Latest Posts

ரியல் எஸ்டேட் – போக்கியம், ஒத்தி இரண்டும் ஒன்றுதானா?

- Advertisement -

சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கினேன் என்று சொல்வதை நம் அன்றாட வாழ்வில் பலரிடம் கேட்டு இருப்போம். போக்கியத்திற்கு விட்டு பணம் வாங்கினேன் என்று காஞ்சிபுரம் திருவண்ணாமலை பகுதிகளில் சொல்வார்கள். அடமான பத்திரங்களில், ரூபாய் இரண்டு லட்சத்திற்கு போக்கிய பத்திரம் என்று பதிவும் செய்து இருப்பார்கள்.

திருநெல்வேலி, மதுரை பக்கங்களில் ஒத்திக்கு விட்டு இருக்கிறேன் என்பார்கள். பத்திரங்களில் ஒத்தி தொகை, ஒத்தி கெடு, ஒத்தி சொத்து, ஒத்தி பத்திரம் என்றே குறிப்பிடுவார்கள். பலர் ஒத்தி வேறு, போக்கியம் வேறு மற்றும் அடமானம் வேறு என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இரண்டும் ஒன்று தான்.

இந்த அடமானம் நான்கு வகையாக நம் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது. சாதாரண அடமானம், ஈட்டு அடமானம், சுவாதீன அடமானம் மற்றும் பத்திர வைப்பு அடமானம் என்பனவாகும்

சாதாரண அடமானம்

ஒரு தொகையை கடன் வாங்கும் போது தன் சொத்தை அடமானம் எழுதி கொடுத்து வாங்குவது ஆகும். அதில், மாதம் தோறும், அல்லது ஆண்டு தோறும் கொடுக்க வேண்டிய வட்டி மற்றும் அசல் திருப்பி கொடுக்க வேண்டிய கெடு தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும்..

அசலையும், வட்டியையும் கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்காத போது இந்த பத்திரத்தை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றம் மூலம் சொத்தை அடமானம் போட்டவர் எழுதி வாங்கலாம் அல்லது ஏலத்தில் விற்பனைக்கு கொண்டு வரலாம்.

Also read: கிரய பத்திரம் எழுதி வாங்கும் போது கவனம் தேவை

ஈட்டு அடமானம்:

இது கடன் கொடுப்பவருக்கு மிகவும் சாதகமான அடமானம் ஆகும். சாதாரணமாக பணம் திரும்ப வரவில்லை என்றால் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, நீதிமன்றம் போய் வழக்காடித்தான் சொத்தை எழுதி வாங்க முடியும்.

ஆனால் இந்த ஈட்டு அடமானத்தில் நேரடியாக அடமானம் போட்டவர் முன் அறிவிப்பு நோட்டீஸ் மட்டும் கொடுத்து விட்டு, பதிவு செய்யப்பட்ட ஏல கம்பெனி மூலம் ஏலத்திற்கு கொண்டு வந்து, சொத்தை சார்பதிவகத்தில் பதியலாம்.

நிறைய பேர் “ஈட்டு அடமானம்“ என்று எழுதி இருப்பார்கள். ஆனால் சொத்து மாற்று சட்டம் 69 பிரிவு எங்களை கட்டுப்படுத்தும் என்ற சட்டப்பிரிவை எழுதி இருக்க வேண்டும். இப்படி எழுதவில்லை என்றால் இது சாதாரண அடமானமாகவே கருதப்படும்.

சுவாதீன அடமானம்:

ஒரு சொத்தில் இருந்து வாடகையோ வருமானமோ வரும். அதைப் பெறும் உரிமையை அப்படியே கடன் கொடுப்பவருக்கு குறிப்பிட்ட காலத்துக்கு கொடுத்து கடன் வாங்குவது சுவாதீன அடமானம். இந்த அடமானத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க தேவை இல்லை. கெடு தேதியில் சொத்தை அடமானம் கொடுத்தவரிடம் திருப்பி கொடுக்க வேண்டும். இதனை தான் போக்கியம் அல்லது ஒத்தி என்று கூறுகிறார்கள்.

இதில் முதலில் அடமானம் போட்டு கெடு தேதி 3 ஆண்டுகள் போட்டு விட்டார்கள். 2 ஆண்டுகள் முடிந்து விட்டன. சொத்து உரிமையாளருக்கு இப்பொழுது இன்னும் பணம் தேவைப்படுகிறது. அதனால் ஏற்கனவே சுவாதீன அடமானம் போட்டு இருப்பவரிடம் சென்று மீண்டும் ஒரு தொகையை பெற்று கொண்டு, போக்கியத்திற்கு மேல் போக்கியம் போடலாம்.

அதாவது முதல் போக்கியம் முடியும் முன்பே அதனை உள்ளடக்கி அதற்கு அடுத்த கெடு தேதி நிர்ணயித்து இன்னொரு போக்கியம் போடலாம்.

பத்திர ஒப்படைப்பு அடமானம்:

பெரும்பாலும் தொழில் செய்பவர்கள் அவசரத்திற்கு கடன் வாங்க கையில் இருக்கும் சொத்து பத்திரங்களை ஈடாக வைத்து கடன் பெறுவார்கள். அந்த கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும் போது சொத்து பத்திரங்களை மீட்டுக் கொள்ளலாம்.

இதனை பதிவு செய்ய வேண்டும் என்ற தேவை இல்லை. தற்போது வங்கிகள் வீட்டுக் கடன் கொடுக்கும் போது பத்திரங்களை வங்கி வைத்துக் கொண்டு இந்த அடமானம் போடுகிறார்கள். இதனை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவும் செய்கிறார்கள். இந்த அடமானம் மாநகர் பகுதிகளில் மட்டுமே செல்லும் என்று சட்டம் சொல்கிறது.

Also read: ஏல சொத்துகளில் உள்ள, வெளியே தெரியாத செய்திகள்

கிராமங்களில் செல்லாது. எனவே சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் இந்த பத்திர ஒப்படைப்பு அடமானப் பத்திரம் போடப்படுகிறது. சொத்தை அடமானம் கொடுப்பவர் பெரும்பாலும் பொருளாதார வலிமை குறைந்த நிலையிலும், அடமானம் பெறுபவர் பொருளாதாரத்தில் வலிமையான நிலையிலும் இருப்பார்கள்.

அதனால் அடமானம் கொடுப்பவருக்கு நெருக்கடி கொடுக்கும் கட்டுப்பாடுகள், அழுத்தங்கள் கொடுக்கும் வகையில் பொருத்தமற்ற விதிமுறைகளை அடமான பத்திரத்தில் எழுதுவதோ, அல்லது அடமான பத்திரத்திற்கு வெளியில் தனியாக பதிவு செய்யாமல் ஒரு ஒப்புதல் பத்திரம் எழுதுவதோ, நீதிமன்றத்தில் செல்லாது.

சில இடங்களில் கடன் கொடுத்து, அடமானம் பத்திரம் போடுவதற்கு பதிலாக, கொடுத்த கடன் தொடர்பாக கிரய பத்திரம் முன் கூட்டியே போடுகிறார்கள். பிறகு கடனை திருப்பிக் கொடுத்தவுடன் மறு கிரயம் செய்து கொடுக்கிறார்கள். அல்லது பவர் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.

இது போன்று கிரய பத்திரம் போட்டு கடன் வாங்குவது சொத்தை இழப்பதற்கு வழி வகுக்கும். அரசும் இது போன்ற தவறான நடைமுறைகளுக்கு எதிரான சட்டங்கள் இயற்ற வேண்டும். கடனில் இருப்பவர்களின் சொத்துகளை குறைந்த விலைக்கு வாங்குவதற்கு இதனை ஒர் உத்தியாகவே ஒரு சிலர் பயன்படுத்து கிறார்கள்.

பவர் கொடுத்து கடன் வாங்கி விட்டு, நீங்கள் சென்று விட்டால் பவரை வைத்து வேறு ஒரு சார்பதிவகத்தில், வேறு ஒரு சொத்துடன் இணைத்து கிரய பத்திரம் போட்டு வைத்துக் கொள்வார் கள். மேலும் பவரை வைத்து சேல்ஸ் அக்ரிமென்டும் போட்டு விடுவார்கள்.

பெரும்பாலும், கடன் கொடுப்பவர்கள் தங்கள் பணப் பாதுகாப்புக்காக இப்படி செய்கிறார்கள் என்று சொன்னாலும், சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இரு சாராரும் எச்சரிக்கையுடனும், நாணயமாகவும் நடந்து கொண்டால் உறவு சுமுகமாக இருக்கும். இரு தரப்பாருக்கும் மனக்குறை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படாமலும் இருக்கும்.

– சா. மு. பரஞ்சோதிபாண்டியன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news