இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

0

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை..

”என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை பெற்றவர். புதுச்சேரியில் அம்மா வீடு, அரவிந்தர் ஆசிரமம் அருகில் இரண்டு தெருக்கள் தள்ளி பெல்கோம் தெருவில். எனவே, புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில்தான், 1948 இல் நான் பிறந்தேன். இப்போது எனக்கு வயது 72.

நான் இங்கே சென்னை, கோபாலபுரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில்தான் படித்தேன். கலைஞர் வீட்டுக்கு அருகில்தான் சுற்றுவேன். அடுத்து பச்சையப்பன் கல்லூரியில் வணிகஇயல் படித்தேன். எஸ்எஸ்எல்சி படிக்கும்போதே நண்பர்களுடன் சேர்ந்து, எலைட் இலக்கியக் கழகம் நடத்தினோம். அங்கே ஆங்கிலத்தில்தான் கட்டுரைகள் வாசிப்போம்.

அப்போது மெயில் என்ற ஆங்கில நாளேடு சென்னையில் வெளியாகிக் கொண்டு இருந்தது. அங்கே வேலை செய்த ஒருவருடைய வீட்டில்தான், எங்களுடைய இலக்கியச் சந்திப்புகள் நடக்கும். அதைப்பற்றி அவர் மெயில் இதழில் எழுதுவார். எங்கள் பெயர்களை எல்லாம் எழுதுவார்.

நான் படித்தது எல்லாம் தமிழ் வழியில். ஆங்கில அறிவு தானாக வளர்ந்து கொண்டது. எங்கள் வீடு போயஸ் தோட்டத்தில் இருந்தது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகில், அமெரிக்கன் சென்டர் அப்போதுதான் புதிதாகக் கட்டினார்கள். அங்கே ஒரு நூலகம் அமைத்தார்கள். முழுமையும் குளிர்பதனம் செய்து இருந்தார்கள்.

அந்த நூலகத்தில் என்னை ஒரு உறுப்பினராக அப்பா சேர்த்து விட்டார். ஒரு முறைக்கு 3 புத்தகங்கள் தருவார்கள். வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்ப் படிக்கலாம். அந்த நூலகத்தின் அமைப்பு, குளிர்பதன வசதிக்காக, நான் பகலில் பெரும்பாலான நேரங்கள் அங்கேயே உட்கார்ந்து படிப்பேன். வீட்டுக்கு 3 புத்தகங்களை எடுத்துக்கொண்டு வருவேன்.

பெரிய பெரிய ஆங்கிலப் புத்தகங்கள், ஆப்பிரிக்க இலக்கியங்கள் புரியாவிட்டாலும் அதை வாசித்தேன். அதற்காக, மொழிபெயர்க்கக் கற்றேன்.

அதாவது, முதலில் அதை நான் மொழிபெயர்ப்பேன். சொல் அகராதி வைத்து எழுதுவேன். பிறகு அதைத் தமிழில் ஒரு கட்டுரைபோல எழுதி, அதை வாசித்துப் புரிந்து கொள்வேன். அது எனக்கு எளிதாக இருந்தது. இப்படித்தான் மொழிபெயர்த்துப் படித்துக்கொண்டே இருந்தேன்.

எனது தந்தை ஒரு ஓவியர். டி.பி. ராய் சௌத்திரியிடம் பயிற்சி பெற்றவர். சில காலம் தனியாக இயங்கினார். சேவா சதன் போன்ற இடங்களில் வேலை செய்தார். எங்கள் வீட்டுக்கு ஓவியர்கள், இலக்கியவாதிகள்தான் வந்து போவார்கள். அவர்களோடு பேசிக்கொண்டே இருப்பதுதான் அப்பாவுக்கு வேலை.

அம்மா முணுமுணுத்துக்கொண்டே இருப்பார்.

இவர்கள் பேசுவதை எல்லாம் நான் கேட்டுக்கொண்டு இருப்பேன். இத்தகைய சூழலில்தான் வளர்ந்தேன். முதலில் நான் படங்கள் வரைந்து கொண்டு இருந்தேன். அப்படியே எழுதத் தொடங்கி விட்டேன். அந்த ஆர்வம் வளர்ந்தது. அதையே முதன்மையாகக் கைக்கொண்டு விட்டேன்.

என் தந்தை முருக வழிபாடு செய்பவர். நானும் அப்படித்தான். ஆனால், தீவிர மதவெறி கிடையாது. சாதி வேறுபாடுகள் பிடிக்காது. அது ஒன்றுதான் இந்து மதத்தின் மிகப்பெரிய தீமை. உலகில் வேறு எந்த மதத்திலும், இத்தகைய சாதி வேறுபாடுகள் இல்லை. அதை நான் ஏற்பது இல்லை. கண்டித்து எழுதி இருக்கின்றேன்.

இந்த நிலையில், இந்தியன் வங்கியில் சேர்ந்தேன். மராட்டிய மாநிலம் ஒளரங்காபாத் கிளையில் வேலை. அங்கே இரண்டு ஆண்டுகள் இருந்தேன். அருகில்தான் அஜந்தா,எல்லோரா இருக்கின்றது.வார விடுமுறைகளில் அங்கே போய்விடுவேன். நிறையப் படங்கள் வரைந்தேன்.பிறகு மும்பைக்கு மாறிச் சென்றேன்.

அங்கேதான், அம்பேத்கர் எழுத்துகளை வாசிக்கத் தொடங்கினேன்.

அவரது எழுத்துகளை வாசிக்கும்போதுதான், அவர் மிகப்பெரிய ஆளுமை என்பது புரிந்தது. ஆனால் அப்போதும்கூட, அவரை ஒரு சாதித் தலைவராகத்தான் ஆக்கி வைத்து இருந்தார்கள்.

வடாலா கிளையில் இரண்டு வேலை நேரம். காலை ஏழு மணி முதல் பகல் 12 மணி வரை. மாலை 5 மணி முதல் 7 வரை. எனவே, இடைப்பட்ட ஐந்து மணி வேலை கிடையாது.

ஆனால் நான் மின்தொடரி மாதச்சீட்டு எடுத்து வைத்து இருந்தேன். அந்த வேளையில், வி.டி. ஸ்டேசன் போவேன். அதற்கு எதிரேதான், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு அலுவலகம் இருக்கின்றது.ஒரு நாள் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டேன். ஆசிரியரைச் சந்திக்க வேண்டும் என்றேன். எம்.வி. காமத் என்ற ஆசிரியரை, மிக எளிதாகச் சந்திக்க முடிந்தது.

நீங்கள் வெளியிடுகின்ற இல்லஸ்ட்ரேடட் வீக்கி இதழில், வட இந்தியக் கலைஞர்களைப் பற்றி மட்டுமே எழுதுகின்றீர்கள். தென் இந்தியக் கலைஞர்களைப் பற்றி எழுதுவதே இல்லை என்றேன்.

அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். பிறகு சொன்னார்:

தென் இந்தியக் கலைஞர்களுக்கு நாங்கள் ஒன்றும் எதிரிகள் இல்லை; ஆனால், அவர்களைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதித் தர எங்களிடம் யாரும் இல்லை; ஏன், நீங்கள் எழுதிக்கொடுத்தாலும் நான் வெளியிடுகின்றேன் என்றார்.

அன்று இரவு முழுமையும் கண்விழித்து உட்கார்ந்து, சோழமண்டலம் கலைக் கிராமத்தைச் சேர்ந்த கே.எம். கோபால் என்பவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அவருடைய சில படங்கள் என்னிடம் இருந்தன.

Dantra his Idiom என்ற தலைப்பு இட்டேன்.
மறுநாள் காலையில், அலுவல் அகத்தில் என் உதவியாளரிடம் கொடுத்து தட்டச்சு செய்து எடுத்துக்கொண்டு போய் அவரிடம் கொடுத்தேன்.
அவர் வியந்து போனார். 24 மணி நேரத்திற்குள் எழுதிக்கொண்டு வந்து விட்டீர்களே என்றவாறே படித்தார். மிக நன்றாக இருக்கின்றது எனப் பாராட்டினார்.  உன்னுடைய முயற்சியைப் பாராட்டுகின்றேன். எகனாமிக் டைம்ஸ் ஏட்டின் ஆசிரியர் என் நண்பர். அவரிடம் இதை வெளியிடச் சொல்கிறேன் என்றார். அவரிடம் அனுப்பி வைத்தார்.

அனைத்து இந்தியப் பதிப்பில் வெளியிட்டு விட்டார்கள்.

அப்படியே நான் தொடர்ந்து எழுதினேன். டைம்ஸ் ஆஃப் இந்தியா, எகனாமிக் டைம்ஸ், பிளிட்ஸ் இதழ்களில் எழுதினேன்.

 பிளிட்ஸ் ஆசிரியர் ஆர்.கே. கரஞ்சியாவை ஒரு நேர்காணல் எடுக்குமாறு, தமிழ்நாட்டில் உள்ள குங்குமம் வார இதழ்காரர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். அதற்காக அவரைச் சந்தித்தேன். அவரை நேர்காணல் கண்டு எழுதினேன். குங்குமம் அட்டைப்படக் கட்டுரையாக வெளிவந்தது.

தமிழில் தொல்காப்பியர் மிகப்பெரிய அழகியல்வாதி. ஆனால், அவரை இலக்கணப் பண்டிதனாகவே மட்டுமே ஆக்கி வைத்து இருக்கின்றார்கள்.அவர் ஒரு மிகப்பெரிய ஈஸ்தடீசியன் என நம்மவர்கள் யாரும் எழுதவில்லை. ஐயப்ப பணிக்கர் என்ற மலையாள அறிஞர்தான் எழுதினார். தொல்காப்பியத்தின் திணைக் கோட்பாடை, ஒரு பெரிய அழகியல் கோட்பாடாக அவர் வரையறுக்கின்றார்.

தமிழ்நாட்டில் உள்ள பழங்காலக் கலைப்பொருட்களை அளவிடக்கூடிய ஒரு அழகியல் கோட்பாட்டை நாம் ஆக்கியாக வேண்டும். அதை நம்முடைய சாரத்தில் இருந்து ஆக்க வேண்டும். அதற்குப் பெயர், தமிழ் அழகியல். அப்படி ஒரு நூல் நான் எழுதினேன்.

அதை, தமிழ் அறிஞர் கா. சிவத்தம்பி படித்துவிட்டு, இந்திரன் என்னுடைய பார்வையை நீங்கள் மாற்றி விட்டீர்கள் என்றார். அதை, இலங்கையில் பல்கலைக்கழகப் பாடப்புத்தமாக வைத்தார்.

அதன் அடிப்படையில், தமிழ் ஆர்ட் என்ற தலைப்பில், பாரிஸ் நகரில் நான் ஒரு ஓவியக் கண்காட்சி நடத்தினேன்.

திருவடி மலர்கள் எனும் மரபுக் கவிதைகள் என்னுடைய முதல் புத்தகம். ஞானம்பாடி என்ற பெயரில் எழுதினேன். காரணம், நான் சிறுவனாக இருந்தபோது, அனைத்து இந்திய வானொலிக்கு, ஞானம்பாடி என்ற பெயரில் மெல்லிகசப் பாடல்கள் எழுதினேன். நான் கிட்டத்தட்ட 40 நூல்கள் எழுதி இருக்கின்றேன். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறப்புவிழாவின்போது, முதல்வர் கலைஞர் என்னை அழைத்தார்.

133 அதிகாரங்களுக்கு, 133 நவீன ஓவியர்களைக் கொண்டு ஓவியங்கள் வரையுங்கள் என்றார். 48 இலட்சம் ரூபாய் திட்டம் அது. நான்தான் கியூரேட்டர். அப்போது, நான் வங்கியில் வேலை செய்து கொண்டு இருந்தேன்.

நான் எழுதிய ஆய்வு நூல்களை இறையன்பு ஐ.ஏ.எஸ் வாசித்து இருக்கின்றார். அவர்தான் முதல்வரிடம் என் பெயரைப் பரிந்துரை செய்து இருக்கின்றார். அதன்படி, நான் 133 ஓவியர்களைக் கொண்டு ஓவியங்களை வரைந்து, கன்னியாகுமரியில் கண்காட்சி நடத்தினேன். கண்காட்சியைக் கலைஞர் திறந்து வைத்தபோது, நானும் உடன் இருந்தேன்.

குமரி அனந்தன், வி.சி. குழந்தைசாமி உட்படப் பல தமிழ் அறிஞர்கள் வந்தார்கள்.
ஆனால், அதற்கு முன்பே, விடிகாலை 3 மணிக்கு, நான் தங்கி இருந்த அறைக்குக் காவலர்கள் வந்தனர். அப்போது நான் உறங்கிக்கொண்டு இருந்தேன். முதல்வர் என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். புறப்பட்டுப் போனேன். கலைஞர் லுங்கி, தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு வந்தார். கண்காட்சிக்கூடத்தைப் பார்த்தார். அத்தனை ஓவியங்களுக்கும் விளக்கம் கேட்டார்.
நான் விளக்கமாக எடுத்துச் சொன்னேன். அதை உள்வாங்கிக் கொண்டார்.

காலை பத்து மணிக்கு கண்காட்சி திறப்பு விழாவின்போது, அதை மிக அழகாக எடுத்துச் சொன்னார். அவர் பேசியதைக் கேட்டு எனக்கு வியப்பாக இருந்தது. உடன் வந்த அனைவருக்குமே வியப்புதான். அப்படி ஒரு ஆற்றலாளர் கலைஞர்.

என் இயற்பெயர் இராஜேந்திரன். எனவே, டைம்ஸ் ஆப் இந்தியாவில் இந்திரன் என்ற பெயரில் எழுதினேன். இப்போதும் அதே பெயரில் தொடர்கின்றேன். அப்பா பெயர் கஜேந்திரன். அம்மா பெயர் சிவசங்கரி. நான் இராஜேந்திரன்; தம்பி மகேந்திரன் என்பதால், இந்திரன் குடும்பம் என்ற பொருளில் பெயரை மாற்றிக் கொண்டேன். மும்பையில் இருந்தவரையிலும் நான் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி வந்தேன்.

பின்னர், தமிழ்நாட்டில் சிவகங்கைக்கு மாறுதல் பெற்று வந்தேன். அங்கே கவிஞர் மீரா அறிமுகம் ஆனார். அவரோடு நிறையப் பேசுவேன். ஆப்பிரிக்கக் கவிதைகளைப் பற்றிச் சொன்னேன். அதை ஒரு புத்தகமாக எழுதிக் கொடுங்களேன் என்று கேட்டார். அதனால், ஆப்பிரிக்கக் கவிதைகளை மொழிபெயர்த்தேன். அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் என்ற தலைப்பில்,1983 ஆம் ஆண்டு வெளியிட்டேன். அதன்பிறகு, என் மீது கவனக்குவிப்பு ஏற்பட்டது.
எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவர் கவிதா ஜாபின். அது ஒரு பிரெஞ்சுப் பெயர். அதை புதுச்சேரியில் ரெனேசியம் என்பார்கள். பிரெஞ்சுக் குடி உரிமை பெறுவதற்காகச் சேர்த்துக் கொள்வார்கள். அது எங்கள் குடும்பப் பெயர். என்னுடைய அம்மா, மாமா எல்லோரும் பிரெஞ்சுக் குடி உரிமை பெற்றவர்கள். ஆனால், நான் வாங்கவில்லை. என் இளைய மகள் கீதாஞ்சலி. அயர்லாந்து நாட்டு அரசுத்துறை ஒன்றில் பணிபுரிகின்றார். அவரது கணவர் டேவிட் ரோச் அயர்லாந்து நாட்டுக்காரர். காதல் திருமணம். அவளுக்கு ஒரு மகள். கவிதாவுக்கு ஒரு மகன். அவரது கணவர் மோகனகிருஷ்ணன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆக்கி வருகின்றார். காபி வித் அனு அவர் எடுத்த நிகழ்ச்சிதான். தனி நிறுவனம் வைத்து, பலருக்கு நிகழ்ச்சிகள் எடுத்துக் கொடுக்கின்றார். இந்த வீட்டில் நானும், என் மனைவியும்தான். இது சொந்த வீடு. மூத்த மகள் அருகிலேயே அடுத்த தெருவில் வசிக்கின்றார். என் மனைவி, என்னுடைய தாய் மாமா மகள்தான். பெயர் வாணி.

என் எழுத்துகளை நானே தட்டச்சு செய்கின்றேன்.

– அருணகிரி

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

0

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக் கணினியை பாதுகாக்க சில குறிப்புகளை இக்கட்டுரையில் காணலாம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது உங்களது மடிக் கணினியில் உள்ள இயங்கு தளம் மற்றும் ஆப்- களை மேம்படுத்துங்கள். ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை உங்கள் மடிக் கணினியை பயன்படுத்த மாட்டீர்கள் எனில், மடிக் கணினியில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வையுங்கள். பயன்படுத்தத் தொடங்கும் போது எடுத்து பொருத்திக் கொள்ளலாம்.
மடிக் கணினித் திரையை சுத்தமாக வைத்திருக்க மென்மையான துணிகளை பயன்படுத்தலாம். அல்லது அதற்கென இருக்கும் ஸ்க்ரீன் கிளீனிங் லிக்விட் பயன்படுத்தி துடைக்கலாம். வேறு கரடுமுரடான துணிகளைப் பயன்படுத்தியோ அல்லது கைகளாலோ துடைக்கக் கூடாது. அழுத்தியும் துடைக்கக் கூடாது.
மடிக் கணினிக்கு என கொடுக்கப்பட்ட சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு சார்ஜர்களை பயன்படுத்தினால் வெப்ப மாறுதல் மற்றும் அதிக மின்னோட்டம் காரணமாக மடிக் கணினியில் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

அதிக நேரம் நம் மடியில் வைத்தபடி மடிக் கணினியை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் பிராசசர்களின் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ள அதில் பூசப்படும் சிலிக்கா என்ற வேதிப்பொருள் நச்சுத் தன்மை வாய்ந்தது. இதனால் வெளியிடப்படும் வெப்பம் தோல் வியாதிகளை உண்டாக்கக் கூடும். எனவே மடிக் கணினிகளுக்கு என விற்கப்படும் லேப்டாப் ஸ்டாண்ட் வாங்கி பயன்படுத்துவது நல்லது.
ஆன்டி வைரஸ் மென்பொருள் நிறுவிக் கொள்ளுங்கள். நிறைய ஆன்டி வைரஸ் மென்பொருள்கள் இலவசமாகக் கூட கிடைக்கின்றன. இது உங்கள் மடிக் கணினியில் ஏற்படும் வைரஸ் தாக்குதல்களில் இருந்து வன்பொருள் மற்றும் மென்பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

மேலும் தங்களது கணினி பயன்பாட்டிற்கேற்ப ஃப்ரீவேர் மென்பொருட்களை தேர்வு செய்யுங்கள். இணையம் அதிகம் பயன்படுத்துபவர்கள் எனில் மால்வேர் வகைகளை நாடுங்கள். இவற்றிலும் நிறைய ஓப்பன்சோர்ஸ் மென்பொருள்கள் கிடைக்கின்றன. பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள்களும் கிடைக்கின்றன. முடிந்தவரை இயங்கு தளத்துடன் வரும் விண்டோஸ் டிஃபெண்டர், ஆன்டி மால்வேர்களை மேம்படுத்தி வைப்பது நல்லது.

தொடர்ச்சியாக நீண்ட நேரம் மடிக் கணினியை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதிக அளவாக எட்டு மணிநேரம் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம். அதற்கும் மேலாக மடிக் கணினி பயன்பாட்டில் இருந்தால் விரைவில் வெப்பம் அடைந்து மடிக் கணினியின் ஆயுட்காலம் குறைந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

யுஎஸ்பி பொருட்களை பயன்படுத்தும் போது (ப்ளூ டூத், பென் ட்ரைவ், வயர்லெஸ் மவுஸ்) கணினி பயன்பாட்டில் உள்ளபோது அவற்றை எடுக்க நேரிட்டால் டாஸ்க் பாரில் காட்டப்படும் சேஃப்லி ரிமூவ் ஹார்ட்வேர் கொடுத்து விட்டு எடுக்கவும். பயன்பாட்டில் உள்ள போதே எடுத்தால் யுஎஸ்பி அல்லது அதன் இணைப்பு போர்ட் ஏதேனும் பழுதடையும் வாய்ப்பு உள்ளது.
பொதுவாக அனைத்து வகையான கணினிகளும் வெப்பம், தூசி மற்றும் ஈரப்பதத்தால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக பயணங்களின் போது மடிக் கணினியை பயன்படுத்தக் கூடிய இடம் நல்ல காற்றோட்டமான சூழ்நிலையாக இருக்க வேண்டும்.

மடிக் கணினி வாங்கும் போது கொடுக்கப்பட்ட பேக் – களையே பயன்படுத்துங்கள். காரணம் அந்த பேக்-கள் தவறுதலாக கீழே விழ நேரிட்டால் அல்லது வாகன பயணங்களின் போது, கீழே வைப்பது, எடுப்பது போன்ற நேரங்களில் ஏற்படும் அதிர்வுகளை மடிக் கணினிக்கு கொடுக்காத வண்ணம் அவை வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஏற்கேனவே பயன்படுத்திய இரண்டாம் கை மடிக் கணினி வாங்குபவர்கள் அதற்கான அசல் பேக் கிடைக்காத போது, லேப்டாப்களை வைப்பதற்கு என வரும் அதற்காக தயாரிக்கப்பட்ட பேக் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

பணி இடையே சிறிது நேரம் அவகாசம் எடுத்துக் கொள்ளும் நிலையில் (சான்றாக உணவு இடைவேளை, வேறு பணி நிமித்தம்) உங்கள் மடிக் கணினியை ஹைபர்னேட் நிலையில் வைப்பது அவசியம். இதனால் மின்சாரம் மிச்சப் படுத்தப்படுகிறது. பிராசசரின் பயனற்ற செயல்பாடும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

மேலும் மடிக் கணினியின் சீரியல் எண்ணைக் குறித்து குறித்து வைத்துக் கொள்வது நல்லது. பழுதடைந்து விட்டால் அதற்கு தகுந்த உதிரிபாகங்கள் வாங்கவும், அவை இயங்குவதற்கான ட்ரைவர் மென்பொருட்களை பதிவிறக்கவும் ஏதுவாக இருக்கும்.
மடிக் கணினிக்கு இடது புறம் உள்ள கென்சிங்டன் துளை மூலம் மடிக்கணினி திருடு போவதை தடுக்கலாம். ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து நகர்த்த முடியாத பொருளுடன் சேர்த்து பூட்டி விட்டால் நமது கணினி நம் கட்டுப்பாட்டை விட்டு போகாமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும் இதை திறக்க நம்பர் பாஸ்வேர்ட் வசதியும் அந்த பூட்டு கேபிளில் தரப்பட்டு இருக்கும்.

மடிக் கணினியை பயன்படுத்திக் கொண்டே சிப்ஸ் போன்ற தீனிகளை உண்பதும், காப்பி மற்றும் குளிர் பானங்களை அருந்துவதும் நமது மடிக் கணினிக்கு நாமே ஆபத்துகளை உருவாக்கும் வழிகளாகும். திரவ உணவுகள் சிந்தினால் கீபோர்டு, ஆடியோ ஸ்லாட் போன்றவற்றுக்குள் சென்று மடிக் கணினியின் மற்ற பாகங்களை பழுதாக்கி விடும். ஹார்ட் ட்ரைவ் பழுதானால் அதில் உள்ள கோப்புகள் மற்றும் அனைத்து தரவுகளுக்கும் விடை கொடுத்து விட வேண்டியதுதான். மானிட்டர் பழுது அடைந்தால் மடிக் கணினியின் விலையில் 15 – 20% தொகை இதற்கே செலவழிக்க நேரிடும். டச் ஸ்க்ரீட் மானிட்டர் அல்லது கம்பேட்டிபிலிட்ட மானிட்டர் என்றால் இன்னும் கூடுதலாக செலவழிக்க நேரிடும்..
– சீநிவாஸ், மத்துவராயபுரம், கோவை

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

0
அய்யா உண்டு என சொன்னால்…. அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்…
இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே தோன்றியவர் அய்யா வைகுண்டர். வள்ளலார் காலம் 1823 – 1874 அய்யா வைகுண்டர் காலம் 1809 – 1851. வைகுண்டரின் காலத்திற்கு பிறகுதான் வள்ளலாரின் திருவருட்பா வெளிவருகிறது. இது ஒப்பீடு அல்ல காலத்தை உங்களுக்கு புரிய வைக்கவே இந்த கணக்கு.
முத்துகுட்டி என்பதே அவரது இயற்பெயர். அவர் பிறந்த காலங்களில் சாதீய வெறி உச்சத்தில் இருந்தது.  நாடார் உள்ளிட்ட பல சாதிய பெண்களுக்கு மார்பு சேலை அணிதல், இடுப்பில் குடம் எடுத்தல், பொன்நகைகள் அணிதல் ஆகியன தடை செய்யப்பட்டு இருந்தது. ஆண்களுக்கு தலைபாகை கட்டுதல், மீசை வளர்த்தல், வளைந்த கைப்பிடி கொண்ட குடையை பயன்படுத்துதல், உயர்ந்த சாதி மொழியை பயன்படுத்துதல் போன்றவை தடை செய்யப்பட்டு இருந்தது. (உயர்ந்த சாதி மொழி என்றால் சாப்பிட போகிறேன் என சொல்லக்கூடாது, கஞ்சி குடிக்க போறேனுதான் சொல்லணும்) குழந்தைகளுக்கு தெய்வங்களின் பெயர்களை சூடுவது கூட தடை செய்யப்பட்டிருந்தது. வைகுண்டருக்கு பெற்றோர் சூட்ட நினைத்த பெயர் முடிசூடும் பெருமாள். ஆனால் முடியவில்லை. முத்துகுட்டி என்றே வைத்தார்கள்.
இந்த கொடூர சாதியங்கள் ஊடாக முத்துகுட்டி வளர்கிறார்.
1833 ஆம் ஆண்டு திருச்செந்தூர் சென்ற அவர் இறையறிவு பெற்று தன் பொதுவாழ்வை தொடங்கினார். #தாழக்கிடப்பாரை_தற்காப்பதே_தர்மம் என முன்வைத்தார். நாடார் மட்டுமின்றி இடையர், பறையர், கம்மாளர், வாணியர், தோல் வணிகர், மறவர் , பரதவர், சக்கிலியர், துலுக்கர், பட்டர் உள்ளிட்ட பலரும் அவரை அப்போது வணங்கினர்.
“காணிக்கையிடாதீங்கோ காவடி தூக்காதீங்கோ
வீணுக்கு தேடுமுதல் விறுதாவில் போடாதீங்கோ “
என உழைக்கும் மக்கள் மீதான அன்பை வெளிக்காட்டினார். ஆலயங்களுக்குள் விடமறுத்த இந்துகளிடம் இருந்து காணிக்கை மட்டும் வாங்கிக் கொண்டிருந்த காலம் அது. இந்த கருத்தை அவர் உரக்கவே சொன்னார். மன்னராட்சி நடைபெற்ற காலம் அது. அரசனுக்கு எதிராக பேசுவது, தெய்வத்திற்கு எதிராக பேசுவதும் நிந்தனையாக கருதப்பட்ட காலம் அது. ஆகையால் அவர் கைது செய்யபட்டார். 110 நாட்கள் திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த காலக் கட்டத்திலும் அவர் “ அவன் பட்டம் பறித்திடுவேன், கொட்டி கலைத்திடுவேன் “ என உரக்கப் பாடினார்.
இந்து கோவில்களில் ஊட்டுப் புரைகள் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு மட்டும் இருவேளை உணவு இலவசமாக வழங்கி வந்த காலம் அது. அய்யா வைகுண்டர் அவர்கள் உழைக்கும் மக்களை சாதி பேதமின்றி ஒன்றுபடுத்தி அவர்களை பொது சமபந்தி என்ற பொது உணவை உண்ணவும், தன் கருத்துகளை பரப்ப ஏதுவாகவும் சிறிய நிழல் தாங்கல்களையும், பதி என்ற சற்றே பெரிய வழிபாட்டு கட்டிடங்களையும் நிறுவினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தாமரைக்குளம், சின்ன முட்டம் பகுதிகளில் ஏராளமான நிழல் தாங்கல்களை காணலாம்.
வைகுண்டரின் பதிகளில் ஆண் பெண் பேதமில்லை, சாதி மத பேதமில்லை, வீண் சடங்குகள் இல்லை, உருவ வழிபாடில்லை. அனைவரும் தலைப்பாகை கட்டி சுயமரியாதையுடன் வழிபட முடியும்.
“ கோவில்கள் வைத்து குருபூசை செய்யார்கள்
பூவதுகள் போட்டு போற்றியே நில்லார்கள்
ஆடு கிடாய் கோழி அறுத்துப் பலியிடார்கள்
மாடு மண்ணுருவை வணங்கி திரியார்கள் “
என அவரின் அகிலத்திரட்டு ஓங்கி சொல்கிறது. வேள்விகளை அவர் முற்றிலும் மறுக்கிறார். இன்றும் அய்யா வழியினர் வேள்விகளை நம்புவது இல்லை. சக மனிதர்களை முன் வைக்கிறார்கள். அய்யா வைகுண்டர் உருவாக்கிய கருத்துகள் நீதிக்கட்சி மூலம் பின்னர் சட்டங்களாகின. தோள் சீலை போராட்டத்தில் இவரின் விழிப்புணர்வு பெரிது. இவர் உருவாக்கிய நெருப்பு சனாதன தர்மத்தை பொசுக்க தொடங்கியது.
அவரின் அகிலத்திரட்டில் இருந்து… சில வரிகள்..
கனத்த கற்கண்டு கருப்புக் கட்டிக் கேட்டடிப்பான்…
நாருவட்டியோலை நாள் தோறுங் கேட்டடிப்பான்…
வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான்..
…..
கொல்லைதனில் சான்றோரை கொண்டுவா என்றடிப்பான்
….
கொதிக்கும் பதனீர் கொண்டுவா என்றடிப்பான்
….
சாணான் கள்ளேரியெனச் சண்டாள நீசனெல்லாம்
வீணாகச் சான்றோரை விரட்டியடிப்பான் காண்
சாணுடம்பு கொண்டு தரணிமிக ஆண்டாலும்
….
சாணான் சாணானெனவே சண்டாள நீசனெல்லாம்
கோணா துளத்தோரை கோட்டி செய்தேயடித்தான். என முடிக்கிறார் தன் அம்மானை பாடலை.
இதுவே போதுமானது அய்யா வைகுண்டரை புரிந்து கொள்ள. அவர் உருவாக்க நினைத்த சமதர்மத்தை புரிந்து கொள்ள்.. இந்தியாவில் சாதிய மறுப்பாளர்களுக்கு காலத்தால் மட்டுமில்லை, கருத்துகளாலும் முன்னோடி அய்யா வைகுண்டர். யாரின் உரிமைக்காக போராடினாரோ அவர்கள் முழுதாக உள்வாங்கி செயல்பட வேண்டும்.
அய்யா உண்டு என சொன்னால்…. அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்.
 – பா. சரவண காந்த்.
ஆதாரம்: நாடார் வரலாறு கறுப்பா…? காவியா…?

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா?

படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இரண்டு விதங்களில் இறக்குமதி செய்யப்படுகிறது. புத்தம் புதிய பொறிகளை விற்கும் நிறுவனங்களிடம் இருந்து அப்படியே இறக்குமதி செய்து அதை விற்பனை செய்வது ஒரு விதம். மற்றொரு விதம், வெளிநாடுகளில் பயன்படுத்திய படிப்பொறிகளை இறக்குமதி செய்து அதை சீர் செய்து (ரீகண்டிஷன்) விற்பனை செய்வது ஆகும்.

இத்தொழிலில் படிப்பொறி தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து கடைக்காரர்களை சென்று அடைவதற்குள் அது பலரைக் கடந்து வருகிறது. அப்படி கடைகளிலோ அல்லது நிறுவனங்களிலோ வாங்கப்படும் படிப்பொறிகளை இயக்க வைப்பதற்கு எத்தனை பேர்கள் தேவைப்படுகிறார்களோ, அந்த அளவுக்கு வேலை வாய்ப்பு உள்ள தொழிலாகவும் இந்த தொழில் உள்ளது.

பொதுவாக ஆறு நிலைகளைக் கடந்துதான் ஒரு படிப்பொறி நமது கடையையோ அல்லது அலுவலகத்தையோ அடைகிறது. அவை, சப்ளையர்; இறக்குமதியாளர்; மொத்த விற்பனையாளர்: துணை விற்பனையாளர்: டெக்னீஷியன்; போர்ட் சர்வீஸ் எஞ்சினியர். – நமது நாட்டில் புழங்குகின்ற எந்திரங்கள் பெரும்பாலானவை, வெளிநாடுகளில் பயன் படுத்தப்பட்டவைதான். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், இங்கே வந்ததும் பழுது நீக்குதல், தேவை எனில் உறுப்புகளை மாற்றுதல், ஸ்ப்ரே பெயின்ட் செய்தல் என சீரமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

அமெரிக்காவில் இருந்து நேரடியாக இறக்குமதியாகும் போட்டோ காப்பியர் எந்திரங்களை வாங்கினால் அவ்வளவாக தொல்லை இல்லாமல் கடை நடத்தலாம். பயன்படுத்தப்பட்ட அமெரிக்க எத்திரங்களின் மீதமுள்ள பயன்பாட்டுக் கணக்கை 80% முதல் 85% வரை என்று கணித்து இருக்கிறார்கள்.

Also read: ஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது

கொரியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றின் தரம் தொழில் முனைவோருக்கு பயன்படும்படி இல்லை. கொரியன் பொறிகளுக்கு பயன்பாட்டுக் கணக்கே இல்லை. அவற்றுக்கும் இந்தியாவில் பயன்படுத்தி, மீண்டும் மூன்றாம் முறையாக விற்கும் பொறிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

புதிய எந்திரங்களை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய டி.ஜிட்டல் அச்சு நிறுவனங்கள் வாங்குகின்றன. சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் டிஜிட்டல் பிரின்டர்களுக்கான வர்த்தகக் காட்சிகளில் பல புதிய போட்டோ காப்பியர்கள், டிஜிட்டல் பிரின்டர்கள் காட்சிக்கு வைக்கப்படும். இத்தகைய தொழில் காட்சிகளை தொழில் முனைவோர் தவறாமல் பார்வையிட வேண்டும். கொரானாவைத் தொடர்ந்து இத்தகைய காட்சிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. விரைவில் இத்தகைய காட்சிகளுக்கான் தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செராக்ஸ் கடைகள் என்று குறிப்படப்படும் போட்டோகாப்பி எடுக்கும் தொழில் ஊருக்கு ஊர் நிரம்பி வழிகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு விரைவாக ஊர்தோறும் நகரங்கள் தோறும் பரவி விட்ட தொழில், கூடவே கணினியும் வந்த பிறகு, அதுவரை தட்டச்சு செய்து கொண்டு இருந்தவர்களை உடனே நகலகங்களுக்கு கொண்டு வந்த தொழில் இது.

தற்போது மின்னஞ்சல்கள் வாயிலாக கடிதப் பரிமாற்றம் நடைபெறுவது அதிகரித்து வருவதால், இது ஓரளவுக்கு படி எடுத்துக் கொடுக்கும் நகலக தொழிலை பாதித்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். தவிரவும் நகல் எடுக்கும், ஸ்கேன் செய்யும் வசதியுடன் லேசர் பிரின்டர்கள் வருவதாலும், இவையும் குறைந்த விலையில் கிடைப்பதாலும் அலுவலகங்கள் இத்தகைய அச்சுப் பொறிகளை வாங்கி வைத்துக் கொள்கின்றன, இதனால் அலுவலகங்களில் இருந்து படி எடுக்க வருவது குறைந்து விட்டது.

இதுபோன்ற காரணங்களால் நகலக தொழில் பின்னடைவைச் சந்தித்து வந்தாலும் அறவே வாய்ப்பு இல்லாமலும் போகவில்லை. நூறு குடும்பங்களுக்குக் குறையாமல்  இருக்கும் பகுதிகளில் நகலாகத் தொழிலை ஒரு தொழில் முனைவோர் தாராளமாக தொடங்கலாம். பெரும்பாலும் மாணவர்களே அதிகமாக நகலகங்களை நாடு கின்றனர்.

புதிதாக படிப் பொறி வாங்க விரும்பவர்கள், அனுபவம் உள்ளவர்களிடம் நன்கு விசாரித்து வாங்க வேண்டும். எந்திரங்களை நேரடியாக பார்த்து வாங்குவதற்கு பதில் இன்டர்நெட்டில் எந்திரங்களைப் பார்த்து அதனுடைய தரம் பற்றி மனதுக்குள் கோட்டை கட்டுவது மிகப் பெரிய தவறாகும். படிப்பொறித் துறையில் படிப்பொறிகளை (செராக்ஸ் எந்திரங்கள்) வாடகைக்கு விடுபவர்கள் என்ற ஒரு பிரிவினர் உள்ளனர். அவர்கள் புத்தம் புது படிப்பொறிகளையும் வாடகைக்கு விடுகின்றனர். ரீகண்டிஷன் செய்யப்பட்ட எந்திரங்களையும் வாடகைக்கு விடுகின்றனர்.

படிப்பொறிகளை ஏதேனும் ஒரு காரணம் கருதி விற்பனை செய்ய முயற்சித்தால் அத்தனை எளிதாக விற்பனை செய்ய முடியாது. வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தினால், எப்போது வேண்டுமானாலும் திருப்பிக் கொடுத்து விடலாம். 

கணினி மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களின் வளர்ச்சியும், ஏராளமான கல்வி நிறுவனங்களின் வருகையும் படிப்பொறித் துறையின் வளர்ச்சிக்கு உகந்த வகையில் உள்ளது.

தற்போது தொழில் நடத்திக் கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான நகலகங்களுக்கு டெக்னீசியன்களின் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே இத்தகைய டெக்னீசியன்கள் பயிற்சி பெறுபவர்களுக்கும் தொழில் வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஆயிரம்விளக்கு பகுதியில் செராக்ஸ் எந்திரங்கள் தொடர்பான நிறைய நிறுவனங்கள் உள்ளன.

கோ. ஜெய ஜான்சன்

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா.

அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து விட்டு வருகிறவர்கள், போகிறவர்களுக்கு வணக்கம் சொல்லும் வேலைதான் அது.

அந்த வேலையைத்தான் மனநிறைவாக செய்து வந்தான். வரும் விருந்தினர்கள் எப்போதும் இவன் முகத்தில் புன்னகையைத்தான் பார்ப்பார்கள். சோர்வு இல்லாமல் வணக்கம் சொல்லி வரவேற்பான்.

அன்றும் அப்படிப் பணியில் இருக்கும்போது, ஓட்டல் வாசலில் ஒரு கார் வந்து நின்று, அதில் இருந்து ஒருவர் இறங்கினார். வழக்கம் போலவே முகத்தில் புன்னகையுடன் வரவேற்று வணக்கம் சொன்னான் தேவா.

இவன் சொன்ன வணக்கத்திற்கு பதிலாக “மிஸ்டர், நீ நாளையில் இருந்து இந்த கேட் வாசல்ல நிற்காதே. இந்த வேலை இனிமேல் உனக்கில்லை” என்று சொல்லி விட்டு சர்ரென உள்ளே போய் விட்டார் அந்த பெரிய மனிதர்.

தேவாவுக்கு அதிர்ச்சி! யார் இவர் ? நாம என்ன தப்பு செஞ்சோம். காரில் வந்து இறங்கினார். வேலை இல்லை என்கிறார். குழப்பத்தோடு வரவேற்பாளரிடன் போய் விவரம் சொல்லிக் கேட்டான்.

“இப்ப வந்தவரா? அவர்தான் இந்த ஓட்டல் முதலாளியோட நெருங்கிய நண்பர். இவர் என்ன சொன்னாலும் நம் முதலாளி கேட்பார். ஏன் அவர் இப்படிச் சொல்லி விட்டுப் போகிறார் என்று எனக்கும் புரியவில்லையோ அனுதாபத்தோடு கூறினாள், அந்த பெண்.

மதிய உணவு இடைவேளையில் மேனேஜர் அறைக்கு போய் விவரம் சொல்லத் தொடங்கும் போதே அட என்னப்பா நீ வாசல்ல நின்று வரவேற்கிற வேலைதான் கிடையாதுன்னு அவர் சொல்லி இருக்காரு அதுக்கு பதிலா, முதலாளி கிட்ட சொல்லி சூப்பர்வைசர் வேலையை கொடுக்க சொல்லிட்டாருப்பா, இந்தா அந்த ஆர்டர் என மேனேஜர் கொடுத்தார்.

“நானா ? சூப்பர்வைசரா எப்படி சார் இது?, வியப்புடன் கேட்டான்.

“வாசல்ல நின்னு வரவேற்கிற உன் முகத்தில் புன்னகையும், வருகிறவர்களை அன்போடு வரவேற்கும் உன்னுடைய இயல்பு அவருக்குப் பிடித்து விட்டது. பல வாடிக்கையாளர்களும் என்னிடமே இது பற்றி கூறி இருக்கிறார்கள். இதை நான் முதலாளி கிட்டேயும் சொல்லி இருக்கேன். அதுவும் நீ ஒரு நாள் கூட லேட்டா வந்ததே இல்லை. இப்ப நீ சூப்பர்வைசர் ஆகிட்டே மகிழ்ச்சியோடு கூறினார், மேனேஜர்.

‘சூப்பர்வைசர் வேலைக்கான ஆர்டரை வாங்கிக் கொண்டு மேனேஜரின் கரங்களை குலுக்கிவிட்டு, பணி உயர்வை ஏற்றுக் கொள்ள தயாரானான், தேவா.

– கே. அசோகன்

சிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி?

பொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். “இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ! என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும் ஏற்படுகின்றன. நம்மால் இயல்பாகப் பணி செய்ய முடிவதில்லை.

சிக்கல் வருவது இயல்பான ஒன்று. வாழ்க்கை நடப்பதன் அறிகுறியே அதில் தோன்றுகின்ற சிக்கல்கள்தான். இந்த அடிப்படைத் தெளிவு ஏற்பட்டு விட்டாலே, சிக்கலைப் பார்த்து அதிர்ச்சியோ கவலையோ ஏற்படாது.

எடுத்துக் காட்டாக, 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நமது தலைமை அமைச்சர், ஆயிரம், ஐநூறு ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என அறிவித்ததைக் கூறலாம். ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் வைத்து இருந்தவர்கள் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்தக் காகிதப் பணத்தை நிறைய வைத்திருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி என்றால் ஒன்றிரண்டு தாள்கள் வைத்திருந்தவர்கள் கூட அதுதான் அவர்கள் கையிருப்பு என்றால் அதற்கேற்ற அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பார்கள். பொறுமையாக செய்தியைக் கேட்டவர்களுக்கு கையிருப்புப் பணத்தை வங்கியின் மூலம் மாற்ற வழி இருப்பது தெரிந்திருக்கும். சிக்கலின் அளவைப் பற்றிய அச்சம் குறைந்திருக்கும். ஆனால் அத்தோடு சிக்கல் தீரவில்லை.

பணத்தை புதிய இரண்டாயிரம், ஐநூறாக மாற்ற வேண்டும். இதற்காக வங்கிகளுக்குச் செல்ல வேண்டும். காத்திருக்க வேண்டும். அவற்றை மாற்ற வேண்டும். அல்லது கணக்கில் சேர்ப்பிக்க வேண்டும். இது ஒரு எதிர்பாராத சிக்கல். தொடர் நடவடிக்கையாக மேலும் சிக்கல்களைச் சந்திக்க நேரலாம். பொதுவாக, சிந்தித்துச் செயல்பட்டால், தெளிவு, ஏற்படும்; சிக்கலைத் தீர்க்கலாம். இந்த நம்பிக்கை வேண்டும்.

எடுத்துக் காட்டாக ஒரு தொழில் முனைவோராக இருப்பவர்களுக்க எப்படி சிக்கல்கள் வரக்கூடும்?

முதலாவது, நடைமுறைச் சிக்கல்கள். தொழிலை நடத்துவதற்கு மூலதனம், உழைப்பு, மூலப் பொருட்கள், மின்சாரம் போன்றவை வேண்டிய அளவிற்குத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று தேவைக்கு ஏற்ப கிடைக்காமல் போய் விட்டால் சிக்கல் தோன்றும்.

அடுத்தது, இயற்கையின் நிகழ்வுகளால் ஏற்படக் கூடியவை. அரசியல் காரணங்களுக்காக கடையடைப்புகள், சாலை மறியல் போன்ற போராட்டங்களை சந்திக்க நேரலாம். 

Also read:நம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி?

அரசின் கொள்கை மாற்றங்களினால், ஜிஎஸ்டி போன்ற புதிய வரி விதிப்பு அறிவிப்புகளினால் கணக்குகள் வைத்துக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில் வாணிய தொழில் சூழல் மாறலாம். ஒரு நிறுவனத்தை முக்கிய பங்கேற்று நடக்கிக் கொண்டிருந்தவர் தொழிலை விட்டுப் போகலாம். சாலையை விரிவாக்கம் செய்வதாகக் தமது கட்டிடத்தை இடிக்கலாம். இடம் மாற்ற வேண்டிய நெருக்கடி வரலாம். இப்போது கொரோனா நெருக்கடியைச் சொல்லலாம்.

இப்படி எல்லா பிரிவுகளிலும் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு சிக்கல்கள் எப்படியும் எந்த நிலையிலும் எந்த வடிவத்திலும் வரலாம். பொதுவாக, ஒரு தீயணைப்புப் படையில் பணி செய்கின்ற வீரன் எங்கும் எப்பொழுதும் தீப்பிடிக்கலாம் என்ற முன் எச்சரிக்கையோடு காத்திருப்பதைப் போன்று அனைவரும் இருப்பதும், செயல்படுவதும் தேவையாகும்.

தீர்வு எங்கே? எங்காவது ஒரு சிக்கல் தோன்றுமானால், உறுதியாக அந்தச் சிக்கலுக்குத் தீர்வு உண்டென்ற நம்பிக்கையோடு சிக்கலை அணுக வேண்டும். முதலில் மனத்தின் சமநிலையை இழக்கக் கூடாது, ஆத்திரமோ கோபமோ படக்கூடாது.

ஏற்பட்டு இருக்கும் சிக்கலின் இயல்பைப் பகுத்தாய்ந்து பார்க்க வேண்டும். சிக்கலும் ஒரு நோய்தான். மருத்துவர் மன நிலையோடு அதனை அணுக வேண்டும். வள்ளுவர்,

‘நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்                              வாய்நாடி வாய்ப்பச் செயல்’

என்கின்றார்.

அதாவது, முதலில் என்ன நோய், அதன் இயல்பு ஆகியவற்றை கவனிக்க வேண்டும். அடுத்து அந்த நோய்க்கான மூலகாரணத்தை ஆராய்ந்து அறிய வேண்டும். பின்பு அதனை எப்படி போக்குவது என்பதற்கான தீர்க்கும் வழிமுறைகளைத் தேர்ந்து தெளிய வேண்டும். அதனைத் தொடர்ந்து அதனைத் தீர்கக வேண்டிய மருத்துவத்தை, செயல்பாட்டு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். 

Also read:பத்தில் ஒன்று – வெற்றியை நோக்கியே உங்கள் பார்வை இருக்கட்டும்

சிக்கல்களின் இயல்பை அறிந்து, அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கலாம். அதற்குக் காலம் தேவைப்படலாம். ஒரு சிக்கலுக்கு ஒரு தீர்வுதான் இருக்குமென்று கூற முடியாது. ஒரு சிக்கலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் இருக்கலாம். அவற்றில் நமக்கு எது ஏற்ற தீர்வு என்பதை கண்டறிய வேண்டும்.

“தேடுங்கள் கண்டடைவீர்கள்”, என்பது வேத நூலில் இருக்கும் ஒரு வாக்கியம். தீர்வும் அப்படித்தான். தேடினால் கிடைக்கும். நமது அறிவு, தீர்வைத் தேடப் டான் பட வேண்டும். இதற்கு நூலறிவு மட்டும் போதாது, பட்டறிவும் வேண்டும். தீர்வுகளைத் தேடுவதற்கு தக்கவர்களின் துணையை நாடலாம். சிக்கல் எந்தத் துறை சார்ந்தது என்று கண்டு கொண்டால் அந்தத் துறை சார்பான வல்லுநர்களைச் கண்டறிந்து, அவர்களிடம் சிக்கல்களைக் கூறி தெளிவும், தேர்வும் பெறலாம்.

சிக்கல்களுக்குத் தேர்வைத் தேடும் பொழுது பொறுமை வேண்டும். உடனடியாகத் தீர்வு கிடைத்து விடும் என்று கூற முடியாது. தொடர் முயற்சி வேண்டும்.

வாழ்க்கை ஒரு போர்க்களம்.  இங்கு நடைபெறும் போரில் வெளிப்படையான கருவிகளைப் பயன்படுத்த மாட்டோம். இங்கு அறிவு என்ற கருவியைத்தான் மிகுந்த ஆற்றலோடு பயன்படுத்த வேண்டும்.  “நம்மால் முடியும்” என்ற தளராத நம்பிக்கையோடு முயல வேண்டும். “வருவதை எதிர்கொள்வோம், தொடங்கிய பயணத்தைத் தொடர்வோம்”. என்று செயல்படுபவன் தான் வெற்றியை அடைவான்.

– டாக்டர் மா. பா. குருசாமி

வெண்டை – 90 நாட்களில் அறுவடை

0

தோட்டக்கலை பயிர்களில் முதன்மையான பயிர்களில் ஒன்று, வெண்டை இதற்கு எப்போதும் சந்தை உண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள். இதற்கு நடப்பு ஜனவரி மாதத்திலேயே நிலத்தை தயார் செய்தல் அவசியம். வெண்டையில் பல வகைள் உண்டு, அவை கோ 2. எம்டியு 1 அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராத்தி, கோ 3, பூசா சவானி, வர்சா உட்கார் ஆகியவையாகும்.

கோ .பி.எச். 1

இது வர்சா உப்பார் தெரிவு, பி.ஏ. 4-இன் இனக் கலப்பு காய் அடர் பச்சை, இளம் குறைவான நார் மற்றும் அங்கங்கு முடிகள் காணப்படும். மகசூல் ஹெக்டேருக்கு 22 டன்.

கோ 1 (1976)

இது ஹைதராபாத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வகை. காய் இளம் சிவப்பு நிறம் கொண்டது. தொன்னூறாம் நாளில் ஹெக்டேருக்கு 12 டன் விளைச்சல் கிடைக்கும்.

கோ 2 (1987)

இது ஏ.ஈ. 180, பூசா சவானியன் இனக் கலப்பு வாடிக்கையாளர்கள் விரும்பும் வகை சந்தைக்கு சிறந்தது. மகசூல் தொன்னூறு நாட்களில் 15-16 டன்.

கோ 3 (1991)

இது பிரபானி கராந்தி மற்றும் எம்டியூன் இனக் கலப்பு: மகசூல் 16-18 டன்/எக்டர்.

வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர். பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பகுதிகளிலும் வெண்டை தல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா மண் வகை நிலத்திலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். 

மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ. இடைவெளி விட்டு வரிப் பாத்திகள் (பார்சால்) அமைக்க வேண்டும்.

விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். பின் விதைகளை 400 கிராம் அசோஸ் பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும்.

நிழலில் ஆற வைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்க வேண்டும். பிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்க வேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செமீ, இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செமீ ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

Also read: துளசியைப் பயிரிட்டு எங்கெல்லாம் விற்பனை செய்யலாம்?

விதைத்த உடன் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அடி உரமாக 20 கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து விட வேண்டும்.

விதைத்த 30 நாள்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்கரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம்.

மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீ ர் கட்டுவது மிகவும் அவசியமாகும். ஒரு சதவீத பூரியா கரைசலை விதைத்து 30 நாள்கள் கழித்து 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை இலைவழி ஊட்டம் ஆக தெளிக்க வேண்டும்

மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைக்க 30, 45 மற்றும் 6)- ஆவது நாளில் தெளிப்பதன் மூலம், விளைச்சலை அதிகப்படுத்தலாம். களைகள் முளைக்கும் முன் விதைக்க மூன்றாம் நாள் ஹேக்டேருக்கு ப்ளுக்குளோரலின் 2 லிட்டர் தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.

விதைத்த 30-ஆம் நாள், ஒரு கைக்களை எடுக்க வேண்டும். கலப்பு ரகங்களுக்கு ஊட்டச் சத்தின் அளவு தழை மணி, சாம்பல் சத்து முறையே வேண்டும். பிறகு, ஹெக்டேருக்கு வெண்டை விதையை 200:100:100கிகி ஆகும். இதில் 75 மணிச்சத்தை (75 கிகி மணிச்சத்து 469 கிகி சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடி உரமாக அளிக்க வேண்டும்.

மீதமுள்ள தழை, மணி, சாம்பல் சத்து 200:25:100 கிகி உரப் பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர் பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப் பாசனம் அளிக்க வேண்டும் பயிரின் ஆயுள்காலம் முழுவதும் 3 நாள்களுக்கு ஒரு முறை உரப் பாசனம் அளிக்க வேண்டும்.

வெண்டையில் காய்த் துளைப்பான் தாக்குதல் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்து விடவேண்டும்

ஹெக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விட வேண்டும். கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும் அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

சாம்பல் நிற வண்டைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி, குருணை மருந்து ஹெக்டேருக்கு 12 கிலோ இட வேண்டும். நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஹெக்டேருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது உரத்துடன் கலந்து இட வேண்டும்.

Also read:அதிக லாபம் தரும் துவரை

அசுவினிப் பூச்சியை கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத் தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் மஞ்சள் நரம்புத் தேமல் நோய் வெண்டையைத் தாக்கக் மூடிய ஒரு நச்சுயிரி நோய் ஆகும்.

இந்நோய் வெள்ளை ஈ என்ற பூச்சிகளால் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பரவுகிறது. இப் பச்சியை கட்டுப்படுத்த 2 மில்லி வேம்பு எண்ணையை, ஒரு லிட்டர் தண்ணிருடன் கலந்து தெளிக்க வேண்டும். கோடை காலத்தில் இந்நோய் மிக அதிக அளவில் வெண்டையைத் தாக்கும்.

பார்பானி கிராந்தி அர்கா அனாமிகா, அர்கா அபஹாப் போன்ற வகைகள் இந்நோயைத் தாங்கி வளரக் கூடியவை. சாம்பல் நோய் என்பதும், வெண்டையை தாக்கும் நோயாகும் இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்த தெளிக்க வேண்டும். பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

விதைத்த 45 நாள்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்து விட வேண்டும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.

ஹெக்டேருக்கு 90 முதல் 100 நாள்களில் 12-15 டன் வெண்டைக் காய்கள் கிடைக்கும் வெண்டைக்காய் பயிரை நடப்பு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சாகுபடி செய்யலாம்.

– மோனா

கணினியை அணைத்து வைத்த பிறகும் நேரம், தேதியை சரியாக காட்டுவது எப்படி?

0

பேட்டரி என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருவது கைக்கடிகாரமும், சுவரில் மாட்டும் சுவர்க் கடிகாரமும்தான். இதைத் தவிர இன்வெர்ட்டரில் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பேட்டரியும் நினைவுக்கு வரக் கூடும். இவை தவிர வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளும் உள்ளன.

இங்கு சீமாஸ் என்பது கணினியின் சிபியூவில் உள்ள மதர்போர்டின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள பேட்டரியைக் குறிப்பது ஆகும். நீங்கள் சற்று நினைத்துப் பாருங்கள். காலை பத்து மணிக்கு கணினியை ஆன் செய்கிறீர்கள். இரவு எட்டு மணி வரை அதில் பணிபுரிந்து விட்டு கணினியை அணைக்கிறீர்கள். மறுநாள் காலை பத்து மணிக்கு கணினியை ஆன் பண்ணும்போது, சிஸ்டம் ட்ரேயில் உள்ள தேதி மற்றும் நேரம் பகுதியில் அன்றைய தேதி, அப்போதைய நேரம், முற்பகலா, பிற்பகலா என்பதை சரியாகக் காட்டுவது எப்படி?
ஒரு வாரம் நாம் கணினியை ஆன் செய்யவில்லை என்றாலும், தேதி, நேரம் சரியாகக் காட்டப்படுவது எப்படி?

இதற்கான முதன்மையான காரணம் சீமாஸ் பேட்டரி ஆகும்.
சீமாஸ் என்பது காம்ப்ளிமென்டரி மெட்டல் ஆக்சைடு செமிகண்டக்டர் (Complementary Metal Oxide Semi Conductor) என்பதன் சுருக்கம் ஆகும். கணினி இயங்கிக் கொண்டு இருந்தாலும், அணைத்து வைக்கப்பட்டு இருந்தாலும் இருபத்து நான்கு மணி நேரமும் கணினியின் கடிகாரம் ஓடிக் கொண்டே இருப்பது சீமாஸ் பேட்டரியால்தான்.
மதர் போர்டில் பொருத்தப்பட்டு இருக்கும் சீமாஸ் பேட்டரியின் பயன்படும் காலம் அதிகரிக்க வேண்டும் எனபதற்காக, குறைந்த அளவு மின்சாரத்துடன் இயங்கும் தொழில் நுட்பத்துடன் இந்த பேட்டரி உருவாக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக பயாஸ் ரோமில் உள்ள தகவல்களும் சீமாஸ் பேட்டரி மூலம் பாதுகாக்கப்படுகிறது. மின்சாரம் நின்று விட்டால் டேட்டாக்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காகவே ஒரு சிறிய பேட்டரி, அதாவது சீமாஸ் பேட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.
பயாஸ் ரோம் (BIOS ROM) என்பது பேசிக் இன்புட் அவுட்புட் சிஸ்டம் (Basic Input Output System) என்பதன் சுருக்கப் பெயர் ஆகும். கணினி இயங்கத் தேவைப்படும் அடிப்படை உறுப்புகளுக்கான ஆணைத் தொகுப்புகள் அடங்கியது, மெமரி ஆகும். இதைத்தான் ஃபர்ம்வேர் மென்பொருள் என்று சொல்கிறோம்.
இதம பயஸ் ரோம்-க்குள் கணினியின் நுட்பங்கள் அனைத்தும் அடங்கி இருக்கின்றன என்று சொன்னால் உங்களுக்கு வியப்பாகக் கூட இருக்கலாம்.

பயாசின் முதன்மையான பணிகளில் ஒன்று, பவர் ஆன் செல்ஃப் டெஸ்ட் (போஸ்ட்). அதாவது சிஸ்டம் போர்டில் உள்ள சர்க்யூட்கள், மெயின் மெமரி, கீ போர்டு, டிஸ்க் ட்ரைவ்கள் அனைத்தையும் பரிசோதிக்கும். இதை முடித்த பிறகு வேறு ஏதாவது எக்ஸ்பேன்ஷன் போர்டுகள், பயாஸ் கோட்கள் உள்ளனவா என்று பரிசோதிக்கும்.

அப்படி ஏதாவது இருந்தால் மைக்ரோ பிராசசர் அந்த கோடை சோதித்து அதில் உள்ள குறிப்புகள் படி செயல்படும். இதை முடித்த உடன் முதல் திரை உங்களை அன்புடன் வரவேற்கும். மேலும் ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்களில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஃபைல்களைத் தேடும். அவ்வாறு தேடுவதற்கு பூட் ஸ்ட்ராப் லோடர் என்ற சிறிய புரோகிராம் பயன்படுகிறது. அதன் பிறகுதான் ஐகான்கள் எல்லாம் தெரிய வரும். பயாஸ் செட்அப் எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றால் தேதியையும், நேரத்தையும் சரியாகக் காட்டுவதற்கும், பூட் டிவைஸ் ப்ரியாரிட்டியை தேர்வு செய்வதற்கும், சில வசதிகளை சரி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சீமாஸ் பேட்டர் பழுது அடைந்து விட்டால் கம்ப்யூட்டர் பூட் ஆகாமல் கூட போகலாம். சீமாசில் ஒரு நிக்கல் காட்மியம் பேட்டரி இருக்கும். ஒவ்வொரு முறை கணினி ஆன் செய்யப்படும் போதும் இது சார்ஜ் செய்யப்படும். இதைத்தான் அக்குமுலேட்டர் என்று கூறுவார்கள்.
சீமாஸ் பேட்டரி இரண்டு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்று, எக்ஸ்டர்னல் லித்தியம் பேட்டரி, இரண்டாவது, காயின் செல் பேட்டரி.
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை உழைக்க வல்லது.
இந்த பேட்டரியின் செயல்பாடு நின்று விட்டால், தேதி மற்றும் நேரம் தவறாகத் தெரியும். சிஸ்டம் சிபியூவில் இருந்து பீப் ஒலி கூட வரலாம்.


சீமாஸ் பேட்டரி, சிபியூவின் உள்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள மதர்போர்டின் மேல்பகுதியில் ஒரு ஐம்பது காசு வடிவத்தில் சற்று மொத்தமாக இருக்கும். அந்த பேட்டரி மேல் சிஆர்2032 என்று எழுதப்பட்டு இருக்கும். நீங்களாகவே இந்த பேட்டரியை வாங்கப்போனால் மேற்கண்ட எண்ணை சொல்லிக் கேட்டால் அந்த பேட்டரியை சரியாக எடுத்துக் கொடுப்பார்கள்.


கணினியின் டெஸ்க்டாப்பில் உள்ள ஸ்டார்ட் பட்டன் அருகில் உள்ள டாஸ்க் பாரின் வலது ஓரத்தில் நேரமும், தேதியும் இடம் பெற்று இருக்கும். நேரத்தின் அருகே காலை, மாலை என்பதைக் குறிப்பிட ஏஎம், பிஎம் இடம் பெற்று இருக்கும். இவற்றை காலை, மாலை என்று மாற்ற விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம்.
அதற்கு Start > Run > Regedit செல்லவும். பின்பு அங்கு திறக்கப்பட்ட Registry Editor விண்டோவில் உள்ள பகுதியில் கர்சரை மைகம்ப்யூட்டர் ஐகானில் வைத்து நேராக மெனு பாருக்கு சென்று Find என்ற ஆப்ஷனை தேர்வு செய்து find what என்ற இடத்தில்
AM அல்லது PM என்று கொடுத்துத் தேடச் சொன்னால் சிறிது நேரம் கழித்து S1159 மற்றும் S2359 என்றபடி இடம் பெற்று இருக்கும் AM அல்லது PM மீது டபுள் கிளிக் செய்து Value data என்ற இடத்தில் Kalai அல்லது Malai என்று தட்டச்சு செய்து ஓகே கொடுப்பதன் மூலம், இந்த சொற்கள் நேரம் அருகில் இடம் பெறுவதைக் காணலாம்.
இவற்றை தமிழிலேயே காலை, மாலை என்றும் வரவைக்க முடியும். இதற்கு கூகுளில் Tamil Transliteration என்று தேடினால் தமிழ் ட்ரான்லிட்டரேஷன் பக்கம் திறக்கும். இதில் காலை, மாலை என்று தமிழில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வேல்யூ டேட்டா என்ற இடத்தில் ஒட்டவும்.

சு. சுரேஷ்குமார், கும்பகோணம்

வேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு

முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம் இல்லாததால் அவர்கள் என்னை கூப்பிடவில்லை.
ஆறு ஆண்டுகள் கழித்து, அதே நிறுவனத்திற்கு மீண்டும் விண்ணப்பம் அனுப்பினேன், எனக்கு அழைப்பு வந்தது. அங்கே சென்றால் மதன் என்றொரு மேலாளர் என்னை தொழில்நுட்ப நேர்முகத் தேர்வை எடுப்பார் என அறிமுகம் செய்து வைத்தனர். அவரும் ஒரு முன்னாள் LabVIEW Developer என்றார்.
நான் கடந்த மூன்று ஆண்டுகளாய் LabVIEW அதிகமாக பயன்படுத்தவில்லை என்றதும், அது வெறும் மென்பொருள்தான், நாம் தொழில்நுட்பத்தை பற்றி பேசுவோம் என்றார். வாகனத்தில் ஓட்டுநர்க்கு எரிபொருள் அளவை காட்டும் மீட்டர் எப்படி வேலை செய்கிறதென விளக்கச் சொன்னார்.
எரிபொருள் டேங்கில் இருக்கும் சென்சார் எரிபொருளின் அளவிற்கு ஏற்ற ரெசிஸ்டன்ஸ் (resistance) எவ்வளவு என அது இணைக்கப்பட்டு இருக்கும் ECU விற்கு (சிறு கணினி) சொல்லும். அதன் அடிப்படையில் ECU வின் மென்பொருள் எவ்வளவு எரிபொருள் இருக்கிறதென கணக்கிட்டு மீட்டர் இருக்கும்  ECU விற்கு CAN Bus மூலமாக சிக்னல் அனுப்பும் என நான் படம் வரைந்து விவரித்தேன்.
எரிபொருள் டேங்கிற்குள் சென்சார் வைத்தால் எப்படி தீ பிடிக்காமல் பாதுகாப்பது, அந்த மின் இணைப்பில் பழுது ஏற்பட்டால் என்னவாகும், வண்டி மலைப்பாதையில் பயணிக்கையில் டேங்கில் இருக்கும் எரிபொருள் ஒரு பக்கம் தேங்கும் பொழுது எப்படி கணக்கிடுவது, மேடுபள்ளம் நிறைந்த சாலையில் வண்டி பயணிக்கையில் எரிபொருள் டேங்கிற்குள் ததும்பும் பொழுது எப்படி கணக்கிடுவது என அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார்.
ஒவ்வொரு கேள்விக்கும் நான் பொறி இயலில் படித்த ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் யோசித்து பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். சில கேள்விகளுக்கு எனக்கு சரியான விளக்கம் சொல்ல வரவில்லை. அவர் சில தொழில்நுட்ப சொற்கள் மூலம் அவற்றை எனக்கு நினைவுபடுத்தி உதவியதும், அவற்றை பற்றி எனக்கான புரிதலை விளக்கினேன்.
நேர்முகத் தேர்வு முடிந்ததும், அங்கு இருப்பவரிடமே நேரடியாகவே முடிவுகளை கேட்டு விடும் பழக்கம் எனக்கு. நான் கேட்டதும் அவர் மனிதவள அதிகாரி முடிவுகளை தெரிவிப்பார் என்றார். சரி, ஆனால் நீங்கள் என்னைப் பற்றிய உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்கள் என்றேன். “இது போன்ற பெரிய நிறுவனங்களில் Holistic Understanding முக்கியம். உங்களுக்கு பொறியியல் பற்றி நல்ல புரிதல் இருக்கு” என்றார்
எந்தப் பாடமாக இருந்தாலும் அவற்றை முற்றும் முழுவதுமாக ஒன்றோடு ஒன்று எப்படி இயங்குகிறது என புரிந்து கொள்ளுதல் அவசியம். விரிவான புரிதல் (Holistic Understanding of a Subject ) ஒரு முக்கியமான வேலை வாய்ப்புக்கான திறமை (EmployableSkill).

– கபிலன் காமராஜ்

 

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

0

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை.
இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப் பங்கேற்கிறது.
இத்திட்டத்திற்கான தேவை
சனவரி 2016 முதல் விக்கி மூலம் (விக்கிசோர்ஸ்) தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டதின் மூலம் இதுவரை 2090 நூல்கள் பதிவேற்றப்பட்டு உள்ளன.
இதன் மூலம் 22 ஜனவரி 2019 வரை கிட்டத்தட்ட 9588 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 70 நூல்கள் விக்கி மூலத்தில் கட்டற்ற முறையில் அனைவரும் படிக்க பதிப்பிப்பு செய்யப்பட்டு உள்ளது. மேலும் நிறைய புத்தகங்கள் மெய்ப்பு செய்ய அடுத்தடுத்த கட்டங்களில் உள்ளன. .
கணியம் அறக்கட்டளையின் தெரிவிப்பு
இந்த அறக்கட்டளையின் செயல்பாட்டிற்கும் விக்கிசோர்ஸ், விக்கிப்பீடியா முதலிய தளங்களை செயல்படுத்தி வரும் விக்கிமீடியா அறக்கட்டளைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
திட்டம் செயற்படும் விவரம்
மெய்ப்புப் பார்க்கும் பணியானது இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. முதல் நிலையில் மெய்ப்புப் பணி முடிந்த பிறகு, அப்பக்கம் மஞ்சளாக மாற்றப்படும். இரண்டாம் நிலை சரிபார்ப்புப் பணி முடிந்த பிறகு அப்பக்கம் பச்சையாக மாற்றப்படும். இந்த இரண்டு பணிகளும், வெவ்வேறு திறனாளர்களால் செய்யப்பட வேண்டும். மேலும், மெய்ப்புத் தரத்தை உறுதி செய்ய, தன்னார்வ விக்கிப் பங்களிப்பாளர் ஒருவர், சரி பார்த்து, பக்கங்களை ஒருங்கிணைவு (transclusion)செய்வார்.
பணி விதிகள்
கணியம் திட்டத்தில் இணைந்து பங்களிப்போர் kaniyam  என்று முடியுமாறு பயனர் பெயர் ஒன்றை உருவாக்கி கொள்ள வேண்டும்.
{{கட்டணத் தொகுப்பு|அமர்த்துநர்=[http://www.kaniyam.com/foundation/கணியம் அறக்கட்டளை]| userbox=yes}}  – இந்த வார்ப்புருவை அனைவரும் தங்களது பயனர் பக்கத்தில் பதிவிட வேண்டும்.
தங்களுக்கு வேறு தன்னார்வ கணக்கு இருந்தால் அதன் விவரங்களையும் இப்பேச்சு பக்கத்தில் தெரிவிக்க வேண்டும். இதனை தெரிவிக்க கீழ்கண்ட வார்ப்புருவை பயன்படுத்தலாம்
{{பயனர் மாற்று கணக்கு|தங்களின் தன்னார்வ பயனர் பெயர்}}

இது முழு நேர சம்பளப் பணி கிடையாது. ஒவ்வொரு நூலும் வெளியிடப்படும் அடிப்படையில் பகுதி நேர வாய்ப்பு மட்டுமே. எந்தப் பயனர்கள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதை கணியம் அறக்கட்டளை முடிவு செய்யும். அவ்வப்போது கணியம் அறக்கட்டளை அறிவிக்கும் நெறிமுறைகளை, இத்திட்டத்தின் கீழ் பங்கு அளிப்பவர்கள் கடைபிடித்து வர வேண்டும்.
மெய்ப்பு அட்டவணை மேம்பாடு
ஒவ்வொரு மெய்ப்பு அட்டவணையும், இரண்டு நிலைகளில் மேம்படுத்தப்பட்டு மின்னூல் வடிவங்களாக மாற்றப்படடும். முதல் நிலையில் மெய்ப்பு பார்க்கப் பட்டவை என்பதை ஒரு பயனர் குறிக்க வேண்டும். இரண்டாம் நிலையில், சரிபார்க்கப்பட்டவை என்பதை மற்றொரு பயனர் குறிக்க வேண்டும்.
முதல் நிலை மெய்ப்பு வழிகாட்டுதல்கள்
இத்திட்டத்தின் கீழ் மெய்ப்பு செய்ய இணைபவர், இக்கருவி காட்டும் நூல்களில் ஒன்றினை, முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், மெய்ப்பு தொடங்கும் முன் அதன் விவரங்களை இப்பக்கத்தில் முன்பதிவிட வேண்டும். கணியம் அறக்கட்டளை, சில முன்னுரிமைகளை கருதி, சில நூல்களை முதலில் மெய்ப்பு செய்ய பரிந்து உரைக்கவும் வாய்ப்பு உள்ளது.
முதல்நிலை மெய்ப்பு செய்பவர், அந்நூலின் மேலடி, கீழடி, எழுத்துப் பிழைகள், வடிவமைப்பிற்கான வார்ப்புரு இடல், (font size, bold, italic, alignment, quotation mark, placing required templates, etc)  முதலியவைகளை, அறக்கட்டளையின் வழிகாட்டுதல்படி செய்ய வேண்டும். இரண்டாம் நிலை சரி பார்ப்பவர், பார்த்துக் கொள்வார் என்று கருதாமல், அனைத்து பணிகளையும் செய்த பிறகே, இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்து, மஞ்சள் நிறத்திற்கு மாற்ற வேண்டும்.
இரண்டாம் நிலை சரிபார்ப்பு வழிகாட்டுதல்கள்
முதல் நிலை முடிந்த நூல்களை, இரண்டாம் நிலையில் சரிபார்ப்பவர், கணியம் அறக்கட்டளையின் வழிகாட்டுதலோடு, ஒரு நூலை தேர்ந்தெடுத்து இப்பக்கத்தில் முன்பதிவிட வேண்டும்.
முதல் நிலை மெய்ப்பு முடித்த பக்கங்களில், சிற்சில தவறுகள் இருந்தால், அதனை சரி செய்து விட்டு மஞ்சள் நிறத்திலிருந்து, பச்சை நிறத்திற்கு மாற்ற வேண்டும்.

விக்கிமூலம்:கணியம் திட்டம்/பணிகள் என்ற பக்கத்தில், இத்திட்டத்தில் இணைந்து உள்ளவர்களின் பணிகளை, விரிவாகக் காணலாம்.

Abirami kaniyam, Divya kaniyam, Booklover kaniyam, Roopa – kaniyam, Shobia kaniyam, arun kaniyam, Athithya kaniyam, தகவலுழவன், Balabarathi kaniyam, Sasi kaniyam, Deepa arul kaniyam, Kumaran kaniyam, Muthulakshmi kaniyam, Monika kaniyam, Kaleeswari kaniyam, Ramesh kaniyam, Iswarya kaniyam

மேற்கூறிய படிநிலைகள் மூலம் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டநூல்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளன. இக்கணியம் திட்டம் குறித்த தகவல்களை பின்வரும் தொடர்பில், கேட்டு அறியலாம். [email protected]
ளீணீஸீவீஹ்ணீனீயீஷீuஸீபீணீtவீஷீஸீ@ரீனீணீவீறீ.நீஷீனமின்னஞ்சல் அனுப்பலாம்.
தமிழ் விக்கிமீடியப் பங்களிப்பாளர்களில் ஒருவரான, திரு.சீனிவாசன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

– மலர்