Latest Posts

பழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா?

- Advertisement -

இப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள் வரை நமக்கு புத்தி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த நாட்களில் நம்மை வழிநடத்திச் செல்ல ஒரு ரோல் மாடல் இல்லை. காந்தியோ, விவேகானந்தரோ, புத்தரோ, பெரியாரோ யாரும் இப்போது இல்லை. எனவே நாம்தான் நமது காலடியை கவனமாக எடுத்து வைக்க வேண்டும். இன்னொரு முக்கியமான சொல் உங்களது வாழ்க்கையை நீங்கள் தான் வழிநடத்திச் செல்ல முடியும். ஏனென்றால் உங்களது பலம், பலவீனம் பற்றி உங்களுக்குத்தான் தெரியும். உங்களது அடிகளை அளந்து வைப்பதை விட புத்திசாலித்தனமாக எடுத்து வைத்தால் வெற்றிகள் உங்களை வந்தடையும்.

மாறுதல் என்பதைப் பற்றி இப்போது அதிகம் பேசுகிறார்கள். எந்த பொருளும் மாறிக் கொண்டே இருந்தால்தான் அதில் உயிர் இருக்கும் என்கிறார்கள். ஆனால் நாம் மாறுகி றோமா என்றால் இல்லை. வழக்கமான மின்ரயில் பயணத்தில் முந்தைய நாள் பயணித்த சீட்டில் அமருவதைத்தான் விரும்புவோம். மனிதன் என்பவனே பழக்கத்திற்கு அடிமையான விலங்கு என்றுதான் சொல்வார்கள்.

எப்போதும் ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு காரியத்தை முடிப்பதற்கு கூட எப்போதும் ஒரே மாதிரி சிந்திக்காதீர்கள். வேறு மாதிரி சிந்தித்துப் பாருங்கள். அதை மாற்றி யோசிப்பது சிறந்தது என்பார்கள். அப்படிச் சிந்திக்கும்போது அந்த வேலையை குறைவான சக்தியில் குறைவான நேரத்தில் முடிப்பதற்கும் ஒரு யோசனை கிடைத்திருக்கும். அதனால் எப்போதும் ஒரே மாதிரி இருக்காதீர்கள். ஒரே மாதிரி சிந்திக்காதீர்கள். ஒரே மாதிரி உடையணியவும் செய்யாதீர்கள். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் துடிப்போடு எழுந்து செயல்படக் கூடியவராக நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். மூடும் கதவு தெரியும்; திறந்த கதவுகள் கண்ணுக்குத் தெரியாது.

எல்லோருக்கும் தெரிந்த ஒரு வாசகம் இது .ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு கதவு திறந்து கொள்கிறது. இதை நம்மில் எத்தனை பேர் நம்புகிறோம். ஒரு வினை ஏற்பட்டால் அதற்கேற்ப எதிர்வினை ஏற்பட வேண்டும் என்பதை இயற்பியலிலும், வேதியியலிலும் படித்திருக்கிறோம். ஆனால் உண்மை வாழ்க்கையில் ஒரு தோல்வியோ அல்லது ஒரு அசாதாரண நிகழ்வோ ஏற்பட்டிருக்கிறபோது நாம் அந்த தோல்வியைத்தான் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படி பார்க்காதீர்கள். அங்கே வேறு நல்ல வாய்ப்புகளும் இருக்கின்றன என்று எளிதாகச் சொல்லி விடலாம்.

read also: எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?

ஆனால் தனக்கு வந்தால் தானே தலை வலியும், திருகுவலியும் தெரியும். உண்மைதான். நான் ஒப்புக் கொள்கிறேன். அந்த மோசமான அனுபவம் ஏற்பட்டிருந்தால்தான் தெரியும். அது போன்ற மோசமான அனுபவங்கள் எனக்கு பலமுறை ஏற்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் என்னை துவண்டு போய் விடாமல் என்னை கை தூக்கி விட்டிருப்பது என்னிடம் இருக்கிற நகைச்சுவை உணர்வும், தன்னம்பிக்கையும்தான்.

சீட்டுக்கட்டில் ஒரு முறை தோற்றால் எல்லா சீட்டுகளையும் கலைத்துப் போட்டு விட்டு மறுமுறை ஆட உட்கார்ந்து கொள்வது மாதிரி நான் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு விட்டு மறுபடி முயற்சி செய்ய தொடங்கி விடுவேன். இந்த முறை நானே என்னை ஒரு புதிய ஆளாகப் புதுப்பித்து கொண்டு தான் முயற்சியை தொடருவேன். நான் ஒரு புதிய ஆள் என்பதால் எனக்கு ஏற்பட்டிருந்த முந்தைய தோல்வி என்னுடையதில்லை. நான் இப்போது புதிதாக முயற்சிக்கிறேன். புத்துணர்வோடு முயற்சிக்கிறேன். வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முயற்சிக்கிறேன்.

எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் நல்லதே நடக்கும் என்று சொல்ல முடியாது. பெரும் பாலான செய்திகள் நம் கையில் இல்லை. அதற்காக நடப்பதை எல்லாம் விதி என்று ஏற்றுக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. ஒரு அசாதாரணமான நிகழ்வு நடக்கிறதா? உடனே உடைந்து போகாமல் அப்படியே உட் கார்ந்து அந்த சூழ்நிலையை கவனித்துப் பாருங்கள்.

ஏன் அப்படியானது? யார் யாரெல்லாம் இதற்கு காரணம்? இந்த சூழலிலிருந்து மீண்டு வர முடியுமா? முடியாதா?அப்படி வெளியே வர முடியாதென்றால் குறைந்தது என்ன செய்யலாம், யார் யாரிடம் ஆலோசனை கேட்கலாம்? இப்போது என்ன மாற்று ஏற்பாடுகளைச் செய்து வரலாம். எத்தனை காலத்திற்கு இந்த கஷ்டம் இருக்கும். இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது மற்றவர்களாக இருந்தால் என்ன செய்தி ருப்பார்கள்? நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கு வேறு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா?அப்படி மாற்று ஏற்பாடு செய்து கொண்டபிறகு என்ன செய்யலாம். இழந்ததை மீட்க முடியுமென்றால் அதற்கு என்ன என்ன முன்னேற்பாடுகள் செய்து கொண்டு எத்தனை நாளைக்குள் செய்து முடிக்க முடியும்? என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்கலாம்.

read also: மேடு பள்ளங்களாக வரும் தடைகளைத் தாண்டுவது எப்படி?

நல்லதையே நினைக்கிறோம். நல்லதையே செய்கிறோம் என்று வைத்துக் கொண்டாலும் கூட எதிர்பாராத நிகழ்வுகளை நம்மால் தவிர்த்துவிட முடிவதில்லை. நாம் வாழ்வில் நாம் இரண்டு வழிகளில்தான் வாழ்ந்து வருகிறோம். ஒன்று. சிந்தனையால். இன்னொன்று செயலால். இதில் சிந்திப்பதுதான் முதலில். அதன் பிறகு தான் செயல் வருகிறது. ஒரு நல்லது கெட்டதை எதிர்கொள்வது கூட முதலில் சிந்தனையாகவும், பிறகு செயலாகவும், எதிர் வினையாகவும் வருகிறது.

அதனால் நமது சிந்தனையை கூர்தீட்டிக் கொள்வதோடு, எதையும் எதிர்பார்த்து சிந்தி க்கப் பழகிக் கொள்வோம். மேலாண்மையியலில் கூட இதை எதிர்பார்த்து செயல்படுவது என்கி றார்கள். எதிர்பார்த்து செயல்படுவது ஒரு புறம் இருந்தாலும் எதிர்பார்த்து சிந்திப்பதை வழக்க மாக்கிக் கொள்ளவும். எதிர்பாராமல் ஏதாவது நோய் தாக்குமென்று எதிர்பார்த்து மெடிக்கல் பாலிசி எடுத்து வைத்துக் கொள்ளலாம். எதிர் பாராக நிகழ்வு ஏதாவது ஏற்படும் என்பதை எதிர்பார்த்து ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து வைத்துக் கொள்ளலாம். எதிர்பாராமல் இழப்பு ஏற்படலாம் என்பதை எதிர்பார்த்து ஆறுமாதத் துக்கான செலவுக்கான பணத்தை மொத்தமாக பிக்சட் டெபாசிட்டில் போட்டு வைத்துக் கொண்டு வரலாம். இது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை முதலில் செய்து வைத்துவிட்டால் எதிர்பாராத கஷ்டம் வந்து விட்டாலும் கூட அதிலிருந்து மீண்டு வருவது எளிதாக இருக்கும்.

அதையும் மீறி ஏதாவது நிகழ்ந்து விடுகிறது. அப்போதுதான் கண்களையும், காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டு சுற்றுப்புறத்தை கவனிக்க வேண்டும். அதாவது எல்லா கதவுகளும் மூடிக் கொண்டாலும் அங்கே கண்ணுக்குத் தெரியாத அல்லது சரியாக கவனிக்கப் படாத சில கதவுகள் புதிதாக திறந்து கொள்ளத் தான் செய்கின்றன. அந்த கதவுகளின் வழியே நம் பயணத்தை வைத்துக் கொண்டோமானால் நமக்கு தோல்வி என்பதே இல்லை.

– பேராசிரியர்.டி.ஏ.விஜய்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news