பி.எஃப் கணக்கை மாற்ற வேண்டுமா?

0

பணிபுரிவோர், பி.எஃப் பிடிக்கும் ஒரு நிறுவனத்தில் இருந்து பி.எஃப் பிடிக்கும் இன்னொரு நிறுவனத்திற்கு மாறும் போது, இணையத்தின் வாயிலாக முந்தைய நிறுவனத்தின் கணக்கில் இருந்து தொகையை புதிய பி.எஃப் கணக்கிற்கு மாற்றிக் கொள்ள முடியும். அதற்கான வழிமுறை பின்வருமாறு;


முதலில் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் members.epfoservices.in/ home.php எனும் இணையப் பக்கத்திற்கு செல்லவும். அங்கு ஒருங்குறியீட்டு எண் (UAN) அடிப்படையிலான யூசர் நேம் மற்றும் கடவுச் சொற்களை உருவாக்கி கொண்டு லாகின் செய்யவும். உடன் நம்முடைய வருங்கால வைப்பு நிதியின் ஒருங்குறியீட்டு எண்ணுடன் (UAN) கூடிய கணக்கு பக்கத்திற்கு செல்லும்.


பின்னர், நாம் எந்த நிறுவனத்தில் இருந்து நம்முடைய கணக்கினை மாற்றி கொண்டு வர விரும்புகிறோமோ, அந்த நிறுவனத்தின் பெயர், குறியீட்டு எண் போன்ற விவரங்களை கீழிறங்கு பட்டியலின் வாயிலாக நிறைவு செய்து கொண்டு Check Eligibility என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.


கணக்கினை மாற்றுவதற்கு இயலும் அல்லது இயலாது என்ற செய்தி திரையில் தோன்றும். இயலும் என்ற செய்தி தோன்றினால் அங்கீகரிக்கப்பட்ட நம்முடைய வருமானவரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஒன்றினை கொடுக்க வேண்டும். பின்னர் நமக்கு பின் (PIN) எண் ஒன்று நம்முடைய செல்பேசிக்கு வரும். அதனை உள்ளீடு செய்துவிட்டால் அதனை ஏற்று கொண்டதற்கான செய்தியும், நம்முடைய பணியை தொடரும்படியும் அறிவிப்பு வரும்.


அதனை தொடர்ந்து EPFO Member Claims Portal எனும் இணைய பக்கத்திற்கு அழைத்து செல்லும். அங்கு பணியாளரின் ஆவணத்தின் சுட்டிஎண், செல்பேசி எண் போன்ற விவரங்களை உள்ளீடு செய்யவும். பிறகு தோன்றும் திரையின் மேல்பகுதியில் Request for transfer of account என்பதைக் கிளிக் செய்யவும். உடன் PF transfer என்ற படிவம் திரையில் தோன்றும். அதன் முதல் பகுதியில் பணியாளரின் சொந்த தகவல்களை உள்ளீடு செய்யவும். இரண்டாவது பகுதியில் பழைய நிறுவனத்தில் நமக்கு வழங்கப்பட்ட வருங்கால வைப்புநிதி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யவும்.


மூன்றாவது பகுதியில் நடப்பு நிறுவனத்தின் வருங்கால வைப்புநிதி கணக்கின் விவரங்களை உள்ளீடு செய்யவும். நாம் நிரப்பிய தகவல்கள் சரியாக உள்ளனவா என சரிபார்க்கவும். சரி எனில், திரையில் தோன்றும் கேப்சா (captcha) எண்ணை உள்ளீடு செய்யவும். உடன் பின் (Pin) எண் ஒன்று நம் செல்பேசிக்கு வரும்.


அதனை உள்ளீடு செய்து விட்டால் போதும் நம்முடைய கணக்கு ஒருங்கிணைக்கும் பணி செயல்படத் துவங்கும். இது சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். ஏனெனில் நம்முடைய இந்த கோரிக்கையை பழைய நிறுவனம் சரிபார்த்து ஆமோதிக்க வேண்டும். அதுவரையில் நம்முடைய கோரிக்கையின் நிலையை இணையத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் சிக்கல் எனில் EPFO இணையத்தினை நேரடியாக அணுகி சரி செய்து கொள்ளலாம்.

-வசந்த குமார்

டாட்டாவால் வளர்ந்த ஏர் இந்தியா!

0

தமிழக சாலைகளில் ஓடும் அரசு பேருந்துகளில், பயணிப்பவர்களுக்கு இது போன்ற அனுபவம் ஏற்பட்டு இருக்கும்; ஆனால், விமானத்தில் பயணிக்கும் போதும் இப்படி நடந்தால்? கடந்த வாரத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சிலர் மீது, அதன் ஜன்னல் கண்ணாடி கழன்று விழுந்தபோது, மற்றவர்களும் சேர்ந்து அலறினார்கள். விமானப் பணிப் பெண்கள் பயணிகளைச் சமாதானம் செய்ததோடு, ஜன்னலையும் சரி செய்தார்களாம்.


ஏர் இந்தியா விமானங்களின் நிலை, இந்த அளவு மோசமடைந்திருப்பது கவலை அளிக்கிறது. ஆனால், ‘உண்மை முகத்தில் அறைகிறது’ என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. கிலோமீட்டர் கணக்கு ரன்வேயில் ஓடும் விமானங்களைக் கையாளும் ஒரு நிறுவனத்தையே, நாம் முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறோம். இந்த நிறுவனத்தை மட்டும்தானா… இந்தியாவின் ஒட்டு மொத்த விமானப் போக்குவரத்து துறையே இன்று முட்டுச்சந்தில்தான் நிற்கிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.


கடந்த மாதம் இந்திய அரசு எடுத்த முடிவின்படி, அதன் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளில் 76 சதவீதத்தை விற்பனை செய்ய முடிவு செய்து, ஆர்வம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை யாரும் வரவில்லையாம். வேறு வழியில்லாத மத்திய அரசு, ‘எப்படியும் அதை விற்றுதான் ஆக வேண்டும்’ என்பதால், தனது நிலையில் இருந்து இறங்கி வந்திருப்பதை வெளிப்படையாக அறிவித்து இருக்கிறது.


அதன்படி, “ஏர் இந்தியாவை வாங்க முன்வரும் நிறுவனம் ஏற்கனவே, இத்துறையில் அனுபவம் உள்ளதாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. கனமான பாக்கெட் உள்ள எந்த தனி நபரோ…. நிறுவனமோ… கூட்டணியோ…. எங்களால், இந்த விமான நிறுவனத்தை லாபகரமாக நடத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ள ஆட்கள் யாராக இருந்தாலும் வாருங்கள்” என்று கூவிப் பார்க்கிறது. ஆனால், அது காதில் விழுந்தது போலவே. யாரும் காட்டிக் கொள்ளவில்லை. அந்த அளவு, ஏர் இந்தியா இன்று மிக மோசமான நிதி நிலையில் உள்ளது. ஆனால், அதன் கடந்த காலம் அப்படியில்லை.


நவீன சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ, அந்நாட்டை கட்டமைத்து எழுப்பிக் கொண்டிருந்த நேரம் அது. நாட்டின் நிர்வாகத்தில், பல துறைகளிலும் அவர் செய்த ஏராளமான சீர்திருத்தங்களுக்குப் பின், சிங்கப்பூரின் உயரிய நிலையை – மற்ற நாடுகளில் விளம்பரப்படுத்த எளிதான… சிக்கன வழியைத் தேடினார். அப்போது, பல நாடுகளுக்கும் சென்று பயணிகளை இறக்கிவிட்டு… பின்னர் அங்கிருந்து மீண்டும் பயணிகளை ஏற்றிக் கொண்டு வரும் விமானம் போல – ‘சிறந்த, சிக்கன விளம்பர சாதனம் வேறு இல்லை’ என முடிவு எடுத்தார்.


அதனால் சிங்கப்பூர் ஏர்லைன்சை, சிங்கப்பூருக்கான விளம்பர சாதனமாக கருதி, அதில் கவனம் செலுத்த முடிவு செய்தாராம். ‘இருப்பதிலேயே சிறந்தது’ என, சிங்கப்பூர் ஏர்லைன்சை நிலைநிறுத்த யாரிடம் ஆலோசனை பெறுவது… யாரிடம் பயிற்சி பெறுவது என ஆராய்ந்தபோது, மற்ற பல நாடுகளின் விமான நிறுவனங்களை விட ஏர் இந்தியாதான் பொருத்தமானது என, அப்போது முடிவு செய்யப்பட்டதாம். அந்த அளவுக்கு எல்லா அம்சங்களிலும் உன்னத நிலையில் இருந்த ஒரு நிறுவனம், இன்று எட்டியுள்ள பரிதாப நிலைக்குச் செல்லக் காரணங்கள், அதன்பிறகுதான் தொடங்குகின்றன. எனினும், இந்தியன் ஏர்லைன்சின் ஆரம்ப நாட்கள் படு உற்சாகமானவை.


இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு விதை போட்டது ஜேஆர்டி டாட்டா என்பது, பலருக்கும் தெரிந்த தகவல். நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, 1930களில் அவர் தொடங்கி வைத்ததுதான் இந்திய விமான வரலாறு.


இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த 1945க்குப் பிறகு, விமான சேவைக்கு புதிதாகவும் ஏராளமான வாய்ப்புகள் உருவாகி இருப்பதை உணர்ந்தார் டாட்டா. அதனால், நவீன விமானங்களை வாங்கி, மிகப் பெரிய அளவில் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய நினைத்தார். அதற்கு தேவைப்பட்ட நிதியை பங்கு விற்பனை மூலம் பெற நினைத்தார். அதற்குமுன், தனது நிறுவனத்தின் பெயரை பொதுவானதாக மாற்றி அமைத்தார்.


இது டாட்டாவின் நிறுவனம் என்ற தோற்றத்தை மாற்றி, இந்தியாவுக்கான விமான நிறுவனம் என்ற அடையாளத்தைத் தர முயன்றார். அப்போதுதான் “ஏர் இந்தியா” உதயமாகிறது. பின்னர், ஏர் இந்தியா பங்குகளை பொது வெளியீடு மூலம் விற்று நிதி திரட்டினார். அதைக் கொண்டு, அந்த நாட்களில் இருந்ததிலேயே சிறந்தது என கருதப்பட்ட, 40 இருக்கைகள் கொண்ட ‘லாக்ஹீட் கன்ஸ்டலேஷன்’ விமானங்களை வாங்கினார்.


அதன் பிறகான நாட்கள் – ஏர் இந்தியா வரலாற்றில் பொற்காலம் என சொல்லலாம். சுதந்திர இந்தியாவில் சோஷிலிச கோஷம் ஓங்கி ஒலித்ததை ஒட்டி, அடுத்தடுத்து வந்த மாற்றங்களால், 1953ல் அப்போதைய பிரதமர் நேரு, திடீரென ஒரு நாள் ஏர் இந்தியாவை நாட்டு உடமையாக்கினார்.


நாட்டு உடமையாக்கப்பட்டாலும் ஏர் இந்தியாவின் தலைவராக ஜேஆர்டி டாட்டாவே தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இது மட்டுமல்ல. அதன்பிறகு, இந்திய விமானப் போக்குவரத்துத்துறை தொடர்பாக ஜேஆர்டி டாட்டா சொன்ன அனைத்து ஆலோசனைகளையும் பிரதமர் நேரு ஏற்றுக் கொண்டார். ஒரு கட்டத்தில் உள்ளுர் விமான சேவையையும், வெளிநாட்டு விமான போக்குவரத்தையும் தனித்தனியாக பிரித்து விடலாம் என ஜேஆர்டி டாட்டா சொன்னபோது உருவானதுதான் – ஏர் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட – இந்தியன் ஏர்லைன்ஸ்! இது மட்டுமின்றி, நிர்வாக முடிவுகளில் ஜேஆர்டி டாட்டாவுக்கு அனைத்து விஷயங்களிலும் முழு அதிகாரம் இருந்தது என்றே சொல்லப்படுகிறது. அதனால், ஏர் இந்தியாவை ஒரு லாபகரமான நிறுவனமாகவே டாட்டா நடத்தி வந்தார்.


ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் பிரதமராக பொறுப்பு வகித்த நேரம். பிப்ரவரி 13ம் நாள். அன்று மும்பையில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் தனது அறையில் இருந்த ஜேஆர்டி டாட்டாவிடம், தான் ஏர் இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளதாக ஒரு கடிதத்துடன், இந்திய விமானப் படையில் இருந்து ஓய்வுபெற்ற ஏர் சீப் மார்ஷல் பி சி லால் கை குலுக்குகிறார். இது, தனக்கு செய்யப்பட்ட மாபெரும் அநீதி என ஜேஆர்டி டாட்டா கருதினார்.


மொரார்ஜி தேசாய் மிகவும் நேர்மையானவர் எனச் சொல்லப்பட்டாலும், அவர் ஜேஆர்டி டாட்டாவை நடத்திய விதம்…., டாட்டாவின் பதவியைப் பறித்த முறை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.


ஜனதா கட்சி நீண்ட நாட்கள் நீடிக்காமல் தோல்வி கண்ட பிறகு, 1980ல் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பு ஏற்றபோது, அவர், ஜேஆர்டி டாட்டாவை அழைத்து, ஏர் இந்தியாவின் நிர்வாகக் குழுவில் ஒரு உறுப்பினராக்கினார். ஆனால், அப்போதே ஏர் இந்தியாவின் ஆளுமையிலும், வலிமையிலும் விரிசல்கள் விழத் தொடங்கி இருந்தன.


எப்படியானாலும் – கருவாகி, உருவான நேரத்தில் தனியார் நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா, மீண்டும் ஒரு தனியார் நிறுவனமாகப் போகிறது என்பதில் மட்டும் மாற்றமில்லை.

-ஆர். சந்திரன்

பிரவுசிங் சென்டர்களில் இவற்றையும் செய்யலாம்!

0

நாம் கல்லூரியில் படிக்கும் போதே நமக்கு பிரவுசிங் சென்டர்களின் தேவைகள் பற்றி தெரிந்து இருக்கும். நமக்கும் பிரவுசிங் சென்டர்களுக்கும் ஒரு நீண்ட தொடர்பு இருக்கிறது. குறிப்பாக, புராஜெக்ட் செய்யும்போது, போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, ஜெராக்ஸ் எடுக்கும் போதும், இணையம் இல்லாதவர்கள் பிரவுசிங் செய்யும் போதும் இந்த பிரவுசிங் சென்டர்களின் அதிகப்படியான தேவையை அறிந்து இருப்போம்.


ஜெராக்ஸ், பிரின்ட் அவுட், கலர் பிரின்ட் ஆகியவற்றையும் செய்து கொடுக்கின்றன. குறைந்த விலை வைத்தால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதாவது நமக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். குறிப்பாக, அங்கு மாணவர்களின் வருகை அதிகமாகும்.


இங்கு ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களையும் விற்கலாம். குறிப்பாக, கீபோர்டு, மவுஸ், பென்டிரைவ், டேட்டா கார்டு, லேப்டாப் சர்வீஸ், இயங்குதளம் நிறுவித் தருதல், மென்பொருள்களை ஏற்றிக் கொடுத்தல் போன்ற இதர வேலைகளையும் இதன் மூலம் செய்யலாம். இந்த வேலைகள் மூலமாகவும் வருவாய் கிடைக்கும்.


கல்லூரி வளாகம், நகர்ப் புறங்கள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு அருகில் இந்த தொழிலை தொடங்கினால், அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பிரவுசிங் சென்டர் வைப்பது என்பது ஒரு சாதாரண தொழில் இல்லை. நம்மிடம் அதைப் பற்றிய முழு விவரங்கள் இருக்க வேண்டும். அதாவது கணினி மற்றும் அதன் தொழில் நுட்பங்கள் பற்றி படித்திருக்க வேண்டும், உடன் அதில் ஆழமான அனுபவம் இருக்க வேண்டும். கணினி, ஐடி ஆகியவற்றைப் படித்தவர்கள் பிரவுசிங் சென்டர் வைத்தால் சிறப்பாக நடத்தலாம்.


இப்போது பிரவுசிங் சென்டர்கள் வெறும் பிரவுசிங் சென்டர்களாக மட்டும் இல்லை. கூடுதலாக வேறு பணிகளையும் செய்து கொடுத்து பொருள் ஈட்டுகின்றன.

-அ. விஜயராணி

போனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன?

0

போனஸ் பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குநர்களுக்கு தொகையாக அவர்களுக்கு வழங்குவதற்கு பதிலாக போனஸ் பங்குகள் வெளியிடுவது போன்ற வழிகளில் ஒரு நிறுவனமானது செயல்படுத்தும்.


ஒரு நிறுவனமானது டிவிடெண்ட் ஆக வழங்குவதற்கு பதிலாக போனஸ் பங்குகளை வெளியீடு செய்யும்போது டிவிடெண்ட்டுக்கான வரி செலுத்துவது தவிர்க்கப்படுகின்றது.


நிறுவனமானது நல்ல இலாபம் ஈட்டிக் கொண்டு இருக்கும்போது தன்னுடைய இலாபத்தை தன்னுடைய நிறுவனத்திற்குள் நிலையான சொத்துகளுக்காகவும், நடைமுறை மூலதனத்திற்காகவும் மறுமுதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக இது அமைகின்றது.


சில நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இவ்வாறு போனஸ் பங்குகள் வெளியீடு செய்வதால் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் தங்களுடைய முதலீட்டின் மதிப்பானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது ஒரு நல்ல மதிப்பு தோன்ற வழிவகுக்கின்றது.


நிறுமச்சட்டம் 2013 இன் படி எந்தவொரு நிறுவனமும் தன்னிடம் உள்ள மூலதன ஈவுத் தொகை கணக்கு, மூலதன மீட்பு ஒதுக்கீடு, கட்டற்ற ஒதுக்கீடுகள் (Free Reserves) ஆகியவற்றைக் கொண்டு இவ்வாறான போனஸ் பங்குகளை தன்னுடைய பங்குநர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். ஆனால் அந்த நிறுவனம் டிவிடெண்டுக்கு பதிலாக போனஸ் பங்கினை வெளியீடு செய்யக் கூடாது என வரையறை செய்துள்ளது.


மேலும் நிறுவனமானது இவ்வாறு போனஸ் பங்கினை வெளியீடு செய்வதாக இயக்குநர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டால் அந்த முடிவில் இருந்து பின்வாங்க முடியாது. ஆயினும், அந்த நிறுவனம், தான் பெற்ற கடனிற்கு வட்டி அல்லது வட்டியும் அசலும் அல்லது அத்தியாவசியமாக செலுத்த வேண்டிய செலவுகள் ஆகியவை நிலுவையில் இருக்கும்போது இவ்வாறான போனஸ் பங்குகளை கண்டிப்பாக வெளியீடு செய்ய முடியாது. தற்போது நடப்பு ஆண்டில் Biocon, BPCL, HPCL, ICICI Bank, L&T, Wipro ஆகியவை, இவ்வாறான போனஸ் பங்குகளை வெளியீடு செய்துள்ள இந்திய நிறுவனங்கள் ஆகும்.

-முனைவர் ச. குப்பன்

பேப்பர் பிளேட் தொழில் தொடங்க உதவுகிறோம்

0

தன்னார்வமும், உழைப்பும் இருந்தால் எந்த வயதிலும் தொழில் தொடங்கி நடத்தலாம் என்கிறார், திரு. வெங்கட்ராமன். தனது அறுபத்து இரண்டாம் வயதிலும் ஒரு இளைஞரைப் போன்ற சுறுசுறுப்புடன் தனது எல். பி. & எல். பி. பேப்பர் பிளேட்ஸ் அண்ட் லேமினேட்டர் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். சென்னைக்கு அருகே உள்ள புழுதிவாக்கத்தில் இவரது தொழிலகம் அமைந்து உள்ளது. தனது தொழில் முயற்சி பற்றி அவர் கூறியதாவது,


“கடந்த இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டுடன் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். ஒரு முறை பயன்படுத்தும் தன்மை உள்ள பேப்பர் தட்டுகள், தொன்னை, கன்டெய்னர் லிட் போன்றவற்றை உற்பத்தி செய்கிறோம். இவை தவிர வண்ண மெழுகுவர்த்திகளையும் பல அளவுகளில் தயாரிக்கிறோம். இங்கு உற்பத்தியாகும் பொருள்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம். படிப்படியாக வளர்ந்து வருகிறோம்.


தொடங்கிய புதிதில் அனைத்துப் பணிகளையும் நானே மேற்கொண்டேன். பின்னர் இரண்டு பணியாளர்களைச் சேர்த்துக் கொண்டேன். இப்போது நான்கு பேர்கள் பணி புரிகின்றனர். நான் இந்த தொழிலில் இறங்கும் யாரையும் போட்டியாளர்களாகக் கருதுவதும் இல்லை; எதையும் கமுக்கமாக வைத்து இருப்பதும் இல்லை. எனக்குத் தெரிந்த தொழில் செய்முறைகளை, இத்தொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு கற்றுத் தருவதிலும், அவர்களுக்கு எந்திரங்கள், கருவிகள் வாங்குவதில் உதவவும் காத்திருக்கிறேன்.


குறைந்த முதலீட்டில் இந்த தொழிலைத் தொடங்கி நடத்தலாம். குறைந்தது இருநூறு சதுர அடி இடத்திலேயே இதைத் தொடங்க முடியும். பெரிய முதலீட்டுடனும், பெரிய இடத்திலும் கூட இத் தொழிலைத் தொடங்கி நடத்தலாம். புதிய எந்திரங்கள் அல்லது பழைய எந்திரங்களை நாங்களே கூட வாங்கித் தருகிறோம். மூலப் பொருட்களையும் எங்களிடம் வாங்கிக் கொள்ள முடியும். பேப்பர் தட்டுகளை பல அளவுகளில், வடிவங்களில் தயாரிக்க முடியும். எங்கள் வாயிலாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான பயிற்சிகளை எங்களால் வழங்க முடியும்.” என்றார் திரு. எஸ். வெங்கட்ராமன். (9840033536, 9444061486)

-செ.வ. இராமாநுசன்

எல்இடி விளக்குகள் செய்ய பயிற்சி தரும் சங்கம்!

0

பணியாளர்களாக எந்த நிறுவனத்திலும் சேராத, மாதச் சம்பளம் என்று வாங்காமல், செய்யும் பணிகளுக்கு உரிய ஊதியம் அல்லது நாட்கூலி வாங்கும் பணியாளர்கள் உண்டு. கட்டுமானத் தொழிலாளர்கள், வெல்டர்கள், பெயின்டர்கள் போன்ற இத்தகைய பலவகையினர் பெயர், அமைப்பு சாரா பணியாளர்கள்.


உலகிலேயே அதிக மின் பணியாளர்களைக் கொண்டு உள்ள இனம் நம் தமிழ் இனம்தான். குறிப்பாக உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பதில் தலைசிறந்தவர்கள் தமிழர்கள்தான். பல்லாண்டு கால சிந்தனையின் விளைவாக கடந்த 2011-ஆம் ஆண்டில் சென்னை திரு.வி.க. பூங்காவில் இருந்து தொடங்கப்பட்டதுதான், ‘தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற நலச்சங்கம்’.


மின் பணியாளர்களுக்கு எப்போதும் ஒரு சவால் உண்டு. அது, புதிய தொழில்நுட்பம், புதிய கருவிகள் எண்ணற்றவை விற்பனைக்கு நாளும் வந்து கொண்டே இருப்பதுதான். இவற்றைக் கையாளும் திறன், தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் அடிப்படை பொருளாதார உறுதி இவற்றை எல்லாம் யாரை அணுகிப் பெறுவது என்பது புரியாத ஒன்று. இந்த ஐயங்களைத் தீர்த்து வைக்கிறது, இந்த சங்கம். இச்சங்கம் பற்றி இதன் பொது செயளாலர் திரு. எம். ஜெ. நாகலிங்கம் கூறுகின்றார்,


“மின் பணியாளர், மின் உரிமம்(லைசன்ஸ்) பெற ஆலோசனையும், தொழில்நுட்பப் பயிற்சியும் எங்கள் சங்கத்தால் தரப்படுகிறது. அவ்வப்போது தெரியவரும் புதிய தொழில்நுட்பங்களையும் கையாளும் திறனையும், கருத்துக்களையும் வழங்கி வருகின்றோம். சான்றாக, நேர்விசை மின்விசிறிகள் அறிமுகமாகி உள்ளன. அவற்றை அறிமுகம் செய்கின்றோம்.


மேலும், “எல்இடி விளக்குகளை புதிய தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்ய பயிற்சி அளிக்கின்றோம். ரூ.20,000 என்ற குறைந்த மூதலீட்டில் குறுந்தொழில் என்ற அளவில் விளக்குகளை உற்பத்தி செய்து முன்னேறலாம். இதற்கான மூலப்பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து பெற்றுத் தருகின்றோம்.


4,7,9,11 வாட்ஸ் அளவில் குண்டு பல்புகளை உற்பத்தி செய்யலாம். இதுபோல் குழல் விளக்குகளையும் விரைவில் உற்பத்தி செய்ய கற்பிக்க இருக்கிறோம். மேலும், சோலார் தகடுகளை அமைக்கும் பயிற்சிகளையும் தருகின்றோம். அறிமுகத் தொழில்நுட்பப் பயிற்சியும், அடிப்படைப் பயிற்சியும் கூட தரப்படுகின்றது”, என்றார் திரு. நாகலிங்கம் (9841382200, 9340006000).

-செ.வ. இராமாநுசன்

கடலூர், நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி: பாதி கட்டுமானத்தின் போதே திவாலா?

0

கடலூரில் அமைக்கப்பட்டு வரும், ஆண்டொன்றிற்கு 6 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட கச்சா எண்ணெயை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ரசாயனப் பொருள் தொழிற்சாலை நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி தற்போது திவாலாகி விட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நாகார்ஜுனா உரத்தொழிற்சாலை என்ற தனியார் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு தொழிற் வளர்ச்சி நிறுவனமும் (டிட்கோ) இணைந்து தொடங்கப்பட்ட நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலையின் கட்டுமானப்பணி 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் ரூபாய் 3800 கோடி முதலீட்டில், 2012ம் ஆண்டு உற்பத்தி தொடங்கப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டு, இது வரை 58 சதவீதம் கட்டுமானப்பணி அளவுக்கே முடிக்கப்பட்டு உள்ளது.


நாகார்ஜுனா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையானது நாப்தா, எல். பி. ஜி. போன்ற பல அடிப்படை வேதிப் பொருட்களை தயாரிப்பதற்காக அமைக்கப்படுகிறது. நாப்தா, எல். பி. ஜி. ஆகியவற்றை மூலப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிக தேவையுள்ள பல வேதித் தொழிற்சாலைகளை துவங்கலாம். இதனால் தமிழகத்தை மேலும் தொழிற்துறையில் முன்னேறிய மாநிலமாக மாற்றுவதுடன் பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.


கடந்த உலக முதலீட்டார் மாநாடு சென்னையில் நடந்த போது, அப்போதைய முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, நாகார்ஜுனா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை, மேலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் அடிப்படை திட்டமாக (anchor project) பெருமையுடன் அறிவித்தார். இந்த ஆலையை மேலும் ஊக்குவிப்பதற்காக சில சலுகைகளையும் அளித்தார்.


கட்டுமானப் பணியை முடிப்பதில் பல ஆண்டுகள் காலதாமதம் ஆனதால், முதலீட்டு தொகையின் தேவை ரூபாய் 15,000 கோடி அளவிற்கு கூடியது. பல முயற்சிகளுக்கு பின்னும் தேவையான முதலீடு ஏற்பாடு செய்ய இயலாததால், ஆலையின் கட்டுமானப்பணி மேலும் தொடர முடியாமல் முடங்கியது. வேறு எந்த நிறுவனமாவது இந்த திட்டத்தை ஏற்று கட்டுமானப் பணியை முடித்து உற்பத்தியை தொடங்கி ஆலையை இயக்க முடியுமா என்று ஆலோசிக்கப்பட்டது.


இத்தகைய முயற்சி கைகூடாததால், தற்போது நடைமுறையில் உள்ள திவாலா சட்டப்படி (Insolvency and Bankruptcy Code) சிக்கல்களுக்கு தீர்வுகாண ஒரு தனி அதிகாரி (Resolution Professional) நியமிக்கப்பட்டார்.


நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரியை ஏற்று நடத்த வருமாறு நிறுவனங்களுக்கு விளம்பரம் மூலம் தனி அதிகாரி அழைப்பு விடுத்த போது, நான்கு நிறுவனங்கள் முன் வந்தன. இவற்றில், மத்திய அரசை சார்ந்த பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் அடங்கும்.


நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலையை ஒப்படைக்க, ரூபாய் 1450 கோடி தொகை (Bid Amount) தரப்பட வேண்டும் என்று இந்த ஆலையின் எதிர்காலத்தை தீர்மானிக்க நியமிக்கப்பட்ட தனி அதிகாரி விதிமுறை வகுத்தார்.
ஆனால், இந்த ஆலைக்கு தற்போது ரூபாய் 8000 கோடி அளவு கடன் உள்ளதாலும், கட்டுமானப் பணியை முடிக்க மேலும் பல கோடி ரூபாய் தேவைப்படுவதாலும், இந்த ஆலையின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொண்டும் ஈவுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்ட ரூபாய் 1450 கோடி தர எந்த நிறுவனமும் தயாராக இல்லை.


இதனைக் காட்டிலும் குறைவான தொகை செலுத்த நான்கு நிறுவனங்கள் முன் வந்தன. இந்த நிலையில், தனி அதிகாரி ஆலை திவாலாகி விட்டதாக அறிவித்து விட்டார். இந்த அறிவிப்பினால் யாருக்கும் லாபமில்லை. தமிழ்நாடு மிகப்பெரிய தொழில் திட்டத்தை இழக்க நேரிட்டு உள்ளது.


பல கோடி ரூபாய் முதலீடு செய்ய வழி வகுத்து, தமிழ்நாட்டில் மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய வாய்ப்பை தமிழ்நாடு கைவிடக் கூடாது. திவாலாகி விட்டதாக அறிவித்த தனி அதிகாரி ஆலையை மீண்டும் தொடங்க, ஆக்கப்பூர்வமான மாற்று வழிகளை குறித்து ஆலோசிக்கவில்லை என்பது வருத்தம் ஏற்படுத்தும் நிலை.
திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ள ஆலையில் உள்ள எந்திரங்கள், கருவிகள் மற்ற தளவாடச் சாமான்கள் ஏலத்தில் விற்கப்படும். ஏலத்தில் அடிமட்டமான விலைக்குதான் போகும். இந்த ஆலையில் முதலீடு செய்யப்பட்ட தொகையில் மிகச் சிறிய தொகையே கிடைக்கக் கூடும்.


நிர்ணயிக்கபட்ட தொகையைத்தான் செலுத்த வேண்டும் என்று கூறாமல் தொகை செலுத்த முன் வந்தவர்களில், அதிகமான தொகையை செலுத்தும் நிறுவனத்திற்கு ஆலையை ஒப்படைத்திருக்க வேண்டும். அல்லது இந்த ஆலையை சில பிரிவுகளாக இயங்கக் கூடியதாக மாற்றி அவற்றை நடத்துவதற்கு விண்ணப்பங்களை கோரி இருக்கலாம். சில பிரிவுகளாக மாற்றும்போது முதலீடு தொகை தனிப்பட்ட பிரிவுகளுக்கு குறைவாக இருக்கும் என்பதால் பல நிறுவனங்கள் முன் வந்திருக்கக் கூடும்.


இந்த நிலையில், தமிழக அரசு, நல்ல முறையில் ஆலையின் கட்டுமானப் பணிகளை முடித்து உற்பத்தியை தொடங்க ஆக்கபூர்வமான அணுகு முறையை கடைப்பிடிக்காமல் இருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. தமிழக அரசின் தமிழ்நாடு தொழிற் வளர்ச்சி நிறுவனம் இந்த ஆலையின் முதலீட்டாளராக பங்கேற்று உள்ளது என்பதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.


தமிழக அரசுக்கும், நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லாதது போல் தமிழக அரசு வாளாவிருப்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ?


கடலூரில் அமைக்கப்பட்டு வந்த நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலை 2000 ஏக்கர் பரப்பளவில் எல்லா விதமான சுற்றுப்புறச்சூழல் அனுமதிகளையும் பெற்று உள்ளது.


இந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் நாகார்ஜுனா ஆயில் ரிஃபைனரி ஆலை திவாலாகி மூடப்படும் நிலையை குறித்து தங்களது கவலையை தெரிவிக்காதது ஏன் என்று புரியவில்லை, அல்லது இத்தகைய தொழில் திட்டத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணரவில்லையா? திவாலாகும் நாகார்ஜுனா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குறித்து தமிழ் நாட்டில் யாருக்கும் அக்கறை இல்லையா?


இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு இருக்கும் பணம் மக்களின் வரிப்பணம் என்பதையும், இந்த திட்டத்தை திவாலாக விடுவதால், மக்கள் கடும் உழைப்பினால் கிடைக்கும் வரிப்பணமும் வீணாகிறது என்பதையும், அரசும், அதிகாரிகளும் உணர்ந்து இந்த ஆலை செயல்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

என். எஸ். வெங்கட்ராமன், வேதியியல் தொழில்கள் ஆலோசகர்

மகிழ்ச்சி அதிகரிக்கும், இவற்றைப் பின்பற்றினால்!

0

பிறப்பினால் வந்த பாதிப்புகளை எண்ணிக் கவலைப்படாமல், ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காகத் தொடர்ந்து முயலுங்கள். மூட நம்பிக்கைகளை விலக்கி அறிவார்ந்த வாழ்வை நடத்துங்கள்.


சாதித்து உயர்ந்த எளிய மனிதர்கள் பற்றிய நூல்களையும், தன் முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் நூல்களையும் அதிகம் படியுங்கள்.


தாய்மொழியில் சிறப்பான அறிவும், ஆங்கிலத்தில் கருத்துப் பரிமாற்றத் திறத்தையும் கட்டாயம் வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ற சூழலில் பழகுங்கள்.


செயற்கை உணவுகளை அறவே விலக்கி, இயற்கையான பாரம்பரிய உணவுகளை உண்ணுங்கள். பரோட்டா, பிராய்லர் கோழியின் சுவைக்கு பதில் காய்கறி, மலிவான பழங்களை நிறைய உண்ணுங்கள். கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை அதிகம் சாப்பிடுங்கள்.


மது, புகை, போதை தீய வழக்கங்களை அறவே விலக்குங்கள், விளையாட்டிற்கோ, உல்லாசத்திற்கோ கூட அவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.


பல்துறைச் செய்திகளையும், உலக அளவிலான செய்திகளையும் தினம் தினம் தேடித் தெரிந்து கொள்ளுங்கள்.


பதட்டப்படாமல், வெறுப்பு கொள்ளாமல், சலிப்பு அடையாமல், எதையும் உறுதியோடு மனம் தளராமல் எதிர்கொள்ளுங்கள். அன்பாக, இனிமையாக அடுத்தவர் மீது அக்கறையோடு பழகுங்கள்! பொது நலனுக்கும் வாழ்வைச் செலவிடுங்கள்.


ஒரு நாளைக்கு 7 மணி நேரம் கட்டாயம் உறங் குங்கள். மீதியுள்ள நேரத்தை திட்ட மிட்டு பிரித்துக் கொண்டு தவறாது அவற்றைச் செய்யுங்கள். நண்பர்களோடு மகிழ 2 மணி நேரம் ஒதுக்குங்கள். தனிமையை தவிருங்கள். நல்ல நண்பர்களை, உங்கள் முன்னேற்றத்தை விரும்பும் நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள்.


குடும்ப உறுப்பினர்களிடம் மகிழ்வாக மனம் விட்டுப்பேசி பழக நேரம் ஒதுக்குங்கள். உங்களை விட சிறியவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள்; முதியவர்கள் கூறுவதற்கு மதிப்பளியுங்கள்; சரியானவற்றைப் பின்பற்றுங்கள்.


வாழ்வில் சுமைகளைக் குறைத்து சுகங்களை அதிகப்படுத்துங்கள். அன்போடு, விட்டுக் கொடுத்து வாழுங்கள், வீண் பிடிவாதம் வாழ்க்கையை நாசமாக்கிவிடும். அன்பும், பற்றும் யாருக்கு அதிகம் இருக்கிறதோ அவர்கள்தான் விட்டுக் கொடுப்பர்.


நடிகர்களுக்கு ரசிகனாக, கிரிக்கெட் அடிமையாக, அரசியல்வாதிகளின் எடுபிடியாக ஒருபோதும் ஆகாதீர்கள்.
மனக் கட்டுப்பாடும், திட்டமிட்ட செயலும், முயற்சியும் இருந்தால் இவை சாத்தியமே!

-மஞ்சை வசந்தன்

ஒட்டுப்பசைகள், பிரஷ்கள் தயாரிக்கிறோம்!

0

திருமதி. வசந்தி, மகாலட்சுமி இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில், அடேசிவ்ஸ் (ஓட்டுப்பசை) தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுபற்றி அவரிடம் பேட்டி கண்ட போது,


“எங்கள் நிறுவனம் துவங்கி 24 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சென்னை, பொழிச்சலூரில்தான் தொடங்கியது. எங்கள் நிறுவனத்தை தொடங்கியவர் எனது கணவர் திரு. ஆறுமுகம் ஆவார். இவர் அடேசிவ்ஸ் மற்றும் பேக்கிங் மெஷினரிஸ் ஆகியவற்றைத் தயாரித்து வந்தார். அவர் டிப்ளமா மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்துவிட்டு நான்கு ஆண்டுகள் வரை ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்காகப் பணிபுரிந்தார். பின்னர், அவராகவே சிறு சிறு இயந்திரங்களை உருவாக்கத் தொடங்கினார். இந்த இயந்திரங்கள் ஃபார்மாசிட்டிக்கல் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. அவருடன் நானும் துணையாக, குவாலிட்டி செக்கிங் செய்து வந்தேன். பின்னர், நாங்களே சில அடேசிவ் பொருட்களையும் தயாரிக்கத் தொடங்கினோம்.


எங்கள் நிறுவனம் தொடங்கிய காலத்தில் எங்கள் தயாரிப்புகளை செய்யத் தேவையான எந்திரங்கள் அனைத்தையும், எனது கணவரே செய்து கொடுத்தார். இன்று வரை நாங்கள் அதே எந்திரங்களை பயன்படுத்தி வருகிறோம்.


எங்கள் நிறுவனத்தில், டிஸ்லரிஸ், ஃபில்லிங் மெஷின், பிரஷ், அடேசிவ் ஆகியவற்றைத் தயாரித்துக் கொண்டு இருந்தோம். அப்போது எங்களிடம் 40 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருந்தன. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் என் கணவர் எதிர்பாராமல் மரணம் அடைந்து விட்டார். அதனால், நிறுவனத்தை மேற்கொண்டு நடத்த வேண்டிய நெருக்கடியான நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். முதலில் மிகவும் சிரமத்துடன்தான் நிறுவனத்தை நடத்தி வந்தேன். சரியான பணி மேலாண்மை இல்லாத காரணத்தால், சில வாடிக்கையாளர்கள் எங்களை விட்டுச் சென்று விட்டனர். ஏனெனில் மெஷினரிஸ் தயாரிப்பு எனது கணவருக்கு மட்டும் தான் தெரியும்.


ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு எங்கள் வணிகம் தொடர்பான செய்திகளை ஒவ்வொன்றாக தெரிய வந்து விட்டது.
தற்போது நாங்கள், எங்கள் தயாரிப்புகளில் மெஷினரிஸ் தவிர அனைத்தையும் தயாரிக்கிறோம். இன்னும் சில பொருட்களை ஆர்டரின் பேரில் மட்டும் செய்து தருகிறோம். கைப்பைகள், சில பிளாஸ்டிக் பொருட்கள், இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் சிறு உலோக, பிளாஸ்டிக் சாமான்கள் ஆகியவற்றை அவர்கள் கூறும் அளவிலே செய்து கொடுக்கிறோம். இது தவிர எங்களிடம் தொழிற்சாலைகளில் பாட்டில்கள் கழுவப் பயன்படும் பிரஷ்கள் பல வகைகளில் கிடைக்கும்.


அதாவது மரத்தாலான கைப்பிடி மற்றும் இரும்பாலானா பிரசில்ஸ் உடைய பிரஷ்கள், தொழிற்சாலைகளில் பயன் படும் மூன்று விதமான ஒட்டுப் பசைகள் ஆகியவை கிடைக்கும்.


எனது கணவர் இறப்பிற்குப் பிறகு, இன்னும் மார்க்கெட்டிங் செய்வதில் பெரிய அளவில் ஈடுபடவில்லை. இனி வரும் காலங்களில் மார்கெட்டிங் பணிக்கு ஆட்கள் போட இருக்கிறோம். தற்போது வாடிக்கையாளர்கள் அதிகரித்து வரும் காரணத்தினால், இன்னும் சில பெரிய எந்திரங்களை வாங்க இருக்கிறோம். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. எங்கள் நிறுவனத்தை இன்னும் மேம்படுத்துவதற்காக எனது மகனை மெக்கட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் படிக்க வைத்து இருக்கிறேன். அவனுக்கு அதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. சிறப்பாக நடத்துவான் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார் திருமதி. வசந்தி (9381042346).

-உஷா. எஸ்

மாணவர்களுக்கு ஏற்ற பகுதிநேர வேலைகள்!

0

இன்றைய பெற்றோர் கல்விக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதிகமாக செலவும் செய்கிறார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற ஒரு அழுத்தத்தை மாணவர்கள் மீது திணிக்கிறார்கள். இதனால் மாணவர்கள் புரிந்து படிக்காமல், மனப்பாடம் செய்கிறார்கள். மாணவர்கள் புரிந்து படிக்கும் தன்மையை இழக்கிறார்கள். ஒரு சில மாணவர்களுக்கு கல்வியின் மதிப்பு மற்றும் அருமையும் தெரிவது இல்லை. சில முறைகளைப் பின்பற்றினால், மாணவர்களுக்கு கல்வியின் மதிப்பையும், அருமையையும் உணர்த்த முடியும். அவை பின்வருமாறு,


“பகுதி நேர வேலை பார்த்தால் மட்டுமே, மாணவர்களால் படிக்க முடியும்” என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பகுதி நேர வேலை ஆனது படிப்பிற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். படிக்கும் போதே, அதற்குத் தேவையான செலவுகளை அவனே பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், அவர்களுக்கு பணத்தின் அருமையும் கல்வியின் மதிப்பும் தெரியும். நாம் நமது நாட்டில் உள்ள கல்வி முறையை மாற்றி அமைத்தால், கல்வித்தரம் உயர்வதோடு நம் நாட்டின் மக்களிடையே பொருளாதாரமும் முன்னேறும்.


மாணவர்கள், அவர்களது கடின உழைப்பால் முன்னேறலாம். குறிப்பாக ஒரு மாணவி வீட்டில் இருக்கும்போதே, கைத் தொழில் ஒன்றைச் செய்வதன் மூலம் வருமானத்தை ஈட்டலாம். சான்றிற்கு ஒரு பெண் கைத்தொழிலாக தையல் பயிற்சி, அழகுக்கலை பயிற்சி, வாஷிங் பவுடர் தயாரித்தல், மெழுகுவர்த்தி போன்ற சிறு தொழில்களைச் செய்து வருமானத்தை ஈட்டலாம். பெண் தொழில் முனைவோராக ஆகலாம். இதற்கு செய்ய வேண்டியது கடினமாக உழைப்பது மட்டுமே.


ஒரு கல்லூரியில் படிக்கும் போது மாணவர்கள் எவ்வாறு வருமானத்தை ஈட்டலாம்? படித்துக் கொண்டு இருக்கும்போது டியூசன் எடுப்பது, நமக்கு நல்ல அறிவைக் கொடுக்கும். நல்ல ஒரு சிந்தனையையும் தெளிவையும், புரிந்து கொள்ளும் திறனையும் வெளிப்படுத்தும். முக்கியமாக அரசு போட்டித் தேர்வுகளுக்கு உதவியாக இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் வொர்க், டைப்பிங் வொர்க் செய்து கொடுக்கலாம். அதன் மூலமும் வருமானம் கிடைக்கும். இவ்வாறு மாணவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்போதே இந்த வேலையை செய்தால், பிற்காலத்தில் ஒரு தொழிலைச் செய்வதற்கு, இது ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும்.


பகுதி நேர வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி?
பகுதி நேர வேலையைத் தேர்ந்தெடுக்கும் போது, நாம் செய்யும் வேலை, நம் படிப்புக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். சான்றாக, பி.எஸ்சி., வேளாண்மையைப் பற்றிப் படிப்பவர்கள், பகுதி நேர வேலையாக மூலிகைச் செடி வளர்த்தல், மரக்கன்றுகள் விற்றல், மண்புழு உரம் தயாரித்தல், அழகுச் செடி வளர்த்தல் மற்றும் விற்றல் போன்றவற்றைச் செய்யலாம். எம்பிஏ, எம்சிஏ, பிபிஏ, பிசிஏ படிப்பவர்கள், பகுதி நேர வேலையாக ப்ராஜெக்ட் வொர்க், டைப்பிங் வொர்க், புரோகிராமிங் உருவாக்கித் தருதல், மற்றும் மார்க்கெட்டிங் போன்ற வேலைகளை செய்யலாம்.

-அ. விஜயராணி, எம்பிஏ,
ஜெயமங்கலம், தேனி மாவட்டம்.