Latest Posts

கொட்டிக் கிடக்கும் மார்க்கெட்டிங் பணி வாய்ப்புகள்

- Advertisement -

வேலை வாய்ப்பு நிறுவனங்கள் பல இருக்கின்றன. அவற்றை நடத்து பவர்கள் அவரவர் களுக்கு ஏற்ற வகையில், அவரவர் களுக்கு பிடித்த வகையில் நடத்தி வருகிறார்கள். சின்ன அளவிலான நிறுவனங்கள் முதல் பெரிய அளவிலான நிறுவனங்கள் வரை பல நிறுவனங்கள் உள்ளன. இவை வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்களுடன் தொடர்பு எற்படுத்திக் கொண்டு, அவர்களிடம் உள்ள பணி வாய்ப்புக்கு ஏற்ப நேர்காணல்களுக்கு ஆட்களை அனுப்பி வைப்பார்கள்.

சில வேலை வாய்ப்பு நிறுவனங்கள் வேலை தேடுபவர்களிடம், கட்டணம் வசூலிப்பது இல்லை; அல்லது சிறிய கட்டணம் ஒன்றைப் பெறுகின்றன. ஆட்களைத் தேர்வு செய்து கொள்ளும் நிறுவனங்களிடம் இருந்து, ஒரு மாத சம்பளம் அல்லது அரை மாத சம்பளம் அல்லது குறிப்பிட்ட ஏதாவது கட்டணம் பெற்றுக் கொள்கின்றன.

இத்தகைய வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார், திரு. சுகவனம். மென்பொருள் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் பணி புரிந்த அனுபவத்துடன் தனது சுகா கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை, மயிலாப்பூரில் உள்ள அவரது அலுவலத்தில் அவரைச் சந்தித்து பேட்டி கண்டபோது, ”இன்றைக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் இவற்றைக் கண்டறிந்து வேலை தேடுபவர்களுக்கு அந்த பணி வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி அவர்கள் பணியில் சேர உதவுகிறோம்.

சுகா கன்சல்டன்சி நிறுவனத்தை 2011 ஆம் ஆண்டு தொடங்கினேன். எனக்கு மரக் கன்றுகள் நடுவதில் ஆர்வம் அதிகம். மரக் கன்றுகள் நடுவதில் ஆர்வம் உள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். இதனால் பல ஊர்களுக்கும் மரக்கன்றுகள் நடுவதற்காக சென்று இருக்கிறேன்.

அப்போதெல்லாம் ஏராளமான இளைஞர்கள் வேலை கிடைக்காமல், சோர்வுற்று இருப்பதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம், அளவில்லாத வேலை வாய்ப்புகள் உள்ள செய்தியை கொண்டு செல்ல விரும்பினேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த வேலை வாய்ப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன்.

இளைஞர்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பணிகள் குறித்த செய்திகளை சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி பரப்பி வருகிறேன்.
நிறைய வேலை வாய்ப்புகள் இருப்பது உண்மைதான் என்றாலும், இந்த வேலை வாய்ப்புகளை நிரப்புவதற்குத் தேவையான திறன் மிகுந்தவர்களைத் தேட வேண்டி இருக்கிறது. எனவே வேலை தேடும் இளைஞர்களுக்கு, அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன் குறித்தும் பயிற்சி அளிக்கிறோம்.

இந்த நிறுவனம் தொடங்கிய காலத்தில் நானே அனைத்து வேலைகளையும் பார்த்து வந்தேன். இப்போது எங்களிடம் பல ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
ஒரு தொழிலாக இதனைக் கையில் எடுத்தபோது, பல சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. எனக்கு இருந்த அனுபவம் மற்றும் பொறுமை கொண்டு இவற்றை எல்லாம் சமாளித்தேன்.

எங்களிடம் நிறுவனங்கள் தரும் காலிப் பணியிடங்கள் மற்றும் அதற்கான தகுதி ஆகியவற்றை இணைய தளத்தில் உள்ள ஜாப் போர்ட்டல்களில் (job portal) அறிவிப்போம். பின்னர், அதனைப் பார்த்துவிட்டு அதற்கு ஏற்ற தகுதி உடையவர்கள் எங்களைத் தேடி வருவார்கள். அப்போது அவர்கள் பதிவுக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர், அவர்களை நேர்காணல் மூலமாக சோதித்த பின் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்போம். அங்கு மீண்டும் நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல் நேர்காணல்கள் இருக்கும். அதில் தேர்வானால்தான் வேலை கிடைக்கும்.

வேலை கிடைக்காமல் போனால், அவர்கள் எதனால் தேர்ச்சி பெறவில்லை என்பதை அறிந்து அதனை சரிசெய்து மீண்டும் அனுப்புவோம். இவ்வாறு பல நிறுவனங்களுக்கு அனுப்புவதற்காக சேவைக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். நாங்கள் நேர்காணலுக்கு அனுப்புவோம், ஆனால் தேர்வாகும் திறமை முழுக்க முழுக்க வேலை தேடுபவர்கள் கையில்தான் உள்ளது. அதற்கு நாங்கள் எந்த பரிந்துரையும் செய்வது இல்லை. பின்கதவு வாயில்களை அணுகுவதும் இல்லை.

எங்களால் வேலை பெறுபவர்கள், மேலும் பலரை எங்களிடம் அனுப்புவார்கள். இவ்வாறு எங்கள் தொழில் வளர்ந்து வருகிறது. இப்போது 500 கல்லூரிகள் 650 கார்ப்பரேட் மற்றும் இதர நிறுவனங்கள் தொடர்பில் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் அவர்களிடம் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் அதனை நிரப்ப இளைஞர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று அனைத்து தகவல்களையும் எங்களுக்கு அனுப்புவார்கள். நாங்கள் அவர்களின் தேவைகளுக்கு ஏற்றாற் போல் ஆட்களை அனுப்பி வைப்போம்.

பெரும்பாலான பட்டதாரிகள், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு தகுதி உடையவர்களாக இல்லை. ஆண்டுகள் மட்டும் கடந்தால் கல்லூரிப் படிப்பு முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மாறாக படிக்கின்ற துறையில் போதுமான அளவு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மாணவர்களிடையே இல்லை. அதனால்தான் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டன, வேலை கிடைக்கவில்லை என்று எல்லாம் தவறான கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் எங்களிடம் வரும் பட்டதாரிகளுக்கு போதிய திறமை இல்லை என்று அறிந்தால் முதலில் அவர்களை ஊக்கப்படுத்துவோம். பின்னர், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு முதலில் புரிய வைப்போம். அவர்களுக்கு அவர்கள் துறை தொடர்பாக எவ்வளவு அறிவுக் கூர்மை இருக்கிறது என்று புரிய வைப்போம். பின்னர், அவர்கள் திறமையை வளர்க்க எங்களால் இயன்ற வழிகாட்டுதலையும் செய்கிறோம். என்னுடன் தொடர்பில் உள்ள சில திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளிக்கும் நிறுவனங்களைப் பரிந்துரை செய்கிறேன்.

சான்றாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அந்த துறையில் புதிதாக வந்து இருக்கும் தொழில் நுட்பங்கள், மென்பொருட்கள் மற்றும் அது தொடர்பான சான்றிதழ் படிப்புகளைப் படிக்க ஆலோசனை தருகிறோம். அதனால், அனைவரும் அவர்கள் துறையில் சிறந்த அறிவைப் பெற்றால் வேலை வாய்ப்புகள் அவர்களுக்கு கொட்டிக் கிடக்கின்றன.

பொதுவாக ஐஐடி போன்ற உயர்நிலை கல்லூரிகளிலும் கூட கேம்பஸ் இன்டர்வியூக்களில் சொற்பமான மாணவர்களே தேர்வாகின்றனர். மற்றவர்கள் நல்ல மதிப்பெண்கள் இருந்தும் தேர்வாவது இல்லை. இதற்கும் காரணம் அடிஷனல் ஸ்கில்ஸ் எதுவும் இல்லாததுதான். இதனை நான் கூறக் காரணம், பல கல்லூரிகளுக்கு நாங்கள் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த செல்லும் போதும் இதே நிலைதான் மாணவர்களிடையே இருக்கும். இவ்வாறு வேலை வாய்ப்பு முகாம்களில் வேலை கிடைக்காத மாணவர்கள் எங்களைத் தேடி வருவார்கள் அவர்களுக்கும் ஆலோசனை வழங்கி வருகிறோம்.

தற்போது அதிக வேலை வாய்ப்புகள் உள்ள துறை மார்க்கெட்டிங் துறை ஆகும். இதில் பட்டதாரிகளுக்கு மட்டும் அல்லாமல் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கும் கூட வாய்ப்புகள் உள்ளன. மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்களுக்கு முக்கியமாக பேச்சுத் திறமை இருக்க வேண்டும். மார்க்கெட்டிங் துறையில் சில ஆண்டுகள் பணி புரிந்தாலே அவர்களுக்கு ஒரு நிறுவனத்தை நடத்தும் அளவுக்கு திறமை வந்துவிடும். எங்கள் நிறுவனத்திலும் தற்போது மார்க்கெட்டில் துறையில் 2000 காலிப் பணி இடங்கள் உள்ளன. பெண்களுக்கும் டெலி மார்க்கெட்டிங்கில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

அரியர் உள்ள மாணவர்கள் சிலர் தங்களுக்கு வேலை கிடைக்காது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன. சராசரி மற்றும் அரியர் உள்ள மாணவர்களை குறிப்பிட்டுக் கேட்கும் நிறுவனங்களும் உள்ளன. அவர்கள் அவ்வாறு கேட்கக் காரணம் சராசரி மாணவர்கள்தான் நிறுவனத்தில் நிலைப்புத் தன்மையுடன் இருப்பார்கள். அதனால், வேலை இல்லை என்று மற்றவர்களைக் குறை கூறாமல் அதற்கு ஏற்ற தகுதிகளை இளைஞர்கள் வளர்த்துக் கொண்டால் எளிதாக வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

எங்கள் நிறுவனத்தில் எம்ப்ளாய்மென்ட் சர்வீசைத் தவிர, சுகா கிரீன் சர்வீசஸ், சுகா இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ், சுகா சாஃப்ட்வேர் கன்சல்டிங் சர்வீசஸ் என இதர சேவைகளும் வழங்கி வருகிறோம். மேலும், சுகா ரெஃபரெல் சிஸ்டம் (suரீணீ க்ஷீமீயீமீக்ஷீக்ஷீணீறீ sஹ்stமீனீ) என்ற மற்றொரு அமைப்பைத் துவங்க இருக்கிறேன். இதன் மூலம் வணிகர்கள் தங்களுக்குள் தேவைப்படும் சேவைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்” என்றார், திரு. சுகவனம் (9176244989).

– எஸ். உஷா

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news