன், சென்ற ஆண்டு “தமிழ் பண்பாட்டுக் கலாச்சார விழா” என்ற பேராண்மையாக நடத்தினேன். அரசுப் பள்ளிகளுக்குச் சென்று இலவசக் கல்வி விழிப்புணர்வு முகாம்கள், போட்டித் தேர்வு விழிப்புணர்வு முகாம்கள் வழங்கி வருகிறேன்.

இத்தகைய கல்விச் சேவைகளைப் பாராட்டி 2017 ஆம் ஆண்டிற்கான ஹோம்ப்ரீனியர் “சுயசக்தி விருது” கிடைத்தது. கோடை விடுமுறையில் ஆங்கிலப்பயிற்சி முகாம்களில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டும் அளவிற்கு தமிழ் பேச ஊக்குவிப்பதில்லை. தாய்மொழியில் படித்து ஆழமாகக் கருத்துக்களை உள்வாங்கியதால்தான் எங்களால் மற்றவர்களுக்கு வழிகாட்டுதல் எளிமையாக உள்ளது” என்றார். இவருக்கு துணையாகவும், பாரதி அகாடமி பயிற்சியகத்தின் பொறுப்பாளராக இருக்கும் செல்வி. செந்தமிழ்செல்வி தற்போது, ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று, நேர்காணலுக்காக காத்திருக்கிறார். இவர்களிடம் படித்த பல மாணவர்கள் தமிழ்நாடு அரசு துறையில் வேலை செய்து வருகின்றனர்.

– தாமு. தமிழமுதன்

வேலை வாய்ப்புகளை தரும் திரைத்துறை

0

பல ஆயிரம் கோடி புரளும் இந்திய திரைப்பட சந்தையில், தமிழ்த்திரைப்பட உலகின் பங்கு கணிசமானது. இந்தி, தெலுங்கு மொழிகளுக்கு அடுத்து அதிகமான திரைப்படங்கள் வெளியாவது தமிழில்தான். இத்துறையின் வியாபாரம், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸாலி.

தமிழ்த் திரைத்துறை வணிகம் எப்படி இருக்கிறது?
ஆரோக்கியமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். படம் முடிக்கப்பட்டு தணிக்கை சான்றிதழ் பெற்றும் சுமார் நானூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாக முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இது தவிர, வெளிவருவதில் 10 சதவிகித படங்கள் மட்டுமே வருவாயை ஈட்டுகின்றன. 20 சதவிகித படங்கள் ஓரளவு வசூலை அளிக்கின்றன. மீதம் 70 சதவிகித படங்கள் போதுமான வசூலை அளிக்காமல் நட்டத்தையே ஏற்படுத்துகின்றன.

ஏன் இந்த நிலை?
முன்பு, தீபாவளிக்கு பத்து முதல் பதினைந்து திரைப்படங்கள் வெளியாகும். ஆனால் கடந்த (2019ம் ஆண்டு) தீபாவளிக்கு பிகில், கைதி என இரு படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 900 திரையரங்குகளில் 1110 திரைகள் (ஸ்கிரீன்ஸ்) உள்ளன. இவற்றில் 650க்கும் மேற்பட்டவையில் பிகில் படமும், 300க்கும் மேற்பட்டவற்றில் கைதியும் வெளியாகின. ஆனால், இதர படங்களுக்கு திரையரங்கமே கிடைக்கவில்லை. இது போலவே அடிக்கடி ஏற்படுகின்றன. இதர சிறிய, மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள்தான் திரைத்துறையை வாழ வைக்கின்றன. அவற்றின் மூலமாகத்தான் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் வாய்ப்பு பெருகிறார்கள். பணச்சுழற்றியும் நடக்கிறது. அவை முடங்குவதால் திரைத்துறைக்கு இழப்புதான்.

குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவழித்து படம் எடுக்கக்கூடாது என்று வரையறை வைப்பது இதற்கு தீர்வாகுமா?
அப்படிச் செய்ய முடியாது. செலவழிப்பது அவரவர் உரிமை. அதே நேரம் அனைத்து படங்களுக்கும் வெளியாகும் வாய்ப்பை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் முன்பு 4500 திரையரங்கங்கள் இருந்தன. அப்போது வருடத்திற்கு 120 படங்கள் வெளியாகின. ஆனால், 2010க்கு பிறகு 2017 வரை வருடத்திற்கு சுமார் 350 படங்கள் வெளியாகின. மொழிமாற்றுப் படங்களும், நேரடி வேற்றுமொழி படங்களும் வெளியாகின. கடந்த வருடமும், இந்த வருடமும் சற்று குறைவு என்றாலும் பொதுவாக நிறைய படங்கள் வெளியாகின்றன. அதே நேரம் பல படங்களுக்கு கூட்டம் வருவதில்லை. காரணம், மக்களுக்கு முன்பு திரையரங்கம் மட்டுமே பொழுதுபோக்கு இடமாக இருந்தது.

இப்போது அறிவியல் வளர்ச்சியால் இணையத்தில் படங்களைப் பார்க்க முடிகிறது. இந்த சூழலை எதிர்கொள்ள ஒரு வழி இருக்கிறது. அதாவது, தமிழகத்தில் 800 முதல் 1000 இருக்கைகள் உள்ள சுமார் 700 திரையரங்கங்கள் உள்ளன. இவற்றை 100 முதல் 200 இருக்கைகள் உள்ள சிறு திரையரங்குகளாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் பல்லாயிரம் திரையரங்குகள் உருவாகும். பல படங்களை வெளியிட வாய்ப்பு இருக்கும். இதனால் திரைத்துறையில் பணம் புரளும். ரசிகர்களுக்கும் பல படங்களை பார்க்கும் வாய்ப்பு ஏற்படும். திரைத்துறை செழிக்க இதுவே வழி. இதற்கு திரையரங்க உரிமையாளர்களும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், இப்படி சிறு திரையரங்குகளாக மாற்ற அரசிடம் பல்வேறு அனுமதிகளை பெற வேண்டி உள்ளது. ஒற்றைச் சாளர முறையில் அனுமதி கிடைத்தால் ஆயிரக்கணக்கான சிறு திரையரங்கங்கள் உருவாகும்.

திரையரங்குகளில் அதிக விலைக்கு திண்பண்டங்கள் விற்கப்படுவது, சுகாதாரம் இன்மை. ஆகிய காரணங்களாலும் மக்கள் திரையரங்கம் வருவதைத் தவிர்க்கிறார்கள் என்று ஒரு கருத்து உள்ளதே..
ஆமாம். பல திரையரங்குகளில் சுத்தம், சுகாதாரம் இல்லை. சில திரையரங்குகள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால், அங்கு பார்க்கிங் கட்டணமே பல நூறு ரூபாய் வாங்குகிறார்கள். உள்ளே திண்பண்டங்களின் விலையும் பல மடங்கு அதிகம். திரைத்தொழில் நசிவடைவதற்கு இதுவும் முக்கிய காரணம்.

அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்களில் படங்கள் வெளியிடுவது, திரையரங்குகளுக்கு மக்கள் வருவதைத் தடுக்கின்றதா?
அப்படிச் சொல்ல முடியாது. திரையரங்கில் படம் வெளியாகி ஒரு மாதம் கழித்தே இணையதளம் மற்றும் தொலைக்காட்சிகளில் படங்கள் வெளியாகின்றன. தவிர இவற்றால் தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட தொகை கிடைக்கிறது.

திரைத்துறையில் வேலை வாய்ப்பு எப்படி உள்ளது?
திரைத்துறை தொழிலாளர்களுக்கு என்று சங்கம் இருக்கிறது. இவர்கள், படப்பிடிப்புக்கு தேவையில்லா விட்டாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்களை அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால், தேவையின்றி தயாரிப்பாளர்களுக்கு செலவு ஏற்பட்டது. ஆகவே பல தயாரிப்பாளர்கள் படம் தயாரிப்பதில் இருந்து விலகினர். புதிதாக வரும் பலரும் பின் வாங்கினர். இதனால், அந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்தது. அச்சங்கத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களில் 10 முதல் 20 சதவிகித தொழிலாளர்களுக்கே வேலை கிடைக்கிறது. இதை உணர்ந்து அண்மையில், 4 கோடி ரூபாய்க்கு கீழ் தயாரிக்கும் படங்களுக்கு எத்தனை தொழிலாளர்கள் வேண்டும் என்பதை தயாரிப்பாளரே முடிவு எடுக்கலாம் என்று கூறி இருக்கின்றனர். ஆகவே, ஓரளவு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

ஒளிப்பதிவு, எடிட்டிங், பிராசசிங், ஒலிப்பதிவு போன்ற துறைகளில் புதிதாக வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதா?
நிறைய இருக்கிறது. திரைப்பட தொழிற்சங்கத்தினர் விதிக்கும் கட்டுப்பாடு திரைப்பட படப்பிடிப்புகளுக்குத்தான். ஆனால், தற்போது கார்ப்ரேட் பிலிம்ஸ், ஆர்ட் பிலிம்ஸ், சோசியல் ஈவன்ட்ஸ், குறும்படங்கள், ஆவணபடங்கள் என பல்வேறு கலைப்படைப்புகள் ஆயிரக்கணக்கின் உருவாகின்றன. திருமணம் என்பது கூட திரைப்பட படப்பிடிப்பு போல நடக்க தொடங்கி விட்டன. ஆகவே ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, மிக்சிங் எடிட்டிங் போன்ற தொழில்நுட்பத்துறையில் இளைஞர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.

இதற்கான படிப்பு குறித்து கூறுங்களேன்..
எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் இதற்கான பாடப்பிரிவுகள் உள்ளன. சுமார் 200 தனியார் கல்லூரிகளில் திரைத்துறை சார்ந்த படிப்புகள் பல உள்ளன.
இத்துறையில் ஈடுபட படிப்பு அவசியமா.. அல்லது இத்துறை சார்ந்தவர்களிடம் உதவியாளராக சேர்ந்து பிறகு தனியே பணி புரிவது நல்லதா?
துறை சார்ந்தவர்களிடம் உதவியாளராக இருந்து பிறகு தனியே பணிபுரிவதுதான் முன்பு நடந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. ஆகவே, குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்பை முடித்து சிலகாலம் ஒருவரிடம் பணி புரிவது நல்லது. படிப்பு தொழில் நுட்ப அறிவைத் தரும். உதவியாளராக பணிபுரிவது கிரியேட்டிவிட்டியை அளிக்கும். எனவே, இரண்டும் அவசியம்.

– தமிழ் இனியா