Latest Posts

ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது..?

- Advertisement -

வணங்கள்(Certificates) தொலைந்தால், யாரை அணுகுவது..? என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? எவ்வளவு கட்டணம்? தொலைந்த ஆவணங்கள் கிடைக்க கால வரையறை மற்றும் நடைமுறை                                      ஆகியவற்றை அறிய…

இன்ஷூரன்ஸ் பாலிசி : பாலிசியை விநியோகம் செய்த கிளையை அணுக வேண்டும். முகவரிச்சான்று, பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை, மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல் முதலிய ஆவணங்கள் தர வேண்டும்.

ஆவணங்கள் தயாரிப்பு கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை : நகல் பாலிசி கோரும் விண்ணப்பக்கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்து கொள்ள வேண்டும்.

இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும். அதை நிறைவு செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

மதிப்பெண் பட்டியல் : பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரியை அணுக வேண்டும். அவரிடம், மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது ஆகிய ஆவணங்கள் தர வேண்டும்.
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத் தேர்வு (+2) பட்டியல் ரூ.505 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்ததில் இருந்து 60 நாட்களில் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை : காவல் துறையில் புகார் அளித்து, ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கி, முன்பு படித்த பள்ளி / நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி, அதை நிறைவு செய்து தாசில்தாரிடம் கையொப்பம் வாங்க வேண்டும்.

அந்த விண்ணப்பத்துடன் ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு தொடர்பான பல்கலைக் கழகங்களை அணுக வேண்டும் என்பது நடைமுறை.

ரேஷன் கார்டு : கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப் பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையரை அணுக வேண்டும். காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் தர வேண்டும்.

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும். விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை : தொடர்புடைய அலுவலகர் இடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் நிறைவு செய்து தர வேண்டும். அவர்கள் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ் : மாவட்டப் போக்குவரத்து அதிகாரியை அணுகி, பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண் முதலிய ஆவணங்கள் தர வேண்டும். கட்டணமாக ரூ.315 (இலகு ரக மற்றும் கனரக வாகனம்) அளிக்க வேண்டும். விண்ணப்பம் செய்த பிறகு அதிகபட்சமாக ஒரு வாரம் ஆகும்.

நடைமுறை : காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

பான் கார்டு : பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறையிலுள்ள வரை அணுக வேண்டும். பாஸ்போர்ட் அளவு படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள் போன்ற ஆவணங்களை அளித்து, கட்டணமாக அரசுக்குச் ரூ.96 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பித்தப் 45 நாட்களில் கிடைக்கும்.

நடைமுறை : பான் கார்டு கரக்ஷன் விண்ணப்பம் வாங்கி, அதில் தேவையான விவரங்களைக் குறிப்பிட்ட வேண்டும்.

கிரயப் பத்திரம்: பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளரை அணுக வேண்டும். காவல்துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். ஆவணக் கட்டணமாக 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய். ஒரு சில நாட்களில் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை : கிரயப்பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்கு பிறகு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும்.

டெபிட் கார்டு : தொடர்புள்ள வங்கியின் கிளை மேலாளரை அணுக வேண்டும். கணக்குத் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். கட்டணமாக ரூ.100 அளிக்கப்பட வேண்டும் (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்). வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது 15 நாட்களில் நகல் கார்டு கிடைக்கப் பெறலாம்.

நடைமுறை : டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிமாற்றகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு தொடர்புள்ள கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

பாஸ்போர்ட் : மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களை அணுக வேண்டும். காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம் முதலிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணமாக ரூ.4,000 செலுத்த வேண்டும். இந்தியாவில் தொலைத்திருந்தால் 35-லிருந்து 40 நாட்களுக்குள்ளும்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை : பாஸ் போர்ட் தொலைந்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து, கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத் தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற் கொண்டு பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

கிரடிட் கார்டு : கிரடிட் கார்டு தொலைந்த உடன் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிமாற்றங்களை நிறுத்த வேண்டும். தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும். கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும் (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்). 15 வேலை நாட்களுக்குள் முடித்துத் தருவார்கள்.

நடைமுறை : தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் அனுப்பி வைத்து விடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்

– வி.எஸ். சிவராமன்,
உதவி பேராசிரியர், மேலாண்மை துறை
ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் -8

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news