காட்டுயிர் ஒளிப்படக் கலையில் உள்ள வாய்ப்புகள்.

வன விலங்குகளைப் படம் எடுப்பது என்பது ஒரு கலை. இந்த துறையில் எந்த அளவுக்கு ஒருவர் சாதிக்க முடியும்? என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? ஒருவர் முழு நேரமாக இதில் ஈடுபடலாமா? தமிழகத்தில் விலங்கியல் ஒளிப்படக்கலை (வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி) பற்றி இந்த துறையில் மிகுந்த அனுபவமும், நிறைய புத்தகங்களை எழுதியவரும், வன விலங்குகளுக்கு என்று “உயிர்” என்ற இருமாத இதழையும் நடத்தி வருகிறார், திரு. ஏ. சண்முகானந்தம், வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி பற்றி நாம் அவரிடம் கண்ட நேர்காணலில் அவர் கூறியதாவது-

“1990 -ஆம் ஆண்டு, கேமரா பற்றிய ஒர் ஆண்டுப் பயிற்சியை முடித்து திருமண விழாக்களில் படங்கள் எடுத்துத் தொடங்கிய என் பயணம், பிறகு எங்கள் வீட்டை சுற்றி இருந்த நீர் நிலைகளில் காணப்படும் பறவைகள், பூச்சிகளை படம் எடுப்பதாக தொடர்ந் தது. நாள் அடைவில் திருமண விழாக்களில் இருந்து விலகி வன விலங்குகளை படங்கள் எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு விலங்குகள், பறவைகள், பூச்சிகளை படம் எடுப்பதற்கு என்று பல்வேறு காடுகளுக்கு பயணம் செல்லத் தொடங்கினேன்.

நான் தொடங்கிய தொன்னூறாம் ஆண்டுகளில் இப்போது இருப்பது போல், டிஜிட்டல் முறையில் படம் எடுக்கும் தொழில் நுட்பம் வரவில்லை. அதனால் ஃபிலிம் ரோல் கொண்டே படங்களை எடுத்து வந்தேன். ஃபிலிம் களைக் கழுவி பிரின்ட் செய்து பார்த்த பிறகே, படத்தின் தன்மை தெளிவாகத் தெரியும். சரியாக இல்லை என்றால் மீண்டும் அதே படங்களை எடுக்க முடியாது. அதனால், முதல் முறையி லேயே அதிக கவனத்துடன் படங்களை எடுக்க வேண்டும். அதற்கு என்னுடைய ஓராண்டு பயிற்சியும், அதனைத் தொடர்ந்து ஒளிப்படக் கலை வல்லுநர்களுடன் ஏற்பட்ட நட்பும், அவர்கள் கொடுத்த குறிப்புகளும் பயன்பட்டன.

திரு. ஜீ.உ. கரன் என்ற ஒளிப்படக் கலைஞரின் உதவியால் ஃபோட்டோ கிராஃபி சொசைட்டி ஆஃப் மெட்ராஸ் என்ற ஆசியாவில் பழமை வாய்ந்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். இதில் சேர்ந்த பிறகு ஒளிப்படக் கலை பற்றிய பார்வை எனக்கு மாறியது. எப்படி பல விதமான ஒளிகளில் படங்களை எடுப்பது என்று கற்றுக் கொண்டேன்.

இந்த சங்கத்தில் உள்ள மனிதர்களின் அறிமுகம் மற்றும் அவர்களின் படங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொள்ள உதவின. மாதம் ஒரு கூட்டம் நடைபெறும். அதில் ஒளிப்படக்கலை பற்றிய நுணுக்கங்கள் பற்றி பேசுவார்கள். மாநில அளவிலும், இந்தியா முழுவதும் நடைபெறும் ஒளிப் படக்கலை கண்காட்சியில் பங்கு பெற்று, பரிசு பெற்ற படங்களை காட்சிப் படுத்துவார்கள். அவற்றில் கலந்து நிறைய ஒளிப்படக் கலை அறிவை வளர்த்துக் கொண்டேன்.

இன்று பலர் வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி -யின் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், இவற்றில் நிறைய நிலைகள் உள்ளன. சிலர் ஆர்வத்தில் படம் எடுக்க வருவார்கள். சிலர் விலை உயர்ந்த கேமரா கொண்டு பொழுது போக்குக்கு படம் எடுப்பார்கள். சிலர் முழு நேரமாக வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபியில் ஈடுபடுவார்கள்.

வன விலங்குகளைப் படம் எடுப்பது, மனிதர்களை நிற்க வைத்து எடுப்பது போல் எளிதான வேலை அல்ல. காரணம் எந்த விலங்கும் நின்று நமக்கு போஸ் தராது. அதனால், பொறுமை மிகத் தேவை. நமக்கும் ஏற்ற படம் எடுக்க பல நாட்கள் கூட ஆகலாம். குறிப்பாக நாம் எடுக்கும் விலங்கு, பறவை, பூச்சிகள் ஆகியவற்றின் பெயர், தகவல்களை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதற்காக வாசிப்பு மிக அவசியம். எடுக்கும் படம் நேர்த்தியாக வருவதற்கு என்னுடைய வாசிப்புப் பழக்கம் உதவியாக இருக்கிறது. ஒளிப்படம் தொடர்பான புத்தகங்கள், எடுக்கப் போகும் படங்கள் பற்றிய படித்தல் மிகத் தேவை.

வைல்ட் லைஃப் ஃபோட்டோ கிராஃபிக்காகவே ஒரு சங்கத்தை தொடங்கி நடத்தி வந்தோம். “கூழைக்கடா இயற்கை புகைப்பட சங்கம்” என்ற பெயரில் முழுக்க முழுக்க வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி பற்றிய பேச்சுக்கள், நுணுக்கங்கள், எப்படி போட்டியில் கலந்து கொள்வது? என்பது போன்று செயல்படுத்திக் கொண்டி ருந்தோம். மெடிஸ்கேன் தலைவர் டாக்டர். சுரேஷ், இயற்கை ஒளிப்படக் கலையில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

மெடிஸ்கேன் தளத்திலேயே, மாதம் ஒரு கூட்டம் நடத்த அனுமதி தந்தார். பிறகு அவரேயே சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சொன்னோம். அவரின் ஒத்துழைப்பில் இயற்கைப் புகைப்பட சங்கம் மிக நன்றாகவே நடக்கிறது.

அதன் தொடர்ச்சி யாக வைல்ட் லைஃப் ஃபோட்டோ கிராஃபிக்கு என்றே “உயிர்” என்ற காட்டுயிர் இதழை நடத்த தொடங் கினோம். இந்த இதழில் முழுக்க முழுக்க காட்டுயிர் பற்றிய தகவல்கள், படங்கள் இடம் பெறுகின்றன. இதில் நீங்கள் எடுத்த விலங்குகள் படங்களை அனுப்பி இடம் பெறச் செய்யலாம். தமிழகத்தில் வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி பற்றிய எந்த வித வளர்ச்சியும் இல்லாததால் இதில் ஈடுபடுபவர்கள் ஒரு கட்டத்தில் அதனை விட்டு விலகி விடுகிறார்கள். அப்படி விலகாமல் அவர்களை ஒருங்கிணைத்து, அவர் களுக்கு ஒரு பாலமாக செயல்பட அனைத்து வித முயற்சிகளும் செய்து வருகிறோம்.

ஃபோட்டோகிராஃபியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பவர்களுக்குப் பயிற்சி கொடுக்க தயாராக இருக்கிறேன்.

ஒருவர் முழு நேரமாக வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபியில் ஈடு படலாமா? அதன் மூலம் வாழ்க்கையை நடத்த முடியுமா என்றால், ஈடுபடலாம். வாய்ப்புகளும் உள்ளன. அவற்றை சரியாக செயல்படுத்தினால் வெற்றி அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் எடுக்கும் படங்களை மாநிலம், நாடு தழுவிய போட்டிகளுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் டிஸ்கவரி, அனிமல் பிளானெட், நேஷனல் ஜியோகிராஃபி போன்ற சேனல்களிலும் பணி கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
நான் எடுத்த படங்கள் அடிப்படையில் கட்டுரைகளும் எழுதி வருகிறேன். குறிப்பாக, பகலில் நடமாடும் உயிரி னங்கள் போல் இரவிலும் நிறைய உயிரினங்கள் நடமாடுகின்றன. அதனை வைத்து ஒரு புத்தகம் வெளியிட்டு உள்ளோம்.

“தமிழகத்தின் இரவாடிகள்” என்ற புத்தகம் மூலம் இரவில் நடமாடும் சிறு உயிரினங்கள், முதல் பெரிய உயிரினங்கள் வரை படங்களை எடுத்து, கட்டுரைகள் எழுதி வெளியிட்டதில், அவை வாசகர் களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் பறவைகளின் சரணாலயங்களை நேரில் சென்று பார்த்து, ஆய்வு செய்து, “தமிழகத்தின் பறவை காப்பிடங்கள்” என்ற பெயரில் எழுதி நூல் வெளியிட்டேன்.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து பறவை சரணாலயங்களைப் பற்றி வெளி வந்திருக்கும் முதல் புத்தகம் இது ஆகும். ஆனந்த விகடன், விலங்கியல் ஒளிப்படக் கலை தொடர்பாக ஆண்டு தோறும் வழங்கும் விருதை எனக்கு வழங்கியது.” என்றார், திரு. சண்முகானந்தம்.

– செழியன்.ஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here