Latest Posts

வாஸ்து பார்த்தால் ஜோதிடருக்கு லாபம், பார்க்காவிட்டால் நமக்கு லாபம்!

- Advertisement -

இன்றைக்கு கட்டடங்களுக்கான அடிப்படை வரைபடங்களை வரைந்து தரும் கட்டட வரைகலைஞர்களுக்கும், கட்டுமான பொறியாளர்களுக்கும் பெரும் சிக்கலை எற்படுத்திக் கொண்டு இருப்பது, வாஸ்து நம்பிக்கை.

வாஸ்துவைப் பற்றிக் கவலை வேண்டாம்

உலக அளவில் வளர்ந்து வரும் ஆர்க்கிடெக்சர் துறையில் தாங்கள் படித்ததை செயல்படுத்தி சிறந்த முறையில் கட்டடங்களை உருவாக்க தடையாக விளங்கும் இந்த வாஸ்துவை நம்பும் வாடிக்கையாளர்களுக்காக பலர், அவர்களின் விருப்பத்திற்கு இணங்க அரைகுறை மனத்துடன் வரைபடங்களை வரைந்து கொடுக்கிறார்கள். பொறியாளர்கள் கட்டடங்களைக் கட்டிக் கொடுக்கிறார்கள். இதனால் இடம் வீணாவதுடன், பல வசதிகளையும் இழக்க நேரிடுகிறது. வாஸ்துவைப் பற்றிக் கவலைப்படாமல் இல்லங்களை, கட்டடங்களைக் கட்டுவதில் பல நன்மைகள் இருப்பதாக சொல்கிறார்கள் உடுமலைப்பேட்டைக்கு அருகில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த திருமதி. சுடரொளி, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த திரு. மலர் இனியன். திரு. மலர் இனியன் உடுமலையில் பத்திர எழுத்தாளராக இருக்கிறார். இந்த வாழ்விணையர், தாங்கள் வாஸ்து பார்க்காமல் வீடு கட்டிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

சிக்கனமாக வீடு கட்டலாம்

அவர்கள் கூறும்போது, ”எங்களுடைய வீட்டை வாஸ்து பார்க்காமல் எங்களுடைய இட வசதியைப் பொறுத்துக் கட்டி உள்ளோம். வீடு கட்டுவதற்கு முன் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் ஆலோசனை செய்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள். நல்ல ஒரு ஜோதிடரிடம் போய்ப் பார்த்து உங்களுடைய ஜாதகத்தைக் கொடுத்து விட்டீர்களானால் உங்கள் ஜாதகப்படி எந்தத் திசையில் பார்த்து வீடு கட்டணும் என்று சொல்வார்கள். நீங்கள் அதன்படி கட்டுங்கள் என்பதுதான் அவர்களின் ஆலோசனையாக இருந்தது. நான் சிக்கனமாக வீடு கட்டுவதற்கும், தரத்துடன் கட்டுவதற்கான ஆலோசனைகளை எதிர்பார்த்தேன். ஆனால் அத்தகைய ஆலோசனைகள் அதிகமாக கிடைக்கவில்லை. நல்ல வாய்ப்பாக எனக்கு அமைந்த கட்டடப் பொறியாளர், இத்தகைய அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகள் இல்லாதவர். அவரிடம் ஆலோசனை செய்தேன்.

இடம் வீணாகி இருக்கும்

முதலில் தெற்குப் பார்த்து வாசல் இருந்தால் நல்ல காற்றோட்டமாக இருக்கும் என்று சிந்தித்தோம். பிறகு தெற்குப் பார்த்து வாசல் இருந்தால் அதிகமான காற்று காரணமாக மண், தூசி படிந்து விடும். கிழக்குப் பார்த்து வாசல் இருந்தால் சூரிய ஒளி வீட்டுக்குள் படும் என்று கருதினோம். இறுதியாக பொறியாளர், தெற்கு பார்த்து வீடு கட்டலாம் என்று பரிந்துரைத்தார். அதற்கு ஏற்றுக் கொள்ளத் தக்க பல காரணங்களையும் கூறினார். கிழக்குப் பார்த்து கட்டி இருந்தால் ஒரு சென்ட் இடத்தை நடைபாதைக்காகவே விட வேண்டி இருந்திருக்கும். ஆனால், நாங்கள் தெற்குப் பார்த்து கட்டியதால் வீட்டுக்கு வெளியே வந்தால் உடனே, நல்ல அகலமான சாலை உள்ளது. கிழக்குப் பார்த்து கட்டியிருந்தால் இடம் வீணாகி இருக்கும்.

அறிவியலுக்குப் புறம்பான ஒன்று

வாஸ்து என்பது முழுக்க முழுக்க மூடநம்பிக்கைதான். வாஸ்து சாஸ்திரத்தில் டாய்லட் பற்றியோ, நூலகத்தைப் பற்றியோ குறிப்பிடவே இல்லை. 100 சதம் வாஸ்து பார்த்துக் கட்டப்படும் வீடு என்றால், அதில் நூலகமோ, கழிப்பறையோ இல்லாமல்தான் கட்டணும். நீங்கள் நூறு வாஸ்து ஆலோசகர்களைப் பார்த்தால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாகத்தான் சொல்வார்கள். ஒருத்தர் ஜலமூலையில் சமையலறை இருக்க வேண்டும் என்பார். இன்னொருத்தர் உங்க ஜாதகப்படி இங்கதான் இருக்க வேண்டும் என்று வேறு ஒரு இடத்தைக் காட்டுவார். இப்படி மாற்றி, மாற்றிச் சொல்லிக் குழப்பி விடுவார்கள்.

ஜலமூலையில் கழிப்பறை!

இப்போது என்னோட வீட்டுக்கு வடகிழக்கு மூலைன்னா அது ஜலமூலை. அதே மூலை பக்கத்து வீட்டுக்கு வடமேற்கு மூலை. அது அவுங்களுக்கு வாயுமூலை. எனக்கு குபேர மூலை. ஜலமூலையில்தான் போர் போடணும் அப்படீன்னு சொல்றாங்க. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் வந்து அங்கே கழிப்பறை போடுவார். காம்பவுண்ட்டிற்கு இந்த பக்கம் எனக்கு ஜலமூலை எனக்கு தண்ணீர் இருக்கும். காம்பவுண்டிற்கு அந்தப் பக்கம் அவுங்க கழிவுநீர் இருக்கும். சமையலறையை அக்னி என்றும் ஒரு சிலர் அக்னிமூலை அதாவது தென்கிழக்கு மூலையிலும் சமையலறையை வைப்பார்கள்.

வாஸ்து இப்படித்தான் குழப்புகிறது

ஒரு சிலர் அக்னிமூலை தென்கிழக்கு மூலையிலும் கழிப்பறையைக் கட்டுவார்கள். ஒரு வீட்டுக்கு தென்மேற்கு மூலை கன்னி மூலை என்றும் சொல்வார்கள். அங்கே பூஜை அறை வைத்து இருப்பார்கள். பக்கத்து வீட்டில் பார்த்தால் காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம் தென்கிழக்கு மூலை. அக்னி மூலையில் சமையலறையும் வைப்பார்கள். கழிப்பறையையும் வைப்பார்கள். இது எப்படி என்றால் சுவற்றிற்கு இந்த பக்கம் கழிப்பறை. சுவற்றிற்கு அந்த பக்கம் பூஜை அறை. வாஸ்து இப்படித்தான் குழப்புகிறது. வீடு கட்ட ஆரம்பிப்பது செவ்வாய், ஞாயிறுகளில் என்றால் அக்னிபயம் என்றும், திங்கள் வரவு என்றும், புதன், வியாழன், வெள்ளி சுபம் என்றும், சனி திருட்டு பயம் என்றும் சொல்கிறார்கள். நாங்கள் வீடு கட்டத் துவங்கியது செவ்வாய்க் கிழமை. மார்ச் 8 ஆம் தேதி. மகளிர் தினம். ஒரு முக்கியமான நாளில் தொடங்க வேண்டும் என்பதற்காக மகளிர் தினத்தை தேர்ந்து எடுத்தோம். வாஸ்துவை வைத்து நிறைய அச்சம் ஊட்டப்படுகிறது. வீடு கட்டுவதற்கு முன்பு அஸ்திவாரம் தோண்டி பீம் வைத்து, கட்டடம் உறுதியாக இருக்கவேண்டும் என்று பெல்ட் கான்கிரீட் எல்லாம் போட்டு பார்த்துப் பார்த்து கட்டுகிறார்கள்.

பயந்து விடுகிறார்கள்

திடீரென யாராவது, வாஸ்து படி இந்த இடத்தில் கதவு இருக்கக் கூடாது, இந்த இடத்தில் ஜன்னல் இருக்கக் கூடாது என்று கூறினால் அறிவியல் சிந்தனை இல்லாதவர்கள் சட்டென்று பயந்து விடுகிறார்கள். அவற்றை மாற்ற முற்படுகிறார்கள். டிரில்லிங் மிஷின் வைத்து உடைக்கும் போது அதனுடைய அதிர்வு கட்டடத்தை பாதிக்கும். இப்படி வாஸ்து என்று கூறி வீடுகளை இடித்து மாற்றவதால் தேவையற்ற செலவு ஏற்படுவதோடு, கட்டடத்தின் உறுதியும் கெட்டு விடும். புதிதாக வீடு கட்டும்போது கொத்தனார் தவறுதலாக ஒரு செங்கல்லை உடைத்து விட்டால் கோபப் படுகிறார்கள். அதே போல கொஞ்சம் சிமென்ட கலவை வீணானாலும் கோபம் வருகிறது. ஆனால் வாஸ்து என்று சொல்லி விட்டடால் கட்டடத்தையே இடிக்கவும் தயங்குவது இல்லை. வாஸ்துப்படி வீ டு கட்டவேண்டும் இல்லை என்றால் நோய் வந்து விடும், கஷ்டம் வரும் என்று பயத்தை ஏற்படுத்துகிறார்கள். வீடு கட்டுபவர்களைக் குழப்பி, பயத்தை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் வேலையைச் செய்கிறார்கள். கட்டடக் கலையில் உயர்ந்து விளங்கும் வளர்ந்த நாடுகள் எதுவும் வாஸ்துவை சீண்டுவதே இல்லை. எனவே நாமும் அறிவியலுக்கு மாறான வாஸ்துவை உறுதியுடன் தள்ளி வைக்க வேண்டும். வாஸ்து பார்த்தால் வாஸ்து ஜோதிடருக்கு லாபம். வாஸ்து பார்க்காவிட்டால் நமக்கு லாபம். வாஸ்துக்கும், வாழ்க்கை நிகழ்வுகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. வாஸ்து பார்க்காமல் வீடு கட்டியதால், எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது.” என்றனர், திருமதி. சுடரொளி, மற்றும் திரு. மலர் இனியன்.

– ‘காட்டாறு’ பல்லடம் தீபா, நாராயணமூர்த்தி, திருப்பூர் வேணி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news